Thursday 31 October 2013

இதயத்தை சுவனத்தோடு தொடர்பு படுத்துங்கள்!

     உலகைத் துறந்த ஆத்ம ஞானி இப்ராஹீம் இப்னு அத்ஹம் (ரஹ்( அவர்கள். ஒரு முறை ஒரு குளியல் அறைக்கு குளிக்கச் சென்றார்கள். அந்த குளியல் அறையின் சொந்தக்காரன் காசு கொடுத்தால் தான் குளிக்க அனுமதிக்க முடியும் காசு இல்லையென்றால் வெளியே செல்லுங்கள் என்று கூறினான்.
அதைக் கேட்ட இப்ராஹீம் இப்னு அத்ஹம் (ரஹ்) அவர்கள் தேம்பித் தேம்பி அழுதார்கள்.
மன்னர் அந்த குளியல் அறையின் சொந்தக் காரனை நோக்கி
ஷைத்தான்கள் குடியிருக்கும் வீட்டை சிறிது நேரம் பயன்படுத்தவே கூலி கேட்கின்றாயே?
நபிமார்களும், ஸித்தீகீன்களும், ஷூஹதாக்களும் குடியிருக்கக்கூடிய சுவனத்திற்கு நான் என்ன கூலி கொடுக்கப் போகின்றேன்?
அல்லாஹ் என்னிடம் என்ன கூலியை கேட்பானோ?
என்று தெரியவில்லையே! என்று கூறினார்கள்.

ஓர் உண்மையான இறை நம்பிக்கையாளனின் வாழ்வு அங்கு நுழைந்த பின்னர்தான் உதயமாகின்றது.
ஆம்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மேன் மக்களான தம் தோழர்களை முழுவதுமாக அதற்குத் தான் ஆயத்தப்படுத்தினார்கள்.
எதுவரையெனில்,
இசைத் செய்தால் சுவனம் சென்றிடுவோமா? அதைக் கொடுத்தால் சுவனம் கிடைத்திடுமா? இப்படிப் பேசினால் சுவனம் நுழையும் பேரு பெற்றிடுவோமா?
சதாவும் அவர்களின் இதயங்கள் சுவனத்தோடும், சுவனத்தின் இன்பங்களோடும் தான் தொடர்பில் இருந்தன.
எப்படியாவது சுவனம் கிடைத்திட வேண்டும்?
எப்படியாவது சுவனத்தில் நுழைந்திட வேண்டும்?
என்று ஆவல் கொண்டார்கள்.
விளைவு.
சில மேன்மக்கள் இவ்வுலகிலேயே நபிகளாரின் அமுத வாயால் நேரிடையாக சுவனத்தைக் கொண்டு சோபனம் சொல்லப்பட்டார்கள்.
இன்னும் சிலரை சாடை மாடையாக, இன்னும் சிலரிடத்தில் அதற்கான அறிகுறிகள் தென்படுவதாக, இன்னும் சிலரிடத்தில் அதற்கான தகுதிகள் இருப்பதாக மாநபி (ஸல்) அவர்கள் சோபனம் சொல்லியிருக்கின்றார்கள்.
ஆக அத்தனை பேரும் ஆசைப்பட்டார்கள்!
சுவனத்தின் அத்துணை அந்தஸ்துகளுக்கும் ஆசைபட்டார்கள்! நாமும் ஆசைப்படுவோம்!

சுவனமும், நரகமும்.

ஆக சுவனம் என்பது ஏக இறைவனை ஏற்றுக்கொண்டு, இறைத்தூதருக்கு கட்டுப்பட்டு, வாழ்வின் அனைத்து நிலைகளிலும் நல்லறங்கள் ஆற்றுபவர்களுக்கே கிடைக்கும்.

