Thursday, 17 September 2026

நாயின் உமிழ்நீர்! தேவை விழிப்புணர்வும், எச்சரிக்கையும்…

 

நாயின் உமிழ்நீர்! தேவை விழிப்புணர்வும், எச்சரிக்கையும்…



உலகிலுள்ள அனைத்து உயிரினங்களும் சந்திக்கும் மிக முக்கியமான ஒரு ஆபத்து உண்டென்றால் அது நோய் தான்.

இன்னும் சொல்லப்போனால் உயிர் உள்ள அனைத்து உயிரிகளும் இந்த ஆபத்தை எதிர் கொள்கின்றன. 

செடி கொடிகள், தாவரங்கள் மரங்கள், பயிர்கள் என அனைத்தும் நோய்வாய்ப்படுகின்றன.

குறிப்பாக மனிதன் சந்திக்கும் சோதனைகளில் நோய் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

நோய்க்கு ஆட்படாதவர்கள் யாருமில்லை என்று சொல்லும் அளவுக்கு நோய் மனிதர்களை வந்தடைகிறது.

சாமானிய மக்கள் முதல் ஆட்சியாளர் வரை, பாமர மனிதர்களிலிருந்து இறைத்தூதர்கள் வரை நோய்களின் தாக்கத்திற்கு உட்பட்டுள்ளார்கள்.

பொதுவாக மனிதனுக்கு ஏற்படும் நோய்களை மருத்துவ உலகம் பல்வேறு பிரிவுகளில் வகைப்படுத்தப்படுகின்றன.

உடல் ரீதியான நோய்கள், மன ரீதியான உளவியல் நோய்கள், பருவ கால நோய்கள், பேரிடர் கால நோய்கள், வைரஸ் நோய்கள், கிருமி தொற்று நோய்கள், பறவைகள் மற்றும் விலங்குகளால் ஏற்படும் நோய்கள், விபத்தின் காரணமாக ஏற்படும் நோய்கள், சுகாதாரமின்மையால் ஏற்படும் நோய்கள், விபச்சாரம், புகைப்பழக்கம், மது போன்ற தீய செயல்களால் ஏற்படும் நோய்கள் என பட்டியல் நீள்கிறது.

இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள விலங்குகளால் ஏற்படும் நோய் ஒன்றின் காரணமாக திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் பெரிய கொத்பா பள்ளிவாசல் தெற்கு கீழத் தெருவைச் சேர்ந்த 21 வயது இளம் வாலிபர் இர்ஃபான் கடந்த 14/09/2026 அன்று இறை அழைப்பை ஏற்றார்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அந்த இளைஞரைப் பொருந்திக் கொள்வானாக! அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக!

ஒரு கடையில் வேலை பார்த்து வந்த அந்த இளைஞருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு காலில் ஒரு இரத்த காயம் ஏற்பட்டுள்ளது.

அவர் கவனமற்றிருந்த நேரத்தில் காயம் பட்ட அந்த இடத்தை ஒரு நாய் வந்து தனது நாவால் நக்கி இருக்கிறது.

அந்த இளைஞரும் அதை இயல்பாக நினைத்து அலட்சியமாக கடந்து சென்றுள்ளார்.

இறுதியில் அதன் வீரியம் மூளைக்காய்ச்சல் வரை சென்று மூன்றுக்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ரேபிஸ் ஆபத்தானது...

நாய் நாவால் நக்கிய இடத்தை உடனடியாக உரிய சிகிச்சைக்கு உட்படுத்துவது அவசியம் ஆகும்.

நாய் நக்கினால் (குறிப்பாக காயம் அல்லது வெட்டு உள்ள இடத்தில்) ரேபிஸ் (Rabies) எனப்படும் வெறிநாய்க்கடி தொற்று பரவ வாய்ப்புள்ளது. எனவே அதைக் அலட்சியம் செய்யக்கூடாது என்றும், 

நாய் நக்கிய இடத்தை உடனடியாக சோப்பு மற்றும் ஓடும் நீரில் 10 முதல் 15 நிமிடங்கள் நன்றாகக் கழுவ வேண்டும். இது கிருமிகளை வெளியேற்ற உதவும் என்றும், 

கழுவிய பின் போவிடோன் -அயோடின் (Povidone-Iodine) போன்ற கிருமி நாசினியைப் பயன்படுத்த வேண்டும் என்றும், தோல் முழுமையாக நல்ல நிலையில் இருந்தால் (வெட்டு, காயம் எதுவும் இல்லாமல்) ஆபத்து குறைவு.ஆனால், நாய் நக்கிய இடத்தில் ஏற்கனவே காயம், கீறல் அல்லது ரத்தக் கசிவு இருந்தால், உடனடியாக ஒரு மருத்துவரை அணுகி ரேபிஸ் தடுப்பூசி (Anti-rabies vaccine) போட்டுக்கொள்வது மிகவும் அவசியமாகும் என்றும் இன்றைய மருத்துவ உலகம் நமக்கு வழிகாட்டுகிறது.

