Thursday 27 June 2019

அல்லாஹ்வின் கவனத்தை ஈர்ப்போம்!!!


அல்லாஹ்வின் கவனத்தை ஈர்ப்போம்!!!



உலகில் யார் யாரின் கவனத்தை எல்லாமோ நம் பக்கம் திருப்ப நாம் மிகவும் சிரமப்படுகின்றோம். முயற்சி செய்கின்றோம்.

அதற்காக எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கின்றோம். எதை இழக்க சொன்னாலும் இழந்து விட ஆயத்தமாகி விடுகின்றோம்.

ஊடகத்தின் கவனத்தை நம் பக்கம் திருப்ப, ஊராரின் கவனத்தை நம் பக்கம் திருப்ப, உறவுகளின் கவனத்தை நம் பக்கம் திருப்ப, ஏன் உலகத்தின் கவனத்தையே நம் பக்கம் திருப்ப இப்படி எத்தனையோ முயற்சிகள். சில போது தோற்கிறோம், சில போது ஜெயிக்கிறோம்.

உலகில் யாரின் கவனத்தை நாம் ஈர்த்தாலும் நிரந்தரமாக நம்மோடு அவர்கள் இருக்கப்போவதில்லை. அல்லது அந்த ஈர்த்தலின் மூலம் கிடைக்கும் எதுவும் நிரந்தரமாக நமக்கு கிடைக்கப் போவதும் இல்லை.

எனவே, நம்மைப் படைத்து பரிபாலிக்கிற இறைவனின் கவனத்தை ஈர்ப்போம். ஈடு இணையில்லா இன்பத்தை ஈருலகிலும் அனுபவிப்போம்.

அல்லாஹ் தன் அருள் மறையில் இப்படிச் சொல்வான்:

وَالَّذِينَ جَاهَدُوا فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا ۚ وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ

“மேலும், எவர்கள் நமக்காக பெரும் முயற்சி செய்கின்றார்களோ, அவர்களுக்கு நாம் நம்முடைய வழிகளைக் காண்பிப்போம். மேலும், திண்ணமாக, அல்லாஹ் நற்பணியாற்றுபவர்களுடன் இருக்கின்றான்”.                   ( அல்குர்ஆன்: 29: 69 )

இங்கே, சிலரின் முயற்சி அல்லாஹ்வின் கவனத்தை தம் பக்கம் திருப்புவதற்கு முயன்ற போது அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய வெகுமதிகளை வாழ்க்கை முழுவதிலும் வழங்கி வாழ்வாங்கு வாழச் செய்ததை கண்டு நாம் அதிசயித்துப் போவோம்.

வாருங்கள்! கொஞ்சம் வாசித்து விட்டு அல்லாஹ்வின் கவனத்தைப் பெற முயற்சி செய்வோம்!

அல்லாஹ்வின் கவனத்தைப் பெற்ற உபை இப்னு கஅப் ரலியல்லாஹு அன்ஹு...

قال له الرسول - صلى الله عليه وسلم - يوماً: “يا أبي بن كعب، إن الله أمرني أن أقرأ عليك (لم يكن الذين كفروا من أهل الكتاب) “البينة 1”، فقال أُبي في نشوة غامرة: يا رسول الله: بأبي أنت وأمي، الله سماني لك؟ فقال الرسول - صلى الله عليه وسلم: “نعم”، فجعل أُبي يبكي من شدة الفرح.

அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உபை இப்னு கஅப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வீட்டுக்கு வருகை தந்து,  அவர்களிடம், 'உங்களுக்குக் குர்ஆனை ஓதிக்காட்டுமாறு அல்லாஹ் எனக்குக் கட்டளையிட்டுள்ளான்' என்று கூறினார்கள்.

அதைக் கேட்டதும், ஆனந்தத்தில் திக்கு முக்காடிய உபை ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், 'அல்லாஹ் என் பெயரைத் தங்களிடம் குறிப்பிட்டானா?' என்று கேட்டார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், '(ஆம்), அல்லாஹ் உம்முடைய பெயரைக் குறிப்பிட்டான்' என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) உபை ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், (ஆனந்த மேலீட்டால்) அழலானார்கள்.

                                                            ( நூல்: புகாரி )

அல்லாஹ்வின் இந்த கவனத்தை பெறுவதற்குண்டான உரிய தகுதிகள் அவருக்கு அமைந்திருந்தன என்பதற்குச் சில நிகழ்வுகள் சாட்சியாக இதோ!

فقد خصه الرسول - صلى الله عليه وسلم - بالدعاء، حين سأله ذات يوم: “يا أبا المنذر أتدرى أي آية من كتاب الله معك أعظم؟”، فأجاب قائلاً: الله ورسوله أعلم. فأعاد النبي - صلى الله عليه وسلم - سؤاله: “يا أبا المنذر أتدرى أي آية من كتاب الله معك أعظم؟”، فأجاب أُبي: “الله لا إله إلا هو الحي القيوم”، فضرب النبي - صلى الله عليه وسلم - صدره بيده ودعا له بخير، وقال له:” ليهنك العلم أبا المنذر” أي هنيئاً لك العلم،

ஒருநாள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உபையிடம் ஓ அபூமுன்திர்! அல்லாஹ்வின் அருள்மறையில் எந்த வசனம் உயர்வானது?” என்று கேட்டார்கள்.

அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தான் அதை நன்கறிந்தவர்கள்என்று பதில் வந்தது.

