Tuesday 18 February 2014

நவீன பிரச்சனைகளும்…இஸ்லாம் வழங்கும் தீர்வுகளும்…



நவீன பிரச்சனைகளும் 
இஸ்லாம் வழங்கும் தீர்வுகளும்
 

 நாம் வாழ்வது அறிவியல் தொழில் நுட்பம் நிறைந்திருக்கின்ற காலம்.

 அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியால் மனித சமூகத்தில் வியக்கத்தக்க மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

இவற்றின் வரவால் மானுட சமுதாயத்தின் வாழ்வியல் முறையில், வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்றால் அது மிகையல்ல.

எப்பொழுதெல்லாம் வளர்ச்சியை நோக்கி இந்த மானுட சமுதாயம் முன்னேறிச்செல்கிறதோ….

எப்பொழுதெல்லாம் மாற்றங்களை நோக்கி இந்த மனித சமூகம் பயணிக்க தொடங்குகின்றதோ….

அப்பொழுதெல்லாம் காலத்தின் சுழற்சியில் பல்வேறு நவீன பிரச்சனைகளை அது எதிர்கொள்கிறது.

எளிதில் மீண்டுவிடவும், வேகமாக அப்பிரச்சனைககளிலிருந்து வெளியேறிவிடவும் துடிக்கின்றது.

வியக்கத்தக்க கண்டுபிடிப்புகளை வெளிக்கொணர்கிற மனித அறிவால், அன்றாடம் தாம் சந்திக்கின்ற பிரச்சனைகளிலிருந்து வெளியேறிடும் தீர்வுகளை கண்டுபிடிக்க இயலவில்லை.

தீர்வுகளை நோக்கிய தேடலில் மனித சமூகம் அலைந்து கொண்டுதானிருக்கிறது.

எக்காலத்திலும் பிரச்சனைகளிலிருந்து வெளியேறுவதற்கான தீர்வுகளின் தீர்க்கமான அறிவினை மனித சமூகத்தினால் பெற்றுக் கொள்ள முடிவதில்லை.

 இது தான் மானுட வரலாறு முழுவதிலும் காணப்படுகிற மறுக்கமுடியாத உண்மை.

உலகில் எவராலும், எந்தவொரு மதத்தாலும் சொல்ல முடியாத தீர்வுகளையெல்லாம் இஸ்லாம் மாத்திரமே மனித சமூகத்திற்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

மனித சமூகத்தின் துவக்க காலத்திலிருந்தே இந்த அரிய பணிகளை இஸ்லாம் மேற்கொண்டுள்ளதாக, மனித சமூகம் சந்தித்த பல பிரச்சனைகளில் தீர்வுகளை வழங்கியதாக அல்குர்ஆன் எண்ணற்ற பல எடுத்துக்காட்டுகளை எடுத்துக்காட்டுகிறது.

ஆதிமனிதர் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் இரண்டு மகன்களில் ஹாபீல் என்பவரை, காபீல் என்பவன் பொறாமையால் கொலை செய்து விடுகின்றான். இது குறித்து அல்குர்ஆனின் (5:26-29) வசனங்களில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

பின்பு செய்வதறியாது திகைத்து நின்றபோது, அல்லாஹ் காகத்தை அனுப்பி இறந்த மனித உடலை அடக்கம் செய்வதெப்படி என வழி காட்டினான்.

 ஏனெனில், அது தான் முதன் முதலில் பூமியில் விழுந்த பிரேதம். காகத்தின் இச்செயலைக் கண்ட காபீல்அந்தோ என் துயரமே! இந்தக் காகத்தைப் போன்று கூட நான் இல்லையே! (அவ்வாறு நான் இருந்திருந்தால்) என்னுடைய சகோதரனுடைய சடலத்தை அடக்கம் செய்வதற்கான முறை எனக்குப் புலப்பட்டிருக்குமே!” என அழுது புலம்பியதாக அல்லாஹ் (5:30) வசனத்தில் குறிப்பிடுகின்றான்.

அல்லாஹ் மனித சமூகத்திற்கு நேர்வழிகாட்ட அனுப்பிவைத்த அத்துணை தூதர்களையும் ஏகத்துவ செய்திகளோடு, அன்றாடம் அந்த மக்கள் சந்தித்து வந்த பிரச்சனைகளுக்கான தீர்வையும் கொடுத்தே அனுப்பினான்.

துல்கர்னைன் எனும் இறைநேசர் குறித்த வரலாற்றை அல்லாஹ் குர்ஆனில் கூறும் போது, “பிரச்சனைகளோடு வாழ்ந்து வந்த மூன்று சமூக மக்களின் வாழ்க்கையில் முக்கியமான, தீர்க்கமான தீர்வுகளை துல்கர்னைன் {அலை} மூலமாக வழங்கியதாககுறிப்பிடுகின்றான்.

                               (பார்க்க: அல்குர்ஆன்: 18: 84 – 98)

ஆக, மனித சமூகம் வாழத் தொடங்கிய காலத்திலிருந்தே பிரச்சனைகளும் அவனைத் தொடர ஆரம்பித்துவிட்டது.

தீர்வுகளை தேடத் துவங்கியதிலிருந்து அனைத்துக் காலங்களிலும் அல்லாஹ் தான் இந்த மனித சமூகத்திற்கு தீர்வுகளை வழங்கி கௌரவித்துக் கொண்டிருக்கின்றான்.
இந்த உலகம் அழியும் நாள் வரை மனித சமூகம் சந்தித்துக் கொண்டிருக்கின்ற, சந்திக்கவிருக்கின்ற அனைத்துப் பிரச்சனைகளின் தீர்வுகளும் அவன் வசமே உள்ளது.

அவனுடைய கட்டளை, அவன் தூதர் முஹம்மத் {ஸல்} அவர்களின் வழிகாட்டலால் அமைந்திருக்கின்ற இஸ்லாத்தின் மூலம் தான் நாம் வாழ்கிற இந்த நவீன காலத்தைய பிரச்சனைகளின் தீர்வுகளை அடைந்து கொள்ள முடியும்.

 நவீன பிரச்சனை1

கர்நாடக மாநிலம் பெல்காமைச் சேர்ந்தவர் பிரவீன் இவரது மனைவி சவீதா இருவரும் அயர்லாந்தில் பணிபுரிந்தனர்.

கடந்த 21.10.2012, அன்று அயர்லாந்தின் பிரபல கால்வே மருத்துவமனையில் கருச்சிதைவு காரணமாக உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.

பல் மருத்துவரான சவீதா தனது நான்கு மாத சிசு கருவிலேயே சிதைந்து போன நிலையில் இருப்பதை ஸ்கேனிங் மூலம் அறிந்து கொண்டார்.

அது தமது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதை மருத்துவராக இருப்பதால் உணர்ந்து கொண்ட அவர், மருத்துவமனை நிர்வாகத்திற்குகருவை கலைத்து விடும்படிவிண்ணப்பித்தார்.

ஆனால், மருத்துவமனை நிர்வாகம் கருக்கலைப்புச் செய்ய மறுத்து விட்டது.

மன்றாடினார், மருகினார் மருத்துவமனை நிர்வாகம் செவி சாய்க்கவில்லை.
அயர்லாந்து ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவ நாடு. கருக்கலைப்புக்கு சட்டத்தில் இடமில்லை எனக் கூறி மருத்துவமனை நிர்வாகம் கைவிரித்து விட்டது.

இறுதியில், 27.10.2012, அன்று அவர் இறந்து விட்டார். கருவை அகற்றவில்லை என்றால் தாயின் உயிருக்கு ஆபத்து என்ற நிலையிலும் சட்டவிரோதம் என்று ஒற்றை வார்த்தையைக் கூறி ஓர் உயிரை பறித்து விட்டனர்.

வழக்கமாக மீடியாக்கள் {BIAS} எனும் ஒரு பக்க சார்புடன் நடந்து கொண்டன. இது போன்றதொரு செயல் இஸ்லாமிய நாட்டில் நடைபெற்றிருக்கு மேயானால், இஸ்லாமிய பழமைவாதம்; இஸ்லாமிய அடிப்படைவாதம் எனக் கூக்குரலிட்டிருப்பனர்.

மனித நேயத்திற்கு விரோதமானவர்களாக இஸ்லாமியர்களும், ஷரீஆவின் சட்டங்களும் விமர்சிக்கப்பட்டிருக்கும். (இஸ்லாத்தின் நிலைப்பாடு இதுவல்லவே அதனால் மௌனமாகி விட்டிருந்தனர்) ஆனால், அத்துணை மீடியாக்களும், ஊடகத்துறையினரும் வாய்மூடி, அதிக எதிர்ப்புக் காட்டாமல் அப்படியே அடங்கிப்போயிருந்தனர்.

ஏற்கனவே சிதைந்து போயிருக்கின்ற சிசுவைக்காட்டிலும், உயிருக்கு போராடிக்கொண்டிருக்கின்ற தாயைக் காப்பாற்றுவது அவசியமா? இல்லையா? எனும் கேள்வி எழுவதும், இதே நிலை இறை நம்பிக்கையாளனான ஓர் முஸ்லிமுக்கு ஏற்பட்டால் அவனுக்கான தீர்வு என்ன? இஸ்லாமிய வழிகாட்டல் என்ன? என்பதைக் காண நாம் கடமைப் பட்டிருக்கின்றோம்.

