Thursday 28 June 2018

உறவுகள்! உரிமைகளும்… கடமைகளும்…


உறவுகள்! உரிமைகளும்கடமைகளும்




நீரிலும், நிலத்திலும் கூட்டமாக சேர்ந்து வாழ்கிற கோடான கோடி படைப்புகளை, உயிரினங்களை அல்லாஹ் பரந்து விரிந்த இப்பாருலகில் படைத்துள்ளான்.

அந்த உயிரினங்களில், படைப்பினங்களில் ஆக உயர்ந்த படைப்பாக மனித இனத்தை அல்லாஹ் படைத்திருக்கின்றான்.

எறும்பினம் அது கூட்டமாக சேர்ந்து வாழ்கின்றது, பறவையினம் அது கூட்டமாக சேர்ந்து வாழ்கின்றது, விலங்கினம் அது கூட்டமாக சேர்ந்து வாழ்கின்றது, பூச்சியினம் அது கூட்டமாக சேர்ந்து வாழ்கின்றது, மீன் இனம் அது கூட்டமாக சேர்ந்து வாழ்கின்றது.

கூட்டமாக, சேர்ந்து வாழ்கிற எல்லா உயிரினங்களுக்கும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் வாழ்வியல், வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கவில்லை.

மனித இனத்திற்கு மட்டுமே மனித இனத்திலிருந்தே நபிமார்களை, ரஸூல்மார்களை அனுப்பி, ஏடுகளை, வேதங்களை கொடுத்து நல்வழிப் படுத்துகின்றான்.

இந்த வகையில், அல்லாஹ் மனித இனத்தை அனைத்து உயிரினங்களையும் விட மிக உயர்ந்த, மேன்மை நிறைந்த ஓர் படைப்பாக ஆக்கியிருப்பதை உணர முடிகின்றது.

وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا ()

நாம் ஆதத்தின் வழித்தோன்றல்களுக்குக் கண்ணியம் அளித்துள்ளோம். மேலும், நீரிலும் நிலத்திலும் அவர்களுக்கு வாகனங்களை வழங்கியுள்ளோம். தூய பொருள்களிலிருந்து அவர்களுக்கு ஆகாரம் வழங்கியுள்ளோம். மேலும், நாம் படைத்த பெரும்பாலான படைப்புகளைவிட அவர்களுக்கு அதிகச் சிறப்புகளையும் வழங்கியுள்ளோம்                                           ( அல்குர்ஆன்: 17: 70 )

கூட்டமாக, சேர்ந்து வாழ்கிற மனித இனத்திற்குகுடும்ப அமைப்புஎன்கிற ஓர் உறவு முறையை அல்லாஹ் அமைத்துக் கொடுத்து, அந்த குடும்ப அமைப்பின் உறவு முறைகளுக்கு அழகிய பெயர்களைச் சூட்டி அந்த உறவு முறைகளோடு சக மனிதர்களுக்கு இருக்கிற உரிமைகளையும், கடமைகளையும் வஹியின் மூலமாகவும் அந்த வஹியைச் செயல்படுத்திக் காட்டிட இறைத்தூதர்களான நபிமார்களின் மூலமாகவும் வடிவமைத்துத் தந்துள்ளான்.

இறுதி வடிவம் கொடுக்கும் முகமாக இறுதித்தூதர் முஹம்மது {ஸல்} அவர்களைக் கொண்டு உறவுமுறைகளின் மீதான உரிமைகளையும், கடமைகளையும் நிறைவுபடுத்தி இருக்கின்றான்.

இந்த தலைப்பின் கீழ் பேச வேண்டிய, கேட்க வேண்டிய காலச்சூழல் தற்போது இந்த உம்மத்திற்கு ஏற்பட்டிருக்கின்றது.

பாயம்மா” ( நீயா? நானா? கோபிநாத் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாத்திமா நிலோஃபார் ) இந்த சொல்லாடல் கடந்த இருவாரங்களாக தமிழ்ச் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி முஸ்லிம் சமூகத்தின் குடும்ப உள் கட்டமைப்பின் கூறுகளை வெளிப்படுத்தி இருக்கின்றது.

முஸ்லிம் சமூகத்துடைய வளர்ந்த தலைமுறையின் உறவுகள் குறித்தான எண்ண ஓட்டத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருப்பதை மறுக்க முடியவில்லை.