அல்லாஹ் கூறுகின்றான்:
     “எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தார்களோ, அவர்களை உபசரிப்பதற்காகஃபிர்தௌஸ்எனும் சுவனங்கள் இருக்கின்றன. அங்கே அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அவற்றைவிட்டு வெளியேறி வேறு எங்கேனும் சென்றிட அவர்கள் சற்றும் விரும்ப மாட்டார்கள்.
அல்குர்ஆன்: 18:108
நரகம் என்பது ஏக இறைவனை ஏற்றுக்கொள்ளாமல், இறைத்தூதருக்கு கட்டுப்படாமல் மனம் போன போக்கில் வாழ்பவர்களுக்கே கிடைக்கும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
     “நிச்சயமாக நாம் நிராகரிப்பாளர்களை உபசரிப்பதற்காக நரகத்தை தயார் செய்துவைத்துள்ளோம்.
அல்குர்ஆன்: 18:102
தேட்டமும், ஏக்கமும்
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
சுவர்க்கப் பூங்காக்களை கடந்து சென்றால் நன்றாக மேய்ந்து கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறிய போது,
அல்லாஹ்வின் தூதரே! சுவர்க்கப் பூங்காக்கள் என்றால் எது? என்று ஸஹாபாக்கள் வினவினர்.
அல்லாஹ்வை நினைவு படுத்தக்கூடிய சபைகள் என்று நபி (ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள்.
நூல்: திர்மிதி, எண்: 3510
நபி (ஸல்) அவர்கள் நபித்தோழர்களுக்கு சுவனத்தின் மீதான தேட்டத்தையும், அதை அடையத்துடிக்கும் ஆர்வத்தையும் தூண்டினார்கள்.
ஒரு சந்தர்ப்பம் வந்தது. அது நபித் தோழர்களை எந்த அளவு பாதித்தது எனில்,
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் எடுத்துப் பணிக்கு நியமிக்கப்பட்ட ஹன்ழலா இப்னு அர் ரபீவு அல் உஸைதீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஒரு நாள் அபூபக்கர் (ரலி) அவர்கள் என்னை சந்தித்து ஹன்ழலா எப்படி இருக்கின்றீர்? என்று கேட்டார்கள்.
நான்ஹன்ழலா நயவஞ்சனாகிவிட்டான் என்று சொன்னேன்.
அதற்குசுப்     ஹானல்லாஹ் என்ன சொல்கிறீர்? என்று கேட்டார்.
அதற்கு நான்அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சபையில் அமர்ந்திருக்கும் போது அவர்கள் சொர்க்கம், நரகம் ஆகியவற்றை குறித்து நாம் நேரடியாகப் பார்ப்பதைப் போன்று நினைவூட்டுகிறார்கள்.
அவர்களிடமிருந்து நாம் வெளியேறி வீட்டுக்கு வந்ததும், மனைவி மக்களுடன் உறவாடுகின்றோம், பிழைப்புகளில் ஈடுபடுகின்றோம்,
நபிகளார் சொன்னவற்றில் பலதை நாம் மறந்துவிடுகின்றோம்


நபிகளார் சொன்னவற்றில் பலதை நாம் மறந்து விடுகின்றோம்
அதற்கு அபூபக்கர் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இதே மனோ நிலையை நானும் உணர்கிறேன். என்று கூறினார்கள்.
பிறகு, நானும், அபூபக்கர் (ரலி) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றோம்.
பின்பு நான், அபூபக்கர் (ரலி) அவர்களிடம் கூறியதைப் போன்று நபிகளாரிடமும் கூறினேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்.
“என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணை!
நீங்கள் என்னிடம் இருக்கும் போதுள்ள நிலையிலும், இறைவனின் நினைப்பிலும் எப்போதும் இருப்பீர்களாயின், உங்கள் படுக்கைகளிலும், நீங்கள் செல்லும் பாதையிலும் வானவர்கள் (மூஸா பஹா) கை குலுக்கியிருப்பார்கள். மாறாக, இப்படிச் சில நேரம், அப்படிச் சில நேரம் நிலைமைகள் மாறிக் கொண்டு தானிருக்கும்
நூல்: முஸ்லிம், பாபு ஃபள்லி தவாமுத்திக்ர்

சுவனத்தின் சிந்தனையை விட்டும் சற்று விலகியிருப்பதையே நயவஞ்சகத் தனத்தின் அடையாளமாக கருதுகின்ற அளவிற்கு நபித் தோழர்களை மாநபி (ஸல்) அவர்கள் உருவாக்கினார்கள்.

