Thursday 7 November 2013

ஹிஜ்ரத் இஸ்லாமிய மயமாதலின் ஓர் இனிய உதயம்!

ஹிஜ்ரத் இஸ்லாமிய மயமாதலின் ஓர் இனிய உதயம்!

உலகில் எந்த ஒன்றின் வளர்ச்சியாக இருந்தாலும் அதன் பின்னணி மிகவும் சோகமயமாகவும், இழப்புகள் நிறைந்த்தாகவுமே காணப்படும்.
அது தனி மனிதனின் வளர்ச்சியாக இருந்தாலும் சரி, குடும்பம், நிர்வாகம், வியாபாரம், ஊர், நாடு என அனைத்திற்கும் பொதுவானதே.
அந்த பொதுவான அந்த விதி இஸ்லாமிய மார்க்கத்தின் வளர்ச்சிக்கும், எழுச்சிக்கும் பொருந்திப் போவதை யாராலும் மறுக்க முடியாது.
ஆம், பாசிஸ பயங்கரவாதிகளும், அவர்களின் சூழ்ச்சிகளும், நிறைந்த இந்த இந்திய தேசத்தில், எந்த மூலையில் வேண்டுமனாலும் நம்மால் ஒரு இஸ்லாமியனாக நெஞ்சை நிமிர்த்தி செயல்பட முடியும் (ஒரு சில அசௌகர்யங்கள் இருந்தாலும் சரியே) சூழல் உள்ளதை அனுபவித்து வருகிறோம்.

சமீபத்தில் 10 மாதங்களுக்கு முன்னால்,
பாராளுமன்றத்தில் “வந்தே மாதரம்பாடல் ஒலிக்கப்பட்டது.
அவையில் இருந்த உறுப்பினர்களும், பிரதமர், சபாநாயகர்,  உட்பட எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்,
ஆனால், ஒருவர் மட்டும் வெளி நடப்பு செய்கிறார்,
அதைக் கண்ணுற்ற சபாநாயகர் கண்டிக்கின்றார்,
அவை மரபை, ஒழுங்கை மீறியதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவையிலேயே அறிவிக்கின்றார்

வெளிநடப்பு செயத அந்த நபர் வேறு யாருமில்லை.
சமாஜ் வாதி கட்சியின் M.P. ஷஃபீக்குர்ரஹ்மான் என்கிற இஸ்லாமிய கிழச் சிங்கம்.

வெளியே வந்த அவரிடம்  மீடியாக்கள் கேள்வி கேட்ட துளைத்தன.
ஆவேசப்படாமல், அமைதியாக அதே நேரத்தில் ஆணித்தனமாக இப்படிப் பதில் கூறினார்:
“வந்தே மாதரம் ஒன்றும் தேசிய கீதமல்ல
எழுந்து நின்று மரியாதை செய்வதற்கு.

வந்தே மாதரம் பாடலில் ஏக இறைவனாம்
அல்லாஹ்விற்கு இணை கற்பிக்கும் அநேக வாசகங்கள்
இடம் பெற்றிருக்கின்றன.

இறைவனை உண்மையாய் விசுவாசிக்கும் எந்த முஸ்லிமும்
அதை படிக்க மாட்டான்,
நானும் படிக்க மாட்டேன்.
     எந்த நடவடிக்கைக்கும் நான் அஞ்ச மாட்டேன்

பாராளுமன்ற வளாகத்தில் கூடி நின்ற அத்தனை ஊடகவியளாளர்களுக்கும் மத்தியில் சொன்னது இன்றளவும் அவர் M.P. யாகத்தான் இருக்கின்றார்.

கேட் ஸ்டீவன்ஸ், பிரபல பாப் பாடகர்,
பாப் இசையில் அத்தனை ரகங்களிலும் பாடி அசத்தியவர்,
மைக்கேல் ஜாக்ஸனுக்கு நிகராக கோடான கோடி ரசிகள்களுக்கு சொந்தக்காரர்.

ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்டார்.
தான் இனி பாடப் போவதில்லை என அறிவிப்புச் செய்தான். மேற்குலகமும், ரசிகர்களும் ஸ்தம்பித்து போயினர்.
அந்த ஆண்டினுடைய சிறந்த இசை ஆல்பத்துக்கான விருதை தட்டிச் சென்றது அவரின் இசை ஆல்பம்.
விழா அமைப்பாளர்கள் அணுகினர், இஸ்லாம் தடுத்திருந்த ஒன்றை நான் செய்துவிட்டேன், அதற்கான பாராட்டும், பதக்கமும் நான் பெறத் தகுதியானவனாக தற்போது நான் இல்லை.
எனவே, விருதும் வேண்டாம், பாராட்டும் வேண்டாம்! என்றார் அவர்.
மீண்டும் பல்வேறு முயற்சிகளுக்குப்பின்னர் விழா அமைப்பாளர்கள் அணுகினர்.
விருதையோ, பாராட்டையோ நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டாம்இ
ஆனால், நீண்ட நாட்களாக உங்களை காணாது தவிக்கும் உங்களின் ரசிகர்களின் முன் ஒருமுறை, சில நிமிடமாவது தோன்றிவிட்டுச் சென்றுவிடுங்கள்.
ஆமோதித்தார் அவர்.
குறிப்பிட்ட அந்த நாளில் விழா லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த்து.
விழாவின் நிறைவு நேரத்தில்
கேட் ஸ்டீவன்ஸ் (என்ற) யூசுப் இஸ்லாம் உங்கள் முன் தோன்றுவார் எனும் அறிவிப்பு வெளியானது.

நிரம்பியிருந்த மக்கள் வெள்ளம் கரகோஷத்தால் கலகலத்த்து.

கரகோஷம் அடங்க நீண்ட நேரம் ஆனது.
மேடையில் தோன்றினார் கேட் ஸ்டீவன்ஸ்.
யூசுப் இஸ்லாமாக....

அத்துனை ரசிகர்களும் தாங்கள் பாடிய ஏதாவது ஒரு பாடலை பாடுமாறு விரும்பி விண்ணப்பித்தனர்.
மறுத்தார்.
என் மார்க்கம் அதை ஒப்புக்கொள்ளவில்லை என உறுதி படக் கூறினார்.

நீண்ட நேரம் நீடித்த்து ரசிகர்களின் வற்புறுத்தலும், யூசுப் இஸ்லாமின் மறுப்பும்,

இறுதியாக, மைக் முன்வந்து நின்றார்,
இதுவரை ரகிசர்கள் கேட்டிராத புதுமையான, இனிமையான ஒன்றை ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.
அரங்கம் முழுவதிலும் அத்துனை ஓர் அமைதி,
சிறு சப்தமோ, சலசலப்போ கூட ஏற்படவில்லை.
ஆம், மைக்முன் வந்து நின்றதும், ஸலாம் கூறினார்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்... என்று ஆரம்பித்தார், அர் ரஹ்மான் அல்லமல் குர்ஆன்.
என்று முழுவதுமாக அர்ரஹ்மான் அத்தியாயத்தை ஓதி விட்டு மேடையிலிருந்து கீழிறங்கினார்.
இந்திய தேசத்தில் மட்டுமல்ல உலக அரங்கிலும் கூட இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் அச்சுறுத்தல் இருந்து கொண்டிருக்கும் கால கட்டத்தில்
துணிச்சலாக நம்மால் நம் மார்க்கத்தை பின்பற்ற முடிகிறது. ஒரு முஸ்லிமாக அடையாளப் படுத்த முடிகிறது.
இன்றைக்கு உலகில் நடமாகும் நால்வரில் ஒருவர் முஸ்லிம் என்று பெருமிதத்தோடு  சொல்லமுடிகிறது.

