Friday, 6 June 2025

தோன்றின் புகழோடு தோன்றுக!! – ( தியாகத்திருநாள் சிந்தனை – 2025 )

 

தோன்றின் புகழோடு தோன்றுக!! – ( தியாகத்திருநாள் சிந்தனை – 2025 )

"ஈதுல் அள்ஹாஹஜ்ஜுப்பெருநாள் உலகெங்கும் வாழும் முஸ்லிம் பெருமக்களால் தியாகத் திருநாளாக நினைவு கூறப்படுகிறது.

அத்தகைய தியாகத் திருநாளில் மகிழ்ச்சியோடு நாம் பெருநாள் தொழுகைக்காக காத்திருக்கின்றோம்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது இந்த மகிழ்ச்சியை நமது வாழ்வில் இறுதி வரை நிலைக்கச் செய்வானாக!

இந்த உலகில் நாம் வாழும் போதும் சரிஇந்த உலகை விட்டு விடை பெற்று நாம் சென்று விட்டாலும் சரி இந்த உலகின் இயக்கம் இயங்கும் வரை பேசப்படுகிறபின்பற்றப்படும் வகையிலான ஒரு வாழ்க்கையை இந்த உலகில் நாம் வாழ்ந்து விட்டு செல்ல வேண்டும்.

 وَتَرَكْنَا عَلَيْهِ فِى الْاٰخِرِيْنَ‌

பின்வருவோரில் அவரது புகழை நிலைக்கச் செய்தோம். ( அல்குர்ஆன்: 37: 108 )

அல்குர்ஆனின் இந்த ஒரு இறை வசனம் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைக்குமான சான்றாக இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

காரணம், ஐயாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் உலகின் பெருங் கொண்ட எண்ணிக்கையிலான ஒரு சமூகம், இந்த உலகிலேயே சிறந்த ஒரு சமூகம் அதன் கொள்கை, கோட்பாடு, சித்தாந்தம் அதன் வழிபாடு, நம்பிக்கை, கலாச்சாரம் சார்ந்த நடைமுறைகளை ஒரு மனிதரின் ஊடாகப் பெற்று இன்று வரை செயல்படுத்தி வருகிறது என்றால் அத்தகைய மனிதரின் அல்லஅல்ல அத்தகைய புனிதரின் வாழ்வு எவ்வளவு மகத்துவம் வாய்ந்ததாக இருக்கும்!!?.

ஆம்! இப்ராஹீம் (அலை) அவர்களின் புகழ் இவ் வையகத்தில் எத்தகைய மாண்புக்குரியது என்பதை இந்த உம்மத்தின் கடைக் கோடி முஸ்லிம் வரை அறிந்து வைத்துள்ளனர்.

இந்த புகழ் மிக்க வாழ்க்கையை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் வழங்குவதற்கு இப்ராஹீம் (அலை) அவர்களின் சிறுவர் பருவம் முதல் முதுமைப் பருவம் வரை வாழ்க்கை முழுவதிலும் பல்வேறு சுவடுகள் காணக்கிடைக்கின்றன.

எனினும், இந்தப் புகழாரம் சொல்லப் படுகிற இடம் கவனத்திற்குரியதாகும்.

ஆம்! இப்ராஹீம் அலை அவர்களின் அன்பு மகனாரின் "ஒற்றை வார்த்தை" மகத்துவமிக்க இந்த வாழ்க்கையை இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் வழங்குவதற்கு காரணமாய் அமைந்ததாக அல்லாஹ் குறிப்பிடுவான்.

  فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْىَ قَالَ يٰبُنَىَّ اِنِّىْۤ اَرٰى فِى الْمَنَامِ اَنِّىْۤ اَذْبَحُكَ فَانْظُرْ مَاذَا تَرٰى‌ؕ قَالَ يٰۤاَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ سَتَجِدُنِىْۤ اِنْ شَآءَ اللّٰهُ مِنَ الصّٰبِرِيْنَ‏ 

அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்தபோது "என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறு'' என்று (இப்ராஹீம்) கேட்டார். "என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்'' என்று (இஸ்மாயீல்) பதிலளித்தார்.

