Thursday 21 March 2019

கவலையளிக்கும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் ஆளுமை!!!


கவலையளிக்கும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் ஆளுமை!!!




மத்தியில் தற்போது நடைபெற்றுவரும் பா.ஜ.க ஆட்சி, வரும் ஜூன் மாதம் 3-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.

இந்நிலையில், 17-வது மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பும் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கும் தேர்தல், மே 19-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது.  தமிழகத்தில் 18 –ஆம் தேதி தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான  கட்சிகள் தங்களின் கூட்டணிகளை அறிவித்துவிட்டன. தற்போது அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. தொகுதிகள் ஒதுக்கீடு, வேட்பாளர்கள் தேர்வு, தேர்தல் அறிக்கை, பிரசாரம் என இந்தியா முழுவதும் மிகவும் பரபரப்பாக இருக்கிறது என்றே கூறவேண்டும்.

இந்நிலையில், வரும் 17-வது மக்களவைத் தேர்தல்தான் புவியிலேயே மிகப்பெரிய தேர்தல் (எண்ணிக்கையின் அடிப்படையில்) எனக் கூறப்படுகிறது.

உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. 2017-ம் ஆண்டு புள்ளிவிவரப்படி, இங்கு 133.97 கோடி மக்கள் வாழ்கின்றனர். இதன் அடிப்படையில், வரும் தேர்தலில்தான் அதிக மக்கள் ஓட்டுரிமை பெற்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தத் தேர்தலில், இந்தியா முழுவதும் 90 கோடி மக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்கு முன் நடைபெற்ற 2014-ம் ஆண்டு தேர்தலில், 85 கோடியே  50 லட்சம் பேர் வாக்களித்த நிலையில், தற்போது அவர்களில் 5 கோடியே  50 லட்சம் பேர் அதிகரித்துள்ளனர்.  

இந்தியாவில் முதல்முறையாகத் தேர்தல் நடத்தப்பட்டபோது,  17 கோடி மக்கள் மட்டுமே வாக்களித்தனர்.

இந்தியாவில், மொத்தம் ஒரு கோடியே ஐம்பது லட்சம் மக்கள், 18 முதல் 19 வயது பெற்றவர்களாக உள்ளனர்.

மூன்றில் இரண்டு பங்கு இந்தியர்கள், 35 வயதுக்கும் கீழ் உள்ளனர். மேலும், 38,325 மூன்றாம் பாலினத்தவர்கள் வரவுள்ள தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த, சுமார் 10 லட்சம் வாக்குச்சாவடிகளில் 11 லட்சம் மின்னணு வாக்கு இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளன.

இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் விபரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் புதிய தரவு வெளியாகியுள்ளது. இதில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பதற்கு முன்னதாக மார்ச் 9-ம் தேதி வரையில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளும் அடங்கியுள்ளது.

மொத்தம் இந்தியாவில் இப்போது 2,293 அரசியல் கட்சிகள் உள்ளன. ஏழு அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் 59 அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள் இதில் அடங்கும்.

கடந்த ஜனவரியில் இருந்து மார்ச் 9-ம் தேதி வரையில் 149 கட்சிகள் பதிவாகியுள்ளது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, மிசோரம், சத்தீஷ்கார் மாநிலங்களில் கடந்த நவம்பர்-டிசம்பரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற போது 58 கட்சிகள் புதிய கட்சிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவையிலிருந்து புதிய தலைமுறை மக்கள் கட்சியும் புதிய கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

( நன்றி: விகடன்.காம் மார்ச் 11/2019, டெய்லி தந்தி.காம் மார்ச் 17/2019 )

அரசியல் குறித்து இஸ்லாம்...

அரசியல் என்ற நேரடியான வார்த்தை அல்-குர்ஆனிலும், ஸுன்னாவிலும் இடம் பெறாத போதும் ஆட்சி அதிகாரம் தொடர்பாகவும் அது வழங்கப்பட்டவர்கள் தொடர்பாகவும் அல்லாஹ் அவனது திருமறையில் பல இடங்களில் குறிப்பிடுகின்றான்.

நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சந்தியினருக்கு அல்லாஹ் வழங்கிய அதிகாரத்தை பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.

أَمْ يَحْسُدُونَ النَّاسَ عَلَى مَا آتَاهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ فَقَدْ آتَيْنَا آلَ إِبْرَاهِيمَ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَآتَيْنَاهُمْ مُلْكًا عَظِيمًا (54)

அல்லாஹ் தன் அருளினால் மனிதர்களுக்கு வழங்கியவற்றின்மீது இவர்கள் பொறாமை கொள்கின்றார்களா? இன்னும் நாம் நிச்சயமாக இப்றாஹீமின் சந்ததியினருக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்தோம்;. அத்துடன் மாபெரும் அரசாங்கத்தையும் அவர்களுக்குக் கொடுத்தோம்.              ( அல்குர்ஆன்: 4: 54 )

அவ்வாறே ஆட்சி அதிகாரம் வழங்கப்பட்ட நபி யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிரார்த்தனையை அல்லாஹ் நமக்கு ஞாபகப்படுத்துகின்றான்.

رَبِّ قَدْ آتَيْتَنِي مِنَ الْمُلْكِ وَعَلَّمْتَنِي مِنْ تَأْوِيلِ الْأَحَادِيثِ فَاطِرَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ أَنْتَ وَلِيِّي فِي الدُّنْيَا وَالْآخِرَةِ تَوَفَّنِي مُسْلِمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ (101)

என் இறைவனே! நிச்சயமாக நீ எனக்கு அரசாட்சியைத் தந்து, கனவுகளின் விளக்கங்களையும் எனக்கு கற்றுத்தந்தாய்; வானங்களையும் பூமியையும் படைத்தவனே! இம்மையிலும் மறுமையிலும் நீயே என் பாதுகாவலன்; முஸ்லீமாக (உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக இருக்கும் நிலையில்) என்னை நீ கைப்பறறிக் கொள்வாயாக! இன்னும் நல்லடியார் கூட்டத்தில் என்னைச் சேர்த்திடுவாயாக!’ (என்று அவர் பிரார்த்தித்தார்.)                                      ( அல்குர்ஆன்: 12: 101 )

அவ்வாறே, உலக மக்களில் அல்லாஹ்வின் அருட்கொடைகள் பலதை அனுபவித்த மக்களான பனீ இஸ்ராயீல்கள் அனுபவித்த அருட்கொடைகளில் ஒன்றாக ஆட்சி, அதிகாரத்தை அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَاقَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ فِيكُمْ أَنْبِيَاءَ وَجَعَلَكُمْ مُلُوكًا وَآتَاكُمْ مَا لَمْ يُؤْتِ أَحَدًا مِنَ الْعَالَمِينَ (20)

மூஸா தம் சமூகத்தாரிடம் கூறியதை நினைவு கூர்ந்து பாருங்கள்: “என்னுடைய சமூகத்தாரே! அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய அருட்கொடைகளை எண்ணிப்பாருங்கள்! அவன் உங்களிடையே நபிமார்களைத் தோற்றுவித்தான். உங்களை ஆட்சியாளர்களாகவும் ஆக்கினான். மேலும், உலக மக்களில் எவர்க்கும் வழங்காத அருட்கொடைகளையெல்லாம் வழங்கினான்”.        ( அல்குர்ஆன்: 5: 20 )

அது போன்றே நபி ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் உயரிய பிரார்த்தனை ஒன்றில் ஆட்சி, அதிகாரத்தை கேட்டதாக அல்லாஹ் குறிப்பிடுவான்.

