Thursday 1 December 2016

மானுட வாழ்வியல் அமைத்த மகத்தான புரட்சியாளர் முஹம்மது {ஸல்} அவர்கள்!!!



மானுட வாழ்வியல் அமைத்த மகத்தான புரட்சியாளர் முஹம்மது {ஸல்} அவர்கள்!!!


Who is Muhammed? யார் இந்த முஹம்மத் {ஸல்}? The biggest question of the modern world. இது தான் இன்றைய நவீன உலகின் மிகப்பெரிய கேள்வியாகும்.

முழு உலக மனித சமூகமும் இதற்கான விடையைத் தேடிக் கொண்டிருக்கின்றது.

சிலர் நாவாலும், இன்னும் சிலர் எழுத்தாலும், இன்னும் சிலர் மனதாலும், இன்னும் சிலர் எண்ணத்தாலும் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இவர்கள் கேட்கும் கேள்விக்கான முழுமையான பதிலை கொடுக்க வேண்டியது CNN சேனலோ, BBC சேனலோ, Google மென்பொருள் தேடல் சாதனமோ அல்லவே!

முஸ்லிம் எனும் பெயரில், உம்மத்தே முஹம்மதிய்யா எனும் புகழாரத்தில் உலகின் நாலா பாகங்களிலும் உலவிக் கொண்டிருக்கும் நீங்களும் நானும் தானே!

எப்படிப் பதில் தரப்போகிறோம்? முஹம்மது {ஸல்} அவர்களை யார் என்று அறிமுகம் செய்யப்போகிறோம்?

நீங்களும், நானும் அறைகுறையாய் விளங்கி வைத்திருக்கிற முஹம்மது {ஸல்} அவர்களையா?

உலகின் வரலாற்று ஆசிரியர்களும், ஆய்வாளர்களும் அறிந்து வைத்திருக்கிற முஹம்மது {ஸல்} அவர்களையா?

அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களோடு வாழ்ந்த நபித்தோழர்கள், மேன்மக்களான தாபியீன்கள், மேதைகளான இமாம்கள், மேன்மை பொருந்திய தஃப்ஸீர் மற்றும் ஹதீஸ் விரிவுரையாளர்கள், ஆத்மீக ஞானிகளான இறை நேசர்கள், சூஃபியாக்கள், முன்னோர்களான ஆலிம் பெருமக்கள் ஆகியோர் அறிமுகப்படுத்திய முஹம்மது {ஸல்} அவர்களையா?

இவைகளில் எதன் துணை கொண்டு நவீன உலகின் முழு மனித சமூகம் முன் வைக்கும் கேள்விக்கு பதில் கூறப்போகிறோம்?

வாருங்கள்! வரலாற்றின் ஒளியில் அறிவைப் பெற்று, முஹம்மது {ஸல்} அவர்களைப் பற்றிய அறிமுகத்தை உலக அரங்கிற்கு தருவோம்!

ஆம்! அல்லாஹ்வும், மேன்மக்களான நல்லோர்களும் அறிமுகப்படுத்திய முறையில், உலக அறிஞர்களின், ஆய்வாளர்களின் கருத்துக்களின் ஊடாக, நம் எழுத்துக்களின், பேச்சின், பிரியத்தின், காதலின், செயல்பாடுகளின் வாயிலாக பதில் கூறுவோம்!

முஹம்மத் {ஸல்} அவர்களைப்பற்றிய தேடல் எங்கிருந்து துவங்கியது?...

ஓரியண்டலிஸ்ட் எனப்படும் கீழைத்தேசிய அறிஞர்கள் தான் முஹம்மது {ஸல்} அவர்களைப் பற்றிய தேடலுக்கு மிக முக்கிய காரணிகளாக இருக்கின்றார்கள் என்று “முஹம்மத் எ பயோகிராஃபி ஆஃப் ப்ராபட்” எனும் நூலை எழுதிய கன்னியாஸ்திரி கரேன் ஆம்ஸ்ட்ராங் அந்த நூலின் முன்னுரையில் பதிவு செய்திருக்கின்றார்.

2007 –ஆம் ஆண்டின் சர்வதேச அளவில் அதிகம் விற்பனையான, அதிகம் வாசிக்கப்பட்ட நூற்கள் இரண்டு 1. ஹாரிபார்ட்டர், 2. முஹம்மத் எ பயோகிராபி ஆஃப் ப்ராபட் ஆகும்.

மேலும், முஹம்மது {ஸல்} அவர்களைப் பற்றிய வரலாற்று நூற்களில் இந்த நூலுக்கு தான் முதலிடமும் கூட.

இவர் “முஹம்மத் ப்ராபட் ஃபார் அவ்ர் டைம்” என்ற மற்றொரு நூலையும் எழுதி இருக்கின்றார்.

இஸ்லாமிய விரோத மனப்பான்மை கொண்டவர்களில் மேற்கத்திய, ஐரோப்பிய, ஃபாஸிச சிந்தனையாளர்களை விட மிக மோசமானவர்கள் இந்த ஓரியண்டலிஸ்ட் எனப்படும் கீழைத்தேசிய அறிஞர்கள்.

முஹம்மத் {ஸல்} அவர்களை இவர்கள் தங்களின் எழுத்தால், சிந்தனையால், பேச்சால் அறிமுகப்படுத்திய விதங்கள் மிகவும் புதுமையானது.

ஆம்! ”முஹம்மத் என்பவர் அரபு நாட்டின் அரசியல் தலைவர், முஹம்மத் என்பவர் அரபு நாட்டின் சமயத்தலைவர்” என்ற இரட்டை அடைக் குறிப்புக்குள் கொண்டு வந்தனர்.

முஹம்மத் {ஸல்} அவர்களை இழிவு படுத்த வேண்டும் எனும் முனைப்பில் செய்யப்பட்ட இந்த பிரச்சாரமே முஹம்மத் {ஸல்} அவர்களைப் பற்றிய தேடலை மனித சமூகத்தில் உருவாக்கி இருக்கின்றது.

ஜெர்மானிய அறிஞர் டாக்டர் ஸ்பிரிஞ்சர் தன்னுடைய நூல் ஒன்றில் மிகவும் ஆச்சர்யத்தோடு குறிப்பிடும் விஷயம் “முஹம்மது {ஸல்} அவர்களைப் பற்றி சர்வதேச மொழிகளில் இது வரை சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட நூற்கள் எழுதப்பட்டு இருக்கின்றன.

முஹம்மது {ஸல்} அவர்கள் யார்? என்ற கேள்விகளோடு தேடத் துவங்கினால் இறைத்தூதர், சமய நெறியாளர், ஆன்மீக தலைவர், அரசியல் விற்பன்னர், தீண்டாமையை ஒழித்தவர், குடும்பவியலாளர், ஒழுக்கவியலாளர், மனோதத்துவ நிபுணர், பெண்ணுரிமைக் காவலர், அரசியல் நெறியாளர், பொருளாதார நிபுணர், வெற்றியாளர், போர்த்தந்திர விற்பன்னர், யுத்த நெறியாளர், நோய் நிபுணர், என்று ஒவ்வொரு கோணத்திலும் ஆயிரக்கணக்கில் நூற்கள் எழுதப்பட்டு நம் முன்னே விரவிக்கிடப்பதைப் பார்க்க முடிகின்றது.