  فَلَمَّاۤ اَسْلَمَا وَتَلَّهٗ لِلْجَبِيْنِ‌ۚ‏ 

  وَنَادَيْنٰهُ اَنْ يّٰۤاِبْرٰهِيْمُۙ‏ 

  قَدْ صَدَّقْتَ الرُّءْيَا ‌ اِنَّا كَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَ‏ 

இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்தியபோது, "இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்'' என்று அவரை அழைத்துக் கூறினோம். ( அல்குர்ஆன்: 37: 102: 105 )

அந்த "ஒற்றை வார்த்தை" இது தான்..

 يٰۤاَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ

"என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்!"

இந்த உலகில் எல்லா தந்தையர்களும் தோற்றுப் போன இடத்தில் இஸ்லாமிய தந்தையாக இப்ராஹீம் (அலை) அவர்கள் வெற்றி வாகை சூடினார்கள்.

இந்த உலகில் எல்லா மகன்களும் தடுமாறுகிற இடத்தில் இஸ்லாமிய மகனாக தடம் பதித்தார்கள் இஸ்மாயில் (அலை) அவர்கள்.

பொதுவாகவே இப்ராஹீம் (அலை) அவர்களின் "இறைவனுக்கு கட்டுப்படுதல்" எனும் பண்பு உயர்வாகவே இருந்தது.

اِذْ قَالَ لَهٗ رَبُّهٗۤ اَسْلِمْ‌ۙ قَالَ اَسْلَمْتُ لِرَبِّ الْعٰلَمِيْنَ‏

இன்னும், அவரிடம் அவருடைய இறைவன் “(என்னிடம் முற்றிலும் வழிபட்டவராகச்) சரணடையும்என்று சொன்னபோது அவர், “அகிலங்களின் இறைவனுக்கு முற்றிலும் வழிபட்டோனாகச் சரணடைந்தேன்என்று கூறினார். ( அல்குர்ஆன்: 2: 131 )

எனினும், எல்லாம் வல்ல இறைவனின் பரிசோதனை என்பது இன்னும் வலுவான கட்டுப்படுதலை எதிர் பார்ப்பதாய் அமைந்தது. ஆனாலும் அங்கேயும் இப்ராஹீம் (அலை) அவர்கள் தமது முழு கட்டுப்படுதலையும் வெளிப்படுத்தினார்கள்.

 اِنَّ هٰذَا لَهُوَ الْبَلٰٓؤُا الْمُبِيْنُ‏ 

நிச்சயமாக! இது தான் மகத்தான சோதனை ஆகும். ( அல்குர்ஆன்: 37: 106 )

இந்த சோதனையில் வெற்றி பெற்ற போது, இப்ராஹீம் (அலை) அவர்களின் கட்டுப்படுதலை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் "ஒரு சமூகத்தின் கட்டுப்படுதலுக்கு நிகரானது" என்று சான்றிதழ் வழங்கி கௌரவித்தான்.        

اِنَّ اِبْرٰهِيْمَ كَانَ اُمَّةً قَانِتًا لِّلّٰهِ حَنِيْفًا وَلَمْ يَكُ مِنَ الْمُشْرِكِيْنَ

நிச்சயமாக இப்ராஹீம்   அல்லாஹ்வுக்கு அடிபணிவதில், (நேரான பாதையில்) சார்ந்திருப்பதில் ஒரு சமூகத்திற்கு ஒப்பானவராக இருந்தார்; மேலும், அவர் முஷ்ரிக்குகளில் (இணை வைப்போரில்) ஒருவராக இருக்கவில்லை. ( அல்குர்ஆன்: 16: 120 )

இன்றைய தியாகத் திருநாள் சிந்தனையாக நாம் "தந்தை - மகனுக்கிடையேயான உறவை இஸ்லாமிய மயப்படுத்துவதன் அவசியம்" குறித்து பேசவும் கேட்கவும் இருக்கின்றோம்.

