Thursday 10 March 2016

மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கை அல்ல!!



மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கை அல்ல!!





எதிர்காலத்தைப் பற்றிய கனவுகள், ஆசைகள் எல்லாப் பருவத்தினருக்கும் ஏற்படுவதுண்டு.

சில போது சிலருக்கு அவைகள் நிறைவேறியதும் உண்டு. சில போது நிறைவேறாமல் போனதும் உண்டு.

குறிப்பாக மாணவப் பருவத்தில் ஏற்படும் கனவுகளுக்கு எல்லைகள் என்பதே கிடையாது.

அந்தக் கனவுகளில் ஒன்று தேர்வில் அதிக மதிப்பெண்கள் வாங்க வேண்டும். எதிர் காலத்தில் உயர்ந்த இடத்தில் இருக்க வேண்டும்.

தற்போது, சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வுகள் தொடங்கி இருக்கும் நிலையில் பிளஸ் 2 தேர்வு 4 –ஆம் தேதி துவங்கி 8 லட்சம் மாணவ & மாணவியர்கள் தேர்வு எழுதி வருகின்றார்கள்.

15 லட்சம் மாணவ & மாணவியர்கள் பங்கேற்கும் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு வருகிற 15 –ஆம் தேதி தொடங்க இருக்கிறது.

இந்த 2 தேர்வுகளையும் எதிர் கொள்ளத் தயாராகிக் கொண்டிருக்கும் மாணவச் சமூகத்திற்கு தகுந்த ஆலோசனைகளையும், வழிகாட்டலையும் வழங்க வேண்டிய மாபெரும் பொறுப்பு நம்மில் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது.

ஆனாலும், இன்றைய பெற்றோர்களும், உறவுகளும், ஆசிரியர் சமூகமும் தேர்வுகளில் பெறப்படும் அதிக மதிப்பெண்கள் தான் எதிர்கால வாழ்க்கையைத் தீர்மானிப்பதாக ஓர் தவறான பார்வையை மாணவச் சமூகத்தின் மீது திணித்து விட்டிருக்கின்றார்கள்.

இதன் விளைவாக மாணவச் சமூகம் தேர்வு தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் ரிசல்ட் வரும் நாள் வரை ஒரு வித பதட்டத்தோடும், அச்சத்தோடும், மனச் சோர்வோடும் காணப்படுகின்றனர்.

இந்திய மருத்துவ சங்கம் மேற்கொண்ட ஆய்வின்படி ஒவ்வொரு ஆண்டும், 70 சதவீத மாணவர்களுக்கு தேர்வு ஜுரம் வருவதாகத் தெரிவித்துள்ளது.

எதிர் பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காத போது மிகுந்த ஏமாற்றமும், விரக்தியும் ஏற்பட்டு பெற்றோர்களை தாங்க முடியாத சோகத்தில் ஆழ்த்தும் முடிவை (தற்கொலை செய்து கொள்வது) மாணவச் சமூகம் கையில் எடுப்பது சமீப காலமாக பெருகி வருவதைப் பார்க்க முடிகிறது.

ஆகவே, மதிப்பெண்கள் என்பது மட்டுமே வாழ்க்கை அல்ல என்பதை மாணவச் சமூகத்தின் முற்றத்தில் போட்டுடைக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம்.

தேர்வு கால பயம் தேவையற்றது என்பதையும் வாழ்க்கையில் அடுத்த நிலைக்கும், அடுத்த கட்டத்துக்கும் இடம் பெயர்வதற்கான துணைச் சாதனம் மட்டும் தான் இந்த மதிப்பெண்கள் என்பதையும் மாணவச் சமூகத்திற்கு உணர்த்த வேண்டும்.

சமீப காலமாக முஸ்லிம் சமுதாயமும் உலகக்கல்வியில் அதிக அக்கறை காட்டி வருகின்றது. அதனடிப்படையில் நம் மாணவக் கண்மணிகளின் சிந்தனைக்கு இஸ்லாமிய வழிகாட்டுதலை அறிவுறைகளாக நாம் இந்த ஜும்ஆவிலே தர இருக்கின்றோம்.

வாருங்கள்! கொஞ்சம் இஸ்லாமிய வழிகாட்டுதலின் நிழலில் நம் மாணவச் சமுதாயத்தை இளைப்பாறச் செய்திடுவோம்!

மனிதன் பிறந்தது முதல் இறக்கின்ற வரையிலான இடைப்பட்ட காலத்தைக் கூட தேர்வு களம் என்று தான் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

”அவன் மரணத்தையும் வாழ்வையும் ஏற்படுத்தினான்; உங்களில் யார் மிகச் சிறந்த செயல் புரியக்கூடியவர் என்று உங்களைச் சோதிக்கும் பொருட்டு!” ( 67: 2 )

இங்கே நாம் அனைவரும் தேர்வெழுதிக் கொண்டு தான் இருக்கின்றோம்.