வளர்ந்த, வளரும் தலைமுறையினருக்கு உறவுகள் குறித்த விழிப்புணர்வை, மகத்துவத்தை ஊட்ட வேண்டிய கட்டாயமும் கடப்பாடும் நமக்கு இருக்கின்றது.

உறவுகள் குறித்த இஸ்லாத்தின் பார்வை

குடும்ப அமைப்பு இது அல்லாஹ் மனித சமூகத்திற்கு வழங்கியிருக்கிற மாபெரும் மகத்தான அருட்கொடையாகும்.

தாய் தந்தை, மகன் மகள், சகோதரன் சகோதரி, மாமன் மச்சான், சிறிய தந்தை பெரிய தந்தை, மாமி சின்னம்மா, கணவன் மனைவி, பேரன் பேத்தி என நீண்டதொரு பட்டியலைக் கொண்டது குடும்ப அமைப்பில் உருவாகும் உறவு முறைகள் ஆகும்.
முதல் உரிமை கொடுக்கப்பட வேண்டிய உறவு எது?

இந்த உறவு முறைகளில் ஏகத்துவத்திற்குப் பிறகு அல்லாஹ் உயர்த்திக்கூறும் ஒரு உறவுமுறை உண்டென்றால் அது நம்மைப் பெற்றெடுத்த பெற்றோருடனான உறவே ஆகும்.

وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا

“மேலும், நீங்கள் அனைவரும் அல்லாஹ்வுக்கே அடிபணிந்து வாழுங்கள்! அவனோடு எதனையும் இணையாக்காதீர்கள்! தாய், தந்தையரிடம் நல்ல விதமாக, அன்புடன் நடந்து கொள்ளுங்கள்!”                              ( அல்குர்ஆன்: 4: 36 )

وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا

“உம் அதிபதியாகிய இறைவன் அவனைத்தவிர வேறெவரையும் நீங்கள் வணங்கக் கூடாது எனவும், தாய், தந்தையரிடம் மிக கண்ணியமான முறையில் நடந்து கொள்ள வேண்டும் எனவும் விதித்துள்ளான்”           ( அல்குர்ஆன்: 17: 23 )

لَمّا سأَلَهُ بعضُ الصحابةِ رسولَ اللهِ صلى الله عليه وسلم: «منْ أَحَقُّ الناسِ بِحُسْنِ صحابَتِي؟ قالَ
 أمُّكَ. قالَ: ثمَّ مَنْ؟ قالَ: أمُّكَ. قالَ: ثمَّ مَنْ؟ قالَ: أمُّكَ. قالَ
 ثمَّ مَنْ؟ قالَ
 أبوكَ
‘‘ஒரு மனிதர் நபி {ஸல்} அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே, மக்களில் நான் அதிகம் அழகிய முறையில் தோழமை கொள்வதற்கு தகுதியானவர் யார்?’ என்று கேட்டார். அதற்கு, நபி {ஸல்} அவர்கள் உமது தாய்என பதில் கூறினார்கள்.

அப்போது, அவர், பிறகு யார்?’ என கேட்க.... உமது தாய்என மாநபி {ஸல்} கூற... மூன்றாவது தடவையாக பிறகு யார்?’ என அவர் கேட்கவும் நபியவர்கள் உமது தாய்என கூறினார்கள். நான்காவது தடவையாக பிறகு யார்?’ என அவர் கேட்டபோது உமது தந்தைஎன மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்’’.

( அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம் )

وى مسلمٌ عن عبدالله بن عمرو بن العاص قال
 أقبل رجلٌ إلى نبي الله صلى الله عليه وسلم فقال: أبايعك على الهجرة والجهاد أبتغي الأجرَ من الله،قال: ((فهل مِن والديك أحَدٌ حيٌّ؟))، قال: نعم،بل كلاهما،قال: ((فتبتغي الأجرَ من الله؟))، قال: نعم،قال: ((فارجع إلى والديك فأحسِنْ صحبتَهما))؛ (مسلم - كتاب البر - حديث 6).

‘‘ஒரு மனிதர் நபி {ஸல்} அவர்களிடம், ‘நான் இறையருளைப் பெற ஆசைப்பட்டு நாடு துறந்து (ஹிஜ்ரத்) செல்வதையும், அறப்போர் புரிவதையும் தங்களிடம் உறுதிமொழி கொடுக்கிறேன்என்று கூறினார்.