وَمَاۤ اَمْوَالُـكُمْ وَلَاۤ اَوْلَادُكُمْ بِالَّتِىْ تُقَرِّبُكُمْ عِنْدَنَا زُلْفٰٓى اِلَّا مَنْ اٰمَنَ وَعَمِلَ صَالِحًـا 

இன்னும் உங்களுடைய செல்வங்களோ, உங்களுடைய மக்களோ (உங்களுக்குத் தகுதி கொடுத்து) உங்களை நம்மளவில் நெருங்கி வைக்க கூடியவர்கள் அல்லர். ஆனால் எவர் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல் செய்கின்றாரோ அத்தகையோர்க்கு தவிர. ( அல்குர்ஆன்: 34: 37 )

எப்போது ஒரு தந்தை தமது மக்களை இஸ்லாமிய வட்டத்திற்குள் வளர்த்து, அந்த மக்களை இறைநெருக்கம் பெற்றவர்களாக மாற்றுகின்றாரோ அந்த மக்களின் மூலம் நாளை மறுமையில் அந்த தந்தை இறை நெருக்கம் பெற்ற நல்லடியார்களில் ஒருவராக ஆகி விடுவார் என்று மேற்கூறிய வசனம் குறிப்பிடுகிறது.

ஒரு தாய் தன் குழந்தையை பத்து மாதம் கருவில் சுமக்கிறாள். தந்தை என்பவரோவாழ்நாள் முழுவதும் பிள்ளையை தன் நெஞ்சில் சுமந்து, சமுதாயத்தில் தலைசிறந்த குடிமகனாக மாற்றும் பொறுப்பு கொண்டவராக மிளிர்கிறார்.

ஆனால், இன்று பல குடும்பங்களில் தந்தையும் மகனும் பங்காளிகளைப் போல வாழ்கிறார்கள். 

பல இடங்களில் இன்னும் ஒரு படி மேலே போய் தந்தையும், மகனும் பேசிக் கொள்வதே கிடையாது. அல்லது கடும் பகைவர்களாக இருக்கிறார்கள். 

தந்தை- மகன் உறவை நான்காக வகைப்படுத்தலாம். இதில் முதலாவது, தந்தையும் மகனும் ஒருமித்த கருத்துடன் வாழ்வது.

தந்தை- மகனுக்கு இடையே கருத்துவேறுபாடு இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் இருப்பது இரண்டாவது வகை.

தந்தை மகன் கருத்துவேறுபாடு குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் மன வருத்தத்தை தரும் விதத்தில் இருப்பது மூன்றாவது வகையாகும். 

இதனை தந்தையால் மகனுக்கு பாதிப்பு அல்லது மகனால் தந்தைக்கு மன வேததனை என்றும் வகைப்படுத்தலாம்.

தந்தையை பாரமாகவும், வேண்டா உறவாகவும் கருதும் மனப்பான்மை கொண்ட மகன் இதை நான்காவது வகை என்று கூறலாம்.

உதாரணமாக யாராவது உங்க அப்பா (அத்தா - வாப்பா)  சவுக்கியமா?”ன்னு கேட்டா,  “ஏதோ இருக்கிறார்”, “என்னமோ வண்டி ஓடுது”, “என்னத்த சொல்ல.. எல்லாம் என் தலையெழுத்து”, “ஏண்டா அவருக்கு பிள்ளையா பிறந்தோம்னு இருக்கு”, “எனக்கு மட்டும் நல்ல அப்பாவை தராமல் இறைவன் வஞ்சனை பண்ணிட்டான்” -சமூகத்தில் பலரிடம் இருந்தும் விரக்தியின் வெளிப்பாடாக இப்படியான பதில்கள்தான் பெரும்பாலும் வருகிறது. 

இதெல்லாம் அவர்களுடைய ஆழ்மனதில் இருந்து வருகிற வார்த்தைகள்.

எனவே, தந்தை மகனுக்கு இடையேயான உறவு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உறவு என்பதை இஸ்லாம் அல்குர்ஆன் வழியே காட்சிப் படுத்துவதை நாம் அவதானிக்க கடமைப் பட்டுள்ளோம்.

ஐந்து உரையாடல்கள்….

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அருள் மறையில் தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உரையாடல் குறித்து ஐந்து இடங்களில் பேசுகின்றான்.

நான்கு உரையாடல் நபிமார்களோடு தொடர்புடையது. ஒரு உரையாடல் இறைநேசர் ஒருவரோடு தொடர்புடையது.