ஆகவே, மனிதன் தன் வாழ்க்கையில் ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு கடந்து செல்வதற்கான ஒரு தேடல் தான் தேர்வு என்பதை முதலில் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
இன்றைய கல்வி முறையும், பெற்றோர்களின் சிந்தனையும், ஆசிரியர்களின் நோக்கமும், கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளும், சமூகத்தின் பார்வையும் வளர் பருவத்தினரான மாணவச் சமூகத்தின் மீது அளவு கடந்த எதிர்பார்ப்புகளை திணித்து வைத்திருக்கின்றது.

பெற்றோர்களின் சிந்தனையில் மாற்றம் வரவேண்டும்....

இன்றைய அநேக பெற்றோர்கள் தங்களின் கனவுகளை நனவாக்கும் இயந்திரக் கருவிகளாக தங்களின் பிள்ளைகளைப் பார்க்கின்றார்கள்.

1. உயர்ந்த லட்சியம் இருக்க வேண்டும் ஆனால்.... நிர்பந்திக்கக் கூடாது...

வளரும் போதே, படிக்கும் போதே நீ டாக்டராக வேண்டும், இன்ஜீனியராக வேண்டும், நீ கலெக்டராக வேண்டும் என்று கூறுகின்றார்கள்.

இந்த உலகத்திற்கு எல்லா வகையான ஆற்றல் கொண்ட மனிதர்களின் தேவை இருக்க ஒரு குறிப்பிட்ட வகை கொண்ட ஆற்றல் கொண்டவர்களாக தங்களின் பிள்ளைகள் உருவாக வேண்டும் என பெற்றோர்கள் நினைக்கின்றார்கள்.

ولما ولدت النّعمان بن بشير حملَتْهُ إلى رسول الله صَلَّى الله عليه وسلم، فدعا بتمرة فمضغها، ثم ألقاها في فيه فحنّكه بها، فقالت: يا رسول الله، ادْع الله أن يكثر ماله وولده، فقال
 "أما ترضين أن يعيش كما عاش خاله حميدًا، وقُتل شهيدًا، ودخل الجنّة".

அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்களின் சகோதரி அம்ரா (ரலி) அவர்கள் ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கின்றார்கள். அம்ராவின் கணவர் பஷீர் (ரலி) அவர்கள் நுஃமான் என அந்தக் குழந்தைக்கு பெயரிட்டு அண்ணலாரிடம் ஆசி பெற்று வருமாறு தம் மனைவி அம்ராவை நபி {ஸல்} அவர்களிடம் அனுப்பி வைக்கின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் கையில் நுஃமானைக் கொடுத்த அம்ரா (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! என் பிள்ளை நுஃமானுக்கு பொருளாதார வளத்திற்கும், அதிக பிள்ளைச் செல்வத்திற்கும் துஆச் செய்யுங்கள்” என்று கூறினார்கள்.

அப்போது நபி {ஸல்} அவர்கள் ஒரு பேரீத்தம் பழத்தைக் கொண்டு வரச் சொல்லி, அதை வாயில் போட்டு மென்று நுஃமானுக்கு கொடுத்து விட்டு “அர்வா! என்ன உன்னுடைய ஆசை இப்படி இருக்கிறது? உன் சகோதரன், நுஃமானின் மாமா அப்துல்லாஹ் இப்னு ரவாஹாவைப் போல உன் மகன் புகழோடு வாழ வேண்டும்” என்ற ஆசை உமக்கு இல்லையா? பெரும் போராளியாக இருந்து மார்க்கத்திற்காக உயிர் நீத்து, சுவனத்து வாழ்வைப் பெற்ற அந்த உன்னத நிலையை உம் மகன் அடைய வேண்டும் என்ற ஆசை உமக்கில்லையா?” என்று கேட்டார்கள்.

எல்லோரையும் போல காசு, பணத்திற்கு ஆசைப்படாமல் உயர்ந்த ஆசைகளைக் கொண்டு தங்களின் மழலைகளை உருவாக்க வேண்டும் என்கிற எண்ணத்தை அர்வா (ரலி) அவர்களின் ஆழ்மனதினில் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் விதைத்தார்கள்.

அர்வா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் எண்ணப்படி நுஃமான் (ரலி) அவர்களை வார்த்தெடுத்தார்கள்.