இதை கேட்ட நபியவர்கள் உனது பெற்றோரில் ஒருவரேனும் உயிருடன் இருக்கிறார்களா?’ என்று கேட்டார்கள். ஆம் இருவருமே உயிருடன் உள்ளார்கள்என்று அவர் கூறினார். 

அப்படியானால் இறையருளைத் தான் நீர் தேடுகின்றீரா?’ என நபி (ஸல்) அவர்கள் திரும்பவும் கேட்டார்கள். அப்போது, அவர் ஆம்என்று பதில் கூறினார். அப்படியானால் நீர் உமது பெற்றோரிடம் திரும்பிச் சென்று, அவ்விருவரிடமும் அழகான முறையில் தோழமையுடன் நடந்து கொள்வீராகஎன நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’’.

( அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம் )

பெற்றோர் சுவன வாசல்களின் மத்திய பகுதியாவர்கள். நீ நாடினால் அதை வீணடித்துக் கொள், அல்லது அதை பாதுகாத்துக்கொள்என்பது நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( அறிவிப்பாளர்: அபூதர்தா (ரலி) நூல்: இப்னுமாஜா )

روى الشيخانِ عن عبدالله بن مسعودٍ رضي الله عنه قال: سألت رسول الله صلى الله عليه وسلم قلت: يا رسول الله، أي العمل أفضل؟ قال: ((الصلاة على ميقاتها))،قلت: ثم أي؟ قال: ((ثم برُّ الوالدينِ))،قلت: ثم أي؟ قال: ((الجهاد في سبيل الله))؛ (البخاري حديث 527
 مسلم حديث 85).

இப்னுமஸ்ஊத் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ‘‘நான் நபி (ஸல்) அவர்களிடம் செயலில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானது எது?’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவதுஎன பதில் கூறினார்கள். அதற்கு அடுத்தது எது?’ என்று கேட்டேன். பெற்றோருக்கு நன்மை புரிவதுஎன்றார்கள். அதன்பிறகு எது?’ என்று கேட்டேன். அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்வதுஎன பதில் கூறினார்கள்’’. ( நூல்: முஸ்லிம், புகாரி )

அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ”ஒருமுறை அண்ணல் நபி {ஸல்} அவர்களிடம் ஒருவர் வந்து அல்லாஹ்வின் தூதரே! நான் பெரும் பாவமொன்றை செய்து விட்டேன். என் பாவத்திற்கு மன்னிப்புண்டா? என்று கேட்க, அதற்கு அண்ணல் நபி {ஸல்} அவர்கள் அவரை நோக்கிஉமது தாய் உயிருடன் இருக்கின்றார்களா? என்று வினவினர். அதற்கவர் இல்லையென்று சொன்னார்.

 பின்னர் மீண்டும் பெருமானார் {ஸல்} அவர்கள் உமது தாயுடன் பிறந்த சகோதரி (சிறிய தாயார்) உயிருடன் இருக்கின்றார்களா? என்று கேட்க, அதற்கவர், ஆம்! என்று சொல்லஅவ்வாறாயின் நீர் அவருடன் அழகிய முறையில் நடந்து கொள்வீராக!” என்று சொன்னார்கள்.                              ( நூல்: திர்மிதீ )

பெற்றோர்கள் இணை வைப்போராக இருந்தாலும் அவர்களுடன் இணைந்து வாழவேண்டும்….
  
عن أَسْمَاءَ بنْتِ أبي بكْرٍ الصِّدِّيقِ رضي اللَّه عنهما قالت : قَدِمتْ عليَّ أُمِّي وهِي مُشركة في عهْدِ رسول اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم فَاسْتَفتَيْتُ رسول اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم قلتُ : قَدِمتْ عَليَّ أُمِّى وَهِى راغبةٌ ، أَفأَصِلُ أُمِّي ؟ قال : « نَعمْ صِلي أُمَّكِ » متفق عليه .