நபிமார்களின் இரண்டு உரையாடல்களில் ஒன்று தந்தை இறை மறுப்பாளராகவும், மகன் இறைத்தூதராகவும் இருக்கும் நிலையில் நடந்தது. ( இப்ராஹீம் (அலை) - அவர்களின் தந்தை)

இன்னொன்று தந்தை இறைத்தூதராகவும், மகன் இறை நிராகரிப்பாளராகவும் இருக்கும் நிலையில் நடந்தது. ( நூஹ் (அலை) - அவர்களின் மகன்)

நபிமார்களின் மற்ற இரண்டு உரையாடல்கள் ஒன்று. தமது மகனாரின் எதிர் கால நபித்துவ வாழ்வை முன் வைத்து நடந்த உரையாடல். அதன் தொடர்ச்சி என்பது இருவருக்குமே போராட்டம் நிறைந்ததாய் அமைந்த வாழ்க்கை தான் பிரதானமான அம்சம். அதன் இறுதிப் பகுதியோ நெகிழ்வைத் தரக்கூடியதாய் அமைந்தது கவனம் பெறுகிறது. (யஅகூப் (அலை) அவர்களின் மகன் யூசுஃப் (அலை)..)

இன்னொன்று, தாம் வேண்டி விரும்பி பெற்றெடுத்த தமது மகனாரின் வாழ்வையே அர்ப்பணம் செய்ய முன் வந்த தந்தைக்கும், தந்தையின் விருப்பத்திற்கு ஒப்ப தமது வாழ்வையே சமர்ப்பணம் செய்ய முடிவெடுத்த மகனாருக்கும் இடையே நடக்கும் உரையாடல். (இப்ராஹீம் (அலை) - இஸ்மாயில் (அலை)....)

நான்கு உரையாடல்களில் இரண்டு உரையாடல் ஏக காலத்தில் ஒரே இறைத்தூதரோடு தொடர்புடையது. மற்றைய இரண்டு உரையாடல்கள் வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெற்றது.

இந்த நான்கு உரையாடல்களுமே இறைநம்பிக்கை கொண்ட ஒரு முஸ்லிமின் வாழ்க்கையை தூய்மைப்படுத்தும் துலாக்கோலாகும்.

இறைவனுக்கும் தமக்கும் இடையே நெருக்கத்தை ஏற்படுத்தும் மகத்தான திறவுகோலாகும்.

இறைநேசருக்கும் அவரது மகனாருக்கும் இடையே நடந்த அந்த உரையாடல் தந்தை எனும் ஆளுமைக்கோர் இலக்கணம் அமைத்த அற்புதமான வழிகாட்டலாகும். (லுக்மான் (அலை) - அவர்களின் மகன்)

இப்ராஹீம் (அலை) இஸ்மாயில் (அலை) ஆகிய இருவருக்கும் இடையே நடந்த உரையாடலில் (அல்குர்ஆன்: 37: 102-105) இருந்து நாம் சில பாடங்களையும் படிப்பினைகளையும் பெறுவதற்கு கடமைப்பட்டுள்ளோம்.

1) தந்தை மகனிடையே பரஸ்பரம் நல்லுறவு இருக்க வேண்டும்.

2) மார்க்க காரியங்களில் தொடர்பு இருவரிடம் தொடர்பு இருக்க வேண்டும்.

 

3) மார்க்க ஞானம், இறைவனுக்கு கட்டுப்படுதல் தொடர்பான அறிவையும், அனுபவத்தையும் தந்தை தம் மகனுக்கு ஊட்ட வேண்டும்.

4) மார்க்க விவகாரங்களில் மஷ்வரா செய்யும் பழக்கம் இருவரிடமும் இருக்க வேண்டும்.

5) இறைவனுக்காகவே வாழ்கிறோம் என்ற சிந்தனை மிகைத்தவர்களாக இருவரும் இருக்க வேண்டும்.

இப்படியாக பல்வேறு பாடங்களையும், படிப்பினைகளையும் அந்த உரையாடல் பெற்றுள்ளது.

தந்தைக்கும் மகனுக்கும் இடையே நல்லுறவு...

