மகிழ்வித்து மகிழ்!!
காகம் பாட்டியை ஏமாற்றி வடையை தூக்கிச் சென்ற கதை கேட்டிருப்போம், கலிகால காகம் ஒன்று தங்க ஆபரணத்தை தூக்கிச் சென்ற சம்பவத்தால், ஒரு நேர்மையாளரை சமூகத்திற்கு வெளிப்படுத்தியுள்ளது.
கேரளா - மலப்புரம் மாவட்டம் : திருக்கலங்கோடு பகுதியைச் சேர்ந்த ஹரிதா மூன்று ஆண்டுகளுக்கு முன்பு துணி துவைக்கும் வேளையில்,
தனது ஒன்றரை பவுன் எடையுள்ள தங்க வளையலை கழட்டி வைத்த போது ஒரு காகம் அதனை தூக்கி கொண்டு பறந்தது.
காகம் தூக்கி சென்ற நகையை தேடியும் கண்டுபிடிக்க இயலவில்லை. தங்கம் தொலைந்துவிட்டதாக நினைத்து அவர்கள் நம்பிக்கை இழந்தனர்.
மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மற்றொரு பகுதியில் வீட்டில் மாம்பழம் பறிக்க ஏறிய தென்னை ஏறும் தொழிலாளியான அன்வர் சதாத்
மாமரத்தின் மேலே காகத்தின் கூட்டிலிருந்து தங்க நகை கீழே விழ, அதை கீழே மாங்காய் எடுத்துக் கொண்டிருந்த அன்வர் சதாத் மகள் அதை எடுத்து தந்தையிடம் கொடுக்க,
அன்வர் சதாத், நகையின் உரிமையாளரிடம் ஒப்படைக்க, அக்கம்பக்கம் விசாரித்தும் யார் என தெளிவு கிடைக்காததால்,திருக்கலங்கோடு பொது நூலகத்திற்குச் சென்று தகவல் தெரிவித்து, அதன் அறிவிப்பு பலகையில் விளம்பரப்படுத்தியதை அறிந்து,நகை உரிமையாளர் ஹரிதா வளையல் வாங்கிய பில்லையும் அதை அணிந்திருந்த போட்டோவையும் காட்டி தங்க வளையலை பெற்றார்.
சின்னச் சின்ன தகராறில் சொந்த சகோதரனை கூட குத்தி கொலை செய்யும் இக்காலத்தில்,
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தொலைந்து போன ஒன்றரை பவுன் நகையை யாரும் உரிமை கொண்டாட வராத நிலையில்,
அடுத்தவர் பொருளுக்கு ஆசைபடாமல் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்த மரம் ஏறும் தொழிலாளியான அன்வர் சதாத் நேர்மை மிக பாராட்ட கூடிய ஒரு அம்சமாகும்.
அவ்வப்போது இது போன்ற அரிதான மனிதர்கள் பற்றிய தகவல்களை சமூக ஊடகங்கள் வாயிலாக நாம் அறிந்து கொள்கிறோம்.
இதன் மூலம் நாம் நம் வாழ்க்கைக்கான பாடங்களை பெற்றுக் கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.
வாழ்க்கையில் உண்மையான மகிழ்ச்சி என்பது பிறரை மகிழ்வித்து மகிழ்வதிலே தான் இருக்கிறது என்பதை இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.
நமக்குள் இருக்கும் நல்ல பண்புகளை இந்த உலகத்திற்கு ஏதேனும் ஒரு சிறு சம்பவத்தின் ஊடாகக் கூட இறைவன் வெளிப்படுத்துவான்.
நேர்மை தவறாத வாழ்வு தரும் இன்பத்திற்கு ஈடாக இந்த உலகில் எந்த ஒன்றும் நமக்கு இன்பம் தரப் போவதில்லை.
நேர்மை இஸ்லாம் போற்றிப் புகழும் ஓர் உயரிய குணமாகும்.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அடியார்களிடம் எதிர் பார்க்கும் அற்புத பண்பாகும்.
அல்லாஹ்வின் நேசத்தை பெற்றுத் தரும் பொக்கிஷக் குவியலாகும்.
إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ
நேர்மையாளர்களை அல்லாஹ் நேசிக்கிறான். (அல்குர்ஆன் 2 : 195)
தனக்கு ஒரு அளவுகோல், பிறருக்கு ஒரு அளவுகோல் இல்லை. தனக்கு வேண்டியவர்களுக்கு ஒரு அளவுகோல், வேண்டாதவர்களுக்கு ஒரு அளவுகோல் இல்லை. யாராக இருந்தாலும் சரி, தன்னை பெற்றெடுத்த தாய் தந்தையாக இருந்தாலும் சரி, தான் பெற்றெடுத்த பிள்ளையாக இருந்தாலும் சரி, தான் கட்டிய மனைவியாக இருந்தாலும் சரி, ஏன் நமக்கு விருப்பமான நஃப்ஸாக இருந்தாலும் சரி, நேர்மைக்கு மாற்றமாக நான் நடக்க மாட்டேன் என்ற உறுதி வேண்டும். இந்தப் பண்பை அல்லாஹ் நேசிக்கிறான்.