அஸ்மா பின்த் அபீ பக்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : என்னிடம் என்தாயார் அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் வந்திருந்தார்கள். அப்போது அவர்கள் இணை வைப்போராக இருந்தார்கள்.நான் அல்லாஹ்வின் தூதரிடம் '' என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார். என் தாயிடம் அவரது உறவைப்பேணி நல்ல முறையில் நடந்து கொள்ளட்டுமா?'' என்று கேட்டேன்.  நபி (ஸல்) அவர்கள் ''ஆம், நீ உன்தாயின் உறவைப்பேணி அவருடன் நல்ல முறையில் நடந்து கொள்'' என்று கூறினார்கள்.                                                                                                                        ( நூல் : புகாரி )

”தனது பெற்றோருக்கு நல்லுதவி செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தி யுள்ளோம். உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்குமாறு அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! உங்களின் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்”.                                               ( அல்குர்ஆன் 29 : 8 )

”உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்கும் படி அவ்விரு வரும் உன்னைக் கட்டாயப்படுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! இவ்வுலகில் அவர்களிடம் அழகிய முறையில் தோழமை கொள்! என்னை நோக்கித் திரும்பியோரின் வழியைப் பின்பற்று! பின்னர் உங்கள் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்”.

                                                       ( அல்குர்ஆன்:30: 15 )

”ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்களுடைய தாயார் அவர்கள் (ஸஃதாகிய) அவர் தன்னுடைய மார்க்கமாகிய (இஸ்லாத்தை) மறுக்கின்றவரை அவரிடம் நான் ஒருபோதும் பேசமாட்டேன், சாப்பிடமாட்டேன், எதையும் அருந்தமாட்டேன் என்று சத்தியம் செய்தார்.

மேலும், அவர் (ஸஃத் (ரலி) அவர்களுக்கு ''அல்லாஹ் பெற்றோர்களுக்கு நல்லுபகாரம் செய்யவேண்டும் என்று கட்டளையிட்டிருப்பதாக நீ கூறினாய். நான் உன்னுடைய தாய் நான் நீ இவ்வாறு (இஸ்லாத்தை விட்டும் வெளியேற வேண்டும்) என்று கட்டளையிடுகிறேன்'' என்று கூறினார்.

இவ்வாறு அவர் மூன்று நாட்கள் (பேசாமல், சாப்பிடாமல், பருகாமல்) இருந்தாள். அவருக்கு கடுமையான பலவீனம் ஏற்பட்டது. அவருடைய (மற்றொரு மகனாகிய) உமாரா என்பவர் அவருக்கு நீர் புகட்டினார். அவர் ஸஃது (ரலி) அவர்களை சபிப்பவராக ஆகிவிட்டார். 

அப்போதுதான் அல்லாஹ்  ''தனது பெற்றோருக்கு நல்லுதவி செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தி யுள்ளோம். உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்குமாறு அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! உங்களின் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்.'' ( அல் குர்ஆன் 29 : 8)  என்ற வசனத்தை அருளினான். ( அறிவிப்பவர் : முஸ்அப் பின் ஸஃது (ரலி) நூல்  முஸ்லிம் )

பெற்றோர்களுக்காக செய்ய வேண்டிய உரிமைகளும், கடமைகளும்...

1.   பிரார்த்தனை செய்தல்..

"சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள்புரிவாயாக!''             ( அல்குர்ஆன் 17 : 28 )

”எங்கள் இறைவா! என்னையும், எனது பெற்றோரையும், நம்பிக்கை கொண்டோரையும் விசாரணை நடைபெறும் நாளில் மன்னிப்பாயாக!”

                                                           ( அல்குர்ஆன் 14 : 41 )

"என் இறைவா! என்னையும், எனது பெற்றோரையும், நம்பிக்கை கொண்டு எனது வீட்டில் நுழைந்தவரையும் நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் மன்னிப்பாயாக''                              ( அல்குர்ஆன் 71 : 28 )

"என் இறைவா! எனக்கும் என் பெற்றோருக்கும் நீ செய்த அருட்கொடைக்கு நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் செய்யவும் வாய்ப்பளிப்பாயாக! எனக்காக எனது சந்ததிகளைச் சீராக்குவாயாக! நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நான் முஸ்லிம்களில் ஒருவன்''       ( அல்குர்ஆன் 46 : 15 )

2.   பெற்றோருக்காகச் செலவிடுதல்...

”தாம் எதைச் செலவிட வேண்டும் என்று நபியே! அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். "நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும், அனாதைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும், நாடோடிகளுக்காகவும் செலவிட வேண்டும்.

நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்'' எனக் கூறுவீராக!”                                                 ( அல்குர்ஆன் 2 : 215 )

”மாநபி (ஸல்) அவர்கள் மிம்பரில் நின்றவர்களாக மக்களுக்கு உரையாற்றும் போது ''கொடுப்பவரின் கரம்தான் உயர்ந்ததாகும். உன்னுடைய குடும்பத்தவர்களாகிய உன்னுடைய தாய், உன்னுடைய தந்தை, உன்னுடைய சகோதரி, உன்னுடைய சகோதரன் பிறகு உனக்கு நெருக்கமானவர்கள் இவர்களிடமிருந்து நீ ஆரம்பம் செய்'' என்று கூறினார்கள்.                   ( அறிவிப்பவர் : தாரிக் (ரலி) நூல் : நஸாயீ )

3. பெற்றோருக்காக தர்மம் செய்தல்...

“பனூ சாயிதா குலத்தைச் சார்ந்த சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் வெளியூர் சென்றிருந்த போது அவர்களது தாயார் இறந்துவிட்டார். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து , ''அல்லாஹ்வின் தூதரே! நான் வெளியூர் சென்றிருந்தபோது என் தாயார் இறந்துவிட்டார். நான் அவர் சார்பாக ஏதேனும் தர்மம் செய்தால் அவருக்கு அது பலனளிக்குமா? என்று கேட்டார்.

 அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''ஆம் (பலனளிக்கும்)'' என்று கூறினார்கள். சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், எனது மிக்ராஃப் (எனும்) தோட்டத்தை அவர்களுக்காக தர்மம் செய்து விடுகிறேன் என்பதற்குத் தங்களை நான் சாட்சியாக்குகிறேன்,'' என்று கூறினார்கள்.                                              ( அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)  நூல் : புகாரி )

நபித்தோழர்கள் வாழ்விலிருந்து

وعن ابن عمر رضي الله عنهما قال كانت تحتي امرأة وكنت أحبها وكان عمر يكرهها فقال لي طلقها فأبيت فأتى عمر رضي الله عنه النبي صلى الله عليه وسلم فذكر ذلك له فقال النبي صلى الله عليه وسلم طلقها رواه أبو داود والترمذي وقال حديث حسن صحيح

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “என் மனைவி மீது நான் அதிகம் நேசம் வைத்திருந்தேன். ஆனால், என் தந்தை உமர் (ரலி) அவர்களோ  என் மனைவியை (என் மனைவியின் சில செயல்பாடுகளால்) வெறுத்தார்கள். மேலும், என்னிடம் என் மனைவியை மணவிலக்கு செய்து விடுமாறு கூறினார்கள். ஆனால், நான் என் மனைவியை மணவிலக்குச் செய்ய மறுத்து விட்டேன்.

அப்போது, என்னை அழைத்துக் கொண்டு நபி {ஸல்} அவர்களின் சபைக்கு வந்த என் தந்தை நடந்த சம்பவங்களை விவரித்தார்கள். அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த நபி {ஸல்} அவர்கள் என்னிடம்உமது மனைவியை மணவிலக்கு செய்திடுங்கள்என்று கூறினார்கள்.  ( நூல்: ரியாளுஸ்ஸாலிஹீன் )

عن أبي الدرداء رضي الله عنه أن رجلا أتاه فقال: إن لي امرأة وإن أمي تأمرني بطلاقها فقال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: الوالد أوسط أبواب الجنة فإن شئت فأضع ذلك الباب أو احفظه رواه الترمذي وقال حديث حسن صحيح

அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “ஒரு நபித்தோழர் நபி {ஸல்} அவர்களிடம் வந்தார். “அல்லாஹ்வின் தூதரே! என் தாய் என் மனைவியை மணவிலக்குச் செய்யும் படி என்னை வற்புறுத்துகின்றார். ”நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.

அதற்கு, நபி {ஸல்} அவர்கள்பெற்றோர்கள் சுவனத்து வாசல்களின் மத்திய பாகம் ஆவார்கள். நீர் நாடினால் அவர்களைப் பாதுகாத்துக் கொள்வீராக! அல்லது வீணாக்கிவிடுவீராக!” என்று கூறினார்கள்.

இந்த இரு நபிமொழிகளுக்கும் விளக்கம் தருகிற அறிஞர் பெருமக்கள் நபி {ஸல்} அவர்களின் பதிலுக்குப் பின்னர் இப்னு உமர் (ரலி) அவர்களும், பெயர் அறியப் படாத அந்த நபித்தோழரும் தமது மனைவியரை மணவிலக்குச் செய்து விட்டனர்.

ஆனால், இன்று சமூகத்திலோ மனைவியின் சொல்லைக் கேட்டு முதியோர் இல்லங்களுக்கு பெற்றோர்களை அனுப்பும் அவலம் அரங்கேறுவதைக் கண்டு வருகின்றோம்.

