Tuesday 11 August 2015

இந்திய தேசிய விடுதலையும்…. முஸ்லிம்களின் மகத்தான பங்களிப்பும்…



இந்திய தேசிய விடுதலையும்….
முஸ்லிம்களின் மகத்தான பங்களிப்பும்




      நம்முடைய முந்தைய பதிவு…..

68 -வது சுதந்திர தினத்தை முன்னிட்டு விழாக்கோலம் பூண்டிருக்கும் இந்த இந்திய தேசமும், இந்த தேசத்தின் அனைத்து சமய மக்களும் நினைத்துப் பார்க்க வேண்டிய நிகழ்வுகளும், வரலாற்றுப் பார்வைகளும் ஏராளம்.

இந்த தேசத்தில் சொந்தம் கொண்டாட எந்த ஒரு உரிமையும் முஸ்லிம்களுக்கு இல்லை என்பது போன்ற ஒரு மாயையை ஃபாஸிஸ, வகுப்பு வாத கும்பல்கள் உருவாக்கி, வரலாற்றில் எண்ணற்ற பல திரிபுகளை ஏற்படுத்தி இந்த தேசத்தின் வெகுஜன மக்களிடையே பரப்பி வருகின்றனர்.

மிகப் பெரும் துரதிஷ்டம் என்ன வென்றால்இந்த தேசத்தின் விடுதலைக்கும், உயர்வுக்கும், முன்னேற்றத்திற்கும் எல்லா வகையிலும் முஸ்லிம்களே முன்னோடிகளாக திகழ்ந்திருக்கின்றார்கள் என்பதை முஸ்லிம்களே அறிந்து வைத்திருக்க வில்லைஎன்பது தான்.

இந்த தேசத்தின் எல்லையை தீர்மானித்தவர்கள் முஸ்லிம்கள்! இந்த தேசத்தின் வரைபடத்தை ஒழுங்கு படுத்தியவர்கள் முஸ்லிம்கள்!

சிறு, குறு நில ஆட்சி முறையை ஒழித்துக் கட்டி ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கியதில் மொகலாய ஆட்சியாளர்களின் பங்களிப்பு அளப்பரியது.

வரலாற்றில் மறைக்கப்பட்டிருக்கின்ற முஸ்லிம்களின் தியாக வரலாற்றை, குறிப்பாக இந்திய விடுதலையில் முஸ்லிம்களின் அரும் பெரும் தியாகங்களை சகோதர சமய மக்களுக்கு காய்தல், உவத்தலின்றி வெளிச்சம் போட்டு காட்டுவோம்.
வாருங்கள்! வரலாற்று ஒளியில்கொஞ்சம் பின்னோக்கிச் சென்று வருவோம்!

பூரண சுதந்திரம் கோரி முதல் முழக்கமிட்டவன் இஸ்லாமியனே.

1929 –ஆம் ஆண்டு டிசம்பர் 29 –ல் லாஹூரில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் தான் பூரண சுதந்திரம் வேண்டும்  (Complete Indepence India, as its goal) என்ற தீர்மானம் முன்வைக்கப்பட்டது.

(ஆதார நூல்: B.I Grover, S.Grover, A New Look At Morden Indian History, Page No:426)

ஆனால், அதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்னரே பரி பூரண சுதந்திரமே எங்கள் பிறப்புரிமை என்று முழங்கியவர் ஓர் மார்க்க அறிஞர் ஆவார்.

ஆம்! 1921 –ல் அஹமதாபாத்தில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்றோர்இந்தியாவிற்கு டொமினிக் அந்தஸ்தைஅதாவது பாதுகாக்கப்பட்ட சுதந்திரத்தை வழங்க வேண்டும்என ஒரு தீர்மானத்தை பிரதானமாக முன் மொழிந்தனர்.

டொமினிக் அந்தஸ்து இந்தியாவிற்கு வழங்கப்பட்டால் ஆட்சியில் ஆங்கிலேயருடன் இந்தியரும் பங்கேற்கும் வாய்ப்பு உருவாகும் என்று காங்கிரஸின் மூத்த தலைவர்கள் பலர் கருதினர்.

மிகப்பெரும் தேசியத்தலைவராகவும், கிலாஃபத் இயக்கத்தலைவர்களில் ஒருவராகவும் அங்கம் வகித்த மௌலானா, ஹஜ்ரத் மொஹானி அவர்கள் மட்டும் இத்தீர்மானத்தை எதிர்த்து குரல் கொடுத்தார்.

ஆங்கிலேயரிடமிருந்து நாம் பெற வேண்டியது பாதுகாக்கப்பட்ட சுதந்திரமான டொமினிக் அந்தஸ்தல்ல. ஆங்கிலேயர் இந்த தேசத்திலிருந்து முழுமையாக வெளியேறி இம் மண்ணின் மைந்தர்களிடம் இந்த தேசத்தை ஒப்படைக்கின்ற பூரண சுதந்திரம் ஆகும்என்றார்.

(Complete Independence Nation) பூரண சுதந்திரம் என்கிற தீர்மானத்தை முதன் முதலாக மொழிந்து ஹஜ்ரத் மொஹானி அவர்கள் ஆற்றிய தீர்க்கமான உரையைக் கேட்ட மாநாட்டு பங்கேற்பாளர்கள், ஹஜ்ரத் மொஹானி அவர்களின் முழக்கம் தீர்மானமாக நிறைவேற்றப்படாதா? என பெரும் ஆர்வத்துடன் இருந்தனர்.

ஆனால், மகாத்மா காந்தி எழுந்து நின்று இத் தீர்மானத்தை கடுமையாக எதிர்த்தார். அதனால் ஹஜ்ரத் மொஹானி அவர்களின் தீர்மானம் நிறைவேற்றப்படாமல் போயிற்று.

ஆதார நூல்: Young India, May 4, 1992; Ref; Shan Muhammad, Freedom Movement in India – The Role Of Ali Brothers, Page Number: 159 – 160, 164 – 165.)

ஆனால், 1929 லாஹூர் காங்கிரஸ் மாநாட்டில்முன்பு எதை எதிர்த்தாரோஅதே தீர்மானத்தைபூரண சுதந்திர கோரிக்கையை மகாத்மா காந்தியே முன் மொழிந்தார் என வரலாறு கூறுகின்றது.