عن عبد الله بن عمرو رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: «إِنَّ الْمُقْسِطِينَ عِنْدَ اللهِ عَلَى مَنَابِرَ مِنْ نُورٍ، عَنْ يَمِينِ الرَّحْمَنِ عَزَّ وَجَلَّ، وَكِلْتَا يَدَيْهِ يَمِينٌ، الَّذِينَ يَعْدِلُونَ فِي حُكْمِهِمْ وَأَهْلِيهِمْ وَمَا وَلُوا».
தங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளில் நேர்மையாக நடந்து கொண்டவர்கள் வல்லமையும் மாண்பும் மிக்க அளவற்ற அருளாளன் அல்லாஹ்வின் வலப்பக்கத்தில் ஒளியாலான மேடைகளில் இருப்பார்கள். அவனுடைய இரு கைகளுமே வலக்கரமே (வளமிக்கதாகும்). அவர்கள் தமது நிர்வாகத்திலும், குடும்பத்திலும், தாம் பொறுப்பேற்றுக் கொண்ட (அனைத்)திலும் நேர்மையாக நடந்து கொண்டனர் (என்பதே இச்சிறப்புக்குக் காரணம்). ( நூல்: முஸ்லிம் )
நேர்மை என்பது ஒரு விரிவான சொல். இது பரந்த அளவிலான அர்த்தங்களை உள்ளடக்கியது. இது உண்மையைச் சொல்வது, வேலையில் நேர்மை, கடமைகளைச் செய்வது, ஒருவரின் வார்த்தையை நிறைவேற்றுவது மற்றும் நியாயமான மற்றும் புறநிலை தீர்ப்புகள் மற்றும் முடிவுகளை எடுப்பதை உள்ளடக்கியது. நேர்மை என்பது சரியான நேரத்தில் சரியானதைச் செய்வது என்றும் பொருள். நேர்மை என்பது எல்லா நேரங்களிலும், விஷயங்களிலும், சூழ்நிலைகளிலும் உண்மையாகச் சொல்வதும் செயல்படுவதும் ஆகும். நேர்மை என்பது தேவைப்படுபவருக்கு சரியான வழிகாட்டுதலை வழங்குவதாகும். இஸ்லாம் முஸ்லிம்களாகிய நாம் மற்றவர்களிடமும், நம்மிடமும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறது.
இஸ்லாத்தில் நேர்மை என்பது உண்மைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையின் கருத்துக்களை ஒருங்கிணைக்கிறது, மேலும் அது அனைத்து மனித வார்த்தைகள், எண்ணங்கள், உறவுகள் மற்றும் செயல்களிலும் வாழ்கிறது.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ
"இறைநம்பிக்கை கொண்டவர்களே, அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள், உண்மையுள்ளவர்களுடன் இருங்கள்." ( அல்குர்ஆன்: 9: 119 )
وذكر ابن كثير في تفسيره أن الآية أي : اصدقوا والزموا الصدق تكونوا مع أهله وتنجوا من المهالك ويجعل لكم فرجا من أموركم ، ومخرجا.
புனித குர்ஆனின் அர்த்தங்களின் புகழ்பெற்ற அறிஞரான இப்னு கதீர் இந்த வசனத்தின் முக்கியத்துவத்தை விளக்கினார். "உண்மையாக இருப்பதும், உண்மையுடன் இருப்பதும் நீங்கள் சத்திய மக்களில் இருப்பீர்கள், துன்பங்களிலிருந்து பாதுகாக்கப்படுவீர்கள், அது உங்கள் துன்பங்களிலிருந்து விடுபட ஒரு வழியை உருவாக்கும்" என்று அவர் கூறியதாகக் கூறப்படுகிறது.
فلمّا سمع النضر بن الحارث ما قاله أبو جهل قام وخطب في قريش قائلاً ينصحهم بالتدبر مما حصل، فقال: "يا معشر قريش، إنه والله قد نزل بكم أمر ما أتيتم له بحيلة بعد، قد كان محمد فيكم غلاماً حدثاً أرضاكم فيكم، وأصدقكم حديثاً، وأعظمكم أمانة، حتى إذا رأيتم في صدغيه الشيب، وجاءكم بما جاءكم به، قلتم ساحر، لا والله ما هو بساحر، لقد رأينا السحرة ونفثهم وعقدهم؛ وقلتم كاهن، لا والله ما هو بكاهن، قد رأينا الكهنة وتخالجهم وسمعنا سجعهم؛ وقلتم شاعر، لا والله ما هو بشاعر، قد رأينا الشعر، وسمعنا أصنافه كلها: هزجه ورجزه؛ وقلتم مجنون، لا والله ما هو بمجنون، لقد رأينا الجنون فما هو بخنقه، ولا وسوسته، ولا تخليطه، يا معشر قريش، فانظروا في شأنكم، فإنه والله لقد نزل بكم أمر عظيم ".