ரேபிஸ் - வெறிநாய்க்கடி என்பது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியைத் தாக்கும் ஒரு கொடிய நோய். நோய் உங்களைப் பிடித்தவுடன், உயிர்வாழ்வது கஷ்டமாகி விடுகிறது. வெறிநாய்க்கடி மிகவும் ஆபத்தான நோய்களில் ஒன்றாக மருத்துவர்களும் கருதுகின்றனர்.

ரேபிஸ் வைரஸ் முதலில் இரத்தம், திசுக்களில் நுழைந்து, பின்னர் நரம்புகள் வழியாக நரம்பு மண்டலம், மூளையை மெதுவாகத் தாக்குகிறது. வைரஸ் நரம்பு மண்டலத்திற்குள் நுழைந்தவுடன், 5 முதல் 15 நாட்களுக்குள் மரணம் ஏற்படுகிறது. ( நன்றி: ஏசியா நெட் நியூஸ், 22/08/2025 )

ரேபிஸ் - எச்சரிக்கை தேவை...

வெறி பிடித்த நாயின் கடி/எச்சில் மூலம் வருவதுதான் வெறிநோய்(Rabies). வெறிநோய் வைரசின் பெயர் லைஸா வைரஸ் (Lyssavirus) என்பதாகும். குட்டியூண்டு சைஸ் உள்ள இந்த வைரஸ்தான் வெறிநோயை உண்டுபண்ணுகிறது. ரேபிஸ் (Rabies) என்பது ஒரு லத்தீன் வார்த்தை. இதன் பொருள், பைத்தியம் பிடித்த/சித்த சுவாதீனமற்ற(Rabies=Madness) என்பதாகும். வெறி நோயினால், அள்வுக்கதிகமான மூளை வீக்கம் (encephalitis) ஏற்படும். பின்னர் மூளையின் செயல்பாடுகளை மாற்றியமைத்து கண்டமேனிக்கு வைரஸின் போக்கில் செயல்பட வைக்கும். நமது இயல்பு நிலை பறி போய்விடும். நம்மை இவ்வளவு பாடுபடுத்தும் இந்த வைரஸ் அப்படி என்ன யானை பெரிதா என்றால் இல்லவே இல்லை. ஒரு எறும்பு அளவு என்ன, ஒரு மண் துகள் அளவு கூட இல்லை. மிக மிகச் சிறியது. அதன் நீளம் 180 நானோ மீட்டர். அகலம் 75 நானோமீட்டர். ஒரு நானோ மீட்டர் என்பது ஒரு மீட்டரில், 100 கோடியில் ஒரு பகுதி.(One nanometre is one billionth of metre (1/1000000000 of a metre, or 0.000000001 m). இந்த லைஸா வைரஸ் ஒற்றை RNA வில், குழந்தையைத் துணியில் சுற்றுவதுபோல் சுற்றி கட்டி வைக்கப் பட்டுள்ளது. ( நன்றி: கீற்று, 12/10/2011 )

ரேபிஸ் - வெறிநோயின் வரலாறு...

மனிதன் எப்போது நாய் வளர்க்கத் தொடங்கினானோ அப்போதே, வெறிநோய் பாதிப்பும் ஏற்பட்டிருக்க வேண்டும் எனத் தவகல்கள் சொல்லுகின்றன. 

வெறிநோய் பற்றிய தகவல் சுமார் 5,500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்ததாக பதிவுகள் சொல்கின்றன. கிரேக்கர்கள், ரோமானியர்கள் மற்றும் பாபிலோனியர்கள் வெறிநோய் பற்றிய பதிவுகளை களிமண் பலகைகளில் பதிவு செய்து வைத்துள்ளனர். 

மனிதனுக்கு நாயுடன்தான் முதலில் பழக்கம் ஏற்பட்டிருந்தது. அதன் ஆதாரமாக, இஸ்ரேலில் ஒரு பெண்ணின் உடலுடன் ஒரு நாயும் சேர்த்து அடக்கம் செய்யப்பட்ட மம்மி கிடைத்துள்ளது. இதன் வயது சுமார் 12,000 வருடங்கள். ஆனாலும் கி.மு 1930களில் எஷ்னுன்னாவின் கோடக்சில்(Codex of Eshnunna)தான் வெறிநோய் பற்றி எழுதி வைக்கப்பட்டுள்ளது. அதாவது கியூநிபாரம் எழுத்துக்களில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் நாயின் சொந்தக்காரருக்கு எப்படி வெறிநோய் அறிகுறிகள் உருவாயின என்றும், அதற்கான தடுப்பு முறைகளும் கூட கூறப்பட்டுள்ளன. அதன் பின்னர் கி.மு 800-700௦௦களில் ஹோமர் பாதிப்பு வந்த நாய் பற்றி எழுதி உள்ளார். 