மீண்டும் அதே கேள்வியைக் கேட்டார்கள் நபியவர்கள். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தான் அதை நன்கறிந்தவர்கள்என்ற பதில் மீண்டும் வந்தது.

மூன்றாவது முறையாக, மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உபையிடம் ஓ அபூமுன்திர்! அல்லாஹ்வின் அருள்மறையில் எந்த வசனம் உயர்வானது?” என்று கேட்டார்கள்.

அதற்கு, பணிவோடும், தயக்கத்தோடும் உபை இப்னு கஅப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்  வணங்குதற்குரியவன் அவனையன்றி வேறில்லை; அவனே அல்லாஹ்! அவன் என்றும் வாழ்பவன். என்றென்றும் நிலைத்திருப்பவன். (சிறு) கண்ணயர்வோ (ஆழ்ந்த) உறக்கமோ அவனை அணுகா. வானங்களிலுள்ளவையும் பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதியின்றி அவனிடம் பரிந்துரைக்க எவனால் இயலும்? படைப்பினங்களின் அகத்தையும் புறத்தையும் அவன் நன்கறிவான். அவனுடைய அனுமதியின்றி எவரும் அவனுடைய அறிவின் விளிம்பைக்கூட நெருங்க இயலாது. அவனுடைய அரசாட்சி, வானங்களிலும் பூமியிலும் விரிந்து பரந்து நிற்கின்றது. அவ்விரண்டையும் ஆள்வதும் காப்பதும் அவனுக்கு ஒரு பொருட்டன்று. அவன் மிக்குயர்ந்தவன்; கண்ணியமிக்கவன்" என்கிற அல் பகரா அத்தியாயத்தின் 255 -ஆம் வசனமான ஆயத்துல் குர்ஸீயை நபியவர்களிடம் பதிலாக கூறினார்கள் உபை ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.

அதைக்கேட்டதும் தான் தாமதம் நபியவர்களின் முகம் மகிழ்வால் பளிச்செனெ இலங்கியது. உபை அவர்களின் நெஞ்சைத் தமது வலக் கரத்தால் தட்டித் தந்த மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அபூமுன்திரே! உமக்குள்ள இந்த ஞானம் இறை உவப்பையும் மட்டில்லா நற்பலனையும் பெற்றுத்தரட்டும்என்று வாழ்த்தி துஆ செய்தார்கள்.

இந்த நிகழ்வின் பின்னர் உபை இப்னு கஅப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு உயர்வுக்கு மேல் உயர்வு தான்.
عن عبد الله بن عمرو مرفوعا
ஆம்! ஒரு முறை குர்ஆன் கற்றுக்கொள்ள வேண்டுமா? இந்த நால்வரிடம் செல்லுங்கள்என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

அவர்கள் பரிந்துரைத்த அந்த நால்வருள் ஒருவர் உபை இப்னு கஅப் ரலியல்லாஹு அன்ஹு. மற்ற மூவர், அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத். அபூஹுதைஃபாவினால் விடுவிக்கப்பட்ட அடிமை ஸாலிம், முஆத் பின் ஜபல் ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோர் ஆவார்கள்.

இஸ்லாத்தின் எல்லைகள் நாளுக்கு நாள் பரவி, விரவிக் கொண்டிருந்த காலகட்டம் அது. உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆட்சித்தலைவராக இருக்கும் தருணம் அது.

சிரியா, இராக் போன்ற பகுதிகளில் இஸ்லாமிய ஆட்சி பரவி அங்குள்ள மக்களுக்குக் கல்வி கற்பிக்க மார்க்க ஞானம் மிக்க தோழர்களை உமர் ரலியல்லாஹு அன்ஹு அனுப்பி வைத்தார்கள்.

ஆனால், தம் அருகாமையை விட்டு ஒருபோதும் உபை இப்னு கஅபு ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் விலகி விடக்க்கூடாது என்பதில் உறுதியாக இருந்த உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் உபை அவர்களை மதீனாவில் தங்கியிருக்குமாறு ஆணையிட்டார்கள்.

மூத்த ஸஹாபிகளில் பலரும் இஸ்லாமிய ஆட்சியில் பல்வேறு பொறுப்பில் ஆளுநர், அதிகாரி, நீதிபதி, தளபதி என அமர்த்தப்பட்ட போதும் உபை ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மதீனாவில் அமர்ந்து கொண்டு மக்களுக்கு குர்ஆனிய கல்வியை இரவு, பகலாக போதித்துக் கொண்டு இருக்க உமர் ரலியல்லாஹு அன்ஹு ஏற்பாடு செய்தார்கள்.
وكان عمر يسميه سيد المسلمين

எந்தளவுக்கு உபை இப்னு கஅப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மதித்தார்கள் என்றால் “முஸ்லிம்களின் தலைவர் என்று தான் உபை ரலியல்லாஹு அன்ஹு அவர்களை உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அழைப்பார்கள்.


وخطب عمر بن الخطاب رضي الله عنه الناس فقال: من أراد أن يسأل عن القرآن فليأت أبي بن كعب ومن أراد أن يسأل عن الحلال والحرام فليأت معاذ بن جبل ومن أراد أن يسأل عن المال فليأتني فإن الله تعالى جعلني خازنا. المستدرك للحاكم

மக்களே! யாரெல்லாம் குர்ஆனைப் பற்றி அறிய விரும்புகிறீர்களோ அவர்கள் உபை இப்னு கஅபிடம் செல்லவும். வாரிசுரிமை பற்றி அறிய ஸைது இப்னு தாபித்திடமும் சட்டதிட்டங்கள் பற்றி அறிய முஆத் பின் ஜபலிடமும் பணப் பரிமாற்றம் குறித்தவற்றை என்னிடமும் கேளுங்கள்என்று அறிவித்துள்ளார் உமர்.