ஒருமுறை
குறைஷிகளின் தலைவர்கள் அமர்ந்து நபி (ஸல்) அவர்களைப் பற்றிப் பேசிக்
கொண்டிருந்தனர். அவர்களில் மிகவும் அனுபவம் வாய்ந்த அந்-நள்ர் பின் அல்-ஹாரிஸ்,
“ஓ குறைஷிகளே! உங்கள் மீது விழுந்த பேரழிவைச் சமாளிக்க எந்தத் திட்டத்தையும் நீங்கள் கண்டுபிடிக்க முடியவில்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் சிறு வயதிலிருந்தே உங்கள் முன்னிலையில் வளர்ந்தார். அவர் உங்களில் மிகவும் விரும்பப்பட்டவர், நேர்மையானவர் மற்றும் உண்மையுள்ளவர். இப்போது அவர் முதிர்ச்சியடைந்து இவற்றை உங்களுக்கு வழங்கியதும், நீங்கள், அவர் ஒரு மந்திரவாதி, ஒரு ஜோதிடர், ஒரு கவிஞர், ஒரு பைத்தியக்காரர் என்று சொல்கிறீர்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் அவருடைய செய்தியைக் கேட்டேன், அவர் இவற்றில் ஒன்றுமில்லை. உங்கள் மீது ஒரு புதிய பேரழிவு ஏற்பட்டுள்ளது. ”
அவர் சஃபா
மலையின் அருகே அனைத்து குறைஷிகளையும் ஒன்று திரட்டி அவர்களிடம், “ஓ குறைஷிகளே! மலைகளுக்குப் பின்னால் இருந்து
ஒரு படை உங்களை நோக்கி வருகிறது என்று நான் சொன்னால், நீங்கள் என்னை நம்புவீர்களா?” என்று கேட்டார். அனைவரும் ஒரே குரலில், “ஆம்; ஏனென்றால் நீங்கள் பொய் சொல்வதை நாங்கள் ஒருபோதும்
கேட்டதில்லை.” மக்காவின்
அனைத்து மக்களும், எந்த
விதிவிலக்கும் இல்லாமல், அவரது
உண்மைத்தன்மை மற்றும் நேர்மைக்கு சத்தியம் செய்தனர், ஏனெனில் அவர் நாற்பது ஆண்டுகளாக அவர்களிடையே
ஒரு களங்கமற்ற மற்றும் மிகவும் பக்தியுள்ள வாழ்க்கையை வாழ்ந்தார்" என்று
குறிப்பிட்டார். ( நூல்: ஸீரத் இப்னு ஹிஷாம் )
நேர்மையால் விழையும்
நன்மைகள்...
நேர்மைக்கு கணிசமான எண்ணிக்கையிலான நன்மைகள் உண்டு. நேர்மையுடன் செய்யப்படும் எந்தவொரு செயலும் பல வெகுமதிகளுக்கு வழிவகுக்கும். அவற்றில் சில பின்வருமாறு:
1. இதய அமைதியைப்
பெறுதல்
அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:
أَلَا بِذِكْرِ ٱللَّهِ تَطْمَئِنُّ ٱلْقُلُوبُ
"நிச்சயமாக, அல்லாஹ்வை நினைவு கூர்வதால் உள்ளங்கள் அமைதி பெறுகின்றன." ( அல்குர்ஆன்: 13: 28 )
2. அல்லாஹ்வின் வழிகாட்டுதலைப் பெறுதல்
அல்லாஹ், தங்கள் காலத்தில் எதிர்கொண்ட சவால்கள் இருந்தபோதிலும், உண்மையாகவும், நேர்மையாகவும், உறுதியாகவும் உண்மையான நம்பிக்கையைப் பற்றிக்கொண்ட இளைஞர்களாக இருந்த அஸ்ஹாபுல் -கஹ்ஃப்பை (குகை மக்கள்) வழிநடத்தினான்:
نَّحْنُ نَقُصُّ عَلَيْكَ نَبَأَهُم بِٱلۡحَقِّ ۚ إِنَّهُمْ فِتۡيَةٌ ءَامَنُوا بِرَبَّۡهِمۡ وزدناهم هُدًى
"(நபியே!) அவர்களுடைய கதையை நாங்கள் உமக்கு உண்மையாகவே கூறுகிறோம். அவர்கள் தங்கள் இறைவனை உண்மையாகவே நம்பிய இளைஞர்கள், மேலும் நாம் அவர்களுக்கு நேர்வழியை அதிகப்படுத்தினோம்." ( அல்குர்ஆன்: 18: 13 )
3. வெற்றியால் ஆசீர்வதிக்கப்படுதல்
إِنَّمَا يَنْصُرُ اللَّٰهُ هٰذِهِ الْأُمَّةَ بِضَعِيْفِهَا بِدَعْوَتِهِمْ وَصَلَاتِهِمْ وَصَلَاتِهِمْ وَصَلَاتِهِمْ
"அல்லாஹ் இந்த உம்மத்திற்கு (அவர்களில்) நேர்மையாக நடக்கும் பலவீனமானவர்களின் துஆ, தொழுகை மற்றும் இக்லாஸ் மூலம் மட்டுமே வெற்றியை வழங்குகிறான்." ( நூல்: சுனன் அந்-நஸாயீ )
4. வானங்களிலும் பூமியிலும் வசிப்பவர்களால் நேசிக்கப்படுதல்..
