Wednesday 5 March 2014

உன் வெற்றி..உன் முடிவில்...



உன் வெற்றி..உன் முடிவில்...







 மனித வாழ்வில் ஏற்படுகிற வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதில் பெரும்பங்கு வகிப்பது அவன் தன் வாழ்வில் சந்திக்கிற மிக முக்கியமான சூழ்நிலைகளில், தருணங்களில் மேற்கொள்கிற முடிவுகளே!

அவன் மேற்கொள்கிற முடிவும், அதைக் கையாள்கிற விதமும் தான் அவனை வெற்றிப்பாதையின் இறுதி வரை அழைத்துச் செல்கிறது.

பொன்னான வாழ்வு மலர வழி வகுக்கின்றது, வாழும்போதே வானைத்தொடும் அதிசயத்தைப் பெற்றுத் தருகின்றது.

இஸ்லாமிய வரலாறுகளை அற்புதங்களால் அலங்கரித்து, சுடர்வீசிடும் ஒளியாய் இலங்கிக் கொண்டிருக்கும் மாமனிதர்களின் வாழ்க்கைப் பாதையை வாசித்துக் கடக்கும் போது, அவர்களின் வாழ்வில் அவர்கள் அடைந்த அசாத்தியமான பல வெற்றிக்குப் பின்னால் “அவர்கள் மேற்கொண்ட முடிவும், அதை அவர்கள் கையாண்ட விதமும் தான்உறுதுணையாய் இருந்தது என்பதை உணரும் போது உண்மையில் நாம் மெய் சிலிர்த்துப் போகிறோம்.

அல்லாஹ் கூறுகின்றான்: “ {நபியே! ஏதாவது ஒரு விஷயத்தில்} நீர் உறுதியான முடிவுக்கு வந்து விட்டால், அப்பொழுது அல்லாஹ்வையே முழுமையாக சார்ந்திருப்பீராக!                    (அல்குர்ஆன்:3:159)

இங்கே அல்லாஹ் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் முதலில் உறுதியான முடிவை மேற்கொள்ள வேண்டும் என்றும், பின்பு தான் அது குறித்து அல்லாஹ்விடம் தவக்குல் – பொறுப்புச் சாட்ட வேண்டும் என்றும் மாநபி {ஸல்} அவர்களுக்கு வழி காட்டுகின்றான்.


 
1.துல்லியமான முடிவு (Accurate)

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களுக்கும், இஸ்லாமிய மார்க்கத்திற்கும் செய்த துரோகத்திற்காக நாடு கடத்தப்பட்ட பனூ நளீர் குலத்தார்களின் தலைவனான ஹுயய் இப்னு அக்தப் என்பவன் குறைஷித் தலைவர்களைச் சந்தித்து, மாநபி {ஸல்} அவர்களின் மீதும், முஸ்லிம்களின் மீதும் படையெடுக்குமாறு தூண்டினான்.

அப்படி படையெடுத்தால் தங்களின் குலம் முழு ஒத்துழைப்பு தரும் என வாக்கும் தந்தான்.

பனூ நளீர் குலத்தின் இன்னொரு தலைவனான கினானா இப்னு ரபீஉ என்பவன், பனூ ஃகத்ஃபான் குலத்தாரை மாநபி {ஸல்} அவர்களுக்கெதிராக படை எடுக்குமாறு தூண்டிவிட்டான்.

பனூ ஃகத்ஃபான் குலத்தார் தங்களின் நட்பு குலத்தாரான பனூ அஸத் குலத்தாரிடம் இது விஷயத்தில் தங்களுக்கு ஒத்துழைக்குமாறு வேண்டிக் கொண்டனர்.

இதற்கிடையில், குறைஷிகள் பனூ சுலைம் கோத்திரத்தார்களை அழைத்துக் கொண்டு மர்ருள் ளஹ்ரான் எனும் இடத்தில் ஒன்று கூடினர்.

பனூ நளீர், பனூ குரைளா, பனூ ஃகத்ஃபான், பனூ அஸத், பனூ சுலைம், குறைஷிகள் என 10,000 பேர் ஒரு பெரும் படையாகத் திரண்டு மதீனாவைத் தாக்கிட திட்ட மிட்டனர்.

ஹிஜ்ரி 5-ஆம் ஆண்டு ஷவ்வால் மாதம் இது நடைபெறுகின்றது. எதிரிகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்க மதீனாவைச் சுற்றிலும் பெரும்அகழி தோண்டியதால் அகழ்யுத்தம் என்றும், பல அணிகளாக பிரிந்திருந்த எதிரிகள் ஓரணியில் ஒன்றிணைந்ததால் இது அல் அஹ்ஸாப் – பல அணியினர் என்றும் அழைக்கப்படுகின்றது.

கிட்டத்தட்ட 20 அல்லது 15 நாட்கள் முற்றுகை நீடித்தது. எதிரிகளின் எண்ணிக்கையும் அதிகம், ஆயுதங்களும் அதிகம். ஆனால், முஸ்லிம்களின் எண்ணிக்கையும், ஆயுதபலமும் மிகவும் குறைவாகத் தான் இருந்தது.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அல்லாஹ்விடம் அதிகமதிகம் துஆச் செய்து கொண்டிருந்தார்கள்.

முற்றுகையில் ஈடுபட்டிருந்த ஓர் இரவில் நபி {ஸல்} அவர்கள் “யா அல்லாஹ் நீ வாக்களித்திருக்கின்றாயே அந்த வெற்றியை உன்னிடம் கேட்கின்றேன்என மன்றாடிக்கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

எதிரிகளின் புறத்திலிருந்து ஓர் உருவம் முஸ்லிம்களின் பகுதிக்கு வந்து கொண்டிருந்ததை நபி {ஸல்} அவர்கள் பார்த்துவிட்டார்கள்.

யார்? என {ஸல்} அவர்கள் கேட்டதும், நான் தான் நுஅய்ம் இப்னு மஸ்வூத் இப்னு ஆமிருல் அஷ்ஜயீ என்று பதில் வந்தது.

ஓ! நுஅய்ம் இப்னு மஸ்வூதா? என்ன இந்த நேரத்தில் அதுவும் இங்கே? என நபி {ஸல்} அவர்கள் வினவினார்கள்.

அதற்கவர் அல்லாஹ்வின் தூதரே! நான் முஸ்லிமாகி விட்டேன். ஆனால், இது என் குடும்பத்தார் களுக்கும், என் குலத்தார்களுக்கும் தெரியாது என்று கூறிவிட்டு, சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே! நான் என்ன செய்யவேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? என்று கேட்டார்.

அதற்கு, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் “ நீரோ ஃகத்ஃபான் குலத்தார்களில் இருந்தும் இஸ்லாமான தனியொரு நபராக இருக்கின்றீர்.

உம்மால் என்ன செய்திட முடியும்? வேண்டுமானால் தந்திரத்தைக் கையாண்டு இந்த யுத்தத்தின் போக்கை மாற்றிவிடும்!

 கைகோர்த்து நிற்கிற இவர்களின் இதயங்களில் உமது தந்திரத்தால் பிரிவினையை ஏற்படுத்தி விடும்! உமக்கு சக்தி இருந்தால் இப்படிச் செய்து விடும்! அது போதும்! போர் என்றாலே தந்திரம் தானே!என்று கூறினார்கள்.

நுஅய்ம் இப்னு மஸ்வூத் அவர்கள் ஃகத்ஃபான் குலத்தைச் சேர்ந்தவர்கள். மதீனாவிற்கு கிழக்கே இருந்த நஜ்த் தேசத்தில் தான் ஃகத்ஃபான் குலத்தார்கள் வசித்து வந்தனர். வியாபார ரீதியாக பனூ குரைளாக்களோடு மிக அதிகமான நெருக்கம் இருந்த்து நுஅய்ம் அவர்களுக்கு.

அதையும் தாண்டி ஒரு நெருக்கம் அவர்களோடு இருந்த்தென்றால் அது இது தான் நுஅய்ம் ஓர் உல்லாசப் பிரியராக இருந்தார்.

மது, சூது, மாது என உல்லாசத்தில் மூழ்கிக் கிடந்தார். அதற்காக காசு பணங்களை கொண்டு வந்து பனூ குரைளாக்களிடம் கொட்டுவார். அவர்கள் ஏற்பாடு செய்து கொடுப்பார்கள்.

ஆனாலும், நுஅய்ம் மதிநுட்பம் நிறைந்தவர், எந்தக் காரியத்தையும் மிக அற்புதமாக திட்டம் தீட்டி சாதிப்பதில் வல்லவர்.

இவையனைத்தையும் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் நன்கு அறிந்து வைத்திருந்ததால் நுஅய்ம் அவர்களிடம் தமது முடிவைக் கூறினார்கள்.

நுஅய்ம் நேராக பனூ குரைளாக்களிடம் வந்தார். எனக்கு உங்கள் மீது இருக்கிற அன்பு உங்களுக்கு தெரியும் தானே? குறிப்பாக உங்களுக்கும் எனக்கும் இடையே இருக்கிற நட்பு உண்மையானது தானே?என்றார்.

அதற்கு, அவர்கள் அதில் அணுவளவேனும் சந்தேகம் இல்லை. நீர் உண்மையைத் தான் சொல்கின்றீர்!

அப்படியென்றால், என் மனதை உறுத்திக் கொண்டிருக்கின்ற ஒரு விஷயத்தை உங்களிடம் சொல்லட்டுமா? என்று கேட்டார் நுஅய்ம்.

ம்ம்ம், சொல்லும் என்றார்கள்.

ஃகத்ஃபான் குலத்தார்களும், குறைஷிகளும் உங்களைப் போன்று கிடையாது. அவர்களின் சொத்துக்களும், மனைவி மக்களும், ஊரில் பத்திரமாக இருக்கின்றார்கள்.

சுய நலத்தைத் தவிர வேறொன்றும் அவர்களை முஹம்மதுக்கு {ஸல்} எதிராக போரிட அழைத்து வரவில்லை.


இந்தப் போரில் வெற்றி கிடைத்தாலும் போரில் கிடைத்த பொருட்களில் எந்த ஒன்றையும் அவர்கள் உங்களுக்கு தரப்போவதில்லை.

சரி, வெற்றி கிடைத்தால் பரவாயில்லை. ஒரு சமயம் போரில் தோற்றுவிட்டால் உங்களை அம்போ என விட்டு விட்டுச் சென்று விடுவார்கள்.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! இது உங்களின் சொந்த பூமி, உங்களின் சொந்த ஊர், உங்களின் சொத்துக்களெல்லாம் இங்கேதான் இருக்கின்றன.