உலகில் இஸ்லாம் இன்று அதிக நாடுகளில் மிக வேகமாக (இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மன்) பரவிக்கொண்டு இருக்கிறது.
என்று பெருமித்த் தோடு நாம் பேசிக் கொண்டு இருக்கின்றோம். இன்னும் சில காலத்தில் உலகம் முழுவதும் இஸ்லாமிய மயமாகிவிடும் என்றும் இஸ்லாமிய எழுச்சியை மகிழ்வோடு வரவேற்றுக் காத்துகிடக்கும் நமக்கு இதில் துளி அளவுகூட எந்தப் பங்கும் இல்லை.
ஆம்! இன்றைய இந்த “இஸ்லாமிய மயமாதலின்உதயத்தைப் பெற்றுத் தந்தவர்கள்ஹிஜ்ரத்எனும் பெறும் சாதனையைச் செய்த நபிகளாகும், முஹாஜிர்கள் எனும் மேன்மக்களும் தான்.

இஸ்லாமும் குறைஷித் தலைவர்களும்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏகத்துவ அழைப்பை எத்திவைத்த ஆரம்ப காலம் விரல் விட்டு எண்ணிடும் அளவிற்கே முஸ்லிம்கள் இருந்தனர்.
மெல்ல, மெல்ல பிரச்சாரம் விரிவடைந்த்து பெரிய குடும்பத்து மனிதர்களும் இஸ்லாத்தில் இணைய ஆரம்பித்தனர்.
பெரிய மனிதர்களிடத்தில் அடிமை பட்டுக்கிடந்த பிலால், கப்பாப், சிஹைப் போன்ற ஏழை அடிமைகளும் இஸ்லாத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
இன்னும் சற்று விரிவடைந்து வெளியூர்களிலிருந்து வியாபார விஷயமாக வரும் வியாபார பெருமக்களும்,
மக்காவை ஹஜ் செய்ய வரும் யாத்ரீகர்களும், இஸ்லாத்தில் இணைய ஆரம்பித்தனர்.
இந்த “ஏகத்துவக் கொள்கையை இத்துடன் ஒரு முடிவுக்கு கொண்டுவரவேண்டும்.
-எனும் முனைப்பில் 25 பேர் கொண்ட மக்கத்து பெரும் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் ஒன்றை கூட்டினர். அதில், இப்படியே முஹம்மதை விட்டுவிட்டால் நம் மக்களையும், குடும்பத்தாரையும் நம்மை விட்டு பிரித்துவிடுவார்.
நம்மிடமிருந்து அதிகாரத்தையும், அந்தஸ்தையும் பறித்துவிடுவார்.
எனவே, அவரது பிரச்சாரத்தை தடுக்க வேண்டும். அவரைப்பற்றி மக்களிடையே அவதூறான செய்திகளை பரப்ப வேண்டும்.
அவர் ஓதிக் காட்டுகிற இறை வசனங்களை பொய் படுத்த வேண்டும்.
-எனும் தீர்மானத்தை முதன் முதலாக நிறைவேற்றினர். அதை மிகத் தீவிரமாக கடை பிடிக்கவும் ஆரம்பித்தனர்.
ஆனால், எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்பதை உணர்ந்த அவர்கள் அனைவரும், அபூதாலிபிடம் சென்று “உமது சகோதரன் மகன் முஹம்மத் எமது கடவுளர்களை ஏசுகிறார், எனது கொள்கைகளை விமர்சிக்கின்றார், எங்கள் மக்களை மடமைத்தனத்தின் பால் அழைத்துச் செல்கிறார், எமது மூதாதையர்களை வழிகேடர்கள் என்கிறார்.
இதை நீங்கள் தடுத்து நிறுத்துங்கள், அல்லது அவரை எங்களிடம் ஒப்படையுங்கள் என்று முறையிட்டனர். அதற்கு அபூதாலிப் குறைஷித் தலைவர்களிடம் மென்மையான குறையிலும், அழகான முறையிலும் பதில் கூறிஅனுப்பி வைத்தார்கள்.
இரண்டாம் முறையாக சில மாதங்கள் கழித்து குறைஷித் தலைவர்கள் அபூதாலிபைச் சந்தித்து
“அபூதாலிபே! உங்களை நாங்கள் பெரிதும் மதிக்கின்றோம். ஆதலால் தான் முன்பொருமுறை உம்மிடம் வந்து உமது சகோதரன் மகன் குறித்து எச்சரித்துச் சென்றோம்.
ஆனால், முஹம்மத் தன் போக்கை மாற்றிக் கொள்பவராய் இல்லை.
இனிமேலும் நாங்கள் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டோம். அவர் தமது கொள்கையையும், பிரச்சாரத்தையும் விட்டுவிடவில்லையென்றால் உங்களையும் அவரையும் நாங்கள் சும்மா விட மாட்டோம், போர் செய்வோம்
இது தான் எங்களது இறுதி எச்சரிக்கையாகும் என்று உரத்த் குரலில் சொல்லி விட்டு வந்தனர்.
இதன் பின்னர், அபூ தாலிப், நபி (ஸல்) அவர்களை அழைத்து நடந்த சம்பவங்களை விளக்கி கூறி என்னால் இயன்றவரை உமக்கு உறுதுணையாய் இருப்பேன் அதற்கு மேல் என்னால் ஒன்றும் செய்ய இயலாதுஎன்று கூறினார்கள்.
அண்ணலெம் பெருமானார் (ஸல்) அவர்கள் அபூதாலிப் அவர்களிடம் இருந்து வந்த இந்த பதிலைக் கண்டு “எதிரிகள் புதுயுக்தியை கையாள முயற்சிக்கின்றனர்என்பதை விளங்கிக் கொண்டு பெரிய தந்தையே!
என் வலக்கரத்தில் சூரியனையும், என் இடக் கரத்தில் சந்திரனையும் வைத்தாலும், என்னுடைய இந்த கொள்கையையும், பிரச்சாரத்தையும் ஒரு போதும் விடப்போவதில்லை!
அல்லாஹ் இந்த மார்க்கத்தை எழுச்சியடைச் செய்யும்வரை, அல்லது நான் உயிரை விடும்வரை இதை விடப் போவதில்லை! என்று கூறிவிட்டு, மாநபி (ஸல்) அவர்கள் அழுதவர்களாக திரும்பிச் சென்றார்கள்.
திரும்பிச் சென்ற நபியவர்களை அபூதாலிப் அழைத்து என் சகோதர்ர் மகனே! நீ விரும்பிய படி வாழ்ந்துகொள்!
அல்லாஹ்வின் மீது ஆணை!
எந்த நிலையிலும் யாரிடமும் உம்மை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று கூறினார்.
நூல்: தஹ்தீப் சீரத் இப்னு ஹிஷாம்:54,55,56
எப்படியாவது அபூதாலிபை வைத்து நபி (ஸல்) அவர்களை மடக்கிவிடலாம் என்று மூன்றாவது முறையாக ஒரு புது விதமான திட்டத்தோடு அபூதாலிபை சந்திக்க வந்தனர்.
அபூதாலிபே! இதோ வலீதின் மகன் அமாரா! குறைஷியர்களிலேயே அழகும், வீரமும் நிறைந்த வாலிபர். இவரை உமது மகனாக வைத்துக் கொள்ளுங்கள். “உமது மார்க்கத்தையும், உமது மூதாதையர் மார்க்கத்தையும் குறைகூறி, உமது கூட்டத்தாரிடையே பிளவை உமது அறிஞர்களை மடையர்களாக மாற்றிவரும், உமது சகோதரன் மகனை எம்மிடம் ஒப்படைத்து விடுங்கள் முஹம்மதிற்கு பதிலாக அமாராவை வைத்துக் கொள்ளுங்கள். அமாராவிடம் சகல உரிமைகளையும் கையாளுங்கள். உமது சகோதரன் மகனை நாங்கள் கொன்று விடுகிறோம் என்றனர்.
அதற்கு அபூதாலிப் கடுமையான சினத்துடன் “உங்களின் இந்த செயல் மிகவும் மோசமானது.
உங்கள் மகனை என்னிடம் ஒப்படைப்பீர்கள், அவரை நான் வளர்க்க வேண்டும்.
என் சகோதரன் மகனை உங்களிடம் ஒப்படைப்பேன். நீங்கள் கொலை செய்வீர்கள்.
அல்லாஹ்வின் மீதாணையாக! இது ஒரு போதும் நடக்காது!
அங்கு நின்று கொண்டிருந்த முத்இம் இப்னு அதீ என்பவர் அபூதாலிபிடம் வந்து மத்தியஸ்தம் செய்தார்.
அபூ தாலிபே! உமது கூட்டத்தினர் எளிய நீதமான தீர்வை உன் முன் வைத்து, உமக்கேற்பட்டுள்ள சிக்கலில் இருந்து உம்மை மீட்ட முயற்சி மேற்கொள்கின்றனர், ஆனால். எதற்கும் நீர் இசைந்து கொடுக்க தயாராக இல்லையே! என்றார்.
அதற்கு அபூதாலிப் “இதுவா நீதம்? முத்இமே!
அல்லாஹ்வின் மீது ஆணை! அவர்கள் நீதம் காட்டவில்லை, மாறாக, எனக்கெதிராக நீதான் இவர்களைத் தூண்டிவிடுகிறாய்! அவர்களுக்கு உதவி செய்ய விரும்புகின்றாய்! உன்னால் முடிந்த்தை நீ செய்துகொள்!
என்று கோபமாகக் கூறினார்.
நூல்: தஹ்தீப் சீரத் இப்னு ஹிஷாம்:55,57
தோல்வியும் – மிரட்டலும்
அபூ தாலிபை வைத்து காரியம் சாதித்து விடலாம் என நினைத்தவர்கள் இந்த சம்பவத்திற்கு பின் மாற்று வழியை கையாள திட்டமிட்டனர். அதன் முதற்கட்டமாக முஸ்லிம்களை துன்புறுத்த துவங்கினர். முஸ்லிமானோர் வணிகர்களாக இருந்தால் கொடுக்கல் வாங்களை நிறுத்திவிடுவோம் என மிரட்டினர்.
ஏழைகளாகவும், பலகீனமானவர்களாகவும் இருந்தால் அடித்து துன்புறுத்தினர்.
பிலால், அம்மார், யாஸிர், கப்பாப் போன்றோரின் வாழ்க்கை அதற்கு முன்மாதிரியாகும்.
ஆனாலும் முஸ்லிம்களின் இதயம் மார்க்கத்தில் இன்னும் வலுப்பெற்றது.
மூர்க்கத்தனமாக துன்புறுத்தினார்கள்.
மாநபியை கொலை செய்ய முயற்சி மேற்கொண்டார்கள்.
ஆனால், தோல்விக்கு மேல் தேல்வி தான் அவர்களுக்கு கிடைத்தது.