ஏழ்மையும், வரமும்
ரபீ அத் இப்னு கஃபுல் அஸ்லம் எனும் நபித்தோழர், நபிகளாரின் பிரயாணத்திலும், ஊரில் தங்கியிருக்கும் போதும் நபிகளாரின் சுய தேவைகளின் போது தண்ணீர் எடுத்து கொடுக்கும் பணியை மேற்கொண்டிருந்த நபித்தோழர்.
கடும் குளிர் காலத்தில் ஒருநாள் நடு நிசி நேரம், மாநபி (ஸல்) அவர்கள் தஹஜ்ஜத் தொழுகைக்காக எழுந்து, வாயிற்கதவை திறநது உளு செய்ய வெளியெ வந்த போது,
அங்கே சூடாக்கப்பட்ட தன்னீரோடு ரபீஆ, பெருமானாரின் முன் வந்து நின்றார்,
மாநபி (ஸல்) அவர்கள் அந்த வெந்நீரைக் கொண்டு உளு செய்தார்கள்.
பின்னர் ரபீஆவை நோக்கி
ரபீஆவே! கேளும்! உமக்கு என்ன வேண்டும்?
அல்லாஹ்வின் தூதரே!
எனக்கு உண்ண உணவு இல்லை!
உடுத்த உடை இல்லை!
குடியிருக்க வீடு இல்லை!
தேவையான அளவு பொருளும், பணமும் இல்லை!
     ஆகவே, இதை அடைந்திட வேண்டும் என்றார்களா? இல்லை!
நபியே! நாளை சுவனத்தில் உங்களின் நெருக்கத்தோடு உலவும் நற்பாக்யம் வேண்டும்! தூதரே! என்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவரகள்:
ஆச்சர்யம் மேலிட்டவர்களாக “எம்மிடம் இவ்வாறு கேட்குமாறு யார் தூண்டினார்கள்? எது தூண்டியது? என்று கேட்டார்கள்.
இல்லை அல்லாஹ்வின் தூதரே!
யாரும் தூண்டவில்லை! நான் தான் கேட்டேன்!
சுவனத்தின் மீதான ஆசையும், தங்களின் மீதான நேசமும் என்றார் ரபீஆ (ரலி) அவர்கள்.
அப்படியென்றால்,
உன் வாழ்க்கையில் “சுஜீத்செய்வதை அதிகம் கடை பிடித்து வாரும்!
அதாவது வாழ் நாள் முடியும்வரை விடாமல் தொழுது வாரும் என்றார்கள் நபி (ஸல்) அவர்கள்.
நூல்: மதாரிஜ்-அஸ்-ஸாலிக்கீன்
பாகம்:3, பக்கம்:147

நோயும், சோபனமும்
அபூ நயீம் (ரஹ்) அவர்கள், இம்ரான் இப்னு ஹஸீன் (ரலி) அவர்களின் மூலம் அறிவிக்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் தமது அருமை மகளார் அன்னை ஃபாத்திமா (ரலி) அவர்கள் நோயுற்றிருந்தபோது நலம் விசாரிக்கச் சென்றார்கள்,
மகளே! எப்படி இருக்கின்றாய்? உடல் நிலை எவ்வாறு இருக்கிறது?
என்று விசாரித்தார்கள்.
அப்போது அன்னை பாத்திமா (ரலி) அவர்கள்:
தந்தையே! உடல் நிலை கடுமையாக இருக்கின்றது.
நாளுக்கு நாள் வேதனை கூடிக் கொண்டிருக்கின்றது.
உணவு கூட என்னால் சாப்பிட முடியவில்லை. என்று கூறினார்கள்.
மகளே! பொறுத்துக்கொள்ள மாட்டாயா?
நாளை மறுமையில் சுவர்க்கத்தில் அல்லாஹ் உன்னை உலகத்து பெண்களுக்கு தலைவியாக ஆக்கினால் நீ திருப்தி அடைந்திடுவாய் அல்லவா? என்று கேட்டார்கள்.
அதற்கு, அன்னை ஃபாத்திமா (ரலி) அவர்கள்
முன்பொருமுறை மர்யம் (அலை) அவர்கள் சுவர்க்கத்தில் உலகத்தின் பெண்களுக்கு தலைவி என்று கூறினீர்களே!
அப்படியென்றால்? அவர்களின் நிலை என்ன?
மர்யம் (அலை) அவர்கள், அவர்கள் காலத்தைய பெண்களுக்கு சுவனத்தின் தலைவியாகவும்,
மகளே! நீ உன் காலத்தைய பெண்களுக்கு சுவனத்தின் தலைவியாகவும் இருப்பீர்கள்என்று மாநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: ஹூல்யத்துல் அவ்லியா, பாகம்:2, பக்கம்:42