ஆரம்பத்திலிருந்தே முஸ்லிம்களை கழற்றி விடும் பணிகளில் அன்றைய தலைவர்கள் ஈடுபட்டிருந்தனர் என்பதை வழக்குரைஞர் இரா. சி. தங்கசாமி அவர்கள் எழுதிய மா மனிதர் ஜின்னா எனும் நூலில் அணிந்துரை எழுதிய முனைவர் . அரணமுறுவல் (உதவி இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை) அவர்கள் இப்படிக் குறிப்பிடுவார்கள்.

இந்தியாவில் பேராயக் கட்சி மட்டும் தான் விடுதலைக்குப் போராடுகின்றது என்று காந்தியும் நேருவும் திரும்பத் திரும்பக் கூறிய போது, இல்லை முஸ்லிம் லீக்கும் அதற்காகத்தான் போராடுகின்றதுஎன்று வழக்காடினார் ஜின்னா.

                   (நூல்: மாமனிதர் ஜின்னா, நூலின் அணிந்துரையிலிருந்து…)

 இஸ்லாமியத் தலைமை இந்திய விடுதலைக்கு வித்தாக அமைந்து விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக செயல்பட்டார்கள் அன்றைய தலைவர்கள் என்பது தெரிய வருகின்றது.

முதல் இந்திய சுதந்திரப் போர்க் களம் கண்ட முதல் இந்தியன் இஸ்லாமியனே!.

வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்களுக்கு இந்த தேசத்தின் வளங்களைக் கண்டதும் நாடாளும் ஆசை பிறந்தது.

அவ்வப்போது தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்த சிற்றரசர்களை நேசர்களாக கையில் எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக தடம் பதித்துக் கொண்டிருந்த ஆங்கிலேயர்கள் வங்காளத்தில் கால் பதிக்க திட்டமிட்டனர்.

அவர்களின் எண்ண ஓட்டங்களை அறிந்து கொண்ட வங்கத்தை ஆண்ட வீர வேங்கை சிராஜ்உத்- தவ்லா அவர்கள் ஆரம்பத்திலேயே முட்டுக்கட்டை போட்டார்.

பெரும் கிளர்ச்சிகளில் ஈடுபட்டார். எந்த நிர்பந்தத்திற்கும் உள்ளாகாமல் எதிர்த்து நின்றார்.

சொல்லப்போனால் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். சிறிய அளவில் நடந்து கொண்டிருந்த அவரின் கிளர்ச்சியும், எதிர்ப்பும் 1757 –ல் பெரும் போராக மாற்றம் பெற்றது.

ஆம்! 1757 –ல் ஃபிளாசிப் போர் நடைபெற்றது. இப்போரில் கைதாகும் இந்திய வீரர்களை அடைப்பதற்காக ஆங்கிலேயர்கள் கட்டிய சிறைச்சாலையிலேயே ஆங்கிலேயர்களை கைது செய்து, அடைத்து பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை கலங்கடித்தார்.

சிராஜ்உத்- தௌலாவை எளிதில் வீழ்த்த முடியாது என்பதை உணர்ந்து கொண்ட ஆங்கிலேயர்கள் பிரிட்டனிலிருந்து கடல் மார்க்கமாக தங்களின் படைகளையும், நவீன ஆயுதங்களையும் பயன்படுத்த முடிவெடுத்தனர்.

இந்த சதித்திட்டத்தை முறியடிக்க கொல்கத்தா துறைமுகத்தில் சிராஜ்உத்- தௌலா தமது படைகளுடன் காத்திருந்தார்.

கப்பல் படையும் வந்தது. சிராஜ்உத்- தௌலாவின் நெஞ்சுரத்தையும், படைவீரர்களின் வீரத்தையும் கண்டு போர் செய்யத்தயங்கிக் கொண்டிருந்த அந்த நேரத்தில் தான் நடக்கக் கூடாது அந்த சம்பவம் நடந்தது.

அந்த சம்பவம் மாத்திரம் நடக்காது போயிருக்குமானால் இந்திய சுதந்திரத்தின் சரித்திரமே மாறிப்போயிருக்கும்.

ஆம்! அந்த சம்பவம் இது தான்இடைவிடாது பெய்த கனத்த மழை, அந்த மழையினால் சிராஜ்உத்- தௌலா படையின் வெடிமருந்துகள் நனைந்து வீணாகிப்போயின.

நிலைமைகளை சாதகமாக்கிக் கொண்ட ஆங்கிலேயர்கள், சிராஜ்உத்- தௌலாவின் முட்டுக்கட்டைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். ஆம்! அவருக்கும் சேர்த்து தான்.

சிராஜ்உத்- தௌலா சிந்திய இரத்தத்தின் மீது தான் தங்களின் முதல் ஆட்சியை நிறுவினர்.

ஆம்! ஆங்கிலேயர்கள் ஆட்சி முதலில் வங்காளத்தில் தான் ஏற்பட்டது.

ஆனால், இந்த தேச விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராட வேண்டும் என்று 1944 ஜூலை 6-ஆம் தேதி நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் முழக்கமிட்ட டில்லி சலோ! டில்லி நோக்கி புறப்படுங்கள்! எனும் முழக்கம் தான் ஆயுதம் ஏந்திய முதல் போராட்டக் களமாக இந்திய வரலாற்றில் மாறிப்போனது.


 பெண்களின் பங்கு.

ஆங்கிலேயர்களை கூண்டோடு அழித்து விடும்படி அல்லாஹ்விடம் தொழுது வேண்டுமாறு முஸ்லிம் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளிடம் கூறியதை நான் நேரில் கேட்டிருக்கின்றேன். – டில்லி மன்னர் மீது நடந்த வழக்கு சாட்சியத்தின் போது ஆங்கிலேய பெண் ஆல்ட்வெல் கூறினார்.

                               (நூல்: வீர சாவர்க்கர், எரிமலை, பக்கம்:61)

1857 –ல் மாமன்னர் பகதூர் ஷா தலைமையில் இந்திய ஆட்சியாளர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக ஒருங்கிணைந்த நேரத்தில், ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்த இரண்டு வீர மங்கையர்கள் தங்களையும் அப்போராட்டத்தில் இணைத்துக் கொண்டனர்.