உலகத்தில் தந்தைக்கும்  மகனுக்கும் இடையே நல்ல உறவு இருக்கவேண்டுமானால், அவர்கள் அடிக்கடி சந்திக்கவேண்டும், உரையாட வேண்டும். மாறாக, ஒருவரையொருவர் காணாமலும் பேசாமலும் இருந்தால், அவர்கள் தந்தைக மகனாக இருந்தாலும்கூட அவர்களுக்கு இடையே உறவு வளர்வதற்கு இடமிராது.

தாய், சொர்க்கம் என்றால் தந்தை சொர்க்கத்தின் நடுவாசலாக அமைந்துள்ளார்.

சொர்க்கத்திற்கு எட்டு வாசல்கள் உண்டு. அவற்றில் `தந்தைவாசல்' எனும் சிறப்பு பெயரில் ஒன்று உண்டு. இந்த வாசல் வழியாக சொர்க்கத்தில் நுழைபவர் யாரெனில், தந்தையிடம் அன்பாகவும், அமைதியாகவும் நடந்து கொண்டோரும், தந்தையின் பேச்சுக்கு கட்டுப்பட்டு நடப்போரும், தந்தைக்கு செய்ய வேண்டிய உரிமையையும், கடமையையும் நிறைவேற்றியவரும், அவரின் திருப்தியை பெற்றவரும் ஆவர்.

"தந்தை என்பவர் சொர்க்கவாசல்களில் நடுவாசல் ஆவார். எனவே, அதை ஒன்று நீ (பணிவிடை செய்யாமல்) வீணடிப்பாய். அல்லது பணிவிடை செய்து பாதுகாப்பாய் என நபி (ஸல்) கூறினார்கள்". (அறிவிப்பாளர்: அபூதர்தா (ரலி), நூல்: அஹ்மது)

சொர்க்கத்தின் வாசல்கள் 8. அவை: 1) பாபுஸ் ஸலாத்தி-தொழுகை வாசல், 2) பாபுல் ஜிஹாதி-அறப்போர் வாசல், 3) பாபுர் ரய்யானி-நோன்பு வாசல், 4) பாபுஸ் ஸதகாத்தி-தர்ம வாசல், 5) பாபுல் ஹஜ்-ஹஜ் வாசல், 6) பாபுல் வாலித்-தந்தை வாசல், 7) பாபுல் அய்மன்-வலதுபுற வாசல், 8) பாபுத் தவ்பத்தி-மன்னிப்பின் வாசல்.

தந்தை மகனுக்கு வழிகாட்ட வேண்டும்...

எந்த வாழ்க்கையை வாழ்ந்தால் இந்த உலகில் வாழும் வரை எவருக்கும் அஞ்சாமல், மரணத்தைக் கண்டு பயப்படாமல் நம்பிக்கையோடும் புத்துணர்வோடும் வாழ முடியும் என்ற வழிகாட்டலை ஒரு தந்தை வழங்க வேண்டும்.

لما حضرت العباس بن عبد المطلب رضي الله عنه الوفاة، بعث إلى ابنه عبدالله، فقال له: يا بني، إني موصيك بحب الله عز وجل، وحب طاعته، وخوف الله، وخوف معصيته، فإنك إذا أحببت الله وطاعته، نفعك كل أحد، وإذا خفت الله ومعصيته، لم تضُرَّ أحدًا، وإذا كنت كذلك لم تكره الموت متى أتاك.

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் மரணத்தை தழுவும் அந்த நேரத்தில் தமது மகனாரை அழைத்து வரச் சொல்லி தமதருகே அமர வைத்து "மகனே! உனக்கு நான் சில விஷயங்களை வலியுறுத்திக் கூறுகின்றேன், அவற்றை உன் வாழ்நாளில் நீ அவசியம் கடைபிடித்து வர வேண்டும்!" என்று கூறி விட்டு, அல்லாஹ்வை நீ நேசிப்பாயாக! அவனுக்கு வழிபட்டு வாழ்வதையும் நேசிப்பாயாக! அல்லாஹ்விற்கு அஞ்சுவாயாக! அவனுக்கு மாறு செய்து வாழ்வதையும் அஞ்சுவாயாக!