ஆதலால், அல்லாஹ் அர்வா (ரலி) அவர்கள் தங்களின் மகனுக்காக நபி {ஸல்} அவர்களிடம் வேண்டி நின்ற பொருளாதார வளத்தையும், பிள்ளைச் செல்வங்களையும் வழங்கினான்.

பின் நாளில் நுஃமான் இப்னு பஷீர் (ரலி) அவர்கள் மாபெரும் மார்க்கப் போராளியாக, மனித நேய மாண்பாளராக, வாரி வழங்கும் வள்ளலாக முஆவியா (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் கூஃபா மற்றும் ஹிம்ஸ் பகுதிகளின் மாட்சிமை மிக்க கவர்னராக விளங்கினார்கள்.  ( நூல்: அல் இஸ்தீஆப், உஸ்துல் ஃகாபா )

2. பிள்ளைகளின் ஆசைகளுக்கும், விருப்பத்திற்கும் இசைவு தரவேண்டும்...

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் சபை நபித்தோழர்களால் நிரம்பி இருந்தது.

எப்போதும் அண்ணலாரின் அருகே, வலப்பக்கத்தில் இருக்க வேண்டிய அபூபக்ர் (ரலி) அவர்கள் இப்போது இடப்பக்கத்தில் அமர்ந்திருக்கின்றார்கள்.

ஒரு கோப்பையில் பால் கொண்டு வரப்படுகின்றது. அண்ணலார் அதைப் பருகி விட்டு வலது பக்கத்தைப் பார்க்கின்றார்கள் அங்கே ஃபள்ல் (ரலி) அவர்கள், அப்பாஸ் (ரலி) அவர்களின் மகன் அமர்ந்திருக்கின்றார்கள்.

வயதில் மிகவும் சிறியவரான ஃபள்ல் (ரலி) அவர்களிடம் இப்போது அண்ணல் நபி {ஸல்} அவர்கள் “ஃபள்லே! எப்போதும் என் அருகே என் தோழர் அபூபக்ர் (ரலி) தான் அமர்ந்திருப்பார், அவருக்கு தான் நான் கொடுப்பேன். இப்போது நீ அமர்ந்திருக்கின்றாய்? நான் அபூபக்ர் அவர்களுக்கு கொடுக்கட்டுமா?” என்று கேட்டார்கள்.

இல்லை! அல்லாஹ்வின் தூதரே! நான் எனக்கான வாய்ப்பை விட்டுத் தர முடியாது! என்று சொல்லி விட்டார் ஃபள்ல் (ரலி) அவர்கள்.

பின்னர் அந்தக் கோப்பை அனைவரிடமும் சுற்றி வந்து இறுதியாக அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து சேர்ந்தது. கடைசியாக அபூபக்ர் (ரலி) அவர்கள் பாலைப் பருகினார்கள்.    ( நூல்:  )

இங்கே, சிறுவன் என்பதற்காக நபி {ஸல்} அவர்கள் தாங்கள் விரும்பியவாறு நடக்க வில்லை. ஃபள்ல் இடம் கேட்கிறார்கள். அவருக்கு முடிவெடுக்கும் உரிமை உண்டு என்பதை நபி {ஸல்} அவர்கள் உணர்த்துகின்றார்கள்.

ஆனால், இன்றைய பெற்றோர்கள் தங்களின் மகனிடமோ, மகளிடமோ நீ என்னவாக ஆக விரும்புகின்றாய் என்று கேட்பதும் இல்லை. அவர்களின் விருப்பத்திற்கு இசைவு தருவதும் இல்லை.

ஆசிரியர்களின் நோக்கம் சீராக வேண்டும்….

இன்றைக்கு ஆசிரியர்கள் மதிப்பெண்கள் அதிகம் எடுக்கிற மாணவர்களை மட்டுமே ஊக்கப்படுத்துகின்றார்கள். அவர்களிடம் மட்டுமே அதிக அக்கறையை காட்டுகின்றார்கள். கல்வி நிறுவனங்களும் அவர்களை மட்டுமே முன்னிறுத்தி, முக்கியத்துவம் அளிக்கிறது.

கல்வித்தரம் குறைந்த மாணவர்களிடம் மேற்கொண்டு அவர்களை மேம்படுத்தும் முயற்சிகளில் ஆசிரியர்களும், நிறுவனங்களும் ஈடுபாடு காட்டுவதில்லை.