உங்களின் மனைவி, மக்கள் என அத்துனை பேர்களும் உங்களுடன் இங்கே தான் இருக்கின்றார்கள்.

நீங்கள் வேறு அவசரப்பட்டு, முஸ்லிம்களுடன் போட்டிருந்த ஒப்பந்தத்தை நொடிப்பொழுதில் அவர்கள் போருக்கு வா என்றதும் தூக்கி எறிந்து விட்டீர்கள்.

முஸ்லிம்களின் கோபத்திற்கும், வேகத்திற்கும் உங்களால் ஈடுகொடுக்க இயலாது. ஏனெனில், அவர்களின் கோபம் முழுக்க உங்களின் மீது தான் இருக்கும். இப்ப கூட ஒன்றும் நடந்து விட வில்லை பார்த்து, யோசித்து நல்ல முடிவாக எடுங்கள்.

இதை உங்கள் மீது நான் கொண்டிருக்கின்ற தனிப்பட்ட அன்பின் வெளிப்பாட்டில் தான் சொல்கின்றேன்என்றார் நுஅய்ம்.

நினைத்துப் பார்க்கவே பனூ குரைளா குலத்தாருக்கு திகிலூட்டியது. நாங்கள் என்ன செய்ய வேண்டும்? அதையும் நீரே சொல்லிவிடும்!என்றார்கள்  பதற்றத்தோடு.

என்னுடைய தீர்க்கமான ஆலோசனை இது தான்! “அதாவது உங்கள் கூட்டணிப் படையினரில் சில முக்கியஸ்தர்களை நீங்கள் பிணையாக கேட்க வேண்டும். அவர்கள் ஒத்துக் கொள்ளும் வரை போர் செய்யப் போவதில்லை என உறுதியாய் நின்று விடுங்கள்.

அப்படி பிணையாளியாய் சிலரை தந்தார்கள் என்றால் நம்பி போரிடுங்கள். அப்போது தான் அது உங்கள் ஸ்திரத்தன்மையை உறுதிபடுத்தும். நீங்கள் பாதுகாக்கப்பட அடித்தளமாய் அமையும்.என்றார் நுஅய்ம்.

இதைக்கேட்ட பனூ குரைளாவினர் தக்க சமயத்தில் அழகானதொரு தீர்வை சொன்னீர்! உண்மையில் நீர் ஒரு சிறந்த சிந்தனையாளர் தான்! என மகிழ்ச்சியோடு கூறினர்.

முதல் தந்திரம் படுவேகமாக வேலை செய்ய ஆரம்பித்ததும், அடுத்து தன் தந்திரவலையில் சிக்க வைக்க படையை வழி நடத்தி வந்த குறைஷித் தலைவர் அபூ சுஃப்யானை நோக்கி நகர்ந்தார்கள் நுஅய்ம் {ரலி} அவர்கள்.

நேராக குறைஷிகளின் கூடாரம் நோக்கி நடந்தார்கள். அங்கே அபூ சுஃப்யானும், இன்னும் சில தலைவர்களும் அமர்ந்திருந்தனர்.

அடுத்த வலையை கொஞ்சம் பெரிதாகவே வீசினார் நுஅய்ம். குறைஷித் தலைவர்களை நோக்கி “உங்கள் மீது நான் கொண்டிருக்கிற அளவு கடந்த நேசத்தையும், முஹம்மது மீது நான் கொண்டிருக்கிற அளவு கடந்த வெறுப்பையும் நீங்கள் நன்கு அறிவீர்கள்.

நான் ஒரு விஷயத்தைக் கேள்விபட்டேன். அதை உங்களிடம் கூறுவது என் மீதுள்ள தார்மீகக் கடமையாக கருதுகின்றேன். ஆனால், நான் தான் உங்களிடம் கூறியதாக நீங்கள் யாரும் என்னைக் காட்டிக் கொடுத்து விடக் கூடாது. இதற்கு ஒத்துக் கொண்டீர்களென்றால் நான் அதைக் கூறுகின்றேன்என்றார்.

குறைஷித்தலைவர்கள் சரி நாங்கள் உம்மை காட்டிக் கொடுக்க மாட்டோம்என்றார்கள்.

பனூ குரைளாவினர் முஹம்மதிடம் செய்த ஒப்பந்தத்தை முறித்து விட்டு, உங்களோடு கை கோர்த்த்தை நினைத்து வருத்தப்பட்டு பயப்பட ஆரம்பித்து விட்டனர்.

நீங்கள் கைவிட்டு விடுவீர்களோ என கவலை கொண்டு அச்சப்பட ஆரம்பித்து விட்டனர். ஆகவே, அவர்கள் தரப்பிலிருந்து சிலரை முஹம்மதிடம் தூது அனுப்பியுள்ளனர்.

நாங்கள் மன்னிக்க முடியாத குற்றத்தை செய்து விட்டோம்! அதற்காக நாங்கள் இப்போது வருந்துகிறோம். எங்களை நீங்கள் மன்னிக்க வேண்டும்.

நாங்கள் செய்த தவறுக்குப் பரிகாரத்தையும் நாங்களே செய்கிறோம். அது இது தான் “குறைஷ் மற்றும் ஃகத்ஃபான் குலத்தார்களின் முக்கியஸ்தர்கள் சிலரை பிணையாக பிடித்துத் தருகிறோம் நீங்கள் திருப்தியடைவீர்களா? அதன் பின்னர் உங்களோடு இணைந்து அவர்களை கடுமையாக தாக்குகிறோம்.என்று பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். என்றார் நுஅய்ம்.

 மேலும், பனூ குரைளாவினர் உங்களிடம் பிணையாளிகள் வேண்டும் என கோரிக்கை வைத்தால் ஒருத்தரைக் கூட அனுப்பி வைத்துவிடாதீர்கள்.என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார் நுஅய்ம்.

அடுத்து தன்னுடைய குலமான ஃகத்ஃபான் குலத்தின் தலைவர்களிடம் வந்து குறைஷிகளிடம் சொன்னது போலவே சொன்னார்.

அவர்களின் தந்திரம் மூன்று புறத்திலும் வேலை செய்ய ஆரம்பித்தது.

அன்றொரு நாள் இரவு விடிந்தால் சனிக்கிழமை, அபூ சுஃப்யான் தமது மகன் இக்ரிமாவையும், ஃகத்ஃபான் குலத்தார்கள் சிலரையும் பனூ குரைளாவினரிடம் தூது அனுப்பினார்கள்.

இக்ரிமா பேசினார் “ நாம் இங்கு எந்த நோக்கத்திற்காக வந்தோமோ அது இன்னும் நிறை வேறியதாகத் தெரியவில்லை. முற்றுகையும் நீடித்துக் கொண்டே செல்கிறது.

வீர்ர்களும் சோர்வடைந்து விட்டனர். என் தந்தை நாளை யுத்த்த்தை தொடங்கலாம் என்று கூறிவிட்டார், நீங்கள் தயாராய் இருங்கள். நாளை நடக்கும் யுத்தத்தில் நீங்களும் எங்களுடன் இணைந்து கொள்ள வேண்டுமென என் தந்தை உங்களிடம் சொல்லச் சொன்னார்”.என்று பேசி முடித்தார் இக்ரிமா.

“நாளை சனிக்கிழமை நாங்கள் அந்த நாளில் எதையுமே செய்யமாட்டோம் என்று உங்கள் தந்தைக்கு தெரியாதா?

அது போக, நாங்கள் உங்களோடு இணைந்து போரிட வேண்டுமானால் உங்களில் சில முக்கியஸ்தர்களை எங்களிடம் பிணையாக தரவேண்டும்.

அப்படி தந்தால் தான் நாங்கள் உங்களோடு இணைந்து போரிடுவோம். இல்லையென்றால் நாங்கள் பின் வாங்கி விடுவோம்என்றார்கள்.

இந்தச் செய்தியை கேட்டு விட்டு, நேராகச் சென்று அபூ சுஃப்யான் அவர்களிடம் இக்ரிமா அவர்கள் கூறினார்கள்.

அதைக்கேட்ட அபூ சுஃப்யான் “உண்மையில் நுஅய்ம் இப்னு மஸ்வூத் சத்தியத்தையே நம்மிடம் கூறியுள்ளார். பனூ குரைளாவினரிடம் ஆளனுப்பிக் கூறி விடுங்கள் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! ஒரு ஆளைக்கூட நாங்கள் அனுப்ப மாட்டோம். இஷ்டம் இருந்தால் சேர்ந்து போரிடட்டும். இல்லையென்றால், ஊரைப் பார்த்து போகட்டும்!என்று.

இதைக் கேட்டதும் பனூ குரைளாவினர் நமது நண்பர் நுஅய்ம் உண்மையையே கூறினார். குறைஷ், மற்றும் ஃகத்ஃபான் குலத்தார்களின் சுயரூபம் இப்போது நமக்கு புரிந்து விட்டது. நாம் போரில் கலந்து கொள்ள வேண்டாம். என்று கூறினர்.

(நூல்: தஃப்ஸீர் அல் குர்துபீ, பாகம்:8, பக்கம்:17,18. தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம், பக்கம்:173,174,175.)


இக்கட்டான சூழ்நிலையில், நான் என்ன செய்ய வேண்டுமென வேண்டி நின்ற நுஅய்ம் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களைக் கொண்டு, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மேற்கொண்ட “துல்லியமான முடிவும், அதைக் கையாண்ட விதமும்பல அணியினராய் இறுமாப்போடு வந்த எதிரிகள் பிரிந்து, கத்தியின்றி இரத்தமின்றி அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு மா பெரும் வெற்றியை பெற்றது.

அல் அஹ்ஸாப் யுத்தம் படிப்பினை பலவற்றின் புதையலாகும்.


2. துணிவான முடிவு (Risk)


ஸுஹைப் இப்னு ஸினான் ரோமபுரியைச் சார்ந்தவர் சிறுவயதிலேயே மக்காவிற்கு வந்தவர். பின் நாளில் மக்காவில் அறியப்படுகிற பெரும் தனவந்தராக விளங்கியவர்.

ஆபரணங்களை அழகிய முறையில் வடிவமைக்கும் நுட்பம் நிறைந்த ஆசாரி. தொழில் ரீதியாக மிகவும் நேர்மையும், கைதேர்ந்த விற்பன்னராகவும் இருந்ததால் மிக விரைவிலேயே பெரும் புகழுக்கும், செல்வாக்கிற்கும் சொந்தக்காரராகி விட்டிருந்தார்.

இந்நிலையில், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மக்காவிலே தங்களின் ஏகத்துவ பிரச்சாரத்தை துவக்கியிருந்த ஆரம்ப காலகட்டம் அது.