அல்லாஹ்வை நேசித்து, அவனுக்கு வழிபட்டு வாழ்வதை நேசிப்பாயேயானால் இந்த உலகில் உள்ள அனைத்துமே உனக்கு பயனாய் அமையும்! அல்லாஹ்விற்கு அஞ்சி, அவனுக்கு மாறு செய்வதை அஞ்சி நீ வாழ்வாயேயானால் இந்த உலகில் உள்ள எதுவும் உனக்கு எந்த தீங்கையும் ஏற்படுத்திட முடியாது!

இப்படியான அற்புதமான வாழ்க்கையை நீ மேற்கொள்ளும் காலமெல்லாம் உன்னிடம் எப்போது மரணம் வந்தாலும் நீ அதை வெறுக்க மாட்டாய்!" என்று கூறினார்கள்.

நெருக்கடியான நேரங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஒரு தந்தை வழிகாட்ட வேண்டும்.

இன்று இத்தகைய வழிகாட்டல் இல்லாத காரணத்தால் தான் இன்றைய தலைமுறையினர் தவறான பழக்க வழக்கங்களுக்கு அடிமைப்பட்டும், தற்கொலை போன்ற தவறான முடிவுகளை மேற்கொண்டும் தங்களுடைய வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றார்கள்.

عن عبدالله بن الزبير رضي الله عنه، قال: دعاني الزبير...فجعل يوصيني بدينه ويقول: يا بني، إن عجزت عن شيء منه، فاستعن عليه مولاي، قال: فوالله ما دريت ما أراد حتى قلتُ: يا أبتِ، مَنْ مولاك؟ قال: الله، قال: فوالله ما وقعت في كربةٍ من دينه إلا قلتُ: يا مولى الزبير، اقضِ عنه دينه فيقضيه.

எனது தந்தை ஜுபைர் இப்னுல் அவ்வாம் (ரலி) அவர்கள் ஒரு நாள் என்னை அழைத்து அவர்களின் அருகில் அமர வைத்து அவர்களின் கடன்கள் குறித்து என்னிடம் பொறுப்பேற்று அடைக்குமாறு வஸிய்யத் செய்தார்கள். அப்போது, என் கடனை அடைக்க உன்னால் இயலாமல் போகும் போது என் எஜமானிடம் உதவி கேள்!" என்றார்கள். அதற்கு, நான் தந்தையே! இது நாள் வரை உங்களுக்கு எஜமான் ஒருவர் இருப்பதாக நீங்கள் சொல்லி நான் கேட்டதும் இல்லை, நான் பார்த்ததும் இல்லையே?" யார் அந்த எஜமான்? என்று கேட்டேன்.

அப்போது, என் தந்தை "அல்லாஹ் தான் என் எஜமான்" என்று கூறினார்கள்.

என் வாழ்க்கையில் என் தந்தையின் கடனை அடைக்கும் முயற்சியில் எனக்கு ஏற்பட்ட பல்வேறு நெருக்கடியான தருணங்களில் "என் தந்தை ஜுபைரின் எஜமானே! என்னுடைய நெருக்கடியை நீக்கி, எனக்கு உதவி செய்வாயாக!" என்று கூறுவேன். என் நெருக்கடி நீங்க அவன் உதவி செய்வான், என் தந்தையின் கடனை நான் அடைத்து விடுவேன்" என்று கூறினார்கள்.

தந்தை நல்ல மகனை உருவாக்க வேண்டும்….