 நவீன பிரச்சனை2

கடந்த 16.12.2012, அன்று தில்லியின் மருத்துவக்கல்லூரி மாணவி ஒருவர் 6 – பேர் கொண்ட ஒரு கும்பலால் மிகக் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டு, தில்லியின் சஃப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் உயர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக 29.12.2012, அன்று உயிரிழந்தார்.

அதன் பிறகு எழுந்த வாதப் பிரதிவாதங்களையும், தேச மக்கள் கொதித்து எழுந்ததையும், அரசியல்வாதிகளின் நாடகங்களையும், சட்ட மேதைகளின் தடுமாற்றங்களையும் நாம் ஓரளவு ஊடகத்தின் வாயிலாக அறிந்து வைத்திருக்கின்றோம்.

பாலியல் பலாத்கார குற்றத்திற்கு இஸ்லாமிய நாடுகளில் பின்பற்றப்படும் தண்டனை வழங்கப்பட வேண்டுமென சகோதர சமய மக்களும் அந்த தருணத்தில் முன் வைத்தது நமக்கெல்லாம் தெரிந்த செய்திதான்.

நவீன காலத்தைய நவீனமான இவ்விரண்டு பிரச்சனைகளிலும் இஸ்லாம் வழங்கும் தீர்வுகளென்ன?

தீர்வு1

புரைதா பின் அல்ஹஸீப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

”அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் திருச்சமூகத்திற்கு அஸ்த் குலத்தின் கிளையான ஃகாமிதிய்யா கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி வருகை தந்தார்கள்.

வந்த அந்தப் பெண்மணி அல்லாஹ்வின் தூதரே! நான் விபச்சாரம் செய்து விட்டேன். எனக்கு உரிய தண்டனையை நிறைவேற்றி என்னை தூய்மை படுத்துங்கள்! என்றார்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அப்பெண்மணியை திருப்பி அனுப்பி விட்டார்கள். அப்பெண் மறு நாளும் அல்லாஹ்வின் தூதரின் முன் வந்து நின்று முன்பு சொன்னது போலவே சொன்னார்.

 அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் திரும்பிச் செல்லுமாறு கூறிய போது, அப்பெண்மணிஅல்லாஹ்வின் தூதரே! ஏன் என்னை திருப்பியனுப்புகின்றீர்கள்? மாயிஸ் இப்னு மாலிக் {ரலி} அவர்களின் விஷயத்தில் நடந்து கொண்டதைப் போன்றல்லவா என் விஷயத்திலும் நடந்து கொள்கின்றீர்கள்.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் தகாத உறவில் ஈடுபட்டு கர்ப்பமுற்றுள்ளேன்என்று கூறினார்.

நபி {ஸல்} அவர்கள் ஆச்சர்யத்தோடுநீயா அது?” என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணிஆம்என்றார்.

அப்படியானால் உமது வயிற்றினுள் உள்ள குழந்தையை பெற்றெடுத்து விட்டு வா!” என்று அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

குழந்தையை பெற்றெடுத்த பின்னர் அப்பெண்மணி ஒரு துணியில் அந்தக் குழந்தையை சுற்றியெடுத்துக் கொண்டு, மாநபி {ஸல்} அவர்களிடம் வந்துஇது நான் பெற்றெடுத்த குழந்தைஎன்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள், “நீ சென்று அந்தக் குழந்தைக்கு அமுதூட்டு! பால்குடி மறக்கடிக்கப்பட்ட பின் வா! என்று கூறி அனுப்பி வைத்தார்கள்.

அமுதூட்டும் காலம் நிறைவடைந்த பின்னர், அக்குழந்தையை அழைத்துக் கொண்டு, அக்குழந்தையின் கையில் ரொட்டித் துண்டு ஒன்றை கொடுத்து அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் சபைக்கு வந்து, “அல்லாஹ்வின் தூதரே! இதோ நான் பால்குடி மறக்கடித்து விட்டேன். இப்போது என் குழந்தை உணவை உட்கொள்ள ஆரம்பித்து விட்டதுஎன்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள், அக்குழந்தையை அன்ஸாரிகளில் ஒருவரிடம் ஒப்படைத்தார்கள்.

அதன் பின்னர் அந்தப் பெண்ணுக்கு கல்லெறி தண்டனை வழங்குமாறு உத்தரவிட்டார்கள். எனவே, அவருக்காக மார்பளவு குழி தோண்டப்பட்டது.

பின்னர் அக்குழிக்குள் அப்பெண் நிறுத்தி வைக்கப்பட்ட பின் கல்லெறியுமாறு மக்களுக்கு கட்டளையிட, மக்கள் அவர் மீது கல்லெறிந்து அல்லாஹ்வின் தண்டனையை நிறைவேற்றினார்கள்.

அப்போது, காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள் கல் ஒன்றை எடுத்து அப்பெண்ணின் தலைமீது எறிந்தார்கள். பீறிட்டு வந்த இரத்தம் காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களின் முகத்தில் தெரித்தது.

அப்போது, காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள் அப்பெண்ணை சபித்தார்கள்; ஏசினார்கள். இதை அருகில் நின்று கேட்ட மாநபி {ஸல்} அவர்கள் “காலிதே! நிறுத்துங்கள். என் உயிர் எவன் வசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! அப்பெண்மணி அழகிய முறையில் தவ்பா பாவமன்னிப்புத் தேடிக்கொண்டார்.

பொது நிதியை மோசடி செய்த ஒருவன் இப்படி பாவமன்னிப்புக் கோரினால் அவனுக்கும்கூட மன்னிப்பு வழங்கப்பட்டிருக்கும்.” என்று கூறினார்கள்.

பிறகு அப்பெண்ணுக்கு ஜனாஸா தொழுகை நடத்த ஏற்பாடு செய்யுமாறு நபித்தோழர்களை பணித்தார்கள். அவருக்காக ஜனாஸா தொழுகையை தாமே தொழவைத்தார்கள். பின்னர் அப்பெண்மணி நல்லடக்கமும் செய்யப்பட்டார்.

(நூல்: முஸ்லிம்,பாபு மன் இஃதரஃப அலா நஃப்ஸிஹி பிஸ்ஸினா, மிஷ்காத்,கிதாபுல் ஹுதூத், பக்கம்:310)

குற்றவியல் தண்டனைக்குரிய ஓர் தவறைச் செய்து விட்ட, ஒரு பெண் தானாக முன் வந்து குற்றத்தை ஒப்புக்கொண்டு தண்டனை வழங்குமாறு வேண்டி நின்றபோது...

கருவுக்குள் இருக்கும் சிசுவுக்கும் அப்பெண் செய்த குற்றத்திற்கும், தண்டனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை உணர்ந்திருந்த நபி {ஸல்} அவர்கள், மூன்று முறை தவணை வழங்கி தண்டனை வழங்குவதை தாமதப்படுத்தி, ஓர் உயிர் அநியாயமாக இறந்து விடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தார்கள்.

இஸ்லாத்தைப் பொருத்தவரையில் வேண்டுமென்றே ஓர் சிசுவை கொலை செய்வதும், சிசுவை கருவில் அழிப்பதும், வறுமைக்குப் பயந்து சிசுக்கொலை செய்வதையும் தான் தடுத்துள்ளது.

அது பெரும் பாவமென்றும், மறுமையில் மன்னிக்கப்பட முடியாத குற்றம் எனவும், விசாரணை மன்றத்தில் முதல் கேள்வியாக தொக்கி நிற்கும் எனவும் அல்குர்ஆனின் மூலம் எச்சரிக்கின்றது.

ஆனால், சிசுவின் கருவமைப்பே தாயின் உயிரை பறித்துவிடும் என அஞ்சுகிற இது போன்ற தருணங்களில் “நிர்பந்தத்தின் சட்ட அமைப்பை பயன்படுத்த இஸ்லாம் அனுமதி வழங்கியுள்ளது.

அல்லாஹ் கூறுகின்றான்: “கட்டாய (நிர்பந்த) ச் சூழ்நிலைகளைத் தவிர மற்ற சமயங்களில் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்துள்ளவை பற்றி ஏற்கனவே உங்களுக்கு விளக்கியிருக்கின்றான்.”
                                                                   
                                            (அல்குர்ஆன்:6:119)

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் என் உம்மத்சமுதாயத்தினர் ஒன்றும் அறியாமலோ, மறதியாகவோ, நிர்பந்தத்தின் அடிப்படையிலோ செய்கிற செயல்களுக்காக குற்றம் பிடிப்பதில்லை.”
                          (நூல்: இப்னுமாஜா, ஹதீஸ் எண்:4050)

தீர்வு2

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு. 375, 376 –ன் படி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது பத்தாண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதத்துடன் கூடிய இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையோ வழங்கப்படலாம்.

பாலியல் பலாத்காரத்தால் ஒரு பெண் இறந்து விட்டால், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களுக்குஇந்திய தண்டனைச் சட்டம் 302 – ன் படி கொலைக்குற்றத்தில் ஈடுபட்டதிற்காக மரண தண்டனையோ, அல்லது ஆயுள் தண்டனையோ, அல்லது அபராதத்துடன் கூடிய ஆயுள் தண்டனையோ வழங்கப்படலாம்.