கி.மு 420களில் கிரேக்க தத்துவஞானியும் வீட்டு விலங்குகளில் வெறிநோய் வந்தது பற்றி குறிப்பிட்டுள்ளார். கி.மு. 400ல் வாழ்ந்த அரிஸ்ட்டாட்டில் நாய்கள் நோயினால் பைத்தியம் பிடித்து திரிந்ததாகவும், அவை எரிச்சலோடு மற்ற விலங்குகளை கடித்ததாகவும் எழுதியுள்ளார். ( நன்றி: கீற்று, 12/10/2011 )

ரேபிஸ் - வெறிநோய் இறப்பின் புள்ளி விவரங்கள்...

ரேபிஸ் - வெறிநோய் இன்று சுமார் 150 நாடுகளுக்கு மேல் காணப்படுகிறது. உலகம் முழுவதும் வெறிநாய் வாழும் இடங்களில்/வெறிநோய் வரும் வாய்ப்புள்ள இடங்களில் சுமார் 330 கோடி மக்கள் வாழ்கின்றனர். 

இவர்களில் ஆண்டுதோறும் 55,000௦௦௦ மனித உயிர்களைப் பலி வாங்குகிறது வெறிநோய். இந்த இறப்புகளில் 90% ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில்தான் நிகழ்கிறது. 

இந்தியாவில் மட்டும் ஒரு வருடத்தில் 20,000 பேர் வெறிநோயினால் இறக்கின்றனர். இது உலகில் ஏற்படும் வெறிநோய் சாவுகளில் 36% ஆகும். 

இறப்பு நிகழ்வில் 40% வெறிநோய் இறப்புக்கள் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கே ஏற்படுகிறது. இவர்களும் கடித்த நாய், வெறிநோய் வந்த நாய் என்று தெரியாமலே கடிபட்டு, பாதிக்கப்பட்டு இறக்கின்றனர். ஒரு விஷயம் என்னவென்றால் இந்த வெறிநோய் வியாதி முற்றும் வரை வெளியே தெரியாமல் கமுக்கமாய், அடக்கமாய் உடலுக்குள்ளேயே இருக்கும். வெறி முற்றிய பின்தான் அதன் அறிகுறிகள் வெளியே வெளிப்படும்.

வெறிநோயிலிருந்து காப்பாற்றப்படும் மனித உயிர்கள்..

ஒவ்வொரு ஆண்டும், உலகில் சுமார் 1 1/2 கோடிப்பேர், நாய்க்கடிக்கான தடுப்பு நடவடிக்கைகள் எடுத்துக் கொள்கின்றனர். இதன் மூலம் 32,700 இறப்புக்கள் தடுக்கப்படுகின்றன. இந்தியாவில் பெரும்பாலும் தெரு நாய்கள் மூலமும், சில சமயம் வளர்ப்பு நாய்கள் மூலமும் வெறிநோய் உண்டாகிறது. ( நன்றி: கீற்று, 12/10/2011 )

நாய், பூனை, குரங்கு கடித்த காயங்களை முறையாக, கிருமி நாசினி வாயிலாக துாய்மைப்படுத்தாமல் இருந்தால் தொற்று ஏற்படக் கூடும். தடுப்பூசிகளை தவற விட்டாலோ, உரிய நேரத்தில் செலுத்தாமல் இருந்தாலோ, 'ரேபிஸ்' நோய் பரவுவதை தடுக்க முடியாது என தமிழ்நாடு சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

2030ஆம் ஆண்டிற்குள் ரேபிஸ் - வெறிநாய்க்கடித் தொற்றை இந்தியாவில் இருந்து முற்றிலுமாக அகற்றுவது இந்தியாவின் இலக்காகக் கொண்டு இந்திய அரசின் சுகாதாரத்துறை முழு வீச்சில் இயங்கிக் கொண்டிருப்பதாகக் கூறிக் கொள்ளும் இவ் வேளையில் நாட்டில் நாய் படுத்தும் பாட்டை நாம் கவனிக்க கடமைப் பட்டுள்ளோம்..

நாடு முழுவதும் ஒவ்வொரு நாளும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நாய்களால் கடிபடுகின்றனர் என்கிறது ஒரு புள்ளி விவரம்.