ஒரு தடவை உமர் (ரலி) அவர்கள் உபை இப்னு கஅப் (ரலி) அவர்களிடம், ‘இறையச்சம்என்றால் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு பதிலளிக்கும் விதமாக உபை இப்னு கஅப் (ரலி), “நீங்கள் இருபுறமும் முட்கள் சூழ்ந்த பாதையில் சென்றுள்ளீர்களா?” என்று கேட்டார்கள்.

அதற்கு உமர் (ரலி), “ஆம். நான் சென்றுள்ளேன்என்றார்கள். உபை இப்னு கஅப்(ரலி), “அந்தப் பாதையில் எப்படிச் செல்வீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு உமர் (ரலி), “என் ஆடைகளை கெண்டைக்காலுக்கு மேலுயர்த்தி முட்களில் பட்டுவிடாதவாறு பேணுதலாகச் செல்வேன்என்றார்கள். அதற்கு உபை இப்னு கஅப் (ரலி), “அப்படித்தான் இறையச்சமும்என்றார்கள்.

ஒருமுறை உபை இப்னு கஅப் ஒரு வசனத்தை ஓதும்போது, அதைச் சரியாக நினைவில் வைத்திராத உமர் குறுக்கிட்டு, “நீர் தவறாகச் சொல்கின்றீர்என்றார்.
உடனே பதில் வந்தது. இல்லை. நீர்தான் தவறிழைக்கின்றீர்.

இதைக் கவனித்துக் கொண்டிருந்தார் அங்கிருந்த ஒரு மனிதர். அவருக்குப் பெரும் திகைப்பு. அமீருல் மூஃமினீனைப் பொய்யர் என்கின்றீரா?”
அமீருல் மூஃமினீன் மீது எனக்கு அளவற்ற மதிப்பும் மரியாதையும் வெகு நிச்சயமாக உண்டு.

அதற்காக அல்லாஹ்வின் அருள்மறையிலுள்ள வசனத்தை அவர் தவறாக நினைவில் வைத்திருந்தால் அதைச் சரியென்று நான் சொல்ல முடியாது.
உபை சரியாகச் சொன்னார்என்றார் உமர்.

மக்களது நலன் தான் மிக உயர்ந்தது என்ற உச்சபட்ச அக்கறையோடு, இறைவனின் சட்டங்கள், இறைத்தூதரின் வாழ்வியல் கோட்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆட்சி செலுத்திக் கொண்டிருந்த உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.

இதனடிப்படையில், கலீஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹு மதீனாவின் வீதிகளில் இரவு நேரங்களில் உலாச் செல்கிற பழக்கத்தை மேற்கொண்டிருந்த ஆரம்ப காலம் அது.

அப்போது, திடீரென இறை வசனம் ஒன்று அவரது நினைவிற்கு வந்தது.ஈமான் கொண்ட ஆண்களையும், ஈமான் கொண்ட பெண்களையும் அவர்கள் செய்யாதவற்றை (செய்ததாக)க் கூறி நோவினை செய்பவர்கள் ஒரு மாபெரும் அவதூறையும், வெளிப்படையான பாவத்தின் விளைவையும் தம்மீது சுமந்து கொள்கிறார்கள்என்கிற அல் அஹ்ஸாப் அத்தியாயத்தின் 58 ஆவது வசனம் அது.

ஆட்சிப் பொறுப்பிலும், தமது தனிப்பட்ட வாழ்வின் தமது ஒவ்வோர் அசைவிலும் இறை நியதிக்கு உட்பட்டு தான் பயணிக்கின்றோமா? என்கிற கவலை எப்போதும் உண்டு. அதனால் அந்த வசனம் அவரது நினைவிற்கு வந்ததும் ஆட்சி என்ற பெயரில் தாம் மக்களிடம் கடுமை காட்டுகிறோமோ, அநீதி இழைக்கிறோமோ என்று அவருக்கு பெரும் கவலை சூழ்ந்து கொண்டது. எனவே இந்த வசனத்திற்கு விளக்கம் பெற நினைத்த உமர் அவர்கள் நேரடியாக அணுகியது யாரைத் தெரியுமா?.

அபூமுன்திருடைய இல்லத்திற்கு விரைந்தார். அங்கே தமது வீட்டில் ஒரு திண்ணையின் மேடான ஒரு பகுதியில் அமர்ந்திருந்தார் அபூமுன்திர் அவர்கள்.

கலீஃபா உமரைக் கண்டதும் வரவேற்ற அவர்கள். தாம் அமர்ந்திருந்த மேட்டின் மீது அமருங்கள் அமீருல் மூஃமினீன்என்று உபசரித்தார்.

மேலே அமராமல் தரையில் அமர்ந்து கொண்ட கலீஃபா உமர் இப்னுல் கத்தாப். மேற்சொன்ன வசனத்தை ஓதி, “இந்த வசனம் குறிப்பிடும் நபர் நானோ என்று எனக்கு அச்சமேற்படுகிறது. நான் இறை நம்பிக்கையாளர்களுக்குத் தீங்கிழைக்கிறேனோ?” என்கிற கவலை என்னை சூழ்ந்து கொண்டுள்ளதுஎன்றார்கள்.