முஸ்லிம்களின் மீதான துன்புறுத்தல் ஒரு கட்டத்தில் எல்லை மீறவே மாநபி (ஸல்) அவர்கள் தமது அழைப்புப் பணயை இரகசியமாகவும், முஸ்லிம்களை பாதுகாக்கவும் முடிவுசெய்து அர்கம் இப்னு அபுல் அர்கம் அல் மகஜூமீ என்பவரின் வீட்டை தேர்வு செய்து அங்கே ஒன்று கூடச் செய்தார்கள். சில முஸ்லிம்களை ஹபஷாவிற்கு தஞ்சம் புக வைக்க முடிவு செய்தார்கள். பின்னர் கொஞ்சம் மாற்றம் நிலவியது, சில பலன்களும் கிடைத்தது.

இதனிடையே ஹம்ஸா அவர்களும் உமர் அவர்களும் இஸ்லாத்தை தழுவினர்.
ஹம்ஸா (ரலி) அவர்கள், இஸ்லாத்தை தழுவிய பின் முஸ்லிம்களின் மீதான மதிப்பு உயர்ந்தது.
உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை தழுவிய பின் முஸ்லிம்களின் பலம் கூடியது.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்
ஒரு நாள் உமரிடம் உங்களுக்கு ஃபாருக் என்ற பெயர் வரக் காரணம் என்ன? என்று கேட்டேன்.
அதற்கவர் “எனக்கு மூன்று நாள்களுக்கு முன் ஹம்ஸா முஸ்லிமானார்,
பிறகு நான் முஸ்லிமானேன்.
நான் முஸ்லிமான போது அல்லாஹ்வின் தூதரே!
நாம் உயிர் வாழ்ந்தாலும் இறந்தாலும் உண்மையில் தானே இருக்கின்றோம்! ஆம்! என்றார்கள் நபி (ஸல்) அவர்கள். நீங்களும் அப்படித்தானே! எனறு பதில் கூறினார்கள். அப்படியென்றால், ஏன் மறைவாக செயல்பட வேண்டும் உங்களை சத்திய மார்க்கத்தைக் கொண்டு அனுப்பிய அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாம் வெளிப்படையக செயல்பட்டே ஆகவேண்டும்என்று கூறி முஸ்லிம்களை இரண்டு அணிகளாக பிரித்து ஓர் அணியல் நானும், இன்னொரு அணியில் ஹம்ஜாவும் இருநதுகொண்டு நபியவர்களை இரு அணிகளுக்கும் மத்தியில் ஆக்கிக் கொண்டோம்.
திருகையிலிருந்து மாவுத் துகள்கள் மறப்பது போன்று எங்களது அணிகளில் இருந்து புழுதிகள் பறந்தன.
அதே வேகத்தில் நாங்கள் கஃபாவில் நுழைந்தோம். என்னையும், ஹம்ஸாவையும் ஒருசேர கண்ட குறைஷியர்களுக்கு ஏற்பட்ட கலக்கம் வாழ்க்கையில் அதுவரை ஏற்பட்டிருக்காது. இந்த காட்சியைக் கண்ட பெருமானார் (ஸல்) அவர்கள் அன்று தான் அல் ஃபாரூக் எனப் பெயரிட்டார்கள்.
நூல்: மனாகிப் உமர், தாரீக் உமர்
இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
“உமர் முஸ்லிமாகும் வரை நாங்கள் கஅபாவுக்கு அருகில் கூட தொழமுடியாதவர்களாகவே இருந்தோம். உமர் முஸ்லிமானதற்கு பிறகே கஅபாவில் தொழுதோம். அங்கே அமர்ந்து பேசினோம். நாங்கள் பலமிக்கவர்களாகவும் மாறினோம்
நூல்: இப்னு ஹிஷாம், பக்கம்:72

ஒத்திகையும், பேருதவியும்
ஆரம்பமாக உஸ்மான் இப்னு அஃப்பான் (ரலி) அவர்கள் தலைமையில் 12 ஆண்கள் நான் பெண்கள் அடங்கிய ஒரு குழுவை ஹபஷாவை நோக்கி நபித்துவத்தின் 5-ம் ஆண்டு ரஜப் மாத்த்தில் நபி (ஸல்) அவர்கள் அனுப்பிவைத்தார்கள்.
இதற்கான கட்டளையும் அல்லாஹ்வின் மூலமே பெறப்பட்டது தான்.
“இம்மையில் நன்மை செய்தவர்களுக்கு மறுமையில் நன்மை தான் கிடைக்கும். அல்லாஹ்வுடைய பூமி மிக விசாலமானது. நிச்சயமாக, பொறுமையாளர்களுக்கு அவர்களுடைய கூலி கணக்கின்றியே வழங்கப்படும்.
அல்-குர் ஆன்: 39:10
இந்த இறைவசனம் இறக்கப்பட்டதின் பிண்ண்ணியில் தான் மாநபி (ஸல்) அவர்கள் மேற்கண்ட முடிவை எடுத்தார்கள்.
இப்பயணத்தில்
                உஸ்மான் இப்னு அஃப்ஃபான் (ரலி) தங்களது மனைவி ருகைய்யா (ரலி)
அவர்களுடனும்,
அபூஹூதைஃபா இப்னு உத்பா (ரலி) தங்களது மனைவி ஸஹ்லா  பின்த் சுஹைல் (ரலி) அவர்களுடனும்,
அபூஸல்மா இப்னு அப்துல் அஸத் (ரலி) தங்களது மனைவி உம்மு ஸல்மா பின்த் அபீ உமைய்யா (ரலி) அவர்களுடனும்,
ஆமிர் இப்னு ரபீஆ (ரலி) தங்களது மனைவி லைலாபின்த் அபீ ஹஸ்மா (ரலி) அவர்களுடனும்,
ஹிஜ்ரத் மேற்கொண்டனர்.