அல்லாஹ் அவரின் இதயத்திலும் ஏகத்துவ விருட்சத்தை வேர்விட வைத்தான். ஆம், 31 – வது நபராக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு, முந்தைய மேன்மக்களின் பட்டியலில் இடம் பெற்றுக் கொண்டார்கள்.

அதே நாளில் தான் அம்மார் இப்னு யாஸிர் அவர்களும் 32 – வது நபராக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு, தம்மையும் அந்த பட்டியலில் இணைத்துக் கொண்டார்கள்.

வழக்கம் போல ஆரம்ப கால நபித்தோழர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களும், துன்பங்களும் இவர்களுக்கு ஏற்பட்டது. என்றாலும் மக்கா குறைஷிகளுக்கு நிகரான செல்வந்தராக இருந்ததால் பாதிப்பு கொஞ்சம் குறைவு.

அல்லாஹ் ஹிஜ்ரத்தைக் கடமையாக்கியிருந்த தருணம் அது. தம்மோடு இருந்த எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக ஹிஜ்ரத் செய்து, மதீனா சென்று மாநபி {ஸல்} அவர்களோடு இணைந்து கொண்டார்கள்.

ஒருவாராக ஸுஹைப் இப்னு ஸினான் (ரலி) அவர்களும் ஹிஜ்ரத் செய்ய ஆயத்தமாகி, புறப்பட்டு மதீனாவிற்கு பயணமானார்கள்.

இந்த செய்தி பக்கா கேடிகளான மக்கா தலைவர்களுக்கு பேரிடியாய் இருந்தது.

ஸுஹைப் இப்னு ஸினான் (ரலி) அவர்களை வழி மறித்தனர். தொடர்ந்து செல்லவிடாமல் முன்னும் பின்னுமாக சுற்றிவளைத்தனர்.

மறித்து நின்ற மக்கா தலைவர்களை நோக்கி “என்னையும், நான் எப்படிப்பட்ட அம்பு எறியும் வீரன் என்பதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள்.

என்னிடத்தில் ஒரு அம்பு மீதமிருக்கும் வரை உங்களால் என்னை ஒன்றும் செய்திட இயலாது.

அப்படியே என் அம்புகள் முழுவதும் தீர்ந்து போனாலும் எனக்கு கவலையில்லை. ஏனெனில், என்னிடம் வாள் இருக்கிறது. நான் எப்படிப்பட்ட வாள் வீரன் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

என் வாள் ஒடிந்து போகும் வரை உங்களால் என்னை ஒன்றும் செய்திட இயலாது.

அப்படியே வாள் ஒடிந்து போனாலும் எனக்கு கவலையில்லை. ஏனெனில், நான் மல்யுத்தம் புரிவதில் வல்லவன் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்என்று ஆவேசமாக அதே நேரத்தில் மிகவும் நேர்த்தியாகக் கூறினார்கள்.

இதைக் கேட்ட மக்கா தலைவர்கள் அதுவல்ல விஷயம், நீர் ரோமைச் சார்ந்தவர். இங்கு வந்து பெரும் செல்வந்தராக மாறிவிட்டீர். உம்மிடம் இருக்கும் அவ்வளவு சொத்துக்களும் எங்கள் ஊரில் நீர் சம்பாதித்தது.

ஆனால், எங்களுக்கு எதிராக செயல்படும் முஹம்மதிற்கும், அவர்களின் தோழர்களுக்கும் அது பயன் படுவதை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்என்றனர்.

அவர்களின் நோக்கத்தை புரிந்து கொண்ட ஸுஹைப் இப்னு ஸினான் (ரலி) அவர்கள் “ஓ! அப்படியா? என் செல்வத்தையும், என் பொற்குவியல்களை பாதுகாத்து வைத்திருக்கின்ற கருவூலத்தையும், நான் அது எங்கிருக்கின்றது என்று அறிவித்து கொடுத்து விட்டேன் என்றால், என்  உயிரை விட மேலாக மதிக்கும் இஸ்லாமிய மார்க்கத்திற்காக நான் மேற்கொண்டிருக்கின்ற இந்த பயணத்தை தடுக்க மாட்டீர்களல்லவா? என்று கேட்டார்கள்.

உடனே மக்கா தலைவர்கள் “அது போதும் எங்களுக்கு, அதை நீர் சொல்லி விட்டீர் என்றால் தடை விலகும். உமது பயணம் இனிதே தொடரும்என்றார்கள்.

உடனடியாக, சத்தியம் வாங்கி விட்டு அவர்களின் சொத்து எங்கெல்லாம் இருக்கின்றது என்றும், அவர்களின் கருவூலத்தின் சாவி எங்கு மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றது என்றும் ஸுஹைப் இப்னு ஸினான் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

பின்பு, மதீனா சென்று மாநபி {ஸல்} அவர்களை சந்திக்க விளைந்த போது, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் முகமலர்ச்சியோடு “ரபிஹல் பைஅ அபா யஹ்யா – அபூ யஹ்யா செய்து விட்டு வந்திருக்கின்ற வியாபாரம் மிகவும் லாபகரமானதுஎன்று கூறி வரவேற்றார்கள்.

அல்லாஹ்வும் தன் பங்கிற்கு “மனிதர்களில் இப்படியும் ஒருவர் இருக்கின்றார்; அவர் அல்லாஹ்வின் உவப்பைத் தேடி, தன் வாழ்வையே அர்ப்பணித்து விடுகின்றார். இத்தகைய அடியார்களிடத்தில் அல்லாஹ் மிகவும் பரிவுடையோனாய் இருக்கின்றான்” (அல்குர்ஆன்:2:207) ஓர் இறைவசனத்தை இறக்கி வைத்து ஸுஹைப் இப்னு ஸினான் (ரலி) அவர்களை சந்தோஷப்படுத்தினான்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் பிரிதோர் சந்தர்ப்பத்தில் “அல்லாஹ்வைக் கொண்டும் மறுமை நாளைக் கொண்டும் இறை நம்பிக்கை கொண்டிருப்போர், எப்படி ஒரு தந்தை தம் பிள்ளையை நேசிப்பாரோ அது போன்று ஸுஹைப் இப்னு ஸினான் (ரலி) அவர்களை நேசிக்கட்டும்!என்று கூறினார்கள்.

(நூல்:இஸ்தீஆப், பாகம்:1, பக்கம்:393 – 396. தஃப்ஸீர் இப்னு கஸீர், பாகம்:1, பக்கம்:323,324. ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}, பக்கம்:130,131.)

முக்கியமான தருணத்தில் ஸுஹைப் இப்னு ஸினான் (ரலி) அவர்கள் மேற்கொண்ட துணிவான முடிவும், அதனை அவர்கள் கையாண்ட விதமும் அவர்களை அல்லாஹ்வும், அவன் தூதரும் பாராட்டிச் சொல்கிற நிலைக்கும், வாழ்வின் இறுதிவரை பல்வேறு சிறப்புக்களுக்கு உரியவராகவும் அழைத்துச் சென்றது.


 3. வேகமான முடிவு  (Speed)

ரோமப் பேரரசர் சீஸர் “முஸ்லிம்களுக்கு நாம் பாடம் புகட்ட வேண்டும். அந்தப் பாடத்தை முஸ்லிம்களின் சந்ததியினர் எவரும் எளிதில் மறந்து விடக்கூடாது. எனும் சூளுரையோடு தகுதியும் ஆற்றலும் நிறைந்த பல தளபதிகளின் தலைமையில் சுமார் 4 லட்சம் போர் வீரர்களை அனுப்பி வைக்கிறார்.

ஃகலீஃபா அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலம், கொஞ்சம் கொஞ்சமாக அந்நிய மண்ணில் இஸ்லாம் பரவிக்கொண்டிருக்கின்றது.

ரோமை நோக்கி ஒரு படைப்பிரிவை அனுப்பி, ரோமர்களுக்கு சத்தியதீனின் அறிவை எத்திவைக்க வேண்டும் என ஒருமனதாக தீர்மானித்து, அதற்கான ஆயத்தப்பணிகளில் கலீஃபா அவர்கள் ஈடுபட்டிருந்தார்கள்.

ரோமை நோக்கி முஸ்லிம்கள் படையெடுத்து வரப்போகிறார்கள் எனும் செய்தியை அறிந்து கொண்ட சீஸர் தன் முக்கிய மந்திரிப் பிரதாணிகளிடம் ஆலோசனைக் கேட்டபோது தான், மேலே சொன்ன சூளுரையை அத்துணை மந்திரிகளும் முன் மொழிந்தனர்.

அதற்கு இசைந்த சீஸர் இப்போது 4 லட்சம் வீரர்களுடன் பெரும்படையை அனுப்பி வைத்தார். படை புறப்பட்டு யர்மூக் எனும் நதிக்கரையின் ஒரு பக்கத்திலே முகாமிட்டு இருந்தனர்.

ஃகலீஃபா அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு இந்த விஷயம் எத்திவைக்கப் பட்டது. உடனடியாக சுறுசுறுப்புடன் இயங்க ஆரம்பித்தார்.

ஈராக் மற்றும் சிரியா போன்ற பகுதிகளை வெற்றி கொண்டு திரும்பி மதீனா நோக்கி வந்து கொண்டிருந்த அபூ உபைதா அல் ஜர்ராஹ் (ரலி), முஆவியா இப்னு அபீ சுஃப்யான் (ரலி), யஸீத் இப்னு அபீ சுஃப்யான் (ரலி), அம்ர் இப்னு ஆஸ் (ரலி) ஆகியோர் தலைமையிலான படைப்பிரிவுக்கு கடிதம் மூலம் உடனடியாக ரோம் நோக்கிச் செல்லுமாறு ஆணை பிறப்பித்தார்கள்.
ஈரானிற்கும் இராக்கிற்கும் இடையே உள்ள கைரா எனும் இடத்தில் தமது சக உதவித் தளபதிகளான தரார் இப்னு அஸ்வர் (ரலி), கஃகாஃ இப்னு அம்ர் (ரலி), ஆகியோரை அருகிலிருக்கும் ஓர் பகுதிக்கு அனுப்பி வைத்து விட்டு அவர்களின் வருகைக்காக காத்து இருந்த தலைமைத் தளபதி காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களுக்கும் ஆட்சித்தலைவர் அபூபக்ர் (ரலி) அவர்கள், கடிதம் மூலம் ரோமப்படைகளை எதிர் கொள்ள இஸ்லாமியப் படையுடன் தங்களின் படையையும் இணைத்துக் கொள்ளுமாறு ஆணை பிறப்பித்தார்கள்.