அபூமுன்திர் பதில் அளித்தார்:ஆட்சியாளராகிய நீர் மக்களின்மீது அக்கறை கொள்ளாமல் இருக்க முடியாது எனும்போது அவர்களது நலனுக்கான விதிகளையும் கட்டளைகளையும் விலக்கப்பட வேண்டிய செயல்களுக்கான தடைகளையும் ஆட்சியாளர் என்ற அடிப்படையில் ஏற்படுத்தத்தானே வேண்டும்.அவையெல்லாம் இறை நம்பிக்கையாளர்களுக்குச் செய்யப்படும் தீவினை அல்ல என்று விளக்கமளித்தார் உபை.

நீர் சொல்வது புரிகிறது. எனினும் அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவன்என்று விடைபெற்றார்கள் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.

அல்லாஹ்வை மகிழ்வித்தால்…
عندما هم الرسول
بالهجرة، علم صهيب به، وكان من المفروض أن يكون ثالث الرسول وأبي بكر، ولكن أعاقه الكافرون، فسبقه الرسول r وأبو بكر، وحين استطاع الانطلاق في الصحراء، أدركه قناصة قريش، فصاح فيهم: "يا معشر قريش، لقد علمتم أني من أرماكم رجل، وايم الله لا تصلون إلي حتى أرمي بكل سهم معي في كنانتي ثم أضربكم بسيفي، حتى لا يبقى في يدي منه شيء، فأقدموا إن شئتم، وإن شئتم دللتكم على مالي وتتركوني وشأني"..
فقبل المشركين المال وتركوه قائلين: أتيتنا صعلوكًا فقيرًا، فكثر مالك عندنا، وبلغت بيننا ما بلغت، والآن تنطلق بنفسك وبمالك. فدلهم على ماله وانطلق إلى المدينة، فأدرك الرسول r في قباء, ولم يكد يراه الرسول حتى ناداه متهللاً
"ربح البيع أبا يحيى.. ربح البيع أبا يحيى، فقال: يا رسول الله، ما سبقني إليك أحدٌ، وما أخبرك إلا جبريل.
فنزل فيه قوله تعالى: {وَمِنَ النَّاسِ مَنْ يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ} [البقرة: 207].

ஸுஹைப் இப்னு ஸினான் ரோமபுரியைச் சார்ந்தவர் சிறுவயதிலேயே மக்காவிற்கு வந்தவர். பின் நாளில் மக்காவில் அறியப்படுகிற பெரும் தனவந்தராக விளங்கியவர்.

ஆபரணங்களை அழகிய முறையில் வடிவமைக்கும் நுட்பம் நிறைந்த ஆசாரி. தொழில் ரீதியாக மிகவும் நேர்மையும், கைதேர்ந்த விற்பன்னராகவும் இருந்ததால் மிக விரைவிலேயே பெரும் புகழுக்கும், செல்வாக்கிற்கும் சொந்தக்காரராகி விட்டிருந்தார்.

இந்நிலையில், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மக்காவிலே தங்களின் ஏகத்துவ பிரச்சாரத்தை துவக்கியிருந்த ஆரம்ப காலகட்டம் அது.

அல்லாஹ் அவரின் இதயத்திலும் ஏகத்துவ விருட்சத்தை வேர்விட வைத்தான். ஆம், 31 வது நபராக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு, முந்தைய மேன்மக்களின் பட்டியலில் இடம் பெற்றுக் கொண்டார்கள்.

அதே நாளில் தான் அம்மார் இப்னு யாஸிர் அவர்களும் 32 வது நபராக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு, தம்மையும் அந்த பட்டியலில் இணைத்துக் கொண்டார்கள்.

வழக்கம் போல ஆரம்ப கால நபித்தோழர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களும், துன்பங்களும் இவர்களுக்கு ஏற்பட்டது. என்றாலும் மக்கா குறைஷிகளுக்கு நிகரான செல்வந்தராக இருந்ததால் பாதிப்பு கொஞ்சம் குறைவு.

அல்லாஹ் ஹிஜ்ரத்தைக் கடமையாக்கியிருந்த தருணம் அது. தம்மோடு இருந்த எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக ஹிஜ்ரத் செய்து, மதீனா சென்று மாநபி {ஸல்} அவர்களோடு இணைந்து கொண்டார்கள்.

ஒருவாராக ஸுஹைப் இப்னு ஸினான் (ரலி) அவர்களும் ஹிஜ்ரத் செய்ய ஆயத்தமாகி, புறப்பட்டு மதீனாவிற்கு பயணமானார்கள்.

இந்த செய்தி பக்கா கேடிகளான மக்கா தலைவர்களுக்கு பேரிடியாய் இருந்தது.

ஸுஹைப் இப்னு ஸினான் (ரலி) அவர்களை வழி மறித்தனர். தொடர்ந்து செல்லவிடாமல் முன்னும் பின்னுமாக சுற்றிவளைத்தனர்.

மறித்து நின்ற மக்கா தலைவர்களை நோக்கி என்னையும், நான் எப்படிப்பட்ட அம்பு எறியும் வீரன் என்பதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள்.

என்னிடத்தில் ஒரு அம்பு மீதமிருக்கும் வரை உங்களால் என்னை ஒன்றும் செய்திட இயலாது.

அப்படியே என் அம்புகள் முழுவதும் தீர்ந்து போனாலும் எனக்கு கவலையில்லை. ஏனெனில், என்னிடம் வாள் இருக்கிறது. நான் எப்படிப்பட்ட வாள் வீரன் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

என் வாள் ஒடிந்து போகும் வரை உங்களால் என்னை ஒன்றும் செய்திட இயலாது.