இஸ்லாமிய வரலாற்றில் நபி இப்ராஹீம் (அலை), நபி லூத் (அலை) ஆகிய இருவருக்குப் பின்னும் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்த குடும்பத்தினர் எனும் சிறப்பு அந்தஸ்தைப் பெற்றனர்.

அதிலும் குறிப்பாக “உஸ்மான் (ரலி) அவர்களின் தம்பதியினர் தான் நபி இப்ராஹீம் (அலை) நபி லூத் (அலை) ஆகிய இருவருக்குப்பின் ஹிஜ்ரத் செய்த முதல் குடும்பத்தினர் ஆவார்கள்”  என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: இப்னு ஹிஷாம், பக்கம்:67, 68
ஜாதுல் மஆத்
அங்கே முஸ்லிம்கள் நிம்மதியாய் வாழ்வதை உணர்ந்த நபி (ஸல்) அவர்கள் இரண்டாம் முறையாக 82 ஆண்கள் 18 அல்லது 19 பெண்கள் அடங்கிய இன்னொரு குழுவை அனுப்பிவைத்தார்கள்.
இம்முறை ஹபஷாவிற்கு சென்ற சிலர் தங்களது மனைவி, மக்கள் என குடும்பமாக வெளியேறினர்.
அங்கேயும் சென்று, முஸ்லிம்களை நிம்மதியாக வாழ விடாமல் முயற்சி மேற்கொண்டனர்.
அல்லாஹ் மக்கத்து இணை வைப்பாளர்களுக்கு இம்முறையும் தோல்வியையே கொடுத்தான்.
ஹபஷா – அபீசீனிய மன்னர் ஆதரவுடன் முஸ்லிம்கள் பயமின்றி வாழ் முடிந்த்து.

இறுதி வடிவம்
பின்னர் நபி (ஸல்) அவர்களை அழைத்து, பொன்னும், பொருளம் அள்ளித்தருகின்றோம். ஆட்சி, அதிகாரத்தை விட்டுத் தருகின்றோம், அழகு மங்கையை மணமுடித்து தருகின்றோம் என்று கெஞ்சினர்.
மாநபி (ஸல்) விரட்டிவிட்டார்கள்.

இப்போது, நபி (ஸல்) அவர்களை நெருங்காதவாறு பனூஹாஷிம் கிளையாரும், முத்தலிப் கிளையாரும், அரண் போல் காத்து நின்றனர்.
மாநபி (ஸல்) அவர்களையோ, மாநபித் தோழர்களையோ அவர்களால் நெருங்கக் கூட முடியவில்லை.
இந்நிலையில், நபி (ஸல்) அவர்களை சந்திக்க கஅபாவில் அத்துணை கொடியவர்களும் ஒன்று சேர்ந்து வந்திருந்தனர்.

நபி (ஸல்) அவர்கள், அம்மக்கள் ஈமான் கொண்டுவிடமாட்டார்களா? எனும் ஆசையோடு அவர்கள் முன் வந்து அமர்ந்தார்.
அஸ்வத் இப்னு அல் முத்தலிப் என்பவனும், வலீத் பின் முகீரா என்பவனும் ஆரம்பித்தனர்.

முஹம்மதே! இனி நமக்குள் பகைமை வேண்டாம், இனி நாம் கூட்டாக – சேர்ந்து வாழ்ந்திடுவோம். நாங்கள் வணங்குவதை நீங்கள் வணங்குங்கள்; நீங்கள் வணங்குவதை நாங்கள் வணங்குகின்றோம்!
என்று கூறினார்கள்.
இவர்களனின் வாதத்திற்கு மறுப்பாக அல்லாஹ் அல் குர் ஆனில் 109-வது அத்தியாயத்தையே இறக்கியருளினான்.
நூல்: ரஹீக் அல் மக்தூம்)
எப்படியாவது நபி (ஸல்) அவர்களின் அழைப்புப்பணியை முடக்கி விட வேண்டும் என்று எண்ணிதான், ஒருமுறை வன்மை என்றால் மறுமுறை மென்மை. ஒரு முறை எச்சரிக்கை என்றால் மறுமுறை வன்முறை ஒரு முறை சமரசம் என்றால் மறுமுறை கொலை முயற்சி என்று வளைந்து நெளிந்து பல தந்திரங்களை கையாண்டு பார்த்தனர். அனைத்திலும் தோல்வியை மட்டுமே கண்டு பெரும் குழப்பத்தில் தத்தளித்தனர்.

மாபாதக முடிவும், இறை நெருக்கத்தின் துவக்கமும்
ஹாஷிம், முத்தலிப் ஆகிய இரு கிளையார்களும் நபி (ஸல்) அவர்களை பாதுகாப்பதில் மும்முரமாய் இருப்பதால், மற்ற அனைத்து கிளையார்களையும் ஒன்றிணைத்து மாநபி (ஸல்) அவர்களுக்கும், பலூ ஹாஷிம், முத்தலிப் கிளையாருக்கும் எதிரான மாபாதக தீர்மானமொன்றை கையில் எடுத்தனர்.
அவர்களை ஊர் விலக்கம் செய்வது, அவர்களுடனான அத்தனை உறவுகளையும் அறுத்து எறிவது, முஹம்மதை நம்மிடம் ஒப்படைக்கும்வரை இது தொடரும் எனவும், இதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் எனவும் எழுதி கஅபாவில் தொங்கவிட்டனர்.
எந்த ஒரு நபியின் சமுதாயமும் செய்யத் துணியாத மாபெரும் பாவச் செயலை அக் காபிர்கள் மேற்கொண்டனர்.

இந்த ஒப்பந்தம் – தீர்மானம் நபித்துவத்தின் ஏழாம் ஆண்டு முஹர்ரம் மாதம் முதல் பிறையன்று நடந்தேறியது.
கிட்டதட்ட மூன்று ஆண்டுகள் “அபூ தாலிப் பள்ளத்தாக்கில்முடங்கிக் கிடந்தனர்.
ஒரு சிலரின் பெரும் முயற்சிக்குப் பிறகு இதுவும் தோற்றுப் போனது.
ஜூஹைர் இப்னு அபூ உமைய்யா
ஹிஷாம் இப்னு அம்ர்
முத்கிம் இப்னு அதீ
அபுல் புக்தரீ
ஸம்ஆ ஆகிய ஐந்து பேரும் சேர்ந்து மக்கத்து தலைவர்களிடம் கடுமையாக சண்டை போட்டு, தொங்கவிடப் பட்டிருந்த தீர்மானத்தை கிழித்தெறிந்தனர்.

மீண்டும் மாநபி (ஸல்) அவர்கள் மக்காவிற்குள் பிரவேசிக்கின்றார்கள். முன்பு போலவே அழைப்புப் பணியை தொடர்கின்றார்கள்.

இதன் பின்னர், தாயிஃப், அடுத்து, கோத்திரத்தார்களிடையே அழைப்புப்பணி, ஹஜ்ஜிக்கு வருகிற மதீனாவாசிகளிடம் அழைப்புப்பணி, என்று ஏகத்துவத்தின் எல்லை விரிவடைந்து கொண்டே சென்றது.
இதற்கிடையில், அபூதாலிப், கதீஜா ஆகியோரின் மரணம், மிஃராஜ், என மநாபி (ஸல்) அவர்களின் நிலமை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தது.

மதீனா வாசிகள் மனமுவந்து செய்த இரண்டு அகபாக்கள் – ஒப்பந்தங்கள் இன்னும் சற்று பின்னடைவை மக்கத்து தலைவர்களுக்கு ஏற்படுத்தியது.
இப்போது நபித்தோழர்கள் மதீனாவை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
இதுமேலும் பின்னடைவை தந்தபோது மதீனத்து தலைவர்களை சந்தித்து தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளுமாறு வற்புறுத்தினர்.
மதீனத்து தலைவர்கள் மாநபி (ஸல்) அவர்களுக்கு உதவி புரிவதற்கும் தேவை பட்டால் மதீனாவில் அடைக்கலம் தருவோம் என்பதில் சற்றும் பின் வாங்க மாட்டோம் என்று உறுதியாய் சொல்லி விட்டனர்.
ஏமாற்றத்துடன் திரும்பிய அவர்கள் தங்களின் ஆலோசனை மன்றமான தாருந் நத்வா வில் அத்துனை பெருந்தலைவர்களும் ஒன்று கூட வேண்டுமென உத்தரவிட்டார்கள்.