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ قَالَ: حَدَّثَنِي مُوسَى بْنُ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ التَّيْمِيُّ عَنْ أَبِيهِ قَالَ: آخَى رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - بَيْنَ سَعْدِ بْنِ خَيْثَمَةَ وَأَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الأَسَدِ. قَالُوا جَمِيعًا: وَكَانَ سعد بْنُ خَيْثَمَةَ أَحَدُ النُّقَبَاءِ الاثْنَيْ عَشَرَ مِنَ الأَنْصَارِ. وَلَمَّا نَدَبَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - الْمُسْلِمِينَ إِلَى الْخُرُوجِ إِلَى عِيرِ قُرَيْشٍ فَأَسْرَعُوا قَالَ خَيْثَمَةُ بْنُ الْحَارِثِ لابْنِهِ سَعْدٍ: إِنَّهُ لا بُدَّ لأَحَدِنَا مِنْ أَنْ يُقِيمَ فَآثِرْنِي بِالْخُرُوجِ وَأَقِمْ مَعَ نِسَائِكَ. فَأَبَى سَعْدٌ وَقَالَ: لَوْ كَانَ غَيْرُ الْجَنَّةِ آثَرْتُكَ بِهِ. إِنِّي أَرْجُو الشَّهَادَةَ فِي وَجْهِي هَذَا. فَاسْتَهَمَا فَخَرَجَ سَهْمُ سَعْدٍ فَخَرَجَ مَعَ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - إِلَى بَدْرٍ فَقُتِلَ يَوْمَئِذٍ. قَتَلَهُ عَمْرُو بْنُ عَبْدِ وُدٍّ وَيُقَالُ طُعَيْمَةُ بْنُ عَدِيٍّ.

நபி (ஸல்) அவர்கள் பத்ரு போருக்கு தயாரான போது ஃகைஸமா (ரலி) அவர்கள் தன்னுடைய மகனான ஸஅத் இப்னு ஃகைஸமா (ரலி) அவர்களிடம் மகனே! நீ உம் மனைவி மக்களுடன் தங்கிவிடு. நான் போரிடப் போகிறேன்என வேண்டினார்கள். அதற்கு ஸஅத் இப்னு ஃகைஸமா (ரலி) அவர்கள் தந்தையைப் பார்த்து என் அருமை தந்தையே! இது சுகப் பிரச்சனை அல்ல. சொர்க்கப் பிரச்சனை. சொர்க்கம் அல்லாத வேறு விஷயமாக இருப்பின் உங்களுக்காக நான் விட்டுக் கொடுத்திருப்பேன். இது சொர்க்கத்தையே கூலியாக பெறும் பேராகும். இதில் யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன் என்று கூறி குடும்பத்துடன் தங்குவதற்கு மறுத்து விட்டார்கள்.

அதன்பிறகு இருவரில் யார் போருக்கு செல்வது என்பதில் கடும் போட்டி ஏற்பட்ட போது சீட்டுக் குலுக்கி போட்டார்கள். அதில் ஸஅத் இப்னு ஃகைஸமா (ரலி) அவர்கள் பெயரே வந்தது. இவர்கள் பத்ருப் போருக்காக நபி (ஸல்)  அவர்களுடன் புறப்பட்டார்கள். இவர்கள் ஆசைப்பட்டது போல் உயிர்த்தியாகம் செய்து சொர்க்கத்தை அடையும் நற்பேற்றினைப் பெற்றார்கள். அவர்கள் அம்ரிப்னு அப்து உத்து என்ற எதிரியால் வெட்டப்பட்டு ஷஹீதானார்கள்.

உஹத் யுத்த களத்திற்கான அழைப்பு தந்தை அப்துல்லாஹ் (ரலி) மகன் ஜாபிர் (ரலி)யிடம் நான் கலந்து கொள்கிறேன் என்றார்

மகன்: வயதான நேரத்தில் கலந்து என்ன செய்யப் போகிறீர்கள் நான் இளைஞன் ஆகவே நான் கலந்து எனது இளமையை நிரூபிக்கிறேன்.

தந்தை: இனி இதுபோன்றதொரு வாய்ப்பு எனக்கு அமையுமா? என்பது சந்தேகமே எனவே, எனக்கு வழிவிடு

மகன்: எனக்கு விட்டு கொடுங்கள்

தந்தை: சுவனத்தை தவிர வேறு ஏதாவது கூலியாக கிடைக்கு மென்றிருந்தால் உனக்கு நான் விட்டுக் கொடுத்திடுவேன். ஆகவே, வழிவிடு என்றார்

உரையாடல் முற்றுப் பெறாமல் நடந்து கொண்டிருக்கவே சீட்டுக்குலுக்கி போடும் முடிவுக்கு வந்தனா. சீட்டுக் குலுக்கலில் அப்துல்லாஹ் (ரலி)யின் பெயர் வரவே கலந்து கொண்டார், விரும்பியது போன்றே வீரமரணம் அடைந்தார்.