இந்தியாவில் ஆண்டுதோறும் 9.1 மில்லியன் விலங்குக்கடிச் சம்பவங்கள் இடம்பெறுவதாக ஒரு நிறுவனம் கணித்துள்ளது. அவற்றில் முக்கால்பங்குச் சம்பவங்கள் நாய்க்கடிகளாகும்.

இந்நிலையில் ஆண்டு தோறும் வெறிநாய்க்கடியால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 5,726 என்று இந்திய மருத்தவ ஆய்வு நிலையம் ஒன்று கணித்துள்ளது

தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய்க்கடியால், 4.68 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 24 பேர், 'ரேபிஸ்' நோயால் உயிரிழந்துள்ளனர்.

சேலத்தில், 28,166 பேர் பாதிக்கப்பட்டு, மூன்று பேர் உயிரிழந்தனர். கடலுாரில், 22,113 பேர் பாதிக்கப்பட்டு, மூன்று பேர் இறந்தனர். அதேபோல், திருநெல்வேலியில், 23,095 பேர் பாதிக்கப்பட்ட போதிலும் உயிரிழப்பு இல்லை. சென்னையில், 9,229 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு, மூன்று பேர் இறந்துள்ளனர்.

அதன்படி, மாநிலம் முழுதும், கடந்த ஆறு மாதங்களில், 4.68 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு, இதுவரை 24 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். என்கிறார்கள் தமிழ்நாடு சுகாதாரத்துறை அதிகாரிகள். 

நாய்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தற்போது, மாநிலம் முழுவதும், 25 லட்சம் எண்ணிக்கையிலான நாய்கள் இருக்கக் கூடும் என, உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

கடைசியாக 2019-ல்தான் நாடு தழுவிய அளவில் விலங்குகள் கணக்கெடுப்பு நடந்திருக்கிறது. இப்போது 2026.

2019 -ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் தெருநாய்களின் எண்ணிக்கை 4.4 லட்சம்தான். ஆனால், அதே ஆண்டு மாநிலத்தில் 8.3 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஆக, ஒவ்வொரு நாயும் குறைந்தபட்சம் இரண்டு பேரைக் கடித்திருக்க வேண்டும்! இப்படித்தான் இருக்கிறது நம் வசமுள்ள புள்ளிவிவரங்கள் யாவும். (நன்றி: தினமலர், தமிழ் முரசு, விகடன். காம், (01/08/2026 & 16/09/2026 )

நாயின் உமிழ் நீர்....

நாயின் வாயில் உள்ள கிருமிகள் பற்றிய ஆய்வு செய்த லண்டன் ராணி மேரி பல்கலைக்கழகத்தின் நச்சுயிரியல் மற்றும் நுண்மவியல் (Virology and bacteriology) பேராசிரியர் ஜான் ஆக்ஸ்போர்ட்கூறும்போது, " நாய்கள், வாழ்க்கையின் பாதி நாட்களை பல அசுத்தமான இடங்களை முகர்ந்து வருவதால், அதன் வாய் முழுவதும் பல வகையான அசுத்தங்களும் கிருமிகளும் நிறைந்து காணப்படுகின்றன. 

ஆகவே தான் நாயின் உமிழ்நீர் தூய்மையற்றதாகக் கருதப்படுகிறது. 

عن أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا وَلَغَ الْكَلْبُ فِي إِنَاءِ أَحَدِكُمْ فَلْيُرِقْهُ ثُمَّ لِيَغْسِلْهُ سَبْعَ مِرَارٍ رواه مسلم

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவரது பாத்திரத்தில் நாய் வாய் வைத்துவிட்டால் அவர் அதைக் கொட்டிவிட்டு ஏழு தடவை பாத்திரத்தைக் கழுவிக்கொள்ளட்டும். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) ( நூல்: முஸ்லிம் )

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طَهُورُ إِنَاءِ أَحَدِكُمْ إِذَا وَلَغَ فِيهِ الْكَلْبُ أَنْ يَغْسِلَهُ سَبْعَ مَرَّاتٍ أُولَاهُنَّ بِالتُّرَابِ رواه مسلم

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்: நாய் வாய் வைத்துவிட்ட உங்களது பாத்திரத்தைச் சுத்தம் செய்யும் முறை யாதெனில், அதை ஏழு தடவை தண்ணீரால் கழுவுவதாகும். முதல் தடவை மண்ணிட்டுக் கழுவ வேண்டும் அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ( நூல்: முஸ்லிம் )