நபித்துவத்தின் 14-ம் ஆண்டு அந்த கூட்டம் நடைபெற்றது. அதில பல தலைவர்களும் ஆலோசனைகளை அள்ளி வீசினார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு காரணத்திற்காக நிராகரிக்கப்பட்டது.
இறுதியாக, அபூஜஹீல் நான் ஒரு ஆலோசனையைக் கூறுகிறேன்.
“நாம் ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் குடும்பத்தில் சிறந்த நல்ல வீரமிக்க ஒரு வாலிபரை தேர்வுசெய்து ஒவ்வொரு வாலிபனுக்கும் கூர்மையான ஒரு வாளை கொடுத்து விடுவோம். அவர்கள் அனைவருமாக சேர்ந்து முஹம்மதை கொன்று விடுவார்கள். அரபுலகத்தின் அனைத்து கோத்திரத்தின் மீது அவர்களால் நம்மை ஒன்றும் செய்திட இயலாது. ஈட்டுத் தொகையை கொடுத்து நாம் தப்பிற்று விடலாம் நாமும் நிம்மதியாக இருக்கலாம் என்று சொன்னான். இதை அத்தனை தலைவர்களும் ஆமோதித்து அதற்கு தயாரானார்கள்.
நூல்: இப்னு ஹிஷாம், பக்கம் 81 முதல் 101வரை)
ஜிப்ரீல் (அலை) அவர்களின் மூலம் நபி (ஸல்) அவர்களுக்கு தெரியப் படுத்தினான். மேலும், இன்று இரவே மதீனாவிற்கு சென்று விடுமாறும் அல்லாஹ் ஏவியதாக ஜிப்ரீல் (அலை) கூறினார்கள்.
அன்று இரவோடு இரவாக தம் படுக்கையில் அலீ (ரலி) அவர்களை படுக்க வைத்து விட்டு நபி (ஸல்) அவர்கள் அவர்களை தம் தோழர் அபூபக்கர் (ரலி) அவர்களுடன் மதீனா நோக்கி ஹிஜ்ரத் செய்ய புறப்பட்டனர்.
நூல்: இப்னு ஹிஷாம், பக்கம் 102.
ஆம்! அந்த புறப்பாடு தான் இன்றைய இஸ்லாமிய மயமாதலின் இனிய உதயம்!
உயிருக்கு பயந்து வெளியேறிய பயணம் அல்ல அது!
இந்த உம்மத்தை உயிர்ப்போடும், உயிரோட்டத்தோடும்
நடமாடச் செய்திட துவங்கிய சரித்திர பயணம்!
ஆம்! சகோதரர்களே! நமக்கு எல்லா வகையிலும், இஸ்லாமிய மார்க்க சுதந்திரம் கிடைத்திட வேண்டும் என்பதற்காகத்தான்
தங்களின் முழு சுதந்திரத்தையும், முழு வாழ்வையும், அனைத்து சுக போகங்களையும், சொந்த பந்தங்களையும், அல்லாஹ்விற்காக அப்படி அப்படியே விட்டு விட்டு, அர்ப்பணிப்பு எண்ணத்துடன் மேற்கொண்ட ஹிஜ்ரத் – எனும் இஸ்லாமிய எழுச்சிக்கான இதயப்பூர்வமான இனிய பயணம் தான் அது.
இன்றைய நமது வளர்ச்சியிலும், சுதந்திரத்திலும் அதன் தாக்கம் நிறைந்திருக்க வேண்டும்.

பின்நாளில் முஸ்லிம்களின் நினைவில் நீக்கமற நிறைந்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் இஸ்லாமிய ஆண்டிற்கு ஹிஜ்ரி என பெயரிடப்பட்டது.
ஹிஜ்ரத்தை மையமாக வைத்தே அது உமர் (ரலி) அவர்களால் அங்கீகரிக்கப்பட்டு நடைமுறை படுத்தப்பட்டது.

நபி (ஸல்) அவர்களும், ஸஹாபாக்களும் எவ்வாறு மார்க்கத்திற்காக தங்களின் சொத்துக்களையும், நாடுகளையும் துறந்து, இறைவனின் பொருத்த்த்தைப் பெற்றார்களோ அதைப்போல் ஒவ்வொரு முஸ்லிமும் தியாக உணர்வை ஒவ்வோர் ஆண்டும் எண்ணிப்பார்க்க வேண்டும் என்பதை ஹிஜ்ரி நமக்கு ஞாபகமூட்டுகிறது. ஆனால், இன்றைய ஹிஜ்ரியை ஞாபகமூட்ட வேண்டிய நிலையில் சமுதாயம் இருக்கிறது.

ஹிஜ்ரத் என்பது மறுமலர்ச்சிக்கான, உலக இஸ்லாமிய
மயமாதலுக்கான ஓர் புதிய பாதை!
தன் வரலாறை மறந்த எந்த சமூகமும் நிலைபெற்றதில்லை
என்பதை மனதில் பதியவைப்போம்!

இன்றைய நம்முடைய வளர்ச்சி, வளம்! செழுமை ஆகிய அனைத்தின் பிண்ணணியிலும் சத்திய ஸஹாபாக்களின் தியாகமும்.. அன்றைய ஹிஜ்ரத்தும்
ஒளிர்ந்து கொண்டும் அழகாய் மிளிர்ந்து கொண்டும்
இருக்கிறது என்ற பேருண்மையை விளங்கிக் கொள்வோம்!
அல்லாஹ் விளக்கத்தைத் தருவானாக!
இறைவனுக்காக, சத்திய தீனுல் இஸ்லாத்திற்காக
தியாகம் செய்யத்துணியும் நல் உள்ளங்களை
அல்லாஹ் நமக்கு வழங்குவானாக! ஆமீன்.



Thursday 31 October 2013

இதயத்தை சுவனத்தோடு தொடர்பு படுத்துங்கள்!

     உலகைத் துறந்த ஆத்ம ஞானி இப்ராஹீம் இப்னு அத்ஹம் (ரஹ்( அவர்கள். ஒரு முறை ஒரு குளியல் அறைக்கு குளிக்கச் சென்றார்கள். அந்த குளியல் அறையின் சொந்தக்காரன் காசு கொடுத்தால் தான் குளிக்க அனுமதிக்க முடியும் காசு இல்லையென்றால் வெளியே செல்லுங்கள் என்று கூறினான்.
அதைக் கேட்ட இப்ராஹீம் இப்னு அத்ஹம் (ரஹ்) அவர்கள் தேம்பித் தேம்பி அழுதார்கள்.
மன்னர் அந்த குளியல் அறையின் சொந்தக் காரனை நோக்கி
ஷைத்தான்கள் குடியிருக்கும் வீட்டை சிறிது நேரம் பயன்படுத்தவே கூலி கேட்கின்றாயே?
நபிமார்களும், ஸித்தீகீன்களும், ஷூஹதாக்களும் குடியிருக்கக்கூடிய சுவனத்திற்கு நான் என்ன கூலி கொடுக்கப் போகின்றேன்?
அல்லாஹ் என்னிடம் என்ன கூலியை கேட்பானோ?
என்று தெரியவில்லையே! என்று கூறினார்கள்.