ஒருவர் ஜான்ஸிராணி லக்குமிபாய், இன்னொருவர் உத்திரபிரதேசத்தில் ஔத் (Outh) எனும் குறு நிலப்பகுதியை ஆட்சி செய்த ஹஜ்ரத் மஹல் ஆவார்கள்.

1858 மார்ச் 6-ஆம் தேதி பிரிட்டிஷாரின் மேஜர் காலின் தலைமையிலான 30 ஆயிரம் பேர் கொண்ட படையை எதிர் கொண்ட பேகம் ஹஜ்ரத் மஹல் ஆங்கிலேயர்களை பின் வாங்கி ஓட வைத்தார்.

இறுதியில், மஹலின் ஆட்சியையும், அரசுடைமைகளையும் ஆங்கிலேயர்கள் பறிமுதல் செய்தனர்.

தேசத்தின் விடுதலைக்காக தன் ஆட்சி, அதிகாரம் அனைத்தையும் இழந்து நாட்டை விட்டே வெளியேற்றப்பட்டார்.

                              (நூல்: வீர சாவர்க்கர், எரிமலை, பக்கம்:253)


ஆனால், இந்திய வரலாற்றில் அவருக்கு கிடைத்திருக்கும் கௌரவம் வரலாற்றுப் பாட நூலில் நான்கு வரிகள் மட்டுமே!

பேகம் ஹஜ்ரத் மஹலின் சம காலத்தில் வாழ்ந்த ஹஸன் மஹ்பர் பேகம் என்ற வீர மங்கை ஜான்ஸி ராணியின் படைப்பிரிவில் தளபதியாக பணியாற்றினார்.

1858  ஜூன் 18–ல் ஆங்கிலேயருக்கு எதிராக நடைபெற்ற குவாலியர் போரில் ஜான்ஸி ராணியுடன் வீர மரணம் அடைந்தார்.

(நூல்: B.I Grover, S.Grover, A New Look At Morden Indian History, Page No:268)

வீரச் சிறுவன் கைர் முஹம்மது.

1922 –ஆம் ஆண்டு சிந்து மாகாணம் மட்லி நகரில் பெரும் திரளான ஒரு கூட்டம் நடைபெறுகின்றது. அந்த கூட்டத்தில் சிறுவன் ஒருவன் உரையாற்றுகின்றான்.

அவன் பேச்சில் சுதந்திரத் தாகம் தெறிக்கின்றது, ஆங்கிலேயரின் மீதான வெறுப்பு அனலாய் பறக்கின்றது.

தகவல் ஆங்கிலேயருக்குச் செல்கிறது. கைது செய்து இன்றைய பாகிஸ்தானின் ஹைதராபாத் நகர நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

அந்தச் சிறுவன் தான் 11 வயது நிரம்பிய கைர் முஹம்மது.

தலை மட்டும் வெளியே தெரியும் படி குற்றவாளிக் கூண்டில் நின்ற கைர் முஹம்மதுவைப் பார்த்து ஆச்சர்யப்பட்ட நீதிபதி

      நீதிபதி: உன் பெயர் என்ன?

கைர் முஹம்மது: “ஆஸாத்” (ஆஸாத் என்றால் விடுதலை என்று பொருள்) சிறுவனிடம் இருந்து தெறித்த உறுதியான பதிலில் நிமிர்து உட்கார்ந்தார் நீதிபதி.

நீதிபதி: உன் தந்தையின் பெயர் என்ன?

கைர் முஹம்மத்: ”இஸ்லாம்

நீதிபதி: உன் ஜாதி என்ன?

கைர் முஹம்மது: “ஒத்துழையாமை!” (இந்த பதில் நீதிபதிக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.)

நீதிபதி: உன் தொழில் என்ன?

கைர் முஹம்மது: ”ஆங்கிலேய அரசுக்கு எதிராகப் புரட்சியைத் தூண்டுவதுஎன்று கூறும் போது சிறுவனின் குரலில் கம்பீரமும் மிடுக்கும் இருந்தது.

(அன்றைய கால கட்டத்தில் புரட்சி செய்வது, புரட்சியைத் தூண்டுவது ராஜ துரோக குற்றமாகும். மரண தண்டனைக் கூட தீர்ப்பாக வழங்கப்பட்டுள்ளது.)

நீதிபதி: உனக்கு (ஜாமீன்) பிணையாள் யார்?

கைர் முஹம்மது: ”எனது பிணையாள் அல்லாஹ் ஒருவன் தான்என உறுதியுடன் கூறினான்.

நீதிபதி: உன் செயலுக்காக நீ வருந்தி மன்னிப்புக் கோருகின்றாயா?

கைர் முஹம்மது: ”ஒரு குற்றமும் செய்யாத நான் எதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும்? நான் ஓர் இந்தியக் குடிமகன் என்ற நிலையில் என் கடமையைத் தானே செய்தேன்?

மன்னிப்புக் கேட்க மறுத்து விட்டதால் சில மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.

(நூல்: சிந்தனைச் சரம், அக்டோபர் – 1997, அபூ ஹாரிஸ் டாக்டர் பீ. ஹாமித் அப்துல் ஹை அவர்கள் எழுதிய நீதி விசாரணை எனும் கட்டுரையிலிருந்து…)

 நம்மை ஆச்சர்யப்பட வைக்கும் சிறுவனின் பதில்களுக்குப் பின்னால் இந்த தேசத்தின் மீதான பற்றும், இஸ்லாமிய உணர்வும் தூண்டுகோலாய் இருந்ததை உணரமுடிகின்றது.

தனவந்தர்களின் பங்கு

.என். கேப்டன் ஷா அவர்கள் கூறும்போது… “கீழ்க்கோடி இந்திய முஸ்லிம்களில் ஆயிரக்கணக்கானோர் தங்கள் சொத்துக்களை எல்லாம் சுபாஸ் சந்திர போஸ் நிறுவிய இந்திய தேசிய இராணுவத்திற்குக் கொடுத்து விட்டு, கையில் சல்லிக் காசுகள் கூட இல்லாததால் இராணுவத்தில் குடும்பம் சகிதமாகச் சேர்ந்து, இந்த தேசத்திற்காக ஃபக்கீர்களாய் வாழ்ந்ததை என் கண்களால் நானே கண்டேன்.”

