Thursday 29 December 2016

தீதும்…. நன்றும்…..



தீதும்…. நன்றும்…..



கடந்த சில நாட்களாக முஸ்லிம் சமூக மக்களின் முகநூல் பக்கங்களிலும், யூ ட்யூப்பிலும், ட்விட்டரிலும், வாட்ஸ்அப் குரூப்களிலும் தவறாமல் மிக வேகமாக பகிரப்படுகிற இரு வீடியோ கிளிப்கள்.

ஒரு வீடியோ கிளிப்பைப் பார்த்து விட்டு மாஷா அல்லாஹ், அருமை, என்பது போன்ற புகழ்மிக்க கமெண்ட்களும், இன்னொரு வீடியோ கிளிப்பைப் பார்த்து விட்டு கேவலம், இது தான் இன்றைய இஸ்லாமிய பெரும்பாலான மக்களின் நிலை, வளர்ப்பு முறை சரியில்லை, அசிங்கம், இது நரகத்திற்கான வழி என்பது போன்ற விமர்சனங்களையும், கமெண்ட்களையும் அள்ளி வீசியிருக்கின்றார்கள் நமது சகோதர சகோதரிகள்.

வீடியோ கிளிப் 1:

புகழ்மிக்க கமெண்ட்களைப் பெற்ற அந்த வீடியோ கிளிப் சொல்லும் செய்தி என்ன?

எகிப்து நாட்டின் மிஸ்ரில் வசிக்கும் ஒரு முஸ்லிம் தம்பதியருக்கு பிறந்த ஆண் பாலகன். பிறவியிலேயே இரு கண்களிலும் பார்வை இல்லை, முஆத் என்று பெயர்.

5 வயதில் குர்ஆனை முறையாக ஓதக்கற்றுக் கொண்ட முஆத் அதன் பின்னர் குர்ஆனை மனனம் செய்ய ஆரம்பித்து தம்முடைய 12 –ஆம் வயதில் முழுக் குர்ஆனையும் மனனம் செய்து ஹாஃபிள் ஆகியிருக்கின்றார்.

சொந்த தேசத்தைத் தாண்டி உலகெங்கிலும் இருந்து பாராட்டுக்கள் குவியத் தொடங்கியது.

இந்தச் செய்தியை ஊடகங்களின் வாயிலாக அறிந்து கொண்ட குவைத்தின் மிகச் சிறந்த காரிகளில் ஒருவரான ஹாஃபிள் ஃபஹத் இப்னு ஸாலிம் இப்னு அலிய்யில் கந்தரி அவர்கள் நேரில் காண விழைகிறார்.

காரீ ஃபஹத் அவர்கள் சிறுவர் ஹாஃபிள் முஆதைச் சந்திக்கின்றார். இந்தச் சந்திப்பின் போது நடைபெற்ற உரையாடல் தான் அந்த வீடியோ கிளிப்பில் வெளியாகி முஸ்லிம் சமூகத்தின் முக நூலிலும், குரூப் தளங்களிலும் இடம் பெற்று கமெண்ட்ஸ்களை குவித்திருக்கின்றது.

இதோ அந்த உரையாடலின் சுருக்கம்::::

காரீ ஃபஹத் : “கண்ணில் பார்வை இல்லையே என எப்போதாவது வருந்தியது உண்டா?”.

முஆத்: ”நான் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் நாட்டம்! அல்ஹம்து லில்லாஹ்... நான் மிகச் சிறுவனாக இருக்கும் போது கோபப் பட்டிருக்கின்றேன். வருந்தியும் இருக்கின்றேன். ஆனால், தற்போது அந்தக் கோபமும், வருத்தமும் இல்லை.

ஏனெனில், அல்லாஹ் மிகப்பெரும் அருட்கொடையான அல்குர்ஆனை நெஞ்சில் சுமக்கும் பாக்கியத்தைத் தந்திருக்கின்றான். அதை வைத்து என்னால் உலகின் எந்தவொரு பகுதிக்கு வேண்டுமானாலும் செல்ல முடியும். என் தந்தை தான் இப்போதும் என் நிலை குறித்து கவலை கொண்டிருக்கின்றார்”.

காரீ ஃபஹத் : உங்களின் துஆ கண்களில் ஒளி வேண்டும் என்பதாகத்தானே இருக்கிறது?

ஹாஃபிள் முஆத் : இல்லை, ஒரு போதும் நான் அப்படிக் கேட்பதில்லை! இறைவா! எனக்கு பார்க்கும் புலனை தந்து விடாதே!” என்று தான் நான் கேட்கின்றேன்.

காரீ ஃபஹத் : ( விழியில் ஆச்சர்யம் ததும்ப ) ஏன் அப்படி துஆ கேட்கின்றீர்?

ஹாஃபிள் முஆத் : ( தழுதழுத்த குரலில் ) பார்வை இன்மை காரணமாக என் பாவங்களை அல்லாஹ் மன்னிக்க வேண்டும்!

பார்வை இன்மையை கருத்தில் கொண்டு நாளை மறுமையில் என் குற்றங்களுக்காக எனக்கு வழங்கவிருக்கும் தண்டனைகளை அல்லாஹ் குறைக்க வேண்டும்!” என்ற ஆதரவில் நான் இப்படி துஆ கேட்கின்றேன்.

இந்தப் பதில் “காரீ ஃபஹத் மற்றும் அருகில் இருக்கும் சிறுவர் முஆத்தின் தந்தை மற்றும் சுற்றி இருப்பவர்கள் என எல்லோரையும் அழ வைத்து விடுகின்றது. இன்னும் கேட்போரையும் அழ வைக்கின்றது.

வீடியோ கிளிப் 2:

ஏசியாநெட் மலையாள சேனல் நடத்தும்நிங்களுக்கும் ஆகாம் கோடீஸ்வரன்எனும் நிகழ்ச்சி அது.

( நம்ம தமிழ் நாட்டில் விஜய் டிவி நடத்திய நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி )  எனும் நிகழ்ச்சிக்கு ஒத்தது.