இழப்பும், தேடலும்
பத்ரு யுத்தம் முடிந்து மாநபி (ஸல்) அவர்களும், மாநபித் தோழர்களும் மதீனாவின் எல்லையை வந்தடைந்த போது, பத்ரு ஸஹாபாக்களின் உறவினர்கள் வந்து குவியத்தொடங்கினர்,
திரும்பிவந்தவர்களை ஆரத் தழுவினர், ஷஹீதானவர்களின் குடும்பத்தினர் இரங்கல் தெரிவித்துக் கொண்டனர்.
எங்கே என் மகன்? எங்கே என் மகன்?
குரல் வந்த திசையை நோக்கி திரும்பினார்கள் நபித் தோழர்களில் சிலர்,
ஓ! ஹாரிஸாவின் தாயார் உம்மு ஹாரிஸா தானே நீங்கள்
யுத்தம் துவங்கும் முன்னரே உங்களது மகன் கொல்லப்பட்டுவிட்டார்? என்றார் ஒரு நபித் தோழர்,
என்ன? யுத்தம் நடக்கும் முன்னரே கொல்லப்பட்டுவிட்டானா? எப்படி?
அதுவா? முஸ்லிம் படையினருக்கும், படையின் ஒட்டகத்திற்கும், தண்ணீர் சேகரித்துக் கொண்டிருக்கும் போது,
முஸ்லிம் படையினரில் யாரோ ஒருவர் தவறாக எய்த அம்பு பட்டு கிணற்றருகே வீழ்ந்து இறந்து போனார்,
என்றார் மற்றொரு நபித் தோழர்,
எங்கே அல்லாஹ்வின் தூதர்? எங்கே அல்லாஹ்வின் தூதர்? என்று பதறி துடித்தபடி கூட்டத்தில் அங்குமிங்கும் சப்தமிட்டாவறு ஓடினார்.
எதிரே ஓரிடத்தில் மாநபி(ஸல்) அவர்கள் நிற்பதை கண்ட அப்பெண்மணி கூட்டத்தை விலக்கி மாநபி (ஸல்) அவர்களின் முன் வந்து நின்று
“அல்லாஹ்வின் தூதரே! என் மகன் மீது நானும், என்மீது என் மகனும் கொண்டிருந்த பாசத்தை நீங்களும் இந்த மக்களும் நன்கு அறிகின்றேன்.
அவன் சுவர்க்கத்தில் இருப்பான், இருக்கின்றான் என்றால் நான் பொருமையாகவும், கட்டுக்கோப்பானவளாகவும் இருப்பேன்.
அவன் சுவனத்தில் மட்டும் இல்லை என்றால் நான் என்ன செய்வேன் என்பதை நீங்கள் பார்க்கத்தான் போகின்றீர்கள் என்று கூறினார் உம்மு ஹாரிஸா (ரலி)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்:
“சுவனம் ஒன்று தான் உள்ளது என நினைத்துக் கொண்டிருக்கின்றீரா?
இல்லை, பல சுவனங்கள் இருக்கின்றது
உனது மகன் ஹாரிஸா உயர்வான சுவனமாக ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ்-ல் இருக்கின்றான்.
என்று கூறினார்கள்.
அதைக் கேட்டு மகிழ்ச்சியோடு திரும்பிச் சென்றார்கள் உம்மு ஹாரிஸா (ரலி) அவர்கள்
நூல்: இஸ்தீஆப், பாகம்:1,? பக்கம்:166

வியப்பும், ஆர்வமூட்டலும்
தாத்து ஜன்தல் எனும் கோத்திரத்தார் வசித்து வந்த பிரதேசத்தின் தலைவன் அகீதர் இப்னு அப்துல் மாலிக் என்பவன் ஜிஸ்யா- பாதுகாப்பு வரி கொடுக்காமல் ஏமாற்றிக் கொண்டிருந்தான்.
அவனைக் கைது செய்து உயிருடன் கொண்டுவருமாறு நபித்தோழர் காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் தலைமையில் 500 பேர் கொண்ட படைப்பிரிவை நபி (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.

சொன்னது போலவே காலித் பின் வலீத் (ரலி) அவர்கள்
அகீதர்பின் அப்துல் மாலிக் –கை உயிருடன் பிடித்து இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முன்னிலையில் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.

