Wednesday 8 April 2015

விமர்சனத்திற்கும் ஓர் எல்லை உண்டு!



விமர்சனத்திற்கும் ஓர் எல்லை உண்டு!



அல்லாஹ் மனித சமூகத்திற்கு எண்ணிலடங்கா உரிமைகளை வழங்கி கௌரவித்து இருக்கின்றான்.

அவன் வழங்கிய உரிமைகளில் மிகவும் மகத்தான உரிமை விமர்சன உரிமையாகும்.

விமர்சனம் என்பது பிறரின் நிறை, குறைகளை தெரியப்படுத்த உதவும் அரிய சாதனமாகும்.

ஆனால், சலுகையாக மட்டுமே வழங்கப்பட்ட இவ்வுரிமை தற்போது கடமை போன்று சமூகத்திலே பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

எனினும், இந்த உரிமையைப் பயன் படுத்தி பல இதயங்களைக் காயப்படுத்தி விடுகின்றார்கள் சிலர். இன்னும் சிலர் பலரது மானம், மரியாதைகளுக்கு சேதத்தை ஏற்படுத்தி விடுகின்றனர்.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அதிகாலை வாகன விபத்து ஒன்றில் அகால – (ஷஹீதான) மரணமடைந்த பள்ளப்பட்டி மக்தூமிய்யா பேராசிரியர்கள், சங்கைமிகு இமாம்கள், மற்றும் பிலால், மதரஸா மாணவர் ஆகியோர் குறித்து சமூக வலைதளமான முகநூலில்இவர்கள் இணைவைப்பாளர்கள், பித்அத்வாதிகள் என்றும், இஸ்லாம் நடைமுறைப் படுத்தாத காரியங்களைச் செய்ததினால் தான் இவ்வாறு விபத்து நேரிட்டது என்றும், எனவே அவர்களுக்காக துஆ செய்யத் தேவையில்லை என்றும், மேலும், அத்தகைய துஆக்கள் பலனளிக்காது என்றும்மத்ஹப் மறுப்பாளர்கள், வஹ்ஹாபிஸ சிந்தனையாளர்கள் பலர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்

إِنَّ الَّذِينَ يُحِبُّونَ أَنْ تَشِيعَ الْفَاحِشَةُ فِي الَّذِينَ آمَنُوا لَهُمْ عَذَابٌ أَلِيمٌ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ ()
இறைநம்பிக்கை கொண்டோரிடையே மானக்கேடான செயல் பரவிட வேண்டுமென எவர்கள் விரும்புகின்றார்களோ, அவர்கள் இம்மையிலும் மறுமையிலும் துன்புறுத்தும் தண்டனைக்கு உரியவர்களாவர். மேலும், அல்லாஹ் அறிகின்றான்; நீங்கள் அறிவதில்லை                          ( அல்குர்ஆன்: 24:19 )

இவர்கள் இத்தகைய விமர்சனத்தின் மூலம் முஸ்லிம் சமுதாயத்தினரிடையே மரணித்த ஆலிம்கள் குறித்து இவர்களுக்கு சற்றும் ஞானமில்லாத ஓர் அவதூற்றைப் பரப்பி அதன் மூலம் ஆதாயம் தேட முற்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஈருலகிலும் இறைவனின் தண்டனை உண்டு என்பதை ஆரம்பமாக பதிவு செய்து கொள்வோம்.

وَالَّذِينَ يُؤْذُونَ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ بِغَيْرِ مَا اكْتَسَبُوا فَقَدِ احْتَمَلُوا بُهْتَانًا وَإِثْمًا مُبِينًا ()

மேலும், நம்பிக்கை கொண்டிருக்கிற ஆண்கள், பெண்கள் அவர்கள் குற்றம் புரியாதிருக்கவே எவர்கள் துன்பம் அளிக்கின்றார்களோ, அவர்கள் ஒரு மாபெரும் அவதூறையும் வெளிப்படையான பாவத்தின் விளைவையும் தம்மீது சுமந்து கொள்கின்றார்கள்.”                                           ( அல்குர்ஆன்: 33: 58 )

இவர்கள் இத்தகைய விமர்சனத்தின் மூலம் பாதிக்கப்பட்ட உலமாக்களின் குடும்பத்தார்கள், ஒட்டுமொத்த ஆலிம்கள், அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத்தினரின் இதயங்களை ரணப்படுத்தி துன்பம் தந்திருக்கின்றார்கள். இவர்கள் இதற்கான விளைவையும் சந்திப்பார்கள் என்று நாம் தெரியப்படுத்திக் கொள்வோம்.