இதுவும் மாணவச் சமூகம் மனச் சுமைகளோடும், அச்சத்தோடும் இருப்பதற்கு ஓர் காரணமாகும்.
أخبرنا محمد بن عمر حدثني بن أبي حبيبة عن داود بن الحصين عن عكرمة عن بن عباس قال: إن عمارة بنت حمزة بن عبد المطلب وأمها سلمى بنت عميس كانت بمكة، فلما قدم رسول الله كلم علي النبي، فقال: علام تترك ابنة عمنا يتيمة بين ظهري المشركين ، فلم ينهه النبي عن إخراجها فخرج بها ، فتكلم زيد بن حارثة وكان وصي حمزة وكان النبي آخى بينهما حين آخى بين المهاجرين، فقال: أنا أحق بها، ابنة أخي. فلما سمع بذلك جعفر بن أبي طالب قال: الخالة والدة، وأنا أحق بها لمكان خالتها عندي أسماء بنت عميس. فقال علي: ألا أراكم تختصمون في ابنة عمي وأنا أخرجتها من بين أظهر المشركين وليس لكم إليها نسب دوني وأنا أحق بها منكم. فقال رسول الله: " أنا أحكم بينكم، أما أنت يا زيد فمولى الله ورسوله، وأما أنت يا علي فأخي وصاحبي، وأما أنت يا جعفر فشبيه خلقي وخلقي، وأنت يا جعفر أولى بها تحتك خالتها ولا تنكح المرأة على خالتها ولا على عمتها"، فقضى بها لجعفر.

ஹம்ஜா (ரலி) அவர்கள் உஹதில் ஷஹீதாக்கப்பட்டு விட்டார்கள். அவர்களின் மனைவி ஸல்மா பிந்த் உமைஸ் (ரலி) அவர்களும், ஹம்ஜா (ரலி) அவர்களின் ஒரே மகளான அமாரா (ரலி) அவர்களும் மக்காவில் வாழ்ந்து வந்தார்கள்.

அலீ (ரலி) அவர்கள் நபி {ஸல்} அவர்களிடம் “ஹம்ஜா (ரலி) அவர்களின் ஒரேயொரு மகள் இப்போது அநாதையாகி மக்கத்து இணைவைப்பாளர்கள் மண்ணில் நிற்கிறாள். நான் சென்று அழைத்து வரட்டுமா?” என்று கேட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அனுமதி தரவே அலீ (ரலி) அவர்கள் மக்கா சென்று அமாராவை மதீனாவிற்கு அழைத்து வந்தார்கள்.

அமாராவை யார் பொறுப்பேற்பது? என்று மூன்று நபித்தோழர்கள் ஒவ்வொருவரும் தாம் தான் எடுப்பேன் என சண்டையிட்டுக் கொண்டார்கள்.
இறுதியாக, நபி {ஸல்} அவர்களிடம் இந்த விவகாரத்தைக் கொண்டு வந்தனர் அந்த மூவரும்.

அலீ (ரலி) அவர்கள், ஜைத் இப்னு ஹாரிஸா (ரலி) அவர்கள், ஜஅஃபர் இப்னு அபூதாலிப் அவர்கள் இம்மூவரும் தான் சண்டையிட்டுக்கொண்டவர்கள்.

நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் எந்த முறையில் நீர் அமாராவை வளர்ப்பதற்கு அனுமதி கோருகின்றீர்? என்று கேட்டார்கள்.

”அல்லாஹ்வின் தூதரே! அமாரா என் தந்தையின் சகோதரரின் மகள் ஆகவே அதிகத் தகுதியுடையவன் நான்” என்று அலீ (ரலி) பதில் கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஜைத் (ரலி) அவர்களிடம் எந்த முறையில் நீர் அமாராவை வளர்ப்பதற்கு அனுமதி கோருகின்றீர்? என்று கேட்டார்கள்.

”அல்லாஹ்வின் தூதரே! ஹம்ஜா அவர்களும் நானும் ஒரே தாயிடத்தில் பால் குடித்திருக்கின்றோம். மேலும், எனக்கும் அவருக்கும் இடையே நீங்கள் தான் சகோதரத்துவ உறவை ஏற்படுத்தி இருக்கின்றீர்கள். ஆகவே, இரு தகுதிகள் இருப்பதால் நானே அதிகத்தகுதியுடையவன்” என்று ஜைத் (ரலி) பதில் கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஜஅஃபர் (ரலி) அவர்களிடம் எந்த முறையில் நீர் அமாராவை வளர்ப்பதற்கு அனுமதி கோருகின்றீர்? என்று கேட்டார்கள்.

“அல்லாஹ்வின் தூதரே! ஹம்ஜா (ரலி) அவர்கள் என் தந்தையின் சகோதரர் ஆவார், மேலும், ஹம்ஜா (ரலி) மணம் முடித்திருக்கின்ற ஸல்மா பிந்த் உமைஸ் (ரலி) அவர்களின் சகோதரி அஸ்மா பிந்த் உமைஸ் (ரலி) அவர்களை நான் மணம் முடித்திருக்கின்றேன். அமாராவுக்கு என் மனைவி சின்னம்மா ஆவாள். ஆகவே நானே அதிகத் தகுதியுடையவன்” என்று ஜஅஃபர் (ரலி) அவர்கள் பதில் கூறினார்கள்.