இறுதியாக யர்மூக் நதியின் இன்னொரு பக்கத்தில் ஒட்டு மொத்த இஸ்லாமியப் படையினரும் முகாமிட்டிருந்தனர்.

எதிரிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் எந்த வகையிலும் முஸ்லிம்படை வலுவானதாக இருக்கவில்லை.

நிலைமை ரொம்பவும் மோசமாக இருந்தது. ஆம்! மொத்தப்படையையும் சேர்த்து 46 ஆயிரம் வீரர்கள் மட்டுமே இருந்தனர்.

அத்துணை தளபதிகளும் உடனடியாக ஆலோசனை மன்றத்திற்குள் ஆஜராகுமாறு கட்டளையிட்டார் ஸைஃபுல்லாஹ்காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள்.

ஆலோசனை மன்றம் இயங்க ஆரம்பித்ததும் ஒருவர் பின் ஒருவராக தங்களது ஆலோசனைகளை கூறினார்கள். ரொம்பக் கவனமாக கேட்டுக் கொண்டிருந்தார்கள் காலித் (ரலி) அவர்கள்.

தங்களுடைய ஆலோசனையின் முறைவரும் போது காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள் “தோழர்களே! உங்களின் ஒவ்வொருவரின் கருத்துக்களும் மிகவும் பின்பற்றப்பட வேண்டியதே! ஆனால், நாம் இன்னும் மிக வேகமான ஒரு முடிவை எடுக்க வேண்டிய முக்கியமானச் சூழ்நிலையில் தள்ளப் பட்டிருக்கின்றோம்.

நமக்கு அவர்களை எதிர் கொள்ள எண்ணிக்கை ஒன்றும் பெரிய விஷயமல்ல. வலிமையுடன் கூடிய நல்ல செயல்திட்டங்கள் தான் இப்போது நமக்குத் தேவை.

நம்மில் ஒவ்வொரு தளபதியும் வெவ்வேறு வகையில் ஆற்றல் மிக்கவர்கள். ஆதலால் ஒவ்வொரு நாளும் நாம் ஒவ்வொரு தளபதியின் கீழ் போரிடுவோம். அத்துணை தளபதிகளுக்கும் வாய்ப்பும் கிடைக்கும்.

ஒவ்வொரு நாளும் புதிய புதிய திட்டங்களுடன் களத்தில் போராடுகிற போது, மிக விரைவில் எதிரிகளிடம் இருந்து வெற்றியை நம் வசமாக்கி விடலாம்.என்று கூறினார்.

அத்துணை தளபதிகளும் காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களின் முடிவை ஆமோதித்தனர். இறுதியாக முதல் நாள் போரை காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களின் தலைமையிலேயே எதிர் கொள்வது எனவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

முதல் நாள் போர் துவங்க சில மணித்துளிகளே இருந்த போது படை வீரர்கள் முன் தோன்றிய காலித் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வைப் புகழ்ந்து பின்னர் என்னருமைத் தோழர்களே! இந்த நாள் அல்லாஹ் நம் வாழ்வில் வழங்கிய சிறப்புமிக்க நாள்!

 இன்றைய தினத்தில் நம் முரட்டுத்தனம், பாரம்பரிய குலப்பெருமைகள் ஆகியவகளுக்கு துளியளவு கூட இடமில்லை.

என்னருமைத்தோழர்களே! அல்லாஹ்வின் திருப்பொருத்தம் ஒன்றை முழு மூச்சாகக் கொண்டு போரிடுங்கள்!

இன்று நம் படைக்கு மிகப்பெரும் தளபதிகள் பலர் பொறுப்பேற்றுள்ளனர். ஒருவர்பின் ஒருவராக உங்களை வழி நடத்த உள்ளனர். அவர்கள் அனைவரும் நம்பிக்கைக்கு உரியவர்கள்.

உங்கள் தலைவர்களுக்கு கட்டுப்பட்டு நடக்க நீங்களும், நானும் உதவிடவும் நம்மை பாதுகாக்கவும் அல்லாஹ் ஒருவனே போதுமானவன். என்று வீர உரை நிகழ்த்தினார்கள்.

(நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}, பக்கம்:294,295,296.)

பின்னர் யர்மூக் யுத்தத்தின் முடிவு வரலாற்றுச் சிறப்பு மிக்கதாய் மாறிப்போனதை, முஸ்லிம்கள் அடைந்த இமாலய வெற்றியாய் பதிவு செய்யப்பட்டதை வரலாறு சான்றுரைத்துக் கொண்டிருக்கின்றது.

அவசியமான நேரத்தில் காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள் எடுத்த வேகமான முடிவும், அதனைக் கையாண்ட விதமும் 4 லட்சம் போர் வீரர்களைக் கொண்ட வல்லரசு ரோம் ஆட்டம் கண்டது. யுத்த களத்தில் ரோமபுரி வீரர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

வெறும் 46 ஆயிரம் வீரர்கள் கொண்ட ஒரு சிறுபடை பென்னம் பெரும் படையை வீழ்த்தி வெற்றி வாகை சூடியதாக வரலாற்றில் தனக்கான வலுவான இடத்தையும், முஸ்லிம்கள் தவிர்க்க முடியாத சக்திகள் என உலகிற்கும் உணர்த்தியது.

4. பாகுபாடற்ற முடிவு (Impartial)


ஹுனைன் யுத்தம் மக்கா வெற்றியை ஜீரணித்துக் கொள்ள முடியாமல் புளுங்கிக்கொண்டிருந்த ஹவாஸின் மற்றும் ஸகீஃப் கோத்திரத்தார்கள் முன்னிலை வகிக்க இன்னும் சிலரால் தொடுக்கப்பட்ட யுத்தமாகும்.

இறுதியில், நபிகளாரின் தலைமையில் சென்ற முஸ்லிம்கள் மாபெரும் வெற்றிவாகை சூடினார்கள்.

ஸகீஃப் கோத்திரத்தார்களில் 70 பேர் கொல்லப்பட்டனர். ஹவாஸின் கோத்திரத்தார்களில் பெருமளவு ஆண்கள் மற்றும் பெண்கள் சிறுவர்கள் என ஏராளமானோர் கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.

ஹவாஸின் கோத்திரத்தார்களின் மிகப்பெரிய அளவிலான செல்வங்கள் ஃகனீமத்தாக கிடைத்தன.

இந்நிலையில், ஜுஹைர் இப்னு ஸுர்த் என்பவரின் தலைமையில் 14 நபர்கள் அடங்கிய ஹவாஸின் குழு ஒன்று இஸ்லாமை ஏற்று நபி {ஸல்} அவர்கள் ஜிஇர்ரானா எனும் இடத்தில் இருக்கும் போது வந்தனர்.

அந்தக் குழுவில் நபி {ஸல்} நபி {ஸல்} அவர்களுடைய பால்குடி தந்தையின் சகோதரர் அபூ ஃபுர்கானும் இருந்தார்.

நபிகளாரிடம் அவர்கள் பைஅத் செய்த பின்னர் “அல்லாஹ்வின் தூதரே! உங்களிடம் கைதிகளாக பிடிபட்டவர்களில் எங்களின் தாய்மார்களும், சகோதரிகளும், மாமிமார்களும், தாயின் சகோதரிகளும் இருக்கின்றனர்.

அவர்களுக்கு ஏதாவது தீங்கு ஏற்படுமேயானால் அது எங்களின் சமுதாயத்திற்கே ஏற்பட்ட கேவலமாகும்.

ஆகவே, எங்களின் போர்க் கைதிகளையும், செல்வங்களையும் எங்களிடம் திருப்பித் தந்து விடுங்கள்என்றார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் “சுற்றியிருந்த நபித்தோழர்களை சுட்டிக்காட்டி என்னுடன் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இவர்களும் (இந்தப் போர் வீரர்களும்) இருக்கின்றனர்.

எனவே, நான் என் தனிப்பட்ட முடிவை அறிவிக்க முடியாது. ஆகவே, ழுஹர் தொழுகைக்குப் பின்னர் எங்களிடம் வாருங்கள். வந்து, சபையில் எழுந்து நின்று “நாங்கள் அல்லாஹ்வின் தூதருடைய பரிந்துரையால் முஃமின்களிடமும், முஃமின்களின் பரிந்துரையால் அல்லாஹ்வின் தூதரிடமும் எங்கள் கைதிகளை திரும்ப கொடுக்கும்படி கோருகின்றோம்என்று கூறுங்கள்என கூறி அனுப்பி வைத்தார்கள்.

ஹவாஸின் குழுவினர் ழுஹர் தொழுகைக்குப் பின்னர் வந்து நபிகளார் கூறிய படியே சபையில் எழுந்து கூறினார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் முஸ்லிம்களிடையே எழுந்து நின்று, அல்லாஹ்வை போற்றிப் புகழ்ந்து விட்டு, “அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்த பின்பு கூறுகின்றேன்: உங்களுடைய இந்தச் சகோதரர்கள் நம்மிடம் மனம் திருந்தியவர்களாக வந்துள்ளனர்.

இவர்களில் (நம்மிடம்) போர்க்கைதிகளாக இருப்பவர்களை இவர்களிடமே திருப்பிக் கொடுத்து விடுவதை நான் சிறந்த்தாகக் கருதுகின்றேன். உங்களில் எவர் மனப்பூர்வமாக இதற்குச் சம்மதிக்கின்றார்களோ அவர் திருப்பித் தந்து விடட்டும்.

 அல்லாஹ் எதிர் காலத்தில் முதலாவதாக தரவிருக்கின்ற (வெற்றி கொள்ளப்படும் நாட்டின்) செல்வங்களிலிருந்து நாம் தருகின்ற வரை அவர்களைத் தம்மிடமே வைத்திருக்க எவர் விரும்புகின்றாரோ அவர் அவ்வாறே வைத்துக் கொள்ளட்டும்என்று கூறினார்கள்.

பின்பு, எனக்கும் அப்துல் முத்தலிப் குடும்பத்தாருக்கும் சொந்தமான கைதிகளை நான் அவர்களிடமே திருப்பித் தந்து விடுகின்றேன்என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

இதனைக் கேட்ட அன்ஸாரிகளும், முஹாஜிர்களும் “அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்குச் சொந்தமானது உங்களுக்கும் சொந்தமானது தான்! நாங்களும் இதற்கு உடன் படுகிறோம்என்றார்கள்.

ஆனால், கூட்டத்திலிருந்த அக்ரஃ இப்னு ஹாபிஸ் (ரலி) அவர்கள் “நானும், பனூதமீம் கிளையாரும் இதை ஏற்றுக் கொள்ள மாட்டோம்என்றார்கள். உயய்னா இப்னு ஹிஸ்ன் (ரலி) அவர்கள் “நானும் ஃபஸாரா கிளையாரும் இதை ஏற்றுக் கொள்ள மாட்டோம்என்றார்கள்.