அவன் விலையுயர்ந்த ஆடைகளையும், அதில் தங்கத்தால் நெய்யப்பட்ட விலையுயர்ந்த ஜரிகைகளையும் இணைத்திருந்தான். மேலும், தங்கத்தால் நெய்யப்பட்ட கயிற்றை தலையில் கட்டியிருந்தான்.
இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் இந்த காட்சியைப் பார்த்து விட்டு
“இது என்ன பெருமையும் அகங்காரமும்? என வியப்பு மேலிட விமர்சித்தார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள்:
“என்ன ஆச்சர்யமாய் இருக்கின்றதா?
சுவனத்தில் ஸஅத் இப்னு முஆதின் கைக்குட்டை இதை விட மிகச் சிறந்த்து; விலை உயர்ந்த்து”.
என்று கூறினார்கள்.
நூல்: தஹ்தீப் சீரத் இப்னு ஹிஷாம், பக்கம்:257
ஸஅத் இப்னு முஆதின் மேலாடையையோ, அல்லது சிறப்பு அணிகலனையோ இங்கே நபியவர்கள் குறிப்பிடவில்லை. மாறாக, வெறும் கைக்குட்டையைக் கூறி மாநபித் தோழர்களின் இதயங்களை சுவனத்தின்பால் தொடர்பு படுத்தினார்கள்.

ஆசையும், தேடலும்
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:-
“நாங்கள் நபி (ஸல்) அவர்களோடு அமர்ந்திருந்தோம்,
அப்போது நபி (ஸல்) அவர்கள் “இப்போது ஒரு மனிதர் வருவார் அவர் சுவனவாதிஎன்று கூறினார்கள்.
அப்போது எங்கள் முன் அன்ஸாரித் தோழர், உளு செய்த தண்ணீரின் ஈரம் சொட்டச் சொட்ட, இடதுகையில் செருப்பை தூக்கியவாறு பள்ளியில் நுழைந்தார்.
இரண்டாவது நாளும், நபிகளார் அது போன்று கூறவே, அவர்தான் எங்கள் முன் தோன்றினார்,
மூன்றாவுத நாளும் நபிகளார் அது போன்று கூறவே அவர்தான் எங்கள் முன் தோன்றினார்.

நபி (ஸல்) அவரக்ள் எழுந்து சென்றுவிட்ட போது,
அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள், நேராக அவரிடம் சென்று “நான் என் தந்தையிடம் சண்டையிட்டு, மூன்று நாள் வீட்டிற்கு வரமாட்டேன் என சத்தியமிட்டு கூறிவிட்டேன். ஆகவே, மூன்று நாள் உங்களோடு உங்கள் வீட்டில் தங்கிக் கொள்கின்றேன்என்று கூறியுள்ளார்.
அதற்கு அந்த அன்ஸாரித் தோழர் சரி என சொல்லிவிட்டார்,
பிறகு அப்துல்லாஹ் இப்னு அம்ரு அவரோடு தங்கிய அந்த நாட்களைப்பற்றி என்னிடம் விவரித்தார்.

அவர் ஒருநாளும் இரவுத் தொழுகையில் ஈடுபடவில்லை,
ஆனால், படுக்கையில் புரண்டால் அல்லாஹ்வை நினைவு கூறுவார். பாங்கு சொன்னதும் விழித்து ஃபஜ்ர் தொழ செல்வார். மற்றபடி நம்மைப் போன்றுதான் வணக்க வழிபாடுகளைச் செய்கின்றார்.
வேறு ஒன்றும் சிறப்பாக செய்ய நான் காணவில்லை.
பின்பு, நான் அவரிடம், நான் ஒன்றும் என் தந்தையோடு பிணங்க வில்லை. மாறாக, மாநபி (ஸல்) அவர்கள் கூறிய சோபனத்தையும், அதைத் தொடர்ந்து மூன்று முறை நீங்களே வந்த்தையும் வைத்து, உங்களோடு இருந்து அதைக் கண்ணுற்று நானும் கடைபிடிக்கவே ஆவல்கொண்டு உங்களோடு தங்கினேன்.
ஆனால், அப்படியொன்றும் நீங்கள் உயர்வாக அமல் செய்ய நான் காணவில்லை.
நபிகளார் சொன்னால் அது உண்மையாகத் தான் இருக்கும், சொல்லுங்கள் இப்போதே!
அந்த உயர்வான நல்லறம் எது?
அவர் கூறினார்:
“எப்போதும் நான் மற்றெந்த முஸ்லிம்களின் மீதும், குரோதமே, பகைமையோ கொண்டதில்லை.
அல்லாஹ் எனக்கு கொடுத்தைக்கொண்டு நான் திருப்தி கொள்கின்றேன்.
எந்த சந்தர்ப்பத்திலும் பிறருக்கு வழங்கப்பட்டிருக்கும் எந்த பாக்கியத்தின் மீதும் நான் பொறாமை கொண்டதில்லை. என்றார்
நூல்: அல்ஃப கிஸ்ஸதுவ் – வகிஸ்ஸா, பாகம்:2, பக்கம்:487
ஆகவே மேறகூறிய அத்துணை நிகழ்வுகளும்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,
புனித நபித் தோழர்களையும், நபித் தோழர்களின் இதயங்களையும் சுவனத்தோடும், சுவனத்து இன்பங்களோடும் இணைவிட்டார்கள்.