இதில் வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இமாம்கள், மேதகு அறிஞர்பெருமக்கள் எழுதிய பல்லாயிரக்கணக்கான சீரத் நூற்களுக்குப் பிறகு மாநபி {ஸல்} அவர்களைக் குறித்து எழுதிய பெரும்பாலான நூற்கள் மாற்று மத சகோதர அறிஞர்கள் எழுதிக்குவித்தது தான்.

நம்முடைய முஸ்லிம் அறிஞர்கள் எழுதிய நூற்கள் ஏராளம் இருந்தாலும் பிற மொழிகளில் ஆலிம்களும் முஹம்மது {ஸல்} அவர்கள் குறித்து சில நூற்களை எழுதி இருக்கின்றார்கள்.

தமிழில் 30 க்கும் மேற்பட்ட நூற்கள் முஹம்மது {ஸல்} அவர்களைப் பற்றி இருந்தாலும் ஒரு நூல் கூட நபிமார்களின் வாரிசுகளாகிய ஆலிம்களால் எழுதப்பட வில்லை.

முஹம்மத் {ஸல்} அவர்களைப் பற்றிய தேடலில் மகத்தான புரட்சியாளர் என்று அடையாளமிடும் சில நூற்களும் எழுதப்பட்டிருக்கின்றன.

ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நின்று போராடினார், சவாலாக எதிர் கொண்டார், சிம்ம சொப்பனமாக விளங்கினார் என்று ஊடகக் கூடாரங்களும், சர்வதேச மக்களும் கொண்டாடும் கியூபாவின் ஃபிடல் காஸ்ட்ரோவின் புரட்சி குறித்து அதிகம் விவாதிக்கப்படும் இந்த காலகட்டத்தில் மாநபி {ஸல்} அவர்கள் செய்த மகத்தான “மானுட வாழ்வியல் புரட்சி” குறித்து வரலாற்றின் வாயிலாக நாம் ஓர் ஒப்பீடு செய்து பார்க்க கடைப்பட்டிருக்கின்றோம்.

ஃபிடல் காஸ்ட்ரோ ஓர் அறிமுகம்….

பிடல் காஸ்ட்ரோ 1926-ம் ஆண்டு ஆகஸ்டு 13-ந்தேதி கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தார்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து 140 கிலோ மீட்டர் தொலைவில் கடலில் அமைந்த தீவு நாடு கியூபா. இதன் பிரதமராக 1959-ம் ஆண்டு ஜூன் மாதம் 24-ந்தேதி தனது 32-வது வயதில் பிடல் காஸ்ட்ரோ பதவி ஏற்றார். 1976-ல் அந்நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2006-ம் ஆண்டு குடல் நோய் காரணமாக உடல் நலக்குறைவு அடைந்த பிடல் காஸ்ட்ரோ 2008-ம் ஆண்டு தனது அதிபர் பதவியை சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்தார்.

90 வயது வரை வாழ்ந்து, சுமார் 50 ஆண்டுகாலம் மூன்றாவது உலக நாடுகளின் தளபதியாக அரசியல் வாழ்க்கையின் உச்சத்தை தொட்டு, கியூபாவின் அதிகாரப்பூர்வ அதிபராக இருந்து உலக நாடுகளின் தலைவர்களின் பட்டியலில் இடம் பிடித்தவர்.

அமெரிக்காவின் கோபத்திற்கு ஆளாகிய அத்துனை பேரும் அமெரிக்காவின் ஏதேனும் ஒரு ஆயுதத்திற்கு முன்னால் வீழ்ந்து போனார்கள்.

ஆனால், 638 சதித்திட்டங்களை அமெரிக்கா தீட்டி அதை கியூபாவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் வழியாக அரங்கேற்றவும் முயற்சித்து, அத்துனை கொலை முயற்சியில் இருந்தும் தப்பி தமது 90 –ஆம் வயதில் இயற்கை மரணம் அடைந்தார்.

அமெரிக்க ஏகாதியபத்தை எதிர்த்தவர்களில் இயற்கை மரணமடைந்தவர்களில் இரண்டாமவர் இவர் தான். முதல் நபர் லிபிய அதிபர் முஹம்மது கடாஃபி.

50 ஆண்டுகளாக அமெரிக்கா ஏற்படுத்திய பொருளாதாரத்தடைகளைத் தாண்டி நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு வந்தவர்.

இவைகளையெல்லாம் தாண்டி உயிரியல் தொழில் நுட்பம், சுற்றுலா, மருத்துவம் ஆகிய துறைகளில் உலக நாடுகளை விட அதிக முன்னேற்றம் காண வைத்து கியூபாவிற்கு ஒரு முகவரியைக் கொடுத்து இருக்கின்றார்.

வயது வந்த கியூபர்கள் அனைவரும் படித்தவர்கள் என்கிறது யுனிசெஃப் நிறுவனம்.

ஆரோக்கிய வாழ்விற்கு உகந்த இடமாக கியூபாவைக் கொண்டாடுகின்றது உலக நலவாழ்வு நிறுவனம்.

ஆம்! கியூபாவில் பெண்களின் சராசரி ஆயுட்காலம் 81, ஆண்களின் சராசரி ஆயுட்காலம்77.

நுரையீரல் புற்று நோய்க்கு (Cimavax) சிமாவாக்ஸ் எனும் தடுப்பூசி கியூபாவில் உடனடியாக கிடைக்கும்.

உலகிலேயே இத்தாலிக்கு அடுத்த படியாக அதிக மருத்துவர்களை கொண்ட ஒரு நாடு உண்டென்றால் அது கியூபா தான்.

கியூபாவில் 170 வீடுகளுக்கு ஒரு மருத்துவர் இருக்கின்றார். கியூபாவின் முக்கிய அம்சம் சர்வதேச நாடுகளில் இருந்து நோயாளிகள் மருத்துவச் சுற்றுலா வருகின்றனர் என்பது தான்.

புரட்சியை 82 ஆதரவாளர்களோடு தொடங்கிய ஃபிடல் காஸ்ட்ரோ அரியணையில் அமர்ந்து, தடைகளை மீறி வளர்ச்சிப் பாதையில் கியூபாவைக் கொண்டு வந்து, சதித்திட்டங்களை முறியடித்து புரட்சியாளர் என்று பெயரெடுத்தாலும், கியூபாவின் அனைத்து மக்களின் அடிப்படைத் தேவைகள் இன்னும் பூர்த்தியாகவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை என்று ஃபிடல் காஸ்ட்ரோவை குறித்து தமிழ் தி இந்துவில் 29/11/2016 அன்று வெளியான கட்டுரை ஒன்றில் எழுதுகிறார் எழுத்தாளர் த. நீதிராஜன் அவர்கள்.

ஏனெனில், சோவியத்தை சிதறடித்த கம்யூனிஸத்தைக் கொள்கையாக கொண்டிருந்தவர் ஃபிடல், கியூப மக்களைத் தாண்டி அருகே இருக்கிற தென் அமெரிக்க மற்றும் லத்தீன் நாட்டு மக்களின் நெஞ்சங்களில் கூட ஃபிடலால் இடம் பிடிக்க முடியவில்லை.

புரட்சி என்றால் அது ஒட்டு மொத்த மனித சமூகத்திடமும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும். எங்கிருந்து துவங்கப்படுகின்றதோ அங்கேயே அது முழுமையான மாற்றத்தைக் கொடுக்க வேண்டும், வெற்றியை பெற்றிருக்க வேண்டும்.