இது போன்றே அப்பாஸ் இப்னு மிர்தாஸ் (ரலி) அவர்கள் “நானும் பனூ ஸுலைம் கிளையாரும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்என்றார்கள். அப்போது, பனூ ஸுலைம் கிளையார்கள் இடைமறித்து “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்களுக்குரியதை தந்து விடுகிறோம்என்றனர்.

மீண்டும் அண்ணலார் {ஸல்} அவர்கள் மக்கள் முன் எழுந்து நின்று “இவர்கள் இஸ்லாத்தை ஏற்று நம்மிடம் வந்திருக்கின்றார்கள். இவர்களின் வருகையை எதிர்பார்த்துத்தான் கனீமா பங்கீட்டை தாமதம் செய்தேன்.

நான் இவர்களிடம் பொருள் வேண்டுமா? அல்லது கைதிகள் வேண்டுமா? என்று கேட்டேன். அதற்கவர்கள் “எங்களின் குடும்பம் தான் வேண்டும்என்று கூறி விட்டனர். அதற்கு நிகராக அவர்கள் எதையும் கருதவில்லை.

எனவே, யார் கைதிகளை எவ்வித பகரமும் இன்றி விடுவிக்கின்றார்களோ அவர் இனிதே செய்திடட்டும். அல்லது பகரம் பெற விரும்பினால், அதற்குரிய பகரத்தைப் பிற்காலத்தில் அல்லாஹ் நமக்கு வழங்கும் கனீமாவிலிருந்து அவருடைய பங்கிற்கு பகரமாக ஆறு பங்குகள் வழங்கப்படும்என்று கூறினார்கள்.

இதனைக் கேட்டுக் கொண்டிருந்த நபித்தோழர்கள் அனைவரும் ஒரு மனதாக “அல்லாஹ்வின் தூதரே! எந்தப்பகரமும் இல்லாமல் நாங்கள் இந்தக் கைதிகளை விடுவித்திட முன் வருகின்றோம்என்று கூறினார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் “உங்களில் முழுமையான திருப்தியுடன் செய்பவர் யார்? திருப்தியின்றி செய்பவர் யார்? என்பது எனக்குத் தெரியாது. ஆகவே, நீங்கள் சென்று ஆலோசித்து உங்கள் தலைவர்களிடம் உங்கள் முடிவை தெரிவித்து விடுங்கள்.

உங்களின் தலைவர்கள் வந்து என்னிடம் உங்களின் முடிவை தெரிவிக்கட்டும்!என்று கூறி அமர்ந்தார்கள்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் தலைவர்கள் வந்து மக்கள் மனப்பூர்வமாக சம்மதித்து விட்டதாகத் தெரிவித்தார்கள்.

(நூல்: புகாரி, பாடம், பாபு கவ்லில்லாஹி “வயவ்ம ஹுனைனின்.. தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம், பக்கம்:241,242.  ரஹீக் அரபி, பாடம், குதூமு ஹவாஸின்...)


கைதிகளை விடுவிக்கும் விவகாரத்தில் தங்களின் முடிவைக் கூட ஒரு அபிப்பிராயமாகக் கூறிய அண்ணலார், அதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என திணிக்கவில்லை.

மேலும், சிலர் மாற்றுக் கருத்து கூறிய போதும் ஆத்திரப்படாமல் நிலைமைகளை விளக்கிக் கூறினார்கள். இதன் பிறகு அந்தக் கருத்துக்கு மக்கள் இசைந்து கைதிகளை விடுவிக்க முன் வந்த போது இது தான் தருணம் உடனடியாக செயல் படுத்தி விடுவோம் என்று கருதாமல் “நீங்கள் திரும்பிச் சென்று உங்களின் கருத்துக்களை உங்களின் தலைவர்களிடம் தெரிவியுங்கள்என்று கூறியது தான் நபிகளாரின் பன்முகப் பார்வையை பறைசாற்றுகிறது.

தாம் எடுக்கிற எந்த ஒரு முடிவும் யாரையும் பாதித்து, பாகுபடுத்திவிடக்கூடாது என்பதை மனதினிற் கொண்டு அந்த பாகுபாடற்ற முடிவை நபிகளார் மேற்கொண்டார்கள்.

இறுதியில், அது ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் வலுப்படுத்துவதாய் அமைந்ததை வரலாறு சொல்லிக் கொண்டிருக்கின்றது.


ஆக எந்த ஒரு காரியமானாலும் அதன் துவக்கம் எப்படி பிரமாதமாகப் பேசப்படுகிறதோ, அது போன்றே எந்த ஒரு பிரச்சனையானாலும், சூழ்நிலைகளானாலும் அதில் மேற்கொள்ளப்படுகிற முடிவுகள் பிரமாதமாய் அமையும் போதும், அதை அழகாய் பயன்படுத்தும் போதும், வாழ்க்கை உண்மையில் வெற்றி மட்டுமே நிறைந்ததாய் அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

மேற்கூறிய வரலாற்றுச் சான்றுகளும் அந்த முடிவுக்குத்தான் நம்மையும் அழைத்துச் செல்கின்றது.

அல்லாஹ் முடிவுகளை தடுமாற்றமின்றி எடுக்கும் வல்லமையைத் தருவானாக!

எடுக்கும் முடிவுகளை திறம்பட கையாளும் ஆற்றலைத் தருவானாக!

அந்த முடிவுகளோடு அல்லாஹ்வைச் சார்ந்து வாழும் நல்ல நஸீபைத் தந்தருள்வானாக!

ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்! வஸ்ஸலாம்!


இன்ஷா அல்லாஹ்...

முடிவுகள் அடுத்த வாரமும் தொடரும்..

சகோதர ஆலிம்களே! மார்ச் 8 – ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதால் அது குறித்து பேச வேண்டும் என ஆசைப்படுபவர்கள் நம்முடைய வலைப்பூவில் 2013 ஆகஸ்ட் மாதத்தின் கடைசிப் பதிவான “இஸ்லாத்தின் நிழலில்.. பேறு பெற்ற பெண்ணினம்எனும் தலைப்பில் பார்க்கவும்.


என்றென்றும் உங்கள் துஆவின் ஆதரவில்..

N.S.M பஷீர் அஹ்மத் உஸ்மானி

Tuesday 18 February 2014

நவீன பிரச்சனைகளும்…இஸ்லாம் வழங்கும் தீர்வுகளும்…



நவீன பிரச்சனைகளும் 
இஸ்லாம் வழங்கும் தீர்வுகளும்
 

 நாம் வாழ்வது அறிவியல் தொழில் நுட்பம் நிறைந்திருக்கின்ற காலம்.

 அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியால் மனித சமூகத்தில் வியக்கத்தக்க மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

இவற்றின் வரவால் மானுட சமுதாயத்தின் வாழ்வியல் முறையில், வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்றால் அது மிகையல்ல.

எப்பொழுதெல்லாம் வளர்ச்சியை நோக்கி இந்த மானுட சமுதாயம் முன்னேறிச்செல்கிறதோ….

எப்பொழுதெல்லாம் மாற்றங்களை நோக்கி இந்த மனித சமூகம் பயணிக்க தொடங்குகின்றதோ….

அப்பொழுதெல்லாம் காலத்தின் சுழற்சியில் பல்வேறு நவீன பிரச்சனைகளை அது எதிர்கொள்கிறது.

எளிதில் மீண்டுவிடவும், வேகமாக அப்பிரச்சனைககளிலிருந்து வெளியேறிவிடவும் துடிக்கின்றது.

வியக்கத்தக்க கண்டுபிடிப்புகளை வெளிக்கொணர்கிற மனித அறிவால், அன்றாடம் தாம் சந்திக்கின்ற பிரச்சனைகளிலிருந்து வெளியேறிடும் தீர்வுகளை கண்டுபிடிக்க இயலவில்லை.

தீர்வுகளை நோக்கிய தேடலில் மனித சமூகம் அலைந்து கொண்டுதானிருக்கிறது.

எக்காலத்திலும் பிரச்சனைகளிலிருந்து வெளியேறுவதற்கான தீர்வுகளின் தீர்க்கமான அறிவினை மனித சமூகத்தினால் பெற்றுக் கொள்ள முடிவதில்லை.

 இது தான் மானுட வரலாறு முழுவதிலும் காணப்படுகிற மறுக்கமுடியாத உண்மை.

உலகில் எவராலும், எந்தவொரு மதத்தாலும் சொல்ல முடியாத தீர்வுகளையெல்லாம் இஸ்லாம் மாத்திரமே மனித சமூகத்திற்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

மனித சமூகத்தின் துவக்க காலத்திலிருந்தே இந்த அரிய பணிகளை இஸ்லாம் மேற்கொண்டுள்ளதாக, மனித சமூகம் சந்தித்த பல பிரச்சனைகளில் தீர்வுகளை வழங்கியதாக அல்குர்ஆன் எண்ணற்ற பல எடுத்துக்காட்டுகளை எடுத்துக்காட்டுகிறது.

ஆதிமனிதர் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் இரண்டு மகன்களில் ஹாபீல் என்பவரை, காபீல் என்பவன் பொறாமையால் கொலை செய்து விடுகின்றான். இது குறித்து அல்குர்ஆனின் (5:26-29) வசனங்களில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

பின்பு செய்வதறியாது திகைத்து நின்றபோது, அல்லாஹ் காகத்தை அனுப்பி இறந்த மனித உடலை அடக்கம் செய்வதெப்படி என வழி காட்டினான்.

 ஏனெனில், அது தான் முதன் முதலில் பூமியில் விழுந்த பிரேதம். காகத்தின் இச்செயலைக் கண்ட காபீல்அந்தோ என் துயரமே! இந்தக் காகத்தைப் போன்று கூட நான் இல்லையே! (அவ்வாறு நான் இருந்திருந்தால்) என்னுடைய சகோதரனுடைய சடலத்தை அடக்கம் செய்வதற்கான முறை எனக்குப் புலப்பட்டிருக்குமே!” என அழுது புலம்பியதாக அல்லாஹ் (5:30) வசனத்தில் குறிப்பிடுகின்றான்.

அல்லாஹ் மனித சமூகத்திற்கு நேர்வழிகாட்ட அனுப்பிவைத்த அத்துணை தூதர்களையும் ஏகத்துவ செய்திகளோடு, அன்றாடம் அந்த மக்கள் சந்தித்து வந்த பிரச்சனைகளுக்கான தீர்வையும் கொடுத்தே அனுப்பினான்.