சுரேஷ் கோபி எனும் மலையாள நடிகர் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றார். 2012 மற்றும் 2013 –ஆம் ஆண்டுகளில் இரண்டு சீஸன்களாக  நடைபெற்ற நிகழ்ச்சி அது.

அப்படியான நிகழ்ச்சியின் எபிசோட் ஒன்றில் ஒரு முஸ்லிம் பெண்மணி பங்கேற்கின்றார்.

மூன்றாவது கேள்வி ஒரு ஆடியோவை ஒலிக்கச் செய்து அந்த ஆடியோவில் பேசும் சொற்சொடர் இடம் பெற்ற படம் எது என்று? நான்கு பதில் கொடுக்கப்பட்டு அதில் எது சரியோ அதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இதில் ஒலித்த அந்த ஆடியோ இடம் பெற்ற அந்த திரைப்படத்தின் பெயரை அந்தப் பெண்மணி மிகச் சரியாக சொல்கின்றார்.

நான்காவது கேள்வியை தொகுத்து வழங்குகின்ற சுரேஷ் கோபி “குர்ஆனில் ஒரு சூராவுக்கு ஒரு பெயர் உண்டு. அது ஒரு பெண்ணின் பெயர் ஆகும். அது என்ன சூரா? என்று கேட்கின்றார்.

அ. மர்யம் ஆ. ஃபாத்திமா இ. ஆசியா ஈ. கதீஜா என பதில் கொடுக்கப்பட்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக்கச் சொல்கின்றார்.

அந்தப் பெண்மணி சட்டெனெ தனக்கு பதில் தெரியாது என்கின்றார். அந்த நிகழ்ச்சியின் விதியின் கீழ் லைஃப் லைன் எனும் வழியின் மூலம் பிறரின் வாயிலாக மர்யம் எனும் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கின்றார்.

இப்படியாக அந்த வீடியோ கிளிப்பில் காட்சி முடிவடைகின்றது. இதை என் முகநூல் நண்பரான வலையுகம் ஹைதர் அலி என்பவர் பதிவிட்டிருந்தார்.

இதை பார்த்து விட்டு கமெண்ட்ஸ் இட்டவர்கள் ” கேவலம், இது தான் இன்றைய இஸ்லாமிய பெரும்பாலான மக்களின் நிலை, வளர்ப்பு முறை சரியில்லை, அசிங்கம், இது நரகத்திற்கான வழி என்றெல்லாம் பொங்கி எழுந்து விட்டனர்.

சிறுவர் முஆத் இடம் பெற்ற வீடியோ கிளிப்பில் இருந்து இந்த உம்மத் பெற்ற பாடம் என்ன? பெற வேண்டிய பாடம் என்ன?

அப்பெண்மணி இடம் பெற்ற வீடியோ கிளிப்பில் இருந்து இந்த உம்மத் பெற்ற பாடம் என்ன? பெற வேண்டிய பாடம் என்ன?

வாருங்கள்! கொஞ்சம் பார்த்து விட்டு வருவோம்!!!

மனித இயல்புகளும்... மாற வேண்டிய கண்ணோட்டங்களும்...

பொதுவாக, இப்படியும் செய்ய முடியுமா? இப்படியும் நடக்குமா? என, ஆச்சர்யத்தின் விளிம்பிற்கு அழைத்துச் செல்லும் நல்ல காரியங்களையோ, செயல்களையோ பார்க்க நேரிடும் போது, மனித மனம் அந்தச் செயலை பாராட்டும்! அதைச் செய்தவர்களை வாழ்த்தும்!

இப்படி யாராவது செய்வார்களா? இப்படியும் நடக்கிறதே? என வெறுப்பின் ஆழத்திற்கு அழைத்துச் செல்லும் காரியங்களையோ, செயல்களையோ பார்க்க நேரிடும் போது, மனித மனம் அந்தச் செயலை விமர்சிக்கும்! அதைச் செய்தவர்களை தூற்றும்! ஏசிப்பேசும்!

இது தான் மனிதகுலத்தின் இயல்பு. ஆனால், இஸ்லாம் இந்த இயல்பான இரு கண்ணோட்டங்களிலும் இரு வேறு மாற்றங்களைச் செய்யுமாறு மனித குலத்திற்கு அறைகூவல் விடுக்கின்றது.

ஆம்! இந்த முதல் குணத்தை அங்கீகரிக்கும் அதே வேளையில் இது போன்ற தருணங்களில் நேர்மறையான சிந்தனைகளோடு நடக்குமாறு வலியுறுத்துகின்றது.

இந்த இரண்டாவது குணத்தை ஆட்சேபிக்கும் அதே நேரத்தில் அதை நெறிப்படுத்துமாறு ஆணையிடுகின்றது.

நபி மூஸா {அலை} அவர்கள் ஃபிர்அவ்னால் தேடப்படும் குற்றவாளியாக ஆக்கப்பட்டு, ஃபிர்அவ்னின் இராணுவத்தினரால் சல்லடை போட்டு தேடும் நேரத்தில் இனியும் எகிப்தில் இருக்க முடியாது எனும் சூழ்நிலை ஏற்படும் போது எகிப்தில் இருந்து மத்யனுக்கு புறப்படுகின்றார்கள்.

இந்த வரலாற்றின் நீண்ட தொடர் அல் கஸஸ் (28 –ஆம்) அத்தியாயத்தின் 15 முதல் 22 வரையிலான வசனங்களில் இடம் பெற்றிருக்கின்றது.

இறுதியாக,  மூஸா {அலை} அவர்கள் மத்யன் நகருக்குள் அடியெடுத்து வைக்கின்றார்கள். இனி….