(நூல்: முப்பெரும் குற்றவியல் சட்டங்கள், இந்திய தண்டனைச் சட்டம், தீங்கியல் சட்டம். இந்த நூற்கள் வழக்கறிஞர்களிடம் இருக்கும்)

நீதிமன்றத்தின் படியேறி இந்தக் குற்றத்தை நிரூபிக்கும் முன்னமே சட்டத்தின் ஓட்டைகளை கற்றறிந்த கயவர்கள், காமக் கொடூரர்களை ஜாமீனிலோ அல்லது நிரபராதி என நிரூபித்தோ வெளியில் கொண்டு வந்து விடுவார்கள்.

ஹிஜ்ரி 1401 –ஆம் ஆண்டு துல்கஅதா மாதம் பிறை 11 அன்று, சவூதியாவின் மாபெரும் மார்க்கச் சட்ட வல்லுனர்களும், முதுபெரும் உலமாக்களும் சவூதியாவின் ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகள் என ஒரு பெரும் திரளான இஸ்லாமிய கலாச்சார பாதுகாவலர்கள் ஒன்று கூடிபாலியல் பலாத்காரத்திற்கான இஸ்லாமிய தண்டனை என்ன? அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும் இது குறித்து என்ன வழிகாட்டி இருக்கின்றார்கள்? என்று ஆலோசனை நடத்தினார்கள்.

இறுதியாக, அல் மாயிதா அத்தியாயத்தின் 33-ஆம் வசனத்தின் படிபாலியல் பலாத்காரத்திற்கான தண்டனையாகஅதிக பட்ச தண்டணையாக மரணதண்டனையை தீர்மானித்து, அதை அன்றைய தேதியிலேயே அமுல்படுத்தப்பட வேண்டும் என ஃபத்வாமார்க்கத்தீர்ப்பு வழங்கினார்கள்.

அந்த தீர்மானத்தையும், ஃபத்வாவையும் அத்துணை இஸ்லாமிய நாடுகளுக்கும் அனுப்பி வைத்தார்கள். அன்றிலிருந்து இன்று வரை சவூதி மற்றும் இஸ்லாமிய நாடுகளில் அந்தச் சட்டம் தான் நடைமுறைபடுத்தப்படுகின்றது.

அல்லாஹ் கூறுகின்றான்: “எவர்கள் அல்லாஹ்வோடும் அவனுடைய தூதரோடும் போரிடுகின்றார்களோ, மேலும், பூமியில் குழப்பம் விளைவிக்க தீவிரமாக முயற்சி செய்கின்றார்களோ அவர்களுக்குரிய தண்டனை இது தான்:

அவர்கள் கொல்லப்பட வேண்டும்; அல்லது தூக்கில் ஏற்றப்பட வேண்டும்; அல்லது மாறுகை, மாறுகால்கள் வெட்டப்பட வேண்டும்; அல்லது நாடு கடத்தப்பட வேண்டும்.

இது அவர்களுக்கு உலகில் கிடைக்கும் இழிவா (ன தண்டனையா) கும். மேலும், மறுமையில் அவர்களுக்கு இதைவிடக் கடுமையான தண்டனை இருக்கின்றது.”                          (அல்குர்ஆன்:5:33)
ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்பவன் அல்லாஹ்வுடன் போர்பிரகடனம் செய்தவனாகவும், தான் வாழும் நாட்டில் அல்லது பகுதியில் பெரும் குழப்பம் விளைய காரணமான வனாகவும் ஆகிவிடுகின்றான்.

மேலும், அல்லாஹ் இந்த வசனத்தில் கூறிடும் தண்டனைஒரு மனிதனின் உயிர், மானம், பொருள் ஆகியவைகளில் மிகப் பெரிய சேதாரத்தை உண்டுபண்ணக்கூடியவர்கள் விஷயத்திலும் வழங்கலாம். என அந்த ஃபத்வாவில் குறிப்பிட்டுள்ளனர்.

(நூல்: அல்மஜ்லதுல் புஹூஸுல் இஸ்லாமிய்யா, பாகம்:16, பக்கம்:75.)

 நவீன பிரச்சனை 3

அருணா ஷம்பக் 1966-ஆம் ஆண்டு ஆசியாவிலேயே மாநகராட்சியால் நிர்வகிக்கப்படுகிற, மும்பையில் உள்ள பிரபல்யமானகிங் எட்வர்ட் மெமோரியல்எனும் மருத்துவமனயில் நர்ஸாக பணியில் சேர்ந்த அழகிய இளம்பெண்.

1973-ஆம் ஆண்டு நவம்பர் 27-ஆம் தேதி மாலை நேரத்தில் அதே மருத்துவமனையில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணியாற்றியசோகன்லால் பார்த வால்மீகிஎன்பவனால் மிகக் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டு, நாய்கட்டும் சங்கிலியால் அவரின் கழுத்து நெரிக்கப்பட்டு, மூளைக்கு ஆக்ஸிஜன் கொண்டு செல்லும் குழல்கள் சிதறடிக்கப்பட்டு, கண்பார்வை இழக்கப்பட்டு, கை கால்கள் இழுத்து, சுயநினைவை இழந்த உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் பணிபுரிந்த அதே மருத்துவமனையின் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 25. நவம்பர் 29-ஆம் தேதிதான் இந்த செய்தி பத்திரிக்ககளின் வாயிலாக நாட்டுமக்களின் கவனத்திற்கு வந்தது.

பிங்கி விராணி எனும் ஓர் எழுத்தாளர் 2009-ஆம் ஆண்டு உயர் நீதி மன்றத்திலே வழக்கு ஒன்றை தொடுக்கின்றார்.

அதில், 1973-ஆம் ஆண்டிலிருந்து அருணா ஷம்பக் 2009 (தற்போது) வரை கிட்டத்தட்ட 36- ஆண்டுகளாய் தான் எந்த மருத்துவமனையில் நர்ஸாக பணியில் சேர்ந்தாரோ அதே மருத்துவமனையில் ஒரு அறையில் சுயநினைவின்றி கோமாவில் மோசமான நிலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கின்றார்.

இந்த இழிசெயலில் ஈடுபட்டசோகன்லால் பார்த வால்மீகிஎன்பவனோ நீதிமன்றத்தால் 6 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டு தண்டனைக் காலம் முடிந்து வெளியே சென்றுவிட்டான்.

அருகில் இருந்து பார்க்க வேண்டிய அருணாவின் குடும்பமோ, இவள் என் பிள்ளையே இல்லை என கைவிரித்து விட்டனர். நீதிமன்ற ஆணையின் படி மருத்துவமனை நிர்வாகம் அருணாவை கவனித்து வருகின்றது.

கண்பார்வை இன்றி, சுயநினைவை இழந்து ஒருகட்டிலில் படுக்கையிலேயே காலம் கடத்திவரும் இந்த பரிதாப நிலையிலிருந்து ஒரு மோட்சத்தை வழங்கும் விதமாக அருணா ஷம்பக்கைகருணைக் கொலைசெய்ய அனுமதிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார்.

(உலகளவில் கருணைக் கொலைக்கு பெல்ஜியம், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய மூன்று நாடுகளில் மட்டுமே அனுமதி உள்ளது.

ஆக்ஸிஜனை நிறுத்தியோ அல்லது விஷ ஊசி போட்டோ இந்தக் கருணை கொலைகளை அரங்கேற்றுகின்றனர்.)

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஆரம்பத்தில் மறுத்த போதும், தொடர்ந்து நாட்டில் உள்ள சமூக ஆர்வலர்கள் அது குறித்து வெளியில் அதிகம் பேசத்தொடங்கியதும், வழக்கு தொடர்ந்த அந்த எழுத்தாளர் மேல்முறையீடு செய்ததாலும் வழக்கின் இறுதித் தீர்ப்பில் நீதிமன்றம் “கருணைக் கொலையை அனுமதிக்கலாம்” என தீர்ப்பு வழங்கியதாக 17.12.2009 –ஆம் நாளைய செய்தித்தாள்களில் இடம் பெற்றிருந்தது.

தீர்வு – 3

இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் ஆரோக்கியமான வாழ்வை வல்ல ரஹ்மானிடம் வேண்டுமாறும், தீய, கொடிய நோய்களில் இருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் கோருமாறும், தள்ளாத முதுமை, பிறருக்கு பாரமாகிவிடுகிற வயது முதிர்ச்சி ஆகியவைகளில் இருந்து காக்குமாறு இறைவனிடம் பிரார்த்திக்குமாறும் வலியுறுத்துகின்றது.

அப்படி கடுமையான நோயுற்றிருக்கின்ற ஒருவரை சந்திக்கச் சென்றால் அவருக்காக பிரார்த்திக்குமாறு கூறுகின்ற இஸ்லாம், அவரைப் பாதித்திருக்கின்ற நோய் போன்றவை தம்மை பாதித்து விடக்கூடாது என கருணையாளன் அல்லாஹ்விடம் கேட்குமாறு கட்டளையும் பிறப்பித்துள்ளது.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் சந்திக்கச் சென்றிருக்கின்ற நோயாளி கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதை நீங்கள் உணர்ந்தால் “அல்ஹம்து லில்லாஹில்லதீ, ஆஃபானீ மிம்மப்தலாக்க பிஹீ, வ ஃபழ்ழளனீ அலா கஸீரிம் மிம்மன் ஃகலக்க தஃப்ழீலா!”

“இவரைப் பீடித்துள்ள இந்த நோயில் இருந்து என்னைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்! அவன் படைத்த எத்தனையோ படைப்பினங்களை விட என்னை மேன்மை படுத்தி இருக்கின்றான்!”

