Wednesday, 10 June 2026

பாலைவனம்... தாகம்... தண்ணீர்... மரணம்!!!

 

பாலைவனம்... தாகம்... தண்ணீர்... மரணம்!!!



கடந்த 04/06/2026 அன்று வட ஆப்பிரிக்க நாடான நைஜரில் அரங்கேறியுள்ள சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  

அதாவது, மாலி நாட்டில் நடைபெற்ற பக்ரீத் பண்டிகையில் பங்கேற்றவர்கள், விழாவை முடித்துவிட்டு தாயகம் திரும்பினர். நைஜர்-அல்ஜீரியா எல்லைக்கு அருகே உள்ள அசமகா பகுதியில் வந்தபோது அவர்கள் வந்துகொண்டிருந்த வாகனம் (லாரி) சஹாரா பாலைவனத்தின் தொலைதூரப் பகுதியில் பழுதாகி நின்றது. 

தண்ணீர் மற்றும் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத இடத்தில் அந்த வாகனம் பாலைவன மணலில் சிக்கிக்கொண்டது. ஓட்டுநர் மற்றும் பயணிகள் நீண்ட நேரம் போராடியும் வாகனத்தை மீட்க முடியவில்லை. 

இதனிடையே, அவர்களிடம் இருந்த தண்ணீர் மற்றும் உணவுகள் தீர்ந்துபோனது. இதனால், கடும் வெப்ப அலை வீசும் அந்த பாலை வனப்பகுதியில் குடிக்கத் தண்ணீர் கூட இல்லாமல் அவர்கள் தாகத்தால் துடிதுடித்து இறந்து போயினர். இதில், கிட்டதட்ட 49 பேர் உயிர் இழந்திருப்பதாகக் கூறப்படுகிறது. 

இதில், இரண்டு நபர்கள் மட்டும் தாகத்தைத் தாக்குப் பிடித்து சுமார் 50 கி.மீ. தூரம் பாலைவன மணலில் நடந்து சென்று நீர் நிலையைக் கண்டுபிடித்து தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர். பின்பு, அவர்கள் இது குறித்த தகவலை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதையடுத்து, மீட்கப்பட்ட 49 பேரின் உடல்களும் அங்குள்ள பொது புதைகுழியில் அடக்கம் செய்யப்பட்டதாக நைஜர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தாகத்தால் துடிதுடித்து 49 பேர் உயிர் இழந்த இந்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ( நன்றி: நக்கீரன், 06/06/2026 )

இந்த சம்பவத்தின் ஊடாக நாம் தண்ணீரின் அருமையையும், மனித உடலமைப்பின் யதார்த்தமான சூழலையும், பாலைவனம் என்ற இறைவனின் அற்புதப் படைப்பையும் புரிந்து கொள்ள கடமைப் பட்டுள்ளோம்.

தண்ணீரின் அருமை...

மனித உடலில் தண்ணீர் என்பது ஜீரணம், வியர்வை வெளியேற்றம், உடலுக்குள் சத்துணவை எடுத்துச் செல்வது, திரவ மற்றும் திடக் கழிவுகளை வெளியேற்றுவதற்கு, உடலின் வெப்பநிலையை சீராக வைத்திருப்பதற்கு போன்ற பல்வேறு ரசாயன மாற்றங்கள் நிகழ்வதற்கு தண்ணீர் அவசியமாகிறது.

நம் உடலின் மொத்த எடையில் 60 சதவீதம் அளவிற்கு இருப்பது தண்ணீர் தான். 5 முதல் 10 சதவீதம் வரை உடலில் இருந்து தண்ணீர் இழப்பு ஏற்பட்டால் அது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதே நேரத்தில் 15 முதல் 20 சதவீதம் வரை தண்ணீர் இழப்பு ஏற்படும் பட்சத்தில் அது ஏறக்குறைய மரணத்தில் சென்று முடியலாம்.

உடலில் உள்ள திசுக்களுக்கு ஒரு பாதுகாப்பு போர்வை அல்லது மெத்தை போன்று தண்ணீர் செயலாற்றுகிறது. உடலின் அனைத்து திசுக்களுக்கும், ரத்தத்தின் அடிப்படைக்கும், மூட்டு இணைப்புகளில் உள்ள திரவம், கண்ணீர், கோழை வடிதல் போன்றவற்றுக்கும் தண்ணீரே காரணமாகத் திகழ்கிறது. உடல் உறுப்புகள் முறைப்படி செயல்படுவதற்கு உராய்வு எண்ணெய் போன்று தண்ணீர் செயலாற்றுகிறது.

நம்முடைய தோலினை மென்மையாகவும், மிருதுவாகவும் வைத்துக் கொள்வதற்கும் உடலில் உள்ள தண்ணீரே பங்காற்றுகிறது. வயது முதிர்வடையும் போது தோலில் ஏற்படும் சுருக்கங்களுக்கும் உடலில் உள்ள தண்ணீரின் அளவு குறைவதே காரணம். ஆகவேதான் பிறக்கும் குழந்தைகளின் உடல்களில் சுமார் 75 முதல் 80 சதவீதம் அளவிற்கு தண்ணீர் இருப்பதால் அவர்களின் தோல் மென்மையானதாகக் காணப்படுகிறது. அதுவே 65- 70 வயதான முதியோருக்கு உடலில் தண்ணீர் 50 சதவீதமாகக் குறைவதால் சுருக்கங்கள் காணப்படுகிறது. தண்ணீர் குறைவின் காரணமாகவே எலும்பு இணைப்புகளில் பாதிப்பு ஏற்படுவதும் முதுமையில் நிகழ்கிறது.

மனித உடலுக்கு அன்றாடம் சராசரியாக 6 முதல் 8 டம்ளர் வரையிலான தண்ணீர் தேவையாகிறது. ( நன்றி: கீற்று, 19/01/2010 )

பாலைவனம்...