وَلَمَّا وَرَدَ مَاءَ مَدْيَنَ وَجَدَ عَلَيْهِ أُمَّةً مِنَ النَّاسِ يَسْقُونَ وَوَجَدَ مِنْ دُونِهِمُ امْرَأَتَيْنِ تَذُودَانِ قَالَ مَا خَطْبُكُمَا قَالَتَا لَا نَسْقِي حَتَّى يُصْدِرَ الرِّعَاءُ وَأَبُونَا شَيْخٌ كَبِيرٌ () فَسَقَى لَهُمَا ثُمَّ تَوَلَّى إِلَى الظِّلِّ فَقَالَ رَبِّ إِنِّي لِمَا أَنْزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ ()

“மேலும், அவர் மத்யனுடைய ஓர் கிணற்றுக்கு அருகில் வந்த போது, அங்கு மக்கள் பலர் தங்களுடைய கால்நடைகளுக்குத் தண்ணீர் புகட்டிக் கொண்டிருப்பதைக் கண்டார். அந்த மக்களை விட்டு சற்று விலகி ஒரு புறம் இரண்டு பெண்கள் தம்முடைய கால்நடைகளைத் தடுத்து வைத்துக் கொண்டிருப்பதைக் கண்டார்.

மூஸா {அலை} அப்பெண்களிடம் “உங்களுடைய பிரச்சனை என்ன?” என்று கேட்டார். அதற்கு, அவர்கள் “இந்த இடையர்கள் தங்கள் கால்நடைகளைத் திரும்ப ஓட்டிச் செல்லும் வரை எங்களுடைய கால்நடைகளுக்கு எங்களால் தண்ணீர் புகட்ட முடிவதில்லை. மேலும், எங்கள் தந்தையோ மிகவும் வயதானவராய் இருக்கின்றார்” என்று கூறினார்கள்.

அப்போது, மூஸா {அலை} அவர்கள் அவர்களுடைய கால்நடைகளுக்கு தண்ணீர் புகட்டினார். பிறகு, ஒரு நிழலில் போய் அமர்ந்து “என் இறைவா! நீ எனக்கு இறக்கியருளுகின்ற நன்மை எதுவானாலும் சரி, நான் அதன் பக்கம் தேவையுடையவனாகவே இருக்கின்றேன்!” என்று கூறினார். ( அல்குர்ஆன்: 28: 23, 24 )

இதன் பின்னர் நடைபெற்ற சம்பவங்களை தொடர்ந்து அல்லாஹ் அடுத்தடுத்த வசனங்களில் விவரிக்கின்றான்.

ஒரு கட்டத்தில், ஷுஐபு {அலை} அவர்களின் பெண்மக்களில் இருவரில் ஒரு பெண்மணி தம் தந்தை ஷுஐபு {அலை} அவர்களிடத்தில்….

قَالَتْ إِحْدَاهُمَا يَا أَبَتِ اسْتَأْجِرْهُ إِنَّ خَيْرَ مَنِ اسْتَأْجَرْتَ الْقَوِيُّ الْأَمِينُ ()

“என் தந்தையே! இவரைப் பணியாளராய் வைத்துக் கொள்ளுங்கள்! எவர் வலிமை மிக்கவராகவும், நம்பிக்கைக் குரியவராகவும் இருக்கின்றாரோ அப்படிப் பட்டவர் தான் நீங்கள் பணியில் அமர்த்திக் கொள்வதற்கு மிகவும் சிறந்தவராவார்” எனக் கூறினார்.                                             ( அல்குர்ஆன்: 28: 26 )

தனிமையில் நின்று கொண்டிருக்கிற, தங்களின் இயலாமையைச் சொல்லவும் முடியாமல், அதே நேரத்தில் அதை நிறைவேற்றவும் முடியாமல் நின்று கொண்டிருக்கும் ஒரு தருணத்தில் ஒரு இளைஞர் தாமாக உதவி செய்ய முன் வருகின்றார்.

வந்தவர், ஆண்மகனின் இளமை முறுக்கோடு இரண்டு, மூன்று பேர் சேர்ந்து திறந்து மூடுகிற கிணற்றின் மூடியை தாம் ஒருவராக நின்றே மூடினார். அப்பெண்மணிகளின் பாத்திரத்திற்கு மாத்திரமல்ல, கால்நடைகளுக்கும் தண்ணீர் இறைத்துக் கொடுத்தார்.

இந்தச் செயல் அப்பெண்மணிகளை வியப்பிலும், ஆச்சர்யத்திலும் ஆழ்த்தியது. அடுத்து மூஸா {அலை} அவர்களிடம் காணப்பட்ட இன்னொரு முக்கியமான அம்சம் தான் அவர்களின் தந்தையிடம் பணியாளராக வைத்துக் கொள்ள பரிந்துரை செய்யவும் தூண்டியது.

ஆம்! ஷுஐபு {அலை} அவர்கள் தம் மகளிடம் “வலிமை மிக்கவர் என்றும், நம்பிக்கைக்குரியவர் என்றும் எந்த அளவுகோலை வைத்து நீ முடிவெடுத்தாய் என்று கேட்கும் போது அப்பெண்மணி இவ்வாறு கூறினாள்.

وأما أمانته : فإنه قال لي امشي خلفي حتى لا تصف الريح بدنك 
 تفسير البغوي  

”நீங்கள் என்னை அவரை அழைத்து வருமாறு கூறியதும், அவரிடம் சென்று நான் நீங்கள் அழைத்ததாக கூறினேன். உடனே, அவர் சிறிது நேர யோசனைக்குப் பின்னர் என்னிடத்தில் “எனக்குப் பின்னால் நீ நடந்து, எனக்கு உன் வீட்டிற்கான வழியைச் சொல்லிக் கொண்டு வா பெண்ணே! எனக்கு முன்னால் நீ நடந்து உனக்கு பின்னால் நான் நடந்து வரும் போது, காற்றின் ஓட்டத்தில் உன் ஆடைகள் அங்கும் இங்கும் அசைந்து உன் உடலழகை எனக்கு வர்ணித்து விடக்கூடாது பெண்ணே!” என்று என்னிடம் கூறினார் என் தந்தையே!” என்று அப்பெண்மணி பதில் கூறினார்.

இங்கே, நாம் ஒரு விஷயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அப்பெண்மணி வேலைக்கு பரிந்துரை செய்யும் போது வெறும் வலிமை என்ற ஆற்றலை மட்டுமோ, இரக்க குணம் என்ற மனிதாபிமான அம்சத்தை மட்டுமோ கவனத்தில் கொள்ளவில்லை.