قَالَ رَبِّ اغْفِرْ لِي وَهَبْ لِي مُلْكًا لَا يَنْبَغِي لِأَحَدٍ مِنْ بَعْدِي إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ (35)

இறைவா! என்னை நீ மன்னிப்பாயாக! எனக்குப் பின் எவருக்கும் கிடைக்க முடியாத ஓர் ஆட்சியதிகாரத்தை எனக்கு நீவழங்குவாயாக! திண்ணமாக, நீயே உண்மையான கொடையாளன்!” என்று பிரார்த்தித்தார்.          ( அல்குர்ஆன்: 38: 35 )

முஸ்லிம் சமூகத்திற்கு அரசியல், ஆட்சியதிகாரம் தேவையா?...

மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹிஜ்ரத் பயணத்தை துவங்கும் முன்பாக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தன்னிடம் கேட்குமாறு நபி {ஸல்} அவர்களை பின் வரும் பிரார்த்தனையை கேட்குமாறு கற்றுக் கொடுத்தான்.

وَقُلْ رَبِّ أَدْخِلْنِي مُدْخَلَ صِدْقٍ وَأَخْرِجْنِي مُخْرَجَ صِدْقٍ وَاجْعَلْ لِي مِنْ لَدُنْكَ سُلْطَانًا نَصِيرًا (80)
وقال قتادة فيها إن نبي الله صلى الله عليه وسلم، علم ألا طاقة له بهذا الأمر إلا بسلطان، فسأل سلطانًا نصيرًا لكتاب الله، ولحدود الله، ولفرائض الله، ولإقامة دين الله؛ فإن السلطان رحمة من الله جعله بين أظهر عباده، ولولا ذلك لأغار بعضهم على بعض، فأكل شديدهم ضعيفهم.

“மேலும், பிரார்த்தனை புரிவீராக! என் இறைவா! நீ என்னை எங்கு கொண்டு சென்றாலும் உண்மையுடன் கொண்டு செல்வாயாக! என்னை எங்கிருந்து வெளியேற்றினாலும் உண்மையுடன் வெளியேற்றுவாயாக! உன் தரப்பிலிருந்து எனக்குப் பக்கபலமாக ஓர் அதிகாரத்தை வழங்குவாயாக!”      ( அல்குர்ஆன்: 17: 80 )

இந்த உலகில் அல்லாஹ்வின் குர்ஆனை நிலை நிறுத்தவும், ஷரீஆவையும், தீனையும் ஸ்திரப்படுத்தவும் கண்டிப்பாக ஓர் அதிகாரம் தேவை என்பதை மாநபி {ஸல்} விளங்கி வைத்திருந்தார்கள். ஆகவே தான் அல்லாஹ்விடம் ஆட்சியதிகாரம் வேண்டும் என மாநபி {ஸல்} அவர்கள் பிரார்த்தித்தார்கள் என கதாதா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.                           ( நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர் )

இன்று உலகளாவிய அளவில் முஸ்லிம் சமூகத்திற்கு அரசியல், ஆட்சி, அதிகாரம் ஆகியவற்றின் மீதான தேவை அதிகம் இருப்பதாகவே தோன்றுகிறது.

சர்வதேச அரசியல் அதிகாரத்தின் தேவை..

·         முஸ்லிம் சமூகத்திற்கெதிரான சர்வதேச ஊடக பக்கச் சார்பு நிலையை சீர் செய்யும் தேவை இருக்கிறது.
·         முஸ்லிம் நாடுகளுக்குள்ளாக ஏற்படும் மோதல், பகை, போர் ஆகியவற்றை தடுத்த நிறுத்த வேண்டிய அவசியமும் உள்ளது.
·         சிறைக்கைதிகள், அகதிகள், போன்றவர்களை மீட்டெடுக்கும் அவசியமும் இருக்கிறது.
·         யூத, கிறிஸ்தவ, ஃபாசிஸ இதர எதிர் கொள்கையுடையவர்களிடம் இருந்து ஒட்டு மொத்த உம்மத்தையும் காக்க வேண்டிய பொறுப்பு உள்ளது.

தேசிய, மாநில அரசியல், அதிகாரத்தின் தேவை…

·         பாபர் மசூதி விவகாரம்.
·         பொதுசிவில் விவகாரம்.
·         மாட்டுக்கறி விவகாரம்.
·         முத்தலாக் மற்றும் சிவில் விவகாரம்.
·         திருமண பதிவுச்சட்ட விவகாரம்.
·         ஊடக பக்கச் சார்பு நிலை.
·         சிறைக்கைதிகள்.
·         ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்கபரிவாரங்களின் விரோதம்.
·         லவ் ஜிஹாத்.
·         அரசியல், அதிகாரம், வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு.

இன்னும் இது போன்ற இதர தேவைகள், பிரச்சனைகள் சரி செய்ய தேவையான அதிகாரம் என்பது இந்திய தேசத்தில் அரசியலின் ஊடாகவே பெற முடியும்.

கடந்த காலங்களில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் அரசியல் அதிகாரத்தின் மூலமாகவே இன்று சமூகத்தில் அந்தஸ்தோடும் அதிகாரத்தோடும் இருக்கிறார்கள்.

முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகளும்… ஆளுமைகளும்…

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் விவாத அரங்கில் கலந்து கொண்ட தமிழகத்தின் இஸ்லாமிய அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களின் தலைவர்களிடத்தில் அந்த நிகழ்ச்சியின் நெறியாளர் “முஸ்லிம் சமூகத்தின் உயர்வு தான் உங்களின் இலக்கு என்று அறிவிக்கும் நீங்கள் தனித்தனியாக இயங்குகின்றீர்கள். பரவாயில்லை, இது போன்ற முக்கியமான தேர்தல் நேரத்தில் ஒன்றிணைந்து ஏதாவது ஒரு மாநில கட்சியோடு கூட்டணி வைத்து குறிப்பிட்ட தொகுதிகளைப் பெற்று உங்களுக்குள் அவைகளைப் பங்கிட்டுக் கொள்ளலாமே?” என்றார்.