பூமியின் பரப்பளவில் ஐந்தில் ஒரு பகுதி பாலைவனங்கள் தாம். உலகின் பாலைவனங்களை மூன்றாகப் பிரிக்கலாம்.

கோடைக்காலத்தில் கடுமையாக வெயில் அடிக்கிற பாலைவனங்கள் ஒரு வகை. கடும் குளிர் வீசுகின்ற பாலைவனங்கள் இரண்டாவது வகை. பனி படர்ந்த பனி பொழிகிற துருவ பாலைவனங்கள் மூன்றாம் வகை.

சகாரா பாலைவனம், அரேபிய பாலைவனம், ஆப்பிரிக்காவில் உள்ள கலஹாரி பாலைவனம், அமெரிக்காவில் உள்ள மொகாவி பாலைவனம், இந்தியாவில் உள்ள தார் பாலைவனம் முதலியவை வெயில் வீசும் பாலைவனங்கள். 

சகாராவில் 1922 -ம் ஆண்டில் லிபியா நாட்டில் உள்ள அசிசியா என்னுமிடத்தில் கோடைக்காலத்தில் அதிகபட்சமாக 58 டிகிரி வெப்பம் பதிவானது.

தென் அமெரிக்காவில் உள்ள அடகாமா பாலைவனம், ஆப்பிரிக்காவில் உள்ள நமீப் பாலைவனம், சீனாவில் உள்ள தக்கலாமக்கான் பாலைவனம், சீனாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள கோபி பாலைவனம் முதலியவை கடும் குளிர் வீசுகிற பாலைவனங்கள். ஆனாலும் இவற்றில் கோபி, தக்கலாமக்கான் ஆகியவற்றில் கோடையில் வெயில் உண்டு.

மூன்றாவது வகை, துருவப் பாலைவனங்கள் ஆகும். அண்டார்டிகா, யூரேஷ்யா, வட அமெரிக்காவின் வட பகுதி, க்ரீன் லாந்து போன்ற இடங்களில் உள்ள பனி நிறைந்த பாலைவனங்கள் இந்த இனத்தை சேர்ந்தவையாகும். இந்த பாலைவனங்களும் வருடத்திற்கு 38 செ.மீ.க்கும் குறைவான மழையையே பெறுகிறது. இதுவும் கூட பனிப்பொழிவு போலத்தான் இருக்கும்.

வெப்ப பாலைவனங்களைப் போல இதில் மணற்பரப்பு அதிகமாக காணப்படாவிட்டாலும் பாறைகள் அதிகமாக இருக்கும். குறைவான அளவிலே உயிரினங்கள் இங்கு வாழும். உலகின் மிகப்பெரிய பாலைவனமான சஹாரா பாலைவனத்தை விட மிகவும் வறண்ட பகுதியே அண்டார்டிகா.

பாலைவனத்தில் பார்க்குமிடமெல்லாம் மருந்துக்குக்கூட தண்ணீர்கிடைக்காது. ஆனால் இந்த இடத்திலும் பல உயிரினங்கள் வாழ்கின்றன. தாவரங்கள் முளைக்கின்றன.

பாலைவனத்தில் நத்தைகள் ஏராளமாக இருக்கும் அமெரிக்க பாலைவனங்களில் "பேக் ரேட்" என்ற ஒருவகை எலிகள் உண்டு. வட ஆப்பிரிக்காவிலும், ஆசியாவிலும் உள்ள பாலைவனங்களில் "ஜெர்போவா" என்ற விலங்குகள் உண்டு. இவை பார்ப்பதற்கு கிட்டத்தட்ட கங்காருவைப்போல நீளமான பின்னங்கால்களை கொண்டிருக்கும். அரேபிய, ஆப்பிரிக்க பாலைவனங்களில் ஓநாய் வகையைச் சேர்ந்த ஒருவகை விலங்கு காணப்படுகிறது.

பலவிதமான பல்லிகள், ஆந்தைகள், புழு, பூச்சிகள், கொடிய விஷமுடய பாம்புகளை பாலைவனங்களில் அதிகம் காணலாம். இவை உயிர்வாழ நீர் அதிகம் தேவையில்லை. வியர்வை, சிறுநீர் கூட மிகமிகக் குறைந்த அளவிலேயே வெளிப்படும். சிறு அளவில் வெளியிடப்படும் இவற்றின் சிறுநீரில் யூரியாவும், யூரிக் அமிலமும் அதிகம்.

பாலைவன மிருகங்களில் மிக முக்கியமானது ஒட்டகமாகும். இதை பாலைவனக் கப்பல் என்கிறார்கள். உலர்ந்த புல்லும், முட்செடிகளும் இதன் உணவு. அதன் மூக்கு, காது, கண் முதலிவை மணலால் பாதிக்கப்படாடதபடி அமைந்துள்ளது.

பாலைவனத்தில் புதர்செடிகளும், சப்பாத்திக்கள்ளி வகையைச் சேர்ந்த செடிகளும் காணப்படுகின்றன. புதர் செடிகளில் இலைகளை விட முட்கள்தான் அதிகம். இலைகள் குறைந்திருப்பதால் நீர் ஆவியாதல் குறைவாகவே இருக்கும். சப்பாத்திக் கள்ளியின் தண்டுப்பகுதி தடித்து சதைப்பற்றுள்ளதாக அமைந்திருக்கிறது. இதிலும் முள் மட்டுமே உண்டு. இலைகள் கிடையாது.

 சகாரா பாலைவனம்...

ஆப்பிரிக்கக் கண்டத்தின் வட பகுதியில் கிழக்கிலிருந்து மேற்குவரை அமைந்திருக்கிறது. சகாரா பாலைவனத்தில் 11 நாடுகள் அமைந்துள்ளன. லிபியா, எகிப்து ஆகிய நாடுகளின் பெரும் பகுதி பாலைவனமே.

சகாரா பாலைவனம் பல லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இந்தப் பாலைவனம் முழுவதிலும் ஒரே மணலாக இருக்கும் என்று நினைத்தால் அது தவறு. 