இந்த விமர்சனத்தின் மூலம் இஸ்லாம் சொல்லித் தராத ஒரு நடைமுறையை, தவறான ஓர் கொள்கையையும் இந்த உம்மத்தில் விதைக்க முற்பட்டும் இருக்கினார்கள்.

அவர்கள் பித்அத்தான காரியத்திற்குச் சென்று வந்ததினால் தான் விபத்துக்குள்ளானார்கள் என்றும் விமர்சித்து இருக்கின்றார்கள்.

ஒன்று இது முற்றிலும் தவறான வாதமாகும்.

இரண்டாவது இறந்து போன ஆலிம்கள் எந்த ஓர் பித்அத்தான காரியத்திற்கும் செல்லவில்லை. மார்க்கம் நடைமுறை படுத்தாத எந்த ஓர் செயலையும் அவர்கள் செய்யவில்லை என்பதையும் நாம் இன்ஷா அல்லாஹ் தெளிவு படுத்துவோம்.

மூன்றாவது இவர்கள் இதற்கு முன் நபி {ஸல்} அவர்களையும், நபித்தோழர்களையும், இமாம்களையும், இறைநேசர்களையும் விமர்சனத்தின் மரபுகளை தகர்த்தெரிந்து விமர்சித்தவர்கள் என்பதையும் சமூகம் நன்கு அறிந்து வைத்திருக்கின்றது.

உலகில் மனிதர்களுக்கு ஏற்படுகிற வெற்றி தோல்வி என்பதும், நோய் ஆரோக்கியம் என்பதும், சாதாரண மரணம் கொடூர, அகால மரணம் என்பதும் நல்லவன் கெட்டவன் என்ற அடிப்படையில் நடைபெறுவதில்லை.

அல்லாஹ்வும் அத்தகைய அளவுகோலைக் கொண்டு இவ்வுலகில் நடத்தாட்டுவதும் இல்லை. இஸ்லாமும் அத்தகைய அளவுகோலை எங்கேயும் கையாளவுமில்லை.

நல்லவன் கெட்டவன் என்கிற அடிப்படையில், அளவுகோலில் தான் நடைபெறுகிறது என்று ஓர் இறைநம்பிக்கையாளன் நம்புகிறான் எனில் அவன் ஈமானில் பழுது ஏற்பட்டு விட்டதாகவே பொருள்.

அல்லாஹ் மனித வாழ்வில் ஏற்படும் சோதனை குறித்து குர்ஆனில் பேசும் போது இரண்டு வார்த்தைகளைப் பயன்படுத்துவான்.

ஒன்று முஸீபத்مُصِيبَةٍ, இன்னொன்று பலாஉ - الْبَلَاءُ, இதில் முதல் வகை அல்லாஹ்வை முற்றிலும் மறந்தவர்களுக்கும், மறுத்தவர்களுக்கும் ஏற்படும் சோதனையாகும்.

அந்தச் சோதனை என்பது அல்லாஹ்வை வழிபட்டவர்கள் காப்பாற்றப்பட்டு அல்லாஹ்வை வழிபடாதவர்கள் முற்றிலுமாக அழிக்கப்படுவதாகும். அதுவும் அல்லாஹ் அதற்கென ஒரு நாளை தேர்ந்தெடுத்து, ஒட்டு மொத்தமாக ஓரிடத்தில் ஒன்றிணைத்து அழித்தொழிப்பான்.

உதாரணமாக, நிலநடுக்கம், பூகம்பம், சுனாமி, பெருவெள்ளம் ஆகியவைகளை எடுத்துக்கொள்ளலாம்.

இதற்கு முன் சென்ற நபிமார்களின் சமூகம் சந்தித்த பேரழிவுகள் சான்றுகளாகும். அல்குர்ஆனின் வசனங்களில் அநேக வசனங்கள் இது குறித்துப் பேசுகின்றன.

இரண்டாவது வகை சோதனை இது இறைநம்பிக்கையாளர்களுக்கு மட்டுமே ஏற்படுகிற சோதனையாகும்.

இவ்வகை சோதனைகளின் மூலம் அல்லாஹ் அவர்களின் ஈமானையும், தவக்குலையும், தக்வாவையும் சோதிப்பான்.

وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ ()
மேலும், சிறிதளவு அச்சத்தாலும், பசியாலும், உடைமைகள், உயிர்கள், மற்றும் விளைப்பொருட்கள் ஆகியவற்றில் இழப்பை ஏற்படுத்தியும் திண்ணமாக, உங்களை நாம் சோதிப்போம்                                          ( அல்குர்ஆன்: 2:155 )

كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ وَنَبْلُوكُمْ بِالشَّرِّ وَالْخَيْرِ فِتْنَةً وَإِلَيْنَا تُرْجَعُونَ ()

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும். மேலும், நல்ல, கெட்ட நிலைமைகளைத் தந்து நாம் உங்களைச் சோதிப்போம். பிறகு நீங்கள் நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்”.                           ( அல்குர்ஆன்: 21:35 )

அல்லாஹ் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் மகனார் இஸ்மாயீல் (அலை) அவர்களை அறுத்துப் பலியிடுமாறு ஆணை பிறப்பித்ததையும், அதற்கு இப்ராஹீம் (அலை) அவர்களும், இஸ்மாயீல் (அலை) அவர்களும் கட்டுப்பட்ட அந்த தருணத்தையும் விவரித்து விட்டு அல்லாஹ் கூறும் போது

أَنْ يَا إِبْرَاهِيمُ () قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ () إِنَّ هَذَا لَهُوَ الْبَلَاءُ الْمُبِينُ

இப்ராஹீமே! நீர் கனவை நனவாக்கி விட்டீர். நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி வழங்குகின்றோம். திண்ணமாக, இது தெளிவான சோதனையாய் இருந்தது”. (அல்குர்ஆன்: 37:105,106) என்று கூறுகின்றான்.

وَلَقَدْ فَتَنَّا سُلَيْمَانَ وَأَلْقَيْنَا عَلَى كُرْسِيِّهِ جَسَدًا ثُمَّ أَنَابَ ()

பிறகு, நாம் ஸுலைமானையும் சோதனைக்குள்ளாக்கினோம்; அவருடைய அரியணையில் ஒரு சடலத்தைக் கொண்டு வந்து போட்டோம். அப்போது, அவர் தம் இறைவனின் பக்கம் திரும்பினார்”. ( அல்குர்ஆன்: 38: 34 )

மேலும், யஃகூப் (அலை) அவர்களை அல்லாஹ் யூஸுஃப் (அலை) அவர்களின் மூலமாகவும், மூஸா (அலை) அவர்களை ஃபிரவ்ன் மற்றும் தம் சொந்த சமூகத்தின் மூலமாகவும், லூத் (அலை) அவர்களை காஃபிரான தம் மனைவியின் மூலமாகவும், நூஹ் (அலை) அவர்களை தம் மனைவி மற்றும் மகன் மூலமாகவும் சோதித்தான் என அல்குர்ஆன் சான்றுரைக்கின்றது.

இந்தச் சோதனைகளின் மூலம் பாதிக்கப்படுபவர்களின் மனோ நிலையும், ஈமானிய வலிமையும் சோதிக்கப்படுகின்றது என்பது தான் உண்மை.

ஆகவே, உயிரிழந்த உலமாக்களின் குடும்பத்தார்களும், உறவினர்களும், இரத்த உறவினர்களும் ஒரு விதத்தில் முஸ்லிம் சமூகமும் அவர்களின் உயிரிழப்பின் மூலம் சோதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், நபி அய்யூப் (அலை) கடுமையான நோய் மூலமாக சோதிக்கப்பட்டார்கள், ஜக்கரிய்யா (அலை) அவர்கள் ரம்பத்தால் இரு துண்டுகளாக வெட்டப்பட்டார்கள். பனூஇஸ்ரவேலர்களின் எத்தனையோ நபிமார்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்கள். இவர்களெல்லாம் நபிமார்கள் ஆயிற்றே ஏன் கடுமையான முறையில் சோதிக்கப்பட்டார்கள்? பாவங்களை விட்டும் பாதுகாக்கப் பட்டவர்கள் ஆயிற்றே!? ஏன் இவர்கள் இப்படி சோதிக்கப்பட்டார்கள்?”

உஹதின் தோல்வி நபித்தோழர்களின் உள்ளங்களை குடைந்தெடுத்த போது அல்லாஹ் அம்மேன்மக்களை நோக்கி

இப்பொழுது உங்களுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்றால், இதற்கு முன்னர் உங்கள் எதிரணியினருக்கும் இதே போன்ற இழப்பு ஏற்படத்தான் செய்தது. இவையெல்லாம் காலத்தின் மாற்றங்களாகும். இவற்றை மக்களிடையே நாம் தான் மாறி, மாறி வரச்செய்கின்றோம். உங்களுக்கு இப்படியொரு நிலை வரக்காரணம் உங்களில் உண்மையான நம்பிக்கையுடையவர் யார் என்பதனை அல்லாஹ் கண்டறிந்து உண்மையிலேயே சத்தியத்திற்கு சான்று பகர்கின்றவர்களை உங்களிலிருந்து வேறுபடுத்துவதற்காகத்தான்.”  ( அல்குர்ஆன்: 3:140 ) என்று கூறி, ஆறுதல் படுத்தினான்.