அதற்கான சரியான பதிலை அந்த விவாத அரங்கில் பங்கெடுத்த எந்த ஆளுமைகளும் தரவில்லை.

அந்த நெறியாளர் அடுத்து, “அப்படியானால், உங்களுடைய ஈகோவும், பதவி ஆசையும் தான் ஒன்றிணைய விடாமல் தடுக்கிறதா?” என்றும் கேட்டார், அதற்கும் சரியான பதிலை அந்த விவாத அரங்கில் பங்கெடுத்த எந்த ஆளுமைகளும் தரவில்லை.

அடுத்து தமிழ் இந்துவில் புதுமடம் ஜாபர் அவர்கள் எழுதிய முக்கியத்துவம் இழக்கிறதா முஸ்லிம் வாக்கு வங்கி? கட்டுரையில்..

“தமிழகத்தில் முஸ்லிம் சமூக 50 லட்சத்துக்கும் அதிகமான எண்ணிக்கையைக் கொண்டிருந்தாலும் கூட அரசியல் அரங்கில் ஆளுமை செலுத்தும் சக்தியை முஸ்லிம் சமூகம் இழந்திருப்பது பெரும் சோகம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த இரண்டு ஊடகவியளாளர்களும் எழுப்பிய கேள்விகளும், வேதனைகளும் எவ்வளவு பெரிய உண்மை!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக், எஸ்.டி.பி.ஐ, மனித நேய மக்கள் கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, இந்திய தேசிய லீக், தமிழ் தேசிய லீக் போன்ற அரசியல் கட்சிகள்.

தமுமுக, மமமுக, பாப்புலர் ஃப்ரண்ட் இந்தியா, இந்திய தவ்ஹீத் ஜமாத் போன்ற இயக்கங்களும் இன்னும் லெட்டர் பேட் அமைப்புகளும் உட்பட தமிழகத்தில் 54 –க்கும் மேற்பட்ட இயக்கங்கள் முஸ்லிம் சமூகத்தின் பிரதி நிதிகளாக இயங்கி வருகின்றார்கள்.

இவர்களால் இந்த முஸ்லிம் சமூகம் அவ்வப்போது சில நன்மைகளையும், பிரயோஜனங்களையும் அடைந்து வந்திருக்கிறது என்பதை மறுக்கவும் முடியாது.

எனினும், சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தலின் போது ஒருமித்து, ஒன்றிணைந்து முஸ்லிம் சமூகத்தின் ஒட்டுமொத்த குரலாக இயங்குவார்களா? என்ற நீண்ட எதிர்பார்ப்பில் இருக்கும் நிலையில் தற்போதைய 17 –ஆவது மக்களவை தேர்தலில் திமுக தலைமையில் அமைந்த கூட்டணிக்கு சிலரும், அமமுக தலைமையில் அமைந்த கூட்டணிக்கு சிலரும், அஇஅதிமுக தலைமையில் அமைந்த கூட்டணிக்கு சிலரும் ஆதரவு தெரிவித்து முஸ்லிம் சமூகத்தின் பெருவாரியான வாக்கு வங்கியை சிதறடிக்கும் பணியில், யாருக்கு வாக்களிப்பது என்கிற குழப்பமான சூழ்நிலையில் முஸ்லிம் சமூகத்தை தள்ளிவிட்டுள்ளனர்.

தலைமையின், ஆளுமையின் அடிப்படை பண்பு என்ன?

உலகில் எந்தக் கட்சிக்கும், எந்த தலைமைக்கும், எந்த இயக்கத்திற்கும், எந்த ஆளுமைக்கும், எந்த சமூகத்தின் பிரதிநிதிகளுக்கும் என்ன தகுதிகள் வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும்.

முஸ்லிம் சமூகத்தின் தலைமைக்கு, இயக்கத்திற்கு, ஆளுமைக்கு என்று சில தகுதிகள் இருக்கின்றன.

அதற்கென சில அடிப்படை பண்புகள் இருக்கின்றன. பண்பாடுகள், ஒழுங்குகள் இருக்கின்றன.

ஷூரா - கலந்தாலோசனை செய்வது தலைமைத்துவத்தின் அடிப்படை பண்புகளில் ஒன்றாகும்...

உம்மத்தின் இருப்பிற்கு அல்லது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்ற பொழுது, முஸ்லிம் சமூகத்திற்கு பிரச்சனைகள் ஏற்படுகிற பொழுது தலைமைத்துவ பொருப்பில் உள்ளவர்கள் முதலில் கையில் எடுக்க வேண்டியது ஷூரா – என்கிற கலந்தாலோசனை தான்.

இறைத்தூதர் {ஸல்} அவர்கள் கூட தனது தோழர்களை அரவணைத்து அவர்களை கலந்தாலோசித்து அவர்களது அறிவிற்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து முடிவுகளை எடுத்தார்கள் என்று வரலாற்றில் பல இடங்களில் பல நிகழ்வுகளின் மூலம் காணமுடிகின்றது.

فَمَا أُوتِيتُمْ مِنْ شَيْءٍ فَمَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا وَمَا عِنْدَ اللَّهِ خَيْرٌ وَأَبْقَى لِلَّذِينَ آمَنُوا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ (36) وَالَّذِينَ يَجْتَنِبُونَ كَبَائِرَ الْإِثْمِ وَالْفَوَاحِشَ وَإِذَا مَا غَضِبُوا هُمْ يَغْفِرُونَ (37) وَالَّذِينَ اسْتَجَابُوا لِرَبِّهِمْ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَمْرُهُمْ شُورَى بَيْنَهُمْ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ (38) وَالَّذِينَ إِذَا أَصَابَهُمُ الْبَغْيُ هُمْ يَنْتَصِرُونَ (39)

ஆகவே, உங்களுக்குக் கொடுக்கப் பட்டிருப்பதெல்லாம், இவ்வுலக வாழ்ககையின் (அற்ப) சுகங்களேயாகும்; ஈமான் கொண்டு, தங்கள் இறைவனையே முற்றிலும் நம்பியிருப்பவர்களுக்கு, அல்லாஹ்விடம் இருப்பது மிகவும் மேலானதும் நிலையானதுமாகும்.

அவர்கள் (எத்தகையொரென்றால்) பெரும் பாவங்களையும், மானக்கேடானவற்றையும், தவிர்த்துக் கொண்டு, தாம் கோபம் அடையும் பொழுதும் மன்னிப்பார்கள்.

இன்னும் தங்கள் இறைவன் கட்டளைகளை ஏற்று தொழுகையை (ஒழுங்குப்படி) நிலைநிறுத்துவார்கள் அன்றியும் தம் காரியங்களைத் தம்மிடையே கலந்தாலோசித்துக் கொள்வர்; மேலும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (தானமாகச்) செலவு செய்வார்கள்.