அந்த வகையில், பெருமானார் {ஸல்} அவர்களின் வாழ்க்கையை அணுகும் போது ஏகத்துவக் கொள்கை (ஓர் இறை, ஓர் மறை, ஒரே இனம்) எனும் புரட்சியை எங்கு துவக்கினார்களோ அங்கு சுமார் 23 ஆண்டுகளில் முழுமையான வெற்றியைப் பெற்றார்கள்.

அதே சம காலத்தில் அரபுலக எல்லைகளைத் தாண்டி இந்தியாவின் கேரள சமஸ்தானத்தின் சேரமான் பெருமான் வரை கொண்டு வந்து சேர்த்து இன்று உலக மக்களில் நடமாடும் நான்கு பேர்களில் ஒருவர் அந்தக் கொள்கைக்குச் சொந்தக்காரர் எனும் அந்தஸ்தை அடைந்திருக்கின்றார்கள்.

அவர்களின் புரட்சி என்பது உயரிய தொழில் நுட்பத்தை நோக்கியோ, பொருளாதார சீர்திருத்தத்தை நோக்கியோ, அரசியல், அதிகாரம் போன்ற அம்சங்களை நோக்கியோ அமையப் பெற்றிருக்கவில்லை ஒட்டுமொத்த மானுட வாழ்வியலை சீரமைக்கும் முகமாக அமையப் பெற்றிருந்தது.

மாநபி {ஸல்} அவர்கள் செய்த புரட்சியின் முதல் அறுவடை….

நபித்துவத்தின் ஐந்தாம் ஆண்டு மற்றும் ஏழாவது ஆண்டில் மக்கத்து காஃபிர்கள் கொடுத்த துன்பமும், கஷ்டமும் தாங்காமல் முஸ்லிம்கள் சிலரை இரண்டு கட்டமாக மாநபி {ஸல்} அவர்கள் அபீசீனியாவிற்கு ஹிஜ்ரத் அனுப்பி வைத்தார்கள்.

பின்னர், நபித்துவத்தின் 13 –ஆவது ஆண்டின் துவக்கத்தில் மாநபி {ஸல்} அவர்கள் ஏனைய சில நபித்தோழர்களை மதீனாவிற்கு ஹிஜ்ரத் அனுப்பி வைத்தார்கள்.

பின்னர், தாங்களும் ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு வந்து விட்டார்கள். ஹிஜ்ரி 2 –ஆம் ஆண்டில் பத்ர் யுத்தம் நடைபெற்றது.

ولما كان بعد بدر : اجتمعت قريش في دار الندوة . وقالوا : إن لنا في الذين عند النجاشي ثأراً . فأجمعوا مالا ، وأهدوه إلى النجاشي ، لعله يدفع إليكم من عنده ولنَنْتَدِبْ لذلك رجلين من أهل رأيكم . فبعثوا عمرو بن العاص وعمارة بن الوليد مع الهدية .
  
யுத்தத்தில் குறைஷிகளுக்கு பலத்த அடி கிடைத்து தோல்வியைத் தழுவினார்கள். இந்த தோல்வியை அவர்களால் ஜீரணிக்க முடியாமல், தாருன் நத்வாவில் ஒன்று கூடி ஆலோசனை செய்து, அபீசீனியாவிற்கு அடைக்கலம் தேடிச் சென்ற முஸ்லிம்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்று தீர்மானம் போட்டனர். ஏராளமான அன்பளிப்புகளுடன் அபீசினிய மன்னரை சந்திக்க கைதேர்ந்த இரண்டு நபர்களை தேர்ந்தெடுத்து அனுப்பவேண்டும் என்றும் தீர்மானம் போட்டனர்.

பின்னர் அதன் தொடர்ச்சியாக, மக்கத்துக் காஃபிர்கள் அபீசீனியாவிற்கு அப்துல்லாஹ் பின் அபீ ரபீஆ இப்னுல் முகீரா அல்மக்ஸும்மிய்யி என்பவரையும், அம்ருப்னுல் ஆஸ் இப்னு வாயில் அஸ்ஸஹ்மிய்யி என்பவரையும் தூதுக்குழுவாக அனுப்பி வைக்கிறார்கள்.

மக்காவில் அவர்களைத் துன்புறுத்தியது மட்டுமல்லாமல் அபிசீனியா வரை சென்றும் தொந்தரவு கொடுக்கவும் முடிவு செய்தனர் இந்தக் காஃபிர்கள்.

அரசரிடம் பேசும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு, இருவரும் அரசரின் முன்வந்து இப்படிப் பேசினார்கள்:

”மன்னரே! எங்களது ஊரிலிருந்து சில அறிவீனமான சிறுவர்கள் (நவூதுபில்லாஹ்) வந்திருக்கிறார்கள். அவர்கள் எங்களது சமூக மார்க்கத்தையும் விட்டு விட்டார்கள். உங்களது மார்க்கத்திலும் சேராமல் இருக்கிறார்கள். இதுபோன்ற ஒரு பிரிவினர் உங்களது ஊருக்கு வந்திருக்கிறார்கள் என்று ரசரிடம்டம் தூபம் போடுகிறார்கள் இந்த மக்கத்து காஃபிர்கள்.

இவர்கள் புதிதாக ஒரு மார்க்கத்தைக் கொண்டு வந்துள்ளார்கள். அதனை நாங்களும் அறியவில்லை. உங்களுக்கும் அது தெரியாது, இவர்கள் நம்மைக் கெடுக்க வந்திருக்கிறார்கள் என்று நஜ்ஜாஷி மன்னரிடம் சொல்லிவிட்டு,இவர்களின்  குடும்பத்தைச் சார்ந்தவர்களும், ஊரின் முக்கியஸ்தர்களும் தான் எங்களை அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

மற்றபடி நாங்கள் ஒன்றும் அந்நியர்கள் அல்ல. வெறுத்துப் போய் நாங்கள் இங்கே வந்திருக்கிறோம் என்று கூறினர்.

மக்கத்துக் காஃபிர்கள் நம்மை இங்கிருந்து கொண்டு செல்வதற்காக மன்னரிடம் பேசியிருக்கிறார்கள் என்கிற இந்தச் செய்தி ஜஃபர் பின் அபீதாலிபுக்குக் கிடைக்கிறது. மன்னர் நம்மைக் கூப்பிட விடுவார்.

மன்னர் நம்மைத் திருப்பியனுப்புவதற்கும் வாய்ப்பிருக்கிறது. என்ன நடக்குமோ என்று பயந்து கொண்டிருக்கிறார்கள். ஜஃபர் பின் அபீதாலிப் தான் ஹிஜ்ரத் செய்து சென்ற கூட்டத்திற்குத் தலைவராக இருந்தார்கள்.

 மன்னர் நம்மிடம் விசாரணை செய்தால் என்ன சொல்வது?  என்று அவர் தலைமையில் மற்ற நபித்தோழர்களும் ஒன்றிணைந்து ஆலோசனை நடத்தினர்.

அப்போது ஜஃபர் பின் அபீதாலிப் அவர்கள், எதையெல்லாம் இதுவரை நாம் சொல்லிக் கொண்டிருந்தோமோ அதையே இங்கேயும் சொல்வோம். அதில் ஒளிவு மறைவு தேவையில்லை. என்ன விளைவுகள் வந்தாலும் பரவாயில்லை என்று முடிவு செய்தார்கள்.

இதுவரை நாம் எதை அறிந்து வைத்திருக்கிறோமோ அதைத்தான் நாம் அல்லாஹ்வின் மீதாணையாகச் சொல்வோம். நபியவர்கள் நமக்கு எதை ஏவினார்களோ அதைச் சொல்வோம். இந்த நாட்டின் கொள்கைக்கு மாற்றமாக இருந்தாலும் சரி! என்றும் முடிவு செய்தார்கள்.

அதே போன்று மன்னர் நபித்தோழர்களை அழைத்து விசாரித்தார்.

أيها الملك
  جاهلية، نعبد الأصنام، ونأكل الميتة، ونأتي الفواحش، ونقطع الأرحام، ونسيء الجوار، وكنا قوماً أهليأكل القوي منا الضعيف، فكنا على ذلك، حتى بعث الله إلينا رسولاً منا، نعرف نسبه وصدقه وأمانته وعفافه، فدعانا إلى الله لنوحده ونعبده، ونخلع ما كنا نعبد نحن وآباؤنا من دونه من الحجارة والأوثان، وأمرنا بصدق الحديث، وأداء الأمانة، وصلة الرحم، وحسن الجوار، والكف عن المحارم والدماء، ونهانا عن الفواحش، وقول الزور، وأكل مال اليتيم، وقذف المحصنات، وأمرنا أن نعبد الله وحده، لا نشرك به شيئاً، وأمرنا بالصلاة والزكاة والصيام، فصدقناه وآمنَّا به، واتبعناه على ما جاء به من الله، فعبدنا الله وحده، فلم نشركْ به شيئاً، وحرمنا ما حرم علينا، وأحللنا ما أحل لنا، فعدا علينا قومنا، فعذبونا، وفتنونا عن ديننا، ليردونا إلى عبادة الأوثان من عبادة الله تعالى، وأن نستحل ما كنا نستحل من الخبائث، فلما قهرونا وظلمونا وضيقوا علينا، وحالوا بيننا وبين ديننا، خرجنا إلى بلادك، واخترناك على من سواك، ورغبنا في جوارك، ورجونا أن لا نظلم عندك أيها الملك

                மன்னரே! “நாங்கள் எதையும் அறியாத மக்களாக இருந்தோம். சிலைகளை வணங்கிக் கொண்டிருந்தோம். செத்த பிணங்களைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம், அசிங்கமான, மானக்கேடான காரியங்களைச் செய்து கொண்டு இருந்தோம். சொந்த பந்தங்களான உறவுகளைப் பகைத்துக் கொண்டிருந்தோம், அண்டை வீட்டார்களுக்குத் தொந்தரவு செய்து வந்தோம், பலமானவர்கள் பலவீனமான வர்களைச் சுரண்டி வாழ்ந்து வந்தோம்.

இந்நிலையில் எங்களுக்கு ஒரு தூதரை அல்லாஹ் அனுப்பினான். அவரது பாரம்பரியத்தை நாங்கள் அறிவோம். அவரது உண்மையையும் நாங்கள் அறிவோம். அவரது நேர்மையும் பரிசுத்தமான வாழ்க்கையும் எங்களுக்குத் தெரியும். அவர் அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும் என எங்களுக்குச் சொன்னார்.

மற்றவைகளை விடச் சொன்னார். மரம், செடி, கொடிகள், சிலைகள் போன்ற எதையும் வணங்கக் கூடாது என்று சொன்னார். உண்மையை மட்டும் பேச வேண்டும் என்று ஏவினார்.

அமானிதத்தைக் காப்பாற்றச் சொன்னார். சொந்த பந்தங்களைச் சேர்ந்து வாழ வேண்டும் என்றார். அண்டை வீட்டாருடன் நெருக்கத்தை ஏற்படுத்த ஏவினார். இறைவனால் தடை செய்யப் பட்டதைத் தவிர்க்கச் சொன்னார். உயிரைக் கொலை செய்யக் கூடாது என்றார். அசிங்கமான காரியத்தைத் தடுத்தார். பொய் சொல்லக் கூடாது என்றார். அனாதை சொத்தைச் சாப்பிடக் கூடாது என்றார். பெண்கள் மீது அவதூறு சொல்லக் கூடாது என்று எங்களுக்கு ஏவினார்.

தொழச் சொன்னார். ஜகாத் கொடுக்கச் சொன்னார். நோன்பு வைக்கச் சொன்னார்” இவ்வாறு ஜஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் பட்டியல் போட்டு பேசி முடித்தார்கள்.

இதையெல்லாம் நாங்கள் நம்பியதாலும், செயல்படுத்தியதாலும் எங்களை இந்த மக்காவாசிகளான இறைநிராகரிப்பாளர்கள் கடும் துன்பத்திற்கு ஆளாக்கி விட்டனர்.

அதனால்தான் நாங்கள் எங்கள் ஊரிலிருந்து உங்கள் நாட்டுக்கு வந்துவிட்டோம். உங்களைத் தேர்ந்தெடுத்து விட்டோம். உங்களது அடைக்கலத்திற்குத் தான் நாங்கள் ஆசைப்படுகிறோம்.

மன்னரே! உங்களது ஆட்சியில் எங்களுக்கு அநீதியிழைக்கப்படக் கூடாது என்பதற்காகத் தான் நாங்கள் உங்களிடம் வந்திருக்கிறோம்” என்று கூறினார்கள்.

இப்படியெல்லாம் நஜ்ஜாஷி மன்னரிடம் ஜஃபர் பின் அபீதாலிப் அவர்கள் பேசியதும் அவர், "மக்காவிலிருந்து வந்தவர்களிடம் நான் விசாரித்து விட்டுத்தான் சொல்ல முடியும்' என்று சொல்லி விடுகிறார். உங்களிடம் இவர்களை ஒப்படைக்க முடியாது என்று மறுத்து விடுகிறார்.

மறுநாள் மன்னரிடம் மக்கா காஃபிர்கள், "நீங்கள் நம்பும் ஈஸாவைப் பற்றி இவர்களிடம் விசாரியுங்கள்' என்று கேட்டுக் கொள்கிறார்கள்.

அது போன்றே, "ஈஸாவைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?' என்று மன்னர் நஜ்ஜாஷி நபித்தோழர்களிடம் கேட்டதற்கு, ஈஸா என்பவர் அல்லாஹ்வின் தூதர், அல்லாஹ்வின் மகனாக அவர் இல்லை, அல்லாஹ்வின் வார்த்தையினால் உருவானவர், அவர் அல்லாஹ்வின் மார்க் கத்தை மக்களுக்கு எடுத்துச் சொன்னார். என்று சொன்னார்.


உடனே நஜ்ஜாஷி மன்னர், உங்கள் நபி முஹம்மதுக்கு இறைவனிடமிருந்து வேதம் வருவதாகச் சொன்னீர்களே, அதை வாசித்துக் காட்ட முடியுமா? என்று கேட்கிறார்.

அப்போது ஜஃபர் பின் அபீதாலிப் அவர்கள், காஃப், ஹா, யா, ஐன், ஸாத். (இது) உமது இறைவன் தனது அடியார் ஸக்கரிய்யாவுக்கு செய்த அருளைக் கூறுதல்! என்ற சூரத்துல் மர்யம் என்ற 19வது அத்தியாயத்தை ஓதிக் காட்டுகிறார்.

அதைக் கேட்டதும் மன்னர் நஜ்ஜாஷி அவர்கள், கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடுகின்றது. இது மூஸா நபிக்கு யாரிடமிருந்து வந்ததோ அவரிடமிருந்தே இவருக்கும் வந்ததைப் போன்றுள்ளது என்று கூறிவிடுகிறார்.

மேலும் நீங்கள் எங்களது நாட்டில் அடைக்கலம் பெற்று விட்டீர்கள். உங்களது மார்க்கத்தின் பிரகாரம் இங்கே நடந்து கொள்ளலாம் என்றும் அனுமதியளித்து விடுகிறார்.                                                                                                      ( நூல்: முஸ்னத் அஹ்மத் )

சுமார் 12 ஆண்டுகள் கழித்து அபீசீனியாவிற்கு ஹிஜ்ரத் செய்த அந்த மக்கள் கைபர் போரின் வெற்றியின் போது மதீனா வந்தனர்.

மாநபி {ஸல்} அவர்கள் உண்டு பண்ணிய வாழ்வியல் புரட்சியை அதை அனுபவித்த மக்களாகிய அவர்கள், கடந்த கால வாழ்க்கையையும், தங்களின் நிகழ்கால வாழ்க்கையையும் கண் முன் கொண்டு வந்து அபீ சீனிய மன்னரின் முன்னால் ஒப்புவித்த அந்தக் காட்சி அபரிமிதமானது.

அடைக்கலம் கொடுத்த அரசரையும், அந்த நாட்டையும் ஒட்டு மொத்தமாக ஏகத்துவக் கொள்கையின் பற்றாளர்களாய் மாற்றியதும் அந்தப் புரட்சிதான்.

ஹுதைபிய்யா உடன்படிக்கை எப்படி அன்றைய உலக நாடுகளுக்குள் இஸ்லாம் பிரவேசிக்க காரணமாக அமைந்ததோ, அதே போன்று அபீசீனியப் பயணமும், அரபுலக மக்களின் வாழ்வியலில் மாநபி {ஸல்} அவர்கள் ஏற்படுத்திய புரட்சியும் அபீசீனியாவைச் சுற்றியிருந்த மக்களிடம் முஹம்மது {ஸல்} அவர்களைப் பற்றிய, இஸ்லாத்தைப் பற்றிய தேடலுக்கும் வித்திட்டது.

யாஅல்லாஹ்! மாநபி {ஸல்} அவர்களின் வாழ்க்கையை படிக்கிற, வாசிக்கிற, கடைபிடிக்கிற நன்மக்களாக எங்கள் அனைவரையும் ஆக்கியருள்புரிவாயாக!

ஆமீன்! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

வாழ்வியல் புரட்சி இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் வாரமும் தொடரும்….


Thursday 24 November 2016

முஸ்லிம் எனும் அடையாளத்தை இழக்க முடியுமா?



முஸ்லிம் எனும் அடையாளத்தை இழக்க முடியுமா?



21/11/2016 அன்றைய தமிழ் தி இந்து நாளிதழில் ஆர்.பி.ஐ ரிஸர்வ் பேங்க் ஆஃப் இந்தியா சார்பில் வெளியிடப்பட்ட ஒரு செய்தி பிரசுரமாகி இருந்தது.

அதில் “தற்போது இருக்கும் வங்கி நடைமுறையில் முஸ்லிம்களுக்கு தனியான பிரிவை ஏற்படுத்த ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்துள்ளது. மத்திய அரசும், ரிஸர்வ் வங்கியும் முஸ்லிம் மக்களை வங்கி அமைப்புக்குள் கொண்டுவரும் நோக்கில் தனியான முஸ்லிம் வங்கிகளை ஏற்படுத்த உண்டான வாய்ப்புகளை ஆராய்ந்து வருகின்றது. முஸ்லிம் மக்கள் அவர்களுடைய மத நம்பிக்கைகளின் காரணமாக வங்கி அமைப்புக்குள் வருவதில்லை.

பல்வேறு விதிகள், சவால்கள் இந்த விஷயத்தில் அடங்கியுள்ளது. மேலும், இந்திய வங்கிகளுக்கு இதில் முன் அனுபவம் இல்லை. முஸ்லிம் வங்கிகள் இந்தியாவில் படிப்படியாக கொண்டு வரப்படும். முதலில் தற்போதுள்ள வங்கிகளில் முஸ்லிம்களுக்கு தனிப்பிரிவு மூலம் சில திட்டங்கள் கொண்டு வரப்படும்” என்று.

இதுவும் கூட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு ரிஸர்வ் வங்கி கொடுத்துள்ள பதிலாகும்.

இந்த அறிவிப்பு கடந்து வந்த பாதை…

இன்றைய வங்கிகளின் இயக்கம் வட்டியை அடிப்படையாக கொண்டிருப்பதால் முஸ்லிம்கள் வங்கிகளில் சேமிக்கத் தவறுகின்றார்கள் என்றும் ஆய்வுகளின் முடிவுகள் தெரிவித்த.

ஆய்வு 1. நீதியரசர் ராஜீந்தர் சச்சார் தமது அறிக்கையில் நாட்டில் இயங்குகின்ற 27 பொதுத்துறை வங்கிகளில் முஸ்லிம்கள் சேமிப்பு கக்கு பரிவர்த்தனையில் 12 விழுக்காடு தான் பங்கு பெற்றுள்ளனர்.

அதாவது நாட்டில் வசிக்கும் 25 கோடி முஸ்லிம்களில் 3 1/2 கோடி முஸ்லிம்களுக்கு வங்கித் தொடர்பு உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆய்வு 2. மேலும் 2005ல் Legal News and Views எனும் ஆய்வில் வங்கிகளில் முஸ்லிம்களால் கைவிடப்பட்ட வட்டிப்பணம் 75,000 கோடி கேட்பாரற்று கிடக்கின்றது. அதிலும் குறிப்பாக கேரள வங்கிகளில் மட்டும் 45,000 கோடி என்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்குப் பின்னர் முஸ்லிம் சமூகம் அப்போது ஆளும் காங்கிரசின் கதவைத் தட்டியது.

கடந்த காங்கிரஸ் அரசிடம் வட்டியில்லா வங்கி குறித்த இக்கோரிக்கை  முன் வைக்கப்பட்ட போது 2006ம் ஆண்டில் இது குறித்து பரிசீலனை செய்யுமாறு ரிசர்வ் வங்கியை மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டார். ஆனால் சாத்தியமில்லை என்று கூறி ரிசர்வ் வங்கி கையை விரித்தது.

அப்போது கைவிரித்த அல்லது கைவிட்ட ரிஸர்வ் வங்கி தான் இப்போது, சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாகவும், அதற்கு முன்னோட்டமாக தற்போதைய வங்கி முறையில் முஸ்லிம்களுக்கு தனிப்பிரிவை துவங்க முயற்சி மேற்கொள்வதாகவும் அறிவித்துள்ளது.

காலம் கடந்த முடிவு என்றாலும் முஸ்லிம் சமூகத்தின் குரல்களைப் புறக்கணிக்க முடியாது எனும் நிலையை மத்திய அரசும், நாட்டின் முதன்மை நிறுவனமும் ஒப்புக்கொண்டிருக்கும் நிலை இன்று ஏற்பட்டிருக்கின்றது.

அல்ஹம்து லில்லாஹ்….

ரிஸர்வ் வங்கி கொடுத்திருக்கிற அறிக்கையில், மத்திய அரசும், ரிஸர்வ் வங்கியும், “முஸ்லிம் சமூகம் மத நம்பிக்கைக்கு அதிக முக்கியத்துவம் தருபவர்கள், எந்த ஒரு காரணத்திற்காகவும் முஸ்லிம் எனும் அடையாளத்தை விட்டுத் தரவும் மாட்டார்கள், வளைந்து கொடுக்கவும் மாட்டார்கள் என்று ஒத்துக் கொண்டுள்ளதை” உணர முடிகின்றது.

2050 –ஆம் ஆண்டை சர்வதேச மனித சமூகம் மிகப் பெரிய அளவில் எதிர் நோக்கி இருக்கிறதென்றால் அது மிகையல்ல.

மேற்கத்திய, ஐரோப்பிய நாடுகள் முதற்கொண்டு, உலகின் பல நாடுகளைத் தாண்டி இந்தியா வரை இஸ்லாம் தன் ஆளுமையை விரிவாக்கம் செய்து, மிகப் பெரிய அளவிலான எண்ணிக்கையை கொண்ட முஸ்லிம் சமூகமாக உருவாக்கம் பெரும் என்கிற பல்வேறு கருத்துக் கணிப்புகளின் முடிவு தான் இந்த எதிர்பார்ப்பின் அடிப்படையாகும்.

2050 –இல் முஸ்லிம்களின் எண்ணிக்கை உயர்ந்து விடக்கூடாது, இஸ்லாத்தின் ஆளுமை விரிவடைந்து விடக்கூடாது என்பதில் உறுதியாகவும் அதே நேரத்தில் கண்காணிப்போடும் இருக்கின்றார்கள்.

ஆகவே, மிகக் கவனமாக, சர்வதேச ஆட்சியாளர்கள் முஸ்லிம்களின் மீது மறைமுக தாக்குதல்களைத் துவக்கி நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

அதில் ஒன்று முஸ்லிமாக வாழ்ந்து கொண்டிருக்கும் போதே முஸ்லிம் எனும் அடையாளத்தை முஸ்லிம் சமூகத்திடம் இருந்து அகற்ற வேண்டும். இஸ்லாத்தை விட்டும் முஸ்லிம்களை தூரமாக்க வேண்டும் என்கிற முயற்சிகளில் முழு மூச்சாக இரவு, பகலாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இத்தகைய காலகட்டத்தில் ரிஸர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு வெளிவந்திருப்பது தான் முக்கியத்துவம் வாய்ந்த அம்சமாகும்.

முஸ்லிம் எனும் அடையாளத்தை ஏன் முஸ்லிம்கள் இழக்கத் துணிவதில்லை?...

هُوَ اجْتَبَاكُمْ وَمَا جَعَلَ عَلَيْكُمْ فِي الدِّينِ مِنْ حَرَجٍ مِلَّةَ أَبِيكُمْ إِبْرَاهِيمَ هُوَ سَمَّاكُمُ الْمُسْلِمِينَ مِنْ قَبْلُ وَفِي هَذَا

மேலும், அவன் தனது பணிக்காக உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான். மேலும், அவன் வழங்கிய மார்க்கத்தில் ( இஸ்லாத்தில் ) உங்களுக்கு எவ்வித சிரமத்தையும் வைத்திடவில்லை.

உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கத்தில் நிலைத்திருங்கள். அல்லாஹ் தான் இதற்கு முன்பும், இப்போதும் உங்களுக்கு முஸ்லிம்கள் என்று பெயர் சூட்டியுள்ளான். தூதர் உங்கள் மீது சான்று வழங்குபவராகவும், நீங்கள் மக்கள் மீது சான்று வழங்குபவர்களாகவும் திகழ வேண்டும் என்பதற்காக!”.         ( அல்குர்ஆன்: 22: 78 )

அடையாளத்தை இழக்க, முகவரியைத் தொலைக்க ஒரு முஸ்லிம் ஒரு போதும் முன் வரமாட்டான்.

ஏனெனில், இந்த அடையாளத்தையும், முகவரியையும் தந்தவன் அனைத்துலகையும் படைத்துப் பரிபாலனம் செய்யும் ரப்புல் ஆலமீன் ஆகிய அல்லாஹ் தான் என்று மேற்கூறிய இறைவசனம் நமக்கு உணர்த்துகின்றது.

அடையாளத்தை இழக்க விரும்பாத மேன்மக்கள்….

பைத்துல்லாஹ்வின் அஸ்திவாரத்தை உயர்த்திய இப்ராஹீம் {அலை} அவர்கள் அல்லாஹ்விடம் கை உயர்த்தி, தம் திருப்பணியை ஏற்றுக் கொள்ளுமாறு இறைஞ்சியதோடு,

رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ

“எங்கள் இரட்சகனே! எங்களிருவரையும் உனக்கு முற்றிலும் கீழ்ப்படிகிற முஸ்லிம்களாகவும், எங்களுடைய சந்ததியில் இருந்தும் உனக்கு கீழ்ப்படிகிற முஸ்லிம்களையும் ஆக்கியருள்வாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். ( அல்குர்ஆன்: 2:128 )

وَوَصَّى بِهَا إِبْرَاهِيمُ بَنِيهِ وَيَعْقُوبُ يَا بَنِيَّ إِنَّ اللَّهَ اصْطَفَى لَكُمُ الدِّينَ فَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ ()

இப்ராஹீமும், யஃகூபும் தங்களுடைய இறுதி நேரத்தில் தங்களின் மக்களுக்கு “என் மக்களே! நிச்சயமாக, அல்லாஹ் இஸ்லாம் மார்க்கத்தையே உங்களுக்காக தேர்ந்தெடுத்துள்ளான்; ஆகவே, நீங்கள் முஸ்லிம்களாக அன்றி நிச்சயமாக மரணிக்க வேண்டாம் என்று வஸிய்யத் செய்தார்கள்”.                   ( அல்குர்ஆன்: 2: 132 )

1. அடையாளத்தை இழக்கச் செய்யும் எதையும் ஓர் இறை நம்பிக்கையாளன் அங்கீகரிக்க மாட்டார்….

فذهب إلى بيت إسماعيل فقال لامرأته : أين صاحبك ؟ قال ذهب للصيد وكان إسماعيل عليه السلام يخرج من الحرم فيصيد ، فقال لها إبراهيم : هل عندك ضيافة ؟ قالت ليس عندي ضيافة ، وسألها عن عيشهم ؟ فقالت : نحن في ضيق وشدة ، فشكت إليه فقال لها : إذا جاء زوجك فأقرئيه السلام وقولي له فليغير عتبة بابه ، فذهب إبراهيم فجاء إسماعيل فوجد ريح أبيه فقال لامرأته : هل جاءك أحد ؟ قالت : جاءني شيخ صفته كذا وكذا كالمستخفة بشأنه قال فما قال لك ؟ قالت قال أقرئي زوجك السلام وقولي له فليغير عتبة بابه ، قال ذلك أبي وقد أمرني أن أفارقك الحقي بأهلك ، فطلقها وتزوج منهم أخرى ، فلبث إبراهيم ما شاء الله أن يلبث ، ثم استأذن سارة أن يزور إسماعيل فأذنت له وشرطت عليه أن لا ينزل ، فجاء إبراهيم عليه السلام حتى انتهى إلى باب إسماعيل فقال [ ص: 148 ] لامرأته أين صاحبك ؟ قالت ذهب يتصيد وهو يجيء الآن إن شاء الله ، فانزل يرحمك الله ، قال : هل عندك ضيافة ؟ قالت : نعم فجاءت باللبن واللحم ، وسألها عن عيشهم ؟ فقالت : نحن بخير وسعة ، فدعا لهما بالبركة ولو جاءت يومئذ بخبز بر أو شعير وتمر لكانت أكثر أرض الله برا أو شعيرا أو تمرا ، فقالت له : انزل حتى أغسل رأسك ، فلم ينزل فجاءته بالمقام فوضعته عن شقه الأيمن فوضع قدمه عليه فغسلت شق رأسه الأيمن ثم حولت إلى شقه الأيسر فغسلت شق رأسه الأيسر فبقي أثر قدميه عليه ، فقال لها : إذا جاء زوجك فأقرئيه السلام وقولي له قد استقامت عتبة بابك ، فلما جاء إسماعيل ، وجد ريح أبيه فقال لامرأته : هل جاءك أحد ؟ قالت : نعم شيخ أحسن الناس وجها وأطيبهم ريحا ، وقال لي كذا وكذا وقلت له كذا وكذا ، وغسلت رأسه وهذا موضع قدميه فقال : ذاك إبراهيم النبي أبي ، وأنت العتبة أمرني أن أمسكك .

இப்ராஹீம் (அலை) அவர்கள் பாலைவனத்தில் தாம் விட்டுச் சென்ற (தம் மனைவி மகன் ஆகிய)வர்களின் நிலையை அறிந்துக் கொள்வதற்காக சில காலம் கழித்து (திரும்பி) வந்தார்கள்.

அப்போது இஸ்மாயீல் (அலை) அவர்களை (அவர்களது வீட்டில்) காணவில்லை. ஆகவே இஸ்மாயீல் மனைவியிடம் இஸ்மாயீலை குறித்து விசாரித்தார்கள். அதற்கு அவர் எங்களுக்காக உணவு தேடி வெளியே சென்றிருக்கிறார் என்று சொன்னார்.

பிறகு அவரிடம் அவர்களுடைய வாழ்க்கை நிலைப் பற்றியும் பொருளாதாரம் பற்றியும் விசாரித்தார்கள். அதற்கு அவர் நாஙகள் மோசமான நிலையில் உள்ளோம். நாங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறோம் என்று இப்ராஹீம் (அலை) அவர்களிடம் முறையிட்டார்.

உடனே இப்ராஹீம் (அலை) அவர்கள் உன் கணவர் வந்தால் அவருக்கு (என் சார்பாக) சலாம் சொல். மேலும், அவரது நிலைப்படியை மாற்றி விடும்படி சொல் என்று சொன்னார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள் (வீட்டிற்கு) வந்தபோது எவரோ வந்து சென்றிருப்பது போல் உணர்ந்தார்கள்.

ஆகவே எவரேனும் உங்களிடம் வந்தார்களா என்று கேட்டார்கள். அவருடைய மனைவி ஆம் இப்படிப்பட்ட (அடையாளஙகள் கொண்ட) பெரியவர் ஒருவர் வந்தார் எங்களிடம் உங்களைப் பற்றி விசாரித்தார். நான் அவருக்கு (விவரம்) தெரிவித்தேன்.

என்னிடம் உஙகள் வாழ்க்கை நிலை எப்படி உள்ளது என்று கேட்டார். நான் அவரிடம் நாங்கள் பெரும் சிரமத்திலும் கஷ்டத்திலும் இருக்கிறோம் என்று சொன்னேன் என்று பதிலளித்தார்.

அதற்கு இஸ்மாயீல் (அலை) அவர்கள் உன்னிடம் தம் விருப்பம் எதையாவது அவர் தெரிவித்தாரா என்று கேட்க, அதற்கு அவர் ஆம் உங்களுக்கு தன் சார்பாக சலாம் உரைக்கும்படி எனக்கு உத்தரவிட்டு உன் நிலைப்படியை மாற்றிவிடு என்று (உஙகளிடம் சொல்லச்) சொன்னார் என்று பதிலளித்தார்.

இஸ்மாயீல் (அலை) அவர்கள் அவர் என் தந்தைதான். உன்னைவிட்டு பிரிந்து விடும்படி எனக்கு உத்திரவிட்டுள்ளார். ஆகவே நீ உன் (தாய்) வீட்டாருடன் போய் சேர்ந்துக்கொள் என்று சொல்லிவிட்டு உடனே அவரை விவாகரத்து செய்துவிட்டார். பின்னர் ஜுர்ஹும் குலத்தாரிலிருந்தே வேறொரு பெண்ணை மணமுடித்துக் கொண்டார்.

பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவன் நாடிய காலம் வரை அவர்களை (ப் பார்க்க வராமல்) விலகி வாழ்ந்தார்.

அதன் பிறகு அவர்களிடம் சென்றார். ஆனால் இஸ்மாயீல் (அலை) அவர்களை (இந்த முறையும்) அவர் (அஙகு) காணவில்லை. ஆகவே இஸ்மாயீல் (அலை) அவர்களுடைய (புதிய) துணைவியாரிடம் சென்று இஸ்மாயீலைப் பற்றி விசாரித்தார். அதற்கு அவர் எங்களுக்காக வருமானம் தேடி வெளியே சென்றிருக்கிறார் என்று சொன்னார்.

இப்ராஹீம் (அலை) அவர்கள் நீஙகள் எப்படியிருக்கிறீர்கள் (நலம்தானா) என்று கேட்டார்கள். மேலும் அவர்களுடைய பொருளாதார நிலை குறித்தும் மற்ற நிலைமைகள் குறித்தும் அவரிடம் விசாரித்தார். அதற்கு இஸ்மாயீலின் துணைவியார் நாஙகள் நலத்துடனும் வசதியுடனும் இருக்கிறோம் என்று சொல்லிவிட்டு உயர்ந்தவனும் வல்லவனுமாக அல்லாஹ்வைப் புகழ்ந்தார்.

இப்ராஹீம் (அலை) அவர்கள் உஙகள் உணவு எது என்று கேட்க அவர் இறைச்சி என்று பதிலளித்தார். அவர்கள் உஙகள் பானம் எது என்று கேட்க தண்ணீர் என்று பதிலளித்தார். இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவா! இவர்களுக்கு இறைச்சியிலும் தண்ணீரிலும் பரக்கத்தை அருள் வளத்தை அளிப்பாயாக! என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் அந்த நேரத்தில் அவர்களிடம் உணவு தாணியம் எதுவும் இருக்கவில்லை. அப்படி எதுவும் இருந்திருந்தால் அதிலும் அருள் வளம் தரும்படி இப்ராஹீம் (அலை) அவர்கள் பிரார்த்தித்திருப்பார்கள். 

ஆகவே தான் மக்காவைத் தவிர பிற இடஙகளில் அவ்விரண்டையும் (இறைச்சியையும் தண்ணீரையும்) வழக்கமாக பயன்படுத்தி வருபவர்களுக்கு அவை ஒத்தக்கொள்வதே இல்லை என்று சொன்னார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் உன் கணவன் வந்தால் அவருக்கு (என் சார்பாக) சலாம் உரை. அவரது (வீட்டு) நிலைப்படியை உறுதிபடுத்தி வைக்கும்படி சொல் என்று சொன்னார்கள்.

இஸ்மாயீல் (அலை) அவர்கள் (வீட்டிற்குத் திரும்பி) வந்த போது உங்களிடம் எவரேனும் வந்தார்களா என்று கேட்க அவருடைய மனைவி ஆம் எங்களிடம் அழகிய தோற்றமுடைய முதியவர் ஒருவர் வந்தார் என்று (சொல்லிவிட்டு) அவரை புகழ்ந்தார். (பிறகு தொடர்ந்து) என்னிடம் நமது பொருளாதார நிலை எப்படி உள்ளது என்று கேட்டார். நான் நாங்கள் நலமுடன் இருக்கிறோம் என்று தெரிவித்தேன் என்று பதில் சொன்னார்.

அவர் உனக்கு அறிவுரை ஏதேனும் சொன்னாரா என்று இஸ்மாயீல் (அலை) கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் உஙகளுக்கு சலாம் உரைக்கிறார் உஙகள் நிலைப்படியை உறுதிப்பபடித்திக் கொள்ளும்படி உஙகளுக்கு கட்டளையிடுகின்றார் என்று சொன்னார்.

இஸ்மாயீல் (அலை) அவர்கள் அவர் என் தந்தை நீ தான் அந்த நிலைப்படி உன்னை (விவாகரத்து செய்யாமல்) அப்படியே மணைவியாக வைத்தக் கொள்ளும்படி எனக்கு உத்திரவிட்டுள்ளான் என்று சொன்னார்கள். பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ் நாடிய காலம் வரை அவர்களை(ப் பார்க்க வராமல்) விலகி வாழ்ந்தார்கள்.                             ( நூல்: தஃப்ஸீர் அல் பஃக்வீ, அத்தபரீ )

இஸ்மாயீல் {அலை} அவர்களின் முதல் மனைவியிடம் 1. முழுக்க முழுக்க அல்லாஹ்வைச் சார்ந்திருத்தல். 2. அல்லாஹ் வழங்கியதைக் கொண்டு போது மாக்கிக் கொள்தல், 3. குடும்ப இரகசியத்தை பேணிப் பாதுகாத்தல் ஆகிய ஒரு முஸ்லிமுக்கான இலக்கணப் பண்புகள் இல்லாததால் விவாகரத்துச் செய்யச் சொன்னார்கள்.

அதே நேரத்தில், இந்த அத்துனை அம்சங்களும் ஒருங்கே பெற்றிருந்த இரண்டாவது மனைவியை இறுதி வரை தம்மோடு வைத்துக் கொள்ளுமாறு தங்களது மகனார் இஸ்மாயீல் {அலை} அவர்களுக்கு ஆணையிட்டார்கள் இப்ராஹீம் {அலை} அவர்கள்.

சொந்த வாழ்வானாலும் ஒரு முஸ்லிம் தன் அடையாளத்தை இழக்கச் செய்யும் எந்த ஒரு செயலையும் அங்கீகரிக்கக் கூடாது என்பதை இந்த வரலாறு உணர்த்துகின்றது.

2. வேறெந்த முஸ்லிமும் முஸ்லிம் எனும் அடையாளத்தை இழந்து விடுவதை ஒரு முஸ்லிம் அங்கீகரிக்க மாட்டார்.

وجاء رجل شاب فقال: أبشر يا أمير المؤمنين ببشرى الله لك، من صحبة رسول الله صلى الله عليه وسلم، وقدم في الإسلام ما قد علمت، ثم وليت فعدلت، ثم شهادة
فلما أدبر إذا إزاره يمس الأرض
 قال
 ردوا علي الغلام، قال: ابن أخي ارفع ثوبك، فإنه أنقى لثوبك، وأتقى لربك

உமர் (ரலி) அவர்கள் அபூலுஃலுவுல் ஃபைரோஸீ என்பவனால் குத்தப்பட்டு, ஷஹாதத்தின் விளிம்பில் இருக்கும் போது ஒரு இளைஞர் உமர் (ரலி) அவர்களின் அருகே வந்து அமர்ந்தார்.

”இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! உமர் (ரலி) அவர்களே! உங்களுக்கு சோபனம் உண்டாகட்டும்!

நபி {ஸல்} அவர்களின் தோழமையப் பெற்றிருக்கின்றீர்கள்! இஸ்லாத்தை அதன் ஆரம்ப காலத்திலேயே ஏற்றுக் கொண்டீர்கள்! முஸ்லிம்களின் ஆட்சியாளராக அரியணையில் அமர்ந்து நல்லாட்சி வழங்கினீர்கள்! உயரிய ஷஹாதா வீரமரணத்தை நோக்கி நீங்கள் வீற்றிருக்கின்றீர்கள்! இவைகள் எல்லாம் அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய சோபனங்களே!” என்று கூறி விட்டு அந்த இளைஞர் அங்கிருந்து விடை பெற்றுச் செல்கின்றார்.

நடந்து செல்லும் அந்த இளைஞரின் கீழாடை தரையைத் தொட்டவாறே சென்றதைக் கண்டதும் உமர் (ரலி) அவர்கள் அந்த இளைஞரை என்னிடம் அழைத்து வாருங்கள் என்றார்கள்.

அந்த இளைஞர் அருகே வந்ததும், என் சகோதரனின் மகனே! உன் கீழாடையை உயர்த்திக் கட்டுவாயாக! உன் ஆடையை தூய்மையாக வைத்துக் கொள்வாயாக! உமதிறைவனை பயந்து வாழ்வீராக!” என்று கூறினார்கள்.

( நூல்:ஸஃகத்துஸ் ஸில்ஸால் லிநஸஃபி அபாதீலுர் ரஃப்ளி வல் இஃதிஸால் )

இக்கட்டான நிலைமையில், உயிர் போகும் அந்த தருணத்திலும் கூட ஒரு முஸ்லிம் தன் அடையாளத்தில் இருந்து அகன்று விடக்கூடாது என்று பதறித் துடித்தார்கள் உமர் (ரலி) அவர்கள்.

அனைத்து நபிமார்களும் தங்களை முஸ்லிம்கள் என்று அடையாளப்படுத்துவதையே விரும்பியிருக்கின்றார்கள் என்று குர்ஆனில் பல இடங்களில் அல்லாஹ் குறிப்பிடுவதைப் பார்க்க முடிகின்றது.

எனவே, முஸ்லிம்களாக வாழ்வோம்! முஸ்லிம் எனும் அடையாளத்தோடு வாழ்வோம்! முஸ்லிம் எனும் அடையாளத்தை இழக்கச் செய்யும் எதையும் அணுவளவேனும் வாழ்க்கையில் அங்கீகரிக்காமல் வாழ்வோம்! அதற்காக உயிர் போனாலும் சரியே!!!

யாஅல்லாஹ்! எங்களை முஸ்லிம்களாக வாழச்செய்வாயாக! முஸ்லிம்களாகவே மரணிக்கச்செய்வாயாக!

ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!