துல்கர்னைன் எனும் இறைநேசர் குறித்த வரலாற்றை அல்லாஹ் குர்ஆனில் கூறும் போது, “பிரச்சனைகளோடு வாழ்ந்து வந்த மூன்று சமூக மக்களின் வாழ்க்கையில் முக்கியமான, தீர்க்கமான தீர்வுகளை துல்கர்னைன் {அலை} மூலமாக வழங்கியதாககுறிப்பிடுகின்றான்.

                               (பார்க்க: அல்குர்ஆன்: 18: 84 – 98)

ஆக, மனித சமூகம் வாழத் தொடங்கிய காலத்திலிருந்தே பிரச்சனைகளும் அவனைத் தொடர ஆரம்பித்துவிட்டது.

தீர்வுகளை தேடத் துவங்கியதிலிருந்து அனைத்துக் காலங்களிலும் அல்லாஹ் தான் இந்த மனித சமூகத்திற்கு தீர்வுகளை வழங்கி கௌரவித்துக் கொண்டிருக்கின்றான்.
இந்த உலகம் அழியும் நாள் வரை மனித சமூகம் சந்தித்துக் கொண்டிருக்கின்ற, சந்திக்கவிருக்கின்ற அனைத்துப் பிரச்சனைகளின் தீர்வுகளும் அவன் வசமே உள்ளது.

அவனுடைய கட்டளை, அவன் தூதர் முஹம்மத் {ஸல்} அவர்களின் வழிகாட்டலால் அமைந்திருக்கின்ற இஸ்லாத்தின் மூலம் தான் நாம் வாழ்கிற இந்த நவீன காலத்தைய பிரச்சனைகளின் தீர்வுகளை அடைந்து கொள்ள முடியும்.

 நவீன பிரச்சனை1

கர்நாடக மாநிலம் பெல்காமைச் சேர்ந்தவர் பிரவீன் இவரது மனைவி சவீதா இருவரும் அயர்லாந்தில் பணிபுரிந்தனர்.

கடந்த 21.10.2012, அன்று அயர்லாந்தின் பிரபல கால்வே மருத்துவமனையில் கருச்சிதைவு காரணமாக உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.

பல் மருத்துவரான சவீதா தனது நான்கு மாத சிசு கருவிலேயே சிதைந்து போன நிலையில் இருப்பதை ஸ்கேனிங் மூலம் அறிந்து கொண்டார்.

அது தமது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதை மருத்துவராக இருப்பதால் உணர்ந்து கொண்ட அவர், மருத்துவமனை நிர்வாகத்திற்குகருவை கலைத்து விடும்படிவிண்ணப்பித்தார்.

ஆனால், மருத்துவமனை நிர்வாகம் கருக்கலைப்புச் செய்ய மறுத்து விட்டது.

மன்றாடினார், மருகினார் மருத்துவமனை நிர்வாகம் செவி சாய்க்கவில்லை.
அயர்லாந்து ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவ நாடு. கருக்கலைப்புக்கு சட்டத்தில் இடமில்லை எனக் கூறி மருத்துவமனை நிர்வாகம் கைவிரித்து விட்டது.

இறுதியில், 27.10.2012, அன்று அவர் இறந்து விட்டார். கருவை அகற்றவில்லை என்றால் தாயின் உயிருக்கு ஆபத்து என்ற நிலையிலும் சட்டவிரோதம் என்று ஒற்றை வார்த்தையைக் கூறி ஓர் உயிரை பறித்து விட்டனர்.

வழக்கமாக மீடியாக்கள் {BIAS} எனும் ஒரு பக்க சார்புடன் நடந்து கொண்டன. இது போன்றதொரு செயல் இஸ்லாமிய நாட்டில் நடைபெற்றிருக்கு மேயானால், இஸ்லாமிய பழமைவாதம்; இஸ்லாமிய அடிப்படைவாதம் எனக் கூக்குரலிட்டிருப்பனர்.

மனித நேயத்திற்கு விரோதமானவர்களாக இஸ்லாமியர்களும், ஷரீஆவின் சட்டங்களும் விமர்சிக்கப்பட்டிருக்கும். (இஸ்லாத்தின் நிலைப்பாடு இதுவல்லவே அதனால் மௌனமாகி விட்டிருந்தனர்) ஆனால், அத்துணை மீடியாக்களும், ஊடகத்துறையினரும் வாய்மூடி, அதிக எதிர்ப்புக் காட்டாமல் அப்படியே அடங்கிப்போயிருந்தனர்.

ஏற்கனவே சிதைந்து போயிருக்கின்ற சிசுவைக்காட்டிலும், உயிருக்கு போராடிக்கொண்டிருக்கின்ற தாயைக் காப்பாற்றுவது அவசியமா? இல்லையா? எனும் கேள்வி எழுவதும், இதே நிலை இறை நம்பிக்கையாளனான ஓர் முஸ்லிமுக்கு ஏற்பட்டால் அவனுக்கான தீர்வு என்ன? இஸ்லாமிய வழிகாட்டல் என்ன? என்பதைக் காண நாம் கடமைப் பட்டிருக்கின்றோம்.

 நவீன பிரச்சனை2

கடந்த 16.12.2012, அன்று தில்லியின் மருத்துவக்கல்லூரி மாணவி ஒருவர் 6 – பேர் கொண்ட ஒரு கும்பலால் மிகக் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டு, தில்லியின் சஃப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் உயர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக 29.12.2012, அன்று உயிரிழந்தார்.

அதன் பிறகு எழுந்த வாதப் பிரதிவாதங்களையும், தேச மக்கள் கொதித்து எழுந்ததையும், அரசியல்வாதிகளின் நாடகங்களையும், சட்ட மேதைகளின் தடுமாற்றங்களையும் நாம் ஓரளவு ஊடகத்தின் வாயிலாக அறிந்து வைத்திருக்கின்றோம்.

பாலியல் பலாத்கார குற்றத்திற்கு இஸ்லாமிய நாடுகளில் பின்பற்றப்படும் தண்டனை வழங்கப்பட வேண்டுமென சகோதர சமய மக்களும் அந்த தருணத்தில் முன் வைத்தது நமக்கெல்லாம் தெரிந்த செய்திதான்.

நவீன காலத்தைய நவீனமான இவ்விரண்டு பிரச்சனைகளிலும் இஸ்லாம் வழங்கும் தீர்வுகளென்ன?

தீர்வு1

புரைதா பின் அல்ஹஸீப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

”அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் திருச்சமூகத்திற்கு அஸ்த் குலத்தின் கிளையான ஃகாமிதிய்யா கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி வருகை தந்தார்கள்.

வந்த அந்தப் பெண்மணி அல்லாஹ்வின் தூதரே! நான் விபச்சாரம் செய்து விட்டேன். எனக்கு உரிய தண்டனையை நிறைவேற்றி என்னை தூய்மை படுத்துங்கள்! என்றார்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அப்பெண்மணியை திருப்பி அனுப்பி விட்டார்கள். அப்பெண் மறு நாளும் அல்லாஹ்வின் தூதரின் முன் வந்து நின்று முன்பு சொன்னது போலவே சொன்னார்.

 அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் திரும்பிச் செல்லுமாறு கூறிய போது, அப்பெண்மணிஅல்லாஹ்வின் தூதரே! ஏன் என்னை திருப்பியனுப்புகின்றீர்கள்? மாயிஸ் இப்னு மாலிக் {ரலி} அவர்களின் விஷயத்தில் நடந்து கொண்டதைப் போன்றல்லவா என் விஷயத்திலும் நடந்து கொள்கின்றீர்கள்.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் தகாத உறவில் ஈடுபட்டு கர்ப்பமுற்றுள்ளேன்என்று கூறினார்.

நபி {ஸல்} அவர்கள் ஆச்சர்யத்தோடுநீயா அது?” என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணிஆம்என்றார்.

அப்படியானால் உமது வயிற்றினுள் உள்ள குழந்தையை பெற்றெடுத்து விட்டு வா!” என்று அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

குழந்தையை பெற்றெடுத்த பின்னர் அப்பெண்மணி ஒரு துணியில் அந்தக் குழந்தையை சுற்றியெடுத்துக் கொண்டு, மாநபி {ஸல்} அவர்களிடம் வந்துஇது நான் பெற்றெடுத்த குழந்தைஎன்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள், “நீ சென்று அந்தக் குழந்தைக்கு அமுதூட்டு! பால்குடி மறக்கடிக்கப்பட்ட பின் வா! என்று கூறி அனுப்பி வைத்தார்கள்.

அமுதூட்டும் காலம் நிறைவடைந்த பின்னர், அக்குழந்தையை அழைத்துக் கொண்டு, அக்குழந்தையின் கையில் ரொட்டித் துண்டு ஒன்றை கொடுத்து அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் சபைக்கு வந்து, “அல்லாஹ்வின் தூதரே! இதோ நான் பால்குடி மறக்கடித்து விட்டேன். இப்போது என் குழந்தை உணவை உட்கொள்ள ஆரம்பித்து விட்டதுஎன்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள், அக்குழந்தையை அன்ஸாரிகளில் ஒருவரிடம் ஒப்படைத்தார்கள்.

அதன் பின்னர் அந்தப் பெண்ணுக்கு கல்லெறி தண்டனை வழங்குமாறு உத்தரவிட்டார்கள். எனவே, அவருக்காக மார்பளவு குழி தோண்டப்பட்டது.

பின்னர் அக்குழிக்குள் அப்பெண் நிறுத்தி வைக்கப்பட்ட பின் கல்லெறியுமாறு மக்களுக்கு கட்டளையிட, மக்கள் அவர் மீது கல்லெறிந்து அல்லாஹ்வின் தண்டனையை நிறைவேற்றினார்கள்.

அப்போது, காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள் கல் ஒன்றை எடுத்து அப்பெண்ணின் தலைமீது எறிந்தார்கள். பீறிட்டு வந்த இரத்தம் காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களின் முகத்தில் தெரித்தது.

அப்போது, காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள் அப்பெண்ணை சபித்தார்கள்; ஏசினார்கள். இதை அருகில் நின்று கேட்ட மாநபி {ஸல்} அவர்கள் “காலிதே! நிறுத்துங்கள். என் உயிர் எவன் வசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! அப்பெண்மணி அழகிய முறையில் தவ்பா பாவமன்னிப்புத் தேடிக்கொண்டார்.

பொது நிதியை மோசடி செய்த ஒருவன் இப்படி பாவமன்னிப்புக் கோரினால் அவனுக்கும்கூட மன்னிப்பு வழங்கப்பட்டிருக்கும்.” என்று கூறினார்கள்.