إِنَّ اللّٰهَ تَبَارَكَ وَتَعَالَى إِذَا أَحَبَّ عَبْدًا نَادَى جِبْرِيلَ إِنَّ اللَّٰهَ فُلاَنًا فَأَحِبَّهُ فَيُحِبُّهُ جِبْرِيلُ، ثُمَّ يُنَادِي جِبْرِيلُ فِي السَّمَاءِ إِنَّهُ اللّٰهَ قَدۡ أَحَبَّ فُلاَنًا فَأَحِبُّوهُ، فَيُحِبُّهُ أَهْلُ السَّمَاءِ وَيُوضَعُ لَهْلِ الأَرْضِ
"அல்லாஹ் ஒருவரை நேசித்தால், அவன் ஜிப்ரீலை அழைத்து, 'அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான், ஓ ஜிப்ரீலே, அவனை நேசி' என்று கூறுகிறான். எனவே ஜிப்ரீல் அவரை நேசிப்பார், பின்னர் வானத்தில் ஒரு அறிவிப்பை வெளியிடுவார்: 'அல்லாஹ் இன்னாரை நேசித்தான், எனவே நீங்களும் அவரை நேசிக்க வேண்டும்.' எனவே வானத்தில் வசிப்பவர்கள் அனைவரும் அவரை நேசிப்பார்கள், பின்னர் பூமியில் உள்ள மக்களின் மகிழ்ச்சி அவருக்கு வழங்கப்படுகிறது." ( நூல்: முத்தஃபகுன் அலைஹ் )
5. துஆ ஏற்றுக்கொள்ளப்படும்...
இமாம் அல்-புகாரி (ரஹ்) மற்றும் முஸ்லிம் (ரஹ்) ஆகியோரால் அறிவிக்கப்பட்ட ஹதீஸை அடிப்படையாகக் கொண்டது, ஒரு பெரிய பாறை உருண்டு குகையின் வாயை அடைத்ததால் குகையில் சிக்கிக்கொண்ட மூன்று மனிதர்களைப் பற்றிய வரலாறு.
நீண்ட ஹதீஸில், அல்லாஹ்வுக்காக நேர்மையாகச் செய்த கடந்த கால செயல்களின் ஆசீர்வாதத்தால் அவர்கள் அல்லாஹ்விடம் துஆச் செய்தனர். இதனால், அவர்கள் தப்பிக்க முடியும் வரை பாறை மெதுவாக நகர்ந்தது. கடந்த கால செயல்களில் அவர்கள் காட்டிய நேர்மையின் காரணமாக அவர்களின் துஆ ஏற்றுக்கொள்ளப்பட்டது.
6. இந்த வாழ்க்கையில் கஷ்டங்களைப் பொறுமையுடன் தாங்கிக் கொள்ளுதல்...
இதைத்தான் நபி (ஸல்) அவர்களும், முந்தைய நபிமார்களும் தங்கள் நபித்துவப் பணியை நிறைவேற்றும்போது கண்டார்கள். அவர்கள் வாழ்க்கையில் கஷ்டங்களையும் இழப்புகளையும் சந்தித்தார்கள், ஆனால் அவர்களின் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் அவர்கள் காட்டிய நேர்மையின் காரணமாக அவர்களின் வாழ்க்கை வெற்றிக்கு ஒரு சான்றாக அமைகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நேர்மை ஒருவருக்கு சகிப்புத்தன்மையை அளிக்கும்.
7. தவறான வழிகாட்டுதலில் இருந்து பாதுகாப்பு...
யூசுஃப் (அலை) எவ்வாறு மானக்கேடான செயல்களைச் செய்வதிலிருந்து பாதுகாக்கப்பட்டார் என்பதை அல்லாஹ் குறிப்பிடுகிறான்:
وَلَقَدْ هَمَّتْ بِهِ وَهَمَّ بِهَا لَوْلَآ أَن رَّءَا بُرْهَـٰنَ رَبِّهِۦكَذَالك لنَصرف عَنْهُ ٱلسُّوٓءَ وَٱلْفَحْشَآءَ إِنَّهُۥ مِنْ عِبَادِنَا ٱلْمُخْلَصِينَ
"ஆனால் அவளோ அவரைத் திடமாக விரும்பினாள்; அவரும் தம் இறைவனின் ஆதாரத்தைக் கண்டிராவிட்டால் அவள் மீது விருப்பம் கொண்டே இருப்பார்; இவ்வாறு நாம் அவரைவிட்டுத் தீமையையும் மானக்கேடான செயல்களையும் திருப்பிவிட்டோம் - ஏனெனில் நிச்சயமாக அவர் நம் தூய்மையான அடியார்களில் ஒருவராக இருந்தார். ( அல்குர்ஆன்: 12: 24 )
நேர்மையின் உறைவிடமாய் வாழ்ந்த உத்தமர்கள்!
كان رسول الله صلى الله عليه وسلم يبعث عبد الله بن رواحة مشرفًا على خراج المسلمين من خيبر(وكان اتفاقا معمولا به بينهم وبين رسول الله صلى الله عليه وسلم بأن يحصل المسلمون على نصف تمرهم منذ غزاهم بالمدينة).
لكن اليهود قاموا ذات مرة بجمع بعض حلي نسائهم للصحابي عبدالله بن رواحة؛ ليتجاوز في تقدير القسمة لصالحهم، فقال لهم: «يا معشر اليهود، والله إنكم لمن أبغض خلق الله إليّ، وما ذلك بحاملي على أن أحيف عليكم(أظلمكم) فأما ما عرضتم من الرشوة فإنها سحت، وإنا لا نأكلها، فقالوا: بهذا قامت السماوات والأرض وبهذا غلبتمونا» ( أي بالعدل) (شرح الموطأ للإمام مالك ) .