( நூல்: ஜெயமணி சுப்ரமணியம் அவர்கள் எழுதிய நேதாஜியின் வீரப்போர் எனும் நூலின் இரண்டாம் பாகம் 181 –ஆம் பக்கத்திலிருந்து…)

1943 ஜூலை 2-ஆம் தேதிஆஸாத் ஹிந்த் சர்க்கார்எனும் இந்திய தேசிய இடைக்கால சுதந்திர அரசை நிறுவிய நேதாஜி, அவ்வரசின் நிர்வாகச் செலவிற்காகவும் ராணுவத்தை வழி நடத்துவதற்காகவும் ரிசர்வ் வங்கி ஒன்றை நிறுவினார்.

அவ் வங்கிக்கான நிதியை சிங்கப்பூர், மலேசியா, பர்மா ஆகிய நாடுகளில் வாழும் இந்தியர்களிடம் திரட்டினார்.

பர்மாவிற்கு நிதி திரட்டுவதற்காக நேதாஜி தலைமையில் ரங்கூனில் வியாபார பிரமுகர்களை ஒன்று திரட்டி ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பேசிய நேதாஜிதேச விடுதலைக்காக வாரி, வாரி வழங்குங்கள்என்றார்.

சுற்றியிருந்த வியாபாரப் பிரமுகர்கள் ஒன்று கூடி பேசிஎங்கள் வருமானத்தில் 10 சதவீதத்தை இந்திய தேசிய இராணுவத்திற்காக தொடர்ந்து வழங்வோம்என்றனர்.

இவ்வறிவிப்பைக் கேட்டு சினமுற்ற நேதாஜிதேசத்தின் விடுதலைக்காக இரத்தம் சிந்தும் எம் வீரர்கள் ஐந்து சதவீதம், பத்து சதவீதம் என்று கணக்குப் பார்த்தா சிந்துகின்றார்கள்?

நீங்கள் மட்டும் ஏன் இப்படி கணக்குப் பார்க்கின்றீர்கள்?” என்று ஆவேசமாக பேச, கூட்டத்தின் நடுவிலிருந்து தொப்பி, தாடி சகிதமாக ஒரு முதியவர் மேடையின் மீதேறி நேதாஜியின் அருகே வந்துஒரு காகிதத்தை நீட்டி இதை வைத்துக் கொள்ளுங்கள்.” என்று கூறிவிட்டு கீழே இறங்கிவிட்டார்.

காகிதத்தைப் பிரித்துப் படித்துப் பார்த்த நேதாஜி உணர்ச்சி வசத்தால் கண்களில் நீர் ததும்ப அந்த முதியவர் நடந்த திசை நோக்கிப் பார்க்கின்றார்.

அப்படி என்ன தான் அக்காகிதத்தில் அம்முதியவர் எழுதி இருப்பார். ஆவலாய் இருக்கிறதல்லவா!?”

ஆம்! அந்த காகிதத்தில் இப்படி எழுதப்பட்டிருந்தது… “ரங்கூன் மாநகரில் எனக்குச் சொந்தமான ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வியாபார நிறுவனங்களை இந்திய தேசிய இராணுவத்திற்காக நான் எழுதி கொடுக்கின்றேன்என்று..

அவ்வாசகங்களுக்குச் சொந்தக்காரர் வேறு யாருமல்ல வள்ளல் முஹம்மது ஹபீப் அவர்கள் தான்.

                      ( நூல்: நேதாஜியின் வீரப்போர் இரண்டாம் பாகம். )

வள்ளல் அமீர் ஹம்ஸா அவர்களும் அவரின் தந்தையாரும் பல லட்சங்களை அள்ளித் தந்திருக்கின்றனர். நேதாஜி ஏற்படுத்திய இரானுவத்திற்கு.

1943 –ல் நேதாஜி கலந்து கொண்டு பேசிய கூட்டத்தில் நேதாஜிக்கு அணிவிக்கப் பட்ட மாலையை ஏலம் விட்டனர். அந்த மாலையை மூன்று லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார் வள்ளல் அமீர் ஹம்ஸா அவர்கள்.

ஆரம்பத்தில் அமீர் ஹம்ஸாவின் தந்தையார் இந்திய தேசிய இராணுவத்தில் நேதாஜியின் படைப்பிரிவில் அமீர் ஹம்ஸா இடம் பெற்றிருப்பதைக் கண்டு, பாசத்தின் காரணமாக அமீர் ஹம்ஸா அவர்களை வீட்டில் சிறைவைத்தார்.

இது பற்றிக் கேள்வி பட்ட நேதாஜி, அமீர் ஹம்ஸாவின் தந்தையாரை அழைத்து இந்திய தேச விடுதலையின் அவசியம் குறித்து உணர்ச்சிப் பொங்க உரையாடினார்.

நேதாஜியின் பேச்சால் கவரப்பட்ட அமீர் ஹம்ஸாவின் தந்தையார் அங்கேயேதமது பாக்கெட்டிலிருந்து செக் புக்கை எடுத்து இரண்டு லட்சத்து முப்பதாயிரத்துக்கான காசோலையை நேதாஜியின் கையில் கொடுத்ததோடு மாத்திரமல்லாமல், உடன் அழைத்து வந்த தமது மகன் அமீர் ஹம்ஸாவை இந்த தேச விடுதலைக்காக உங்கள் கையில் ஒப்படைக்கின்றேன்என்றார்கள்.

நேதாஜியின் 47 –வது பிறந்த நாளில் (23.01.1944) ஒரு லட்சத்துக்கான காசோலையோடு, தான் கையில் அணிந்திருந்த வைர மோதிரத்தையும் பிறந்த நாள் பரிசாக வழங்கினார்.

                          ( நூல்: நேதாஜியின் வீரப்போர் இரண்டாம் பாகம். )

ஆனால், ”நமது இந்திய தேசத்தின் பொன் விழா ஆண்டில் சென்னையில் வசித்து வந்த வள்ளல் அமீர் ஹம்ஸாவை கௌரவிக்க இந்த தேசத்தின் எந்த ஒருவருக்கும் மனம் வரவில்லையே!”

அரசுப் பள்ளிக் கூடங்களில் அழைத்து கொடியேற்றிடச் சொல்லவோ, பத்திரிக்கைகளில் பிரத்யேகமாக பேட்டி கண்டு செய்தி வெளியிடவோ, சதை வியாபாரம் செய்யும் நடிகைகளை வைத்து வியாபாரம் செய்யும் மீடியாக்கள் இவரைச் சந்தித்து பேட்டி காணவோ முன் வரவில்லை.