மாறாக, அவரிடம் காணப்பட்ட இறையச்ச உணர்வு, நல்லொழுக்கப் பண்பு, தீமையின் அதள பாதாளத்தில் தள்ளி விடும் காரியங்களின் மூலச் செயல்களில் இருந்தே தூரமாகி விலகி ஓடும் சுய ஒழுக்கம் ஆகியவைகளைக் கண்டே பரிந்துரைக்கின்றார்கள்.

இது போன்ற கண்ணோட்டங்கள் தான் ஆச்சர்யமூட்டும், வியப்பில் ஆழ்த்தும் நல்ல காரியங்களில் இருக்க வேண்டும். அது தான் நம் வாழ்க்கையை ஈமானிய வாழ்வில் அடுத்தடுத்த கட்டத்திற்கு உயர்த்திச் செல்லும். என்பதை நாம் உணர வேண்டும்.

ஹாஃபிள் முஆத் எனும் சிறுவர் ஃபஹத் அவர்களோடு உரையாடிய அந்த உரையாடலில் இருந்து நாம் யதார்த்தத்தில் பாராட்டினாலும், அங்கிருந்து நாம் பெற வேண்டிய பாடம் என்பது வேறு.

அவர் தன் உரையாடலில் நான்கு படிப்பினைகளை இந்த உம்மத்துக்கு அதாவது அந்தக் காணொளியைப் பார்ப்பவருக்குத் தருகின்றார்.

1. அல்லாஹ் விதித்த விதியை, அவன் வழங்கும் வாழ்க்கையை நாம் பொருந்திக் கொள்ள வேண்டும்.

2. எல்லா அருட்கொடைகளையும் விட மிக உயர்ந்த அருட்கொடையான அல் குர்ஆனின் வசனங்களை மனனம் செய்ய ஆசிக்க வேண்டும்.

3. மறுமையைப் பற்றியுண்டான பயமும், மறுமை நாளில் நம் பாவத்திற்கான தண்டனையில் இருந்து நாம் தப்பிப்பதற்கு ஏதாவது நன்மையான காரியங்களை இறைவனின் திருமுன் சமர்ப்பிப்பதற்கு உலகிலேயே ஆயத்தமாக்கிக் கொள்ள வேண்டும்.

4. எல்லாவற்றிற்கும் மேலாக அல்லாஹ்வின் மன்னிப்பு கிடைக்க ஆதரவு வேண்டும்.

வெறுமெனே ஆச்சர்யத்தோடும், வியப்போடும் பார்த்து விட்டு, மாஷா அல்லாஹ், பாரக்கல்லாஹ் லஹூ, அருமை என்று சென்று விடாமல் அவர் மொழிந்த வார்த்தையின் வீரியத்தை உணர்ந்து வாழ வேண்டும்.

இந்த நான்கில் ஈமான் நம்பிக்கை சம்பந்தப்பட்ட மிக முக்கிய அம்சமான விதியை நம்பி வாழ்தல், மறுமையை நம்பி வாழ்தல் என்கிற அம்சத்தை மற்றும் குறித்து சிந்தனைக்கு சில செய்திகளைத் தருகின்றேன்.



1. அல்லாஹ் விதித்த விதியை, அவன் வழங்கும் வாழ்க்கை முறையை பொருந்திக் கொண்டு வாழ்தல்….

அபூதர் அல் ஃகிஃபாரி (ரலி) நபித்தோழர்களில் மிகவும் பிரசித்தி பெற்றவர்கள். அண்ணலாரின் அருகாமையை அதிகம் பெற்றவர்கள்.

தங்களின் ஃகிஃபார் கோத்திரத்திற்கும், தங்களின் கோத்திரத்தாரோடு நட்பும், வியாபாரத்தொடர்பும் கொண்டிருந்த ஸாலிம் கோத்திரத்தாருக்கும் ஈமானிய வாழ்வையும், மாநபி {ஸல்} அவர்களின் புனித வதனத்தில் இருந்து ஃகிஃபார் கோத்திரத்தாரே! அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக! ஸாலிம் கோத்திரத்தாரே! அல்லாஹ் உங்களுக்கு நிம்மதியைத் தவழச் செய்வானாக! எனும் சோபனத்தை பெற்றுக் கொடுத்தவர்கள் அபூதர் அல் ஃகிஃபாரி (ரலி) அவர்கள்.

(لا حاجة لي في دنياكم).!

வாழ்க்கையில் பல்வேறு ஏற்ற இறக்கங்கள், வறுமை, ஏழ்மை, கஷ்டம் எனும் சூழ்நிலைகள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து வந்த போதும் அவர்கள் சொன்ன ஒரே வார்த்தை இது தான்! “ உங்கள் உலகம் எனக்கு தேவை இல்லை, உங்கள் உலகத்திடம் நான் ஒரு போதும் தேவையாகப் போவதில்லை”.

ورآه صاحبه يوما يلبس جلبابا قديما فسأله
أليس لك ثوب غير هذا..؟! لقد رأيت معك منذ أيام ثوبين جديدين..؟
فأجابه أبو ذر: " يا بن أخي.. لقد أعطيتهما من هو أحوج اليهما مني"..
قال له: والله انك لمحتاج اليهما!!
فأجاب أبو ذر: "اللهم اغفر له.. انك لمعظّم للدنيا، ألست ترى عليّ هذه البردة..؟؟ ولي أخرى لصلاة الجمعة، ولي عنزة أحلبها، وأتان أركبها، فأي نعمة أفضل ما نحن فيه"..؟؟

ஒரு முறை அபூதர் (ரலி) அவர்களின் நண்பர் ஒருவர், அபூதர் (ரலி) அவர்களின் ஒட்டுப் போட்ட ஆடையைப் பார்த்து, நபித்தோழர் ஒருவர் இப்படி ஏழ்மையில் உழன்று கொண்டு சிரமப்படுகின்றாரே என்று கருதி ஆறுதல் வார்த்தை கூற வந்தார்.