30 சத விகிதப் பரப்பில் மட்டுமே மணல். மீதிப் பகுதியானது முட்புதர், பாறைகள் முதலியவற்றால் ஆனது. இத்துடன் ஒப்பிட்டால் அரேபியப் பாலவனத்தின் பெரும் பகுதி மணல்தான்.

பாலைவனங்கள் மாயமாக மறைந்துவிட்டால்

பாலைவனங்கள் என்றாலே நம் நினைவுக்கு வருவது வறண்ட நிலம், கொளுத்தும் வெயில் மற்றும் ஆள் அரவமற்ற மணல் மேடுகள் தான். இந்த இடமெல்லாம் எதற்கு? என்று என்றாவது நாம் சிந்தித்து இருக்கின்றோமா? மாறாக, நாம் எளிதாகக் கடந்து போகிறோம்.

பூமியிலிருந்து அனைத்துப் பாலைவனங்களும் ஒருநாள் மாயமாக மறைந்துவிட்டால், அது ஒரு பசுமையான மாற்றமாக இருக்கும் என்று நாம் நினைத்தால், அதுதான் மிகப்பெரிய தவறு.

பூமியின் பரப்பளவில் ஐந்தில் ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ள இந்தப் பாலைவனங்கள், நமது கிரகத்தின் மிக முக்கியமான 'சுற்றுச்சூழல் காவலர்கள்' என்கிறார்கள் சுற்றுச் சூழல் ஆய்வாளர்கள்.

பூமியின் வெப்பநிலையைச் சமநிலைப்படுத்துவதில் 'ஹாட்லி செல்' (Hadley cell) எனப்படும் வளிமண்டல சுழற்சி முக்கிய பங்கு வகிக்கிறது. பாலைவனங்கள் மறைந்தால், இந்தச் சுழற்சி முறை மாறி, உலகெங்கிலும் வீசும் 'வர்த்தகக் காற்றுகளின்' (Trade Winds) திசை மாறும். இது நாம் இதுவரை பார்த்திராத மோசமான வானிலை மாற்றங்களை உருவாக்கும்.

சஹாரா பாலைவனத்திலிருந்து பறக்கும் தூசுகள், அட்லாண்டிக் பெருங்கடலில் உருவாகும் புயல்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டவை. பாலைவனங்கள் இல்லையென்றால், புயல்களைத் தடுக்க ஆளின்றி, அவை பெரும் சீற்றத்துடன் நிலப்பகுதிகளைத் தாக்கும். பாலைவனத்தை மட்டுமே நம்பி வாழும் பல உயிரினங்கள் திக்கற்றுப் போகும். உலகில் தற்போது 250-க்கும் குறைவாகவே உள்ள சஹாரா சிறுத்தைகள் பாலைவனம் மறைந்தால் வரலாற்றில் இருந்து மறைந்துவிடும். மிக அரிதான டாமா மான் (Dama Gazelle) இனம் ஏற்கனவே அழியும் நிலையில் உள்ளது, பாலைவனங்களின் மறைவு இதை கடைசி நிலைக்குத் தள்ளும். நீரைச் சேமித்து வைக்கும் கற்றாழை (Cactus) 'உயிர் பிழைப்பாளர்கள்' இல்லையென்றால், அந்தச் சூழலியல் சமநிலை முற்றிலும் சீர்குலையும்.

பாலைவனங்கள் என்பவை வெறும் வெற்று நிலங்கள் அல்ல; அவை பூமியின் வெப்பநிலையைச் சீராக வைக்கும் 'தெர்மோஸ்டாட்' போன்றவை. அழகுக்கும் ஆபத்துக்கும் பெயர்போன இந்தப் பாலைவனங்கள் மறைவது, நமது பூமியின் நுரையீரலில் ஒரு பகுதியை இழப்பதற்குச் சமம். ( நன்றி: தி இண்டியன் எக்ஸ்பிரஸ், 23/02/2026 )

இறைவனின் ஒவ்வொரு படைப்பிற்கும் ஒரு நோக்கம் உண்டு - பாலைவனங்கள் அது படைக்கப்பட்டதன் நோக்கம் ஒரு சிறந்த உதாரணம் ஆகும்.

وَمَا خَلَقْنَا السَّمَآءَ وَالْاَرْضَ وَمَا بَیْنَهُمَا لٰعِبِیْنَ 

வானத்தையும் பூமியையையும் அவ்விரண்டின் மத்தியில் உள்ளவையையும் விளையாட்டாக (வீண் விளையாட்டிற்காக ) நாம் படைக்க வில்லை. ( அல்குர்ஆன்: 21: 16 )

وَمَا خَلَقْنَا السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَیْنَهُمَا لٰعِبِیْنَ 

مَا خَلَقْنٰهُمَاۤ اِلَّا بِالْحَقِّ وَلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا یَعْلَمُوْنَ 

வானத்தையும் பூமியையையும் அவ்விரண்டின் மத்தியில் உள்ளவையையும் விளையாட்டாக நாம் படைக்க வில்லை நிச்சயமாக அவ்விரண்டையும் உண்மையை கொண்டே தவிர அதை படைக்கவில்லை எனினும் பெரும்பாலானோர் அதை அறிய மாட்டார்கள். ( அல்குர்ஆன்: 44: 38,39 )

சஹாரா பாலைவனத்தில் தண்ணீர் தீர்வுக்கு வழி என்ன?

இஸ்லாம் மூன்று விதமான திட்டங்களை முன் வைக்கிறது. முதலாவது, அரசே நீர் நிலைகளை அமைத்துக் கொடுப்பது. இரண்டாவது சமூகத்தின் தன்வந்தர்கள் கொடைத் தன்மையோடு நீர் நிலைகளை அமைத்துக் கொடுப்பது. மூன்றாவது ஸதகத்துன் ஜாரியாவாக சமூகம் நீர் நிலைகளை உருவாக்குவது.

ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனத்தின் எல்லையில் அமைந்துள்ள சஹேல் பகுதி, குறைந்த மழைப்பொழிவு கொண்ட வறண்ட நிலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில் இப்பகுதியின் பல இடங்கள் பசுமையாக மாறி வருகின்றன. இதன் இன்னொரு பகுதியான சாட் (Chad) முதல் நைஜர் (Niger) வரையிலான நாடுகளில் தாவரங்களின் பரப்பளவு அதிகரித்து வருவதைக் காண முடிகிறது. இது குறிப்பிட்ட சில மாதங்களில் அந்த நிலப்பரப்பிற்கு வியக்கத்தக்க பசுமையான தோற்றத்தைத் தருகிறது. 

சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் ஒரு நீர் நிலை இருப்பதை அறிய முடிகிறது. அந்த நீர் நிலையில் தண்ணீர் அருந்தி தான் இரண்டு பேர் உயிர் தப்பியுள்ளனர்.

எனவே, அந்த நீர் நிலை மற்றும் சஹாரா எல்லையில் உள்ள சஹேல் நீர் நிலை, சாட் பகுதியில் உள்ள நீர் நிலை இந்த மூன்று நீர்நிலைகளை ஒன்றிணைத்து கால்வாயாகவோ அல்லது வடிகால் போன்றோ பாலைவனத்தில் அமைத்து இது போன்ற கோர மரணங்களை தடுக்க வேண்டும்.

இந்த திட்டத்தை செயல்படுத்த பலகோடி ரூபாய் செலவாகும் என்பது திண்ணம். ஆகவே, உலக வங்கியில் கடன் கத்தார் சவூதி பஹ்ரைன் போன்ற இஸ்லாமிய நாடுகளின் உதவியுடன் நைஜர் அரசு செயல் படுத்த வேண்டும்.

இஸ்லாமிய வரலாற்றில் மக்களின் தாகம் தீர்க்க பாலைவனத்தில், கரடு முரடான மலைக் குன்றுகளின் வழியாக கால்வாய் கட்டி நீண்ட தூரத்திற்கு தண்ணீரை மக்களின் பயன்பாட்டுக்கு வழங்கிய ஓர் இஸ்லாமியப் பேரரசின் முன்மாதிரி இருக்கிறது.

1) முதலாவது, அரசே நீர் நிலைகளை அமைத்துக் கொடுப்பது.

ஹிஜ்ரீ 2 ம் நூற்றாண்டின் இறுதி கட்டத்தில் இஸ்லாமிய பேரரசை பக்தாதிலிருந்து ஆட்சி செய்து கொண்டிருந்தார் அப்பாஸிய மன்னரான கலீபா ஹாரூன் ரஷீது ரஹ் அவர்கள்.

அவரது மனைவி அமத்துல் அஜீஸ் என்ற இயற் பெயரும் சுபைதா ரஹ் அவர்கள் என்ற புகழ்பெயரும் கொண்டவர்.  

அவர் ஹிஜ்ரீ 186 ம் ஆண்டு பக்தாதில் இருந்து ஹஜ்ஜுக்கு வந்த போது வருகிற வழியில் மக்காவிற்கு தண்ணீர் கொண்டுவருவதற்காக மிகப்பெரும் சிரமம் எடுத்துக் கொள்ளப்படுவதையும் இந்தப் பணியில் பலர் இறந்து போவதையும் அவர் கண்டார். இதில் அவர் மிகவும் வருத்த முற்றார்.

 

இந்தப்பிரச்சனை தீர தான் ஏதாவது செய்தாக வேண்டும் என்று முடிவெடுத்தார். தீர்க்க குணம் கொண்ட அவர் அருகில் தண்ணீர் அதிகமாக கிடைக்கிற இடம் எது என விசாரித்தார். தாயிபுக்கு செல்லும் வழியுல் உள்ள வாதி நுஃமான் என்ற இடத்தில் மலைப்பாறைகளுக்கு நடுவே அருமையாக ஓடிக் கொண்டிருக்கிற ஓடையைப் பற்றி அவருக்கு சொல்லப் பட்டது. உடனடியாக அரசு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். 

அங்கிருந்து மக்காவிற்கும் மக்காலிருந்து 20 கீமி தொலைவிலிருக்கிற அரபாவிற்கும் ஒரு வாய்க்கால் வெட்டி நீரை கொண்டு வருமாறு உத்தரவிட்டார்.

பாலைவனத்தில் ஒரு கால்வாய். அதுவும் செயற்கை கால்வாய். பெரிதாக இருபுறம் சுவர் எழுப்பி ஒரு மேம்பாலம் போல கட்டி சுவர்களுக்கு நடுவே ஒரு பள்ளம் அமைத்து ஒரு கால்வாய் கட்டப்பட்டது.

وقد أنفقت زبيدة الكثير من أموالها وجواهرها لتوفر للحجاج المياه العذبة والراحة و تحميهم من كارثة الموت. و بعد أن أمرت خازن أموالها بتكليف أمهر المهندسين والعمال لإنشاء هذه العين؛ أسرّ لها خازن أموالها بعظم التكاليف التي سوف يكلفها هذا المشروع، فقالت له: "اعمل ولو كلفتك ضربة الفأس دينارًا"،

இதற்கான பணிகளில் அதிக தொகை செலவான போது அரசாங்க கஜானாவில் ஒற்றை நாணயம் மிச்சமிருக்கிற வரை பணி தடை படக் கூடாது என்று உத்தரவிட்டார்.

அப்போது அவர் உத்தரவிட்ட வார்த்தை வைர வரிகளுக்கு சொந்தமானது. கோடாரியின் ஒரு அடிக்கு ஒரு தங்க நாணயம் கொடுக்க வேண்டியிருந்தாலும். கொடுங்கள்!" என்று கருவூலக் காப்பாளருக்கு உத்தரவிட்டார்.