காரணம் ஒன்றே ஒன்று தான் அவர் ஒருமுஸ்லிம்”.

1921 மார்ச் 31 –ஆம் தேதி விஜயவாடாவில் நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில்தேச விடுதலைக்காக போராடும் காங்கிரஸ் பேரியக்கத்தின் பொருளாதார ஆதாரங்களுக்காகஒரு கோடி ரூபாய் திரட்ட வேண்டும் என்றும், அதற்கு திலகர் நினைவு சுயராஜ் நிதி என்று பெயர் சூட்ட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்த நிதியில் 60 லட்சத்தை மும்பையிலும், 40 லட்சத்தை இதர இந்திய நகரங்களிலும் திரட்ட வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

இந்த அறிவிப்புக்களை முறையே காந்தி அறிவித்தார். மும்பையின் மிகப் பெரும் தொழில் அதிபர்களான .பி. காட்ரெஜ் மூன்று லட்சமும், ஜெயநாரயணன் இந்து மல்தானி ஐந்து லட்சமும், ஆனந்தி லால் இரண்டு லட்சமும் நிதி வழங்கினர்.

அந்நேரத்தில், பம்பாயின் மிகப்பெரும் பஞ்சாலையின் அதிபரான உமர் சுப்ஹானி அவர்கள் காந்தியைச் சந்தித்து ஒரு கோடி ரூபாய்க்கான காசோலை வழங்கினார்.

அதை கையில் வாங்கிய காந்தி ஆச்சர்யம் மேலிட காங்கிரஸ் கமிட்டியின் நோக்கத்தை ஒருவரே நிறைவேற்றித்தருகின்றாரே என்று ஆனந்தப்பட்டு விட்டு, சுதந்திரப்போராட்ட நிதி என்பதால் தேசத்தின் அனைத்து மக்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும்.

அதைக் கருத்தில் கொண்டு அந்தக் காசோலையை அவரிடம் திருப்பிக் கொடுத்து விட்டு, சில லட்சங்கள் மட்டும் கொடுங்கள் என்று கூறி, சில லட்சங்களை மட்டும் உமர் சுப்ஹானி அவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.


மதரஸாக்கள், பள்ளிவாசல்கள், உலமாக்கள் ஆகியோரின் பங்கு.

இந்திய தேசத்தின் விடுதலைப்போரில் தங்களின் வழிபாட்டுத்தலங்களைக் கூட ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் பயன்படுத்திய ஒரு சமுதாயம் இருக்குமேயானால் அது இஸ்லாமிய சமுதாயம் மட்டும் தான்.

குறிப்பாக உலமாக்களின் பங்கு அளப்பரியது.

இந்திய தேசத்தின் விடுதலையில் இஸ்லாமிய சிறுவர்கள், இளைஞர்கள், முதியோர்கள், பெண்கள் தனவந்தர்கள் என அனைத்து தரப்பாரும் கலந்து கொண்டு பணியாற்றிடும் வாய்ப்பை பெற்றுத் தந்தவர்கள் ஆலிம் பெருமக்கள்.

அவர்கள் இதற்காக பள்ளிவாசல்களின் வெள்ளி மேடைகளையும், மதரஸாக்களின் வகுப்புக்களையும், தெருமுனைப் பிரச்சாரங்களையும், எழுத்துக்களின் வாயிலாகவும் கையாண்டனர்.

தேவ்பந்த் உலமாக்கள் ஆங்கிலம் படிப்பது ஹராம் என்று ஃபத்வா வழங்கினார்கள்.

ஷாஹ் அப்துல் அஜீஸ் தெஹ்லவி அவர்கள் இந்த தேசத்தை தாருல் ஹர்ப் யுத்த பூமி என்று ஃபத்வா வழங்கினார்கள்.

தமிழகத்தின் அப்துல் ஹமீது பாகவீ அவர்கள் கதர் அணியாத மணமக்கள் மணமக்களின் வீட்டார் திருமணங்களில் கலந்து கொள்வதில்லை என்று அறிவித்தார்கள்.

மௌலானா முஹம்மதலி அவர்கள் 1921 ஜூலையில் கராச்சியில் நடைபெற்ற கிலாஃபத் மாநாட்டின் தலைமை உரையில் ஆங்கிலேயே இராணுவத்தில் சேர்வது ஹராம் என்று ஃபத்வா வழங்கினார்கள்.

இன்னொரு சந்தர்பத்தில் ஆங்கிலேயர்களின் உடை, கலாச்சாரம், மொழி ஆகியவைகளை பின்பற்றுவது ஹராம் என்று தேவ்பந்த் உலமாக்கள் ஃபத்வா வழங்கினார்கள்.

19 –ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மௌலவி காசிம் நானோத்தவி ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு விரட்டுவது மார்க்கக் கடமை என ஃபத்வா வழங்கினார்கள்.

நுஸ்ரத்துல் அஹ்ரார் (சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான உதவி) எனும் பெயரில் ஒரு நூலையே அவர்கள் தொகுத்து வெளியிட்டார்கள்.

இவைகளுக்கெல்லாம் மேலாக 1831 மே 6-ல் நடைபெற்ற பாலகோட் யுத்தத்தில் நூற்றுக்கணக்கான உலமாக்கள் உயிரிழந்தனர்.

இந்த தேசத்தின் விடுதலைக்காக போராடிய உலமாக்கள் பலர் வீர மரணம் அடைந்த போது, அவர்களது ஜனாஸாவைப் பொதிந்த கஃபன் துணி முழுக்க இரத்தக்கரை படிந்ததாகவே அமைந்திருந்தது.

( நூல்: மு. அப்துல் சமது, ( தமிழ்த்துறை பேராசிரியர் ) மற்றும் சுவனப்பிரியன் அவர்கள், முத்துப்பேட்டையார் அவர்கள், அப்துல்லா அவர்கள், யூசுஃப் கான் அவர்கள் (ஆகியோர்) இணைந்து தொகுத்த “இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் (மறைக்கப்பட்ட அரும்பெரும் பங்கு...” எனும் தொகுப்பிலிருந்து...)


களம் ஒன்று திசைகள் வேறு...