அபூதர் அவர்களே! நீங்கள் அணிந்திருக்கும் இந்த ஆடையைத் தவிர வேறு ஆடைகள் ஏதும் இல்லையா?

கடந்த சில நாட்களுக்கு முன்னர் உங்களிடம் புதிய இரண்டு ஆடைகள் இருப்பதை நான் கண்டேனே? அதை அணிந்து கொள்ள வேண்டியது தானே? என்றார்.

அதற்கு, அவ்விரண்டு ஆடைகளையும் நான் என்னை விட தேவையானவர்கள் இருவருக்கு கொடுத்து விட்டேன்” என்றார்கள்.

அதற்கு, அபூதர் அவர்களின் நண்பர் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவ்விரண்டு பேர்களை விட நீர் தான் மிகவும் தேவை உடையவராக இருக்கின்றீர்” என்றார்.

அப்போது, வானின் பக்கம் கையை உயர்த்தி, இறைவா! இவர் விளங்காமல் பேசுகின்றார்! இவரை மன்னித்து விடுவாயாக!” என்று கூறிவிட்டு, என்னிடம் இரு ஆடைகள் உண்டு ஒன்றை நான் இப்போது அணிந்திருக்கின்றேன். இன்னொன்றை ஜும்ஆ தொழுகைக்காக அணிந்து கொள்வேன்” என்றார்கள்.

عن زيد بن وهب قال: مررت بالرَّبَذَة، فإذا أنا بأبي ذَرّ
فقلت له: ما أنزلك منزلك هذا؟ قال: كنت بالشام، فاختلفت أنا ومعاوية في {وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلاَ يُنْفِقُونَهَا فِي سَبِيلِ اللَّه
التوبة: 34]
 قال معاوية نزلت في أهل الكتاب
 فقلت: نزلت فينا وفيهم. فكان بيني وبينه في ذاك
 وكتب إلى عثمان يشكوني
 فكتب إليَّ عثمان
أنِ اقْدِم المدينة
 فقدمتها فكثر عليَّ الناس حتى كأنهم لم يروني قبل ذلك، فذكرت ذاك لعثمان، فقال لي: إن شئت تنحيت فكنت قريبًا. فذاك الذي أنزلني هذا المنزل، ولو أمَّرُوا عليَّ حبشيًّا لسمعت وأطعت.

தங்களின் அந்திம காலத்தில் உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சியில் ஜகாத் தொடர்பான இறைவசனம் ஒன்றில் அபூதர் (ரலி) அவர்களுக்கும், முஆவியா (ரலி) அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாட்டினாலும், முஆவியா (ரலி) அவர்களின் நிலைப்பாடு தவறெனெச் சுட்டிக்காட்டியதாலும், உஸ்மான் (ரலி) அவர்களின் ஆணைக்கினங்க, ஊரை விட்டும் ஒதுங்கி யாரும் இல்லா அர் ரபதா வனாந்தரத்தில் காட்டில் தங்களின் மனைவியோடு தங்கி இருக்கின்றார்கள்.

قيل لأبي ذرٍّ
ألا تتخذ أرضًا كما اتخذ طلحة والزبير؟ فقال: "وما أصنع بأن أكون أميرًا، وإنما يكفيني كل يوم شربة من ماء أو نبيذ أو لبن، ".
وعن أبي ذر قال: "كان قوتي على عهد رسول الله صاعًا من التمر، فلست بزائدٍ عليه حتى ألقى الله تعالى".

ஒரு முறை அபூதர் (ரலி) அவர்களிடம் ஒருவர் இவ்வாறு கேட்டார்: “உங்கள் தோழர்கள் ஸுபைர் (ரலி) தல்ஹா (ரலி) ஆகியோருக்கு சொந்தமாக பெரிய நிலம் ஒன்று இருக்கின்றதே? நீங்களும் அது போன்று வாங்கக் கூடாதா? என்று.

அதற்கு, நான் என்ன நாடு மக்களின் தலைவரா? கோட்டை கொத்தளங்களில் வாழ்வதற்கு! எனக்கு தினமும் குடிப்பதற்கு ஒரு மிடரு தண்ணீரோ, பழச்சாறோ, பாலோ இருந்தால் போதும்” என்று அபூதர் (ரலி) பதில் கூறினார்கள்.

”அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் உயிர் வாழும் காலத்தில் என்னுடைய உணவு ஒரு ஸாவு பேரீத்தம் பழம் தான், என் மரணம் வரை இதில் இருந்து கொஞ்சம் கூட அதிகரிக்கப்போவதில்லை” என்று அபூதர் (ரலி) கூறுவார்கள்.

الآن يعالج أبو ذر سكرات الموت في الربذة.. المكان الذي اختار الاقامة فيه اثر خلافه مع عثمان رضي الله عنه، فتعالوا بنا اليه نؤد للراحل العظيم تحية الوداع، ونبصر في حياته الباهرة مشهد الختام.
ان هذه السيدة السمراء الضامرة، الجالسة الى جواره تبكي، هي زوجته..
وانه ليسألها: فيم البكاء والموت حق..؟
فتجيبه بأنها تبكي: " لأنك تموت، وليس عندي ثوب يسعك كفنا"..!!
".. لا تبكي، فاني سمعت رسول الله صلى الله عليه وسلم ذات يوم وأنا عنده في نفر من أصحابه يقول: ليموتنّ رجل منكم بفلاة من الأرض، تشهده عصابة من المؤمنين..
وكل من كان معي في ذلك المجلس مات في جماعة وقرية، ولم يبق منهم غيري .. وهأنذا بالفلاة أموت، فراقبي الطريق،، فستطلع علينا عصابة من المؤمنين، فاني والله ما كذبت ولا كذبت

சில நாட்களில் நோய்வாய்ப்படுகின்றார்கள், அந்த நோயின் வீரியம் அவர்களை மரணத்தின் விளிம்பு வரை அழைத்துச் செல்கிறது.

இப்போதோ, அப்போதோ என எப்போது வேண்டுமானாலும் அபூதர் அல் ஃகிஃபாரி (ரலி) அவர்களின் ரூஹ் பிரிந்து விடும் என்பதை அறிந்து அழுகின்றார்கள்!