عَنْ ابْنِ الْمُغَفَّلِ قَالَ أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا وَلَغَ الْكَلْبُ فِي الْإِنَاءِ فَاغْسِلُوهُ سَبْعَ مَرَّاتٍ وَعَفِّرُوهُ الثَّامِنَةَ فِي التُّرَابِ رواه مسلم

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள். பாத்திரத்தில் நாய் வாய் வைத்துவிட்டால் ஏழு தடவை (தண்ணீரால்) கழுவிக் கொள்ளுங்கள். எட்டாவது தடவை மண்ணிட்டுக் கழுவுங்கள்

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அல்முகஃப்பல் (ரலிரி) ( நூல்: முஸ்லிம் )

மேற்கண்ட ஹதீஸ்களில் நபி அவர்கள் மிக முக்கியமான ஒரு வழிமுறையை நமக்கு கற்றுத் தருகின்றார்கள்.

அதாவது நம்முடைய பாத்திரங்களில் நாய் வாய் வைத்து விட்டால் அந்த நீரைக் கொட்டி விட வேண்டும். அந்தப் பாத்திரத்தை ஏழு தடவைகள் தண்ணீரால் கழுக வேண்டும். முதல் தடவை கழுவும் போதோ அல்லது எட்டாவது தடவை கழுவும் போதோ மண்ணினால் கழுக வேண்டும்.

இது நபி அவர்களின் சுன்னத் வழிமுறை என்பது மட்டுமில்லை. இஸ்லாம் ஒரு மதமல்ல . அது மனிதனுக் கேற்ற மார்க்கம் என்பதற்கும் மேற்கண்ட ஹதீஸ் சான்றாகத் திகழ்கிறது.

நபி அவர்கள் நாய் வாய் வைத்த தண்ணீரை கொட்டச் சொல்கிறார்கள். அந்தப் பாத்திரத்தை பல தடவை தண்ணீராலும், மண்ணாலும் சுத்தம் செய்யச் சொல்கிறார்கள்.

இவ்வாறு ஏன் கட்டளையிட்டார்கள்? நாய் வாய் வைத்தால் என்ன ? மண்ணை வைத்து ஏன் கழுக வேண்டும்? விஞ்ஞான அடிப்படையில் இறைத்தூதரின் இந்தப் போதனை சரியானதுதானா? என்பது போன்ற பல கேள்விகள் நமக்கு எழுகின்றன.

நபியவர்கள் வழிகாட்டுதல் நூறு சதவிகிதம் சரியானதே என்று இன்றைய நவீன விஞ்ஞானம் மெய்ப்பிக்கின்றது.

நாய்களின் உமிழ்நீரில் கடுமையான செப்சிஸ் தொற்றுக்குக் காரணமான 'கேப்னோசைட்டோபாகா கனிமோர்சஸ்' (Capnocytophaga canimorsus) என்ற பாக்டீரியா உள்ளது. இந்த பாக்டீரியா தொற்றுகள் மிகவும் அரிதானவை; இது நாய்களுக்குப் பாதிப்பைத் தருவதில்லை. ஆனால், மனிதர்களின் இரத்த ஓட்டத்தில் நுழைந்துவிட்டால், அவர்களின் உயிருக்கே உலை வைக்கக்கூடியது.

நபி நாய் வாய் வைத்த தண்ணீரை கொட்டச் சொல்கிறார்கள். தண்ணீரில் நாய் வாய் வைத்தால் அதனுடைய எச்சில் தண்ணீரிலே கலக்கின்றது. நாயின் எச்சிலில் மனிதனுக்கு அபாயகராமான நோய்களை ஏற்படுத்தக்கூடிய வைரஸ்கள் நிறைந்து காணப்படுகின்றன. இந்த வைரஸிற்கு ரேபிஸ் என்று பெயர்.

நபி அவர்கள் நாய் வாய் வைத்த பாத்திரத்தை 7 தடவைகள் நன்றாக தண்ணீரால் சுத்தம் செய்யுமாறு கூறிவிட்டு ஒரு தடவை மண்ணாலும் கழுக வேண்டும் என்று கூறுகிறார்கள்.

நபியவர்களின் இந்த வழிமுறையும் மிகவும் அறிவுப் பூர்வமானது. மனிதனுக்கு நன்மை தரக்கூடியது என்பதை இன்றை நவீன விஞ்ஞானம் மெய்ப்பிக்கிறது.

நாயின் எச்சிலில் உள்ள ரேபிஸ் வைரஸ்கள் அளவில் கூற இயலாத அளவிற்கு மிகவும் நூண்ணியமானவை ஆகும். இந்த வைரஸ்கள் எவ்வளவு நூண்ணியமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு அதனுடைய வீரியமும் இருக்கும். இந்த வைரஸ்களை அழிக்கக்கூடிய மூலங்கள் அதிகமாக மண்ணில் இருப்பதை நவீன விஞ்ஞானம் நிருபிக்கிறது.