(நூல்: இப்னுமாஜா, ஹதீஸ் எண்:2430, மிர்காத் ஷரஹ் மிஷ்காத், பக்கம்:1687.)

இதை நோயாளியின் காது பட ஓதிவிடக் கூடாது, மனதால் ஓதிக் கொள்ள வேண்டும்.
அப்படியே, ஒருவர் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். தம் சுற்றம், குடும்பம், என அனைவராலும் கைவிடப்பட்டு வாழ்க்கை வெறுத்துப்போன நிலையில் இருந்தாலும், அல்லது துன்பங்களும், கஷ்டங்களும் வாட்டி எடுத்தாலும் ஆக எப்படிப்பட்ட மோசமான ஒரு சூழ்நிலையை ஓர் இறை நம்பிக்கையாளன் சந்தித்தாலும் ஒருபோதும் அவன் மரணத்தை வேண்டக்கூடாது.

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவருக்கு நோயால் தாங்கமுடியாத சிரமம் ஏற்படுமேயானால் அவர் மரணத்தை விரும்பிக் கேட்க வேண்டாம். அவர் விரும்பினால் இப்படிக் கேட்டுக் கொள்ளட்டும்!

யாஅல்லாஹ்! எனக்கு வாழ்க்கை நன்மைபயப்பதாக இருக்குமாயின் என்னை இவ்வுலகில் உயிர்வாழச் செய்வாயாக! நான் மரணமடைவதுதான் நன்மைபயப்பதாக இருக்குமாயின் என்னை மரணமடையச் செய்வாயாக!

(நூல்: புகாரி, பாபு தமன்னீ அல் மரீள அல் மவ்த்த, ஹதீஸ் எண்:5347.)

அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “வானத்தில் உள்ளவர்களும், பூமியில் உள்ளவர்களும் ஒன்றிணைந்து ஓர் இறை நம்பிக்கையாளனின் உயிரை மாய்ப்பதற்கு முயற்சி மேற்கொள்வார்களேயானால் நாளை மறுமையில் அல்லாஹ் அவர்கள் அனைவரையும் முகங்குப்புற நரகில் தூக்கியெறிவான்.”

(நூல்: திர்மிதீ, பாபு அல் ஹுக்மு ஃபித்திமாஃ, ஹதீஸ் எண்:1398.)

ஓர் உயிரைக் கொலை செய்வது பெரும்பாவம் என்றும், நியாயமற்ற செயல் எனவும், ஓர் சமுதாயத்தையே கொலை செய்ததற்குச் சமம் என்றும், நிரந்தர நரகத்திற்கு அழைத்துச் செல்லும் பாவம் என்றும், மறுமையில் இரட்டிப்பு தண்டனை வழங்கப்படும் குற்றம் என்றும், அது ரஹ்மான் உடைய அடியார்களின் பண்பியல்களில் கட்டுப்பட்டவையாக இருக்காது எனவும் அல்லாஹ் அல்குர்ஆனில் விமர்சனம் செய்கின்றான்.

(பார்க்க அல்குர்ஆன்: 17:32, 2:84, 25:68, 5:32, 4:92-93,)

கொலையில் நல்ல கொலை, கெட்ட கொலை, கருணைக் கொலை என்றெல்லாம் இஸ்லாம் பார்ப்பதில்லை. மூன்றே மூன்று காரணங்களுக்காக மட்டுமே ஒரு மனிதனின் உயிர் கொல்லப் படுவதை இஸ்லாம் அனுமதிக்கின்றது. இவையல்லாத மற்றெல்லா கொலைகளுமே குற்றவியல் தண்டனைக்குறிய குற்றம் என இஸ்லாம் இயம்புகின்றது.

இஸ்லாமிய உலகில் முஸ்லிம்களால் சில விரும்பத்தகாத செயல்களும் அரங்கேறி இருப்பதை இஸ்லாமிய வரலாறு பதிவு செய்து வைத்திருக்கின்றது. அதில் ஒன்று தான் உஸ்மான் (ரலி) அவர்கள் வீட்டோடு வைத்து முற்றுகையிடப்பட்டு கொல்லப்பட்டது.

முற்றுகையாளர்கள் உஸ்மான் (ரலி) அவர்களின் வீட்டைச் சுற்றி வளைத்து முற்றிலுமாக தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த அந்த சமயத்தில் உஸ்மான் (ரலி) அவர்கள் முற்றுகையாளர்களை நோக்கி “நீங்கள் அறிந்திருக்க வில்லையா? நிச்சயமாக! அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் “முஸ்லிமான ஒரு மனிதன் இஸ்லாமானதற்குப் பின்னால் மதம் மறிப்போகும் போதும், திருமணம் மாகாத நிலையில் விபச்சாரம் செய்கிற போதும், அநியாயமாக ஓர் உயிரை கொலை செய்கிற போதும் தவிர, இந்த மூன்று காரணங்களுக்காகவே தவிர கொலை செய்யப்படக் கூடாது” என்று சொல்லியிருப்பதை நீங்கள் அறிந்திருக்கவில்லையா? என்று கூறிவிட்டு…

அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் ஜாஹிலிய்யாவிலும் சரி, இஸ்லாத்திற்கு வந்த பிறகும் சரி ஒரு போதும் விபச்சாரம் செய்தது கிடையாது.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் நான் வாக்குப் பிரமாணம் செய்து கொடுத்ததிலிருந்து மதம் மாறிப்போகவும் இல்லை.

நான் எந்த ஒரு ஆத்மாவையும் அநியாயமாகக் கொலை செய்ததும் கிடையாது.

சொல்லுங்கள்! எதற்காக என்னை கொல்ல வேண்டும் என்பதில் இவ்வளவு ஆர்வமாக இருக்கின்றீர்கள்!””

(நூல்: திர்மிதீ, பாபு மா ஜாஅ லா யஹில்லு தமு இம்ரயிம் முஸ்லிமின் இல்லா பி இஹ்தா சலாஸின், ஹதீஸ் எண்: 2158)

எப்போதுமே கிளர்ச்சியாளர்கள் எதிரில் நிற்பவர்கள் யார் என்பதையோ, அவர்கள் சொல்வதில் எவ்வளவு நியாயம் உள்ளது என்றோ, ஒரு போதும் சிந்திப்பதில்லை. அங்கேயும் அப்படித்தான் இறுதியில் உஸ்மான் (ரலி) அவர்களை மாபாதகர்கள் குர்ஆன் ஓதிக் கொண்டிருக்கின்ற நிலையில் கொலை செய்து விட்டனர்.

ஆக ஒரு மனிதனுக்கு தன் உயிரை மாய்த்துக் கொள்வதற்கோ, சிரமமும், கஷ்டமும் படுகின்றார் என்பதற்காக கொலை செய்து விடுவதற்கோ அணுவளவு கூட அனுமதியோ அதிகாரமோ கிடையாது என ஆணித்தரமாக இஸ்லாம் கூறுகின்றது.

அல்லாஹ் வழங்குகின்ற அனைத்து நிலைகளையும் பொருந்திப் போவதும், பொறுமையை மேற்கொள்வதும் தான் ஓர் இறை நம்பிக்கையாளனின் உயரிய பண்பியலாக இஸ்லாம் வரையறுத்து தந்துள்ளது.

எனவே, மனித சமுதாயத்தின் அனைத்து துறைகளிலும் எழுகின்ற எல்லாவிதமான பிரச்சனைகளுக்கும், இறை மார்க்கமான  இஸ்லாமிய மார்க்கம் மாத்திரமே மிகச் சிறந்த தீர்வுகளை வழங்கி, மனித சமுதாயத்தின் தேடலுக்கான விடையை தந்து கொண்டிருக்கின்றது என்கிற பேருண்மையை மனதினில் நிறுத்துவோம்.

மனிதனுக்கும், இந்த மண்ணுக்கும் ஏற்ற மார்க்கம் இஸ்லாம் மட்டும் தான் என்பதை உலகிற்கு உணர்த்துவோம்!

அல்லாஹ் நம் அனைவருக்கும் விளக்கத்தை தருவானாக!

                  ஆமீன்!! வஸ்ஸலாம்!!!
  










Tuesday 11 February 2014

வாழும்போதும்…வாழ்க்கைக்குப்பிறகும்….


 வாழும்போதும்வாழ்க்கைக்குப்பிறகும்….



 வலிமார்களின் அற்புதங்களைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கின்ற, அல்லது சிந்தித்துக் கொண்டிருக்கின்ற முஸ்லிம் சமூகம்ஒரு நாளும் அவர்களின் (வலிமார்களின்)  வாழ்க்கையே அற்புதமாய் மாறிப் போயிருந்ததைப் பற்றி சிந்தித்ததில்லை.

அவர்கள் நிகழ்த்திக்காட்டும் அற்புதங்களுக்குப் பின்னால், அந்த ஆற்றல் வழங்கப்படுவதற்குக் காரணமாய் அமைந்த அடிப்படை அம்சம் குறித்து ஒருபோதும் பேசியதுமில்லை.

இறைநேசச் செல்வர்கள் எனும் உயரிய நிலைக்கு அவர்களை அழைத்துச் சென்றது எது?

நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் எவ்வித அச்சமும், பயமும், கவலையும் இன்றி நிம்மதியாய் வாழ்ந்திடும் சிறந்த வாழ்க்கைக்கு அடித்தளமிட்டது எது?
இன்னும் இது போன்று இந்த உம்மத்திற்கு எழும் ஆயிரமாயிரம் கேள்விகளுக்கு, அற்புதம் நிறைந்த அவர்களின் வாழ்க்கையில் தரப் பட்டிருக்கும் பதில் ஒன்று தான்! அதுவும் ஒற்றை வார்த்தையில் தான்!

வாழ்வும் மரணமும் அது அல்லாஹ்வுக்காக மட்டுமே!” என்று.

இறைநேசர்களெனும் வலிமார்கள் இரண்டு விஷயங்களை அவர்கள் மிகவும் உயர்வாகக் கருதினார்கள். அதற்காகவே, தங்களின் வாழ்க்கையை அல்லாஹ்விற்காக சாதிக்கும் சாதனைத் தளமாக மாற்றியமைத்தார்கள்.

1.அல்லாஹ் தான் படைத்திருக்கின்ற கோடான கோடி படைப்புக்களில் தம்மை மனிதனாக படைத்தமையை..
2.அத்தகைய மனிதர்களில் மிகச் சிறப்பாக தம்மை தேர்ந்தெடுத்து, ஹிதாயத் எனும் நற்பேற்றினை வழங்கியமையை..

ஆகவே தான், தங்களின் வாழ்நாள் முழுவதும் இறைநேசத்தைப் பெற்றுத்தருகிற அத்துணைத் தளங்களிலும் தம்மை அல்லாஹ்விற்காக முழுமையாக ஒப்படைத்து விட்டிருந்தார்கள்.

எனவே தான், அல்லாஹ் அவர்கள்வாழும்போதும்  வாழ்க்கைக்குப் பிறகும்..” எல்லாவிதமான மனக் கலக்கத்திலிருந்தும், சஞ்சலத்திலிருந்தும், அச்சத்திலிருந்தும் நிம்மதிபெற்றவர்கள் என்றும், ஈருலகிலும் சோபனத்திற்குரிய, போற்றுதலுக்குரிய வாழ்க்கையை எய்தப் பெறுவார்கள் என்றும் அல்குர்ஆனில் (10:62,63.) உறுதி படக் கூறுகின்றான்.

இறைநேசச் செல்வர்களைப் போற்றிப் புகழ்கிற, உயர்த்திக் கூறுகிற இந்த முஸ்லிம் உம்மத்அற்புதமாய் மாறிப்போன அவர்களின் வாழ்க்கைப் பாதையில் பயணிக்க முன் வராததேனோ?”


இறைநேசச் செல்வர்களை நினைவு கூர்வது

ஹல்ரத் அலீ (ரலி) அவர்கள் ஸிஃப்ஃபீன் போர் முடிந்து வந்து கொண்டிருக்கையில் ஓரிடத்தில் ஒரு மண்ணறையைப் பார்க்கிறார்கள்.

அது சமீபத்தில் இறந்து போன ஒருவருடைய மண்ணறை என்பதை உணர்ந்தார்கள். பின்பு அருகில் இருந்த தமது தோழர்களிடத்தில் இது யாருடைய மண்ணறை என வினவினார்கள்.

தோழர்கள் அதுஃகப்பாப் இப்னு அல் அரத் (ரலி) அவர்களுடையது என்றார்கள்.

கேட்டதும் தான் தாமதம் தாரை தாரையாய் கண்ணீர் வடித்தார்கள். தேம்பித் தேம்பி அழுதவர்களாக

யாஅல்லாஹ்! ஃகப்பாப் (ரலி) அவர்களுக்கு அருள் புரிவாயாக! பேரார்வத்தோடு முஸ்லிமானார்! உன் உவப்பையும், உன் தூதரின் நெருக்கத்தையும் பெறுவதற்காகவே ஹிஜ்ரத்தும் செய்தார்! தான் ஏற்றுக் கொண்ட ஏகத்துவ கொள்கைக்காக பல் வேறு இன்னல்களை தாங்கிக் கொண்டார்! யாஅல்லாஹ் ஃகப்பாப் (ரலி) அவர்களின் மீது உன் கருணை மழையைப் பொழிவாயாக!

            (நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}, பக்கம்:234.)

அலீ (ரலி) அவர்கள் அப்போது தான் மாபெரும் ஒரு யுத்தத்தை முடித்து விட்டு வந்திருந்தார்கள். அவர்கள் கவலைப் படுவதற்கும், அழுவதற்கும் ஆயிரமாயிரம் பிரச்சனைகள் அவர்களின் கண் முன்னே இருந்து கொண்டிருந்தது.

ஆட்சித்தலைவராக இருந்து கொண்டு யுத்தத்திற்குச் சென்று விட்டு இப்போது தான் ஊர் திரும்பிக் கொண்டிருக்கின்றார்கள்.
ஒரு அமீருல் முஃமினீனாக அங்கேயும் சிந்திப்பதற்கும் கவலைப் படுவதற்கும் ஏராளமான பிரச்சனைகள் இருக்கத்தான் செய்தது.

ஆனாலும், மண்ணறையின் முன் நின்று அழுவதற்கும் அவர்களின் வாழ்க்கையை நினைவு கூர்வதற்கும் அவர்களைத் தூண்டியது எது?

கொஞ்சம் பின்னோக்கிப் போய் உஹத் யுத்த களத்தை நம் மனக் கண் முன் கொண்டு வருவோம்.

உஹத் யுத்தம் முடிந்து, எதிரிகளெல்லாம் மகிழ்ச்சியோடு சென்று கொண்டிருக்கிற தருணம் அது.

போரில் உயிர் நீத்தவர்களை கணக்கெடுக்கும் பணியில் நபித் தோழர்களோடு மாநபி {ஸல்} அவர்களும் ஈடுபட்டிருந்தார்கள்.

தூரத்தில் ஓர் வெண்ணிற மேனி கொண்ட ஓர் உடல் செங்குருதியால் நனைக்கப்பட்டு, அசைவற்று கிடந்ததைக் கண்ணுற்ற பெருமானார் {ஸல்} அந்த உடலை நோக்கி ஓடிப் போகிறார்கள்.

பூமியில் புதைந்திருந்த முகத்தை திருப்பிப் பார்க்கின்றார்கள். அது முஸ்அப் இப்னு உமைர் (ரலி) அவர்களின் புனித உடல். எதிரிகளால் அதிக துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப் பட்டிருந்ததை மாநபி {ஸல்} அவர்கள் விளங்கிக் கொண்டார்கள்.

தோழர்களை அழைக்கின்றார்கள் {ஸல்} அவர்கள். அப்படியே அவரை மடியில் கிடத்தி அழுதவர்களாகஅல்குர்ஆனின் (33:23) –ஆம் வசனத்தை ஓதியவர்களாகமுஸ்அபே! மக்காவில் வாழ்ந்த உம்முடைய ஆரம்ப கால வாழ்வை நான் நன்கறிவேன்! உம்மை விட அழகிய ஓர் வாழ்வை யாரும் வாழ்ந்ததாக நான் அறிந்திருக்க வில்லை! ஆனால், இன்றோ! தலையை மூடினால் கால் தெரிகிறது; காலை மூடினால் தலை தெரிகிறது! முழுமையான ஒரு கஃபன் துணி கூட இல்லை!

அல்லாஹ்வின் தூதர், நாளை மறுமையில் நீர் உயிர்த் தியாகி தான் என உமக்காக சாட்சி கூறுவார்!” என்று கூறினார்கள்.

பின்பு தோழர்களை நோக்கிமக்களே! அல்லாஹ்விற்காக வாழ்ந்து உயிர் நீத்த இவர்களை அடிக்கடி சந்தியுங்கள்! இவர்களிடம் வாருங்கள்! இவர்களுக்கு ஸலாம் சொல்லுங்கள்! என் உயிர் எவன் வசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! நீங்கள் சொல்லும் ஸலாத்திற்கு அவர்கள் பதில் தருகின்றார்கள்!” என்று கூறினார்கள்.

             (நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}, பக்கம்:31.)

உண்மையில், தம் தோழர்களில் 70 நபர்களை அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் இழந்திருந்தார்கள். அதையெல்லாம் விட தமது பெரிய தந்தை ஹம்ஸா (ரலி) அவர்களை கொடூரமான முறையில் ஷஹீதாக்கப்பட்ட நிலையில்

 பெருமானார் {ஸல்} அவர்கள்முஸ்அப் (ரலி) அவர்களின் புனித உடல் முன் நின்று அழுததுஎப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்றிருந்த நிலையில் அல்லாஹ்விற்காக வாழும், வாழ்ந்து மரணிக்கும் ஓர் உன்னத வாழ்வை தேர்ந்தெடுத்த ஓர் உத்தமரை நினைவு கூர்ந்திடும் நோக்கில் தான்.

இங்கிருந்து தான் அலீ (ரலி) அவர்கள் பாடத்தையும், முன் மாதிரியையும் பெற்றார்கள்.

ஆனால், இன்றோ இறைநேசச் செல்வர்களை நினைவு கூர்வதும், அவர்களைப் பற்றி பேசுவதும் பாவம் என நினைக்கும் அளவிற்கு தவறான சிந்தனையை சமூகத்தில் சிலர் விதைத்து விட்டனர்.

மேலே கூறப்பட்ட இரு வரலாற்றுச் செய்திகளும் நமக்கு உணர்த்துவது இது தான்இறைநேசச் செல்வர்களை நினைவு கூர்வதும் நபி வழியே!”