பிறகு அப்பெண்ணுக்கு ஜனாஸா தொழுகை நடத்த ஏற்பாடு செய்யுமாறு நபித்தோழர்களை பணித்தார்கள். அவருக்காக ஜனாஸா தொழுகையை தாமே தொழவைத்தார்கள். பின்னர் அப்பெண்மணி நல்லடக்கமும் செய்யப்பட்டார்.

(நூல்: முஸ்லிம்,பாபு மன் இஃதரஃப அலா நஃப்ஸிஹி பிஸ்ஸினா, மிஷ்காத்,கிதாபுல் ஹுதூத், பக்கம்:310)

குற்றவியல் தண்டனைக்குரிய ஓர் தவறைச் செய்து விட்ட, ஒரு பெண் தானாக முன் வந்து குற்றத்தை ஒப்புக்கொண்டு தண்டனை வழங்குமாறு வேண்டி நின்றபோது...

கருவுக்குள் இருக்கும் சிசுவுக்கும் அப்பெண் செய்த குற்றத்திற்கும், தண்டனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை உணர்ந்திருந்த நபி {ஸல்} அவர்கள், மூன்று முறை தவணை வழங்கி தண்டனை வழங்குவதை தாமதப்படுத்தி, ஓர் உயிர் அநியாயமாக இறந்து விடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தார்கள்.

இஸ்லாத்தைப் பொருத்தவரையில் வேண்டுமென்றே ஓர் சிசுவை கொலை செய்வதும், சிசுவை கருவில் அழிப்பதும், வறுமைக்குப் பயந்து சிசுக்கொலை செய்வதையும் தான் தடுத்துள்ளது.

அது பெரும் பாவமென்றும், மறுமையில் மன்னிக்கப்பட முடியாத குற்றம் எனவும், விசாரணை மன்றத்தில் முதல் கேள்வியாக தொக்கி நிற்கும் எனவும் அல்குர்ஆனின் மூலம் எச்சரிக்கின்றது.

ஆனால், சிசுவின் கருவமைப்பே தாயின் உயிரை பறித்துவிடும் என அஞ்சுகிற இது போன்ற தருணங்களில் “நிர்பந்தத்தின் சட்ட அமைப்பை பயன்படுத்த இஸ்லாம் அனுமதி வழங்கியுள்ளது.

அல்லாஹ் கூறுகின்றான்: “கட்டாய (நிர்பந்த) ச் சூழ்நிலைகளைத் தவிர மற்ற சமயங்களில் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்துள்ளவை பற்றி ஏற்கனவே உங்களுக்கு விளக்கியிருக்கின்றான்.”
                                                                   
                                            (அல்குர்ஆன்:6:119)

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் என் உம்மத்சமுதாயத்தினர் ஒன்றும் அறியாமலோ, மறதியாகவோ, நிர்பந்தத்தின் அடிப்படையிலோ செய்கிற செயல்களுக்காக குற்றம் பிடிப்பதில்லை.”
                          (நூல்: இப்னுமாஜா, ஹதீஸ் எண்:4050)

தீர்வு2

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு. 375, 376 –ன் படி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது பத்தாண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதத்துடன் கூடிய இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையோ வழங்கப்படலாம்.

பாலியல் பலாத்காரத்தால் ஒரு பெண் இறந்து விட்டால், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களுக்குஇந்திய தண்டனைச் சட்டம் 302 – ன் படி கொலைக்குற்றத்தில் ஈடுபட்டதிற்காக மரண தண்டனையோ, அல்லது ஆயுள் தண்டனையோ, அல்லது அபராதத்துடன் கூடிய ஆயுள் தண்டனையோ வழங்கப்படலாம்.

(நூல்: முப்பெரும் குற்றவியல் சட்டங்கள், இந்திய தண்டனைச் சட்டம், தீங்கியல் சட்டம். இந்த நூற்கள் வழக்கறிஞர்களிடம் இருக்கும்)

நீதிமன்றத்தின் படியேறி இந்தக் குற்றத்தை நிரூபிக்கும் முன்னமே சட்டத்தின் ஓட்டைகளை கற்றறிந்த கயவர்கள், காமக் கொடூரர்களை ஜாமீனிலோ அல்லது நிரபராதி என நிரூபித்தோ வெளியில் கொண்டு வந்து விடுவார்கள்.

ஹிஜ்ரி 1401 –ஆம் ஆண்டு துல்கஅதா மாதம் பிறை 11 அன்று, சவூதியாவின் மாபெரும் மார்க்கச் சட்ட வல்லுனர்களும், முதுபெரும் உலமாக்களும் சவூதியாவின் ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகள் என ஒரு பெரும் திரளான இஸ்லாமிய கலாச்சார பாதுகாவலர்கள் ஒன்று கூடிபாலியல் பலாத்காரத்திற்கான இஸ்லாமிய தண்டனை என்ன? அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும் இது குறித்து என்ன வழிகாட்டி இருக்கின்றார்கள்? என்று ஆலோசனை நடத்தினார்கள்.

இறுதியாக, அல் மாயிதா அத்தியாயத்தின் 33-ஆம் வசனத்தின் படிபாலியல் பலாத்காரத்திற்கான தண்டனையாகஅதிக பட்ச தண்டணையாக மரணதண்டனையை தீர்மானித்து, அதை அன்றைய தேதியிலேயே அமுல்படுத்தப்பட வேண்டும் என ஃபத்வாமார்க்கத்தீர்ப்பு வழங்கினார்கள்.

அந்த தீர்மானத்தையும், ஃபத்வாவையும் அத்துணை இஸ்லாமிய நாடுகளுக்கும் அனுப்பி வைத்தார்கள். அன்றிலிருந்து இன்று வரை சவூதி மற்றும் இஸ்லாமிய நாடுகளில் அந்தச் சட்டம் தான் நடைமுறைபடுத்தப்படுகின்றது.

அல்லாஹ் கூறுகின்றான்: “எவர்கள் அல்லாஹ்வோடும் அவனுடைய தூதரோடும் போரிடுகின்றார்களோ, மேலும், பூமியில் குழப்பம் விளைவிக்க தீவிரமாக முயற்சி செய்கின்றார்களோ அவர்களுக்குரிய தண்டனை இது தான்:

அவர்கள் கொல்லப்பட வேண்டும்; அல்லது தூக்கில் ஏற்றப்பட வேண்டும்; அல்லது மாறுகை, மாறுகால்கள் வெட்டப்பட வேண்டும்; அல்லது நாடு கடத்தப்பட வேண்டும்.

இது அவர்களுக்கு உலகில் கிடைக்கும் இழிவா (ன தண்டனையா) கும். மேலும், மறுமையில் அவர்களுக்கு இதைவிடக் கடுமையான தண்டனை இருக்கின்றது.”                          (அல்குர்ஆன்:5:33)
ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்பவன் அல்லாஹ்வுடன் போர்பிரகடனம் செய்தவனாகவும், தான் வாழும் நாட்டில் அல்லது பகுதியில் பெரும் குழப்பம் விளைய காரணமான வனாகவும் ஆகிவிடுகின்றான்.

மேலும், அல்லாஹ் இந்த வசனத்தில் கூறிடும் தண்டனைஒரு மனிதனின் உயிர், மானம், பொருள் ஆகியவைகளில் மிகப் பெரிய சேதாரத்தை உண்டுபண்ணக்கூடியவர்கள் விஷயத்திலும் வழங்கலாம். என அந்த ஃபத்வாவில் குறிப்பிட்டுள்ளனர்.

(நூல்: அல்மஜ்லதுல் புஹூஸுல் இஸ்லாமிய்யா, பாகம்:16, பக்கம்:75.)

 நவீன பிரச்சனை 3

அருணா ஷம்பக் 1966-ஆம் ஆண்டு ஆசியாவிலேயே மாநகராட்சியால் நிர்வகிக்கப்படுகிற, மும்பையில் உள்ள பிரபல்யமானகிங் எட்வர்ட் மெமோரியல்எனும் மருத்துவமனயில் நர்ஸாக பணியில் சேர்ந்த அழகிய இளம்பெண்.

1973-ஆம் ஆண்டு நவம்பர் 27-ஆம் தேதி மாலை நேரத்தில் அதே மருத்துவமனையில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணியாற்றியசோகன்லால் பார்த வால்மீகிஎன்பவனால் மிகக் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டு, நாய்கட்டும் சங்கிலியால் அவரின் கழுத்து நெரிக்கப்பட்டு, மூளைக்கு ஆக்ஸிஜன் கொண்டு செல்லும் குழல்கள் சிதறடிக்கப்பட்டு, கண்பார்வை இழக்கப்பட்டு, கை கால்கள் இழுத்து, சுயநினைவை இழந்த உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் பணிபுரிந்த அதே மருத்துவமனையின் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 25. நவம்பர் 29-ஆம் தேதிதான் இந்த செய்தி பத்திரிக்ககளின் வாயிலாக நாட்டுமக்களின் கவனத்திற்கு வந்தது.

பிங்கி விராணி எனும் ஓர் எழுத்தாளர் 2009-ஆம் ஆண்டு உயர் நீதி மன்றத்திலே வழக்கு ஒன்றை தொடுக்கின்றார்.

அதில், 1973-ஆம் ஆண்டிலிருந்து அருணா ஷம்பக் 2009 (தற்போது) வரை கிட்டத்தட்ட 36- ஆண்டுகளாய் தான் எந்த மருத்துவமனையில் நர்ஸாக பணியில் சேர்ந்தாரோ அதே மருத்துவமனையில் ஒரு அறையில் சுயநினைவின்றி கோமாவில் மோசமான நிலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கின்றார்.

இந்த இழிசெயலில் ஈடுபட்டசோகன்லால் பார்த வால்மீகிஎன்பவனோ நீதிமன்றத்தால் 6 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டு தண்டனைக் காலம் முடிந்து வெளியே சென்றுவிட்டான்.

அருகில் இருந்து பார்க்க வேண்டிய அருணாவின் குடும்பமோ, இவள் என் பிள்ளையே இல்லை என கைவிரித்து விட்டனர். நீதிமன்ற ஆணையின் படி மருத்துவமனை நிர்வாகம் அருணாவை கவனித்து வருகின்றது.

கண்பார்வை இன்றி, சுயநினைவை இழந்து ஒருகட்டிலில் படுக்கையிலேயே காலம் கடத்திவரும் இந்த பரிதாப நிலையிலிருந்து ஒரு மோட்சத்தை வழங்கும் விதமாக அருணா ஷம்பக்கைகருணைக் கொலைசெய்ய அனுமதிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார்.

