Thursday 25 May 2017

அல் – குர்ஆன் எனும் அளப்பெரும் அருட்கொடை!!!



இரண்டாம் நாள் தராவீஹ் பயான்
அல்குர்ஆன் எனும் அளப்பெரும் அருட்கொடை!!!



இரண்டாம் நாள் தராவீஹ் தொழுகையைத் தொழுது முடித்தும், முதல் நாள் நோன்பை நிறைவு செய்தும் அமர்ந்திருக்கின்ற நம் அனைவரின் நோன்பையும், தராவீஹ் தொழுகையையும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அங்கீகரித்து அளவிலா நன்மைகளை வழங்குவானாக! ஆமீன்!

அல்பகரா அத்தியாயம் ஹிஜ்ராவிற்குப் பின்னர் மதீனாவில் இறக்கியருளப்பட்ட ஓர் அத்தியாயமாகும். இன்று ஓதப்பட்ட ஒன்னேகால் ஜுஸ்வின் பெரும் பகுதி சட்டதிட்டங்கள் குறித்தானதாகும்.

வஸிய்யத் எனும் மரண சாஸனம், கிஸாஸ் எனும் பழிவாங்கல், நோன்பு, ஹஜ், உம்ரா, திருமணம், தலாக் - விவாகவிலக்கு, பால்குடி, வட்டி, வியாபாரம், கடன், போர், வீட்டின் ஒழுங்குகள் என பல்வேறு அம்சங்கள் குறித்து, இறைவனோடும், இறையடியார்களோடும் தொடர்பிலிருக்கிற சட்டங்கள் குறித்து அதிகம் அல்லாஹ் பேசுகின்றான்.

இன்றைய தொழுகையில் ஓதப்பட்ட இறைவசனங்களில் ஒன்று இந்த ரமலான் மாதத்தின் மகத்துவம் குறித்து விவரிக்கும் போது...

“ரமலான் மாதம் எத்தகையது என்றால், அம்மாதத்தில் தான் மனிதர்களுக்கு முழுமையான வழிகாட்டியாகவும், நேர்வழியின் தெளிவான அறிவுரைகளைக் கொண்டதும், சத்தியத்தையும், அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக்கூடியதுமான குர்ஆன் இறக்கியருளப்பட்டது”.                               ( அல்குர்ஆன்: 2: 185 )

ஆகவே, இன்றைய தினம் அல்குர்ஆன் குறித்த சில தகவல்களை நாம் பேசுவதற்கும், கேட்பதற்கும் கடமைப்பட்டிருக்கின்றோம்.

 சங்கைமிகு ரமழான் மாதம் ஒட்டு மொத்த முஸ்லிம் உம்மத்தும் குர்ஆன் ஓதுவதிலும், குர்ஆன் ஓதக் கேட்பதிலும் அதிகமதிகம் தம்மை ஈடுபடுத்தி குர்ஆனோடு ஒரு பரிச்சயத்தை ஏற்படுத்தி வருவதை நாம் அறிந்திருக்கின்றோம்.

அதன் தாக்கமும் தொடர்பும் வாழ்வின் இறுதி வரை நீடித்திட குர்ஆனின் தொடர்பைத் தொடர்ந்திட அல்லாஹ் உங்களுக்கும் எனக்கும் தௌஃபீக் செய்தருள்வானாக! ஆமீன்!

உலகில் பார்த்தாலே நன்மை கிடைக்கும் என மாநபி {ஸல்} அவர்களால் பாராட்டப்பட்ட பாக்யங்களில் அல்குர்ஆனும் ஒன்றாகும்.

குர்ஆனோடு ஒவ்வொரு முஸ்லிமும் கொண்டிருக்க வேண்டிய தொடர்பு என்ன என்பதை அல்லாஹ்வும், அவனது ரஸூல் மாநபி {ஸல்} அவர்களும் மிக விரிவாகவே நமக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

குறைந்த பட்சமாக இவைகளையாவது நிறைவேற்ற வேண்டும்.

1. குர்ஆனைக் கண்ணியப்படுத்த வேண்டும்

1. மகிழ்ச்சி அடையவேண்டும்.

قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِمَّا يَجْمَعُونَ ()

அல்லாஹ் தன்னுடைய கருணையைக் கொண்டும், அருளைக் கொண்டும் இந்த திருக்குர்ஆனை இறக்கியருளினான். இந்த திருக்குர்ஆனைக் கொண்டு மக்கள் மகிழ்ச்சி அடையட்டும்! அவர்கள் சேகரித்துக் கொண்டிருக்கும் எல்லாவற்றையும் விட இது சிறந்ததாகும்என நபியே! நீர் கூறுவீராக!”           ( அல்குர்ஆன்: 10: 58 )

2. கண்ணியம் கொடுக்கவேண்டும்.

ذَلِكَ وَمَنْ يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوبِ ()

மேலும், யாரேனும் அல்லாஹ் புனிதம் என்று அடையாளப் படுத்தியவைக்கு கண்ணியம் அளிப்பாராயின் திண்ணமாக, அது இதயங்களில் உள்ள இறையச்சத்தால் விளைவதாகும்”.                                             ( அல்குர்ஆன்: 22: 32 )

3. தூய்மையோடு தொடவேண்டும்.
إِنَّهُ لَقُرْآنٌ كَرِيمٌ () فِي كِتَابٍ مَكْنُونٍ () لَا يَمَسُّهُ إِلَّا الْمُطَهَّرُونَ ()

இது ஓர் உன்னதமான குர்ஆன் ஆகும். இது பாதுகாப்பானதொரு நூலில் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது. தூய்மையானவர்களைத் தவிர வேறு எவரும் இதனைத் தொடமுடியாது”.                                        ( அல்குர்ஆன்: 56: 77 – 79 )

4. அடக்கத்தோடும், பணிவோடும் கேட்கவேண்டும்.

وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنْصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ ()

மேலும், குர்ஆன் உங்கள் முன் ஓதப்படும் போது அதனைப் பணிவோடும், செவிதாழ்த்தி அடக்கத்தோடும் கேளுங்கள்! அல்லாஹ் உங்கள் மீதும் அருள் பொழியக்கூடும்!”.                                            ( அல்குர்ஆன்: 7: 204 )

5. ஷைத்தானை விட்டு பாதுகாப்பு தேடவேண்டும்.

فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ ()

மேலும், நீங்கள் குர்ஆனை ஓதத் தொடங்கும் போது, சபிக்கப்பட்ட ஷைத்தானை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோருங்கள்!”. ( அல்குர்ஆன்: 16: 98 )

6. தினம் ஒரு முறையாவது பார்க்கவேண்டும்.