ஓர் உண்மையான இறை நம்பிக்கையாளனின் வாழ்வு அங்கு நுழைந்த பின்னர்தான் உதயமாகின்றது.
ஆம்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மேன் மக்களான தம் தோழர்களை முழுவதுமாக அதற்குத் தான் ஆயத்தப்படுத்தினார்கள்.
எதுவரையெனில்,
இசைத் செய்தால் சுவனம் சென்றிடுவோமா? அதைக் கொடுத்தால் சுவனம் கிடைத்திடுமா? இப்படிப் பேசினால் சுவனம் நுழையும் பேரு பெற்றிடுவோமா?
சதாவும் அவர்களின் இதயங்கள் சுவனத்தோடும், சுவனத்தின் இன்பங்களோடும் தான் தொடர்பில் இருந்தன.
எப்படியாவது சுவனம் கிடைத்திட வேண்டும்?
எப்படியாவது சுவனத்தில் நுழைந்திட வேண்டும்?
என்று ஆவல் கொண்டார்கள்.
விளைவு.
சில மேன்மக்கள் இவ்வுலகிலேயே நபிகளாரின் அமுத வாயால் நேரிடையாக சுவனத்தைக் கொண்டு சோபனம் சொல்லப்பட்டார்கள்.
இன்னும் சிலரை சாடை மாடையாக, இன்னும் சிலரிடத்தில் அதற்கான அறிகுறிகள் தென்படுவதாக, இன்னும் சிலரிடத்தில் அதற்கான தகுதிகள் இருப்பதாக மாநபி (ஸல்) அவர்கள் சோபனம் சொல்லியிருக்கின்றார்கள்.
ஆக அத்தனை பேரும் ஆசைப்பட்டார்கள்!
சுவனத்தின் அத்துணை அந்தஸ்துகளுக்கும் ஆசைபட்டார்கள்! நாமும் ஆசைப்படுவோம்!

சுவனமும், நரகமும்.

ஆக சுவனம் என்பது ஏக இறைவனை ஏற்றுக்கொண்டு, இறைத்தூதருக்கு கட்டுப்பட்டு, வாழ்வின் அனைத்து நிலைகளிலும் நல்லறங்கள் ஆற்றுபவர்களுக்கே கிடைக்கும்.

அல்லாஹ் கூறுகின்றான்:
     “எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தார்களோ, அவர்களை உபசரிப்பதற்காகஃபிர்தௌஸ்எனும் சுவனங்கள் இருக்கின்றன. அங்கே அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அவற்றைவிட்டு வெளியேறி வேறு எங்கேனும் சென்றிட அவர்கள் சற்றும் விரும்ப மாட்டார்கள்.
அல்குர்ஆன்: 18:108
நரகம் என்பது ஏக இறைவனை ஏற்றுக்கொள்ளாமல், இறைத்தூதருக்கு கட்டுப்படாமல் மனம் போன போக்கில் வாழ்பவர்களுக்கே கிடைக்கும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
     “நிச்சயமாக நாம் நிராகரிப்பாளர்களை உபசரிப்பதற்காக நரகத்தை தயார் செய்துவைத்துள்ளோம்.
அல்குர்ஆன்: 18:102
தேட்டமும், ஏக்கமும்
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
சுவர்க்கப் பூங்காக்களை கடந்து சென்றால் நன்றாக மேய்ந்து கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறிய போது,
அல்லாஹ்வின் தூதரே! சுவர்க்கப் பூங்காக்கள் என்றால் எது? என்று ஸஹாபாக்கள் வினவினர்.
அல்லாஹ்வை நினைவு படுத்தக்கூடிய சபைகள் என்று நபி (ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள்.
நூல்: திர்மிதி, எண்: 3510
நபி (ஸல்) அவர்கள் நபித்தோழர்களுக்கு சுவனத்தின் மீதான தேட்டத்தையும், அதை அடையத்துடிக்கும் ஆர்வத்தையும் தூண்டினார்கள்.
ஒரு சந்தர்ப்பம் வந்தது. அது நபித் தோழர்களை எந்த அளவு பாதித்தது எனில்,
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் எடுத்துப் பணிக்கு நியமிக்கப்பட்ட ஹன்ழலா இப்னு அர் ரபீவு அல் உஸைதீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஒரு நாள் அபூபக்கர் (ரலி) அவர்கள் என்னை சந்தித்து ஹன்ழலா எப்படி இருக்கின்றீர்? என்று கேட்டார்கள்.
நான்ஹன்ழலா நயவஞ்சனாகிவிட்டான் என்று சொன்னேன்.
அதற்குசுப்     ஹானல்லாஹ் என்ன சொல்கிறீர்? என்று கேட்டார்.
அதற்கு நான்அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சபையில் அமர்ந்திருக்கும் போது அவர்கள் சொர்க்கம், நரகம் ஆகியவற்றை குறித்து நாம் நேரடியாகப் பார்ப்பதைப் போன்று நினைவூட்டுகிறார்கள்.
அவர்களிடமிருந்து நாம் வெளியேறி வீட்டுக்கு வந்ததும், மனைவி மக்களுடன் உறவாடுகின்றோம், பிழைப்புகளில் ஈடுபடுகின்றோம்,
நபிகளார் சொன்னவற்றில் பலதை நாம் மறந்துவிடுகின்றோம்


நபிகளார் சொன்னவற்றில் பலதை நாம் மறந்து விடுகின்றோம்
அதற்கு அபூபக்கர் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இதே மனோ நிலையை நானும் உணர்கிறேன். என்று கூறினார்கள்.
பிறகு, நானும், அபூபக்கர் (ரலி) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றோம்.
பின்பு நான், அபூபக்கர் (ரலி) அவர்களிடம் கூறியதைப் போன்று நபிகளாரிடமும் கூறினேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்.
“என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணை!
நீங்கள் என்னிடம் இருக்கும் போதுள்ள நிலையிலும், இறைவனின் நினைப்பிலும் எப்போதும் இருப்பீர்களாயின், உங்கள் படுக்கைகளிலும், நீங்கள் செல்லும் பாதையிலும் வானவர்கள் (மூஸா பஹா) கை குலுக்கியிருப்பார்கள். மாறாக, இப்படிச் சில நேரம், அப்படிச் சில நேரம் நிலைமைகள் மாறிக் கொண்டு தானிருக்கும்
நூல்: முஸ்லிம், பாபு ஃபள்லி தவாமுத்திக்ர்

சுவனத்தின் சிந்தனையை விட்டும் சற்று விலகியிருப்பதையே நயவஞ்சகத் தனத்தின் அடையாளமாக கருதுகின்ற அளவிற்கு நபித் தோழர்களை மாநபி (ஸல்) அவர்கள் உருவாக்கினார்கள்.

ஏழ்மையும், வரமும்
ரபீ அத் இப்னு கஃபுல் அஸ்லம் எனும் நபித்தோழர், நபிகளாரின் பிரயாணத்திலும், ஊரில் தங்கியிருக்கும் போதும் நபிகளாரின் சுய தேவைகளின் போது தண்ணீர் எடுத்து கொடுக்கும் பணியை மேற்கொண்டிருந்த நபித்தோழர்.
கடும் குளிர் காலத்தில் ஒருநாள் நடு நிசி நேரம், மாநபி (ஸல்) அவர்கள் தஹஜ்ஜத் தொழுகைக்காக எழுந்து, வாயிற்கதவை திறநது உளு செய்ய வெளியெ வந்த போது,
அங்கே சூடாக்கப்பட்ட தன்னீரோடு ரபீஆ, பெருமானாரின் முன் வந்து நின்றார்,
மாநபி (ஸல்) அவர்கள் அந்த வெந்நீரைக் கொண்டு உளு செய்தார்கள்.
பின்னர் ரபீஆவை நோக்கி
ரபீஆவே! கேளும்! உமக்கு என்ன வேண்டும்?
அல்லாஹ்வின் தூதரே!
எனக்கு உண்ண உணவு இல்லை!
உடுத்த உடை இல்லை!
குடியிருக்க வீடு இல்லை!
தேவையான அளவு பொருளும், பணமும் இல்லை!
     ஆகவே, இதை அடைந்திட வேண்டும் என்றார்களா? இல்லை!
நபியே! நாளை சுவனத்தில் உங்களின் நெருக்கத்தோடு உலவும் நற்பாக்யம் வேண்டும்! தூதரே! என்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவரகள்:
ஆச்சர்யம் மேலிட்டவர்களாக “எம்மிடம் இவ்வாறு கேட்குமாறு யார் தூண்டினார்கள்? எது தூண்டியது? என்று கேட்டார்கள்.
இல்லை அல்லாஹ்வின் தூதரே!
யாரும் தூண்டவில்லை! நான் தான் கேட்டேன்!
சுவனத்தின் மீதான ஆசையும், தங்களின் மீதான நேசமும் என்றார் ரபீஆ (ரலி) அவர்கள்.
அப்படியென்றால்,
உன் வாழ்க்கையில் “சுஜீத்செய்வதை அதிகம் கடை பிடித்து வாரும்!
அதாவது வாழ் நாள் முடியும்வரை விடாமல் தொழுது வாரும் என்றார்கள் நபி (ஸல்) அவர்கள்.
நூல்: மதாரிஜ்-அஸ்-ஸாலிக்கீன்
பாகம்:3, பக்கம்:147