இறைநேசச் செல்வர்களின் வரலாற்றை வாசிப்பது

அல்குர்ஆனில் அல்லாஹ் சுமார் 1000 வசனங்களின் மூலம் முன்னோர்களான நபிமார்கள், அவர் தம் சமுதாயத்தினர் வரலாறு குறித்தும், ஸாலிஹீன்களான இறைநேசர்கள் குறித்தும் எடுத்துக் கூறுகின்றான்.

சில போது வரலாற்றை துவங்குகிற போதும், சில போது வரலாற்றை முடிக்கிற போதும் திண்ணமாக, இவ் வரலாற்றில் அறிவுடையோருக்கு நல்ல பல சான்றுகளும், படிப்பினைகளும் இருப்பதாகக் கூறுகின்றான்.

கஹ்ஃப் குகை வாசிகள், மர்யம் அலைஹிஸ்ஸலாம், லுக்மான் அலைஹிஸ்ஸலாம், சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவையில் இருந்த நல்லடியார், மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தாயார், துல்கர்னைன் அலைஹிஸ்ஸலாம், யாஸீன் சூராவில் கூறப்படும் இளைஞரான இறைநேசர், ஃபிர்அவ்னின் மனைவி ஆஸியா அலைஹிஸ்ஸலாம், சூரா மஆரிஜில் கூறப்படும் அஸ்ஹாபுல் உஃக்தூத்என ஈமானில் ஏற்றத்தையும் தாக்கத்தையும் உண்டு பண்ணுகிற இறைநேசர்களின் வாழ்க்கையை அல்லாஹ் குர்ஆனில் கூறி வாசிக்கத் தூண்டுகின்றான்.

இறைநேசர்களின் வரலாறுகளை வாசிப்பதால் மாசடைந்த நம் இதயங்கள் தூய்மை பெறுகின்றன.

ஈமானின் நிலை உயர்வை அடைகின்றன. நல் அமல்களின் தரம் ஏற்றம் பெறுகின்றன.

1.வாய்மைக்கு சான்றாய் விளங்கிய பா யஸீது {ரஹ்}

பா யஸீதுல் பிஸ்தாமி {ரஹ்} அவர்கள் சிறு பிராயமாக இருக்கும் போது, அவர்களின் தாயார் பக்தாத் மாநகருக்கு கல்வி பயில அனுப்பி வைத்தார்கள்.

அவருக்கு செலவுக்கு 40 திர்ஹத்தையும் கொடுத்து அனுப்பினார்கள்.

வழியனுப்புகிற போதுஎக்காரணத்தைக் கொண்டும் வாழ்வில் எந்தத் தருணத்திலும் பொய் பேசிடக்கூடாது. உண்மையை பேசாமல் இருந்திடக்கூடாதுஎன்று உபதேசம் செய்து அனுப்பினார்கள்.

பக்தாதுக்குச் செல்கிற ஓர் வணிகக் கூட்டத்தோடு பயணமானார் பா யஸீத் {ரஹ்} அவர்கள்.

வழியில் வழிப்பறிக் கொள்ளையர்கள் வணிகக் கூட்டத்தை இடை மறித்து அவர்கள் கொண்டு வந்த சாதனங்களையும், பணத்தையும் பறித்துக் கொண்டனர்.

பா யஸீத் {ரஹ்} அவர்களிடம் திருடர்கள் உம்மிடம் என்ன இருக்கிறது எனக்கேட்டு மிரட்டினர். பா யஸீத் அவர்கள்என்னிடம் 40 தீனார் இருக்கிறதுஎன்று கூறினார்.

சிறுவன் ஏதோ பயந்து உளருகின்றான் என எண்ணி அவரிடம் இருந்து பறிக்காமல் விட்டு விட்டனர்.

வணிகக் கூட்டத்தினரை விட்டு விட்டு, பா யஸீதை மட்டும் தம்முடன் அழைத்துச் சென்றனர். ஓர் குகைக்குள் சென்றனர். அங்கே அவர்களின் தலைவன் வீற்றிருந்தான்.

தன் சஹாக்களைக் கண்டதும் சிரித்தபடி ஓடோடி வந்து, என்ன? எல்லாம் நல்லபடியாக முடிந்ததா? வணிகக் கூட்டத்தார்களிடமிருந்து அத்தனை பொருட்களையும் கொள்ளையடித்து விட்டீர்களா? என்று கேட்டான்.

ஆம் தலைவா! ஆனால், ஒரு சிறுவன் மட்டும் தன்னிடம் 40 தீனார் உள்ளதாக கூறினான். ஏதோ சதித் திட்டம் தீட்டுகின்றானோ என எண்ணி நாங்கள் கையோடு அழைத்து வந்து விட்டோம்.

தலைவன் பா யஸீத் {ரஹ்} அவர்கள் அருகில் வந்து, “ நீ என்ன பைத்தியமா?” உன் பொருளையும் உன் உயிரையும் பாதுகாக்கும் பொருட்டு நீ பொய் சொல்லி தப்பியிருக்கலாமே? ஏன் உண்மையை சொல்லி எங்களிடம் மாட்டிக் கொண்டாய்? என்று கேட்டான்.

அதற்கு பா யஸீத் {ரஹ்} அவர்கள்நான் இன்ன நோக்கத்துக்காக பக்தாத் பயணப்பட்டேன். என் தாயார் வழியனுப்புகிற போதுஎன் வாழ்வில் நான் எந்த நிலையிலும்  யாரிடமும் எதற்காகவும் பொய் சொல்லக்கூடாது என சத்தியம் வாங்கி விட்டார்கள்.

என் தாயாருக்கு நான் கொடுத்த வாக்குப் பிரமாணத்தை முறித்து விடக்கூடாது என் நான் எண்ணினேன். ஆதலால் தான் நான் உண்மையைக் கூறினேன்என்றார்கள்.

அதைக் கேட்ட தலைவன்லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹி.. உன் தாயாருக்குச் செய்த ஒப்பந்தத்தை முறிக்க நீ பயப்படுகின்றாய்? ஆனால், நாங்களோ அல்லாஹ்விடம் கொடுத்த பிரமாணத்தைப் பற்றி பயப்படாமல் இருக்கின்றோமே? அல்லாஹ்விற்கு கொடுத்த வாக்குறுதியில் மோசடி செய்து விட்டோமே?  என்று கூறினான்.

பின்னர், தம் தோழர்களிடம்  கொள்ளையடித்த அத்துணை பொருட்களையும் அவரவர்களிடம் சென்று கொடுத்து விட்டு வாருங்கள்என்று கட்டளையிட்டான்.

! சிறுவனே! இப்போதே நான் அல்லாஹ்விடம் தவ்பா செய்து இந்த அழுக்காற்றிலிருந்து நான் தூய்மையாகின்றேன்என்றான்.

அப்போது அக்கொள்ளைக் கூட்டத்தில் ஒருவர்கொள்ளையடிப் பதில் எங்களுக்கு நீர் தான் தலைவர்! தவறிலிருந்து தவ்பாச் செய்வதிலும் நீர் தான் எங்களுக்கு தலைவர்! இதோ நாம் அனைவருமே அல்லாஹ்விடம் இந்த இழி பாவத்திலிருந்து மீள்வதற்கு தவ்பாச் செய்வோம்என்றார்.

அவர்களின் தவ்பாவும் அழகானது. அவர்களின் வாழ்க்கையும் அழகானது. அத்துனை பேரும் நல்லோர்களாக மாறினர்.

     (நூல்: அல்ஃப கிஸ்ஸ மினஸ் ஸாலிஹீன்,பாகம்:1,பக்கம்:284)

ஒருவர் பா யஸீதுல் பிஸ்தாமி {ரஹ்} அவர்களிடம் நீங்கள்பற்றற்றத் தன்மையை யாரிடமிருந்து கற்றுக் கொண்டீர்கள்? என்று கேட்டார்.

நான் இந்த பக்தாத் நகரின் வீதியில் சுற்றித் திரியும் ஓர் வாலிபனிடம் இருந்து கற்றுக் கொண்டேன். என்றார்கள்.

இதைக் கேட்ட அவர் ஆச்சர்யமாக எப்படி? எனக் கேட்டார். அதற்கு பிஸ்தாமி {ரஹ்} “ஒரு நாள் ஒரு வாலிபர் என்னிடம் வந்து துறவறம் என்றால் என்ன? என்று கேட்டார்.

அல்லாஹ் நமக்கு அளித்தவைக்கு நன்றி செலுத்துவதும், நமக்கு வழங்காதவைகளுக்காக பொறுமையாய் இருப்பதும் தான் துறவறம்என்றேன்.
அதற்கு சட்டென அந்த வாலிபர்இந்த குணம் தான் பல்ஃக் வீதியில் சுற்றித்திரியும் நாய்க்கு கூட இருக்கின்றதேஎன்றார்.

அப்படியென்றால், துறவறம் என்றால் என்ன? என்று அந்த வாலிபரிடம் நான் கேட்டேன்.

அதற்கு அவ்வாலிபர்அல்லாஹ் நமக்கு வழங்காத அருட் கொடைகளுக்காக நன்றி செலுத்துவதும், அல்லாஹ் நமக்கு வழங்கிய வற்றை பிறருக்கு ஈந்து வாழ்வதும் தான் துறவறம்என்றார்.