حَدَّثَنِي أَبُو هُرَيْرَةَ ، قَالَ : كُنْتُ أَدْعُو أُمِّي إِلَى الإِسْلامِ ، فَدَعَوْتُهَا يَوْمًا فَأَسْمَعَتْنِي فِي رَسُولِ اللَّهِ مَا أَكْرَهُ ، فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا أَبْكِي ، فَقُلْتُ
 يَا رَسُولَ اللَّهِ ، إِنِّي كُنْتُ أَدْعُو أُمِّي إِلَى الإِسْلامِ فَتَأْبَى عَلَيَّ فَدَعَوْتُهَا الْيَوْمَ فَأَسْمَعَتْنِي فِيكَ مَا أَكْرَهُ ، فَادْعُ اللَّهَ أَنْ يَهْدِيَ أُمَّ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
 " اللَّهُمَّ اهْدِ أُمَّ أَبِي هُرَيْرَةَ " ، قَالَ : فَخَرَجْتُ مُسْتَبْشِرًا بِدَعْوَةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا جِئْتُ قَصَدْتُ إِلَى الْبَابِ ، فَإِذَا هُوَ مُجَافٍ ، فَسَمِعَتْ أُمِّي خَشْفَ قَدَمِي فَقَالَتْ : مَكَانَكَ يَا أَبَا هُرَيْرَةَ ، وَسَمِعْتُ خَضْخَضَةَ الْمَاءِ ، قَالَ : فَاغْتَسَلَتْ ثُمَّ لَبِسَتْ دِرْعَهَا وَعَجِلَتْ عَنْ خِمَارِهَا ، فَفَتَحَتِ الْبَابَ ، ثُمَّ قَالَتْ : يَا أَبَا هُرَيْرَةَ ، أَشْهَدُ أَنْ لا إِلَهَ إِلا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ ، فَرَجَعْتُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، وَأَنَا أَبْكِي مِنَ الْفَرَحِ ، قُلْتُ : يَا رَسُولَ اللَّهِ ، أَبْشِرْ قَدِ اسْتَجَابَ اللَّهُ لَكَ ، وَهَذِهِ أُمُّ أَبِي هُرَيْرَةَ فَحَمِدَ اللَّهَ ، وَقَالَ خَيْرًا ، قُلْتُ : يَا رَسُولَ اللَّهِ ، ادْعُ اللَّهَ أَنْ يُحَبِّبَنِي وَأُمِّي إِلَى عِبَادِهِ الْمُؤْمِنِينَ وَيُحَبِّبُهُمْ إِلَيْهِ ،
 قَالَ : فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " اللَّهُمَّ حَبِّبْ عَبِيدَكَ هَذَا
 يَعْنِي أَبَا هُرَيْرَةَ " وَأُمَّهُ إِلَى عِبَادِهِ الْمُؤْمِنِينَ وَحَبِّبْ إِلَيْهِ الْمُؤْمِنِينَ


அன்றொரு நாள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் திருச்சபைக்கு அருமைத்தோழர் அபூஹுரைரா (ரலி) அழுதவாறே வருகின்றார்கள்.

அண்ணல் நபி {ஸல்} அவர்கள் அருகே அழைத்துஅபூஹுரைரா ஏன் அழுகின்றீர்? அழ என்ன காரணம்?” என்று வினவினார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அழுதவாறேஅல்லாஹ்வின் தூதரே! என் தாய் இன்னும் சத்திய தீனை ஏற்றுக் கொள்ளவில்லை. என் தாயாரிடம் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்தேன்.

என் தாய் எதிர்பாராத விதமாக என்னை அடித்து விட்டார்கள். மேலும், உங்களையும் விமர்சித்து விட்டார்கள். ஆதலால் என்னால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. எனவே தான் நான் அழுகிறேன்என்று கூறினார்கள்.

அதைக் கேட்டதும் நபிகளார் அபூஹுரைராவே! உமக்கு உன் தாயாரின் மீது அளவு கடந்த நேசமா? இல்லை, இந்த இறைத்தூதரின் (என்) மீது அளவு கடந்த நேசமா?” என்று கேட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! உங்கள் மீது தான் நான் அளவு கடந்த நேசம் வைத்திருக்கின்றேன். என்றாலும், அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எனக்கு ஓர் உபகாரம் செய்ய வேண்டும்என்றார்கள் அபூஹுரைரா (ரலி) அவர்கள்.