அவர்களின் அத்துணை அசைவுகளும்
சுவனத்தோடு தொடர்புடையவைகளாகவே அமைந்திருந்தன.

நாமும் சுவனத்தோடு தொடர்பு கொள்வோம்!

அல்லாஹ் அத்தகைய மேன்மக்களோடு
சுவனத்தில் உலவும் பாக்யத்தை தருவானாக!
ஆமீன்!

சுவனத்தைப் பற்றிய மேலதிக தகவல்களுக்கு நமது முந்தைய
“முந்திச் செல்பவர்களுக்கே முன்னுரிமை!
சுவனத்தில்.....

எனும் தலைப்பில் தேடவும்.

எனதருமை இஸ்லாமிய சமுதாயமே!
           இன்று உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய முஸ்லிமிகள் அனைவர்களின் உள்ளத்திலும் ஒரு ஆசை அது என்ன தெரியுமா? எப்படியாவது சுவர்க்கத்திற்கு சென்றுவிட வேண்டும் என்பது தான்.
           பள்ளிவாசலுக்கு போனமா? தொழுதோமா? குர் ஆன் ஓதினோமா? என்பதையெல்லாம் நினைத்துக்கூட பார்ப்பது கிடையாது. ஆனால் சுவர்க்கத்திற்கு போகனும். எப்படி போறது?
           சுவர்க்கம் என்ன மரிந்தா கிடக்கிறது ஒன்னுமே செய்யாம ஓடி போவதற்கு.
           சுவர்க்கம் எப்படிபட்டது, சுவர்க்கத்தின் மாளிகை எப்படிப்பட்டது என்பதை மாநபி (ஸல்) அவர்க் எப்படிகுறிப்பிட்டார்கள், தெரியுமா?
           “சுவனத்தின் கட்டிடத்தில் ஒரு செங்கள், வெள்ளியாகவும், மற்றொன்று தங்கமாகவும் இருக்கும் மேலும் அதன் கலவைத்தூய கஜ்தூரியாகவும், அதன் ஜல்லி முத்துக்களாகவும் அதன் மண் குங்கும்ப்பூவாகவும் இருக்கும்என கூறினார்கள்.
           இந்த சுவர்க்கத்தினுல் ஈஸியாக போக முடியுமா? என நாம் நினைப்பது போன்றே அல்லாஹ்வும் குர்ஆனில் கேட்கிறான்
           “உங்களுக்கு முன்னால் சென்று விட்டவர்களுக்கு ஏற்பட்டமைப்போன்று சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சொர்க்கத்தில் நீங்கள் பிரவேசித்துவிடலாம் என்று நினைக்கிறீர்களா?
                மாநபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் சுவர்க்கத்தில் ஒரு சாட்டையின் அளவு இடம் உங்களுக்கு சொந்தமாக இருப்பத என்பது உலகம் மற்றும் உலகத்தின் அனைத்து பொருள்களையும் விட சிறந்தது.

           நாம் எந்த அளவு சுவர்க்கத்தை விரும்புகின்றோமோ அது மாதிரிதான் இறைநேசர்களும், ஸஹாபாக்களும் சுவர்க்கத்தை விரும்பினார்கள். நாம் அதற்க்கான முயற்ச்சி செய்வதில் ஆர்வம் குறைந்தவர்களாக இருக்கின்றோம். ஆனால் அவர்கள் ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் சுவர்க்கத்தின் சிந்தனையிலேயே இருந்து கொண்டிருந்தார்கள். நம்முடைய நிலைமைஇ என்னவாகுமோ, நமக்கு சுவர்க்கம் கிடைக்குமா, கிடைக்காதா தெரியவில்லையே கிடைக்க வேண்டும் என்கின்ற எண்ணத்திலேயே வாழ்ந்தார்கள் என்பது அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஆய்வு செய்கின்ற போது நாம் புரிந்து கொள்ளலாம்.



1 comment:

  1. அல்ஹம்துலில்லா .நல்ல தகவல் .ஜஸாகல்லா

    ReplyDelete