யூதர்களுக்கு எதிரான ஃகைபர் யுத்தம் அதில்முஸ்லிம்கள் வெற்றி பெற்றபின், கைப்பற்றிய விளைநிலத்தை யூதர்களிடமே திருப்பி அளித்தார்கள் நபியவர்கள். விளைச்சலில் முஸ்லிம்களுக்கு யூதர்கள் பங்குசெலுத்த வேண்டும் என்று உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது.
அந்தப் பங்கைநிர்ணயித்து விளைச்சலைப் பாகம் பிரிக்க அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்களைத் தான் நபியவர்கள் அனுப்பிவைப்பார்கள். மிகவும் கவனமுடன் அனைத்தையும் சரிபார்த்து, விளைச்சலைப் பங்கிட்டு எது முஸ்லிம்களுக்கு எது யூதர்களுக்கு என்று இப்னுரவாஹா சொன்னதும்,“நீர் நியாயமாய்ப் பங்கு பிரிக்கவில்லை இப்னு ரவாஹா.” என்று சிலசமயம் யூதர்கள் குறுக்கிடுவார்கள்.
நியாயமாய் அது கோபத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் மிக எளிதான உபாயத்தைக் கையாண்டார் இப்னு ரவாஹா (ரலி) “அப்படியா! ஒன்றும் பிரச்சினையில்லை. உங்களுக்கு எந்தப் பங்கு வேண்டுமோ அதை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.”
ஒருமுறைஅந்த யூதர்கள் தங்கள் பெண்களின் நகைகள் சிலவற்றைத் திரட்டி அவருக்கு அன்பளிப்பு எனும் பெயரில் லஞ்சமாய் அளிக்க வந்தார்கள். “இந்தா இது உமக்கு. உம் வீட்டுப் பெண்கள் மகிழ்வார்கள்; வைத்துக்கொள்ளும். ஏதோ பங்கு பிரிப்பதைப் பார்த்துச் செய்யும்!” என்று கூறினார்கள்.
அது வேறொன்றுமில்லை. கையூட்டு அளித்து அவரைக் கைக்குள் போட்டுக்கொண்டால், தங்களுக்குச் சாதகமாய் அவர் பங்கு பிரிப்பார் என்பது யூதர்களது எண்ணம்.
ஆனால், அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்களோ, “ஓ யூதர்களே! அல்லாஹ்வின் மீது ஆணையாகக் கூறுகிறேன்! இறைவனின் படைப்பில் நீங்களே எனக்கு மோசமானவர்கள். ஆனால், அதற்காக உங்களுக்கு அநீதி இழைக்கும்படி நடந்துகொள்ள வேண்டும் என்று நான்ஒருநாளும் நினைத்ததில்லை. கையூட்டுப் பெறுவது எங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. அதை நாங்கள் தொடக்கூட மாட்டோம்.”
அந்தபதிலைக் கேட்டுவிட்டு மறைக்க இயலாமல் உண்மையைப் பேசினார்கள் யூதர்கள். “இது, இந்த நேர்மை தான் வானத்தையும் பூமியையும் தாங்கிப் பிடித்துள்ளது.”( நூல்: முவத்தா லிஇமாமி மாலிக் )
وقال الآخر: اللهم إن كنتَ تعْلَم أني اسْتَأجَرْتُ أجيرًا بفَرَق من ذُرَة فأعْطيتُه، وأَبَى ذاك أنْ يأخُذَ، فعَمَدتُ إلى ذلك الفَرَق فزرعتُه، حتى اشتريتُ منه بقرًا وراعِيها، ثم جاء فقال: يا عبد الله أعْطِني حَقِّي، فقلتُ: انطلقْ إلى تلك البقر وراعِيها فإنها لك، فقال: أتستهْزِئ بي؟ قال: فقلت: ما أستهزئ بك ولكنها لك، اللهم إن كنتَ تعلم أنِّي فعلتُ ذلك ابتغاء وجهك، فافْرُجْ عنا فكُشِف عنهم»
குகையில் மாட்டிக் கொண்ட மூவரில் மூன்றாமவர் பிரார்த்திக்கும் போது, "இறைவா நான் மூன்று ஸாவு கேழ்வரகு கூலிக்கு ஒரு வேலையாளை அமர்த்தினேன். கூலியை நான் கொடுத்தபோது அதை அவர் மறுத்து விட்டார். அந்தக் கேழ்வரகைப் பயிர் செய்தேன். அதன் வருமானத்தில் மாடுகளையும் அதை மேய்ப்பவரையும் விலைக்கு வாங்கினேன். பிறகு அவர் வந்து, அல்லாஹ்வின் அடிமையே! என்னுடைய கூலியைக் கொடு! என்றார். இந்த மாடுகள், அதை மேய்ப்பவர்கள் எல்லாம் உமக்குரியவை. எடுத்துச் செல்லும் என்று கூறினேன். அதற்கவர் என்னைக் கேலி செய்கிறீரா? என்று கேட்டார். நான் உம்மைக் கேலி செய்யவில்லை. இவை உமக்குரியவைதான் எனக் கூறினேன். இறைவா! இதை நான் உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் எங்களை விட்டு இந்தச் சிரமத்தை நீக்குவாயாக" எனப் பிரார்த்தித்தார். முழுமையாகச் சிரமம் விலகியது.”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி )
தவறிழைத்ததை ஒத்துக் கொள்வதில் நேர்மை!