அன்றியும். அவர்களுக்கு அக்கிரமம் செய்யப்பட்டால் (அதற்கு எதிராக நீதியாகத் தக்க முறையில்) பழி தீர்ப்பார்கள்”.           ( அல்குர்ஆன்: 42: 36,37,38,39 )

فَبِمَا رَحْمَةٍ مِنَ اللَّهِ لِنْتَ لَهُمْ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانْفَضُّوا مِنْ حَوْلِكَ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ (159)

அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்;. (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்;. எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக. அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக.

மேலும், சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும், பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின்; மீதே பொறுப்பேற்படுத்துவீராக! நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்.                  ( அல்குர்ஆன்: 3: 159 )

وَإِذَا جَاءَهُمْ أَمْرٌ مِنَ الْأَمْنِ أَوِ الْخَوْفِ أَذَاعُوا بِهِ وَلَوْ رَدُّوهُ إِلَى الرَّسُولِ وَإِلَى أُولِي الْأَمْرِ مِنْهُمْ لَعَلِمَهُ الَّذِينَ يَسْتَنْبِطُونَهُ مِنْهُمْ وَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ لَاتَّبَعْتُمُ الشَّيْطَانَ إِلَّا قَلِيلًا (83)

மேலும் பீதியோ, பாதுகாப்பைப் பற்றிய செய்தியோ அவர்களுக்கு எட்டுமானால், உடனே அவர்கள் அதை பரப்பி விடுகிறார்கள்;. அவர்கள் அதை (அல்லாஹ்வின்) தூதரிடமோ, அல்லது அவர்களில் நின்றுமுள்ள அதிகாரிகளிடமோ தெரிவித்தால், அவர்களிலிருந்து அதை ஊகித்து அறியக்கூடியவர்கள், அதை நன்கு விசாரித்தறிந்து (தக்க ஏற்பாடுகளைச் செய்து) கொள்வார்கள். அல்லாஹ்வுடைய கிருபையும் அவனுடைய அருளும் உங்கள் மீதில்லாதிருந்தால், உங்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் ஷைத்தானையே பின்பற்றியிருப்பார்கள்.     ( அல்குர்ஆன்: 4: 83 )

17 –ஆவது மக்களவைத் தேர்தல் மிகவும் இந்திய தேசிய அளவில் முக்கியமானது. அதுவும் தமிழகத்தில் மிகவும் முக்கியமானது.

ஃபாஸிச பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது. பாபர் மசூதி, முத்தலாக், பொது சிவில் சட்டம், மாட்டுக்கறிக்கு கொலை போன்ற பல காரணங்கள் முன்னால் இருக்கும் போது முஸ்லிம் சமூகத்தின் தலைமைகள், ஆளுமைகள், பிரதிநிதிகள் என்று தங்களை அடையாளப்படுத்துபவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு ஷூரா கூட்டத்தையாவது நடத்தினார்களா?.

ஷூரா கூட்டத்தை நடத்தாமல், ஷூரா செய்ய வேண்டும் என்கிற அடிப்படை பண்புகளையே மதிக்காமல் இருக்கும் இவர்கள் எப்படி தங்களை முஸ்லிம் சமூகத்தின் ஆளுமைகளாக, பிரதிநிதிகளாக அடையாளப்படுத்துகின்றார்கள்.

அவரவர்களின் இயக்கங்கள், அமைப்புகளின் செயற்குழு, பொதுக்குழுவை கூட்டி யாருக்கு ஆதரவு? யாருடன் கூட்டணி? என்று ஆலோசிக்கின்றார்களே தவிர மொத்தமாக அமர்ந்து சமுதாயத்தின் பிரதிநிதிகளாக அவர்கள் நடந்து கொள்வதில்லை.

அப்படிப்பார்த்தால் முஸ்லிம் சமூகத்தின் எந்த இயக்கத்திற்கு பின்னாலும், கட்சியின் பின்னாலும், அமைப்பின் பின்னாலும் இருக்கிற உறுப்பினர்களின் எண்ணிக்கை அவ்வளவு பெரிய எண்ணிக்கையிலும் இல்லை. அவர்களின் வாக்குகளை மட்டுமே இவர்கள் நம்பியிருக்கவும் இல்லை.

இதிலும் தமிழக இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அமைப்புகளின் கூட்டமைப்பு என்ற பெயரில் ஓர் அமைப்பே செயல்படுகிறது.

 முதலாம் உலக மகா யுத்தம் நிறைவு பெற்ற பொழுது முஸ்லிம் உலகம் உதுமானிய கிலாபத் சாம்ராஜ்யத்தை இழந்தது, இரண்டாம் உலக மகாயுத்தம் நிறைவுறும் பொழுது முதலாவது கிப்லாவையையும் பாலஸ்தீன் பூமியையும் பறிகொடுத்து விட்டது, இன்று முஸ்லிம் சமூகத்தில் முடுக்கி விடப்பட்டுள்ள தலைமைத்துவ சர்ச்சைகளும் உள்வீட்டு அதிகார இழுபறிகளும், முரண்பாடுகளும் மூன்றாம் உலகப் பேரழிவின் அடையாளமாகவே காணப்படுகின்றன.

ஆளுமைகளும், தலைமைகளும் ஒன்று கூடி ஆலோசித்தால் முஸ்லிம் உம்மாவிற்கு ஏற்படும் நன்மை அளவிட முடியாதது…

ரோமப் பேரரசர் சீஸர் முஸ்லிம்களுக்கு நாம் பாடம் புகட்ட வேண்டும். அந்தப் பாடத்தை முஸ்லிம்களின் சந்ததியினர் எவரும் எளிதில் மறந்து விடக்கூடாது. எனும் சூளுரையோடு தகுதியும் ஆற்றலும் நிறைந்த பல தளபதிகளின் தலைமையில் சுமார் 4 லட்சம் போர் வீரர்களை அனுப்பி வைக்கிறார்.

ஃகலீஃபா அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலம், கொஞ்சம் கொஞ்சமாக அந்நிய மண்ணில் இஸ்லாம் பரவிக்கொண்டிருக்கின்றது.

ரோமை நோக்கி ஒரு படைப்பிரிவை அனுப்பி, ரோமர்களுக்கு சத்தியதீனின் அறிவை எத்திவைக்க வேண்டும் என ஒருமனதாக தீர்மானித்து, அதற்கான ஆயத்தப்பணிகளில் கலீஃபா அவர்கள் ஈடுபட்டிருந்தார்கள்.

ரோமை நோக்கி முஸ்லிம்கள் படையெடுத்து வரப்போகிறார்கள் எனும் செய்தியை அறிந்து கொண்ட சீஸர் தன் முக்கிய மந்திரிப் பிரதாணிகளிடம் ஆலோசனைக் கேட்டபோது தான், மேலே சொன்ன சூளுரையை அத்துணை மந்திரிகளும் முன் மொழிந்தனர்.