, قَالَ :, يَقُولُ : قَالَ أَمِيرُ الْمُؤْمِنِينَ عُثْمَانُ بْنُ عَفَّانَ رَضِيَ اللَّهُ عَنْهُ
لَوْ أَنَّ قُلُوبَنَا طَهُرَتْ مَا شَبِعَتْ مِنْ كَلامِ رَبِّنَا
 وَإِنِّي لأَكْرَهُ أَنْ يَأْتِيَ عَلَيَّ يَوْمٌ لا أَنْظُرُ فِي الْمُصْحَفِ "

நம்முடைய உள்ளம் தூய்மை அடைந்து விட்டால் நம்முடைய ரப்பின் வார்த்தையான திருக்குர்ஆனை ஓதுவதில் நமது ஆசை அடங்காது. திருமறை குர்ஆனை பார்க்காமல் ஒரு நாள் என்னை கடந்து செல்வதைக் கூட நான் அறவே வெறுக்கின்றேன்என உஸ்மான் (ரலி) அவர்கள் கூறுவார்கள்.

7. குர்ஆனை ஓதவேண்டும்.
فَاقْرَءُوا مَا تَيَسَّرَ مِنَ الْقُرْآنِ

உங்களுக்கு குர்ஆனிலிருந்து சுலபமாக எந்த அளவுக்கு ஓத முடியுமோ அந்த அளவுக்கு ஓதிக்கொள்ளுங்கள்!”.                              ( அல்குர்ஆன்: 73: 20 )

وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلًا ()
மேலும், குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஓதுங்கள்!”.      ( அல்குர்ஆன்: 73: 4 )

عَنْ عَائِشَةَ ـ رَضِيَ اللهُ عَنْهَا ـ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ الْمَاهِرُ بِالْقُرْآنِ مَعَ السَّفَرَةِ الْكِرَامِ الْبَرَرَةِ، وَالَّذِي يَقْرَأُ الْقُرْآنَ وَيَتَتَعْتَعُ فِيهِ وَهُوَ عَلَيْهِ شَاقٌّ لَهُ أَجْرَانِ

“குர்ஆனைத் திறனுடன் சரளமாக ஓதுகின்றவர், கடமை தவறாத கண்ணியம் மிக்க தூதுவர்களான வானவர்களுடன் இருப்பார். குர்ஆனை சிரமப்பட்டுத் திக்கித் திணறி ஓதுகின்றவருக்கு இரு மடங்கு நன்மைகள் உண்டு” என நபி {ஸல்} அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்.          ( நூல் : இப்னு மாஜா, 3777 )

குர்ஆனில் 323015 மூன்று லட்சத்து இருபத்தி மூன்றாயிரத்து பதினைந்து எழுத்துக்கள் இருக்கின்றன.

சாதாரண நாட்களில் ஒரு குர்ஆனை ஓதிமுடிப்பவருக்கு ஒரு எழுத்துக்கு பத்து நன்மைகள் வீதம் 323015 எழுத்துக்களுக்கு 3230150 முப்பத்திரண்டு லட்சத்தி முப்பதாயிரத்து நூற்றிப் ஐம்பது நன்மைகள் கிடைக்கும்.

இதுவே, ரமலானில் ஒரு குர்ஆனை முடிப்பவருக்கு நன்மைகள் கோடிகளின் எண்ணிக்கையில் கிடைக்கும்.  

குர்ஆன் ஓதும்போது மனஅமைதியும், வானவர்களும் இறங்குதல்...

وروى عنه أنه قال (قرأت ليلة سورة البقرة وفرس لى مربوط ويحيى ابنى مضجع قريب منى وهو غلام, فجالت الفرس فقمت وليس لى هم إلا ابنى, ثم قرأت, فجالت الفرس, فقمت وليس لى هم إلا ابنى, ثم قرأت فجالت الفرس, فرفعت رأسى فاذا شيء كهيئة الظلة فى مثل المصابيح, نقيل من السماء فهالنى, فسكت, فلما أصبحت عدوت على رسول الله صلى الله عليه وسلم فأخبرته, فقال اقرأ يا أبا يحيى, فقلت قد قرأت, فجالت فقمت ليس هم لى إلا ابنى, فقال لى: اقرأ يا أبا يحيى, فقلت قد قرأت فجالت الفرس, فقال اقرأبا الحضير فقلت قد قرأت فرفعت رأسى فاذا كهيئة الظلة فيها المصابيح فهالنى, فقال: تلك الملائكة دنوا لصوتك, ولو قرأت حتى تصبح لأصبح الناس ينظرون إليهم.

உசைத் இப்னு ஹுளைர் (ரலி) அறிவித்தார் நான் இரவு நேரத்தில் (என் வீட்டில்) 'அல்பகரா' எனும் (2 வது) அத்தியாயத்தை ஓதிக்கொண்டிருந்தேன். என்னுடைய குதிரை எனக்குப் பக்கத்தில் கட்டப்பட்டிருந்தது.

திடீரென அந்தக் குதிரை மிகக் கடுமையாக மிரண்டது. உடனே ஓதுவதை நிறுத்திக் கொண்டேன். மீண்டும் ஓதினேன். குதிரை மிகக் கடுமையாக மிரண்டது. உடனே ஓதுவதை நிறுத்தினேன். குதிரை அமைதியாகிவிட்டது. பிறகு ஓதினேன். அப்போது குதிரை (முன் போன்றே) மிரண்டது. நான் ஓதுவதை நிறுத்தினேன். குதிரையும் அமைதியானது. மீண்டும் நான் ஓதியபோது குதிரை மிரண்டது.

நான் திரும்பிப் பார்த்தேன் அப்போது என் மகன் யஹ்யா குதிரைக்குப் பக்கத்தில் இருந்தான். அவனை அது (மிதித்துக்) காயப்படுத்தி விடுமோ என்று அஞ்சினேன். எனவே, அவனை (அந்த இடத்திலிருந்து) இழுத்துவிட்டு வானை நோக்கித் தலையைத் தூக்கினேன். அங்கு (விளக்குகள் நிறைந்த மேகம் போன்றதொரு பொருள் வானில் மறைந்தது. அதனால்) அதைக் காணமுடியவில்லை.

காலை நேரமானதுபோது நான் நபி(ஸல்) அவர்களிடம் நடந்ததைத் தெரிவித்தேன். அவர்கள் என்னிடம் 'இப்னு ஹுளைரே! தொடர்ந்து ஓதியிருக்கலாமே! இப்னு ஹுளைரே! தொடர்ந்து ஓதியிருக்கலாமே (ஏன் ஓதுவதை நிறுத்தினீர்கள்?)'' என்று கேட்டார்கள்.