அகழ்ப்போர் முடிந்து நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்குத் திரும்பினார்கள். அன்று அவர்கள் தனது மனைவி உம்மு ஸலமாவின் வீட்டில் மதிய வேளையில் குளித்துக் கொண்டிருந்தபோது வானவர் ஜிப்ரீல் (அலை) நபியவர்களை சந்தித்து ''என்ன நீங்கள் உங்களது ஆயுதத்தைக் கீழே வைத்து விட்டீர்களா? நிச்சயமாக வானவர்கள் தங்களின் ஆயுதங்களை இன்னும் கீழே வைக்கவில்லை. நான் இப்போதுதான் எதிரிகளை விரட்டிவிட்டு வருகிறேன். நீங்கள் உங்கள் தோழர்களுடன் குரைளாவினர்களை நோக்கிப் புறப்படுங்கள். உங்களுக்கு முன் நான் சென்று அவர்களுடைய கோட்டைகளை அசைக்கிறேன். அவர்களின் உள்ளங்களில் பயத்தை ஏற்படுத்துகிறேன்'' என்று கூறிவிட்டு அங்கிருந்து வானவர்களின் ஒரு கூட்டத்துடன் புறப்பட்டார்.
நபி (ஸல்) அவர்கள் ஒருவரை அனுப்பி மக்களுக்கு மத்தியில் அறிவிக்கக் கூறினார்கள்:
''யார் கட்டளையைக் கேட்டு கீழ்ப்படிந்து நடக்கிறாரோ அவர் அஸ்ர் தொழுகையை குரைளாவினரிடம் சென்றுதான் தொழ வேண்டும்'' (அதாவது உடனடியாக இங்கிருந்து குரைளாவினரை நோக்கி புறப்பட வேண்டும்) என்று கூறினார்கள். மதீனாவில் அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூமை பொறுப்பாளராக நியமித்துவிட்டு நபியவர்கள் புறப்பட்டார்கள். போர்க் கொடியை அலீயிடம் வழங்கி அவரை அவசரமாக முன்கூட்டி அனுப்பி வைத்தார்கள். அலீ (ரழி) படையுடன் குரைளாவினரின் கோட்டையைச் சென்றடைந்தார்கள். அங்கிருந்த யூதர்கள், அலீ (ரழி) காதில் படும்படியாக நபி (ஸல்) அவர்களைக் கடுமையாக ஏசினர்.
நபி (ஸல்) அவர்கள் முஹாஜிர்கள் மற்றும் அன்சாரிகளின் சில குறிப்பிட்ட நபர்களுடன் மதீனாவிலிருந்து புறப்பட்டு குரைளாவினரின் ஒரு கிணற்றுக்கு அருகில் வந்து இறங்கினார்கள். அக்கிணற்றுக்கு 'அன்னா கிணறு' என்று கூறப்படும்.
மீதமுள்ள முஸ்லிம்கள் உடனடியாக குரைளாவினரை நோக்கிப் புறப்பட்டார்கள். வழியில் அஸ்ர் தொழுகையின் நேரம் வந்தவுடன்: ''அஸ்ர் தொழுகையை நேரம் தவறுவதற்குள் வழியிலேயே தொழுது விடுவதா அல்லது நேரம் தவறினாலும் குரைளா சென்று தொழுவதா'' என அவர்களுக்கு மத்தியில் இரு கருத்துகள் நிலவின. மதீனாவிலேயே அஸ்ர் தொழுது விட்டு புறப்படலாமென யாரும் தாமதித்துவிடக் கூடாது என்ற கருத்தில்தான் நபி (ஸல்) அவர்கள் குரைளா சென்று அஸ்ர் தொழ வேண்டுமென கூறினார்கள். தொழுகை நேரத்தைத் தவறவிடுவது நபியவர்களின் நோக்கமல்ல என்று கூறிவிட்டு சிலர் வழியிலேயே அஸ்ர் தொழுகையை நிறைவேற்றினர். இவர்களைத் தவிர மற்றவர்கள் நபியவர்கள் கூறியபடி குரைளா சென்று அஸ்ர் தொழுகையை நிறைவேற்றினர். அப்போது மக்ரிப் நேரமாக இருந்தது. இன்னும் தாமதமாக வந்து சேர்ந்த சிலர் இஷா நேரத்தில் அஸ்ர் தொழுதனர்.
நபி (ஸல்) அவர்கள் இரு கூட்டத்தார்களின் செயல்களைப் பற்றி ஏதும் கடிந்து கொள்ளவில்லை. இவ்வாறு இஸ்லாமியப் படை ஒன்றன்பின் ஒன்றாக மதீனாவிலிருந்து புறப்பட்டு நபியவர்கள் தங்கியிருந்த இடத்தை வந்தடைந்தது. இஸ்லாமியப் படையில் மொத்தம் மூவாயிரம் வீரர்களும், முப்பது குதிரைகளும் இருந்தன. குரைளாவினரின் கோட்டைகளைச் சுற்றி வளைத்து முற்றுகையிட்டனர். முஸ்லிம்களின் முற்றுகை கடுமையாக இருந்ததைக் கண்ட குரைளாவினரின் தலைவன் கஅப் இப்னு அஸது தனது மக்களிடம் மூன்று கருத்துகளை முன் வைத்தான்.