அப்படியே வாள் ஒடிந்து போனாலும் எனக்கு கவலையில்லை. ஏனெனில், நான் மல்யுத்தம் புரிவதில் வல்லவன் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்” என்று ஆவேசமாக அதே நேரத்தில் மிகவும் நேர்த்தியாகக் கூறினார்கள்.

இதைக் கேட்ட மக்கா தலைவர்கள் ”அதுவல்ல விஷயம், நீர் ரோமைச் சார்ந்தவர். இங்கு வந்து பெரும் செல்வந்தராக மாறிவிட்டீர். உம்மிடம் இருக்கும் அவ்வளவு சொத்துக்களும் எங்கள் ஊரில் நீர் சம்பாதித்தது.

ஆனால், எங்களுக்கு எதிராக செயல்படும் முஹம்மதிற்கும், அவர்களின் தோழர்களுக்கும் அது பயன் படுவதை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்றனர்.

அவர்களின் நோக்கத்தை புரிந்து கொண்ட ஸுஹைப் இப்னு ஸினான் (ரலி) அவர்கள் ஓ! அப்படியா? என் செல்வத்தையும், என் பொற்குவியல்களை பாதுகாத்து வைத்திருக்கின்ற கருவூலத்தையும், நான் அது எங்கிருக்கின்றது என்று அறிவித்து கொடுத்து விட்டேன் என்றால், என்  உயிரை விட மேலாக மதிக்கும் இஸ்லாமிய மார்க்கத்திற்காக நான் மேற்கொண்டிருக்கின்ற இந்த பயணத்தை தடுக்க மாட்டீர்களல்லவா? என்று கேட்டார்கள்.

உடனே மக்கா தலைவர்கள் அது போதும் எங்களுக்கு, அதை நீர் சொல்லி விட்டீர் என்றால் தடை விலகும். உமது பயணம் இனிதே தொடரும்” என்றார்கள்.

உடனடியாக, சத்தியம் வாங்கி விட்டு அவர்களின் சொத்து எங்கெல்லாம் இருக்கின்றது என்றும், அவர்களின் கருவூலத்தின் சாவி எங்கு மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றது என்றும் ஸுஹைப் இப்னு ஸினான் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

பின்பு, மதீனா சென்று மாநபி {ஸல்} அவர்களை சந்திக்க விளைந்த போது, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் முகமலர்ச்சியோடு ரபிஹல் பைஅ அபா யஹ்யா அபூ யஹ்யா செய்து விட்டு வந்திருக்கின்ற வியாபாரம் மிகவும் லாபகரமானது” என்று கூறி வரவேற்றார்கள்.

அல்லாஹ்வும் தன் பங்கிற்கு மனிதர்களில் இப்படியும் ஒருவர் இருக்கின்றார்; அவர் அல்லாஹ்வின் உவப்பைத் தேடி, தன் வாழ்வையே அர்ப்பணித்து விடுகின்றார். இத்தகைய அடியார்களிடத்தில் அல்லாஹ் மிகவும் பரிவுடையோனாய் இருக்கின்றான்” (அல்குர்ஆன்:2:207) ஓர் இறைவசனத்தை இறக்கி வைத்து ஸுஹைப் இப்னு ஸினான் (ரலி) அவர்களை சந்தோஷப்படுத்தினான்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் பிரிதோர் சந்தர்ப்பத்தில் அல்லாஹ்வைக் கொண்டும் மறுமை நாளைக் கொண்டும் இறை நம்பிக்கை கொண்டிருப்போர், எப்படி ஒரு தந்தை தம் பிள்ளையை நேசிப்பாரோ அது போன்று ஸுஹைப் இப்னு ஸினான் (ரலி) அவர்களை நேசிக்கட்டும்!” என்று கூறினார்கள்.

(நூல்:இஸ்தீஆப், பாகம்:1, பக்கம்:393 396. தஃப்ஸீர் இப்னு கஸீர், பாகம்:1, பக்கம்:323,324. ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}, பக்கம்:130,131.)

அல்லாஹ்விற்காக அர்ப்பணித்ததற்காக...

أخبرنا أبو عبد الله محمد بن محمد بن سرايا ن علي البلدي وغير واحد بإسنادهم عن محمد بن إسماعيل البخاري، أخبرنا عمرو بن زرارة، أخبرنا زرارة، حدثني حميد الطويل، عن أنس بن مالك، عن عمه أنس بن النضر، وبه سمي أنس: غاب عمي عن قتال بدر فقال: يا رسول الله؛ غبت عن أول قتال قاتلت فيه المشركين، والله لئن أشهدني الله قتال المشركين ليرين الله ما أصنع، فلما كان يوم أحد انكشف المسلمون، فقال: اللهم إن أعتذر إليك مما صنع هؤلاء، يعني المسلمين، وأبرأ إليك مما جاء به هؤلاء، يعني المشركين، ثم تقدم، فاستقبله سعد بن معاذ فقال: أي سعد، هذه الجنة ورب أنس أجد ريحها دون أحد، قال سعد بن معاذ: فما استطعت ما صنع، فقاتل. قال أنس: فوجدنا به بضعاً وثمانين ما بين ضربة بسيف، أو طعنة برمح، أو رمية بسهم، ووجدناه قد قتل ومثل به المشركون، فما عرفته أخته الربيع بنت النضر إلى ببنانه.
قال أنس: كنا نرى أو نظن أن هذه الآية نزلت فيه وفي أشباهه " من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه " .

வியாபார விஷயமாக ஷாமுக்குச் சென்று திரும்பி வந்து கொண்டிருந்த அனஸ் (ரலி) அவர்கள் மதீனாவின் எல்லைக்குள் காலடியெடுத்த வைத்த போது மதீனா முன்பை விட இப்போது உலகின் நாலா பாகங்களிலும் அறியப்பட்டிருந்ததை எண்ணி அகமகிழ்ந்தார்கள்.

ஆம்! பத்ரின் வெற்றியும், எவராலும் வெற்றி கொள்ள முடியாது என்று அன்றைய நாடுகள் அஞ்சிக் கொண்டிருந்த மக்கா குறைஷிகளை புற முதுகிட்டு ஓடச் செய்ததையும், நபித்தோழர்களின் அஞ்சா நெஞ்சத்தையும் தம் பயணத்தின் வழி நெடுக பிற பகுதி மக்களெல்லாம் புகழோடு பேசியதே அவர்களின் அக மகிழ்வுக்கு காரணம்.

ஊரில் நுழைந்த அனஸ் (ரலி) அவர்கள் தான் சந்திக்கும் அத்துனை நபர்களிடமும் ஆவலோடு பத்ரின் காட்சிகளை விசாரித்துக் கொண்டே வந்தார்.

பத்ருக்கான தயாரிப்பு, போர் மேகம் சூழ்ந்த காலகட்டம், பத்ருக்கான ஆலோசனை, போருக்கான வியூகம், முஹாஜிர், அன்ஸார் ஆகியோர்களின் தலைவர்கள் ஆற்றிய நெஞ்சுரம் நிறைந்த உரைகள், படை வீரர்களின் அணிவகுப்பு, போர்முனை, யுத்தகளத்தின் காட்சிகள், மலக்குமார்களைக் கொண்டு அல்லாஹ் உதவியது, கலந்து கொண்டோருக்கும், வீரமரணம் அடைந்தோருக்கும் அல்லாஹ் வழங்கிய சோபனம் என பத்ரைப் பற்றிய கள நிகழ்வுகளை மக்கள் வர்ணித்தனர்.

இதுவரை, ஆனந்தத்தோடும், மகிழ்ச்சியோடும் கேட்டுக் கொண்டிருந்த அனஸ் இப்னு நள்ர் (ரலி) அவர்களுக்குவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பத்ரில் தம்மால் கலந்து கொள்ள முடியாமல் போனதை எண்ணிபுழுவாய் துடித்தார். அழுது கண்ணீர் வடித்தார்.

அன்றிலிருந்து மதீனாவின் வீதிகளில், தெருக்களில் காணும் மக்களிடம் எல்லாம்அல்லாஹ் எனக்கு மட்டும் பத்ரைப் போன்று ஒரு வாய்ப்பைத் தரட்டும், அப்படித்தந்தால் அவனுக்காக, அவன் தந்த இந்த தீனுக்காக நான் என்னவெல்லாம் செய்வேன் தெரியுமா?” கண்டிப்பாகச் செய்வேன்! அந்த நாளில் நான் என்ன செய்யப் போகிறேன் என்று நீங்களும் பார்க்கத்தான் போகின்றீர்கள்என்று கூறிக் கொண்டே இருப்பார்.

இப்படியாக நாட்கள் நகர்ந்து கொண்டே இருந்தது. அன்றொரு நாள் மாநபி {ஸல்} அவர்களோடு உரையாடிக் கொண்டிருந்த ஓர் உன்னதமான தருணத்தில்அல்லாஹ்வின் தூதரே! இணை வைப்பாளர்களோடு நடந்த முதல் யுத்தமான பத்ர் யுத்தத்தில் கலந்து கொள்ள முடியாத துர்பாக்கியசாலியாக நான் ஆகிவிட்டேன்! அப்போது நான் வியாபார விஷயமாக வெளியூர் சென்றிருந்தேன்.

ஆனால், அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சொல்கின்றேன்! இன்னொரு முறை இணை வைப்பாளர்களோடு போரிடும் வாய்ப்பை வழங்கினால் நான் என்ன செய்வேன் என்பதை அல்லாஹ் உங்களுக்கு காண்பிப்பான்! நீங்களும் அதைப் பார்ப்பீர்கள்என்றார்கள்.

அவர்கள் எதைப் பற்றி பிரஸ்தாபித்துக் கொண்டிருந்தார்களோ அதை நிறைவேற்றத் தோதுவான தருணத்தை அல்லாஹ் உஹத் எனும் வடிவில் வழங்கினான்.

ஆம்! மீண்டும் மதீனாவை போர் மேகம் சூழ்ந்து கொண்டது. உஹதுக்கான அழைப்பு பெருமானார் {ஸல்} அவர்களிடம் இருந்து வந்தது.

முதல் ஆளாய் தம்மைப் பதிவு செய்து, முதல் வரிசையில், முதல் நபராய் தம்மை ஆக்கிக் கொண்டார்கள்.

உஹத் யுத்தகளம்.. நாலாபுறமும் முஸ்லிம் படைகள் சிதறி ஓடிய சிக்கலான நேரம் அது

யாஅல்லாஹ்! முஸ்லிம்கள் இப்படி சிதறி ஓடுகின்றார்களே அவர்களுக்காக நான் உன்னிடம் அதற்கான காரணத்தைக் கூறுகின்றேன். இந்த இணை வைப்பாளர்கள் எதைச் செய்கின்றார்களோ அதில் இருந்தும் நான் முழுமையாக விலகிக் கொள்கின்றேன்! என்று பிரார்த்தித்து விட்டு வாளை கையில் ஏந்தியவராக வேகமாக களத்தின் மையப் பகுதியை நோக்கி விரைகின்றார்கள்.