பலவிதமான நோய்கிருமிகள் உடலில் உள்ள நிலையில் மரணித்தவர்கள் அடக்கம் செய்யப்பட்டபின் அந்த கிருமிகள் பூமியில் உயிரோடு இருப்பதில்லை. ஏனென்றால் மண்ணில் உள்ள சில மூலங்கள் அந்தக் கிருமிகளை அழித்து விடுகின்றன. இதனை பல முறை விஞ்ஞானிகள் ஆய்வு செய்வு நிரூபித்துள்ளனர்.

கிருமிகளை அழிக்கக்கூடிய டெட்ரா சைக்ளின், டெட்ராலைட் ஆகிய இரண்டு மூலங்களும் மண்ணில் உள்ள புழுதிகளில் உள்ளன. சாக்பீஸ் துகள்கள் எவ்வாறு மையோடு கலந்து விடுகிறதோ அது போன்று இந்த மூலங்கள் பாத்திரத்தின் சுவர்களில் நன்றாக பரவி அந்த கிருமிகளை அழித்து பாத்திரத்தை சுத்தப்படுத்துகிறது.

ஆகவே, இஸ்லாம் இன்றைய நவீன காலத்தில் பல்லாண்டுகள் ஆய்வு செய்து மருத்துவ உலகம் கூறக்கூடிய ஒரு செய்தியை, தேர்ந்த மருத்துவர்கள் பல்லாண்டுகள் கற்றறிந்து மக்களுக்கு கூறும் விஷயங்களை அன்றே மிக எளிமையாக கூறி இருக்கிறது.

நோய் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு தேட வேண்டும்...

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ، قَالَ كَانَ مِنْ دُعَاءِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ وَتَحَوُّلِ عَافِيَتِكَ وَفُجَاءَةِ نِقْمَتِكَ وَجَمِيعِ سَخَطِكَ ‏

அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக்க மின் ஸவாலி நிஅமத்திக்க, வ தஹவ்வுலி ஆஃபியத்திக்க, வ ஃபுஜாஅத்தி நிக்மத்திக்க, வ ஜமீஇ சகத்திக்கஎன்பது அல்லாஹ்வின் தூதர் அவர்களின் பிரார்த்தனைகளில் ஒன்றாக இருந்தது.

(பொருள்: இறைவா! உன் அருட்கொடைகள் (முற்றாக) நீங்குவதிலிருந்தும், நீ வழங்கிய (ஆரோக்கியம், செல்வம் போன்ற) நன்மைகள் (நோய், வறுமை போன்ற தீங்குகளாக) மாறி விடுவதிலிருந்தும், உனது தண்டனை திடீரென வருவதிலிருந்தும், உனது கோபத்திற்கு உள்ளாக்கும் அனைத்து அம்சங்களிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி),( நூல்: முஸ்லிம் )

நோய் வந்தால் என்ன செய்ய வேண்டும்?

சிலர் தங்களுக்கு ஏதேனும் உடல் நிலை சரியில்லாமல் போனால் அந்த நோயைக் குறித்து பாழாய்ப்போன இந்த நோய் வந்து என்னை பாடா படுத்துது என்பது போன்ற வாசக அமைப்பில் நோயை ஏசுவார்கள். அப்படி ஏசக் கூடாது என்று நபி அவர்கள் தடை செய்தார்கள்.

جَابِرُ بْنُ عَبْدِ اللهِ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، دَخَلَ عَلَى أُمِّ السَّائِبِ أَوْ أُمِّ الْمُسَيِّبِ فَقَالَ: «مَا لَكِ؟ يَا أُمَّ السَّائِبِ أَوْ يَا أُمَّ الْمُسَيِّبِ تُزَفْزِفِينَ؟» قَالَتْ: الْحُمَّى، لَا بَارَكَ اللهُ فِيهَا، فَقَالَ: «لَا تَسُبِّي الْحُمَّى، فَإِنَّهَا تُذْهِبُ خَطَايَا بَنِي آدَمَ، كَمَا يُذْهِبُ الْكِيرُ خَبَثَ الْحَدِيدِ»

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் அவர்கள், (உடல் நலிவுற்றிருந்த) உம்முஸ் ஸாயிப் அல்லது உம்முல் முசய்யப் எனும் பெண்மணியிடம் (உடல் நலம் விசாரிக்கச்) சென்றார்கள். அப்போது உம்முஸ் ஸாயிபே! அல்லது உம்முல் முசய்யபே! உமக்கு என்ன நேர்ந்தது? ஏன் நடுங்கிக் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண், “காய்ச்சல். அதில் அல்லாஹ் வளம் சேர்க்காமல் இருக்கட்டும்!என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் அவர்கள், “காய்ச்சலை ஏசாதே! ஏனெனில் அது, கொல்லனின் உலை, இரும்பின் துருவை அகற்றி விடுவதைப் போன்று, ஆதமின் மக்களின் (மனிதர்களின்) தவறுகளை அகற்றி விடுகிறதுஎன்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி), ( நூல்: முஸ்லிம் )

நோய் வந்து விட்டால் அலட்சியமாக இருந்து விடக் கூடாது...