1.   பகதுர்ஷா ஜஅஃபர்.

1837 –ல் டில்லியின் அரியணையில் அமர்ந்தார் பகதுர்ஷா. அவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்து ஆங்கிலேயர்களுக்கு கிலி ஏற்பட்டது.

மக்கள் மத்தியில் பகதுர்ஷா மிகவும் செல்வாக்குடன் இருப்பதைக் கண்டு ஆத்திரம் அடைந்த ஆங்கிலேயர்கள் சினமுற்று பல கீழறுப்பு வேலைகளில் ஈடுபட்டனர்.

ஆனால், எந்தச் சதிகளாலும் பகதூர்ஷாவின் செல்வாக்கை சரிக்கமுடிய வில்லை.

இந்நிலையில், 1847 –ல் ஆங்கிலேய அதிகாரி கெய்த் தன் மனைவிக்கு எழுதிய கடிதத்தில், நாளை பக்ரீத் பண்டிகை முஸ்லிம்கள் இந்துக்கள் பூஜிக்கும் மாடுகளை பலி (குர்பானி) கொடுப்பர்.

முஸ்லிம்கள் நாம் தெய்வமனெ பூஜிக்கும் மாடுகளை குர்பானி கொடுப்பதா? என்று இந்துக்கள் முஸ்லிம்களுக்கு எதிராக கொதித்தெழும் கலவர சூழலை உருவாக்கியுள்ளேன்.

நாளை டில்லியில் நடைபெற இருக்கின்ற மாபெரும் கலவரத்தை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்” என்று எழுதி தன் சதித்திட்டத்தை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளான்.

ஆனால், இந்த நாசகார சதியை எப்படியோ அறிந்து கொண்ட பகதுர் ஷா அவர்கள் ஈதுக்கு முந்தைய நாள் இரவு “முஸ்லிம்கள் ஆடு மட்டுமே குர்பானி கொடுக்க வேண்டும் மாடுகளை குர்பானி கொடுக்கக்கூடாது” என்று உத்தரவிட்டார்.

நடக்க இருந்த பெரும் கலவரத்தை சாதுர்யமாக கையாண்டு கெய்த் –தின் முகத்தில் கரியை அள்ளி பூசினார் பகதுர்ஷா.

இந்த நிலையில் ஆங்கிலேயருக்கு எதிரான நிலப்பாடு கொண்டவர்களை ஓரணியில் ஒன்று திரட்டி, பெரும் படை கொண்டு ஆங்கிலேயர்களை இந்த தேசத்தை விட்டும் விரட்ட வேண்டும் என்பதில் தீவிரமாய் ஈடுபட்ட பகதுர்ஷா அப்படிப்பட்டவர்களை ரகசியமாக ஒன்றிணைத்தார்.

பகதுர்ஷாவுடன் ஜான்ஸி ராணி லக்குமிபாய், நானா சாஹிப், தாந்தியா தோப், ஔத் பேரரசி ஹஜ்ரத் மஹல், பீகாரின் சிங்கம் என்று வர்ணிக்கப்பட்ட குவர்சிங், மௌலவி அஹ்மதுல்லாஹ் ஷாஹ், மற்றும் ஹரியானா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய பகுதிகளின் மன்னர்களும் இணைந்து கொண்டனர்.

மிகப்பெரிய திட்டத்துடன் களமிறங்கிட 1857 மே மாதம் 31 –ஆம் தேதியையும் தேர்ந்தெடுத்து, இந்துக்களும் முஸ்லிம்களும் தோளோடு தோள் நின்று இந்த தேசத்தை மீட்டெடுக்கும் வரை போர் புரிய வேண்டும் என்றும் தீர்மானித்துக் கொண்டனர்.

ஆனால், மே 10 –ஆம் தேதியன்றே சிப்பாய்க் கலகம் உருவாகி பகதுர்ஷா கூட்டணியினரின் கனவை தவிடு பொடியாக்கியது.

இறுதியில் சிப்பாய் கலகவாதிகளான புரட்சியாளர்களுக்கு உதவி செய்தார். 47 ஆங்கிலேயர்களை கொலை செய்தார் என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை பகதுர்ஷா மேல் சுமத்தி பகதுர்ஷாவை ரங்கூனுக்கு நாடு கடத்தியது.

மன்னராக இருந்ததால் மாதம் 600 ரூபாய் உபகரணச் சம்பளம் வழங்குவதாக ஆங்கிலேயர்கள் சொன்ன போது “என் மண்ணின் செல்வத்தை எடுத்து எனக்கு கொடுப்பதற்கு நீ யார்?” என்று கூறி வாங்க மாட்டேன் என்று கூறி மறுத்து விட்டார்.

இந்த தேசத்தில் இனி இறந்து போகும் பாக்கியம் தமக்கு ஒரு போதும் கிடைக்காது என்பதை அறிந்து வருந்தியவராக, தன்னை அடக்கம் செய்யும் மண்ண்றையில் தூவ ஒரு பிடி இந்திய மண்ணை அள்ளியவராக ரங்கூனுக்கு கப்பல் ஏறினார். 1862 நவம்பர் 7 –ல் தமது 92 –ஆம் வயதில் ரங்கூனில் காலமானார்.

( நூல்: kasim Rizwi, The Great Bahadur Sha Jafer, Page: 10, வீர சாவர்க்கர், எரிமலை, பக்கம்: 58 )

இன்னா லில்லாஹி....

2.மௌலானா முஹம்மது அலி

 1930 –ல் லண்டனில் நடந்த வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அண்ணல் காந்தியுடன் சென்றார் மௌலானா முஹம்மது அலி.

அப்போது, மௌலானா அவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். மாநாட்டில் அவர் பேசுவதற்கு ஆங்கிலேயர்களால் ஐந்து நிமிடங்களே அவகாசமாக வழங்கப்பட்டிருந்தது.

தேசத்தின் நலனுக்காக உடல் நிலையைக் கருத்தில் கொள்ளாமல் கால அவகாசத்தைக் கடந்து சுமார் இரண்டு மணி நேரம் பேசினார்.

அரங்கு முழுவதிலும் அமர்ந்திருந்த ஆங்கிலேயர்கள் மௌனமாக அவரின் பேச்சையே கேட்டுக் கொண்டிருந்தனர்.