(நூல்: அல் அவ்லியா லி இப்னு அபித்துன்யா, அஷ் ஷாஃபிஇய்யா லிஸ் ஸுப்கீ)

2.அறிவுலக மாமேதை இமாம் கஸ்ஸாலி {ரஹ்} அவர்களை மாற்றிய கனவு.

இமாம் கஸ்ஸாலி {ரஹ்} அவர்கள் கூறுகின்றார்கள்: “என் ஆசிரியர் அஹ்மத் ஹஸன் அல் பாக்கூரி {ரஹ்} அவர்கள் என்னை அவசரமாக கூப்பிட்டழைத்ததாக ஒருவர் என்னிடம் சொன்னார்.

நான் அவர்களைக் காண அவர்களின் வீட்டிற்குச் சென்றேன். என்னைப் பார்த்ததும் படுக்கையில் படுத்திருந்த அவர்கள் வேக வேகமாக எழுந்தார்கள். அழைத்த காரியம் மிகவும் அவசியமாக இருக்கும் எனக் கருதினேன்.

மிகவும் முக்கியமான ஒரு விஷயம் குறித்து பேசுவதற்காகத்தான் உம்மை நான் அழைத்துள்ளேன். நானே உம்மிடம் வரலாமென்று தான் நினைத்தேன். ஆனால், என் உடல் ஒத்துழைக்க வில்லை.என்றார்கள்.

பின்பு, என்னிடம்உமக்கும் அம்ருப்னுல் ஆஸ் {ரலி} அவர்களுக்கும்என்ன பிரச்சனை? எனக் கேட்டார்கள்.

அதற்கு நான்நான்  அம்ருப்னுல் ஆஸ் {ரலி} –மஸ்ஜிதின் ஃகதீப் அவ்வளவு தான் வேறொன்றும் எங்களுக்குள் இல்லைஎன்றேன்.

நான் அதைக் கேட்க வில்லை, அது தான் ஊரில் உள்ள எல்லோருக்கும் தெரியுமே? என்றார்கள்.

பின்ன வேறெதைப் பற்றிக் கேட்கின்றீர்கள்? என்றேன்.

நான் கனவில் கண்டதை அப்படியே கூறுகின்றேன். நீர் விளக்கம் சொல்லும் என்றார்கள்.

பின்பு கூறினார்கள்: “ கனவில் நான் உறங்கிக் கொண்டிருந்தேன். வாசலின் கதவை யாரோ தட்டுவது போல் உணர்ந்தேன். எழுந்து சென்று யார் என்று வினவினேன்.

 அதற்கு ஆட்சியாளர் வந்திருக்கின்றேன். என பதில் வந்தது. நான் வந்திருக்கும் ஆட்சியாளர் யார்? என்று கேட்டேன்.

அதற்கு கதவிற்கு அப்பாலிருந்துநான் தான் அம்ருப்னுல் ஆஸ் நாயகத்தோழர்என பதில் வந்தது.

கதவைத் திறந்தேன்! நபித்தோழர் ஒருவரின் வருகையால் நான் மெய்சிலிர்த்துப் போனேன்! அவர்களின் வருகையால் என் சரீரத்தில் நீண்ட நாட்களாய் பீடித்திருந்த நோய் நீங்கியது போன்று உணர்ந்தேன்.

இப்போது நீர் அமர்ந்திருக்கும் அதே இடத்தில் தான் அவர்களும் அமர்ந்திருந்தார்கள். “என் மீது உங்களின் மாணவர் கஸ்ஸாலி நீண்ட காலமாய் கொண்டிருக்கின்ற பகைமையுணர்வை நான் மன்னித்து விட்டதாக நீங்கள் கூறிவிடுங்கள்; ஏனென்றால், அவர் என் மஸ்ஜிதை மார்க்க அறிவால் உயிர் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்.

 மேலும், இஸ்லாத்திற்காக கட்டப்பட்ட நான்கு இறையில்லங்களில் என் மஸ்ஜிதும் ஒன்றாகும். அங்கு தான் ரோமானியர்களை வெற்றி கொண்ட வெற்றியாளர்கள் ஒன்றினைந்தோம்.

மிஸ்ரில் இஸ்லாமிய தீபத்தை அங்கிருந்து தான் ஏற்றி வைத்தோம்.” என்று பேசி முடித்த அம்ர் {ரலி} அவர்கள் விடை பெற்று செல்வதை உணர்ந்த போது, பாங்கு சொல்லும் சப்தத்தை கேட்டேன்.

கண்விழித்துப் பார்த்த போது உண்மையில் முஅத்தின் பாங்கு சொல்லிக் கொண்டிருந்தார். எழுந்து உளூ செய்து பள்ளிக்குச் சென்றேன். தொழுதேன்.

உம்மை அழைத்து நீர் இங்கு வரும் வரை என்னால் சரியாக அமரக் கூட முடியவில்லை.

சரி இது தான் நடந்தது. உம்மிடம் சொல்லச் சொன்னதை நான் சொல்லி விட்டேன். பின்பு உமது விருப்பம் என்றார்கள்.

அங்கிருந்து விடை பெற்று நான் மஸ்ஜிதை நோக்கி விரைந்தேன். அந்தக் கனவை கேட்டதிலிருந்து என் மீது ஏதோ இடி விழுந்ததைப் போன்று எண்ணத் தோன்றியது.

என்னை வெறுத்தவனாக நான் நடந்து கொண்டு பள்ளியை நோக்கிச் சென்றேன். என் சிந்தை முழுக்க அது தான் ஆக்கிரமித்து இருந்தது. அம்ரு {ரலி} அவர்கள் குறித்து நான் கொண்டிருந்த மன முரண் இப்போது அவர்களுக்கே தெரிந்துவிட்டது.

ஏனெனில், நான் அலீ {ரலி} அவர்களுக்கு எதிராக போர் புரிந்தவர்களை வெறுத்தேன்.

ஆனால், இப்போதோ இந்தக் கனவின் மூலம் நான் அம்ரு {ரலி} அவர்கள் குறித்து எண்ணியது எவ்வளவு மாபெரும் குற்றம் என்பதை உணர்ந்து கொண்டேன்.

ஒரு நபித்தோழர் மீது, அதுவும் அவருக்கு சிறிதும் தொடர்பில்லாத ஒன்றின் மீது நான் கொண்டிருந்த தவறான அபிப்பிராயத்திற்காக மனம் வருந்தினேன். அதற்காக அழுது புரண்டு தவ்பாச் செய்தேன்.

அம்ருப்னுல் ஆஸ் {ரலி} அவர்களையும், அவர்களின் தகுதியையும் நான் விளங்கிக் கொண்டேன். அவரும், அவர்களுக்கு உதவியாக முஸ்லிம்களும் இல்லையென்றால் நிச்சயமாக, சத்தியமாக இந்த மிஸ்ரில் இஸ்லாம் பரவியே இருக்காது. நானும் முஸ்லிமாக இருந்திருக்க மாட்டேன். என்று நான் விளங்கிக் கொண்டேன்.

பின்னர் நபித்தோழர்கள் குறித்து வேறெதுவும் நான் ஒரு போதும் அபிப்பிராய பேதம் கொள்ளப் போவதில்லைஎன்று தீர்மானமாக உறுதி எடுத்துக் கொண்டேன்.

                (நூல்: ஸுஹ்பதுஸ் ஸஹாபா, பக்கம்:92,93,94,95.)

3.அல்லாஹ்வின் உதவியில் நனைந்த அபூ முஸ்லிமுல் ஃகவ்லானீ {ரஹ்} அவர்கள்.

அப்துல்லாஹ் இப்னு ஸவ்ப் {ரஹ்} என்பது அவர்களின் இயற்பேராகும்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள். ஆனாலும், நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெறவில்லை.

நபிகளாரின் பரிசுத்த வாழ்வின் கடைசிக் காலத்திலே எமன் தேசத்தில் “அஸ்வத் அனஸீ” என்பவன் தன்னை நபி என்று அறிவித்தான். தான் நபி என்ற பொய்யை மக்களிடம் திணித்து ஏற்றுக் கொள்ளுமாறு நிர்பந்தித்தான்.

மக்களில் பலரும் அவன் பின்னால் அணிவகுத்துச் செல்ல ஆரம்பித்தனர்.

இந்நேரத்தில், அபூ முஸ்லிம் {ரஹ்} அவர்களின் ஈமானை அறிந்து கொண்ட அஸ்வத் அனஸீ, அபூ முஸ்லிம் {ரஹ்} அவர்களை தன்னோடு வந்து சேர்ந்து கொள்ளுமாறு தூது விட்டான். ஆனால், அவர்கள் மறுத்து விட்டார்கள்.

ஒரு நாள் அவரை நேரில் சந்திக்க விரும்பிய அவன், நேராக அவரைச் சந்தித்து “நீ முஹம்மது {ஸல்} அவர்களை நபி என்று ஈமான் கொண்டிருக்கின்றாயா?” என்று கேட்டான். அதற்கு அவர்கள் ஆம்! என்று பதில் கூறினார்கள்.

இதனால் ஆத்திரம் அடைந்த அஸ்வத் அனஸீ மாபெரும் நெருப்புக் குண்டத்தை தயார் செய்து, நபிய்யுல்லாஹ் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை, நம்ரூத் மன்னன் நெருப்புக் குண்டத்தில் வீசியது போன்று அபூ முஸ்லிம் {ரஹ்} அவர்களை நெருப்புக் குண்டத்தில் போட்டு விட்டான்.