அதற்கு இசைந்த சீஸர் இப்போது 4 லட்சம் வீரர்களுடன் பெரும்படையை அனுப்பி வைத்தார். படை புறப்பட்டு யர்மூக் எனும் நதிக்கரையின் ஒரு பக்கத்திலே முகாமிட்டு இருந்தனர்.

ஃகலீஃபா அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு இந்த விஷயம் எத்திவைக்கப் பட்டது. உடனடியாக சுறுசுறுப்புடன் இயங்க ஆரம்பித்தார்.

ஈராக் மற்றும் சிரியா போன்ற பகுதிகளை வெற்றி கொண்டு திரும்பி மதீனா நோக்கி வந்து கொண்டிருந்த அபூ உபைதா அல் ஜர்ராஹ் (ரலி), முஆவியா இப்னு அபீ சுஃப்யான் (ரலி), யஸீத் இப்னு அபீ சுஃப்யான் (ரலி), அம்ர் இப்னு ஆஸ் (ரலி) ஆகியோர் தலைமையிலான படைப்பிரிவுக்கு கடிதம் மூலம் உடனடியாக ரோம் நோக்கிச் செல்லுமாறு ஆணை பிறப்பித்தார்கள்.



இறுதியாக யர்மூக் நதியின் இன்னொரு பக்கத்தில் ஒட்டு மொத்த இஸ்லாமியப் படையினரும் முகாமிட்டிருந்தனர்.

எதிரிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் எந்த வகையிலும் முஸ்லிம்படை வலுவானதாக இருக்கவில்லை.

நிலைமை ரொம்பவும் மோசமாக இருந்தது. ஆம்! மொத்தப்படையையும் சேர்த்து 46 ஆயிரம் வீரர்கள் மட்டுமே இருந்தனர்.

அத்துணை தளபதிகளும் உடனடியாக ஆலோசனை மன்றத்திற்குள் ஆஜராகுமாறு கட்டளையிட்டார் ”ஸைஃபுல்லாஹ்” காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள்.

ஆலோசனை மன்றம் இயங்க ஆரம்பித்ததும் ஒருவர் பின் ஒருவராக தங்களது ஆலோசனைகளை கூறினார்கள். ரொம்பக் கவனமாக கேட்டுக் கொண்டிருந்தார்கள் காலித் (ரலி) அவர்கள்.

தங்களுடைய ஆலோசனையின் முறைவரும் போது காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள் தோழர்களே! உங்களின் ஒவ்வொருவரின் கருத்துக்களும் மிகவும் பின்பற்றப்பட வேண்டியதே! ஆனால், நாம் இன்னும் மிக வேகமான ஒரு முடிவை எடுக்க வேண்டிய முக்கியமானச் சூழ்நிலையில் தள்ளப் பட்டிருக்கின்றோம்.

நமக்கு அவர்களை எதிர் கொள்ள எண்ணிக்கை ஒன்றும் பெரிய விஷயமல்ல. வலிமையுடன் கூடிய நல்ல செயல்திட்டங்கள் தான் இப்போது நமக்குத் தேவை.

நம்மில் ஒவ்வொரு தளபதியும் வெவ்வேறு வகையில் ஆற்றல் மிக்கவர்கள். ஆதலால் ஒவ்வொரு நாளும் நாம் ஒவ்வொரு தளபதியின் கீழ் போரிடுவோம். அத்துணை தளபதிகளுக்கும் வாய்ப்பும் கிடைக்கும்.

ஒவ்வொரு நாளும் புதிய புதிய திட்டங்களுடன் களத்தில் போராடுகிற போது, மிக விரைவில் எதிரிகளிடம் இருந்து வெற்றியை நம் வசமாக்கி விடலாம்.” என்று கூறினார்.

அத்துணை தளபதிகளும் காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களின் முடிவை ஆமோதித்தனர். இறுதியாக முதல் நாள் போரை காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களின் தலைமையிலேயே எதிர் கொள்வது எனவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

முதல் நாள் போர் துவங்க சில மணித்துளிகளே இருந்த போது படை வீரர்கள் முன் தோன்றிய காலித் (ரலி) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து பின்னர் என்னருமைத் தோழர்களே! இந்த நாள் அல்லாஹ் நம் வாழ்வில் வழங்கிய சிறப்புமிக்க நாள்!

 இன்றைய தினத்தில் நம் முரட்டுத்தனம், பாரம்பரிய குலப்பெருமைகள் ஆகியவகளுக்கு துளியளவு கூட இடமில்லை.

என்னருமைத்தோழர்களே! அல்லாஹ்வின் திருப்பொருத்தம் ஒன்றை முழு மூச்சாகக் கொண்டு போரிடுங்கள்!

இன்று நம் படைக்கு மிகப்பெரும் தளபதிகள் பலர் பொறுப்பேற்றுள்ளனர். ஒருவர்பின் ஒருவராக உங்களை வழி நடத்த உள்ளனர். அவர்கள் அனைவரும் நம்பிக்கைக்கு உரியவர்கள்.

உங்கள் தலைவர்களுக்கு கட்டுப்பட்டு நடக்க நீங்களும், நானும் உதவிடவும் நம்மை பாதுகாக்கவும் அல்லாஹ் ஒருவனே போதுமானவன். என்று வீர உரை நிகழ்த்தினார்கள்.

(நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}, பக்கம்:294,295,296.)

பின்னர் யர்மூக் யுத்தத்தின் முடிவு வரலாற்றுச் சிறப்பு மிக்கதாய் மாறிப்போனதை, முஸ்லிம்கள் அடைந்த இமாலய வெற்றியாய் பதிவு செய்யப்பட்டதை வரலாறு சான்றுரைத்துக் கொண்டிருக்கின்றது.

அவசியமான நேரத்தில் முன் மாதிரி ஆளுமை காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள் எடுத்த வேகமான முடிவும், அதனைக் கையாண்ட ஷூராவும்  4 லட்சம் போர் வீரர்களைக் கொண்ட வல்லரசு ரோம் ஆட்டம் கண்டது. யுத்த களத்தில் ரோமபுரி வீரர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

வெறும் 46 ஆயிரம் வீரர்கள் கொண்ட ஒரு சிறுபடை பென்னம் பெரும் படையை வீழ்த்தி வெற்றி வாகை சூடியதாக வரலாற்றில் தனக்கான வலுவான இடத்தையும், முஸ்லிம்கள் தவிர்க்க முடியாத சக்திகள் என உலகிற்கும் உணர்த்தியது.

ஆளுமைகள் பொறுப்பை உணர்ந்து நீதமாக நடக்க வேண்டும்...

மதீனாவுக்கெதிராக எதிரிகள் யாரேனும் தாக்குதல் தொடுக்க வந்தால் முஸ்லீம்களோடு ஒன்றிணைந்து போராடுவோம் என்று ஒப்பந்தம் செய்திருந்தார்கள் பனூகுறைழாக்கள் (யூதர்கள்).

இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களோடும், சன்மார்க்க இஸ்லாத்தோடும் யாரெல்லாம் பகைமை பாராட்டிக் கொண்டிருந்தார்களோ அத்தனை கூட்டத்தாரையும் ஒன்றிணைத்து முஸ்லீம்களுக்கெதிராக ஒரு பெரும் படையை குறைஷிகள் திரட்டிக் கொண்டு மதீனா நோக்கி வந்து கொண்டிருக்கிற முக்கியமான கட்டத்தில் பனூகுறைழாக்கள் அண்ணலாருக்குத் துரோகம் செய்தார்கள். முஸ்லீம்களுடன் நல்ல உறவுடன் இருக்கும் பொழுதே எதிரிகளுடன் கை கோர்த்துக் கொண்டார்கள்.அவர்களுக்கு ஆதரவு தருவதாக வாக்களித்தார்கள்.

தீனுல் இஸ்லாத்தை சத்திய நெறியாக ஏற்று பல்வேறு துன்பங்களை அனுபவித்த, ஏகத்துவத்தை இதயத்தில் ஏந்திய நபித்தோழர்களோடு எப்படி எதிர் கொள்வது எதிரிகளை? என்று  ஆலோசனை நடத்தினார்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்.
பாரசீகத்தைச் சார்ந்த தோழர் ஸல்மான் அல்ஃபார்ஸி (ரலி)யின் ஆலோசனையை ஏற்று மதீனாவைச் சுற்றிலும் அகழ் தோண்டினார்கள் முஸ்லீம்கள்.

சில முக்கிய இடங்களில் காவலுக்கும் நின்றார்கள். மதீனா முழுவதும் பாதுகாப்பு அரணை வலுப்படுத்தி எதிரிகளின் மூச்சுக்காற்று கூட புகாத அளவு முழுக்க தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள்.

யூதர்களின் சூழ்ச்சியும், குறைஷிகளின் தந்திரமும் அண்ணலாரின் அரணுக்கு முன்னால் அசைவற்று நின்றன. எதிர் பார்த்து வந்த எதுவும் நடைபெறாததால் ஏமாற்றத்துடனும், தோல்வி முகத்தோடும் மதீனவை ஆக்கிரமிக்க முடியாமல் பெரும் கவலையோடும் எதிரிகள் திரும்பி போய் விட்டார்கள்.

வஞ்சகர்கள் பனூ குறைழாக்களின் வஞ்சத்தை அண்ணலாரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.இவர்கள் மதீனாவில் குடியிருப்பது முஸ்லீம்களுக்கு எப்பொழுதும் ஆபத்துதான் எனக் கருதினார்கள்.

அடுத்தக் கட்ட நடவடிக்கையை அறிவித்தார்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்
பனூ குறைழாக்கள் வசித்த கோட்டையை முற்றுகையிட்டனர் முஸ்லீம்கள்.நீண்ட நாட்கள் நீடித்தது முற்றுகை.இறுதியில் ஒரு நிபந்தனையோடு வழிக்கு வந்தார்கள் பனூ குறைழாக்கள். நிபந்தனையைக் கேட்ட அண்ணலார் (ஸல்) சரி என ஆமோதித்தார்கள்.

தங்களுடைய இந்த விவகாரத்திற்கு தீர்ப்பு சொல்லும் நடுவராக அத் இப்னு முத் (ரலி) தான் இருப்பார் என்றார்கள் பனூ குறைழாக்கள்.

உலகமே அல்லாஹ்வின் தூதரிடம் தான் நீதிக்காக் தவமிருந்த காலம் அது.
நபியாக அனுப்பப்படும் முன்னரே மக்கத்து குறைஷிகளின் நடுவராக நீதிமானாக விளங்கியவர் தாஹா நபி (ஸல்).

ஹஜ்ருல் அஸ்வதை யார் நிறுவுவது எனும் பிரச்சனையில் நபி (ஸல்) அவர்களிடம் தஞ்சம் புகுந்தனர் குறைஷிகளின் தலைவர்கள்.
ஆனால்,
இங்கே, பனூ குறைழாக்கள் நபி (ஸல்) அவர்களின் பாசறையில் பயின்று வரும் ஒருவரை முன் மொழிந்து இவர் தான் நடுவர் அவரின் தீர்ப்பையே ஏற்போம் எனசூளுறைக்கின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அதை ஆமோதிக்கிறார்கள். ஒரு பெரும் அமைதி, நீண்ட மெளனம் அவ்ஸ் கோத்திரத்தின் தலைவர் அத் பின் முத் (ரலி) பனூ குறைழா கோத்திரமும் அவ்ஸ் கோத்திரமும் நல்ல உறவுடன் இருந்த காலம், வியாபரத் தொடர்பும் அவர்களை ஒன்றினைத்து வைத்துருந்தது. எனவே அத் (ரலி) அவர்களை நியமித்தால் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பளிப்பார் என்று யூதர்கள் பலமாக நம்பினார்கள். ஸஅத் (ரலி)ன் குடும்பமும் அவ்வாறே செய்ய வேண்டும் என வலியுறுத்தியது.

இந்த முற்றுகையின் போது அத் (ரலி) அங்கே இருக்கவில்லை.அகழ் தோண்டி மதீனாவை பாதுகாக்கும் போதுஎதிரிகளின் அம்பு காயப்படுத்திய ரணத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டு ஓய்வில் இருந்தார்.

நபித் தோழர் ஒருவர் முற்றுகையிட்ட இடத்திற்கு அழைத்து வந்தார் அத் (ரலி) அவர்களை.சபையெங்கும் நீண்ட அமைதி.பெரும் மெளனம், அல்லாஹ்வின் விஷயத்தில் அநீதி இழைத்துவிடக் கூடாது என்ற எண்ணம் மட்டுமே அத் (ரலி) அவர்களின் சிந்தனையில் ஓடிக்கொண்டிருந்தது.

மெளனத்தை கலைத்தார்... நீண்ட அமைதிக்கு முற்றுப்புள்ளி வைத்தார்...

ஆம்! அவர் அளித்த தீர்ப்பு தன் கோத்திரத்தாரின் நண்பர்களான பனூ குறைழாவுக்கு எதிராக இருந்தது - அதாவது ஸஅத்(ரலி), “இவர்களில் போரிடும் வலிமையுடையவர்கள் கொல்லப்படவேண்டும் என்றும், இவர்களுடைய பெண்களும் குழந்தைகளும் கைது செய்யப்படவேண்டும் என்றும் நான் இவர்களிடையே தீர்ப்பளிக்கிறேன்' என்று கூறினார்கள்.