ஆகவே, உலகில் மனிதர்களுக்கு ஏற்படுகிற வெற்றி தோல்வி என்பதும், நோய் ஆரோக்கியம் என்பதும், சாதாரண மரணம் கொடூர, அகால மரணம் என்பதும் நல்லவன் கெட்டவன் என்ற அடிப்படையில் நடைபெறுவதில்லை என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.

அடுத்து, அந்த ஆலிம்கள் இஸ்லாம் நடைமுறைப்படுத்தாத பித்அத்தான செயலைச் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டு.

உண்மையில், அல்குர்ஆனின் பல்வேறு சூராக்களை குறித்தும், அதன் சிறப்புக்களை குறித்தும் அதன் மூலம் ஏற்படுகிற பரக்கத்துகள் குறித்தும் மாநபி {ஸல்} அவர்கள் பல்வேறு விதமாக விளக்கியுள்ளார்கள்.

பரக்கத் ஏற்பட வேண்டும் என்ற நம்பிக்கையில், ஆதரவின் பேரில் ஒரு நிறுவனத்திலோ, அல்லது வீட்டிலோ, தனியாகவோ அல்லது ஓர் குழுவாகவோ குர்ஆன் ஷரீஃப் ஓதுவதோ, அல்லது குர்ஆனின் ஒன்று அல்லது சில சூராக்களை ஓதுவதோ, திக்ர் ஓதுவதோ எப்படி தவறாகும். எப்படி பித்அத் ஆகும்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ”பகரா அத்தியாயத்தையும், ஆலுஇம்ரான் அத்தியாயத்தையும் நம்மில் எவர் நன்கு உணர்கின்றாரோ அவருக்கு மகத்தான கீர்த்தியும் வெற்றியும் கிடைக்கின்றனஎன நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

أبو أمامة الباهلي ‏ ‏قال :‏ ‏سمعت رسول الله ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏يقول اقرءوا سورة ‏ ‏البقرة ‏ ‏فإن أخذها بركة وتركها حسرة ولا تستطيعها ‏ ‏البطلة ) [ رواه مسلم ] .. السلسلة الصحيحة
அபூ உமாமா பாஹிலீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “பகரா அத்தியாயத்தை ஓதிக்கொண்டிருங்கள். அதனை ஓதுவதால் வாழ்வில் அபிவிருத்தியும், ஓதுவதை விடுவதால் நஷ்டமும் ஏற்படுகின்றன. ஏமாற்ற நினைப்பதும், எதிர்த்துத் தாக்க எண்ணுவதும் இதன் முன்னால் நிற்க முடியாதுஎன நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

عن العرباض بن سارية رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم : ( كان لا ينام حتى يقرأ المسبحات ويقول فيها آية خير من ألف آية ) [ رواه الترمذي وصححه الألباني / 2712 ] ..
* المسبحات : هي السور التي تفتتح بقوله تعالى " سبح " أو " يسبح " .. وهن سور الإسراء ، الحديد ، الحشر ، الصف ، الجمعة ، التغابن ، والأعلى .

இர்பாள் இப்னு ஸாரியா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் முஸப்பிஹாத் உடைய சூராக்களை ஓதாமல் தூங்க மாட்டார்கள். மேலும், அது குறித்து கூறும் போது அதன் ஒவ்வொரு ஆயத்துக்களும் ஆயிரம் ஆயத்துக்கள் ஓதுவதை விட சிறப்பானதாகும்.

முஸப்பிஹாத் உடைய சூராக்கள் என்றால்  " سبح " أو " يسبح "  என்று ஆரம்பிக்கிற الإسراء ، الحديد ، الحشر ، الصف ، الجمعة ، التغابن ، والأعلى சூராக்கள் ஆகும்.

இன்னும் ஏராளமான சூராக்களின் சிறப்புக்களையும், அந்த சூராக்களை ஓதுவதால் ஏற்படும் நன்மைகளையும் நபி {ஸல்} அவர்கள் விவரித்துள்ளார்கள். எனினும் உதாரணத்திற்கு ஒன்றிரண்டை நாம் மேற்கோள் காட்டியிருக்கின்றோம். எனவே, தனித்தனியே அந்த சூராக்களை ஓதாமல் முழுக் குர்ஆனையும் ஓதி அல்லாஹ்விடம் அவன் அருள்வளங்களை ஆதரவு வைக்கப்படுகின்றது.