நோயும், சோபனமும்
அபூ நயீம் (ரஹ்) அவர்கள், இம்ரான் இப்னு ஹஸீன் (ரலி) அவர்களின் மூலம் அறிவிக்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் தமது அருமை மகளார் அன்னை ஃபாத்திமா (ரலி) அவர்கள் நோயுற்றிருந்தபோது நலம் விசாரிக்கச் சென்றார்கள்,
மகளே! எப்படி இருக்கின்றாய்? உடல் நிலை எவ்வாறு இருக்கிறது?
என்று விசாரித்தார்கள்.
அப்போது அன்னை பாத்திமா (ரலி) அவர்கள்:
தந்தையே! உடல் நிலை கடுமையாக இருக்கின்றது.
நாளுக்கு நாள் வேதனை கூடிக் கொண்டிருக்கின்றது.
உணவு கூட என்னால் சாப்பிட முடியவில்லை. என்று கூறினார்கள்.
மகளே! பொறுத்துக்கொள்ள மாட்டாயா?
நாளை மறுமையில் சுவர்க்கத்தில் அல்லாஹ் உன்னை உலகத்து பெண்களுக்கு தலைவியாக ஆக்கினால் நீ திருப்தி அடைந்திடுவாய் அல்லவா? என்று கேட்டார்கள்.
அதற்கு, அன்னை ஃபாத்திமா (ரலி) அவர்கள்
முன்பொருமுறை மர்யம் (அலை) அவர்கள் சுவர்க்கத்தில் உலகத்தின் பெண்களுக்கு தலைவி என்று கூறினீர்களே!
அப்படியென்றால்? அவர்களின் நிலை என்ன?
மர்யம் (அலை) அவர்கள், அவர்கள் காலத்தைய பெண்களுக்கு சுவனத்தின் தலைவியாகவும்,
மகளே! நீ உன் காலத்தைய பெண்களுக்கு சுவனத்தின் தலைவியாகவும் இருப்பீர்கள்என்று மாநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: ஹூல்யத்துல் அவ்லியா, பாகம்:2, பக்கம்:42

இழப்பும், தேடலும்
பத்ரு யுத்தம் முடிந்து மாநபி (ஸல்) அவர்களும், மாநபித் தோழர்களும் மதீனாவின் எல்லையை வந்தடைந்த போது, பத்ரு ஸஹாபாக்களின் உறவினர்கள் வந்து குவியத்தொடங்கினர்,
திரும்பிவந்தவர்களை ஆரத் தழுவினர், ஷஹீதானவர்களின் குடும்பத்தினர் இரங்கல் தெரிவித்துக் கொண்டனர்.
எங்கே என் மகன்? எங்கே என் மகன்?
குரல் வந்த திசையை நோக்கி திரும்பினார்கள் நபித் தோழர்களில் சிலர்,
ஓ! ஹாரிஸாவின் தாயார் உம்மு ஹாரிஸா தானே நீங்கள்
யுத்தம் துவங்கும் முன்னரே உங்களது மகன் கொல்லப்பட்டுவிட்டார்? என்றார் ஒரு நபித் தோழர்,
என்ன? யுத்தம் நடக்கும் முன்னரே கொல்லப்பட்டுவிட்டானா? எப்படி?
அதுவா? முஸ்லிம் படையினருக்கும், படையின் ஒட்டகத்திற்கும், தண்ணீர் சேகரித்துக் கொண்டிருக்கும் போது,
முஸ்லிம் படையினரில் யாரோ ஒருவர் தவறாக எய்த அம்பு பட்டு கிணற்றருகே வீழ்ந்து இறந்து போனார்,
என்றார் மற்றொரு நபித் தோழர்,
எங்கே அல்லாஹ்வின் தூதர்? எங்கே அல்லாஹ்வின் தூதர்? என்று பதறி துடித்தபடி கூட்டத்தில் அங்குமிங்கும் சப்தமிட்டாவறு ஓடினார்.
எதிரே ஓரிடத்தில் மாநபி(ஸல்) அவர்கள் நிற்பதை கண்ட அப்பெண்மணி கூட்டத்தை விலக்கி மாநபி (ஸல்) அவர்களின் முன் வந்து நின்று
“அல்லாஹ்வின் தூதரே! என் மகன் மீது நானும், என்மீது என் மகனும் கொண்டிருந்த பாசத்தை நீங்களும் இந்த மக்களும் நன்கு அறிகின்றேன்.
அவன் சுவர்க்கத்தில் இருப்பான், இருக்கின்றான் என்றால் நான் பொருமையாகவும், கட்டுக்கோப்பானவளாகவும் இருப்பேன்.
அவன் சுவனத்தில் மட்டும் இல்லை என்றால் நான் என்ன செய்வேன் என்பதை நீங்கள் பார்க்கத்தான் போகின்றீர்கள் என்று கூறினார் உம்மு ஹாரிஸா (ரலி)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்:
“சுவனம் ஒன்று தான் உள்ளது என நினைத்துக் கொண்டிருக்கின்றீரா?
இல்லை, பல சுவனங்கள் இருக்கின்றது
உனது மகன் ஹாரிஸா உயர்வான சுவனமாக ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ்-ல் இருக்கின்றான்.
என்று கூறினார்கள்.
அதைக் கேட்டு மகிழ்ச்சியோடு திரும்பிச் சென்றார்கள் உம்மு ஹாரிஸா (ரலி) அவர்கள்
நூல்: இஸ்தீஆப், பாகம்:1,? பக்கம்:166

வியப்பும், ஆர்வமூட்டலும்
தாத்து ஜன்தல் எனும் கோத்திரத்தார் வசித்து வந்த பிரதேசத்தின் தலைவன் அகீதர் இப்னு அப்துல் மாலிக் என்பவன் ஜிஸ்யா- பாதுகாப்பு வரி கொடுக்காமல் ஏமாற்றிக் கொண்டிருந்தான்.
அவனைக் கைது செய்து உயிருடன் கொண்டுவருமாறு நபித்தோழர் காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் தலைமையில் 500 பேர் கொண்ட படைப்பிரிவை நபி (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.

சொன்னது போலவே காலித் பின் வலீத் (ரலி) அவர்கள்
அகீதர்பின் அப்துல் மாலிக் –கை உயிருடன் பிடித்து இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முன்னிலையில் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.

அவன் விலையுயர்ந்த ஆடைகளையும், அதில் தங்கத்தால் நெய்யப்பட்ட விலையுயர்ந்த ஜரிகைகளையும் இணைத்திருந்தான். மேலும், தங்கத்தால் நெய்யப்பட்ட கயிற்றை தலையில் கட்டியிருந்தான்.
இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் இந்த காட்சியைப் பார்த்து விட்டு
“இது என்ன பெருமையும் அகங்காரமும்? என வியப்பு மேலிட விமர்சித்தார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள்:
“என்ன ஆச்சர்யமாய் இருக்கின்றதா?
சுவனத்தில் ஸஅத் இப்னு முஆதின் கைக்குட்டை இதை விட மிகச் சிறந்த்து; விலை உயர்ந்த்து”.
என்று கூறினார்கள்.
நூல்: தஹ்தீப் சீரத் இப்னு ஹிஷாம், பக்கம்:257
ஸஅத் இப்னு முஆதின் மேலாடையையோ, அல்லது சிறப்பு அணிகலனையோ இங்கே நபியவர்கள் குறிப்பிடவில்லை. மாறாக, வெறும் கைக்குட்டையைக் கூறி மாநபித் தோழர்களின் இதயங்களை சுவனத்தின்பால் தொடர்பு படுத்தினார்கள்.