நிலமை மிகவும் மோசமாக இருக்கிறதே தோழரே! இவ்வளவு வேகமாக எங்கே செல்கின்றீர் என்று ஸஅத் இப்னு முஆத் (ரலி) அவர்கள் கேட்க, “இதோ உஹத் மலையடிவாரத்தில் இருந்து சுவனத்தின் சுகந்தம் என்னை அழைத்துக் கொண்டிருக்கின்றது, அதை நுகர்ந்திடத்தான் விரைவாகச் செல்கின்றேன்என்று அனஸ் இப்னு நள்ர் (ரலி) அவர்கள் பதில் கூறிவிட்டு களத்தினில் புகுந்தார்கள்.

ஸஅத் இப்னு முஆத் (ரலி) அவர்கள்அனஸ் இப்னு நள்ர் போன்று என்னால் நடந்து கொள்ள ஒரு போதும் இயலாதுஎன்று கூறிவிட்டுயுத்தகளத்தின் கடைசி கட்ட காட்சியை விளக்கினார்கள்.

யுத்தம் முடிவுற்று ஷுஹதாக்களை அடையாளம் காணும் பணி துவங்கியது. ஒரு உடலின் அருகே நாங்கள் சென்று பார்த்தோம். எந்த விதத்திலும் அடையாளம் காண முடியாத படி உடல் முழுவதும் சல்லடையாக்கப்பட்டு, முகம் முழுவதும் சிதைக்கப்பட்டு கிட்டத்தட்ட 80 க்கும் அதிகமான காயங்கள் உடலின் சில பகுதிகள் வாளால் துண்டாடப்பட்டு இருந்தது. இன்னும் சில பகுதிகள் ஈட்டியால் குத்தப் பட்டு இருந்தது, இன்னும் சில பகுதிகளில் அம்பால் துவைக்கப்பட்டு இருந்தது.

இறுதியில், அந்த உடல் அனஸ் இப்னு நள்ர் (ரலி) அவர்களுக்குரியது தான் என்பதை அவர்களின் சகோதரி ருபைவு (ரலி) அவர்கள் அடையாளம் காட்டிய பின்னர் தான் நாங்கள் அறிந்து கொண்டோம்.

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “இறைநம்பிக்கையாளர்களில் இத்தகையவர்களும் இருக்கின்றனர்: “அல்லாஹ்விடம் தாங்கள் கொடுத்த வாக்குறுதியை அவர்கள் மெய்ப்படுத்திக் காட்டி விட்டிருக்கின்றார்கள். அவர்களில் சிலர் தமது நேர்ச்சையை நிறைவேற்றி விட்டார்கள். இன்னும், சிலர் அதற்கான நேரத்தை எதிர்பார்த்த வண்ணம் காத்திருக்கின்றார்கள்எனும் அஹ்ஸாப் அத்தியாயத்தின் 23 –ஆம் வசனம் அனஸ் இப்னு நள்ர் (ரலி) அவர்களின் விஷயமாகவே இறக்கியருளப்பட்டது.

                                  ( நூல்: உஸ்துல் ஃகாபா, அல் இஸ்தீஆப் )


அல்லாஹ்வின் கவனத்தை ஈர்த்து விட்டால்…

وروي أنه لحق بني إسرائيل قحط على عهد موسى عليه السلام ، فاجتمع الناس إليه ، فقالوا : يا كليم الله ، ادع لنا ربك أن يسقينا الغيث ، فقام معهم ، وخرجوا إلى الصحراء وهم سبعون ألفا أو يزيدون ، فقال موسى عليه السلام : إلهي اسقنا غيثك ، وانشر علينا رحمتك ، وارحمنا بالأطفال الرضع ، والبهائم الرتع ، والمشايخ الركع ، فما زادت السماء إلا تقشعا ، والشمس إلا حرارة ، فقال موسى : إلهي إن كان قد خلق جاهي عندك ، فبجاه النبي الأمي محمد صلى الله عليه وسلم الذي تبعثه في آخر الزمان ، فأوحى الله إليه : ما خلق جاهك عندي ، وإنك عندي وجيه ، ولكن فيكم عبد يبارزني منذ أربعين سنة بالمعاصي، فناد في الناس حتى يخرج من بين أظهركم ، فبه منعتكم ، فقال موسى : إلهي وسيدي أنا عبد ضعيف ، وصوتي ضعيف ، فأين يبلغ وهم سبعون ألفا أو يزيدون ، فأوحى الله إليه منك النداء ، ومني البلاغ ، فقام مناديا ، وقال : يا أيها العبد العاصي الذي يبارز الله منذ أربعين سنة ، اخرج من بين أظهرنا ، فبك منعنا المطر ، فقام العبد العاصي ، فنظر ذات اليمين وذات الشمال ، فلم ير أحدا خرج ، فعلم أنه المطلوب ، فقال في نفسه : إن أنا خرجت من بين هذا الخلق افتضحت على رءوس بني إسرائيل ، وإن قعدت معهم منعوا لأجلي ، فأدخل رأسه في ثيابه نادما على فعاله ، وقال : إلهي وسيدي عصيتك أربعين سنة ، وأمهلتني وقد أتيتك طائعا ، فاقبلني فلم يستتم الكلام حتى ارتفعت سحابة بيضاء ، فأمطرت كأفواه القرب ، فقال موسى : إلهي وسيدي ، بماذا سقيتنا وما خرج من بين أظهرنا أحد ؟ فقال : يا موسى ، سقيتكم بالذي به منعتكم ، فقال موسى : إلهي أرني هذا العبد الطائع ؟ فقال : يا موسى ، إني لم أفضحه وهو يعصيني ، أأفضحه وهو يطيعني.