ولما تمّ عملها اجتمع العمال لديها، وأخرجوا دفاترهم ليؤدوا حساب ما صرفوه، وليبرّئوا ذممهم من أمانة ما تسلموه من خزائن الأموال، وكانت السيدة "زبيدة" في قصر مطلٍّ على دجلة، فأخذت الدفاتر ورمتها في النهر، قائلة: "تركنا الحساب ليوم الحساب؛ فمن بقي عنده شيء من المال فهو له، ومن بقي له شيء عندنا أعطيناه

சுமார் பதினாறு கிலோ மீட்டர் நீளம் கொண்ட அந்த கால்வாய் கட்ட ஆறாயிரம் கிலோ தங்கம் அளவுக்கு செலவானது. வேலையை முடித்த பிறகு அது குறித்த செலவுப் பட்டியல் அடங்கிய ஒரு புத்தகத்தை அதிகாரிகள் சுபைதா அம்மையாரிடம் கொடுத்த போது திஜ்லா நதிக்கரையில் அமைந்த தனது அரண்மனையில் பால்கனியின் மேலிருந்த அந்த அம்மையார் அந்த செலவுப் புத்தகத்தை திஜ்லா நதியில் வீசி எறிந்து விட்டு சொன்னார்.  

"கணக்குப் பார்க்கப்படும் ஒரு நாளுக் (மறுமை நாளுக்) காக இதில் நான் கணக்குப் பார்க்க போவதில்லை" என்று கூறி, இனி யாருக்கேனும் பாக்கி வர வேண்டியிருக்குமானால் என்னிடம் அதைப் பெற்றூக் கொள்ளலாம் என்றார். மட்டுமல்ல அந்த அதிகாரிகளுக்கும் பணியாளர்களுக்கும் சிறப்பு ஆடைகளை அன்பளிப்பாக வழங்கினார்.

கி.பி 8 ம் நூற்றாண்டில் கட்டப் பட்ட இந்தக் கால்வாய் சுமார் 8 நூற்றாண்டுகள் மக்களுக்கு பயன்பட்டது. அவ்வப் போது இஸ்லாமிய ஆட்சியாளர்கள் அதை மராமத்து செய்து பாதுகாத்து வந்தனர். 

கி.பி 16 ம் நூற்றாண்டில் இஸ்லாமிய உலகை ஆண்ட துருக்கி சுல்தான் சுலைமான் ( தி கிரேட் சுலைமான் ) காலத்தில் இந்த கால் வாய் பல இடங்களிலும் உடைந்து போனது. அதன் பின்னர் மக்கள் பயன்பாட்டில் இருந்து காணாமல் போனது.

இதில் ஒரு ஆச்சரியம் என்ன வென்றால் சுபைதா அம்மையாரின் கால்வாய் காலப் போக்கில் உடைந்து போனாலும் அரபாவில் தங்கும் ஹாஜிகளுக்கு பெரும் பிரச்சனையாக இருந்த தண்ணீர் பிரச்சனையை தீர்க்க அதற்குப் பின்னர் வந்த மன்னர்கள் இதை முன்மாதிரியாக வைத்து தனிக் கவனம் செலுத்தினார்கள். இதற்காக நிறைய செலவழித்தார்கள்.

وفي العهد السعودي أي في عهد الملك عبد العزيز أُنشئت إدارة خاصة لإدارة العين سُمّيت (عين زبيدة) تشرف إشرافًا كاملاً على العين والآبار الخاصة بها وترميمها

அரபு நாட்டில் சவூதி அரசாங்கம் அமைந்த போது மன்னர் அப்துல் அஜீஸ் காலத்தில் அரபாவிலிருக்கும் ஹாஜிகளுக்கு நீர் வழங்கும் திட்டத்திற்கு அய்னு சுபைதா என்று பெயரிடப்பட்டது. நீர்நிலைகளை கவனிக்கும் நிறுவனம் கூட அய்னு சுபைதா என பெயரிடப் பட்ட்து.

சுபைதா கால்வாய் இப்போது இடிந்து போன சுவர்களாக காட்சியளித்தாலும் நீர் வழங்கும் திட்டம் அவர் பெயரால் நிரந்தரமாக இருக்கிறது. ( நன்றி: அப்துல் அஜீஸ் பாகவி அவர்களின் வெள்ளி மேடை, இந்த சம்பவம் மட்டும் அவர்களின் தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது )

2) இரண்டாவது சமூகத்தின் தன்வந்தர்கள் கொடைத் தன்மையோடு நீர் நிலைகளை அமைத்துக் கொடுப்பது.

நபி அவர்களும், மக்காவின் நபித்தோழர்களும் ஹிஜ்ரத் செய்து வந்ததன் பின்னர் மதீனாவில் ஜனத்தொகை அதிகமாகியது. மக்களின் தண்ணீர் பயன்பாடுகள் அதிகமாகவும், தண்ணீரைப் பெற்றுக் கொள்ளும் வழிகள் குறைவாகவும் இருந்தது. மேலும், அன்று தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் நிலையே இருந்தது. ஏழ்மையில் இருந்த பல நபித்தோழர்களால் வாங்க முடியாத சூழலும், தண்ணீர் தட்டுப்பாடும் ஒரு சேர பிரச்சினையாக எழவே நபி அவர்கள் பின் வரும் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்கள்.

قال رسول الله صلى الله عيه وسلم من يشتري بئر رومة فيجعلها للمسلمين يضرب بدلوه فى دلائهم وله بها مشرب فى الجنة فساومه فيها عثمان فأبى أن يبيعها كلها فاشترى نصفها باثنى عشر ألف درهم وجعل ذلك للمسلمين وجعل له يوما ولليهودى يوما فإذا كان يوم عثمان استقى المسلمون ما يكفيهم يومين فلما رأى اليهودى ذلك قال لعثمان أفسدت على ركيتى فاشترى النصف الآخر بثمانية آلاف (سيرة الحلبية

பிஃரு- ரூமா மதீனாவில் மிகவும் சுவையான நீரைத் தரும் கிணறாக இது இருந்தது.  