தமது பேச்சின் இறுதியில்...

“I Want to go back to my country”. He said in a Loud Voice. “If I can go back with the substance of Freedam in my hand. Otherwise Iwill not go back to a slove country.

Iwill even prefer to die in a foreign country so long as it a Free country, and if you do not give as Freedam in India, You will have to give me a grave here.”

என் தேசத்திற்கு நான் திரும்ப விரும்புகின்றேன். (மிக உரத்த குரலில் கூறினார்) என் தேசத்திற்கு நான் திரும்புவது, எங்கள் தேசத்தின் சுதந்திரத்திற்கான உத்தரவை நீங்கள் என் கையில் வழங்கினால் மட்டுமே சாத்தியமாகும்.

ஏனென்றால், ஒரு அடிமை நாட்டிற்கு இனி நான் திரும்பிச் செல்வதை ஒரு போதும் விரும்ப வில்லை. நான் இந்த அந்நிய மண்ணில் இறந்து போவதையே விரும்புகின்றேன்.

ஏனெனில், இது சுதந்திர மண். எனவே எங்கள் தேசத்திற்கு சுதந்திரம் கொடுங்கள்! இல்லையேல், உங்கள் மண்ணில் என்னை அடக்கம் செய்ய கல்லறைக்கு இடம் கொடுங்கள்!”  என்று கூறி அமர்ந்தார்.

லண்டன் வட்ட மேசை மாநாட்டில் பேசியவாறே அங்கேயே 04.01.1931 –ல் காலமானார் மௌலானா முஹம்மது அலி அவர்கள்.

அவர் ஆசைப்பட்ட மாதிரியே சுதந்திர மண்ணில் இறந்து போனாலும், அவரது உடலை லண்டனில் அடக்கம் செய்ய இஸ்லாமிய நாடுகள் அனுமதிக்க வில்லை.

உலக நாடுகளில் 22 நாடுகள் அவரது உடலை அடக்கம் செய்ய முன் வந்தன. கிலாஃபத் கமிட்டியை தொடர்பு கொண்டு பைத்துல் முகத்தஸ்ஸின் பொறுப்பாளர் அமீருல் ஹுஸைனி அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க பைத்துல் முகத்தஸ் அல் அக்ஸா பள்ளி அருகில் அடக்கம் செய்யப்பட்டார்கள் மௌலானா முஹம்மது அலி அவர்கள்.

( நூல்: ; Shan Muhammad, Freedom Movement in India – The Role Of Ali Brothers, Page Number: 231. )


பகதுர்ஷா ஜஅஃபர் அவர்களும், மௌலானா முஹம்மது அலி அவர்களும்இந்திய தேசத்தின் விடுதலையைக் களமாக வைத்து போராடிய போதும், இருவரும் தமது இறுதி முடிவை இரு வேறு திசைகளை நோக்கி அமைத்துக் கொண்டார்கள்.

இறுதியாக

இஸ்லாமும், முஸ்லிம்களும் எங்கெல்லாம் பிரவேசம் செய்தார்களோ, அங்கெல்லாம் அடிமைச் சிந்தனையில் ஆழ்ந்திருந்தவர்களை தட்டியெழுப்பினார்கள்.

கொடுங்கோலர்களின் கொட்டங்களை அடக்கினார்கள். புரட்சி விதைகளை விதைத்து சமுதாய விடுதலையை பெற்றுக் கொடுத்தார்கள்.

இயற்கையாகவே அல்லாஹ்விற்கு மட்டுமே இந்தச் சமுதாயம் அடிமைப் பட்டுக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டுமெனெ வழி காட்டப் பட்டிருந்ததால் உலகில் பல சமூக மக்களுக்கான விடுதலையில் மானசீகமாக முஸ்லிம்களே காரணமாய் அமைந்திருந்தனர்.

இது தான் மறுக்க முடியாத உண்மையும் ஆகும்.

இஸ்லாமியப் படைகள் வெற்றிகளை மலை போல குவித்துக் கொண்டிருந்த தருணம் அது.

சிரியா, ஹிம்ஸ், டமாஸ்கஸ் போன்ற பகுதிகள் வெற்றி கொள்ளப்பட்ட பகுதிகளாக முஸ்லிம்களின் வசம் வந்த வசந்த கால நேரம் அது.

கலீஃபா அபூபக்ர் (ரலி) உலக முஸ்லிம்களின் தலைமையை ஏற்று வீற்றிருந்தார்கள்.

ரோமர்கள் 4 லட்சம் வீரர்களுடன் பெரும் படை ஒன்றை திரட்டிக் கொண்டு மதீனா நோக்கி வந்து கொண்டிருக்கின்றார்கள் எனும் செய்தி உளவுச் செய்தியாக கலீஃபா அபூபக்ர் (ரலி) அவர்களின் காதுகளுக்கு எட்டுகிறது.

உடனடியாக வெற்றி கொள்ளப்பட்ட இடங்களில் இருந்து படைகளை வாபஸ் பெற்று ரோமர்களை எதிர் கொள்ள தாம் அனுப்புகின்ற படையோடு வழியில் இணைந்து கொள்ளுமாறு அத்துனை படைத்தளபதிகளுக்கும் கடிதம் எழுதினார் கலீஃபா அவர்கள்.

இந்தக் கடிதம் காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களுக்கு கிடைக்கும் போது ஹிம்ஸ் பகுதியில் தமது படை வீரர்களோடு முகாமிட்டிருக்கின்றார்கள்.

கடிதத்தை கையில் வாங்கிய காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள், அந்தப் பகுதி இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத சிறுபான்மை சமூகமான கிறிஸ்துவர்களிடம் தாங்கள் வசூலித்த (ஜிஸ்யா) பாதுகாப்பு வரியை மீண்டும் அவர்களிடமே கொடுத்து விட்டு பின் வருமாறு உரையொன்றை நிகழ்த்தினார்கள்.

நாங்கள் உங்களிடமிருந்து உங்கள் உயிர்களுக்கும், உங்கள் உடமைகளுக்கும் பாதுகாப்பு தருவதாகக் கூறி பாதுகாப்பு வரியை வசூலித்தோம்.

ஆனால், இப்போது நாங்கள் பெரும் படையொன்றை சந்திக்கும் பொருட்டு உங்களிடம் இருந்து விடை பெறுகின்றோம்.