நான், என் மகன் யஹ்யாவைக் குதிரை மிதித்துவிடுமோ என்று அஞ்சினேன். இறைத்தூதர் அவர்களே! அவன் அதன் பக்கத்தில் இருந்தான். எனவே, நான் தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு அவன் அருகில் சென்றேன். பிறகு, நான் வானை நெருங்கியபோது அங்கு மேகம் போன்றதொரு பொருளைக் கண்டேன். அதில் விளக்குகள் போன்ற (பிரகாசிக்கும்) பொருள்கள் இருந்தன. உடனே நான் வெளியே வந்(து பார்த்)தபோது அதைக் காணவில்லை'' என்று சொன்னேன்.

நபி(ஸல்) அவர்கள், 'அது என்னவென்று நீ அறிவாயா?' என்று கேட்டார்கள். நான், 'இல்லை (தெரியாது)'' என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள் 'உன் குரலைக் கேட்டு நெருங்கிவந்த வானவர்கள் தாம் அவர்கள். நீ தொடர்ந்து ஓதிக்கொண்டிருந்திருந்தால் காலையில் மக்களும் அதைப் பார்த்திருப்பார்கள்; மக்களை விட்டும் அது மறைந்திருக்காது'' என்று கூறினார்கள்.

மரண வேளையிலும் குர்ஆன் ஓதிய பெருமானார் {ஸல்}….

பெருமானார் {ஸல்} அவர்கள் மரணவேதனையில் உடல்ரீதியாக கஷ்டப்படும் பொழுது கூட ''அல்முஅவ்விதத்தைன் '' என்று சொல்லக்கூடிய சூரத்துல் ஃபலக், சூரத்துல் இக்லாஸ், சூரத்துன் நாஸ் ஆகிய அத்தியாயங்களை ஓதி தங்களின் இரு கைகளிலும் ஊதி உடல் முழுவதும் தடவிக்கொண்டு கடுமையான மரண வேதனையிலிருந்து சற்று நிவாரணம் பெற்றார்கள்.


மாநபி {ஸல்} அவர்கள்  நோய்வாய்ப்பட்டால், 'அல்முஅவ்விஃதாத்' (பாதுகாப்புக் கோரும் கடைசி மூன்று) அத்தியாயங்களை ஓதித் தம் மீது ஊதிக் கொள்வார்கள். அவர்களின் (இறப்பிற்கு முன்) நோய் கடுமையானபோது, நான் அவற்றை ஓதி அவர்களின் (கையில் ஊதி அந்தக்) கையாலேயே (அவர்களின் உடல் மீது) தடவிக் கொண்டிருந்தேன். நபியவர்களின் கரத்திற்குள் இருக்கும் (பரக்கத்தை) நாடியே அவ்வாறு செய்தேன்.  என்று அன்னை ஆயிஷா (ரலி) அறிவித்தார்கள். ( நூல் புகாரி )


குர்ஆன் அதனுடன் தொடர்பு வைப்பவரை உயர்த்தும்….

அலீ (ரலி) அவர்களின் ஆட்சிக்காலம் அது. பஸராவின் ஆளுநராக அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) வீற்றிருக்கின்றார்கள்.

ஒரு நாள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் முக்கிய விவகாரம் குறித்து குறைஷி குலத்தின் மேன்மக்களோடு அமர்ந்து விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

عن أبي العالية: كنت آتي ابن عباس فيرفعني على السرير وقريش أسفل من السرير، فتغامز بي قريش، وقالوا: يرفع هذا العبد على السرير ؟ ! ففطن بهم ابن عباس، فقال: إن هذا العلم يزيد الشريف شرفا ويجلس المملوك على الأسرة.

அப்போது, ”அபுல் ஆலியா” ரஃபிவு இப்னு மிஹ்ரான் என்பவர்கள் அந்த அவைக்கு வருகை தருகின்றார்கள். அவர்களைக் கண்ட இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் மலர்ந்த முகத்தோடு வரவேற்று, தாங்கள் அமர்ந்திருந்த இருக்கையை வலது புறமாக போட்டு, சற்று உயர்த்தி, அதிலே அவர்களை அமரச் சொல்லி தாங்கள் கீழே அமர்ந்தார்கள்.

சுற்றியிருந்த குறைஷி மேன்மக்கள் தங்களுக்குள் “இப்னு அப்பாஸ் செய்த இந்த காரியத்தைக் கண்டீர்களா? ஒரு அடிமைக்கு எவ்வளவு மரியாதை செய்கின்றார்?” என்று பேசிக் கொண்டதோடு அபுல் ஆலியா அவர்களை கேலி பேசினார்கள்.

இதனைச் செவிமடுத்த இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் குறைஷி குல மேன்மக்களை நோக்கி “மார்க்க அறிவு என்பது இப்படித் தான் சிறப்புக்கு சிறப்பு சேர்க்கும்! பிற மக்களுக்கு மத்தியில் அவர்களின் கண்ணியத்தை உயர்த்தும்! ஏன்? அடிமைகளைக் கூட அரியணையில் அமர வைத்து அழகு பார்க்கும்! இதோ! நீங்கள் யாரைக் குறித்து விமர்சிக்கின்றீர்களோ இந்த அபுல் ஆலியாவை நான் உயர்த்திப் பார்ப்பதாக நீங்கள் கருதுகின்றீர்கள்.

உண்மை அதுவல்ல! அல்லாஹ்வின் தூய வார்த்தையான அல்குர்ஆனோடு அடிமையாக இருந்த அபுல் ஆலியா அவர்கள் கொண்டிருந்த இடைவிடாத் தொடர்பின் மூலம் இந்த உயர்வை அல்லாஹ் அவருக்கு வழங்கினான்” என்றார்கள்.

யார் இந்த அபுல் ஆலியா?...

அபூபக்ர் இப்னு அபூ தாவூத் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “நபித்தோழர்களுக்குப் பின்னால் குர்ஆனிய அறிவைப் பரிபூரணமாக பெற்றவர்களில் முதலாமவர் அபுல் ஆலியா ரஃபிவு இப்னு மிஹ்ரான் தாபிஈ (ரஹ்) அவர்கள், அடுத்து ஸயீத் இப்னு ஜுபைர் (ரஹ்) அவர்கள் ஆவார்கள்.

பெரும்பாலான நபித்தோழர்களைச் சந்தித்ததோடு மாத்திரமல்லாமல் அவர்களிடம் இருந்து மார்க்க ஞானத்தையும் கற்றுக் கொண்டார்கள். அதிலும் குறிப்பாக, உமர் (ரலி), அலீ (ரலி) அபூதர் (ரலி) உபை இப்னு கஅப் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), இப்னு மஸ்வூத் (ரலி) ஆகிய நபித்தோழர்களிடம் மிகவும் நெருக்கத்தைப் பெற்று சன்மார்க்க அறிவைப் பெற்றிருக்கின்றார்கள்.

உபை இப்னு கஅப் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), ஆகியோரிடம் தலா ஒரு முறையும், உமர் (ரலி) அவர்களிடம் தலா மூன்று முறையும் முழுக்குர்ஆனையும் மனனமாக ஓதிக் காட்டியும் இருக்கின்றார்கள்.

அடிமை எனும் ஸ்தானத்திலிருந்து திருக்குர்ஆன் விரிவுரையாளர் எனும் நிலைக்கு….

ولد رُفيع بن مهران في بلاد "فارس", وعلى أرضها نشأ وترعرع, ولما شرع المسلمون بغزو بلاد فارس ليُخرِجوا أهلها من الظلمات إلى النور… وقع رفيع أسيرا في أيدي المسلمين.
ثم ما لبث أن أسلم وأقبل على كتاب الله, وتعلم حديث رسول الله صلى الله عليه وسلم, والكتابة العربية.

அபூபக்ர் (ரலி) ஆட்சிகாலத்தில் பாரசீகத்தை நோக்கிச் சென்ற முஸ்லிம்களின் படை பாரசீகத்தின் ஒரு பகுதியை வெற்றி கொண்டு, ஏராளமான ஃகனீமத் பொருட்கள் மற்றும் நிறைய கைதிகளோடு மதீனா நோக்கி வந்தது.

அந்த கைதிகளில் ஒருவராக, இணைவைப்பில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருந்தவர் தான் இந்த ரஃபிவு இப்னு மிஹ்ரான் அவர்கள்.

பனூதமீம் கோத்திரத்தைச் சார்ந்த ஸாலிஹான நபித்தோழியர்களில் ஒருவருக்கு அடிமையாக போய்ச் சேர்ந்தார்கள்.

அங்கு தான் ரஃபிவு இப்னு மிஹ்ரான் அவர்களின் இதயத்திற்கு அல்லாஹ் ஹிதாயத்தின் வாசலைத் திறந்து விட்டான்.

ஆம் நபித்தோழர்களின் வியத்தகு வாழ்வைப் பார்த்த ரஃபிவு இப்னு மிஹ்ரான் அவர்கள் கொஞ்ச நாளிலேயே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். அத்தோடு குர்ஆன் ஷரீஃபோடு அழகியதொரு தொடர்பையும் ஏற்படுத்திக் கொண்டார்கள்.

அவர்களோடு இன்னும் அடிமையாக இருந்த சிலரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். இவர்களின் எஜமானர்களான ஸஹாபாக்கள் தங்களுக்கு பணிவிடை செய்வதோடு ஒரு நாளில் ஒரு குர்ஆனை ஓதி முடிக்க வேண்டும் என ஆணையும் பிறப்பித்தனர். பகல், இரவு என எஜமானர்களின் பணிவிடைகளுக்கு இடையே மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் குர்ஆனை ஓதினர். எனினும் இது மனச் சோர்வையும், உடல் தளர்வையும் ஏற்படுத்தவே எஜமானர்களிடம் இது குறித்து கோரிக்கை வைத்ததும், அது இரண்டு நாளாக மாற்றப்பட்டது. அதுவும் சிரமமாக ஆகவே மீண்டும் கோரிக்கை வைக்கப்பட்டு மூன்று நாளாக உயர்த்தப்பட்டது.

فكنّا نختم القرآن الكريم كل ليلة مرة، فشقّ ذلك علينا فجعلنا نختم كلّ ليلتين مرة، فشق علينا فجعلنا نختم كل ثلاث ليال مرة، فشقَّ علينا حتّى شكا بعضنا إلى بعض, فلقينا أصحاب رسول الله، صلى الله عليه وسلم.
فعلمونا أن نختم كل جمعة مرّة, فصلينا ونمنا ولم يشق علينا بعد ذلك.

ரஃபிவு இப்னு மிஹ்ரான் தலைமையில் சிலர் ஒன்று கூடி மூத்த ஸஹாபாக்கள் சிலரிடம் இது குறித்து முறையிட வந்தனர். அங்கே, ரஃபிவு இப்னு மிஹ்ரான் அவர்கள் “நாங்கள் எங்கள் எஜமானர்களுக்கு பகல் மற்றும் இரவு நேரங்களில் பணிவிடைகள் மற்றும் ஊழியம் செய்கின்றோம். சிறிது நேர ஓய்வு, சிறிது நேர தூக்கம் என்று போக மீதமுள்ள அனைத்து நேரங்களிலும் குர்ஆனையே ஓதிக் கொடிருக்கின்றோம்.

எங்களுக்கு முழுக்குர்ஆனையும் ஓதி முடிப்பதற்கு இன்னும் கூடுதலாக அவகாசம் தர வேண்டும்” என்று வேண்டினார்கள்.

அது கேட்ட நபித்தோழர்கள் வேண்டுமானால் ஒரு ஜும்ஆவை காலக் கெடுவாக எடுத்துக் கொண்டு, ஒவ்வொரு ஜும்ஆவிற்கும் ஒரு குர்ஆனை ஓதி முடியுங்கள்!” என்று உத்தரவிட்டார்கள்.

இதன் பின்னர், ரஃபிவு அவர்கள் தங்களுக்கு கிடைத்த நேரங்களில் உபை இப்னு கஅப் (ரலி), உமர் (ரலி) இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோரிடம் சென்று குர்ஆனை மனனமாக ஓத ஆரம்பித்தார்கள். அத்தோடு குர்ஆனுடைய விளக்கத்தையும் படித்தார்கள்.

ஒரு கட்டத்தில் குர்ஆனோடு அலாதியான தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட இவரைப் பார்த்த இவர்களின் எஜமானி ரஃபிவு அவர்களின் வேலைப் பளுவை குறைத்து, மார்க்கக் கல்வியை பயில அனுமதி அளித்தார்கள். குர்ஆன் மற்றும் ஹதீஸ் துறையில் சிறந்த ஞானம் பெற்றவராக உருவெடுத்ததும் இவர்களை விடுதலை செய்திட முன் வந்தார்கள்.
وقالت: اشهدوا يا معشر المسلمين أني أعتقت غلامي هذا رغبة في ثواب الله
وطمعا بعفوه ورضاه
وأنه ليس لأحد عليه من سبيل إلاّ سبيل المعروف.
اللهم إني أدّخره عندك ليوم لا ينفع فيه مال ولا بنون

ஒரு ஜும்ஆ உடைய நாளில் முஸ்லிம்களுக்கு மத்தியில் ரஃபிவு அவர்களை அழைத்து வந்த அவர்களின் எஜமானி “முஸ்லிம்களே! அல்லாஹ்வின் மகத்தான கூலியை, மேலான மன்னிப்பை ஆதரவு வைத்து அழகிய முறையில் நான் இவரை உரிமை விடுகின்றேன்” என்று கூறிவிட்டு, யாஅல்லாஹ்! இதோ! இந்த செயலை செல்வமும், பிள்ளைச் செல்வங்களும் பயன் தராத அந்த மறுமை நாளுக்காக முன் கூட்டியே நான் உன்னிடம் அனுப்பி வைக்கின்றேன்” என்று பிரார்த்தித்தார்கள்.

ஆம்! இணைவைப்பில் ஊரிப்போயிருந்த, அடிமையாக இருந்த ரஃபிவு இப்னு மிஹ்ரான் தூய இஸ்லாத்தை ஏற்று, புனித குர்ஆனோடு ஏற்படுத்திக் கொண்ட அந்த தொடர்பு உலகின் அனைத்து இமாம்களாலும் அங்கீகரிக்கப்பட்ட முதல் நிலை திருக்குர்ஆன் விரிவுரை அறிஞராக மாறிப்போனார்கள் “அபுல் ஆலியா” ரஃபிவு இப்னு மிஹ்ரான் தாபிஈ (ரஹ்) அவர்கள்.

மார்க்கப் போரில் பங்கெடுத்து தீனுக்காக வீரத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற தீராத வேட்கையும் அவரின் இதயத்தில் இடம் பெற்றிருந்தது. அதற்காக பயிற்சி மேற்கொண்டிருந்த போது கீழே விழுந்து காலில் முறிவு ஏற்பட்டது. அந்த முறிவு அவர்களுக்கு பலத்த வலியை ஏற்படுத்தியது. வலியால் துடித்த அவரை மருத்துவரிடம் அழைத்துச் சென்ற போது, மருத்துவர்கள் உயர் சிகிச்சைகள் மேற்கொள்ள ஆலோசனை வழங்கினார்கள்.

அதன் ஒரு பகுதியாக மயக்க மருந்து பயன்படுத்தி அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றார்கள்.

فقال: أحضروا لي قارئاً يتقن كتاب الله، واجعلوه يقرأ علي ما تيسر من آياته، فإذا رأيتموني قد احمر وجهي واتسعت حدقتاي وثبت نظري في السماء فافعلوا بي ما شئتم.
وقرأ القارئ القرآن، فلما وقع ما ذكر، ونظر وثبت بصره في السماء نفذوا أمره ونشروا ساقه وبتروها، فلما أفاق قال له الطبيب: كأنك لم تشعر بآلام الشق والبتر؟ فقال: لقد شغلني برد حب الله وحلاوة ما سمعته من كتاب الله عن حرارة المناشير.

அதற்கு இசைவு தெரிவிக்காத அபுல் ஆலியா (ரஹ்) அவர்கள் “குர்ஆனை அழகிய முறையில் ஓதக் கூடியவர்களை அழைத்து என் அருகே அவர்களை ஓதச் சொல்லுங்கள்! அப்போது, உங்களின் அறுவை சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்! என்று கூறினார்கள்.

அவ்வாறே செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்ததும் மருத்துவர் அபுல் ஆலியா (ரஹ்) அவர்களிடம் “எப்படி உங்களால் இவ்வாறு எவ்வித சலனமும் இல்லாமல் இருக்க முடிந்தது? என்று கேட்டார்.

அதற்கு, “படைத்த ரப்பின் நேசம் இதயத்திலும், அல்குர்ஆனின் இனிமை செவியிலும் ஊற்றுப் பிரவாகம் எடுக்கும் போது இவைகள் எல்லாம் அதற்கு முன் நின்று ஈடு கொடுக்க முடியுமா?” என்று பதில் கூறினார்கள்.

                                        ( நூல்: ஸியரு அஃலா மின் நுபலா )  

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் அவனுடைய புனித வேதத்தோடு தொடர்பு வைத்துக் கொள்கிற நல்ல நஸீபை தந்தருள்வானாக!

ஆமீன்!! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

இந்த தலைப்புக்கு இன்னும் மேலதிகத் தகவல் வேண்டுமானால்….

குர்ஆனின் தொடர்பைத் தொடர்ந்திடுவோம் என்ற தலைப்பிலும், திருக்குர்ஆன் தீவிரவாதத்தைத் தூண்டுகின்றதா? என்ற தலைப்பிலும் பார்த்துக் கொள்ளவும்.

மூன்றாம் நாள் தராவீஹ் பயான் தலைப்பு:  

”இஸ்லாம் எனும் மகத்தான அருட்கொடை!!!”


நினைவு கூர்ந்து பார்க்க வேண்டிய மூன்று அம்சங்கள்!!!



தராவீஹ் தொடர் பயான்!!

இன்ஷா அல்லாஹ்! முதல் பத்து நாட்களுக்கான பயான்கள்மனித குலத்திற்கு அல்லாஹ் வழங்கிய மகத்தான அருட்கொடைகள்!!!” எனும் தலைப்பின் கீழ் வழங்கப்படும்!


தொடர் – 1, மூன்று தலைப்புகள்!!
நினைவு கூர்ந்து பார்க்க வேண்டிய மூன்று அம்சங்கள்!!!




முதல் நாள் தராவீஹ் தொழுகையை மிகச் சிறப்பாக முடித்து விட்டு முதல் நோன்புக்கான ஆயத்தப்பணிகளில் நாம் ஈடுபட்டு இருக்கின்றோம்.

அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் 30 நோன்பையும், இதர வணக்க, வழிபாடுகளையும் எவ்வித தடங்கல் இன்றி பரிபூரணமாக நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் நல்குவானாக! ஆமீன்!!

இன்றைய நாளின் தராவீஹ் தொழுகையில் அல் பகரா அத்தியாயத்தின் 176 வசனங்கள் ஓதப்பட்டிருக்கின்றன.

அதில் அல்லாஹ் முஃமின்கள், முஷ்ரிக்குகள், காஃபிர்கள், யூதர்கள், கிறிஸ்துவர்கள், நட்சத்திர வணங்கிகள், நயவஞ்சகர்கள் என பல தரப்பினர்கள் குறித்து பேசுகின்றான்.

ஆதம் {அலை}, இப்ராஹீம் {அலை}, இஸ்மாயீல் {அலை}, யஃகூப் {அலை} ஸுலைமான் {அலை} ஆகியோர் குறித்தும் நபி {ஸல்} அவர்களின் தூதுத்துவம், சுவர்க்கம் நரகம் குறித்தும், வானவர்கள், ஷைத்தான் குறித்தும் பேசுகின்றான்.

தொழுகை, ஜகாத், ஹஜ், உம்ரா, மறுமை நம்பிக்கை, ஹலால், ஹராம் என முஸ்லிம்களின் வாழ்க்கையோடு தொடர்பில் இருக்கிற பல்வேறு அம்சங்கள் குறித்து பல இடங்களில் பேசுகின்றான்.

என்றாலும், இந்த நேரத்தில் இத்துனை அம்சங்கள் குறித்தும் பேசுவது சாத்தியமில்லை என்பதால் நமக்கு பயன் தருகிற மிக முக்கியமான அம்சங்கள் குறித்து இன்று பார்ப்போம்.

அல்லாஹ் மூன்று விஷயங்களை நினைவு கூர்ந்து பார்க்குமாறு நம்மை நோக்கி அறைகூவல் விடுக்கின்றான்.

1. அல்லாஹ்வை நினைவு கூர்ந்து பார்க்குமாறும், 2. அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளை நினைவு கூர்ந்து பார்க்குமாறும், 3. முன் வாழ்ந்த நபிமார்கள், அவர் தம் சமூக மக்களின் வாழ்க்கை வரலாறுகளை, நினைவு கூர்ந்து பார்க்குமாறும் கட்டளை பிறப்பிக்கின்றான்.

فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ
يَا بَنِي إِسْرَائِيلَ اذْكُرُوا نِعْمَتِيَ الَّتِي أَنْعَمْتُ عَلَيْكُمْ وَأَنِّي فَضَّلْتُكُمْ عَلَى الْعَالَمِينَ ()
وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا
وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ إِنَّكُمْ
وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَنْ نُؤْمِنَ لَكَ حَتَّى نَرَى اللَّهَ

وَإِذْ என்ற வார்த்தைக்கு விரிவுரையாளர்கள் وَاذْكُر என்றே விளக்கம் தருகின்றார்கள். அதாவது மூஸா (அலை) அவரின் சமூகத்திற்கு சொன்னதை, மூஸா (அலை) அவர்களிடம் அவர்களின் சமூகம் சொன்னதை நினைவு கூர்ந்து பாருங்கள்!

1. அல்லாஹ்வை நினைவு கூர்வது….

فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ

எனவே என்னை நீங்கள் நினைவு கூருங்கள்! நானும் உங்களை நினைவு கூருகின்றேன்!”                                              ( அல்குர்ஆன்: 2: 152 )

இந்த இறைவசனத்தில் அல்லாஹ் தன்னை நினைக்குமாறு கட்டளை பிறப்பித்ததோடு நின்று விடாமல் அதனால் விளைகிற நன்மையையும் சேர்த்தே குறிப்பிடுகின்றான்.

அல்லாஹ்வை நினைவு கூர்வது என்பதன் பொருள் 1. வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் அல்லாஹ்வை நினைவு கூர்வது. 2. அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்று வாழ்வது, அவன் விலக்கிய விக்கல்கள்களில் இருந்து விலகி வாழ்வது, 3. அல்லாஹ்வை அதிகம் திக்ர் செய்வதுஎன்பதாகும்.

1. வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் அல்லாஹ்வை நினைவு கூர்வது.

إِنْ أُرِيدُ إِلَّا الْإِصْلَاحَ مَا اسْتَطَعْتُ وَمَا تَوْفِيقِي إِلَّا بِاللَّهِ عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهِ أُنِيبُ ()


ஷுஐபு {அலை} அவர்கள் தம் சமூக மக்களின் நெருக்கடியை சமாளித்துக் கொண்டு அவர்களுக்கு பதில் தரும்போதுநான் ஆற்ற விரும்புகின்ற சேவைகள் அனைத்தும் அல்லாஹ்வின் பேருதவியைக் கொண்டே இருக்கின்றன. நான் அவனையே முழுமையாகச் சார்ந்து விட்டேன்! அனைத்து விஷயத்திலும் அவன் பக்கமே நான் திரும்புகின்றேன்!” என்று கூறினார்கள்.           ( அல்குர்ஆன்: 11: 88 )

فَلَمَّا رَآهُ مُسْتَقِرًّا عِنْدَهُ قَالَ هَذَا مِنْ فَضْلِ رَبِّي

ஸுலைமான் {அலை} அவர்கள், பல ஆயிரம் மைல் தொலைவில் இருந்த ஸபா நாட்டு அரசியின் சிம்மாசனம் கண் மூடி திறக்கும் நேரத்திற்குள் தங்கள் அவைக்குள் கொண்டு வரப்பட்ட போது மகிழ்ச்சியில்இது என் இறைவனின் அருட்கொடையாகும்என்று உரக்கக் கூறினார்கள்.            ( அல்குர்ஆன்: 27: 40 )

قَالَ هَذَا رَحْمَةٌ مِنْ رَبِّي

துல்கர்னைன் {அலை} அவர்கள் பிரம்மாண்டமாக கட்டி முடித்த இரும்பால் ஆன தடுப்புச் சுவரைக் கண்டு அம்மக்கள் வியப்பில் ஆழ்ந்த போது அம்மக்களை நோக்கி துல்கர்னைன் {அலை} அவர்கள்இது என்னுடைய இறைவனின் கருணையாகும்என்று பதில் கூறினார்கள்.                    ( அல்குர்ஆன்: 18: 98 )

قَالَ إِنَّمَا أَشْكُو بَثِّي وَحُزْنِي إِلَى اللَّهِ

யஃகூப் {அலை} அவர்கள் தங்களின் மகனார் யூஸுஃப் {அலை} அவர்களையும், புன்யாமீன் அவர்களையும் இழந்து தவிக்கும் போதுஎன்னுடைய துக்கத்தையும், துயரத்தையும் நான் அல்லாஹ்விடம் மட்டுமே முறையிடுகின்றேன்என்று கூறினார்கள்.                                                ( அல்குர்ஆன்: 12: 86 )

قَالَ رَبِّ نَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ () وَلَمَّا تَوَجَّهَ تِلْقَاءَ مَدْيَنَ قَالَ عَسَى رَبِّي أَنْ يَهْدِيَنِي سَوَاءَ السَّبِيلِ ()

மூஸா {அலை} அவர்கள் ஃபிர்அவ்னுடைய இராணுவத் தேடலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள மத்யனை நோக்கிச் சென்ற போதுஎன் இறைவா! என்னை கொடுமையாளர்களிடம் இருந்து காப்பாற்றுவாயாக!” என்று கூறினார்கள்.

 தஞ்சம் தேடிச் சென்று மத்யனில் நுழைந்ததும்என்னுடைய இறைவன் எனக்கு நேரான வழியைக் காட்டுவான்என்றும் கூறினார்கள். ( அல்குர்ஆன்: 28:21,22 )

மேன்மக்களான நபிமார்கள் தங்களுக்கான மகிழ்ச்சியான தருணங்களின் போதும் சரி, நெருக்கடியான தருணங்களின் போதும் சரி முதலில் அவர்கள் நினைத்தது அல்லாஹ்வை தான், அல்லாஹ்வை மட்டும் தான்.

ஆதலால் அல்லாஹ் அவர்களுடைய எல்லாத் தருணங்களிலும் அவர்களுடன் இருந்தான். 

2. அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்று வாழ்வது, அவன் விலக்கிய விலக்கல்களில் இருந்து விலகி வாழ்வது.

இது சீஸன் காலம். ஆம் சில பேர்களுக்கு தொழுகைக்கான சீஸன் காலம் இந்த மாதம் முடிந்த உடன் தொழுகையையும் முடித்துக் கொள்வார்கள்.

இன்னும் சில பேர்கள்அல்லாஹ்வுடைய நினைவு மனதில் இருந்தால் போதும் எனக்கு அல்லாஹ்வின் நினைவு மனதில் எப்பவுமே இருக்கின்றதுஎன்று அவர்கள் தொழாமல் இருப்பதற்கான காரணத்தை இப்படி வியாக்கியானம் செய்வார்கள்.

وَأَقِمِ الصَّلَاةَ لِذِكْرِي ()

அல்லாஹ் இப்படியானவர்களை நோக்கியே இப்படிக் கூறுவான்.. “என்னை நினைவு கூர்வதற்காகத் தொழுகையை நிலை நிறுத்துவீராக!” ( அல்குர்ஆன்: 20: 14 )

حَدَّثَنَا عَطَّافُ بْنُ خَالِدٍ ، قَالَ : حَدَّثَنَا زَيْدُ بْنُ أَسْلَمَ ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ ، رَضِيَ اللَّهُ عَنْهُ خَرَجَ لَيْلَةً يَحْرُسُ النَّاسَ ، فَمَرَّ بِامْرَأَةٍ وَهِيَ فِي بَيْتِهَا وَهِيَ تَقُولُ
تَطَاوَلَ هَذَا اللَّيْلُ وَاسْوَدَّ جَانِبُهْ ... وَطَالَ عَلَيَّ أَنْ لاَ خَلِيلَ أُلاَعِبُهْ
فَوَاللَّهِ لَوْلاَ خَشْيَةُ اللهِ وَحْدَهْ ... لَحُرِّكَ مِنْ هَذَا السَّرِيرِ جَوَانِبُهْ
فَلَمَّا أَصْبَحَ عُمَرُ أَرْسَلَ إِلَى الْمَرْأَةِ ، فَسَأَلَ عَنْهَا ، فَقِيلَ
 هَذِهِ فُلاَنَةُ بِنْتُ فُلاَنٍ ، وَزَوْجُهَا غَازٍ فِي سَبِيلِ اللهِ ، فَأَرْسَلَ إِلَيْهَا امْرَأَةً ، فَقَالَ : كُونِي مَعَهَا حَتَّى يَأْتِيَ زَوْجُهَا ، وَكَتَبَ إِلَى زَوْجِهَا ، فَأَقْفَلَهُ ، ثم دخل على حفصة ابنته رضي الله عنها فقال اني سائلك عن آمر قد أهمني فافرجيه عني. في كم تشتاق امرأة الى زوجها فخفضت رأسها واستحيت قال : فان الله لا يستحي من الحق قَالَتْ : أَرْبَعَةَ أَشْهُرٍ ، أَوْ خَمْسَةَ أَشْهُرٍ ، أَوْ سِتَّةَ أَشْهُرٍ ، فكتب عمر رضي الله عنه ان لا تحـبس الجيوش فوق أربعة اشهر
رواه سعيد بن منصور في سننه واخرجه عبد الرزاق في مصنفه

உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலம் அது. ஒரு நாள் இரவு உமர் (ரலி) அவர்கள் நகர்வலம் வருகின்றார்கள். ஒரு வீட்டிலிருந்து ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்கிறது. அழுகையின் ஊடாக இடையே ஏதோ சில வாசகங்களையும் அப்பெண்மனி உதிர்த்துக் கொண்டிருந்தார்.

செவியைக் கூர்மையாக்கி கேட்கின்றார்கள். அப்பெண்மனிஎத்துனை இரவுகள் என் துணைவர் இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது. எத்துனை நீண்டதாகத் தெரிகிறது இந்த இரவுகள்? என் துணைவர் என்னுடன் கொஞ்சிக் குலாவாமல் எங்கோ இருப்பதனால்….

அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சொல்கின்றேன்! அல்லாஹ்வின் அச்சம் மட்டும் என் உள்ளத்தில் இல்லாது போயிருக்குமானால், இந்த கட்டில் என்றோ அதன் உண்மைத் தன்மையை இழந்திருக்கும்என் தேகமும் தான்…” என்ற பொருள் பட கவி நடையில் தன் உணர்வை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.

கவிதை வரிகள் உமர் (ரலி) அவர்களின் உள்ளத்தைப் பிழிந்தது. நெருஞ்சி முள்ளாய் தைத்தது. அங்கிருந்து அமைதியாய் அகன்று விட்டார்கள்.

மறுநாள் காலை அந்த வீட்டின் விவரங்களை சேகரிக்க உத்தரவுகள் பரந்தன. இறுதியில், அப்பெண்மனியின் கணவர் அறப்போரில் கலந்து கொள்ளச் சென்று, நீண்ட காலம் ஆகியும் திரும்பி வரவில்லை என்கிற தகவல் பெறப்பட்டு கலீஃபா உமர் (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

உடனே, கலீஃபா உமர் (ரலி) அவர்கள்ஒரு பெண்ணை தன்னோடு அழைத்துக் கொண்டு அப்பெண்மனியின் வீட்டிற்குச் சென்றார்கள். அப்பெண்மனியை அழைத்துதன்னோடு அழைத்து வந்த அப்பெண்மனியை சுட்டிக் காட்டி இதோ! இப்பெண்மனியை  உங்களுக்குத் துணையாக வைத்துக் கொள்ளுங்கள்! தங்கள் கணவருக்கு நான் கடிதம் எழுதி அவர் உடனே ஊருக்குப் புறப்பட்டு வர ஏற்பாடு செய்கிறேன்என்று கூறினார்கள்.

பின்னர், நேராக தங்களுடைய மகளான உம்முல் முஃமினீன் அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்றுமகளே! கடந்த இரு தினங்களாக என் நெஞ்சில் நெருஞ்சி முள்ளாய் குத்திக் கொண்டிருக்கிற ஒரு விஷயத்திற்கு நீ தெளிவாக விடையளித்து, என் உள்ளத்தை சிரமத்தில் இருந்து மீட்டெடுக்க வேண்டும்என்று கூறி விட்டு

தம் கணவனை விட்டும் பிரிந்து வாழ்கிற ஒரு பெண் எவ்வளவு நாள் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி, இயல்புகளோடு இருக்க இயலும்என்று கேட்டார்கள்.

இந்தக் கேள்வியைச் சற்றும் எதிர்பாராத அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்கள் வெட்கத்தால் தலை கவிழ்ந்தார்கள். தந்தையே! என்ன கேள்வி கேட்கிறீர்கள் என்று தெரிந்து தான் கேட்கின்றீர்களா?” என்று கேட்டார்கள்.