அவர்களின் மரணத்தைக் குறித்தும் விமர்சிக்கப்பட்டிருக்கின்றது

إِنَّا نَحْنُ نُحْيِي الْمَوْتَى وَنَكْتُبُ مَا قَدَّمُوا وَآثَارَهُمْ وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ فِي إِمَامٍ مُبِينٍ ()

திண்ணமாக, நாமே மரணமடைந்தவர்களை ஒரு நாள் உயிர்ப்பிப்போம். அவர்கள் செய்தவற்றையும் நாம் குறித்துக் கொண்டே இருக்கின்றோம். மேலும், அவர்கள் விட்டுச்சென்ற சுவடுகளையும் பதிவு செய்து கொண்டிருக்கின்றோம். மேலும், நாம் ஒவ்வொன்றையும் ஒரு தெளிவான பதிவேட்டில் கணக்கிட்டுக் குறித்து வைத்துள்ளோம்”.                                             ( அல்குர்ஆன்: 36:12 )

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒருவர் இறந்து விட்டால் அவருடைய எல்லா செயல்களும் முடிந்து விடுகின்றன. மூன்றே மூன்று நற்செயல்கள் மட்டும் அவர் இறந்த பின்னும் அவருக்கு தொடர்ந்து நன்மைகளைப் பெற்றுத்தருகின்றன.

1. அவர் செய்த நிலையான தர்மம். 2. அவர் அளித்துச் சென்ற பயனுள்ள கல்வி. 3. அவருக்காக இறைவனிடம் வேண்டும் அவர் பெற்ற மக்கள்.

இந்த இறைவசனமும், நபிமொழியும் குறிப்பிடுகின்றவிட்டுச்சென்ற சுவடுகள், அளித்துச் சென்ற பயனுள்ள கல்விஎன்பது அந்த ஆலிம் பெருமக்கள் அல்லாஹ் தங்களுக்கு வழங்கிய மார்க்க ஞானத்தின் மூலம் எழுத்தாகவோ, பேச்சாகவோ, இந்த சமுதாயத்திற்கு வழங்கியதும், மார்க்கக்கல்வியை எதிர்கால தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கிற நல்ல ஆலிம்களையும் உருவாக்கியதைச் சாரும்.

மேலும், அவர்களின் மரணமும் நாளை மறுமையில் ஷஹீத்கள்உயிர்த்தியாகிகளின் அந்தஸ்தைப் பெற்றுத்தரும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
ففي الحديث المتفق عليه أن النبي صلى الله عليه وسلم قال
 الشهداء خمسة: المطعون
 والمبطون، والغريق، وصاحب الهدم، والشهيد في سبيل الله
 رواه ابن ماجه وأبو داود وغيرهما من حديث جابر بن عتيك أنه قال
 قال رسول الله صلى الله عليه وسلم
 الشهداء سبعة سوى القتل في سبيل الله: المطعون شهيد، والغريق شهيد، وصاحب ذات الجنب شهيد، والمبطون شهيد، والحرق شهيد، والذي يموت تحت الهدم شهيد، والمرأة تموت بجُمع شهيد.

ஷுஹதாக்கள் ஐந்து வகையாவர்; காயம் பட்டு இறப்பவர், வயிற்றோட்ட நோயினால் இறப்பவர், நீரில் மூழ்கி இறப்பவர், இடிபாடுகளுக்குள் சிக்கி இறப்பவர், எதிரிகளால் கொல்லப்படுபவர்என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

حدثنا محمد بن بشار حدثنا عبد الرحمن بن مهدي و أبو عامر العقدي قالا حدثنا هشام بن سعد عن سعيد بن أبي هلال عن ربيعة بن سيف عن عبد الله بن عمرو قال : قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقاه الله فتنة القبر

எந்த ஒரு முஸ்லிமாவது ஜும்ஆ தினத்தின் பகலிலோ, இரவிலோ மரணமடைந்தால் மண்ணறையின் வேதனையை அல்லாஹ் அவர விட்டும் நீக்கி விடுகின்றான்என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ ، قَالَ : قُرِئَ عَلَى هِلالِ بْنِ الْعَلاءِ ، وَأَنَا أَسْمَعُ ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ ، عَنْ بحَيِرِ بْنِ سَعْدٍ ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ ، عَنِ الْمِقْدَامِ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلشَّهِيدِ عِنْدَ اللَّهِ سِتُّ خِصَالٍ : يُغْفَرُ لَهُ فِي أَوَّلِ دَفْعَةٍ مِنْ دَمِهِ ، وَيَرَى مَقْعَدَهُ مِنَ الْجَنَّةِ ، وَيُحَلَّى حُلَّةَ الإِيمَانِ  وَيُزَوَّجُ ثِنْتَيْنِ وَسَبْعِينَ مِنْ حُورِ الْعِينِ ، وَيُجَارُ مِنْ عَذَابِ الْقَبْرِ ، وَيُؤَمَّنُ يَوْمَ الْفَزَعِ الأَكْبَرِ ، وَيَضَعُ اللَّهُ عَلَى رَأْسِهِ تَاجُ الْوَقَارِ ، الْيَاقُوتَةُ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا ، وَيُشَفَّعُ فِي سَبْعِينَ مِنْ أَقَارِبِهِ " . حَدَّثَنَا أحمد ،