நோய் வந்தவுடன் தகுந்த மருத்துவரை சந்தித்து மருத்துவம் பார்ப்பது கடமையாகும்.

இன்று நம்மில் பலரும் நோய் வந்து விட்டால் பயத்தின் காரணமாக மருத்துவம் பார்ப்பதை தவிர்க்கின்றனர். நோயை பரிசோதித்த மருத்துவர் பெரிய நோயாக எதையும் சொல்லி விடுவாரோ என்று பயம்.

இன்னும் சிலர் மருத்துவம் பார்க்க ஆகும் செலவினங்கள், சிரமங்கள் மற்றும் அலைச்சல் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு மருத்துவம் பார்ப்பதில்லை.

இன்னும் சிலர் இது சிறிய காயம் தானே, லேசாக தானே இருக்கிறது, இதனால் என்ன வந்து விடப் போகிறது என்று அலட்சியமாக இருந்து விடுகின்றனர்.

ஆனால், இதன் பின்னர் அவர்கள் இதற்காக வருத்தமும், பெரிய சிரமத்தையும் சந்திக்கப் போகிறார்கள் என்பதை அறிந்து வைத்திருக்க வில்லை.

عَنْ أُسَامَةَ بْنِ شَرِيكٍ، قَالَ: قَالَتِ الأَعْرَابُ: يَا رَسُولَ اللَّهِ، أَلَا نَتَدَاوَى؟ قَالَ: ” نَعَمْ، يَا عِبَادَ اللَّهِ تَدَاوَوْا، فَإِنَّ اللَّهَ لَمْ يَضَعْ دَاءً إِلَّا وَضَعَ لَهُ شِفَاءً،

நபி அவர்களிடம் கிராமப் புறத்தவர்கள் வந்து அல்லாஹ்வின் தூதரே நாங்கள் மருத்துவம் செய்யலாமா? என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் அடியார்களே மருத்துவம் செய்யுங்கள். ஏனெனில் அல்லாஹ் எந்த நோய் கொடுத்தாலும் அதற்கு நிவாரணம் இல்லாமல் வைக்கவில்லை என்று கூறினார்கள். அறிவிப்பவர் உஸாமா பின் ஷரீக் (ரலி), ( நூல்: திர்மிதீ ) எனவே நோய்க்கு உரிய சிகிச்சை பெறுவது அவசியமாகும்.

عَنْ جَابِرٍ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «لِكُلِّ دَاءٍ دَوَاءٌ، فَإِذَا أُصِيبَ دَوَاءُ الدَّاءِ بَرَأَ بِإِذْنِ اللهِ عَزَّ وَجَلَّ»

நபி அவர்கள் கூறினார்கள்: ஒவ்வொரு நோய்க்கும் நிவாரணம் ஒன்று உண்டு. நோய்க்குரிய மருத்துவம் சரியாக அமைந்துவிட்டால், அல்லாஹ்வின் அனுமதியால் குணம் ஏற்படும்.அறிவிப்பர் ஜாபிர் (ரலி), ( நூல்: முஸ்லிம் )

நபித்தோழர்கள் மருத்துவம் செய்ததும்… மருத்துவம் பார்த்ததும்…

நபி அவர்கள் மனித வாழ்வின் அனைத்திற்கும் வழி காட்டியது போல நோய்களுக்கு சிகிச்சை பெறுவதன் அவசியத்தையும் அறிவுறுத்தியுள்ளார்கள்.

நுஸைபா (உம்மு அம்மாரா) அவர்களும் அல்-ஷிஃபா அல்-அதாவிய்யா (அல்-ஷஃபா) போன்றோர் நபிகள் நாயகத்தின் காலத்திலும், இரண்டாம் கலீஃபா உமரின் காலத்திலும் போரில் பங்கேற்றதையும் அங்கு அவர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளதையும் இங்கு குறிப்பிடலாம்.