மூவரின் உரிமை கோரலையும் செவிமடுத்து விட்டு பெருமானர் {ஸல்} அவர்கள் அலீ (ரலி) அவர்களை அழைத்து ”அலீயே! நீர் என் சகோதரரும், என் சுவனத்து தோழரும் ஆவீர்! ஜைத் (ரலி) அவர்களை அழைத்து “ஜைதே! நீர் அல்லாஹ், ரசூலின் அடிமையாவீர்!, ஜஅஃபர் (ரலி) அவர்களை அழைத்து “ஜஅஃபரே! நீர் என்னைப் போன்றே குணத்திலும், தோற்றத்திலும் ஒத்து இருக்கின்றீர்!” என்று கூறி விட்டு, அமாராவின் சின்னம்மாவை நீர் மணம் முடித்திருப்பதால் நீரே அமாராவை வளர்ப்பதற்கு தகுதியாவீர்! நீர் அமாராவை உம் பொறுப்பில் எடுத்து வளர்த்துக் கொள்வீராக!” என்று தீர்ப்பளித்தார்கள். ( நூல்: தபகாத் இப்னு ஸஅத் )

இந்த சம்பவத்தில் பல உண்மைகளும் படிப்பினைகளும் பொதிந்திருக்கின்றன. அமாரா (ரலி) அவர்கள் நபி {ஸல்} அவர்களுக்கும் பெரிய தந்தையின் மகள் தான். நபி {ஸல்} அவர்கள் நினைத்திருந்தால் மூவரையும் திருப்பி அனுப்பி விட்டு தாங்களே வளர்க்கும் உரிமையை எடுத்திருக்கலாம். ஏனென்றால் குடும்ப உறவு நபிகளாருக்கு இருக்கின்றது.

அல்லது ஜஅஃபர் (ரலி), அலீ (ரலி) அவர்களில் இருவரில் ஒருவருக்கு அந்த உரிமையை வழங்கியிருக்கலாம். குடும்ப உறுப்பினர் என்கிற முறையில்.

அல்லது மூவரில் எவரிடமாவது வளர்க்கும் உரிமையை கொடுத்திருக்கலாம் அல்லாஹ்வின் தூதர் என்கிற அடிப்படையில்.

இந்த மூன்றில் நபி {ஸல்} அவர்கள் எதைத் தேர்ந்தெடுத்தாலும் யாரும் மறுப்பேதும் சொல்லப்போவதில்லை.

மாறாக, மூவரையும் அழைத்து நேர்காணல் நடத்தி ஒவ்வொருவருக்கும் இடையே இருக்கும் உறவு முறைகளை அறிந்து வைத்துக் கொண்டே அவர்களிடம் விளக்கம் கேட்டு அதன் பின்னர் தீர்ப்பளிக்கின்றார்கள்.

அதுவும் உரிமை கோரி நின்ற மற்ற இருவருக்கும் தகுந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் வழங்குகின்றார்கள்.

இங்கே, நபி {ஸல்} ஒரு நபியாக, ஒரு குடும்ப உறவாக செயல்படாமல் தங்கள் பாசறையிலே பயின்று வரும் மூன்று மாணாக்கர்களின் மிக உயர்ந்த பண்பாட்டை அங்கீகரித்து, ஒரு ஆசிரியராக தட்டிக் கொடுத்து, உற்சாகமூட்டி மனம் உடைந்து விடாதபடி நடக்கின்றார்கள்.

ஒரு வகுப்பறையிலே பல தரப்பட்ட தரம் கொண்ட மாணவர்கள் இருப்பார்கள், அவரவர்களின் தரத்திற்கேற்ப அவர்களை உற்சாகமூட்டி, தட்டிக் கொடுத்து வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் வழங்கி முறையாக அங்கீகரிக்க வேண்டும் என்கிற உயர்ந்த சிந்தனையை இந்த சம்பவம் உணர்த்துவதாகவே நான் கருதுகின்றேன்.

3. மாணவர்கள் பொறுப்புணர்ந்து நடக்க வேண்டும்….

இன்றைக்கு முஸ்லிம் சமூகத்தின் பொருளாதாரம் பெரும்பாலும் நான்கு காரியங்களுக்காகவே செலவழிக்கப்படுகின்றது.

1. நோய்களுக்கான சிகிச்சைக்காக, 2. திருமண விருந்துக்காக, 3. இயக்கங்களின் மாநாடுகளுக்காக, 4, கல்விக்காக.