ஷுஹதாக்களுக்கு ஆறு நற்பேறுகள் கிடைக்கின்றன. 1. அவர் சிந்தும் முதல் துளியோடு அவரின் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. 2. சுவனத்தில் அவர்களின் தங்குமிடத்தை அவர்கள் தங்கள் கண்களால் பார்க்கின்றார்கள். 3. மண்ணறையின் வேதனையிலிருந்து அவர்கள் பாதுகாக்கப்படுகின்றார்கள். 4. மறுமையின் பெருந்திடுக்கங்களிலிருந்து அவர்கள் பாதுகாப்புப் பெறுகிறார்கள். 5. ஹூருல் ஈன்களுடன் திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள். 6. தங்களின் நெருங்கிய உறவினர்களின் எழுபது பேருக்குப் பரிந்துரை செய்து சுவர்க்கத்தில் சேர்த்து விடுவார்கள்என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

மார்க்க அறிஞர்களின் இழப்பு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்


அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “ரிஅல், தக்வான், உஸய்யா, பனூலிஹ்யான் ஆகிய குலத்தினர் நபி {ஸல்} அவர்களிடம் வருகை தந்து, பகைவர்களுக்கு எதிராக போராட ஒரு படை தந்து உதவும்படி கோரிக்கை விடுத்தனர்.

அப்போது, அவர்களுக்கு அன்ஸாரிகளில் எழுபது பேர்களை அனுப்பித் தந்து நபி {ஸல்} அவர்கள் உதவினார்கள். அந்தக்காலத்தில் அந்த எழுபது பேர்களை நாங்கள்குர்ராஃதிருக்குர்ஆனை நன்கறிந்தவர்கள்என்று அழைத்து வந்தோம்.

இவர்கள் பகலில் விறகு சேகரிக்கும் வேலையில் ஈடுபடுபவர்களாகவும், இரவில் தொழக்கூடியவர்களாகவும் இருந்து வந்தனர்.

இவர்கள் பயணம் செய்து பிஃரு மஊனா எனும் இடத்தை அடைந்த போது மேற்கூறிய குலத்தார்கள் வஞ்சித்துக் கொன்று விட்டனர். இந்தச் செய்தி நபி {ஸல்} அவர்களை எட்டிய போது, ஒரு மாத காலம் சுப்ஹுத்தொழுகையில் அரபுக்குலங்களான ரிஅல், தக்வான், உஸய்யா, பனூலிஹ்யான் குலத்தினருக்கு எதிராக குனூத் எனும் சிறப்பு துஆவை நபி {ஸல்} அவர்கள் ஓதினார்கள்.

மேலும், இவர்கள் குறித்து அருளப்பட்டிருந்த குர்ஆன் வசனமொன்றை ஓதி வந்தோம். பின்னால் அது இறைவனால் நீக்கப்பட்டு விட்டது. “ நாங்கள் எங்கள் இறைவனிடம் சென்று சேர்ந்து விட்டோம். அவன் எங்களைக் குறித்து திருப்தி அடைந்து விட்டான். எங்களை அவன் திருப்தியுறச் செய்தான்” என்று எங்களைப் பற்றி எங்கள் சமுதாயத்திற்கு தெரிவித்து விடுங்கள்” என்பதே அந்த வசனமாகும்.

இந்த நபிமொழியை மேலோட்டமாகப் பார்க்கும் போது, ”70 பேரைக் கொன்றதற்காகவா மாநபி {ஸல்} அவர்கள் ஒருமாத காலம் சிறப்புத் துஆ குனூத் ஓதினார்கள்?” இது தவிர்த்து வேறு ஏதேனும் காரணம் இருக்குமா?” என்று தேடிப்பார்த்தால் வரலாற்றின் வைரவரிகளில் பாதுகாக்கப்பட்டிருக்கிற ஓர் செய்தி.

இந்த மாபாதகச்செயல் ஹிஜ்ரி நான்காம் ஆண்டு ஸஃபர் மாதம் நடைபெறுகிறது. ஹிஜ்ரி நான்காம் ஆண்டிலிருந்து ஹிஜ்ரி பத்தாம் ஆண்டுவரை அல்குர்ஆனின் 13 அத்தியாயங்கள் அல்ஹஷ்ர், அல்முனாஃபிகூன், அத்தலாக், அல்ஃபத்ஹ், அந்நூர், அல்முஜாதலா, அத்தஹ்ரீம், அல்மும்தஹினா, அல்ஹதீத், அத்தவ்பா, அல்ஹுஜுராத், அந்நஸ்ர் அல்அஹ்ஸாப் ஆகியவைகளும், அல்மாயிதா அத்தியாயத்தின் ஒரு வசனமும், அல்பகரா அத்தியாயத்தின் ஒரு வசனமும் இறக்கியருளப்பட்டன.