இப்போது, நான் என்ன செய்ய வேண்டும் கூறுங்கள்! என் அன்பு தோழரே! என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

அதற்கு, ”யா அல்லாஹ் அபூஹுரைராவின் தாயாருக்கு ஹிதாயத்தைக் கொடு!” என்று நீங்கள் ஒரேயொரு துஆ செய்ய வேண்டும் என்றார்கள் அபூஹுரைரா (ரலி) அவர்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் துஆ செய்ததும் தான் தாமதம். வேகமாக வெளியேறி தமது வீட்டை நோக்கி விரைந்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் துஆவின் சக்தியை நேரில் பார்த்தவர்களல்லவா? அதன் வீரியத்தை உணர்ந்தவர்களல்லவா?

ஆம்! அவர் எதை எதிர்பார்த்து வீட்டை நோக்கி ஓடினாரோ, அது அப்போது நடந்து கொண்டிருந்தது. அபூஹுரைரா (ரலி) அவர்களின் தாயார் குளித்து முடித்து, புதிய ஆடை அணிந்து, பர்தா அமைப்பைப் பேணி வாசலின் கதவைத் திறந்து தமது மகனார் அபூஹுரைரா (ரலி) அவர்களின் முகத்தை மலர்ச்சியோடு நோக்கியவாறுகலிமா ஷஹாதாகூறினார்கள்.

போன அதே வேகத்தோடு, இம்முறை ஆனந்தக் கண்ணீரோடு தமது தாயாரையும் கையோடு அழைத்து வந்து அண்ணலாரின் சபையிலே நின்று கொண்டுஅல்லாஹ்வின் தூதரே! இதோ உங்கள் பிரார்த்தனையின் பலனை என்னோடு அழைத்து வந்திருக்கின்றேன்! இதோ என் தாயார் முஸ்லிமாகி விட்டார்கள்என ஆனந்தத்தில் ஆர்ப்பரித்துக் கூறினார் அபூஹுரைரா (ரலி) அவர்கள்.

அல்லாஹ்வின் தூதரும் அதை ஆமோதிக்கும் முகமாக புன்னகையோடு மிகவும் நன்று என்று கூறி தலையசைத்தார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! இன்னொரு துஆவையும் நீங்கள் எங்களுக்காக செய்ய வேண்டும்!” என்று வேண்டினார் அபூஹுரைரா (ரலி) அவர்கள்.

உம்! என்ன துஆ செய்ய வேண்டும் தோழரே! கூறுங்கள் என்றார்கள் நபி {ஸல்} அவர்கள்.

அதற்கு, அபூஹுரைரா (ரலி) அவர்கள்அல்லாஹ்வின் தூதரே! என்னையும், என் தாயரையும் அல்லாஹ்வின் அடியார்களான முஃமின்கள் நேசிக்க வேண்டும். நானும் என் தாயாரும் அல்லாஹ்வின் அடியார்களான முஃமின்களை நேசிக்க வேண்டும்இதற்காக அல்லாஹ்விடம் நீங்கள் துஆ செய்யுங்கள்என்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் விரும்பியவாறே துஆ செய்தார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்அதன் பிறகு என்னையும், என் தாயாரையும் முஃமின்கள் அனைவரும் நேசித்தார்கள். புதிதாய் பார்க்கிற, பழகுகின்ற முஃமின்களும் எங்கள் இருவரையும் நேசிப்பதை நான் உணர்ந்தேன்.”

( நூல்: ஃபளாயிலுஸ் ஸஹாபா லின் நஸாயீ, உஸ்துல்ஃகாபா, அல் இஸ்தீஆப், தபகாத்துல் குப்ரா லி இப்னு ஸஅத் )

அபூஹுரைராவின் தாயார் உமைமா பிந்த் ஸஃபீஹ் (ரலி) அவர்கள் தமது மகனை அடிக்கிற போது சற்றேறக்குறைய அபூஹுரைரா (ரலி) அவர்களுக்கு வயது 33 –லிருந்து 36 –க்குள் இருக்கும்.

எப்படி இருந்த தாயை உலக முஃமின்கள் எல்லாம் நேசிக்கிற ஒரு உன்னத நிலைக்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள் கொண்டு வந்தார்கள்.