பெரும்பாலான பெற்றோர்கள் வீடு, வாசல், தோட்டம் துறவுகளை, நகைகளை விற்று, கடன் வாங்கி, லோன் வாங்கி, வட்டிக்கு பணம் வாங்கி படிக்க வைக்கின்றனர்.

ஆனால், பெரும்பாலான மாணவர்கள் இதைக் கண்டு கொள்ளாமல் பள்ளிக் கூடத்திற்கு சரியாக செல்லாமல் வீண் விளையாட்டுக்களிலும், சினிமா கேளிக்கைகளிலும், ஊர் சுற்றுவதிலும் கழித்து விட்டு பரீட்சை நேரத்தில் சரியாக தேர்வெழுதாமல் தோற்றுப் போய் விடுகின்றார்கள்.

أن عبد الله بن عمر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول كلكم راع وكلكم مسئول عن رعيته

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளரும், பாதுகாவலரும் ஆவார். உங்களில் ஒவ்வொருவரும், அவரவர் பொறுப்பு பற்றிக் கேட்கப்படுவார்.

எனவே, அல்லாஹ்விடம் மாணவச் சமூகம் தங்களின் பள்ளிக் காலம் குறித்து கேள்வி கேட்கப் படுவார்கள்.

விடாமுயற்சியோடும், தன்னம்பிக்கையோடும், மனவலிமையோடும் படிக்க வேண்டும்.
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُؤْمِنُ الْقَوِيُّ خَيْرٌ وَأَحَبُّ إِلَى اللَّهِ مِنْ الْمُؤْمِنِ الضَّعِيفِ وَفِي كُلٍّ خَيْرٌ  رواه مسلم

“பலவீனமான இறைநம்பிக்கையாளனை விட, மனவலிமை உள்ள முஃமின் சிறந்தவனும், அல்லாஹ்விடம் உவப்பைப் பெற்றவனும் ஆவான்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                   ( நூல்: முஸ்லிம் )

மேலும், இயன்ற அளவு முயற்சி செய்து ஆர்வத்தோடும், ஆசையோடும் படிக்க வேண்டும்.

احْرِصْ عَلَى مَا يَنْفَعُكَ وَاسْتَعِنْ بِاللَّهِ وَلَا تَعْجَزْ وَإِنْ أَصَابَكَ شَيْءٌ فَلَا تَقُلْ لَوْ أَنِّي فَعَلْتُ كَانَ كَذَا وَكَذَا وَلَكِنْ قُلْ قَدَرُ اللَّهِ وَمَا شَاءَ فَعَلَ فَإِنَّ لَوْ تَفْتَحُ عَمَلَ الشَّيْطَانِ  رواه مسلم

“உனக்கு பயன் தருகிற அனைத்தின் மீதும் நீ ஆசைப்படு! பின்னர் அதற்காக கஷ்டப்படு! அல்லாஹ்விடம் உதவி கேள்! சோர்ந்து போய்விடாதே! நீ ஆசைப்பட்டது உனக்கு கிடைக்காமல் போய் விட்டால் நான் இப்படி, இப்படி செய்திருந்தால் இப்படி நடந்திருக்கும் என்று கூறாமல் அல்லாஹ் நாடியது தான் நடந்தது என்று சொல்!” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                        ( நூல்: முஸ்லிம் )

என்னால் முடியும், என்னிடம் நல்ல மதிப்பெண் எடுப்பதற்கான திறமை இருக்கிறது, நான் சாதிப்பேன், என்று பாஸிட்டிவ் ஆக பேசுவதை, நினைப்பதைத் தான் அல்லாஹ்வும், அண்ணல் நபி (ஸல்) அவர்களும் விரும்புகின்றார்கள்.




யூஸுஃப் {அலை} அவர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு அரசரோடு உரையாடும் வாய்ப்பை பெற்ற போது…

“நாட்டின் கருவூலங்களுக்கு என்னைப் பொறுப்பாளராக்குங்கள்! நான் நன்கு பாதுகாப்பவனாகவும், அறிந்தவனாகவும் இருக்கின்றேன்” என்றார்.

மேலும், இதன் பின்னர் நாம் யூஸுஃபுக்கு அந்த பூமியில் அதிகாரத்தை வழங்கினோம். அங்கே, தாம் விரும்பும் எந்த இடத்திலும் அவர் தங்கி வாழும் உரிமை பெற்றிருந்தார்”.                                  ( அல்குர்ஆன்: 12: 55, 56 )

ஸுலைமான் {அலை} அவர்கள் ஸபா நாட்டு அரசியின் சிம்மாசனத்தை உடனடியாக யாரால் கொண்டு வர முடியும் என்று கேட்ட போது….