1) அனைவரும் முஸ்லிமாகி முஹம்மதுடைய மார்க்கத்தில் சேர்வது. அப்படி சேர்ந்தால் நாம் நமது உயிர், பொருள், பிள்ளைகள், பெண்கள் அனைவரையும் பாதுகாத்துக் கொள்ளலாம். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! முஹம்மது அல்லாஹ்வின் புறத்திலிருந்து அனுப்பப்பட்ட தூதர் என்பதும், அவரைப் பற்றி தவ்றாத்தில் கூறப்பட்டிருக்கிறது என்பதும் உங்களுக்கு தெள்ளத் தெளிவாக தெரியும்.
2) நமது பிள்ளைகளையும் பெண்களையும் நாமே நமது கரத்தால் கொன்றுவிடவேண்டும். பிறகு வாளை உருவி முஹம்மதுடன் போர் புரிவோம். நாம் அவர்களை வெற்றி கொள்வோம் அல்லது நாம் அனைவரும் மரணமாகும் வரை அவருடன் போர் புரிவோம்.
3) சனிக்கிழமை வருவதை எதிர்பார்ப்போம். அன்று நாம் போர் புரியமாட்டோம் என்று முஸ்லிம்கள் எண்ணிக் கொண்டிருப்பார்கள். அந்நேரத்தில் அவர்களைத் திடீரெனத் தாக்குவோம்.
இவ்வாறு மூன்று கருத்துகளை கஅப் முன்வைத்தும் அதில் எந்த ஒன்றையும் யூதர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் கஅப் கடும் கோபமடைந்து, ''உங்களில் ஒருவர் கூட வாழ்நாளில் ஒரு நாளும் உறுதியுடன் வாழ்ந்ததில்லை'' என்று கடுகடுத்தார். குரைளாவினர் இவ்வாறு தங்களது தலைவர் கஅபுடைய எந்த ஆலோசனையையும் ஏற்றுக் கொள்ளவில்லை. இறுதியாக நபியவர்கள் கூறும் தீர்ப்பையே ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாயினர்.
இருப்பினும் சரணடைவதற்கு முன்னால் நபி (ஸல்) அவர்கள் தங்களுக்கு என்ன தீர்ப்பளிப்பார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள தங்களுக்கு நண்பர்களாக இருந்த சில முஸ்லிம்களுடன் தொடர்பு கொண்டு அறிய விரும்பினர். ஆகவே, நபியவர்களிடம் தூதனுப்பி அபூலுபாபாவை தங்களிடம் அனுப்பும்படி கேட்டுக் கொண்டனர். அபூலுபாபா யூதர்களின் நட்புரீதியான ஒப்பந்தக்காரராக இருந்தார். இவருடைய பொருட்களும், பிள்ளைகளும் யூதர்களின் பகுதியில் இருந்தன.
فذهب
أبو لبابة رضي الله عه وأرضاه إليهم، فلما رأوه قام إليه الرجال، وأخذت النساء
والصبيان في البكاء، فرق لهم عندما رأى ذلك الموقف، فقالوا له: يا أبا لبابة! أترى
أن ننزل على حكم محمد صلى الله عليه وسلم، فقال: نعم، لكنه أشار إلى حلقه، يعني:
أن جزاءهم الذبح، وكأنه يقول لهم: إن الرسول صلى الله عليه وسلم عازم على ذبحكم،
அபூலுபாபா (ரலி) அவர்கள் யூதர்களைச் சந்திக்கச் சென்றார்கள். சந்தித்தவுடன் அவரிடம் பெண்களும், சிறுவர்களும் எழுந்து வந்து அழுதனர். இதைப் பார்த்து அவரது உள்ளம் இளகிவிட்டது. அவர்கள் ''அபூலுபாபாவே! நாங்கள் நபியவர்களின் தீர்ப்பை ஏற்றுக் கொண்டால் நபியவர்கள் எங்களுக்கு என்ன தீர்ப்பளிப்பார்கள்?'' என்றனர். அப்போது அபூலுபாபா ''தனது கழுத்தைச் சீவுவது போல் செய்து காட்டி, அந்தத் தீர்ப்பு கொலை!'' என்று சூசகமாகக் கூறினார்.
يقول أبو لبابة رضي الله عنه: فوالله مازالت قدماي من مكانهما حتى علمت أني قد خنت الله ورسوله، وهنا عرف أنه قد أذنب ذنباً كبير جداً، لكن ما هو الحل؟ التوبة من قريب، فانطلق أبو لبابة رضي الله عنه مباشرة على وجهه، ولم يأت رسول الله صلى الله عليه وسلم، بل ذهب إلى مسجد رسول الله صلى الله وربط نفسه في عمود من أعمدة المسجد وقال: لا أبرح مكاني هذا حتى يتوب الله علي مما صنعت، يعني: أنه ربط نفسه في سارية من سواري المسجد،
நபி (ஸல்) அவர்களின் இந்த இரகசிய முடிவை வெளிப்படுத்தி தவறு செய்து விட்டோம். அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மோசடி செய்து விட்டோம் என்று அபூலுபாபா உணர்ந்தார், வருந்தினார். எனவே, நபியவர்களைச் சந்திக்கச் செல்லாமல் மஸ்ஜிதுந் நபவிக்குச் சென்று தன்னை ஒரு தூணுடன் கயிற்றால் பிணைத்துக் கொண்டார். நபியவர்கள்தான் தன்னை அவிழ்த்துவிட வேண்டும், இனி ஒருக்காலும் குரைளாவினரின் பூமிக்கு செல்லவே மாட்டேன் என்று சத்தியம் செய்து கொண்டார்.