ஒரு முறை நபி யார் இதை அந்த யூதனிடமிருந்து வாங்கி மக்களுக்கு வக்ஃப் செய்வார்களோ அவருக்கு சுவனத்தில் அதுபோன்றக நீர் நிலை உண்டு என்றவுடன் உஸ்மான் ரழி போட்டி போட்டுக் கொண்டு அதை வாங்க யூதனிடம் சென்ற போது அதை அவன் விட்டுக் கொடுக்க மறுத்தான் எப்படியோ சம்மதிக்க வைத்து 12 ஆயிரம் திர்ஹம் தந்து ஒருநாள் விட்டு ஒருநாள் என்ற அடிப்படையில் அந்தக் கிணற்றின் உரிமையை பெற்றார்கள்.

தனக்கான அந்த நாளில் அனைத்து மக்களுக்கும் தண்ணீரை இலவசமாக சப்ளை செய்தார்கள். ஆனால் அந்த யூதன் காசுக்கு மட்டுமே விற்றான். நாளடைவில் அவனிடம் காசு கொடுத்து யாரும் வாங்காத ஒரு நிலை ஏற்பட்டது. ஏனெனில், உஸ்மான் ரழி தனக்கான அந்த நாளில் அனைத்து மக்களுக்கும் தண்ணீரை இலவசமாக சப்ளை செய்ததால் அவனிடம் யாரும் வாங்கவில்லை. கடைசியில் வேறு வழியில்லாமல் அவன் மீதி உரிமையையும் விட்டுத் தந்தான். மொத்தம் 20 ஆயிரம் திர்ஹம் தந்து விலைக்கு வாங்கி மக்களின் தண்ணீர் கஷ்டத்தைப் போக்கினார்கள். ( நூல்: ஃபிக்ஹுஸ் ஸுன்னா )     

3) முஸ்லிம் சமூகம் ஸதகத்துன் ஜாரியாவாக நீர் நிலைகளை உருவாக்குவது.

முஸ்லிம் சமூகம் அதிகம் கண்டு கொள்ளாத லட்சியமே செய்யாத நபிமொழிகள் பல இருக்கின்றன.

அவைகளில் ஒன்று பின் வரும் நபிமொழிகளில் இடம் பெற்றுள்ள மூன்று முக்கியமான விஷயங்களாகும்.

மனிதன் இறந்த பிறகு அவனுக்கு நிரந்தரமாக நன்மைகளை அள்ளித் தருகிற அம்சங்களை முஸ்லிம் சமூகத்திற்கு அழகாக அடையாளப்படுத்தினார்கள் மாநபி அவர்கள்.

أنس بن مالك رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: (( سبع يجري للعبد أجرهن وهو في قبره بعد موته :من عَلّم علماً, أو أجرى نهراً , أو حفر بئراً , أو غرس نخلاً , أو بنى مسجداً , أو ورّث مصحفاً , أو ترك ولداً يستغفر له بعد موته )) حسنه الألباني رحمه الله في صحيح الجامع برقم :3596].

அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி அவர்கள் கூறினார்கள்:- ஏழு அம்சங்கள் ஒரு மனிதனின் மரரணத்திற்குப் பிறகு அவனுடைய மண்ணறைக்கு நன்மைகளை வழங்கிக் கொண்டே இருக்கும்.

 

1.கற்றுக் கொடுத்த கல்வி, 2.மக்கள் பயன்பாட்டிற்கு நதிகளை (ஆறுகளை) அமைத்தல், 3.மக்கள் பயன்பாட்டிற்கு கிணறுகளை அமைத்தல், 4.மரங்களை நடுதல், 5.பள்ளிவாசல்களை கட்டுதல், 6.குர்ஆனை வழங்குதல், 7.ஸாலிஹான சந்ததிகளை உருவாக்குதல்.

இதில் கிட்டத்தட்ட 4 அம்சங்களை முஸ்லிம் சமூகம் ஓரளவு செய்து வருகின்றது.

பிராதான மூன்று விஷயங்கள் மரம் நடுதல், ஆறு, கிணறுகளை (நீர் நிலைகளை) அமைத்தல் ஆகியவைகளில் முஸ்லிம் சமூகம் கவனம் செலுத்த தவறி விட்டது என்றே சொல்லலாம்.

நீரோடும் ஆற்றை அமைப்பது, கிணறுகளை அமைப்பது தற்போதைய சூழ்நிலையில் நாம் வசிக்கும் பகுதியில் சாத்தியமில்லை.

ஆனால், உலகில் வாழும் கோடீஸ்வர முஸ்லிம்கள் ஆப்ரிக்க முஸ்லிம் நாடுகளில் ஒன்றான நைஜர் பகுதியில் நீர்நிலைகளை உருவாக்கி இது போன்ற துர் மரணங்கள் ஏற்படுவதை தடுக்கலாம்.

வளமான வாழ்வு உண்டு...

தண்ணீர் தேவையை நிறைவேற்றுபவருக்கு வளமான வாழ்வு உண்டு என்பதாக அல்குர்ஆன் கூறுகிறது.

நபி மூஸா அலை அவர்கள் ஃபிர்அவ்ன் மற்றும் அவனது காவல்துறையின் தேடுதல் வேட்டையில் இருந்து தப்பிக்க மத்யனுக்கு சென்றதாக கூறும் அல்குர்ஆன். அங்கே நீர் எடுக்க முடியாமல் கிணற்றின் அருகே தவித்துக் கொண்டிருந்த இரு பெண்களுக்கும், அவர்களின் கால்நடைகளுக்கும் நீர் புகட்டி உதவி செய்து அனுப்பி வைத்தார்கள்.