இனிமேல் எங்களால் உங்களை பாதுகாத்திட இயலாது எனும் போது, உங்களிடம் வசூலித்த உங்கள் பணத்தை உங்களிடமே தந்து விட்டோம்.”

இதைக் கேட்ட அப்பகுதியின் மக்கள் கண்ணீர் மல்கஇறைவன் உங்களோடு இருக்கட்டும்! வெற்றி பெற்றவர்களாய் மீண்டும் நீங்கள் எங்கள் பூமிக்கு வர வேண்டும்!

உங்களின் நீதம் நிறைந்த ஆட்சியின் நிழலில் இந்த நாள் வரை அமைதியோடு இளைப்பாரினோம்!

ஆனால், எங்கள் மீது கடந்த காலத்தில் ஆட்சி புரிந்த எங்கள் சமூகத்தைச் சார்ந்த ஆட்சியாளர்கள் எங்கள் மீது கொடுங்கோன்மையை கட்டவிழ்த்து விட்டனர்.

இறைவனின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றோம்! நீங்கள் இருக்கும் இடத்தில் அவர்கள் இருந்திருந்தால் (அதாவது, எங்களிடம் இதே போல் வரிகளை வசூலித்து ஆட்சியாளர்களாக இருந்திருந்தால்) எங்களிடம் வசூலித்த எதையும் அவர்கள் எங்களிடம் திருப்பித் தந்திருக்க மாட்டார்கள்.

எங்களிடம் இருப்பதையும், எங்களின் உடமைகளையும் பிடுங்கிச் சென்றிருப்பார்கள்.”
( நூல்: மு. குலாம் முஹம்மது அவர்கள் எழுதியஇஸ்லாமிய நாகரிகம்எனும் நூலிலிருந்து.. பழைய பதிப்பின் 139 மற்றும் 140 –ஆம் பக்கம் )

நிறைவாக

மௌலானா முஹம்மது அலி அவர்கள் தங்களின் ஹஜ்ஜின் போது கஅபாவின் திரைச்சீலையைப் பிடித்த படி இப்படித் துஆ செய்தார்களாம்!

இறைவா! என் இந்திய தேசத்திற்கு சுதந்திரத்தைத் தா!
சுதந்திர இந்தியாவில் இஸ்லாத்திற்கு வாழ்வைத் தா!” என்று..

ஒன்று நடந்து விட்டது இன்னொன்று நடைபெற தொடர்ந்து நாம் துஆ செய்வோம்!

இந்திய தேசத்தின் வரலாற்றை சகோதர சமயத்தவர்களோடு ஆதாரப்பூர்வமாக பகிர்ந்து கொள்வோம்.

ஒரு கேள்வியை இந்த தேசத்தின் முன் வைப்போம்!

20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தேசத்தின் எந்த ஒரு இடத்திலும் புறம் போக்கு நிலத்தில் வாழ்ந்த ஒருவனுக்கு அந்த இடத்திற்கு உரிமை கோர சட்டமும், நீதிமன்றங்களும் அனுமதிக்குமேயானால்,

இந்த தேசத்தின் எல்லா திசைகளிலும் இருந்து இந்த தேச விடுதலைக்காக எல்லா வகையிலும் தியாகங்கள் பல புரிந்தஓர் ஒப்பாரும் மிக்காரும் இல்லா முஸ்லிம் சமுதாயத்திற்குசுதந்திரமாய் வாழ்ந்திட, சுதந்திர இந்தியாவின் உரிமையைப் பெற்றிட,  அனுமதி இருக்கிறதா இல்லையா?”

குறிப்பு: இந்தக் கட்டுரையில் ஆதார நூல்களாக கூறப்பட்டிருக்கும் அத்துனை தமிழ் நூல்களும் எம்மிடம் இருக்கின்றது.

ஆனால், ஆங்கில நூல்கள் நம்மிடம் இல்லை. எனினும் மூல ஆதாரத்தோடு பதிவைப் போடும் முயற்சியில் இறங்கிகூகுளில்தேடிய போது பணம் செலுத்தினால் மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும் என்கிற நிலை.

ஒவ்வொரு நூலும் முன்னூற்றி சொச்சம் ரூபாய் வரை உள்ளதாகும். ஆகையால் நாம் பதிவிறக்கம் செய்யவில்லை.

ஆங்கில நூலில் இடம் பெற்றிருப்பதாக ஆதாரம் காட்டியிருக்கும் செய்திகள் யாவும் பிறரின் தொகுப்பில் பார்த்தவையாகும்.

பார்த்தவற்றை கொஞ்சம் வார்த்தைகள் மாற்றம், போங்குகள் மாற்றம் செய்து வெள்ளி மேடை ப்ளஸ்ஸிற்கே உரித்தான பாணியில் இங்கே தந்திருக்கின்றேன்.

இன்னும் ஆயிரமாயிரம் செய்திகளும், வரலாறுகளும் நிரம்ப இருக்கின்றன. இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் காலங்களில் பார்ப்போம்!

அல்லாஹ் நம் அனைவருக்கும் விளக்கத்தைத் தருவானாக! ஆமீன்!! ஆமீன்!!!

                               வஸ்ஸலாம்!



4 comments:

  1. தற்காலத்தில் ஏற்ற கட்டுரை

    அல்ஹம்துலில்லாஹ்

    ReplyDelete
  2. அல்ஹம்து லில்லாஹ் அழகு

    ReplyDelete
  3. assalamu alaikkum ivargalai yarum azaikkavillaye ena varuthappadamal ini varum kalangalil namathu samuthaya kalvi nilayangalil ivargalai azaithu perumaippaduthuvom insha ALLAH...

    ReplyDelete
  4. எல்லாப்புகழும் இறைவனுக்கே..
    வரலாறுகள் மறைக்கப்படலாம்..
    உண்மைகள் புதைக்கப்படலாம்..
    ஆனால் காலம் அவற்றை வெல்லும்
    உண்மையை உலகுக்கு சொல்லும்.!
    அன்று இந்தியா பெருமிதம்கொள்ளும்!
    அதுவரை காத்திருப்போம்..
    இந்தியராய் வாழ்ந்திருப்போம்..!
    வாழ்க பாரதம்..! வளர்க நம் சகோதரத்துவம்..!

    ReplyDelete