قال ابن إسحاق : فلما بلغ رسول الله - صلى الله عليه وسلم - خبره ، وكان قد استبطأه ، قال : أما إنه لو جاءني لاستغفرت له ، فأما إذ قد فعل ما فعل فما أنا بالذي أطلقه من مكانه حتى يتوب الله عليه
நபியவர்கள் அபூலுபாபாவின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தார்கள். இவரின் செய்தி நபியவர்களுக்கு கிடைத்தவுடன் ''அபூலுபாபா என்னிடம் நேரடியாக வந்து விஷயத்தை கூறியிருந்தால் நான் அவருக்காக அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டிருப்பேன். ஆனால், எப்போது அவர் அவருடைய விருப்பப்படி நடந்து கொண்டாரோ அல்லாஹ் அவரது பிழை பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்வரை நான் அவரை அவிழ்த்துவிட முடியாது'' என்றார்கள்.
قال ابن هشام : أقام مرتبطا ست ليال تأتيه امرأته كل صلاة فتحله حتى يتوضأ ويصلي ثم يرتبط .
அபூ லுபாபா ஆறு இரவுகள் தூணிலேயே தன்னைக் கட்டிக் கொண்டிருந்தார். ஒவ்வொரு தொழுகையின் நேரத்திலும் அவரது மனைவி அவரை அவிழ்த்து விடுவார். அவர் தொழுது முடித்தவுடன் மீண்டும் தன்னைத் தூணில் கட்டிக் கொள்வார்.
قال ابن إسحاق : فحدثني يزيد بن عبد الله بن قسيط : أن توبة أبى لبابة نزلت على رسول الله - صلى الله عليه وسلم - من السحر ، وهو في بيت أم سلمة . ( فقالت أم سلمة ) : فسمعت رسول الله - صلى الله عليه وسلم - من السحر وهو يضحك . قالت : فقلت : مم تضحك يا رسول الله ؟ أضحك الله سنك ؛ قال : تيب على أبي لبابة ، قالت : قلت : أفلا أبشره يا رسول الله ؟ قال : بلى ، إن شئت قال : فقامت على باب حجرتها ، وذلك قبل أن يضرب عليهن الحجاب ، فقالت : يا أبا لبابة ، أبشر فقد تاب الله عليك . قالت : فثار الناس إليه ليطلقوه فقال : لا والله حتى يكون رسول الله - صلى الله عليه وسلم - هو الذي يطلقني بيده ؛ فلما مر عليه رسول الله - صلى الله عليه وسلم - خارجا إلى صلاة الصبح أطلقه .
நபி (ஸல்) அவர்கள் ஓர் இரவு உம்மு ஸலமாவின் வீட்டில் இருந்தபோது அதிகாலை ஸஹர் நேரத்தில் மாநபி ஸல் அவர்கள் சிரித்தார்கள். அப்போது, அதைக் கண்ட உம்மு ஸலமா (ரலி) அவர்கள் "அல்லாஹ் உங்களை எப்போதும் சிரித்த நிலையிலேயே வைத்திடுவானாக! அல்லாஹ்வின் தூதரே! எதற்காக சிரித்தீர்கள்!? என்று கேட்டார்கள். அதற்கு, மாநபி ஸல் அவர்கள் " அபூலுபாபாவின் பாவமன்னிப்பை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான்" ஆதலால் மகிழ்ச்சியில் சிரித்தேன். என்றார்கள்.
அப்போது, உம்மு ஸலமா (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதரே! இந்த நற்செய்தியை அவருக்கு நான் போய் தெரிவிக்கட்டுமா?" என்று கேட்டார்கள்.
அதற்கு, மாநபி ஸல் அவர்கள் "நீ விரும்பிய வண்ணம் அவருக்கு இந்த சுபச் செய்தியை அறிவித்து விடு!" என்று கூறி இசைவு தெரிவித்தார்கள்.
அப்போது, உம்மு ஸலமா (ரலி) அவர்கள் தமது அறையின் வாசலில் வந்து நின்று "அபூ லுபாபாவே! சோபனம் பெற்றுக் கொள்வீராக! அல்லாஹ் உமது தவ்பாவை ஏற்றுக் கொண்டான்" என்று உரக்க கூறினார்கள்.
இச்செய்தியைக் கேட்டதும் தான் தாமதம் மக்கள் அவரை அவிழ்த்து விடுவதற்காக அவரை நோக்கி விரைந்தனர். ஆனால், நபி (ஸல்) அவர்களைத் தவிர தன்னை வேறு யாரும் அவிழ்க்கக் கூடாது என்று மறுத்துவிட்டதால் நபியவர்கள் சுபுஹு தொழுகைக்கு வந்தபோது அவரை அவிழ்த்து விட்டார்கள்.
இந்தப் போர்
ஹிஜ்ரி 5, துல்கஅதா
மாதத்தில் நடைபெற்றது. முற்றுகை மொத்தம் இருபத்தைந்து இரவுகள் நீடித்தது. ( நூல்:
ரஹீக் அல் மக்தூம், ஸஹீஹுல் புகாரி, இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது )