Tuesday, 4 November 2025

அழிவில் ஆழ்த்தக்கூடிய மூன்று இழி குணங்கள்!!!

 

அழிவில் ஆழ்த்தக்கூடிய மூன்று இழி குணங்கள்!!!



உலகில் மனிதர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற நாம் செய்யும் செயல்களை மிகவும் கவனமாக செய்ய கடமைப் பட்டுள்ளோம்.

நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் மிகச் சரியானதாக இருக்கிறதா? அல்லது தவறான, பாவமான செயலாக இருக்கிறதா? என சீர் தூக்கிப் பார்த்து செய்ய வேண்டும்.

ஏனெனில், அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அல்குர்ஆனில் சிலர்கள் இந்த உலகில் செய்து வந்த செயல்கள் குறித்து விமர்சனம் செய்யும் போது அவர்கள் செய்த பல செயல்கள் தவறானதும் பாவமானதுமாகும் ஆனால், அவர்களோ அதை நல்ல செயல்களாகவே எண்ணி செய்தார்கள் என்று விமர்சிப்பதோடு அவர்களின் நிலையை இறைவனை நிராகரிப்போர்களின் செயல்களோடு இணைத்துப் பேசுகின்றான்.

قُلْ هَلْ نُنَبِّئُكُم بِٱلْأَخْسَرِينَ أَعْمَٰلًا

"(தம்) செயல்களில் மிகப் பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?" என்று (நபியே!) நீர் கேட்பீராக.

 

ٱلَّذِينَ ضَلَّ سَعْيُهُمْ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا وَهُمْ يَحْسَبُونَ أَنَّهُمْ يُحْسِنُونَ صُنْعًا

யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான். ( அல்குர்ஆன்: 18: 103, 104 )

எனவே, மனிதனை மாபெரும் அழிவில் ஆழ்த்தக் கூடிய செயல்களைச் செய்வதில் இருந்து மனித சமூகம் விழிப்புணர்வுடன் செயல் பட வேண்டும்.

இதையே வள்ளுவன் இப்படிக் கூறுகிறான்:-

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்

ஊதியமும் சூழ்ந்து செயல்.   (குறள்: 461) 

எந்த அளவுக்கு நன்மை கிடைக்கும் அல்லது தீமை ஏற்படும் என்று விளைவுகளைக் கணக்குப் பார்த்த பிறதே ஒரு செயலில் இறங்க வேண்டும் மு. கருணாநிதி

மனிதனை ஈடேற்றம் அடைய வைக்கும் காரியங்களை அடையாளப்படுத்திய மாநபி அவர்கள், மனிதன் செய்யும் பாவங்களுக்கு பரிகாரமாய் அமையும் அமல்களை வரிசை படுத்திய வள்ளல் நபி அவர்கள், மனிதனுக்கு மறுமையில் அந்தஸ்துகளை அதிகரிக்கும் பண்பாடுகளை பட்டியலிட்ட பாச நபி அவர்கள், அதன் வரிசையில் மனிதனை அழிவில் ஆழ்த்தக் கூடிய பாவமான தீய குணங்களையும் எச்சரிக்கை செய்தார்கள்.

தப்ரானீ, பைஹகீ, பஸ்ஸார் போன்ற நபிமொழி தொகுப்புகளில் பல்வேறு அறிவிப்பாளர்கள் ஊடாக பதிவு செய்யப்பட்டிருக்கும் நீண்ட ஹதீஸின் ஒரு பகுதியாக பின் வரும் எச்சரிக்கையை இந்த உம்மத்தின் ஈமானிய மக்களுக்கு வழங்கியுள்ளதை பார்க்க முடிகின்றது.

 

عَنْ عبدالله بن عمر عَنِ النَّبِيِّ ﷺ اَنَّهُ قَالَ: وَاَمَّا الْمُهْلِكَاتُ: فَشُحٌّ مُطَاعٌ، وَهَوًي مُتَّبَعٌ، وَاِعْجَابُ الْمَرْءِ بِنَفْسِهِ. ورواه الطبراني.

வழிபடக்கூடிய கருமித்தனம், பின்பற்றப்படக்கூடிய மனோஇச்சை, தன்னைத்தானே சிறந்தவனாகக் கருதுதல் ஆகிய மூன்று காரியங்களும் மனிதனை அழிவில் ஆழ்த்தக் கூடியவையாகும்என நபி அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் ரலி அவர்கள் அறிவித்தார்கள்.  ( நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி, நூல்:  தப்ரானீ, ஸஹீஹுல் ஜாமிஉ )

1) முதல் தீய குணம்:-

 عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ رضي الله عنهما أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «اتَّقُوا الظُّلْمَ، فَإِنَّ الظُّلْمَ ظُلُمَاتٌ يَوْمَ الْقِيَامَةِ، وَاتَّقُوا الشُّحَّ، فَإِنَّ الشُّحَّ أَهْلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ، حَمَلَهُمْ عَلَى أَنْ سَفَكُوا دِمَاءَهُمْ وَاسْتَحَلُّوا مَحَارِمَهُمْ».  صحيح مسلم

கஞ்த்தனத்திலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள். ஏனெனில், கஞ்சத்தனமானது திண்ணமாக, உங்களுக்கு முன்னிருந்தவர்களை அழித்தது. இரத்தங்களை பூமியில் ஓட்டுவதற்கும் இறைவனால் அவர்களுக்குத் தடை செய்யப்பட்டவற்றை அனுமதிக்கப்பட்டவையாக மாற்றிக் கொள்வதற்கும் அவர்களைத் தூண்டியது" என நபி அவர்கள் கூறினார்கள் என்று ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். ( நூல்: முஸ்லிம் )

وعن أبي سعيد الخدري رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ( خصلتان لا يجتمعان في مؤمنٍ: البخل وسوء الخلق ) أخرجه الترمذي 

கஞ்சத்தனமும் தீய பண்பும் ஓர் இறைநம்பிக்கையாளரிடம் ஒருசேர இடம் பெறக்கூடாத இரு பண்புகளாகும்" என நபி அவர்கள் கூறியதாக அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். ( நூல்:- திர்மிதீ )

ஒரு மனிதனிடம் இருந்து வெளிப்படும் கஞ்சத்தனம் என்பது பல்வேறு வகைகளாக உள்ளது.

சிலர் தனக்கு அவசியமானதில் கூட கஞ்சத்தனம் செய்வார்கள். சிலர் குடும்பத்தினருக்கு செலவு செய்வதில் கஞ்சத்தனம் செய்வார்கள். சிலர் மார்க்கப் பணிகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யவும் கஞ்சத்தனம் செய்வார்கள். சிலர் ஜகாத் கொடுக்கமால் கஞ்சத்தனம் செய்வார்கள். எந்த வகையான கஞ்சத்தனமாக இருந்தாலும் அது சம்பந்தப்பட்ட மனிதனை பேரழிவில் ஆழ்த்திவிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

  وَالَّذِيْنَ اِذَاۤ اَنْفَقُوْا لَمْ يُسْرِفُوْا وَلَمْ يَقْتُرُوْا وَكَانَ بَيْنَ ذٰلِكَ قَوَامًا‏ 

அவர்கள் செலவிடும்போது விரயம் செய்ய மாட்டார்கள். கஞ்சத்தனமும் செய்ய மாட்டார்கள். அதற்கு இடைப்பட்ட நிலையாகவே அது இருக்கும். ( அல்குர்ஆன்: 25: 67 )

 

وَلَا تَجْعَلْ يَدَكَ مَغْلُولَةً إِلَىٰ عُنُقِكَ وَلَا تَبْسُطْهَا كُلَّ ٱلْبَسْطِ فَتَقْعُدَ مَلُومًۭا مَّحْسُورًا

(கஞ்சனைப் போல் எதுவும் வழங்காது) உம் கையை உம் கழுத்தில் கட்டப்பட்டதாக்கிக் கொள்ளாதீர்; அன்றியும், (அனைத்தையும் செலவழித்து உம் கையை) ஒரே விரிப்பாக விரித்து விடாதீர்; அதனால் நீர் நிந்திக்கப்பட்டவராகவும், (கையில் எதுவுமில்லாது) துக்கப்பட்டவராகவும் அமைந்து விடுவீர். ( அல்குர்ஆன்: 17: 29 )

1) தனக்கு அவசியமானதில் கஞ்சத்தனம்...

. عن أبي الأحوص أن أباه أتى النبي ﷺ وهو أشعث سيئ الهيئة فقال له رسول الله ﷺ: أما لك مال؟ قال: من كل المال قد آتاني الله

، فقال

فإن الله إذا أنعم على عبد نعمة أحب أن تُرى عليه أخرجه أحمد والنسائي وإسناده قوي

அபுல் அஹ்வஸ் (ரலி) அவர்கள் தனது தந்தை கூறியதாக கூறுகிறார்கள் : நான் நபி அவர்களிடம் சென்றேன். அப்பொழுது நான் பழைய ஆடை அணிந்திருந்தேன். அதைக் கண்ட நபி அவர்கள் உமக்கு வசதி உள்ளதா? என்றார்கள். அதற்கு நான் ஆம்! இறைவன் எனக்களித்த ஒட்டகங்கள், அடிமைகள், ஆடுகளிலிருந்தும் எனக்கு வசதி உள்ளது" என்று கூறினேன். அதற்கு நபி அவர்கள் "உமக்கு இறைவன் கொடுத்த வசதியை (நிஃமத்தை) உன் மீது பார்க்கப்பட வேண்டும்" என்று கூறினார்கள்.   ( நூல் : முஸ்னத் அஹ்மத் )

2) குடும்பத்திற்கு செலவு செய்வதில் கஞ்சத்தனம்...

عَنْ ثَوْبَانَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:-«أَفْضَلُ دِينَارٍ يُنْفِقُهُ الرَّجُلُ، دِينَارٌ يُنْفِقُهُ عَلَى عِيَالِهِ، وَدِينَارٌ يُنْفِقُهُ الرَّجُلُ عَلَى دَابَّتِهِ فِي سَبِيلِ اللهِ، وَدِينَارٌ يُنْفِقُهُ عَلَى أَصْحَابِهِ فِي سَبِيلِ اللهِ»  [رواه مسلم] -

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்: "ஒரு மனிதர் தம் குடும்பத் தாருக்காகச் செலவிடுகின்ற ஒரு பொற்காசும் (தீனார்), அல்லாஹ்வின் பாதையில் தமது வாகனத்திற்காகச் செலவிடுகின்ற ஒரு பொற்காசும், அல்லாஹ்வின் பாதையில் தம் நண்பர்களுக்காகச் செலவிடுகின்ற ஒரு பொற்காசுமே அவர் செலவிடுகின்ற பொற்காசுகளிலேயே சிறந்ததாகும்.

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி), ( நூல்: முஸ்லிம் )

عَنْ عَائِشَةَ رضي الله عنها: " أَنَّ هِنْدَ بِنْتَ عُتْبَةَ، قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أَبَا سُفْيَانَ رَجُلٌ شَحِيحٌ، وَلَيْسَ يُعْطِينِي مَا يَكْفِينِي وَوَلَدِي، إِلَّا مَا أَخَذْتُ مِنْهُ وَهُوَ لاَ يَعْلَمُ، فَقَالَ: (خُذِي مَا يَكْفِيكِ وَوَلَدَكِ، بِالْمَعْرُوفِ) رواه البخاري (5364)، ومسلم (1714).

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: (ஒருமுறை) ஹின்த் பின்த் உத்பா (ரலி) அவர்கள் நபி அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! (என் கணவர்) அபூசுப்யான் கருமியான மனிதராக இருக்கின்றார். எனக்கும், என் குழந்தைக்கும் செலவுக்கு போதிய பணத்தை அவர் தருவதில்லை. நான் அவரிடமிருந்து அவருக்கு தெரியாமல் எடுத்துக் கொண்டதைத்தவிர (போதுமான பணத்தை அவர் தர மாட்டார்) என்று கூறினார். அதற்கு அண்ணலார் "உனக்கும், உன் குழந்தைக்கும் போதுமானதை நியாயமான அளவுக்கு நீ எடுத்துக் கொள்!" என்று கூறினார்கள்.   ( நூல்: புகாரி )

3) அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வதில் கஞ்சத்தனம்...

وَلَا يَحْسَبَنَّ ٱلَّذِينَ يَبْخَلُونَ بِمَآ ءَاتَىٰهُمُ ٱللَّهُ مِن فَضْلِهِ هُوَ خَيْرًۭا لَّهُم بَلْ هُوَ شَرٌّۭ لَّهُمْ سَيُطَوَّقُونَ مَا بَخِلُوا۟ بِه يَوْمَ ٱلْقِيَٰمَةِ وَلِلَّهِ مِيرَٰثُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌۭ

அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் யார் கஞ்சத்தனம் செய்கிறார்களோ அது தமக்கு நல்லது என்று (அவர்கள்) நிச்சயமாக எண்ண வேண்டாம் - அவ்வாறன்று! அது அவர்களுக்குத் தீங்குதான்;. அவர்கள் கஞ்சத்தனத்தால் சேர்த்து வைத்த (பொருட்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக போடப்படும்;. வானங்கள், பூமி ஆகியவற்றில் (இருக்கும் அனைத்துக்கும்) அனந்தர பாத்தியதை அல்லாஹ்வுக்கே உரியதாகும். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் அறிகிறான். ( அல்குர்ஆன்: 3: 180 )

قال العلاّمة المفسّر عبدالرحمن بن ناصر السعدي رحمه الله تعالى:- « أي: ولا يظنّ الّذين يبخلون، أي: يمنعون ما عندهم ممّا آتاهم الله من فضله من المال والجاه والعلم، وغير ذلك ممّا منحهم الله، وأحسن إليهم به، وأمرهم ببذل ما لا يضرّهم منه لعباده فبخلوا بذلك، وأمسكوه، وضنوا به على عباد الله، وظنّوا أنه خير لهم، بل هو شرّ لّهم في دينهم ودنياهم، وعاجلهم وآجلهم.

« سيطوّقون ما بخلوا به يوم القيامة »: أي: يجعل ما بخلوا به طوقا في أعناقهم، يعذّبون به كما ورد في الحديث الصحيح: *« إن البخيل يمثّل له ماله يوم القيامة شجاعا أقرع، له زبيبتان، يأخذ بلهزمتيه يقول: أنا مالك، أنا كنزك »*، وتلا رسول الله صلّى الله عليه وسلم مصداق ذلك هذه الآية. فهؤلاء حسبوا أن بخلهم نافعهم، ومجد عليهم، فانقلب عليهم الأمر وصار من أعظم مضارّهم وسبب عقابهم ». [ المصدر: ' تيسير الكريم الرحمن في تفسير كلام المنّان' للسّعدي، ص - ١٤١ ]

அல்குர்ஆன் விரிவுரையாளர் அல்லாமா அப்துர்ரஹ்மான் இப்னு நாஸிர் அஸ்ஸஃதீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:- அல்லாஹ்  வழங்கியிருக்கும் சொத்து செல்வம், பட்டம் பதவி, கல்வி ஆகியவற்றையும், அவன் வழங்கிய,  உபகாரமாகக் கொடுத்த ஏனையவற்றையும்   (நல்வழியில் செலவளிக்காது) தம்மிடம் தடுத்து வைத்துக்கொண்டு கஞ்சத்தனம் செய்வோர் இதை தமக்கு நல்லது என எண்ணிக்கொள்ள வேண்டாம் என்று அல்லாஹ் இங்கு குறிப்பிடுகிறான். மேலும், தான் அவர்களுக்கு வழங்கியதில் தன் அடியார்களுக்குத் தீங்கு ஏற்படாத வண்ணம் கொடுத்துதவுமாறும் அவர்களுக்கு அவன் ஏவுகிறான். ஆனால், அவர்களோ இதைக் கொண்டு கஞ்சத்தனப்பட்டு விட்டார்கள்; கொடுக்காமல் அதைப் பிடித்து வைத்துக்கொண்டார்கள்; இதன்மூலம் அல்லாஹ்வின் அடியார்களிடம் கஞ்சத்தனம் காட்டினார்கள்; இப்படியெல்லாம் செய்துவிட்டு தமக்கு இது நல்லது என்றும் எண்ணிக்கொண்டார்கள்.

எனினும் இது அவர்களுக்கு அவர்களுடைய மார்க்கத்திலும், அவர்களுடைய உலக விவகாரங்களிலும், அவர்களுடைய இம்மை - மறுமை விடயத்திலும் தீங்காகவே இருக்கிறது. "எதை அவர்கள் கஞ்சத்தனம் செய்கிறார்களோ அவை அவர்களுக்கு மறுமை நாளில் கழுத்தில் வளையங்களாக மாட்டப்படும்அதாவது, (நல்வழியில் செலவழிக்காமல்) எதை அவர்கள் கஞ்சத்தனம் காட்டிார்களோ அது வளையமாக அவர்களின் கழுத்துகளில் மாட்டப்பட்டு அதைக்கொண்டு அவர்கள் வேதனை செய்யப்படுவார்கள். ஆதாரபூர்வமான நபிமொழியில் இவ்வாறு வந்திருக்கிறது: *கஞ்சனின் சொத்து செல்வம் மறுமை நாளில் வழுக்கைத் தலைப் பாம்பின் உருவமாக மாற்றப்படும். அதன் கண்கள் இரண்டிற்கும் மேலால் பார்க்கப் பயங்கரமான மாதிரி இரு கறுப்பு நிற அடையாளங்கள் இருக்கும். தனது இரு கடவாய்களாலும் அவனை அது பிடித்துக்கொண்டு, "நான்தான் உனது சொத்து செல்வம்; நான்தான் உனது புதையல்!' என்று கூறிக்கொண்டிருக்கும்"  இதை உண்மைப்படுத்தும் முகமாக மேலே உள்ள (03:180) வசனத்தை நபி அவர்கள் ஓதிக்காட்டினார்கள்.

தமது கஞ்சத்தனம் தமக்குப் பயனளிக்கும் என்றும், தமக்கு அது புகழாக இருக்கும் என்றும் அவர்கள் எண்ணிக்கொண்டார்கள். ஆனால், விடயம் அவர்கள் மீது தலைகீழாக மாறியது. அத்தோடு அது அவர்களுக்கு மிகப்பெரும் தீங்காகவும், அவர்களின் தண்டனைக்குரிய காரணியாகவும் மாறியது”. ( நூல்: தய்சீருல் கரீமிர் ரஹ்மான்,  லிஇமாம் அஸ்ஸஃதீ (ரஹ்), பக்கம்:141 )

4) ஜகாத் வழங்குவதில் கஞ்சத்தனம்...

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّ كَثِيرًا مِّنَ الْأَحْبَارِ وَالرُّهْبَانِ لَيَأْكُلُونَ أَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ وَيَصُدُّونَ عَن سَبِيلِ اللَّهِ ۗ وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا يُنفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ

இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக! ( அல்குர்ஆன்: 9: 34 )

கஞ்சத்தனம் செய்வதால் யாருக்கு இழப்பு?

هَا أَنتُمْ هَٰؤُلَاءِ تُدْعَوْنَ لِتُنفِقُوا فِي سَبِيلِ اللَّهِ فَمِنكُم مَّن يَبْخَلُ وَمَن يَبْخَلْ فَإِنَّمَا يَبْخَلُ عَن نَّفْسِهِ وَاللَّهُ الْغَنِيُّ وَأَنتُمُ الْفُقَرَاءُ وَإِن تَتَوَلَّوْا يَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ ثُمَّ لَا يَكُونُوا أَمْثَالَكُم

அறிந்துகொள்க! அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுமாறு அழைக்கப்படும் கூட்டத்தினர் நீங்கள், ஆனால் உங்களில் கஞ்சத்தனம் உடையோரும் இருக்கிறார்கள். ஆனால் எவன் கஞ்சத்தனம் செய்கிறானோ, அவன் தன் ஆத்மாவுக்கே கஞ்சத்தனம் செய்கிறான் அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன் நீங்கள் தேவையுடையவர்களாக இருக்கின்றீர்கள். எனவே (சத்தியத்தை) நீங்கள் புறக்கணிப்பீர்களாயின், நீங்களல்லாத (வேறு ஒரு) சமூகத்தை அவன் பகரமாகக் கொண்டு வருவான் பின்னர், உங்களைப் போன்று அவர்கள் இருக்கமாட்டார்கள். ( அல்குர்ஆன்: 47: 38 )

عن أبي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عنْه قال:-  ضَرَبَ رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ مَثَلَ البَخِيلِ والْمُتَصَدِّقِ، كَمَثَلِ رَجُلَيْنِ عليهما جُنَّتانِ مِن حَدِيدٍ، قَدِ اضْطُرَّتْ أيْدِيهِما إلى ثُدِيِّهِما وتَراقِيهِما، فَجَعَلَ المُتَصَدِّقُ كُلَّما تَصَدَّقَ بصَدَقَةٍ انْبَسَطَتْ عنْه، حتَّى تُغَشِّيَ أنامِلَهُ وتَعْفُوَ أثَرَهُ، وجَعَلَ البَخِيلُ كُلَّما هَمَّ بصَدَقَةٍ قَلَصَتْ، وأَخَذَتْ كُلُّ حَلْقَةٍ مَكانَها. قالَ: فأنا رَأَيْتُ رَسولَ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ يقولُ: بإصْبَعِهِ في جَيْبِهِ فلوْ رَأَيْتَهُ يُوَسِّعُها ولا تَوَسَّعُ.

நபி   அவர்கள் கூறினார்கள்:- கஞ்சனுக்கும் தர்மம் செய்பவனுக்கும் உதாரணமாவது, மார்பிலிருந்து கழுத்துவரை இரும்பாலான அங்கிகளணிந்த இரண்டு மனிதர்களைப் போன்றதாகும். தர்மம் செய்பவர், தர்மம் செய்யும்பொழுதெல்லாம் அவரின் அங்கி விரிந்து, விரல்களை மறைத்துக் கால்களை மூடித் தரையில் இழுபடும் அளவுக்கு விரிவடையும். கஞ்சன் செலவு செய்யக்கூடாது என்று எண்ணும்போதெல்லாம் அவ்வங்கியின் ஒவ்வொரு வளையமும் அதற்குரிய இடத்தை நெருக்கும். அவன் அதை விரிக்க முயன்றாலும் அது விரியாது.என அபூ ஹுரைரா (ரலி)அவர்கள் அறிவித்தார்கள்.( நூல் புகாரி )

2) இரண்டாவது தீய குணம்...

 وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَىٰ (40) فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَىٰ

எவன் தன் இறைவன் முன் நிற்பதை அஞ்சி மனதையும் மனோ இச்சைகளை விட்டும் தன்னை விலக்கிக் கொண்டானோ, நிச்சயமாக அவனுக்குச் சுவர்க்கம்தான் தங்குமிடமாகும். ( அல்குர்ஆன் 79: 40, 41 )

عَنْ اَبِيْ بَرْزَةَؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: اِنَّمَا اَخْشَي عَلَيْكُمْ شَهَوَاتِ الْغَيِّ فِيْ بُطُوْنِكُمْ وَفُرُوْجِكُمْ وَمُضِلاَّتِ الْهَوَي. رواه احمد

உங்கள் வயிறுகள், மர்மஸ்தானங்கள் சம்பந்தப்பட்ட (ஹராமைச் சாப்பிடுதல், விபச்சாரம் போன்ற) மனோ இச்சைகளில் நீங்கள் மூழ்கிவிடுவதையும், (உங்களை சத்தியப் பாதையிலிருந்து வழி தவறி) வழிகேட்டின் பக்கம் இழுத்துச் செல்லும் மனோ இச்சைகளில் நீங்கள் மூழ்கிவிடுவதையும் நான் மிகவும் அஞ்சுகிறேன்என அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறியதாக அபூபர்ஸா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( நூல்: முஸ்னத் அஹ்மத் )

عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍؓ عَنِ النَّبِيِّؐ قَالَ: اَلْكَيِّسُ مَنْ دَانَ نَفْسَهُ وَعَمِلَ لِمَا بَعْدَ الْمَوْتِ، وَالْعَاجِزُ مَنْ أَتْبَعَ نَفْسَهُ هَوَاهَا وَتَمَنَّي عَلَي اللّٰهِ. رواه الترمذي

எவர் தன்னைக் கொண்டு மரணத்திற்குப் பிறகு உள்ள வாழ்விற்காக அமல் செய்கிறாரோ அவர் தான் புத்திசாலி எவர் தன் மனோ இச்சைப்படி வாழ்ந்து, (அல்லாஹ் என்னை மன்னித்து விடுவான் என்று) அல்லாஹ்வின் மீது மேலெண்ணம் கொண்டவராக வாழ்கிறாரோ அவர் அறிவற்றவர் ஆவார்என அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறியதாக ஷத்தாத் இப்னு அவ்ஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் ( நூல்: இப்னுமாஜா ) 

மனோ இச்சையில் கவனம் வேண்டும்...

அற்பமான சிறிய விஷயங்களின் ஊடாக கூட நாம் மனோ இச்சையின் கட்டுப்பாட்டில் வந்து விடுவோம். இறுதியில் அதுக்கு கட்டுப்பட்டு நடந்து வாழ்வின் உயர்ந்த இலட்சியங்களைக் கூட எட்ட முடியாத நிலைக்கு வந்து விடுவோம். 

அல்லாஹ்வின் மார்க்கத்தை மேலோங்கச் செய்வதற்காக நடைபெற்ற ஒரு யுத்தத்தில் மாநபி அவர்களுடன் பங்கேற்ற ஒரு நபித்தோழர் அற்பமான ஒரு விஷயத்தின் ஊடாக மனோ இச்சையினால் கவரப்பட்டு இறுதியில் ஒரு முஸ்லிமின் உயரிய இலக்கான சொர்க்கப் பேற்றினையே இழக்கும் அபாயம் ஏற்பட்டதாக பின் வரும் வரலாற்று நிகழ்வு சான்றளிக்கின்றது.

خَرَجْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى خَيْبَرَ، فَفَتَحَ اللهُ عَلَيْنَا فَلَمْ نَغْنَمْ ذَهَبًا وَلَا وَرِقًا، غَنِمْنَا الْمَتَاعَ وَالطَّعَامَ وَالثِّيَابَ، ثُمَّ انْطَلَقْنَا إِلَى الْوَادِي، وَمَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَبْدٌ لَهُ، وَهَبَهُ لَهُ رَجُلٌ مِنْ جُذَامٍ يُدْعَى رِفَاعَةَ بْنَ زَيْدٍ مِنْ بَنِي الضُّبَيْبِ، فَلَمَّا نَزَلْنَا الْوَادِيَ، قَامَ عَبْدُ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَحُلُّ رَحْلَهُ، فَرُمِيَ بِسَهْمٍ، فَكَانَ فِيهِ حَتْفُهُ، فَقُلْنَا: هَنِيئًا لَهُ الشَّهَادَةُ يَا رَسُولَ اللهِ، قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَلَّا وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ، إِنَّ الشِّمْلَةَ لَتَلْتَهِبُ عَلَيْهِ نَارًا أَخَذَهَا مِنَ الْغَنَائِمِ يَوْمَ خَيْبَرَ لَمْ تُصِبْهَا الْمَقَاسِمُ»، قَالَ: فَفَزِعَ النَّاسُ، فَجَاءَ رَجُلٌ بِشِرَاكٍ أَوْ شِرَاكَيْنِ فَقَالَ: يَا رَسُولَ اللهِ، أَصَبْتُ يَوْمَ خَيْبَرَ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «شِرَاكٌ مِنْ نَارٍ أَوْ شِرَاكَانِ مِنْ نَارٍ»

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: "நாங்கள் (வாதில் குரா) பள்ளத்தாக்கில் இறங்கியபோது அல்லாஹ்வின் தூதர் அவர்களின் அந்த அடிமை எழுந்து அவர்களது ஒட்டகத்திலிருந்து இறக்கிக் கொண்டிருந்தார். அப்போது (எங்கிருந்தோ வந்த) ஓர் அம்பால் அவர் தாக்கப்பட்டார். அதுவே அவரது இறப்புக்குக் காரணமாக அமைந்தது. அப்போது நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவருக்கு இறைவழியில் உயிர்த் தியாகம் செய்யும் பேறு கிடைத்துவிட்டது" என்று வாழ்த்து கூறினோம்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் அவர்கள், “இல்லை, என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! கைபர் போரில் கிடைத்த போர்ச் செல்வங்கள் பங்கிடப்படும் முன்பே அவர் எடுத்துக்கொண்ட போர்வை அவருக்கு நரக நெருப்பாக எரிந்துகொண்டிருக்கிறது’’ என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) மக்கள் திடுக்குற்றனர்.

அப்போது ஒரு மனிதர் ஒரு செருப்பு வாரைஅல்லது இரண்டு செருப்பு வார்களைக் கொண்டு வந்து “(இதை) நான் கைபர் போரின்போது எடுத்துக் கொண்டேன்’’ என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் அவர்கள், “(இது சாதாரண செருப்பு வார் அன்று; இதைத் திருப்பித் தராமல் இருந்திருந்தால் இதுவே) நரகத்தின் செருப்பு வார்அல்லது நரகத்தின் இரு செருப்பு வார்கள்ஆகும்’’ என்று கூறினார்கள். ( நூல்: புகாரி )

மனோ இச்சை மிகவும் கொடியது...

அல்லாஹ்வின் தூதர் அவர்களை அரணாக இருந்து மக்காவின் எதிரிகளிடமிருந்து காத்தவர்களில் முதன்மையானவர்கள் அபூதாலிப் அவர்கள்.

அபூதாலிப் அவர்கள் தனது பாரம்பரியம், தனது செல்வாக்கு, தனது அறிவாற்றல், தனது அதிகாரம் என அத்தனையையும் கொண்டு அல்லாஹ்வின் தூதர் அவர்களை பாதுகாத்து இந்த தீன் மக்காவில் வளர காரணமாக இருந்தார்கள்.

எனினும், அவர்களுக்கு சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையேயான வேற்றுமையை விளங்கிக் கொள்ள அல்லாஹ் ஒரு வாய்ப்பை வழங்குகிறான். ஆனால், மனோ இச்சையின் கட்டுப்பாட்டில் தன்னை முழுமையாக ஒப்படைத்து விட்டதால் விளங்கிக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தும் அதை தவற விட்ட மனிதர்களில் ஒருவராகிப் போனார் அபூதாலிப்.

أَنَّهُ لَمَّا حَضَرَتْ أَبَا طَالِبٍ الوَفَاةُ جَاءَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَوَجَدَ عِنْدَهُ أَبَا جَهْلِ بْنَ هِشَامٍ، وَعَبْدَ اللَّهِ بْنَ أَبِي أُمَيَّةَ بْنِ المُغِيرَةِ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَبِي طَالِبٍ: ” يَا عَمِّ، قُلْ: لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، كَلِمَةً أَشْهَدُ لَكَ بِهَا عِنْدَ اللَّهِ ” فَقَالَ أَبُو جَهْلٍ، وَعَبْدُ اللَّهِ بْنُ أَبِي أُمَيَّةَ: يَا أَبَا طَالِبٍ أَتَرْغَبُ عَنْ مِلَّةِ عَبْدِ المُطَّلِبِ؟ فَلَمْ يَزَلْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْرِضُهَا عَلَيْهِ، وَيَعُودَانِ بِتِلْكَ المَقَالَةِ حَتَّى قَالَ أَبُو طَالِبٍ آخِرَ مَا كَلَّمَهُمْ: هُوَ عَلَى مِلَّةِ عَبْدِ المُطَّلِبِ، وَأَبَى أَنْ يَقُولَ: لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمَا وَاللَّهِ لَأَسْتَغْفِرَنَّ لَكَ مَا لَمْ أُنْهَ عَنْكَ» فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى فِيهِ: {مَا كَانَ لِلنَّبِيِّ} [التوبة: 113] الآيَةَ

முசய்யிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: "(நபியவர்களின் பெரிய தந்தை) அபூதாலிபுக்கு மரணம் நெருங்கியபோது நபி அவர்கள் அவரிடம் வந்தார்கள். அங்கு அபூஜஹ்ல் பின் ஹிஷாம், அப்துல்லாஹ் பின் அபீஉமய்யா ஆகிய இருவரும் இருப்பதைக் கண்டார்கள். நபி அவர்கள் அபூதாலிபிடம், “எனது பெரிய தந்தையே! லாயிலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) எனச் சொல்லி விடுங்கள்! அதன் மூலம் நான் அல்லாஹ்விடம் உங்களுக்காகச் சாட்சியம் கூறுவேன்’’ எனக் கூறினார்கள்.

அப்போது அபூஜஹ்லும் அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவும், “அபூதாலிபே! அப்துல் முத்தலிபின் மார்க்கத்தைப் புறக்கணிக்கப் போகின்றீரா?’’ எனக் கேட்டனர். இவ்வாறு நபி அவர்கள் ஒருபுறமும் அவ்விருவரும் மறுபுறமுமாக அவரை வற்புறுத்திக் கொண்டிருக்கும்போது அபூதாலிப் கடைசியாக, “நான் அப்துல் முத்தலிபின் மார்க்கத்திலேயே (மரணிக்கின்றேன்)’’என்று கூறியதோடு லாஇலாஹ இல்லல்லாஹ்எனக் கூறவும் மறுத்துவிட்டார்.

அப்போது நபி அவர்கள், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் தடுக்கப்படும்வரை உங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருவேன்’’ என்று கூறினார்கள். அப்போது இணைவைப்பவர்களுக்கு பாவமன்னிப்புக் கோருவது நபிக்கும் ஈமான் கொண்டவர்களுக்கும் தகுதியானதன்று’’ எனும் (அல்குர்ஆன்: 9:13) ஆவது வசனத்தை அல்லாஹ் அருளினான். ( நூல்: புகாரி )

3) மூன்றாவது தீய குணம்....

புகழின் உச்சியில் இருந்த போதும் கூட தம்மை உயர்ந்தவராக மாநபி அவர்கள் கருதிய தில்லை.

أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ، فَكَلَّمَهُ، فَجَعَلَ تُرْعَدُ فَرَائِصُهُ، فَقَالَ لَهُ: «هَوِّنْ عَلَيْكَ، فَإِنِّي لَسْتُ بِمَلِكٍ، إِنَّمَا أَنَا ابْنُ امْرَأَةٍ تَأْكُلُ الْقَدِيدَ

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:  ஒரு மனிதர் முதன் முதலாக நபி அவர்களைச் சந்திக்க வந்தார். பொதுவாக மன்னர்கள் முன்னிலையில் நடுநடுங்கிக் கொண்டு தான் மக்கள் நிற்பார்கள். நபி அவர்களையும் அது போல் கருதிக்கொண்டு உடல் நடுங்கிட வந்தார். சாதாரணமாக இருப்பீராக! உலர்ந்த இறைச்சியைச் சாப்பிட்டு வந்த குரைஷி குலத்துப் பெண்ணுடைய மகன் தான் நான்என்று அவரிடம் கூறி அவரை சகஜ நிலைக்குக் கொண்டு வந்தார்கள்" நபி அவர்கள்.  ( நூல்: இப்னுமாஜா )

كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقْبِلُ وَمَا عَلَى الْأَرْضِ شَخْصٌ أَحَبَّ إِلَيْنَا مِنْهُ، فَمَا نَقُومُ لَهُ لِمَا نَعْلَمُ مِنْ كَرَاهِيَتِهِ لِذَلِكَ

உலகத்தில் நபி அவர்களை விட எங்களுக்கு விருப்பமான ஒருவரும் இருந்ததில்லை. ஆயினும் அவர்கள் எங்களை நோக்கி வரும் போது நாங்கள் அவர்களுக்காக எழ மாட்டோம். இதை அவர்கள் கடுமையாக வெறுப்பார்கள் என்பதே இதற்குக் காரணம். நபி அவர்களுக்கு பத்தாண்டுகள் பணிவிடை செய்த அனஸ் (ரலி) அவர்கள் இதை அறிவிக்கிறார். ( நூல்: அஹ்மத் )

புகழின் உச்சத்தில் இருந்த போதும் தங்களை உயர்வாக எண்ணிக் கொள்ளாத மேன்மக்கள்....

1) உமர் ரலி அவர்கள்...

قال عمر بن الخطاب رضي الله عنه لو نادى مناد من السماء : ياأيها الناس انكم داخلون الجنة كلكم إلا رجلا واحدا لخفت أن أكون أنا هو

(الكتاب:  التخويف من النار لإبن رجب صفحة:  ١٧)

உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: "வானத்திலிருந்து ஒரு அறிவிப்பாளர்  "மக்களே! நிச்சயமாக, நீங்கள் அனைவரும் சுவர்க்கம் செல்லக்கூடியவர்களாகயிருக்கும். ஒரே ஒரு மனிதரை தவிர!" என்று அறிவிப்பு செய்தால் அந்த ஒருவர் நானாக இருப்பேனோ?என்று நான் அஞ்சுகிறேன்". ( நூல்: அத் - தக்வீஃபு மினன் நார் லிஇமாமி இப்னு ரஜப் ஹம்பலி (ரஹ்)...)

عَنْ قَتَادَةَ ، قَالَ : خَرَجَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ مِنَ الْمَسْجِدِ ، وَمَعَهُ الْجَارُودُ الْعَبْدِيُّ ، فَإِذَا بِامْرَأَةٍ بَرِزَةٍ عَلَى ظَهْرِ الطَّرِيقِ ، فَسَلَّمَ عَلَيْهَا ، فَرَدَّتْ عَلَيْهِ السَّلَامَ ، وَقَالَتْ : إِيهًا يَا عُمَرُ ، عَهِدْتُكَ وَأَنْتَ تُسَمَّى عُمَيْرًا فِي سُوقِ عُكَاظٍ ، تَرْعَى الصِّبْيَانَ بِعَصَاكَ ، فَلَمْ تَذْهَبِ الأَيَّامُ ، حَتَّى سُمِّيتَ عُمَرًا ، ثُمَّ لَمْ تَذْهَبِ الأَيَّامُ حَتَّى سُمِّيتَ أَمِيرَ الْمُؤْمِنِينَ ، فَاتَّقِ اللَّهَ فِي الرَّعِيَّةِ ، وَاعْلَمْ أَنَّهُ مَنْ خَافَ الْوَعِيدَ قَرُبَ عَلَيْهِ الْبَعِيدُ ، وَمَنْ خَافَ الْمَوْتَ خَشِيَ الْفَوْتَ ، فَقَالَ الْجَارُودُ : أَكْثَرْتِ أَيَّتُهَا الْمَرْأَةُ عَلَى أَمِيرِ الْمُؤْمِنِينَ ، فَقَالَ عُمَرُ : دَعْهَا ، أَمَا تَعْرِفُهَا ؟ هَذِهِ خَوْلَةُ بِنْتُ حَكِيمٍ الَّتِي سَمِعَ اللَّهُ قَوْلَهَا مِنْ فَوْقِ سَبْعِ سَمَاوَاتٍ ، فَعُمَرُ أَحَقُّ أَنْ يَسْمَعَ لَهَا .

( الكتاب:  موطأ مالك)

ஒரு நாள் உமர் (ரலி) அவர்கள்  ஜாரூது (ரலி) என்ற நபித்தோழருடன்  கடைவீதிக்கு சென்றார்கள். அப்போது அந்த பாதையில் வயதான பெண்மணி ஒருவர் வந்து கொண்டிருந்தார். அவருக்கு உமர் (ரலி) அவர்கள் ஸலாம் கூறினார்கள். அந்த வயதான பெண்மணியும் பதில் கூறினார்கள். 

பின்னர்"உமரே நில்லுங்கள் நீங்கள் (மக்கத்து கடைவீதியான)  ஸூவ்க் உக்காழில் உமைர் அழைக்கப்பட்டபோதும் சரி, நீங்கள் சிறுவர்களுடன் மல்யுத்தம் செய்தபோதும் சரி,  (அந்த நாள் முதல்)  உம்மை நான் அறிவேன்.    (சில) காலங்கள் கூட செல்லவில்லை அதற்குள் உமர் என்று கேள்விப்பட்டேன். பின்பு சில காலங்களுக்குள் கலீபா என்று கேள்விப்படுகிறேன்.

நீங்கள் குடிமக்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அறிந்து கொள்ளுங்கள்! யார் மரணத்தை அஞ்சுகிறாரோ அவர் தான் (நல்ல அமலுக்கான) வாய்ப்பு தவறிப்போவதை அஞ்சுவார்"  என்று அந்த வயதான பெண்மணி கூறினார். இதைக்கேட்டு உமர் (ரலி) அவர்கள் அழுதுவிட்டார்கள்.

ஜாரூது (ரலி) அவர்கள்  அந்த வயதான பெண்மணியை பார்த்து "கலீபாவிடம்  துணிச்சலாக நடந்து இப்படி அழவைத்து விட்டீர்களே!"  என்று கூறினார்கள்.

அதற்கு உமர் (ரலி) அவர்கள் அந்த வயதான பெண்மணியை விட்டு விடும்படி சைக்கினை செய்தார்கள். 

ஜாரூது ( ரலி) அவர்கள்  பேச்சை நிறுத்தியதும் உமர் (ரலி) அவர்கள் அவர்களிடம் இந்த பெண்மணியைப் பற்றி அறிவீரா? என்று வினவ, அவர்கள் தெரியாது என்றார்கள்.

உமர் (ரலி) அவர்கள் " இந்த பெண்மணி ஃகவ்லா பின்த் ஹகீம் (ரலி) ஆவார்கள். இவர்கள் எத்தகைய பெண்மணி என்றால் இந்த பெண்மணியின் வார்த்தையை அல்லாஹ்வே செவிமடுத்துள்ளான்.  எனவே இந்த பெண்மணியின் வார்த்தையை செவிமடுக்க  உமர் தகுதியுள்ளவர்தான்" என்று கூறி பின்வரும் வசனத்தை ( அல்குர்ஆன்: 58: 1 ) சுட்டி காட்டினார்கள்:- "(நபியே!) எவள் தன் கணவனைப் பற்றி உம்மிடம் தர்க்கித்து, அல்லாஹ்விடமும் முறையிட்டுக் கொண்டாளோ, அவளுடைய வார்த்தையை நிச்சயமாக அல்லாஹ் செவியேற்றுக் கொண்டான் - மேலும், அல்லாஹ் உங்களிருவரின் வாக்கு வாதத்தையும் செவியேற்றான். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவன்; (எல்லாவற்றையும்) பார்ப்பவன். ( நூல்: தஃப்ஸீர் அல் குர்துபீ )

2) இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ரஹ் அவர்கள்...

قال يحيى بن معين: ما رأيت مثل أحمد بن حنبل؛ صحبناه خمسين سنة ما افتخر علينا بشيء مما كان فيه من الصلاح والخير، وكان رحمه الله يقول: نحن قوم مساكين!!

யஹ்யா இப்னு முயீன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: "அஹ்மத் இப்னு ஹன்பல் போன்ற ஒருவரை நான் கண்டதில்லை. ஐம்பது வருடங்கள் அவருடன் நாங்கள் பழகினோம். ஆனால் அவர் கொண்டிருந்த நல்லொழுக்கம் மற்றும் நன்மைகளில் எதனையும் வைத்து அவர் எங்களிடம் பெருமை பாராட்டவில்லை, மேலும் நாங்கள் எளிய மக்கள், என்று தன்னைப் பற்றி அடிக்கடி கூறி கொள்வார்கள்.

 وقد رأينا الإمام أحمد نزل إلى سوق بغداد، فاشترى حزمةً من الحطب، وجعلها على كتفه، فلما عرفه الناس، ترك أهل المتاجر متاجرهم، واهل الدكاكين دكاكينهم، وتوقف المارة في طرقهم، يسلمون عليه، ويقولون: نحمل عنك الحطب. فهز يده، واحمر وجهه، ودمعت عيناه. وقال: نحن قوم مساكين ، لولا ستر الله لافتضحنا! (حلية الأولياء:١٨١ / ٩ ).

ஒரு தடவை இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் பக்தாத் நகரச் சந்தைக்குச் சென்று, ஒரு விறகுக்கட்டை வாங்கித் தமது தோளில் சுமந்துகொண்டு வருவதைக் கண்டோம். அப்போது அவரைக் கண்ட வியாபாரிகள், அங்காடிகளில் இருந்தவர்கள், வீதிகளில் போய்க் கொண்டிருந்தவர்கள் என அனைவரும் தமது வேலைகளை விட்டுவிட்டு ஆங்காங்கே நின்றவாறு இமாம் அவர்களுக்கு சலாம் கூறி, விறகை நாங்கள் சுமக்கிறோம்' என்று முண்டியடித்துக் கொண்டு வந்தார்கள்.

ஆனால் இமாம் அவர்கள் தமது கையால் அவர்களைத் தடுத்து, முகம் சிவந்து, கண்கள் கலங்கி, கூறினார்கள்: 'நாங்கள் எளிய மக்கள். அல்லாஹ்வின் பாதுகாப்பு மட்டும் இல்லாவிட்டால், நாங்கள் அவமானப்பட்டிருப்போம், என்று கூறி விலகிச் சென்றார்கள். ( நூல்: ஹுல்யத்துல் அவ்லியா, பாகம்: 9, பக்கம்: 181 )

இமாம் அஹ்மத் அவர்களைப் புகழ வந்த ஒரு மனிதரிடம், இமாம் அவர்கள் கூறினார்கள்: "இந்தக் கூற்றினால் நான் உன்னை வெறுக்கிறேன் என்று அல்லாஹ்வுக்குச் சாட்சி கூறுகிறேன். என் மீதிருக்கும் பாவங்களையும் குற்றங்களையும் நீ அறிந்திருந்தால், என் தலையின் மீது மண்ணைத் தூவியிருப்பாய்."

قال المروذي : قال لي أحمد : قل لعبد الوهاب : أخمل ذكرك ، فإني أنا قد بليت بالشهرة ما أبالي أن لا يراني أحدٌ ولا أراه, وإن كنتُ لأشتهي

இமாம் அவர்கள் அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்களிடம் கூறினார்கள்: "நான் புகழை அறியாமல் இருந்திருக்கலாமே! மக்கா மலைப் பாதைகளில் ஒன்றில் நான் மறைந்திருக்கலாமே, மக்களுக்கு என்னைத் தெரியாமல் போயிருக்குமே என்பார்கள். ( நூல்: மனாகிபு இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ரஹ்.... )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவரையும் அழிவில் ஆழ்த்துகின்ற இந்த மூன்று தீய குணங்களில் இருந்து பாதுகாப்பானாக! ஆமீன்! ஆமீன்!ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!