وَلَمَّا وَرَدَ مَآءَ مَدْیَنَ وَجَدَ عَلَیْهِ اُمَّةً مِّنَ النَّاسِ یَسْقُوْنَ وَوَجَدَ مِنْ دُوْنِهِمُ امْرَاَتَیْنِ تَذُوْدٰنِ قَالَ مَا خَطْبُكُمَا قَالَتَا لَا نَسْقِیْ حَتّٰی یُصْدِرَ الرِّعَآءُ وَاَبُوْنَا شَیْخٌ كَبِیْرٌ 

இன்னும், அவர் மத்யன் நாட்டுத் தண்ணீர்(த் துறையின்) அருகே வந்தபோது, அவ்விடத்தில் ஒரு கூட்டத்தினர் (தம் கால் நடைகளுக்குத்) தண்ணீர் புகட்டிக் கொண்டிருந்ததைக் கண்டார்; அவர்களைத் தவிர, பெண்கள் இருவர் (தங்கள் ஆடுகளுக்குத் தண்ணீர் புகட்டாது) ஒதுங்கி நின்றதைக் கண்டார்; “உங்களிருவரின் விஷயம் என்ன?” என்று (அப்பெண்களிடம்) அவர் கேட்டார்; அதற்கு: இம்மேய்ப்பவர்கள் (தண்ணீர் புகட்டிக் விட்டு) விலகும் வரை நாங்கள் எங்கள் (ஆடுகளுக்குத்) தண்ணீர் புகட்ட முடியாது - மேலும் எங்கள் தந்தை மிகவும் வயது முதிர்ந்தவர்என்று அவ்விருவரும் கூறினார்கள். 

فَسَقٰی لَهُمَا ثُمَّ تَوَلّٰۤی اِلَی الظِّلِّ فَقَالَ رَبِّ اِنِّیْ لِمَاۤ اَنْزَلْتَ اِلَیَّ مِنْ خَیْرٍ فَقِیْرٌ 

ஆகையால், அவ்விருவருக்குமாக அவர் (ஆட்டு மந்தைக்குத்) தண்ணீர் புகட்டினார்; பிறகு அவர் (ஒரு மர) நிழலில் ஒதுங்கி: என் இறைவா! நீ எனக்கு இறக்கியருளும் நல்லவற்றின்பால் நிச்சயமாக நான் தேவையுள்ளவனாக இருக்கின்றேன்என்று கூறினார்.( அல்குர்ஆன்: 28: 23, 24 )

இந்த நிகழ்வின் பின்னிருந்து மூஸா அலை அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் மாறியதாக அல்குர்ஆன் அடையாளப் படுத்துகிறது.

قَالَ اِنِّیْۤ اُرِیْدُ اَنْ اُنْكِحَكَ اِحْدَی ابْنَتَیَّ هٰتَیْنِ عَلٰۤی اَنْ تَاْجُرَنِیْ ثَمٰنِیَ حِجَجٍ فَاِنْ اَتْمَمْتَ عَشْرًا فَمِنْ عِنْدِكَ وَمَاۤ اُرِیْدُ اَنْ اَشُقَّ عَلَیْكَ سَتَجِدُنِیْۤ اِنْ شَآءَ اللّٰهُ مِنَ الصّٰلِحِیْنَ 

(அப்போது அவர் மூஸாவிடம்) கூறினார்: நீர் எனக்கு எட்டு ஆண்டுகள் வேலை செய்யவேண்டும் என்ற நிபந்தனையின் மீது, என்னுடைய இவ்விரு பெண்களில் ஒருவரை உமக்கு மணமுடித்துக் கொடுக்க நிச்சயமாக நான் நாடுகிறேன் - ஆயினும், நீர் பத்து (ஆண்டுகள்) பூர்த்தி செய்தால், அது உம் விருப்பம்; நான் உமக்கு சிரமத்தை கொடுக்க விரும்பவில்லை. இன்ஷா அல்லாஹ், என்னை நல்லவர்களில் உள்ளவராக காண்பீர்.” ( அல்குர்ஆன்: 28: 27 )

ஆம்! மத்யனில் இருந்து சொந்த தாயகம் திரும்பும் போது திருமணம் முடிந்து, இறைத்தூதர் மூஸாவாக ஏற்றம் பெற்று தாயகம் திரும்பியதாக அல்குர்ஆன் கூறுகிறது.

اِذْ قَالَ مُوْسٰی لِاَهْلِهٖۤ اِنِّیْۤ اٰنَسْتُ نَارًا سَاٰتِیْكُمْ مِّنْهَا بِخَبَرٍ اَوْ اٰتِیْكُمْ بِشِهَابٍ قَبَسٍ لَّعَلَّكُمْ تَصْطَلُوْنَ 

மூஸா தம் குடும்பத்தாரை நோக்கி: நிச்சயமாக நான் நெருப்பைக் காண்கிறேன்; உங்களுக்கு நான் அதிலிருந்து (நாம் செல்ல வேண்டிய வழி பற்றிய) செய்தியைக் கொண்டு வருகிறேன், அல்லது நீங்கள் குளிர்காயும் பொருட்டு (உங்களுக்கு அதிலிருந்து) நெருப்புக் கங்கைக் கொண்டு வருகிறேன்என்று கூறியதை (நபியே!) நினைவு கூர்வீராக!

فَلَمَّا جَآءَهَا نُوْدِیَ اَن بُوْرِكَ مَنْ فِی النَّارِ وَمَنْ حَوْلَهَا وَسُبْحٰنَ اللّٰهِ رَبِّ الْعٰلَمِیْنَ 

அவர் அதனிடம் வந்த போது: நெருப்பில் இருப்பவர் மீதும், அதனைச் சூழ்ந்திருப்பவர் மீதும் பெரும் பாக்கியம் அளிக்கப் பெற்றுள்ளது; மேலும் அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் மிகவும் பரிசுத்தமானவன்என்று அழைக்கப்பட்டார்.