இவையல்லாத மற்ற 101 அத்தியாயங்கள் ஹிஜ்ரி நான்காம் ஆண்டிற்கு முன்னரே இறக்கியருளப்பட்டு விட்டன. அல்குர்ஆனின் முக்கால் வாசிப்பகுதியை நெஞ்சில் பதியவைத்திருந்த ஓர் ஒப்பற்ற இதயத்திற்கு சொந்தக்காரர்களை கொலை செய்த அந்த ஈனச்செயல் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் மனதை வெகுவாகப் பாதித்தது.

இதற்கு முன் இதை விட பெரும் துன்பங்கள் ஏற்பட்டு, நபித்தோழர்கள் வந்து முறையிட்ட போதெல்லாம் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் பொறுமை காக்குமாறு உத்தரவிட்டார்கள்.

ஆனால், மார்க்க அறிவை, குர்ஆனை சுமந்த இதயங்களை இழந்த பின்னர் தான் அந்த இழப்பு எவ்வளவு பெரிய இழப்பு? எந்த ஈடும் செய்ய முடியாத இழப்பு என்பதை மாநபி {ஸல்} அவர்கள் உணர்ந்தார்கள்.

அதன் பின்னரே தொழுகையில் குனூத் ஓதி மனதையும், உம்மத்தையும் ஆசுவாசப்படுத்தினார்கள்.

எனவே, விபத்தில் பலியான உலமாக்களை விமர்சனம் செய்த பேர்வழிகள் இஸ்லாம் போதிக்கும் விமர்சன நாகரீகத்தின் ஒழுங்குகளை தூக்கியெறிந்தவர்கள் என்றும், விமர்சனத்திற்கான எல்லையைக் கடந்து விமர்சன மரபுகளைப் பாழ்படுத்தியவர்கள் என்றும் நாம் சமூகத்திற்கு உணர்த்துவோம்.

ஏனெனில், இறந்து போனவர்கள் குறித்து நல்லவற்றையே பேசுமாறு இஸ்லாம் போதிக்கிறது. அவர்களுக்காக துஆ செய்யச் சொல்கிறது. அவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லத்தூண்டுகிறது. ஆனால், இவர்கள் நபிவழி நடக்கிறோம் என்ற பெயரில் நரகின் வழிக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழியைக் காட்டுவானாக!

யாஅல்லாஹ் விபத்தில் பலியான உலமாக்களுக்கும், முஸ்லிம் சகோதரர்களுக்கும் உயர்வான சுவனத்தைப் பரிசளித்து, நபிமார்களோடும், நல்லோர்களோடும், ஷுஹதாக்களோடும், ஸித்தீகீன்களோடும் குடும்பம் சகிதமாக உறவாடும் நற்பேற்றினை வழங்கி கௌரவிப்பாயாக! ஆமீன்!

இறுதியாக!....

رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَحِيمٌ

“எங்கள் இறைவா! எங்களையும், ஈமான் கொண்டு எங்களை விட்டும் முன்னரே உன்னளவில் வந்து விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னித்தருள்வாயாக! மேலும், எங்கள் உள்ளங்களில் அவர்களின் பேரில் குரோதத்தையும் உண்டாக்காதே! எங்கள் இறைவா! நிச்சயமாக, நீ மிகவும் பரிவுடையோனாகவும், பெருங்கிருபையாளனாகவும் இருக்கின்றாய்.”

இந்த தலைப்பில் பேச விரும்பாதவர்கள்…

கடந்த வாரம் பத்திரிக்கைகளில் வந்த இருவேறு செய்திகளை அடிப்படையாகக் கொண்டு இந்த தலைப்பு இங்கே பதிவிடப்படுகிறது.

ஒன்று தமிழ்ப்பத்திரிக்கைகள் அனைத்திலும் வெள்ளிக்கிழமை காலையும், மாலையும் வந்த செய்தி. இன்னொன்று 8.4.15 என்று பொறிக்கப்பட்ட ஆனந்த விகடனில் வந்த செய்தி.

தமிழ் நாளிதழ்களில் வந்த செய்தி..

மும்பை மீரா சாலையில் உள்ள காஸ்மோபோலிடன் உயர்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி மரியம் சித்திக்கா எனும் சிறுமி.