أخرج مسلم والترمذي عن ابن عمر رضي الله عنهما أنه كان إذا خرج إلى مكة أخذ معه حماراً له يتروح عليه إذا مل ركوب الراحلة، وعمامة يشد بها رأسه، فبينما هو يوماً على ذلك الحمار مر به أعرابي فقال له ابن عمر: ألست ابن فلان؟ قال: بلى فنزل ابن عمر عن حماره وأعطاه للرجل قائلا: اركب هذا ثم ناوله العمامة قائلاً: واشدد بهذه رأسك. ثم ودعه وانصرف فقال له بعض أصحابه: غفر الله لك، أعطيت هذا الأعرابي حماراً كنت تتروح عليه، وعمامة كنت تشد بها رأسك؟ فقال ابن عمر: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: "إن من أبر البر صلة الرجل أهل ود أبيه بعد أن يولي –أي يموت- وإن أبا هذا كان وداً لوالدي عمر رضي الله عنه.

மக்காவிற்கு செல்கின்ற வழியில் ஒரு கிராம வாசி இப்னு உமர் (ரலி) அவர்களைச் சந்தித்தார். இப்னு உமர் (ரலி) அவர்கள் அவருக்கு ஸலாம் கூறி அவரை தன்னுடைய கழுதையில் ஏற்றினார்கள்.

தன்னுடைய தலையில் இருந்த தலைப்பாகையை அவருக்கு வழங்கினார்கள். (இதைக்கண்ட நாங்கள்) அல்லாஹ் உங்களை நன்றாக்குவானாக. இவர்கள் கிராமவாசிகள் கொஞ்சத்தையும் கூட பொருந்திக்கொள்வார்களே (அவர்களிடம் ஏன் நீங்கள் இவ்வாறு மிகுதியாக நடந்து கொள்ளவேண்டும்) என்று கேட்டோம்.

அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் '' இவருடைய தந்தை (என்னுடைய தந்தையாகிய) உமர் (ரலி) அவர்களுக்கு நண்பராக இருந்தார். (தந்தைக்கு செய்யும்) பணிவிடைகளிலேயே மிகச் சிறந்தது மகன் தன் தந்தையின் நண்பரின் குடும்பத்தார்களை இணைத்து வாழ்வதுதான் என்று நபியவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்'' என்று கூறினார்கள். ( அறிவிப்பவர் : இப்னு தீனார், நூல் : முஸ்லிம் (4629) )

عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ نِمْتُ فَرَأَيْتُنِي فِي الْجَنَّةِ فَسَمِعْتُ صَوْتَ قَارِئٍ يَقْرَأُ فَقُلْتُ مَنْ هَذَا فَقَالُوا هَذَا حَارِثَةُ بْنُ النُّعْمَانِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ كَذَلِكَ الْبِرُّ كَذَلِكَ الْبِرُّ وَكَانَ أَبَرَّ النَّاسِ بِأُمِّهِ

“தூங்கிக் கொண்டிருந்த நான் -கனவில்- என்னை சொர்க்கத்தில் இருப்பதாகக் கண்டேன். அங்கு ஒருவர் ஓதிக் கொண்டிருக்கும் சப்தத்தை செவியுற்ற நான், இவர் யார்? என்று கேட்டேன். அதற்கவர்கள், ஹாரிஸா இப்னு நுஃமான் என்று பதிலளித்தார்கள்! என்று கூறிய நபி (ஸல்) அவர்கள், இது போன்றுதான் நல்லறங்களுக்குக் கூலி கிடைக்கும்! இது போன்றுதான் நல்லறங்களுக்குக் கூலி கிடைக்கும்! தாயிக்குப் பணிவிடை செய்யும் மனிதர்களிலேயே அவர் மிகச் சிறந்த பணிவிடையாளராகத் திகழ்ந்தார் என்றார்கள். (அறிவிப்பவர் : ஆயிஷா -ரலி, அஹ்மத் : 24172)

வல்ல ரஹ்மான் நம் அனைவர்களையும் பெற்றோர்களை நேசிக்கக் கூடியவர்களாக, பணிவிடை செய்து அவர்களின் திருப்தியை பெற்றவர்களாக ஆக்குவானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!!

இன்ஷா அல்லாஹ்… உறவுகள்! உரிமைகளும்… கடமைகளும்… பாகம் 2 அடுத்தவாரமும் இடம் பெறும்…

3 comments:

  1. மாஷா அல்லாஹ் அருமையான பதிவு

    ReplyDelete
  2. அல்ஹம்துலில்லாஹ்

    ReplyDelete