ஆசையும், தேடலும்
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:-
“நாங்கள் நபி (ஸல்) அவர்களோடு அமர்ந்திருந்தோம்,
அப்போது நபி (ஸல்) அவர்கள் “இப்போது ஒரு மனிதர் வருவார் அவர் சுவனவாதிஎன்று கூறினார்கள்.
அப்போது எங்கள் முன் அன்ஸாரித் தோழர், உளு செய்த தண்ணீரின் ஈரம் சொட்டச் சொட்ட, இடதுகையில் செருப்பை தூக்கியவாறு பள்ளியில் நுழைந்தார்.
இரண்டாவது நாளும், நபிகளார் அது போன்று கூறவே, அவர்தான் எங்கள் முன் தோன்றினார்,
மூன்றாவுத நாளும் நபிகளார் அது போன்று கூறவே அவர்தான் எங்கள் முன் தோன்றினார்.

நபி (ஸல்) அவரக்ள் எழுந்து சென்றுவிட்ட போது,
அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள், நேராக அவரிடம் சென்று “நான் என் தந்தையிடம் சண்டையிட்டு, மூன்று நாள் வீட்டிற்கு வரமாட்டேன் என சத்தியமிட்டு கூறிவிட்டேன். ஆகவே, மூன்று நாள் உங்களோடு உங்கள் வீட்டில் தங்கிக் கொள்கின்றேன்என்று கூறியுள்ளார்.
அதற்கு அந்த அன்ஸாரித் தோழர் சரி என சொல்லிவிட்டார்,
பிறகு அப்துல்லாஹ் இப்னு அம்ரு அவரோடு தங்கிய அந்த நாட்களைப்பற்றி என்னிடம் விவரித்தார்.

அவர் ஒருநாளும் இரவுத் தொழுகையில் ஈடுபடவில்லை,
ஆனால், படுக்கையில் புரண்டால் அல்லாஹ்வை நினைவு கூறுவார். பாங்கு சொன்னதும் விழித்து ஃபஜ்ர் தொழ செல்வார். மற்றபடி நம்மைப் போன்றுதான் வணக்க வழிபாடுகளைச் செய்கின்றார்.
வேறு ஒன்றும் சிறப்பாக செய்ய நான் காணவில்லை.
பின்பு, நான் அவரிடம், நான் ஒன்றும் என் தந்தையோடு பிணங்க வில்லை. மாறாக, மாநபி (ஸல்) அவர்கள் கூறிய சோபனத்தையும், அதைத் தொடர்ந்து மூன்று முறை நீங்களே வந்த்தையும் வைத்து, உங்களோடு இருந்து அதைக் கண்ணுற்று நானும் கடைபிடிக்கவே ஆவல்கொண்டு உங்களோடு தங்கினேன்.
ஆனால், அப்படியொன்றும் நீங்கள் உயர்வாக அமல் செய்ய நான் காணவில்லை.
நபிகளார் சொன்னால் அது உண்மையாகத் தான் இருக்கும், சொல்லுங்கள் இப்போதே!
அந்த உயர்வான நல்லறம் எது?
அவர் கூறினார்:
“எப்போதும் நான் மற்றெந்த முஸ்லிம்களின் மீதும், குரோதமே, பகைமையோ கொண்டதில்லை.
அல்லாஹ் எனக்கு கொடுத்தைக்கொண்டு நான் திருப்தி கொள்கின்றேன்.
எந்த சந்தர்ப்பத்திலும் பிறருக்கு வழங்கப்பட்டிருக்கும் எந்த பாக்கியத்தின் மீதும் நான் பொறாமை கொண்டதில்லை. என்றார்
நூல்: அல்ஃப கிஸ்ஸதுவ் – வகிஸ்ஸா, பாகம்:2, பக்கம்:487
ஆகவே மேறகூறிய அத்துணை நிகழ்வுகளும்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,
புனித நபித் தோழர்களையும், நபித் தோழர்களின் இதயங்களையும் சுவனத்தோடும், சுவனத்து இன்பங்களோடும் இணைவிட்டார்கள்.

அவர்களின் அத்துணை அசைவுகளும்
சுவனத்தோடு தொடர்புடையவைகளாகவே அமைந்திருந்தன.

நாமும் சுவனத்தோடு தொடர்பு கொள்வோம்!

அல்லாஹ் அத்தகைய மேன்மக்களோடு
சுவனத்தில் உலவும் பாக்யத்தை தருவானாக!
ஆமீன்!

சுவனத்தைப் பற்றிய மேலதிக தகவல்களுக்கு நமது முந்தைய
“முந்திச் செல்பவர்களுக்கே முன்னுரிமை!
சுவனத்தில்.....

எனும் தலைப்பில் தேடவும்.

எனதருமை இஸ்லாமிய சமுதாயமே!
           இன்று உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய முஸ்லிமிகள் அனைவர்களின் உள்ளத்திலும் ஒரு ஆசை அது என்ன தெரியுமா? எப்படியாவது சுவர்க்கத்திற்கு சென்றுவிட வேண்டும் என்பது தான்.
           பள்ளிவாசலுக்கு போனமா? தொழுதோமா? குர் ஆன் ஓதினோமா? என்பதையெல்லாம் நினைத்துக்கூட பார்ப்பது கிடையாது. ஆனால் சுவர்க்கத்திற்கு போகனும். எப்படி போறது?
           சுவர்க்கம் என்ன மரிந்தா கிடக்கிறது ஒன்னுமே செய்யாம ஓடி போவதற்கு.
           சுவர்க்கம் எப்படிபட்டது, சுவர்க்கத்தின் மாளிகை எப்படிப்பட்டது என்பதை மாநபி (ஸல்) அவர்க் எப்படிகுறிப்பிட்டார்கள், தெரியுமா?
           “சுவனத்தின் கட்டிடத்தில் ஒரு செங்கள், வெள்ளியாகவும், மற்றொன்று தங்கமாகவும் இருக்கும் மேலும் அதன் கலவைத்தூய கஜ்தூரியாகவும், அதன் ஜல்லி முத்துக்களாகவும் அதன் மண் குங்கும்ப்பூவாகவும் இருக்கும்என கூறினார்கள்.
           இந்த சுவர்க்கத்தினுல் ஈஸியாக போக முடியுமா? என நாம் நினைப்பது போன்றே அல்லாஹ்வும் குர்ஆனில் கேட்கிறான்
           “உங்களுக்கு முன்னால் சென்று விட்டவர்களுக்கு ஏற்பட்டமைப்போன்று சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சொர்க்கத்தில் நீங்கள் பிரவேசித்துவிடலாம் என்று நினைக்கிறீர்களா?
                மாநபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் சுவர்க்கத்தில் ஒரு சாட்டையின் அளவு இடம் உங்களுக்கு சொந்தமாக இருப்பத என்பது உலகம் மற்றும் உலகத்தின் அனைத்து பொருள்களையும் விட சிறந்தது.

           நாம் எந்த அளவு சுவர்க்கத்தை விரும்புகின்றோமோ அது மாதிரிதான் இறைநேசர்களும், ஸஹாபாக்களும் சுவர்க்கத்தை விரும்பினார்கள். நாம் அதற்க்கான முயற்ச்சி செய்வதில் ஆர்வம் குறைந்தவர்களாக இருக்கின்றோம். ஆனால் அவர்கள் ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் சுவர்க்கத்தின் சிந்தனையிலேயே இருந்து கொண்டிருந்தார்கள். நம்முடைய நிலைமைஇ என்னவாகுமோ, நமக்கு சுவர்க்கம் கிடைக்குமா, கிடைக்காதா தெரியவில்லையே கிடைக்க வேண்டும் என்கின்ற எண்ணத்திலேயே வாழ்ந்தார்கள் என்பது அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஆய்வு செய்கின்ற போது நாம் புரிந்து கொள்ளலாம்.