عن جابر بن عبد الله رضي الله عنهما أنه قال: لقيني رسول الله صلى الله عليه وسلم، فقال لي: « يا جابر: مالي أراك منكسراً؟» قلت: يا رسول الله استشهد أبي قتل يوم أحد، وترك عيالاً وديناً، قال: «أفلا أبشرك بما لقي الله به أباك؟» قلت: بلى يا رسول الله، قال: « ما كلَّم الله أحداً قط إلا من وراء حجاب، وأحيا أباك فكلمه كفاحاً، فقال: يا عبدي تمنَّ عليَّ أعطك؟ قال: يا رب تحييني فأقتل فيك ثانية، قال الرب عز وجل: إنه قد سبق مني أنهم إليها لا يُرجعون » (رواه الترمذي

தந்தையை இழந்த தனயனின் முகம் வாடியிருந்த்தைக் கண்ட நபி (ஸல்) அவர்கள்: ஜாபிர் (ரலி)யை அருகே அழைத்து ஆறுதல் கூறினார்கள். உனது தந்தையிடம் அல்லாஹ் திரையின்றி பேசினான் உமது தந்தையிடம் அல்லாஹ் விரும்பியதைக் கேளுங்கள் தருகிறேன் என்றான். உமது தந்தை அல்லாஹ்விடன் எனக்கு மீண்டும் உயிர் கொடுத்து உமது பாதையில் போராடி மீண்டும் வீரமரணம் அடைய வேண்டும் என்பதே எனது விருப்பம் என்றார். அதற்கு அல்லாஹ் எனது நடைமுறையில் அது சாத்தியமில்லை என்றான். என்ற இந்த உரையாடலை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.                                      (நூல்: இஸ்தீஆப், பாகம்: 2)

وروى البخاري (1351) عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: " لَمَّا حَضَرَ أُحُدٌ دَعَانِي أَبِي مِنَ اللَّيْلِ، فَقَالَ: مَا أُرَانِي إِلَّا مَقْتُولًا فِي أَوَّلِ مَنْ يُقْتَلُ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَإِنِّي لاَ أَتْرُكُ بَعْدِي أَعَزَّ عَلَيَّ مِنْكَ، غَيْرَ نَفْسِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَإِنَّ عَلَيَّ دَيْنًا فَاقْضِ، وَاسْتَوْصِ بِأَخَوَاتِكَ خَيْرًا، فَأَصْبَحْنَا، فَكَانَ أَوَّلَ قَتِيلٍ .

ஜாபிரே! என் மனைவி மக்களில், பிள்ளைகளில் நீயே எனக்கு மிகவும் பிரியமானவன். இந்தப் புனிதப் போரில் நான் ஷஹீதாகி விடுவேன் என்று எனக்குப் படுகின்றது. என் மீதான கடன் சுமைகளை எல்லாம் நிறைவேற்ற வேண்டியது உன் பொறுப்பேயாகும். உன் சகோதரிகளோடு நன்முறையில் நடந்துகொள். அவர்களை நன்கு பராமரித்துக் கொள்வது உன் கடமை" என்று உபதேசம் செய்துவிட்டு அறப்போரில் ஈடுபட்டு, அவர் சொன்னவாறே உஹத் களத்தில் ஷஹீதானார். 

தந்தைக்கேற்ற தனயனாக, தந்தையின் சொல்படி, தம்  தங்கைகளின் நலனுக்காக தம்மையே  தியாகம் செய்துகொண்டார் இளைஞர் ஜாபிர் (ரலி) அவர்கள். 

இந்த உலகத்திற்கேற்ற நல்ல சந்ததிகளை, இளைஞர்களை இஸ்லாமிய மயப்படுத்தி உருவாக்குவோம்! அதுவே, இப்ராஹீம் (அலை) – இஸ்மாயீல் (அலை) இருவரின் வாழ்வு தரும் மகத்தான படிப்பினையாகும். இதுவே இந்த தியாகத்திருநாள் சிந்தனையும் ஆகும்.

No comments:

Post a Comment