“அவர்களுள் கல்வியறிவைப் பெற்றிருந்த ஒருவர் “நீங்கள் கண் மூடித் திறப்பதற்குள் அதை உங்களிடம் நான் கொண்டு வந்து விடுகின்றேன்” என்று கூறினார்.                                            ( அல்குர்ஆன்: 27: 40 )

ويوم جاء وفد نجلاان من اليمن مسلمين، وسألوه أن يبعث معهم من يعلمهم القرآن والسنة والاسلام، قال لهم رسول الله:
" لأبعثن معكم رجلا أمينا، حق أمين، حق أمين.. حق أمين"..!!
وسمع الصحابة هذا الثناء من رسول الله صلى الله عليه وسلم،  فتمنى كل منهم لو يكون هو الذي يقع اختيار الرسول عليه، فتصير هذه الشهادة الصادقة من حظه ونصيبه..
يقول عمر بن الخطاب رضي الله عنه:
" ما أحببت الامارة قط، حبّي اياها يومئذ، رجاء أن أكون صاحبها، فرحت الى الظهر مهجّرا، فلما صلى بنا رسول الله صلى الله عليه وسلم الظهر، سلم، ثم نظر عن يمينه، وعن يساره، فجعلت أتطاول له ليراني..
فلم يزل يلتمس ببصره حتى رأى أبا عبيدة بن الجرّاح، فدعاه، فقال: أخرج معهم، فاقض بينهم بالحق فيما اختلفوا فيه.. فذهب بها أبا عبيدة؟..!!
ان هذه الواقعة لا تعني طبعا أن أبا عبيدة كان وحده دون بقية الأصحاب موضع ثقة الرسول وتقديره..



ஒரு முறை யமனின் நஜ்ரான் பகுதியைச் சார்ந்த சில முஸ்லிம்கள் தங்களுக்கு மார்க்கவிஷயங்களை கற்றுத் தரவும்,தங்கள் பகுதியில் அழைப்புப்பணி செய்யவும்,தங்களுக்கு இமாமத் செய்யவும் ஒருவரை தங்களோடு அனுப்பி வைக்குமாறு மாநபி {ஸல்} அவர்களிடம் வேண்டி நின்றனர்.

அப்போது நபி {ஸல்} அவர்கள்உங்களோடு நம்பிக்கையான ஒருவரை அனுப்பி வைக்கிறேன்என்றுகூறினார்கள். இந்த நேரத்தில் லுஹர் தொழுகைக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. நபிகளார் கூறிய அந்த நம்பிக்கையாளராக நாமாக இருக்க மாட்டோமா? என்று ஒவ்வொரு ஸஹாபியும் ஆசைப்பட்டனர்.


இகாமத் சொல்லப்பட்டது, நபி {ஸல்} அவர்கள் தொழ வைத்தார்கள்,உமர் {ரலி} அவர்கள் கூறுகின்றார்கள்.தொழுது முடித்ததும் நபி {ஸல்} அவர்கள் வலது புறம் பார்த்தார்கள்,பின்பு இடது புறம் பார்த்தார்கள்.

என் மீது நபியவர்களின் பார்வை பட வேண்டும், என்னை அழைக்க வேண்டும் என்பதற்காக குதிங்காலால் ஊனி எட்டி எட்டிப் பார்த்தேன்.

இறுதியாக நபி {ஸல்} அவர்களின் பார்வை அபூ உபைதா அல் ஜர்ராஹ் {ரலி} அவர்களைச் சென்றடைந்தது. பின்னர் நபி {ஸல்} அவர்கள் அபூ உபைதாவை அழைத்தார்கள்.

பின்னர் நஜ்ரான் முஸ்லிம்களை அழைத்து இதோ இவரை அழைத்துச் செல்லுங்கள். “ஒவ்வோர் உம்மத்திற்கும் ஓர் நம்பிக்கையாளர் உண்டு.என்னுடைய உம்மத்தின் நம்பிக்கையாளர் அபூ உபைதா அல் ஜர்ராஹ் {ரலி}” என்று கூறினார்கள்.


உமர் {ரலி} அவர்கள் கூறுகின்றார்கள்:

ஓர் உண்மையை நான் சொல்லியே ஆக வேண்டும் அந்த நேரம் வரை நான் எந்த புகழுக்கும்,பதவிக்கும் ஆசைபட்டது கிடையாது.

 நபிகளாரின் புனித வாயால் அந்த புகழாரத்தை அடையவேண்டுமென்று அன்று நான் ஆசைப்பட்டேன்” ஆனால்,  அபூ உபைதா அவர்கள் அதை தட்டிச் சென்று விட்டார்கள்.
        
                                                  ( நூல்:ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}, பக்கம்:241)

فقال رسول الله صلى الله عليه وسلم لأعطين الراية غدا رجلا يحبه الله ورسوله يفتح الله على يديه ليس بفرار قال يقول سلمة فدعا رسول الله صلى الله عليه وسلم عليا رضوان الله عليه وهو أرمد فتفل في عينه ثم قال خذ هذه الراية فامض بها حتى يفتح الله عليك
يقول عمر بن الخطاب رضي الله عنه:

" ما أحببت الامارة قط، حبّي اياها يومئذ، رجاء أن أكون صاحبها،

 ஃகைபர் கோட்டையை முற்றுகையிட்டிருந்தது மா நபி {ஸல்} அவர்களின் தலைமையிலான முஸ்லிம்களின் அணி. கோட்டைக்கு உள்ளிருந்து குடைச்சல் கொடுத்தனர் அல்லாஹ்வை மறுக்கும் எதிரணியினர்.

முதல் நாள் முடிவுக்கு வந்தது.  அப்போது நபி {ஸல்} அவர்கள்நாளை நான் அல்லாஹ்வும்,அவன் தூதரும் நேசிக்கின்ற, அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நேசிக்கின்ற ஒருவரிடம் கொடியை கொடுப்பேன். அல்லாஹ் அவர் கரங்களின் மூலம் வெற்றியை வழங்குவான் என்று கூறினார்கள்.

உமர் {ரலி} அவர்கள் கூறுகின்றார்கள்:                             

ஓர் உண்மையை நான் சொல்லியே ஆக வேண்டும் அதுவரை நான் எந்த புகழுரைக்கும்,அந்தஸ்துக்கும் ஆசைப் பட்டது கிடையாது. அன்று நான் அல்லாஹ்வும்,அவன் தூதரும் நேசிக்கின்ற ஒருவனாக ஆக வேண்டும், நபிகளாரின் அமுத வாயால் சொல்லப்பட்ட சோபனத்திற்கு சொந்தக்காரனாய் ஆக வேண்டும் என ஆசைப் பட்டேன்”.ஆனால் அதை அலீ {ரலி} அவர்கள் தட்டிச் சென்று விட்டார்கள்.


.                                                               நூல்: ஃகுலஃபாவுர் ரஸூல் {ஸல்}, பக்கம்:294 

இந்த இரு வேறு அறிவிப்புக்களையும் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் ஃகாலித் முஹம்மத் ஃகாலித் {ரஹ்} தங்களது இரு வேறு நூற்களில் பதிவு செய்திருக்கின்றார்கள்.

இங்கே உமர் {ரலி} அவர்கள் தங்களின் மீதான எண்ணத்தை எவ்வாறு அமைத்திருந்தார்கள்!

இது தான் பிற்காலத்தில் ஆட்சியாளராக பரிணமிக்கும் உயர்வைப் பெற்றுத்தந்தது. ஆம்! இரண்டரை லட்சம் சதுர பரப்பளவு கொண்ட அகன்ற இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் நிகரற்ற கலீஃபாவாக விளங்கினார்கள்.

மேலும், இவற்றோடு அல்லாஹ்வின் மீது அசைக்க முடியாத தவக்குல் வைக்க வேண்டும்.

”நீர் ஒரு காரியத்தில் திடமான முடிவை எடுத்து விட்டால் அல்லாஹ்வையே முழுமையாக சார்ந்திருப்பீராக! திண்ணமாக, தன்னை முழுமையாக சார்ந்திருந்து செயல்படுவோரை அல்லாஹ் நேசிக்கின்றான்”.             ( அல்குர்ஆன்: 3: 159 )

வெறும் மதிப்பெண்கள் மட்டும் வாழ்க்கை அல்ல, சுகமும் சோகமும், வெற்றியும் தோல்வியும், ஏற்றமும் இறக்கமும் நிறைந்தது தான் வாழ்க்கை.

அந்த வாழ்க்கையை ரசிக்கவும், படிக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும். அப்போது தான் வாழ்க்கை வசப்படும்! வானமும் வசப்படும்!

மனவலிமையோடும், தன்னம்பிக்கையோடும், இறைச் சார்போடும் தேர்வெழுதி உயர்ந்த பல சிகரங்களைத் தொடும் உயர்ந்தவர்களாக எம் மாணவச் சமூகத்தை அல்லாஹ் ஆக்கியருள் புரிவானாக!

     ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

1 comment:

  1. ماشاء الله
    بارك الله في علمكم

    وقع خطء في اسم ام النعمان. تبدل من عمرة الى اروة
    جزاكم الله في جهودكم المباركة.

    ReplyDelete