தன் முன் கொண்டு வரப்பட்ட முக்கியமான இந்த விவகாரத்தில் அல்லாஹ்வின் விஷயத்தில் அநீதி இழைத்துவிடக் கூடாது என தீர்மானம் எடுத்து தீர்ப்பு கூறினார்கள் ஸஅத் (ரலி)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸஃதை (ரலி) நோக்கி மகிழ்ச்சி பொங்க கூறினார்கள்
 ‏ لقد حكمت فيهم بحكم الله من فوق سبع سموات ..

முஆதே! ஏழு வானங்களுக்கு மேலுள்ள (அல்லாஹ்) வனின் தீர்ப்பைக் கொண்டு அவர்கள் விஷயத்தில் நீர் தீர்ப்பளித்தீர்என்று.

ஒரு புறம் குடும்பத்தினரின் ஆசை! ஒருபுறம் வர்த்தக நண்பர்களின் விருப்பம்!
மறுபுறம் மாண்பாளர் முஹ்ஹமத் (ஸல்) அவர்களும் சத்திய மார்க்கம் இஸ்லாமும்.... முஸ்லிம் உம்மத்தும்..

அவர் நீதியை தேர்ந்தெடுத்தார்! நேர்மையை கடைபிடித்தார் அவரின் நேர்மையை உரசிப்பார்க்க வந்த சோதனையை நீதியால் சோபனமாக்கினார்! தலைத்துவ பண்புக்கே உரிய முறையில் அவர் நடந்து கொண்டார்.

யார் இந்த ஸஅத் இப்னு முஆத் (ரலி) அவர்கள்?..

மதீனத்து அன்சாரிகளில் முதல் இஸ்லாமிய குடும்பம் இவருடையது. அவ்ஸ் கோத்திரம் அப்துல் அஷ்ஹல் குடும்பம் தமது கோத்திரத்திலேயே இஸ்லாத்திற்காக அனைத்திலும் முன்னிலையில் நிற்பவர் ஸஅத் இப்னு முஆத் [ரலி] அவர்கள் மதீனாவில் அவ்ஸ் கோத்திரத்தாரின் தலைவராக இருந்தார்கள்.

இவரே ஸய்யிதில் அன்ஸார் - அன்ஸாரிகளின் தலைவர் என அண்ணல் நபி (ஸல்) அவர்களால் அன்பாக அழைக்கப்பட்டவர்கள்.

முஸ்லிம் சமூகத்தின் அத்துனை தலைவர்களிடமும் ஒருமித்த கருத்தும், உடன்பாடும் நிலவ வேண்டும்…

ஹுனைன் யுத்தம் மக்கா வெற்றியை ஜீரணித்துக் கொள்ள முடியாமல் புளுங்கிக்கொண்டிருந்த ஹவாஸின் மற்றும் ஸகீஃப் கோத்திரத்தார்கள் முன்னிலை வகிக்க இன்னும் சிலரால் தொடுக்கப்பட்ட யுத்தமாகும்.

இறுதியில், நபிகளாரின் தலைமையில் சென்ற முஸ்லிம்கள் மாபெரும் வெற்றிவாகை சூடினார்கள்.

ஸகீஃப் கோத்திரத்தார்களில் 70 பேர் கொல்லப்பட்டனர். ஹவாஸின் கோத்திரத்தார்களில் பெருமளவு ஆண்கள் மற்றும் பெண்கள் சிறுவர்கள் என ஏராளமானோர் கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.

ஹவாஸின் கோத்திரத்தார்களின் மிகப்பெரிய அளவிலான செல்வங்கள் ஃகனீமத்தாக கிடைத்தன.

இந்நிலையில், ஜுஹைர் இப்னு ஸுர்த் என்பவரின் தலைமையில் 14 நபர்கள் அடங்கிய ஹவாஸின் குழு ஒன்று இஸ்லாமை ஏற்று நபி {ஸல்} அவர்கள் ஜிஇர்ரானா எனும் இடத்தில் இருக்கும் போது வந்தனர்.

அந்தக் குழுவில் நபி {ஸல்} நபி {ஸல்} அவர்களுடைய பால்குடி தந்தையின் சகோதரர் அபூ ஃபுர்கானும் இருந்தார்.

நபிகளாரிடம் அவர்கள் பைஅத் செய்த பின்னர் அல்லாஹ்வின் தூதரே! உங்களிடம் கைதிகளாக பிடிபட்டவர்களில் எங்களின் தாய்மார்களும், சகோதரிகளும், மாமிமார்களும், தாயின் சகோதரிகளும் இருக்கின்றனர்.

அவர்களுக்கு ஏதாவது தீங்கு ஏற்படுமேயானால் அது எங்களின் சமுதாயத்திற்கே ஏற்பட்ட கேவலமாகும்.

ஆகவே, எங்களின் போர்க் கைதிகளையும், செல்வங்களையும் எங்களிடம் திருப்பித் தந்து விடுங்கள்” என்றார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் சுற்றியிருந்த நபித்தோழர்களை சுட்டிக்காட்டி என்னுடன் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இவர்களும் (இந்தப் போர் வீரர்களும்) இருக்கின்றனர்.

எனவே, நான் என் தனிப்பட்ட முடிவை அறிவிக்க முடியாது. ஆகவே, ழுஹர் தொழுகைக்குப் பின்னர் எங்களிடம் வாருங்கள். வந்து, சபையில் எழுந்து நின்று நாங்கள் அல்லாஹ்வின் தூதருடைய பரிந்துரையால் முஃமின்களிடமும், முஃமின்களின் பரிந்துரையால் அல்லாஹ்வின் தூதரிடமும் எங்கள் கைதிகளை திரும்ப கொடுக்கும்படி கோருகின்றோம்” என்று கூறுங்கள்” என கூறி அனுப்பி வைத்தார்கள்.

ஹவாஸின் குழுவினர் ழுஹர் தொழுகைக்குப் பின்னர் வந்து நபிகளார் கூறிய படியே சபையில் எழுந்து கூறினார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் முஸ்லிம்களிடையே எழுந்து நின்று, அல்லாஹ்வை போற்றிப் புகழ்ந்து விட்டு, அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்த பின்பு கூறுகின்றேன்: உங்களுடைய இந்தச் சகோதரர்கள் நம்மிடம் மனம் திருந்தியவர்களாக வந்துள்ளனர்.

இவர்களில் (நம்மிடம்) போர்க்கைதிகளாக இருப்பவர்களை இவர்களிடமே திருப்பிக் கொடுத்து விடுவதை நான் சிறந்த்தாகக் கருதுகின்றேன். உங்களில் எவர் மனப்பூர்வமாக இதற்குச் சம்மதிக்கின்றார்களோ அவர் திருப்பித் தந்து விடட்டும்.

 அல்லாஹ் எதிர் காலத்தில் முதலாவதாக தரவிருக்கின்ற (வெற்றி கொள்ளப்படும் நாட்டின்) செல்வங்களிலிருந்து நாம் தருகின்ற வரை அவர்களைத் தம்மிடமே வைத்திருக்க எவர் விரும்புகின்றாரோ அவர் அவ்வாறே வைத்துக் கொள்ளட்டும்” என்று கூறினார்கள்.