உஹதுப் போரின் போது நுஸைபா பின்த் கஅப் அல்-மாஸினிய்யா, உம்மு சினான் அல் இஸ்லாமி ஆகியோர் போர்க்களத்திற்குச் சென்று காயமடைந்த வீரர்களுக்கு உதவுவதற்கும், வீரர்களுக்கு தண்ணீர் வழங்கிடவும் நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டனர். நபி (ஸல்) அவர்களும் அனுமதித்தார்கள்என்று செய்தி சஹீஹ் முஸ்லிமின் அறிவிப்பில் உள்ளது.

இப்னு மாஜாவில் வரும் அறிவிப்பில் நபி (ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமா தனது கணவர் அலி{ரலி}’யுடன் சேர்ந்து, “போரில் காயம் பட்டவருக்கு காயத்தின் இரத்தப் போக்கை தடுக்க விரிக்கின்ற பாயின் ஒரு துண்டை எரித்து, அதன் சாம்பலை காயத்தில் தடவி இரத்தம் வெளியேறுவதைத் தடுத்துள்ளார்என்ற செய்தியும் பதிவாகியுள்ளது.

நுசைபா பின்த் அல்-ஹாரித் {ரலி} அவர்கள் நபி {ஸல்} அவர்களின் காலத்தில் ஏழு யுத்தங்களில் கலந்து கொண்டார். இவர் நோயுற்றவர்களைக் கவனிப்பதிலும் தாகிப்போருக்கு தண்ணீர் புகட்டுவதிலும் காயப்பட்டோருக்கு மருந்து கட்டுவதிலும் ஈடுபட்டிருந்தார் என்ற செய்தியையும் இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்.

நபித்தோழியர்களில் ஒருவரான ருஃபைதா {ரலி} என்பவர்

வரலாற்றின் முதலாவது தாதியாகக் (செவிலியர்) கருதப்படுகின்றார். இறைத் தூதர் (ஸல்) கந்தக் யுத்தத்தில் காயப்பட்டவர்களை கவனிப்பதற்காக பெரிய கூடார மொன்றையே தனியாக (மருத்துவமனையை போல) அமைத்துக் கொடுத்திருந்தார்கள். ருஃபைதா (ரழி) அவர்களுக்கு உதவுவதற்காக பெண்கள் குழுவொன்றும் அவர்களுடன் பணியில் ஈடுபட்டது.

ருபைஃ பின்த் முஅவ்வித் (ரழி) அவர்கள் நாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களோடு சேர்ந்து போராளிகளுக்கு நீர் புகட்டியும், காயம் பட்டவர்களுக்கு மருத்துவம் செய்தும், காயப்பட்டவர்களையும், கொல்லப்பட்டவர்களையும் மதீனாவுக்கு இடமாற்றிக் கொண்டு இருந்தோம்என அறிவித்த ஹதீஸ் புகாரியில் பதிவாகியுள்ளது

முதன் முதலில் மருத்துவ பராமரிப்பு மையம், நபிகள் நாயகத்தின் வாழ்நாளில் ருஃபைதா அல்-அஸ்லமியா{ரலி}வால் அமைக்கப்பட்டது.

கந்தக் (பள்ளப்) போரின் போது, காயமடைந்தவர்களுக்கு அமைக்கப்பட்ட தனி கூடாரத்தில் ருஃபைதா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.

இன்றைய நாட்களில் இராணுவத்தில் செயல்படும் நடமாடும் இராணுவ மருத்துவமனைகளுக்கு முன் உதாரணமாக அதுவே இருந்துள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

மேற்கூறிய தரவுகள் அனைத்தும் நபி அவர்கள் நோய்க்கு மருத்துவம் எடுத்துக் கொள்வதையும், நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பதையும் அவசியமாக்கியுள்ளதையும் உணர்த்துகிறது.

இறையச்சத்தில் உச்சத்தை அடைந்த நபித்தோழர்கள் பலரும் தங்களது நோய்களுக்கு மருத்துவம் செய்துள்ளார்கள் என்பதை நாம் உணர முடிகிறது.

ஆகவே, நமக்கு ஏற்படும் நோய்களுக்கு உரிய நேரத்தில் உரிய முறையில் உரிய மருத்துவர்களிடம் சிகிச்சை மேற் கொண்டு நோயை குணப்படுத்த முயல்வோம்!

எல்லாம் வல்ல அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது நோயை குணப்படுத்தி ஆரோக்கியமான வாழ்க்கையை வழங்குவான்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் நோய் நொடியில்லா வாழ்வைத் தந்தருள்வானாக!

மருத்துவமனை வாழ்க்கை அதன் சிரமம், செலவினங்கள் ஆகியவற்றில் இருந்து முழுமையாக பாதுகாப்பானாக!