மூஸா (அலை) அவர்கள் காலத்தில் ஒரு தடவை பெரும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. உடனே சமூக மக்கள் அனைவரையும் பெரிய மைதானம் ஒன்றில் ஒன்று திரட்டி தண்ணீர் பஞ்சம் நீங்க மழைவேண்டி துஆச்செய்தார்கள் மூஸா (அலை) அவர்கள்.

ஆனால், துஆச் செய்து வெகு நேரமாகியும் துஆவிற்கான பதில் ரப்பிடமிருந்து வராததை உணர்ந்த மூஸா ( அலை ) அவர்கள் இறைவா! எப்பொழுதும் என் பிரார்த்தனைக்கு உடனடியாகப் பதிலளிக்கும் நீ இன்று ஏன் பதிலளிக்கவில்லைஎன்று அல்லாஹ்விடம் கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ் மூஸாவே! இங்கு கூடியிருக்கும் ஜனத்திரளில் ஒருவர் சுமார் நாற்பதாண்டு காலமாக எனக்கு மாறு செய்து கொண்டிருக்கின்றார். அவரின் காரணமாகவே நான் பதில் தரவில்லை. அவரை அங்கிருந்து வெளியேறச் சொல்லுங்கள்! உங்கள் துஆவை ஏற்று உங்களுக்கு நான் மழை பொழிவிக்கிறேன்என்றான்.

உடனே, மூஸா (அலை) அவர்கள் அங்கு கூடியிருந்த மக்களிடம்இங்கு கூடியிருக்கிற மக்களில் ஒருவர் சுமார் நாற்பதாண்டு காலமாக அல்லாஹ்வுக்கு மாறு செய்து கொண்டிருக்கின்றார். அவரின் காரணமாகவே அல்லாஹ் மழையைத் தராமல் தடுத்து வைத்திருக்கின்றான். ஆகவே, அவர் இங்கிருந்து உடனடியாக வெளியேறிச் செல்லவும். இல்லையெனில் ஒட்டு மொத்த சமூகமும் பாதிக்கப்படுவோம்என்று கூறினார்கள்.

உடனே, கூட்டத்தில் இருந்த அந்த மனிதர் தன்னைத்தான் மூஸா (அலை) அவர்கள் கூறுகின்றார்கள் என்பதை உணர்ந்து கொண்டார். இங்கிருந்து இப்போது வெளியேறினால் தம்மை அடையாளம் கண்டு சமூக மக்கள் கேவலமாகக் கருதுவார்கள் என்று எண்ணிய அவர் தான் அணிந்திருந்த ஆடையின் ஒரு பகுதியைக் கொண்டு தன் தலைக்கு முக்காடிடுக் கொண்டு

அல்லாஹ்வே! இதோ இந்த இடத்தில் உன்னிடம் நான் ஒரு உறுதி மொழியைத் தருகின்றேன்! இனி எப்போதும் ஒரு கணமேனும் உனக்கு நான் மாறு செய்யமாட்டேன்! என் காரணத்தால் என் சமூக மக்களை நீ தண்டித்து விடாதே!என்று பிரார்த்தித்தார்.

அடுத்த நொடியில் மழை பொழியத்தொடங்கியது. மூஸா (அலை) அவர்களுக்கு ஆச்சர்யம் கூட்டத்தை விட்டு எவரும் வெளியேற வில்லை, ஆனால், மழை பொழிகிறது.

அல்லாஹ்விடம் கையேந்தினார் மூஸா (அலை) அவர்கள்.அல்லாஹ்வே! எவரும் தான் வெளியேற வில்லையே! பின் ஏன் மழையைப் பொழிவித்தாய்!”.

அதற்கு, அல்லாஹ் மூஸாவே! எந்த மனிதரின் காரணத்தால் நான் மழையைத் தடுத்து வைத்திருந்தேனோ, அவர் இப்போது மனம் திருந்தி என்னிடம் மன்னிப்புக் கோரிவிட்டார். அவரின் காரணத்தினாலேயே நான் இப்போது இந்த மழையை உங்களுக்கு தந்திருக்கின்றேன்என்று பதில் கூறினான்.

அப்போது, மூஸா (அலை) அவர்கள் அப்படியென்றால் நீ எனக்கு அவரை அடையாளம் காட்டுஎன்று அல்லாஹ்விடம் கேட்டார்கள்.

அதற்கு, அல்லாஹ் மூஸாவே! 40 ஆண்டுகளாக எனக்கு மாறு செய்து கொண்டிருந்த போது அவரைப் பிறரிடம் காட்டிக்கொடுத்து அவமானப் படுத்தாத நான்.. தற்போது மனம் திருந்தி என் அருள் வாசலுக்கு வந்த பின்னரா பிறருக்கு நான் காட்டிக் கொடுப்பேன்என்று பதில் கூறினான்.

                                                     ( நூல்: இப்னு கஸீர் )

அல்லாஹ் நம் அனைவருக்கும் விளக்கத்தை தருவானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!