அபூதர் அல் ஃகிஃபாரி (ரலி) அவர்களின் துணைவியார், அபூதர் (ரலி) அவர்களைப் பார்த்தவாறே! தனிமையில் யாருமற்ற பாலைவனத்தில் மரணத்தைத் தழுவ இருக்கின்றீர்களே!; உங்களுடைய இறுதிச் சடங்கை நிறைவேற்ற எந்தத் துணையும் உதவியும் இல்லையே! உங்களது பிரேதத்தை மூடும் அளவிற்குக்கூட நம்மிடம் கஃபன் துணியில்லையே! நான் எப்படி அழாமல் இருக்க முடியும்?”

அதைக் கேட்டு புன்னகைத்தவாறே அபூதர் (ரலி) அவர்கள்உறுதியாக இரு! நானும் தோழர்களும் அமர்ந்திருந்தபோது அல்லாஹ்வின் தூதர் எங்களிடம் உங்களுள் ஒருவர் பாலைவனத்தில் தனிமையில் மரணமடைவார். அவரது இறுதிச் சடங்கு இறை நம்பிக்கையாளர்களின் குழு ஒன்றினால் நடத்தப்படும்என்று கூறியதை நான் செவியுற்றேன்.

அன்று அங்கு என்னுடன் அமர்ந்திருந்த அனைவரும் நகரிலோ, பெரும்பாலான மக்கள் வசிக்கும் பகுதியிலோ மரணமடைந்துவிட்டார்கள், என்னைத் தவிர! இதோ இங்கு நான் அரவமற்ற பாலைவனத்தில்.

அல்லாஹ்வின்மீது ஆணையாக! நான் பொய் உரைத்ததே இல்லை. எழுந்து செல்! பாதையைக் கவனி. அத்தகைய இறை நம்பிக்கையாளர் குழு ஒன்று நிச்சயம் வரும்! என்று கூறினார்கள்.                                  ( நூல்: அஹ்மத் )

அருகில் இருந்த சிறு மலை முகட்டில் ஏறி நின்று பாதைகள் அனைத்திலும் யாரேனும் வருகிறார்களா என்று பார்ப்பார் உம்மு தர் (ரலி).

அங்குச் சிறிது நேரம் காத்திருந்து பார்ப்பதும், மீண்டும் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் கிடக்கும் கணவரை கவனிப்பதற்காக வீட்டிற்கு ஓடி வருவதும் என்று கடினமான தருணங்களை அனுபவித்தார்கள் உம்மு தர் (ரலி).

இறுதியாக, தம் மனைவிக்கும் அடிமைக்கும் அபூதர் (ரலி) அவர்கள் நான் இறந்ததும் என்னைக் கழுவுங்கள், துணியால் சுற்றுங்கள், சாலையின் ஓரத்திற்குத் தூக்கிச்சென்று கிடத்துங்கள். கடந்து செல்லும் பயணிகளிடம் இவர் அபூதர்என்று தெரிவியுங்கள். அவர்கள் என்னை நல்லடக்கம் புரிவார்கள்.என்றார்கள்.

அபூதர் (ரலி) அவர்களின் உயிர் பிரிந்தது. அவரைக் கழுவித் துணியால் சுற்றி மூடி, சாலையின் ஓரத்தில் கிடத்தி விட்டு யாரேனும் வருகிறார்களா என்று அமர்ந்து, கண்ணீருடன் காத்திருந்தார்கள். சற்று நேரம் கழித்துப் பயணிகளின் கூட்டம் ஒன்று தூரத்தில் ஒட்டகங்களில் வருவது தெரிந்தது.

அந்தக் குழுவினர் வெகுதொலைவில் யாரோ சைகை புரிவதைக் கவனித்தார்கள்.

அருகில் வந்த குழுவினார்கள் அல்லாஹ்வின் பெண் அடிமையே! என்ன விஷயம்?” என்று விசாரிக்க,

என் கணவர். இறந்துவிட்டார். நீங்கள் வந்து, என் கணவரை நல்லடக்கம் செய்ய உதவி புரியுங்கள்! தயவுசெய்து உதவுங்கள்என்றார் உம்முதர் (ரலி).

யார் அவர்? என்று கேட்க,  அபூதர் (ரலி) என்று உம்முதர் (ரலி) அவர்கள் கூற...

அல்லாஹ்வின் தூதரின் தோழரா?” என்று குழுவினர்கள் ஆச்சர்யத்துடன் வினவ, “ஆம்.” என்று உம்மு தர் (ரலி) அவர்கள் பதில் கூறினார்கள்.

وفاضت روحه الى الله..
ولقد صدق..
فهذه القافلة التي تغذ السير في الصحراء، تؤلف جماعة من المؤمنين، وعلى رأسهم عبدالله بن مسعود صاحب رسول الله.
وان ابن مسعود ليبصر المشهد قبل أن يبلغه.. مشهد جسد ممتد يبدو كأنه جثمان ميّت، والى جواره سيدة وغلام يبكيان..
وتفيض عيناه بالدمع، ويقف على جثمانه الطاهر يقول:" صدق رسول الله.. نمشي وحدك، وتموت وحدك، وتبعث وحدك".!
ويجلس ابن مسعود رضي الله عنه لصحبه تفسير تلك العبارة التي نعاه بها:" تمشي وحدك.. وتموت حدك.. وتبعث وحدك

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அந்தக் குழுவில் இருந்தார். இதைக் கேட்டதும், ஓடோடி வந்து பார்த்தார், அபூதர் (ரலி) அவர்களின் அருகே உம்முதர் அவர்களும், அவர்களின் அடிமையும் நின்று அழுது கொண்டிருந்தனர். இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களுக்கு கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லக் கேட்டிருக்கிறேன். அல்லாஹ் அபூதர்ரின்மீது கருணை புரிவானாக. அவர் தனியாளாய் நடப்பார், தனியாளாய் இறப்பார், தனியாளாய் எழுப்பப்படுவார்என்று அன்றே அவர்கள் முன்னறிவித்தார்கள்”.


( நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}.... ஸியரு அஃலா மின் நுபலா )


வத்தான் எனும் பள்ளத்தாக்கிலிருந்து தனி நபராய்க் கிளம்பி வந்து, இஸ்லாத்தை ஏற்று, தங்களது கோத்திரம், நட்புக் கோத்திரம் என அனைவருக்கும் ஈமானிய ஒளியைக் கொடுத்து, வரலாறு ஒன்றைப் படைத்து, தனியாளாய் நடந்து, அல்லாஹ் வழங்கிய வாழ்க்கை முறையை அப்படியே ஏற்று, திருப்தி பட்டு தனியாளாய் இறந்து போனார்கள் அபூதர் அல் கிஃபாரி (ரலி) அவர்கள்.

2. மறுமையைப் பற்றிய பயமும், அல்லாஹ் குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்குவான் என்கிற பயமும் வேண்டும்…

மறுமையில் மிகவும் அபாயகரமான கட்டத்தைப் பற்றி அல்லாஹ் ஓரிடத்தில் இப்படிக் கூறுவான்.

الْيَوْمَ نَخْتِمُ عَلَى أَفْوَاهِهِمْ وَتُكَلِّمُنَا أَيْدِيهِمْ وَتَشْهَدُ أَرْجُلُهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ

“இன்று அவர்களுடைய வாய்களுக்கு நாம் முத்திரை வைத்து விடுவோம். உலகில் அவர்கள் எதைச் சம்பாதித்துக் கொண்டிருந்தார்கள் என்று அவர்களின் கரங்கள் நம்மிடம் சாட்சி சொல்லும்; அவர்களின் கால்களும் சாட்சி சொல்லும்”

                                                      (அல் குர்ஆன்: 36: 65 )

இன்னொமொரு இடத்தில்….

ويَوْمَ يُحْشَرُ أَعْدَاءُ اللَّهِ إِلَى النَّارِ فَهُمْ يُوزَعُونَ () حَتَّى إِذَا مَا جَاءُوهَا شَهِدَ عَلَيْهِمْ سَمْعُهُمْ وَأَبْصَارُهُمْ وَجُلُودُهُمْ بِمَا كَانُوا يَعْمَلُونَ () وَقَالُوا لِجُلُودِهِمْ لِمَ شَهِدْتُمْ عَلَيْنَا قَالُوا أَنْطَقَنَا اللَّهُ الَّذِي أَنْطَقَ كُلَّ شَيْءٍ وَهُوَ خَلَقَكُمْ أَوَّلَ مَرَّةٍ وَإِلَيْهِ تُرْجَعُونَ () وَمَا كُنْتُمْ تَسْتَتِرُونَ أَنْ يَشْهَدَ عَلَيْكُمْ سَمْعُكُمْ وَلَا أَبْصَارُكُمْ وَلَا جُلُودُكُمْ وَلَكِنْ ظَنَنْتُمْ أَنَّ اللَّهَ لَا يَعْلَمُ كَثِيرًا مِمَّا تَعْمَلُونَ ()

“அந்த நேரத்தை சற்று நினைவு கூர்ந்து பாருங்கள்! அல்லாஹ்வோடு விரோதம் பாராட்டியவர்கள் நரகின் பால் கொண்டு செல்வதற்காக ஒன்று திரட்டப்படுவார்கள்! இறுதியில், அவர்கள் அங்கு சென்றடையும் போது அவர்களின் காதுகளும், கண்களும், அவர்களின் உடம்பின் தோல்களும் உலகில் அவைகள் செய்த செயல்களைச் சொல்லி அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்லும்!

அவர்கள், தங்கள் தோல்களைப் பார்த்து கேட்பார்கள்: “எங்களுக்கு எதிராக ஏன் சாட்சி சொன்னீர்கள்?” என்று.

அதற்கு, அவைகள் “ஒவ்வொன்றையும் பேச வைத்த இறைவனாகிய அல்லாஹ் தான் எங்களையும் பேச வைத்தான். அவனே உங்களை முதன் முறையாகப் படைத்தான். மேலும், அவன் பக்கமே நீங்கள் திரும்பக் கொண்டு செல்லப்படுகின்றீர்கள்.

உலகில் நீங்கள் குற்றங்களை இரகசியமாகச் செய்து கொண்டிருந்த போது, உங்களுடைய காதுகளும், உங்களுடைய கண்களும், உங்களுடைய தோல்களும் உங்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லும் எனும் எண்ணமே உங்களுக்கு இருந்ததில்லை.

மாறாக, நீங்கள் செய்கின்ற செயல்களில் பெரும்பாலானவற்றை அல்லாஹ் கூட அறிய மாட்டான் என நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்கள்”. (அல்குர்ஆன்:41:19,20)

قال الحافظ أبو بكر البزار: حدثنا محمد بن عبد الرحيم، حدثنا علي بن قادم، حدثنا شريك، عن عبيد المُكْتَب، عن الشعبي  ، عن أنس بن مالك، رضي الله عنه، قال: ضحك رسول الله صلى الله عليه وسلم ذات يوم وتبسم  ، فقال: "ألا تسألوني عن أي شيء ضحكت؟" قالوا: يا رسول الله من أي شيء ضحكت؟ قال: "عجبت من مجادلة العبد ربه يوم القيامة، يقول: أي ربي، أليس وعدتني ألا تظلمني؟ قال: بلى فيقول: فإني لا أقبل عليّ شاهدا إلا من نفسي. فيقول الله تبارك وتعالى: أو ليس كفى بي شهيدا، وبالملائكة الكرام الكاتبين؟! قال: فيردد هذا الكلام مرارا". قال: "فيختم على فيه، وتتكلم أركانه بما كان يعمل، فيقول: بُعْدًا لكُنَّ وسُحقا، عنكن كنت أجادل".
ثم رواه هو وابن أبي حاتم، من حديث أبي عامر الأسدي، عن الثوري، عن عُبيد المُكْتَب، عن فُضيل بن عمرو، عن الشعبي ثم قال: "لا نعلم رواه عن أنس غير الشعبي". وقد أخرجه مسلم


இந்த இறை வசனங்களுக்கு விரிவுரை தருகிற விரிவுரையாளர்கள் “இது தான் ஓர் அடியான் இடத்தில் அல்லாஹ் கடைசியாக எடுக்கும் கடுமையான நடவடிக்கை ஆகும்.

இதற்கு ஆதாரமாக, ஓர் நபிமொழியை சுட்டிக்காட்டுவார்கள்: அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:  ”மாநபி {ஸல்} அவர்களோடு ஓர் சபையில் நாங்கள் அமர்ந்திருந்தோம். அபோது நபி {ஸல்} அவர்கள் திடீரெனெ சிரித்தார்கள். பின்னர் நான் எதற்காக சிரித்தேன் என்று நீங்கள் கேட்க மாட்டீர்களா? என்றார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! உங்களை சிரிக்க வைத்த செயல் எது? என்று நாங்கள் கேட்டோம்.

அப்போது, மாநபி {ஸல்} அவர்கள் ”இப்போது எனக்கு மறுமையில் அடியானுக்கும் ரப்புக்கும் இடையே நடக்கும் வாக்குவாத உரையாடல் ஒன்று எடுத்துக் காட்டப்பட்டது, அடியான் ரப்பிடம் வாக்குவாதம் புரியும் காட்சியைக் கண்டு நான் சிரித்தேன்” என்று கூறி விட்டு காட்சியை விவரிக்க ஆரம்பித்தார்கள்.

“அல்லாஹ்வின் திரு முன் கொண்டு வரப்பட்ட அடியான் இறைவா! நீ எனக்கு அநீதம் இழைக்க மாட்டேன் என்று வாக்களித்திருக்கின்றாய் அல்லவா? என்று கேட்டான். அதற்கு அல்லாஹ்: ஆம் என்று கூறினான்.

அப்போது, அந்த அடியான்: அல்லாஹ்வே உன் முன்னால் நிற்கிற நான் என் வாழ்வில் செய்த எந்த ஒரு செயலுக்கும் என் அன்றி வேறெவரும் சாட்சி கூற இயலாத நிலையில் உன் முன்னால் வந்திருக்கின்றேன்” என்பான்.

அப்போது, அல்லாஹ்: நான் தான் உன்னை பார்த்துக் கொண்டிருந்தேனே! நீ என்ன செய்தாய் என்பது எனக்கு தெரியும்! என் சாட்சி உனக்கு போதும் அல்லவா? என்னுடைய இரு சங்கையான வானவர்கள் உன் செயல்களை பதிவு செய்து கொண்டிருந்தார்களே? அந்த சாட்சி உமக்கு போதும் அல்லவா? என்று மீண்டும், மீண்டும் கேட்பான்.

அதற்கு, அந்த அடியான் அல்லாஹ்விடத்தில் தொடர்ந்து வாதம் புரியவே அல்லாஹ் அவன் வாய்க்கு முத்திரை இட்டு விடுவான். பின்னர் அவனுடைய ஒவ்வொரு அவயவங்களும் அவன் செய்த குற்றங்கள் குறித்து முறையிடும்” என்று கூறினார்கள்.

وقال  ابن أبي حاتم: حدثنا عبدة بن سليمان، حدثنا ابن المبارك، حدثنا صفوان بن عمرو ، عن عبد الرحمن بن جبير الحضرمي، عن رافع أبي الحسن -وصف رجلا جحد-قال: فيشير الله إلى لسانه، فيربو في فمه حتى يملأه، فلا يستطيع أن ينطق بكلمة، ثم يقول لآرابه  كلها: تكلمي واشهدي عليه. فيشهد عليه سمعه وبصره وجلده، وفرجه ويداه ورجلاه: صنعنا، عملنا، فعلنا.

இன்னொரு அறிவிப்பில்….

அந்த அடியான் மறுத்துப் பேசவே அல்லாஹ் நாவிற்கு ஒரு வார்த்தை கூட பேச இயலாதவாறு கட்டளை பிறப்பிப்பான். பின்னர், அடியானுடைய ஒவ்வொரு உறுப்பையும் நோக்கி நீ என்ன செய்தாய்? சொல் என்று கட்டளை இடுவான்.

அவனுடைய, செவி, கண், தோல், மர்மஸ்தானம், கைகள், கால்கள் என அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நாங்கள் இதைச் செய்தோம், அதைச் செய்தோம் என சாட்சி சொல்லும்”.                              ( நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர் )

ஆதலால் தான் சத்திய ஸஹாபாக்கள், முன்னோர்கள், இமாம்கள் என பெரும் கொண்ட மேன்மக்கள் மறுமை நாளைப் பயந்து, அல்லாஹ்வின் விசாரணைக்கு அஞ்சி, அல்லாஹ் உலகில் புரிந்த குற்றங்களுக்கு மிகப் பெரிய அளவிலான தண்டனையை வழங்கி விடுவானோ என நடுங்கி இபாதத்களிலும், வழிபாடுகளிலும், நல்லறங்கள் புரிவதிலும் தங்கள் வாழ்க்கையை முழுவதுமாக ஈடுபடுத்தினார்கள்.

ஆகவே தான், சுவர்க்கத்தின் ஒரேயொரு மரத்தைப் பெறுவதற்காக அபுத்தஹ்தாஹ் (ரலி) 100 பேரீச்சம் மரங்கள் கொண்ட ஒரு தோட்டத்தையே விலையாகக் கொடுத்தார்கள்.

நாம் அந்த மறுமை வாழ்விற்காக எதை தயார் செய்து வைத்திருக்கின்றோம்? அல்லாஹ்வின் தண்டனையில் இருந்து நம்மை காத்துக் கொள்ள, அல்லாஹ்வின் திருமுன் சமர்ப்பிக்க எதை சேமித்து வைத்திருக்கின்றோம்?

அல்லாஹ் விளக்கத்தை தருவானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!
வஸ்ஸலாம்!!!

இன்ஷாஅல்லாஹ் அடுத்த வாரமும் தொடரும்…..




No comments:

Post a Comment