ஸ்ரீமத் பகவத் கீதா சாம்பியன் லீக்எனும் தலைப்பில் இஸ்கான் சர்வதேச சங்கம் நடத்திய இந்தப் போட்டியில் சுமார் 105 தனியார் பள்ளிகள், 90 நகராட்சிப் பள்ளிகள் என 195 பள்ளிகளைச் சார்ந்த 4,500 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 

பகவத் கீதை தொடர்பான விளக்கப் போட்டியில் கேட்கப்பட்ட 100 கேள்விகளுக்கு மிகச் சரியான பதிலை விளக்கத்தோடு கூறி முதல் பரிசு வென்றார் சிறுமி மர்யம் சித்திக்கா.

அதனைத்தொடந்து பத்திரிக்கையாளர்களுக்கு அந்தச் சிறுமி அளித்த பேட்டியில்… “பகவத் கீதையின் வழியே நான் வாழ்விற்கு பயன் தருகிற ஏராளமான விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். அதில் ஒன்றுஉலகில் மிகப் பெரிய மதம் என்பது மனித நேயம் மட்டும் தான்என்பதையும் பகவத் கீதையின் மூலம் கற்றுக் கொண்டேன்என்றார்.

சிறுமியின் தந்தை ஆசிஃப் கூறும் போது.. “என்னுடைய மகள் வேறு ஒரு மதத்தின் புத்தகத்தைப் படிப்பதற்கு ஆர்வம் காட்டுகிறாள் என்பது எனக்கு மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருந்தது. மேலும், உலகில் உள்ள எல்லா மதங்களையும் மதித்து நடக்க வேண்டும் என்று என் குழந்தைகளுக்கு எப்போதும் நான் சொல்லி வருகின்றேன்என்று பேட்டியளித்தார்.

ஆனந்த விகடனில் வந்த செய்தி….

சமீபத்தில் இஸ்லாமிய மார்க்கத்தை தழுவிய பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அளித்த பேட்டியின் ஒரு பகுதி

என் தாய் ஜீவாவின் மறைவு என்னுள் பெரிய வெறுமையை உண்டாக்கியது. நான்கு மாத காலம் தொடர்ந்து மது குடிக்கும் நிலை, ஸ்மோக்சிகரெட் பிடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன்.

என் வாழ்க்கையின் நிலை என்னவாகும்? என் எதிர்காலம் எப்படி? நான் சம்பாதித்த புகழ், பேர், பணம் என் அடையாளம் என்னை விட்டுப் போய் விடுமோ எனும் அச்சம் என்னை சூழ்ந்த போது தான் எனக்கு குர்ஆனோடு தொடர்பு ஏற்பட்டது.

குர்ஆனைப் படிக்கப் படிக்க, என் தேடலுக்கு விடை கிடைத்தது. அது கொடுத்த எனர்ஜிதான் என்னை மீட்டுக் கொண்டு வர உதவியது.

என்னுடைய அச்சமும், பயமும் மெல்ல விலகியது. கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வர ஆரம்பித்தேன்.

என்னை மீட்டுக் கொடுத்தது இஸ்லாம். எனக்கு இஸ்லாம் கை கொடுத்தது. நான் இஸ்லாமிய மார்க்கத்திற்காக என் மனதைக் கொடுத்தேன். ஆம்! அப்படியே இஸ்லாம் மார்க்கத்துக்கு மாறிவிட்டேன்என்று ஆனந்த விகடன் நிருபர் கேட்டஎல்லா மதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றனனு சொல்வாங்க. அப்படி இருக்கையில் நீங்கள் இஸ்லாத்திற்கு மாற தனிப்பட்ட காரணம் எதுவும் இருக்கா?” என்ற கேள்விக்கு அளித்த பதில் தால் நாம் மேலே கண்டது.

இதில் முந்தைய செய்தியை கருவாக வைத்து இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பின் முக்கியத்துவம் என்றோ, அல்லது ஈமானில் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று வேதங்களை நம்புவது. நபிமார்கள் கூட தங்களின் மீது இறக்கியருளப்பட்டிருக்கிற வேதத்தையும், ஏனைய நபிமார்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற வேதங்களையும் கட்டாயம் நம்பவேண்டும் என கட்டளையிடப்பட்டிருக்கின்றனர் என்றோ பேசலாம்.

இரண்டாவது செய்தியை கருவாக வைத்து அழைப்புப்பனியின் அவசியம், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அழைப்புப்பணியை அணுகிய விதம், போன்ற விஷயங்களைப் பேசலாம்.

                           வஸ்ஸலாம்!!!!

1 comment:

  1. அருமையான தகவ ல் விரைவாக பயானை எதிர் பார்க்கின்றோம்



    வஸ்ஸலாம்.....

    ReplyDelete