பின்பு, ”எனக்கும் அப்துல் முத்தலிப் குடும்பத்தாருக்கும் சொந்தமான கைதிகளை நான் அவர்களிடமே திருப்பித் தந்து விடுகின்றேன்” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

இதனைக் கேட்ட அன்ஸாரிகளும், முஹாஜிர்களும் அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்குச் சொந்தமானது உங்களுக்கும் சொந்தமானது தான்! நாங்களும் இதற்கு உடன் படுகிறோம்” என்றார்கள்.

ஆனால், கூட்டத்திலிருந்த அக்ரஃ இப்னு ஹாபிஸ் (ரலி) அவர்கள் நானும், பனூதமீம் கிளையாரும் இதை ஏற்றுக் கொள்ள மாட்டோம்” என்றார்கள். உயய்னா இப்னு ஹிஸ்ன் (ரலி) அவர்கள் நானும் ஃபஸாரா கிளையாரும் இதை ஏற்றுக் கொள்ள மாட்டோம்” என்றார்கள்.

இது போன்றே அப்பாஸ் இப்னு மிர்தாஸ் (ரலி) அவர்கள் நானும் பனூ ஸுலைம் கிளையாரும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்” என்றார்கள். அப்போது, பனூ ஸுலைம் கிளையார்கள் இடைமறித்து அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்களுக்குரியதை தந்து விடுகிறோம்” என்றனர்.

மீண்டும் அண்ணலார் {ஸல்} அவர்கள் மக்கள் முன் எழுந்து நின்று இவர்கள் இஸ்லாத்தை ஏற்று நம்மிடம் வந்திருக்கின்றார்கள். இவர்களின் வருகையை எதிர்பார்த்துத்தான் கனீமா பங்கீட்டை தாமதம் செய்தேன்.

நான் இவர்களிடம் பொருள் வேண்டுமா? அல்லது கைதிகள் வேண்டுமா? என்று கேட்டேன். அதற்கவர்கள் எங்களின் குடும்பம் தான் வேண்டும்” என்று கூறி விட்டனர். அதற்கு நிகராக அவர்கள் எதையும் கருதவில்லை.

எனவே, யார் கைதிகளை எவ்வித பகரமும் இன்றி விடுவிக்கின்றார்களோ அவர் இனிதே செய்திடட்டும். அல்லது பகரம் பெற விரும்பினால், அதற்குரிய பகரத்தைப் பிற்காலத்தில் அல்லாஹ் நமக்கு வழங்கும் கனீமாவிலிருந்து அவருடைய பங்கிற்கு பகரமாக ஆறு பங்குகள் வழங்கப்படும்” என்று கூறினார்கள்.

இதனைக் கேட்டுக் கொண்டிருந்த நபித்தோழர்கள் அனைவரும் ஒரு மனதாக அல்லாஹ்வின் தூதரே! எந்தப்பகரமும் இல்லாமல் நாங்கள் இந்தக் கைதிகளை விடுவித்திட முன் வருகின்றோம்” என்று கூறினார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் உங்களில் முழுமையான திருப்தியுடன் செய்பவர் யார்? திருப்தியின்றி செய்பவர் யார்? என்பது எனக்குத் தெரியாது. ஆகவே, நீங்கள் சென்று ஆலோசித்து உங்கள் தலைவர்களிடம் உங்கள் முடிவை தெரிவித்து விடுங்கள்.

உங்களின் தலைவர்கள் வந்து என்னிடம் உங்களின் முடிவை தெரிவிக்கட்டும்!” என்று கூறி அமர்ந்தார்கள்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் தலைவர்கள் வந்து மக்கள் மனப்பூர்வமாக சம்மதித்து விட்டதாகத் தெரிவித்தார்கள்.

(நூல்: புகாரி, பாடம், பாபு கவ்லில்லாஹி வயவ்ம ஹுனைனின்.. தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம், பக்கம்:241,242.  ரஹீக் அரபி, பாடம், குதூமு ஹவாஸின்...)

கைதிகளை விடுவிக்கும் விவகாரத்தில் தங்களின் முடிவைக் கூட ஒரு அபிப்பிராயமாகக் கூறிய அண்ணலார், அதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என திணிக்கவில்லை.

மேலும், சிலர் மாற்றுக் கருத்து கூறிய போதும் ஆத்திரப்படாமல் நிலைமைகளை விளக்கிக் கூறினார்கள். இதன் பிறகு அந்தக் கருத்துக்கு மக்கள் இசைந்து கைதிகளை விடுவிக்க முன் வந்த போது இது தான் தருணம் உடனடியாக செயல் படுத்தி விடுவோம் என்று கருதாமல் நீங்கள் திரும்பிச் சென்று உங்களின் கருத்துக்களை உங்களின் தலைவர்களிடம் தெரிவியுங்கள்” என்று கூறியது தான் நபிகளாரின் பன்முகப் பார்வையை பறைசாற்றுகிறது.

இறுதியில், அது ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் வலுப்படுத்துவதாய் அமைந்ததை வரலாறு சொல்லிக் கொண்டிருக்கின்றது.

நடந்தது நடந்து முடிந்து விட்டது. இன்ஷா அல்லாஹ் எதிர்வருகிற காலங்களிலாவது இந்த உம்மத்தின் உயர்வு கருதி ஒன்றிணைந்து ஓரணியில் இந்த உம்மத்தை வழி நடத்துங்கள்!

யாஅல்லாஹ்! எங்களின் தலைவர்களை, ஆளுமைகளை, பிரநிதிகளை ஒன்றிணைப்பாயாக!

இந்திய தேசத்திலும், சர்வதேச அளவிலும் முஸ்லிம் உம்மத்தின் தலைமைத்துவத்தை வலுப்படுத்துவாயாக!

இஸ்லாத்திற்கும், முஸ்லிம் உம்மாவிற்கும் இந்தியாவிலும், உலகளாவிய அளவிலும் வளமான எதிர்காலத்தை வழங்குவாயாக!!

ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

2 comments:

  1. Alhamdulillah...காலத்திற்க்கேற்ப அருமையான பதிவு..

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு உஸ்தாத். தங்களது இந்த பதிவை படிக்கும் போது பல்வேறு கிதாப்களை ஆராய்ந்து மிக மிக நுணுக்கமான விஷயங்களை தற்போதைய முஸ்லிம் சமூக அவல நிலையை அகற்ற விரும்பி கவலையோடு வரலாற்று குறிப்புகளை வழங்கியுள்ளீர்கள்.
    இந்த வார ஜும்ஆ வில் தங்களது குறிப்புகளை வலியுறுத்தியே பேசப்போகிறேன் جزاكم الله خير الجزاء يا استاذ

    ReplyDelete