ஆனால், அல்லாஹ் நெருப்பை இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு பூஞ்சோலையாக மாற்றியது போன்று, அபூ முஸ்லிம் {ரஹ்} அவர்களுக்கும் மாற்றிக் கொடுத்தான்.

அதிலிருந்து மிகச் சாதாரணமாக, சுகமாக வெளியே வந்ததைப் பார்த்த அஸ்வத் அனஸீயும், அவனை ஏற்றுக் கொண்ட மடையர்களும் திக்கித்துப் போய் நின்றனர்.

அவனின் நெருங்கிய தோழர்கள், ”அபூ முஸ்லிம் {ரஹ்} அவர்களை நாடு கடத்திட வேண்டும். இல்லையென்றால், உம் பின்னால் இருக்கிற இந்தக் கூட்டம் உன் மீது கொண்டுள்ள நம்பிக்கையில் இருந்து தடம்புரண்டு அவரின் பின்னால் செல்ல ஆரம்பித்து விடுவர்.” என்று ஆலோசனை வழங்கினார்கள்.

எமனுக்கு நாடு கடத்தப்பட்டார்கள். எனவே, எமனிலிருந்து வெளியானால் அடைக்கலம் புகும் இடம் அது மதீனாவாகத்தான் இருக்க வேண்டும். அங்கே தான், அண்ணலாரும் அவர் தம் அருமைத் தோழர்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

ஆகவே, எமனிலிருந்து மதீனா நோக்கி பயணம் மேற்கொண்டார் அபூ முஸ்லிம் அல் ஃகவ்லானீ {ரஹ்} அவர்கள்.

மதீனாவின் எல்லையை அவர் அடைகிற போது, அவர் தம் வாழ்க்கையில் புதியதோர் அத்தியாயம் உதயமானதாக உணர்ந்தார்.

ஆனால், மதீனாவின் ஊருக்குள் நுழைந்த பின்னர் தான் அவருக்கு தெரிந்தது “நபித்துவத்தின் அத்தியாயம் அஸ்தமனமாகி விட்டது” என்று.

ஆம்! அல்லாஹ்வின் தூதர் இவ்வுலகத்தை விட்டும் பிரிந்து சென்று விட்டார்கள். தற்போது அவர் தம் அருமைத் தோழர் அபூ பக்ர் {ரலி} அவர்கள் முஃமினீன்களின் தலைவராக அழகு சேர்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று.

நேராக மஸ்ஜிதுன் நபவீயின் அருகே தங்களது ஒட்டகத்தை அமர வைத்து விட்டு, உளூ செய்து ஒரு தூணுக்குப் பின்னால் நின்று தொழ ஆரம்பித்து விட்டார்கள்.

தம்மை படைத்த இறைவனோடு நீண்ட நேரம் உரையாடி விட்டு தம்மை ஆசுவாசப் படுத்திக் கொண்டார்கள்.
அபூ முஸ்லிம் {ரஹ்} அவர்கள் உள்ளே நுழந்ததிலிருந்து அவர் தொழுது முடிக்கும் வரையிலான அத்தனையையும் பார்த்துக் கொண்டு அங்கே தான் உமர் {ரலி} அவர்களும் இருந்தார்கள்.

தொழுது முடித்ததும், நேராக அவருக்கு அருகாமையில் வந்த உமர் {ரலி} அவர்கள் “தோழரே! எங்கிருந்து வருகிறீர்?” என்று கேட்டார்கள். அதற்கவர், “நான் எமனிலிருந்து வருகின்றேன்” என்றார்கள்.

தங்களின் வரவு நல்வரவாகட்டும்! அல்லாஹ்வின் விரோதி அஸ்வத் அனஸீ என்பவன் நம்முடைய நண்பர் ஒருவரை நெருப்பில் போட்டானாம்! அல்லாஹ் அவரை நெருப்பின் தீங்கிலிருந்து பாதுகாத்து விட்டான். ஆனால், அதன் பிறகு அவர் என்ன ஆனார்? அவன் அவரை என்ன செய்தான்? இது குறித்து நீங்கள் ஏதும் அறிவீர்களா?” என்று உமர் {ரலி} அவர்கள் கேட்டார்கள்.

அதற்கு அபூ முஸ்லிம் {ரஹ்} அவர்கள் அமைதியாக “அவரின் பெயர் அப்துல்லாஹ் இப்னு ஸவ்ப் என்பதாகும்” என்றார்கள்.

அதற்குள் ஏதோ உமர் {ரலி} அவர்களின் மனதினுள் தோன்ற “அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கேட்கின்றேன்! சொல்லுங்கள்! நீங்கள் தானே அந்த எங்களின் நண்பர்!?” என்று கேட்டார்கள்.

ஆம்! என்று ஆராவாரம் இன்றி இன்முகத்துடன் பதில் கூறினார்கள்.

இதனைக் கேட்டவுடன் மிகவும் மகிழ்ச்சியடைந்த உமர் {ரலி} அவர்கள் அபூ முஸ்லிம் அவர்களின் நெற்றியில் முத்தமிட்டார்கள்.

பின்பு அவர்களை நேராக அபூ பக்ர் {ரலி} அவர்களிடம் அழைத்துச் சென்று, அவர் குறித்த அறிமுகத்தைக் கூறி அபூ பக்ர் {ரலி} அவர்களின் முன்னால் அமர வைத்தார்கள்.
“தனது நேசர் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் நடந்து கொண்டது போன்று முஹம்மத் {ஸல்} அவர்களின் உம்மத்தில் ஒருவருடன் நடந்து காட்டிய ஒருவரை என் வாழ்நாளிலேயே சந்திக்கும் நற்பேற்றினை வழங்கிய எல்லாம் வல்ல ஏகனாம் அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்!” என கண்ணீர் மல்க கூறினார்கள் அபூ பக்ர் ஸித்தீக் {ரலி} அவர்கள்.

(நூல்: தாரீக் லி இப்னி அஸாக்கிர், பாகம்:7, பக்கம்:315. ஸியர் அஃலா மின் நுபலா, பாகம்:4, பக்கம்:12. ஹில்யா, 5/129.)

எனவே, இறைநேசர்களின் வாழ்வை படிப்பவர்கள், வரலாற்றை வாசிப்பவர்களை அல்லாஹ் அறிவுடையோருக்கான, சிந்தனா சக்தி கொண்டோருக்கான அடையாளமாக கூறியிருக்கின்றான்.

எப்படி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் வாழ்வை அல்லாஹ் முன்மாதிரி என்று வருணிக்கின்றானோ, அது போன்றே அன்னை மர்யம் அலைஹிஸ்ஸலாம், ஃபிர்அவ்னின் மனைவி அன்னை ஆஸியா அலைஹிஸ்ஸலாம் ஆகியோரின் வாழ்வை யுக நாள் முடிவு வரை வரும் இறை நம்பிக்கையாளர்களுக்கு முன்மாதிரியான ஓர் வாழ்வாக நாம் அமைத்திருக்கின்றோம். (பார்க்க: அல்குர்ஆன்:66:11-12) என்றல்லவா அல்லாஹ் கூறுகின்றான்.

இந்த உயர்வான அந்தஸ்தை அவர்கள் அடையப் பெற்றது அவர்கள் கொண்டிருந்த இறை நேசத்தால் தானே!

ஏதோ வலிமார்களின் பெயரால், இந்த உம்மத்தில் சிலரால் மேற்கொள்ளப் படுகிற தவறான செய்கைகளால், நூதன கிரியைகளால் அனாச்சாரங்களால் ஒட்டு மொத்த இஸ்லாமிய வழிகாட்டுதலையும் புறக்கணிப்பது ஆரோக்கியமான இஸ்லாமிய சமூகத்திற்கு நல்லதல்ல.

சமூகத்தில் புரையோடிப் போயிருக்கின்ற அனாச்சாரங்களை களைந்து, இறைநேசர்களை நினைவு கூர்வதும், அவர்களின் வாழ்க்கையை, வரலாற்றை வாசிப்பதும் நேசிப்பதும் வல்லோனாம் அல்லாஹ்வின் வழியென்றும், வழிகாட்டியாம் மாநபி {ஸல்} அவர்களின் நெறியென்றும் இந்த உம்மத்திடம் உரக்கக் கூறிடும் பொன்னான தருணம் இது!

இறைநேசர்களை நேசிக்கின்ற, நினைவு கூறுகின்ற, அவர்களின்  வாழ்க்கையை வாசிக்கின்ற நல்லோர்களில் ஒருவராக, உங்களையும், என்னையும் அல்லாஹ் ஆக்கியருள் புரிவானாக! ஆமீன்! ஆமீன்!

“எங்களின் இறைவா! எங்களையும் எங்களை விட முந்தி நம்பிக்கை கொண்டுவிட்ட எங்கள் (முன்னோர்களையும்) சகோதரர்களையும் மன்னித்தருள்வாயாக! மேலும், எங்கள் இதயங்களில் அவர்களின் பேரில் எந்தக் குரோதத்தையும் ஏற்படுத்தாதே!”.

”எங்களின் அதிபதியே! நிச்சயமாக! நீ மிகவும் பரிவோடும், பெரும் கிருபையோடும் நடக்கக் கூடியவனாய் இருக்கின்றாய்!”.
                                             (அல்குர்ஆன்:59:10)

                   வஸ்ஸலாம்!