(உலகளவில் கருணைக் கொலைக்கு பெல்ஜியம், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய மூன்று நாடுகளில் மட்டுமே அனுமதி உள்ளது.

ஆக்ஸிஜனை நிறுத்தியோ அல்லது விஷ ஊசி போட்டோ இந்தக் கருணை கொலைகளை அரங்கேற்றுகின்றனர்.)

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஆரம்பத்தில் மறுத்த போதும், தொடர்ந்து நாட்டில் உள்ள சமூக ஆர்வலர்கள் அது குறித்து வெளியில் அதிகம் பேசத்தொடங்கியதும், வழக்கு தொடர்ந்த அந்த எழுத்தாளர் மேல்முறையீடு செய்ததாலும் வழக்கின் இறுதித் தீர்ப்பில் நீதிமன்றம் “கருணைக் கொலையை அனுமதிக்கலாம்” என தீர்ப்பு வழங்கியதாக 17.12.2009 –ஆம் நாளைய செய்தித்தாள்களில் இடம் பெற்றிருந்தது.

தீர்வு – 3

இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் ஆரோக்கியமான வாழ்வை வல்ல ரஹ்மானிடம் வேண்டுமாறும், தீய, கொடிய நோய்களில் இருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் கோருமாறும், தள்ளாத முதுமை, பிறருக்கு பாரமாகிவிடுகிற வயது முதிர்ச்சி ஆகியவைகளில் இருந்து காக்குமாறு இறைவனிடம் பிரார்த்திக்குமாறும் வலியுறுத்துகின்றது.

அப்படி கடுமையான நோயுற்றிருக்கின்ற ஒருவரை சந்திக்கச் சென்றால் அவருக்காக பிரார்த்திக்குமாறு கூறுகின்ற இஸ்லாம், அவரைப் பாதித்திருக்கின்ற நோய் போன்றவை தம்மை பாதித்து விடக்கூடாது என கருணையாளன் அல்லாஹ்விடம் கேட்குமாறு கட்டளையும் பிறப்பித்துள்ளது.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் சந்திக்கச் சென்றிருக்கின்ற நோயாளி கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதை நீங்கள் உணர்ந்தால் “அல்ஹம்து லில்லாஹில்லதீ, ஆஃபானீ மிம்மப்தலாக்க பிஹீ, வ ஃபழ்ழளனீ அலா கஸீரிம் மிம்மன் ஃகலக்க தஃப்ழீலா!”

“இவரைப் பீடித்துள்ள இந்த நோயில் இருந்து என்னைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்! அவன் படைத்த எத்தனையோ படைப்பினங்களை விட என்னை மேன்மை படுத்தி இருக்கின்றான்!”

(நூல்: இப்னுமாஜா, ஹதீஸ் எண்:2430, மிர்காத் ஷரஹ் மிஷ்காத், பக்கம்:1687.)

இதை நோயாளியின் காது பட ஓதிவிடக் கூடாது, மனதால் ஓதிக் கொள்ள வேண்டும்.
அப்படியே, ஒருவர் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். தம் சுற்றம், குடும்பம், என அனைவராலும் கைவிடப்பட்டு வாழ்க்கை வெறுத்துப்போன நிலையில் இருந்தாலும், அல்லது துன்பங்களும், கஷ்டங்களும் வாட்டி எடுத்தாலும் ஆக எப்படிப்பட்ட மோசமான ஒரு சூழ்நிலையை ஓர் இறை நம்பிக்கையாளன் சந்தித்தாலும் ஒருபோதும் அவன் மரணத்தை வேண்டக்கூடாது.

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவருக்கு நோயால் தாங்கமுடியாத சிரமம் ஏற்படுமேயானால் அவர் மரணத்தை விரும்பிக் கேட்க வேண்டாம். அவர் விரும்பினால் இப்படிக் கேட்டுக் கொள்ளட்டும்!

யாஅல்லாஹ்! எனக்கு வாழ்க்கை நன்மைபயப்பதாக இருக்குமாயின் என்னை இவ்வுலகில் உயிர்வாழச் செய்வாயாக! நான் மரணமடைவதுதான் நன்மைபயப்பதாக இருக்குமாயின் என்னை மரணமடையச் செய்வாயாக!

(நூல்: புகாரி, பாபு தமன்னீ அல் மரீள அல் மவ்த்த, ஹதீஸ் எண்:5347.)

அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “வானத்தில் உள்ளவர்களும், பூமியில் உள்ளவர்களும் ஒன்றிணைந்து ஓர் இறை நம்பிக்கையாளனின் உயிரை மாய்ப்பதற்கு முயற்சி மேற்கொள்வார்களேயானால் நாளை மறுமையில் அல்லாஹ் அவர்கள் அனைவரையும் முகங்குப்புற நரகில் தூக்கியெறிவான்.”

(நூல்: திர்மிதீ, பாபு அல் ஹுக்மு ஃபித்திமாஃ, ஹதீஸ் எண்:1398.)

ஓர் உயிரைக் கொலை செய்வது பெரும்பாவம் என்றும், நியாயமற்ற செயல் எனவும், ஓர் சமுதாயத்தையே கொலை செய்ததற்குச் சமம் என்றும், நிரந்தர நரகத்திற்கு அழைத்துச் செல்லும் பாவம் என்றும், மறுமையில் இரட்டிப்பு தண்டனை வழங்கப்படும் குற்றம் என்றும், அது ரஹ்மான் உடைய அடியார்களின் பண்பியல்களில் கட்டுப்பட்டவையாக இருக்காது எனவும் அல்லாஹ் அல்குர்ஆனில் விமர்சனம் செய்கின்றான்.

(பார்க்க அல்குர்ஆன்: 17:32, 2:84, 25:68, 5:32, 4:92-93,)

கொலையில் நல்ல கொலை, கெட்ட கொலை, கருணைக் கொலை என்றெல்லாம் இஸ்லாம் பார்ப்பதில்லை. மூன்றே மூன்று காரணங்களுக்காக மட்டுமே ஒரு மனிதனின் உயிர் கொல்லப் படுவதை இஸ்லாம் அனுமதிக்கின்றது. இவையல்லாத மற்றெல்லா கொலைகளுமே குற்றவியல் தண்டனைக்குறிய குற்றம் என இஸ்லாம் இயம்புகின்றது.

இஸ்லாமிய உலகில் முஸ்லிம்களால் சில விரும்பத்தகாத செயல்களும் அரங்கேறி இருப்பதை இஸ்லாமிய வரலாறு பதிவு செய்து வைத்திருக்கின்றது. அதில் ஒன்று தான் உஸ்மான் (ரலி) அவர்கள் வீட்டோடு வைத்து முற்றுகையிடப்பட்டு கொல்லப்பட்டது.

முற்றுகையாளர்கள் உஸ்மான் (ரலி) அவர்களின் வீட்டைச் சுற்றி வளைத்து முற்றிலுமாக தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த அந்த சமயத்தில் உஸ்மான் (ரலி) அவர்கள் முற்றுகையாளர்களை நோக்கி “நீங்கள் அறிந்திருக்க வில்லையா? நிச்சயமாக! அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் “முஸ்லிமான ஒரு மனிதன் இஸ்லாமானதற்குப் பின்னால் மதம் மறிப்போகும் போதும், திருமணம் மாகாத நிலையில் விபச்சாரம் செய்கிற போதும், அநியாயமாக ஓர் உயிரை கொலை செய்கிற போதும் தவிர, இந்த மூன்று காரணங்களுக்காகவே தவிர கொலை செய்யப்படக் கூடாது” என்று சொல்லியிருப்பதை நீங்கள் அறிந்திருக்கவில்லையா? என்று கூறிவிட்டு…

அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் ஜாஹிலிய்யாவிலும் சரி, இஸ்லாத்திற்கு வந்த பிறகும் சரி ஒரு போதும் விபச்சாரம் செய்தது கிடையாது.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் நான் வாக்குப் பிரமாணம் செய்து கொடுத்ததிலிருந்து மதம் மாறிப்போகவும் இல்லை.

நான் எந்த ஒரு ஆத்மாவையும் அநியாயமாகக் கொலை செய்ததும் கிடையாது.

சொல்லுங்கள்! எதற்காக என்னை கொல்ல வேண்டும் என்பதில் இவ்வளவு ஆர்வமாக இருக்கின்றீர்கள்!””

(நூல்: திர்மிதீ, பாபு மா ஜாஅ லா யஹில்லு தமு இம்ரயிம் முஸ்லிமின் இல்லா பி இஹ்தா சலாஸின், ஹதீஸ் எண்: 2158)

எப்போதுமே கிளர்ச்சியாளர்கள் எதிரில் நிற்பவர்கள் யார் என்பதையோ, அவர்கள் சொல்வதில் எவ்வளவு நியாயம் உள்ளது என்றோ, ஒரு போதும் சிந்திப்பதில்லை. அங்கேயும் அப்படித்தான் இறுதியில் உஸ்மான் (ரலி) அவர்களை மாபாதகர்கள் குர்ஆன் ஓதிக் கொண்டிருக்கின்ற நிலையில் கொலை செய்து விட்டனர்.

ஆக ஒரு மனிதனுக்கு தன் உயிரை மாய்த்துக் கொள்வதற்கோ, சிரமமும், கஷ்டமும் படுகின்றார் என்பதற்காக கொலை செய்து விடுவதற்கோ அணுவளவு கூட அனுமதியோ அதிகாரமோ கிடையாது என ஆணித்தரமாக இஸ்லாம் கூறுகின்றது.

அல்லாஹ் வழங்குகின்ற அனைத்து நிலைகளையும் பொருந்திப் போவதும், பொறுமையை மேற்கொள்வதும் தான் ஓர் இறை நம்பிக்கையாளனின் உயரிய பண்பியலாக இஸ்லாம் வரையறுத்து தந்துள்ளது.

எனவே, மனித சமுதாயத்தின் அனைத்து துறைகளிலும் எழுகின்ற எல்லாவிதமான பிரச்சனைகளுக்கும், இறை மார்க்கமான  இஸ்லாமிய மார்க்கம் மாத்திரமே மிகச் சிறந்த தீர்வுகளை வழங்கி, மனித சமுதாயத்தின் தேடலுக்கான விடையை தந்து கொண்டிருக்கின்றது என்கிற பேருண்மையை மனதினில் நிறுத்துவோம்.

மனிதனுக்கும், இந்த மண்ணுக்கும் ஏற்ற மார்க்கம் இஸ்லாம் மட்டும் தான் என்பதை உலகிற்கு உணர்த்துவோம்!

அல்லாஹ் நம் அனைவருக்கும் விளக்கத்தை தருவானாக!

                  ஆமீன்!! வஸ்ஸலாம்!!!