یٰمُوْسٰۤی اِنَّهٗۤ اَنَا اللّٰهُ الْعَزِیْزُ الْحَكِیْمُ 

மூஸாவே! நிச்சயமாக நானே அல்லாஹ்! (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்.

وَاَلْقِ عَصَاكَ فَلَمَّا رَاٰهَا تَهْتَزُّ كَاَنَّهَا جَآنٌّ وَّلّٰی مُدْبِرًا وَّلَمْ یُعَقِّبْ یٰمُوْسٰی لَا تَخَفْ اِنِّیْ لَا یَخَافُ لَدَیَّ الْمُرْسَلُوْنَ 

உம் கைத்தடியைக் கீழே எறியும்;” (அவ்வாறே அவர் அதை எறியவும்) அது பாம்புபோல் நெளிந்ததை அவர் கண்ட பொழுது, திரும்பிப் பார்க்காது (அதனை விட்டு) ஓடலானார்; “மூஸாவே! பயப்படாதீர்! நிச்சயமாக (என்) தூதர்கள் என்னிடத்தில் பயப்பட மாட்டார்கள்.” ( அல்குர்ஆன்: 27: 7- 11 )

நம் நாட்டின் தண்ணீர் பிரச்சினைக்கும் தீர்வு உண்டு இஸ்லாத்தில்...

 

இன்றைக்குத் தண்ணீரை மையப்படுத்தி ஒரு நாட்டிற்கும் இன்னொரு நாட்டிற்கும் இடையே தண்ணீரை பங்கிடுவதில் பகிர்ந்து கொள்வதில் சர்ச்சைகள் நிலவுகின்றன. 

பாகிஸ்தான் - இந்தியா இடையே சிந்து நதி தண்ணீரை பங்கிடுவதில் சிக்கல் நிலவுகிறது.

ஒரு நாட்டில் உள்ள மாநிலங்களுக்கிடையே கூட தண்ணீரைப் பங்கிடுவதில் சண்டை சச்சரவுகள் அனைத்தும் சூழ்ந்துள்ளது. அருகருகே அமைந்திருந்தும் கூட கேரளம் தமிழத்திற்குத் தண்ணீர் தர மறுக்கிறது. கர்நாடகமும் தன் பயன்பாட்டுக்குப் போக மேலதிக தண்ணீரை தன் அண்டை மாநிலமான தமிழகத்திற்குத் தராமல் மல்லுக்கட்டுகிறது. 

ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குத் தண்ணீர் வழங்க மனிதாபிமானம் இருந்தாலே போதும். நதிநீர் பகிர்வு திட்டம் என்ற ஒன்று இருக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை.

இன்றைக்கு தண்ணீர் மக்கள் தாகம் தீர்க்கும் குடிபானம் என்பது மாறி அரசியல்வாதிகளின் வெறி தீர்க்கும் அரசியல் பொருளாக மாறிப்போயுள்ளது.

ஒரு அரசு இயந்திரத்தை மீறி தன் அண்டை மாநிலத்திற்குத் தண்ணீர் தர மறுக்கும் மாநில அரசுகளை மத்திய அரசு கண்டு கொள்ளாததன் பின்னணியில் பல அரசியல் உள்ளது.

இந்தப் பிரச்சனைக்கு நபி தீர்வளிக்கின்றார்கள். தண்ணீரைப் பங்கிடுவது பற்றி நபி அவர்கள் முன்வைக்கும் முத்தான அறிவுரைகள் இரண்டு உள்ளது.

தேவை போகவுள்ள தண்ணீரை விற்காதே! தேவை போகவுள்ள தண்ணீரை தடுக்காதே!

இவையிரண்டும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படத் தகுந்த, எக்காலத்திலும் மனித சமுதாயத்திற்குத் தேவையான அறிவுரையாகும்.

لا تَبيعوا فضلَ الماءِ؛ فإن النبيَّ صلى الله عليه وسلم نهى عن بيعِ فضلِ الماءِ. خلاصة حكم المحدث : صحيح، الراوي : إياس بن عبدالله المزني | المحدث : الألباني | المصدر : صحيح النسائي | الصفحة أو الرقم : 4677، | التخريج : أخرجه أبو داود (3478)، والترمذي (1271)، والنسائي (4663) واللفظ له، وابن ماجه (2476)، وأحمد (15444)

தேவைக்கு மிஞ்சிய தண்ணீரை விற்பது கூடாது என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். அறிவிப்பவர்: இயாஸ் இப்னு அப்துல்லாஹ் (ரலி), ( நூல்: அபூதாவூத் )

وقال النبي صلى الله عليه وسلم في حديث آخر: «لاَ يُمْنَعُ فَضْلُ الْمَاءِ» (رواه البخاري ومسلم)، قال ابن بطال في شرحه لصحيح البخاري: «نهى أن يُمنع الماء».

தேவைக்கு மிஞ்சிய தண்ணீரைப் பிறர் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டாம் என நபி அவர்கள் கூறியுள்ளனர். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), ( நூல்: புகாரி: 2353, 2354, 6962 )

தனிநபரோ, குழுவோ யாராக இருந்தாலும் தனக்குத் தேவையான தண்ணீரை எடுத்துக் கொண்டு மிதமிஞ்சிய தண்ணீரை யாருக்கும் விற்கக் கூடாது, அதாவது இலவசமாக வழங்கி விட வேண்டும். அதேவேளை மேலதிகத் தண்ணீரை உனக்குத் தரமாட்டேன் என்று யாருக்கும் தண்ணீரைச் செல்லவிடாமல் தடுக்கக் கூடாது. தன் பயன்பாட்டுக்குப் போகவுள்ளதை பிறர் பயன்பாட்டுக்குச் செல்ல வழி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இது நபி அவர்கள் முன்வைக்கும் நீர் மேலாண்மை பங்கீட்டு திட்டமாகும்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கெட்ட முடிவுகளில் இருந்தும், தீய மரணங்களில் இருந்தும் நம் அனைவரையும் காத்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!