அதற்கு, உமர் (ரலி) அவர்கள்அல்லாஹ் சத்தியத்தைச் சொல்வதற்கு வெட்கப்படுவதில்லைஎன்கிற இறைவசனத்தை ஓதிக் காண்பித்து விட்டு, நடந்த சம்பவத்தை கூறினார்கள்.

அப்போது, அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்கள்நான்கு மாதம் அல்லது ஆறு மாதம்என்று பதில் கூறினார்கள்.

இதைக் கேட்டதும் உமர் (ரலி) அவர்கள் விரைவாக மஸ்ஜிதுன் நபவீயை நோக்கி வந்தார்கள். அறப்போரில் பங்கு பெற உலகின் நாலா பாகங்களுக்கும் சென்றிருக்கிற அத்துனை படைத் தளபதிகளுக்கும்நான்கு மாதங்களுக்கு மேலாக படையில் பங்கு பெற்றிருக்கும் போர் வீரர்கள் அனைவருக்கும் ஒரு மாத காலம் விடுப்பு கொடுத்து அவரவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப் பட வேண்டும்; இனிமேல் எந்தப் படை வீரர்களும் நான்கு மாதத்திற்கு மேல் போர்ப் பணி செய்யக்கூடாதுஎன கடிதம் எழுதி தூது அனுப்பினார்கள்.

        ( நூல்: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக், ஃகுலஃபாவுர் ரஸூல் {ஸல்}…. }

தன் இளமை சார்ந்த எதிர்பார்ப்புகள், உணர்வுகள் ஒரு கட்டத்தில் தன்னை வாட்டி வதைக்கும் போது அல்லாஹ்வின் நினைவும் அவனுடைய அச்சமும் தான் அவன் விலக்கிய குற்றச் செயலில் வீழாமல் தன்னைத் தடுத்தது என்று அப்பெண்மனி கூறிய விதம் உண்மையில் அல்லாஹ்வின் நினைவு பாவத்தில் வீழ்வதில் இருந்து பாதுகாக்கும் வலிமை உள்ளது என்பதை உணர்த்துகின்றது.

3. அல்லாஹ்வை அதிகம் திக்ர் செய்வது…..

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اذْكُرُوا اللَّهَ ذِكْرًا كَثِيرًا () وَسَبِّحُوهُ بُكْرَةً وَأَصِيلًا () هُوَ الَّذِي يُصَلِّي عَلَيْكُمْ وَمَلَائِكَتُهُ

இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அதிகமாக திக்ர் செய்யுங்கள்! மேலும், காலையிலும் மாலையிலும் அவனை துதித்துக் கொண்டிருங்கள், அவனே உங்கள் மீது கருணை பொழிகின்றான். அவனுடைய வானவர்களும் உங்கள் மீது கருணை புரியும் படி இறைஞ்சுகின்றார்கள்”.                   ( அல்குர்ஆன்: 33: 41 )

அல்லாஹ் நபி ஜகரிய்யா {அலை} அவர்களுக்கு குழந்தைப் பேற்றைக் கொண்டு சோபனம் சொன்ன போது, வியந்து போன ஜகரிய்யா {அலை} அவர்கள் அல்லாஹ்விடம் அதற்கான அடையாளம் என்ன என வினவிய போது

قَالَ رَبِّ اجْعَلْ لِي آيَةً قَالَ آيَتُكَ أَلَّا تُكَلِّمَ النَّاسَ ثَلَاثَةَ أَيَّامٍ إِلَّا رَمْزًا وَاذْكُرْ رَبَّكَ كَثِيرًا وَسَبِّحْ بِالْعَشِيِّ وَالْإِبْكَارِ ()

என் இறைவனே! எனக்கு ஓர் அடையாளத்தை நிர்ணயம் செய்! என்று பணிந்து கேட்டார். அதற்கு, ”நீர் மூன்று நாட்கள் வரை சைகையினாலே அன்றி மக்களிடம் பேசமாட்டீர் என்பதே அடையாளமாகும்.

இக்கால கட்டத்தில் உம் இறைவனை அதிகமாக திக்ர் செய்வீராக! மேலும், காலையிலும் மாலையிலும் அவனைத் துதித்துக் கொண்டிருப்பீராக! என்று கூறினான்.                                                   ( அல்குர்ஆன்: 3: 41 )

நபி மூஸா {அலை} அவர்கள் தங்களின் நீண்ட பிரார்த்தனையில் இறுதியாக

كَيْ نُسَبِّحَكَ كَثِيرًا () وَنَذْكُرَكَ كَثِيرًا ()

நாங்கள் உன்னை அதிகம் துதித்து, மேலும், உன்னை அதிகம் திக்ர் செய்ய வேண்டும் என்பதற்காக! என்று பிரார்த்தித்தார்கள்.          ( அல்குர்ஆன்: 20: 33, 34 )

இறைநம்பிக்கையாளர்களின் அழகிய பண்பாடுகளை ( இறைநம்பிக்கை, இறைவனுக்கு கட்டுப்படுதல், பொறுமை, பணிவு, தானதர்மம், நோன்பு, வெட்கத் தலங்களைப் பாதுகாத்தல் போன்றவைகளை ) பட்டியலிடும் இறைவன் எந்த ஒன்றோடும் அதிகம் என்கிற வார்த்தையை சேர்க்காமல் திக்ரைப் பற்றி பேசும் போது மட்டும் சேர்த்துப் பேசுவான்.

إِنَّ الْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ وَالْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْقَانِتِينَ وَالْقَانِتَاتِ وَالصَّادِقِينَ وَالصَّادِقَاتِ وَالصَّابِرِينَ وَالصَّابِرَاتِ وَالْخَاشِعِينَ وَالْخَاشِعَاتِ وَالْمُتَصَدِّقِينَ وَالْمُتَصَدِّقَاتِ وَالصَّائِمِينَ وَالصَّائِمَاتِ وَالْحَافِظِينَ فُرُوجَهُمْ وَالْحَافِظَاتِ وَالذَّاكِرِينَ اللَّهَ كَثِيرًا وَالذَّاكِرَاتِ أَعَدَّ اللَّهُ لَهُمْ مَغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا ()

ஆண்கள் மற்றும் பெண்களில் எவர்கள் அல்லாஹ்வை அதிகம் திக்ர் செய்பவர்களாகவும் இருக்கின்றார்களோ அவர்களுக்காக அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயார் செய்து வைத்துள்ளான்”.        ( அல்குர்ஆன்: 33: 35 )


1. அல்லாஹ்வை நினைவு கூர்வது….


وقد قال ابن أبي حاتم في تفسيره: حدثنا أبو عبد الله أحمد بن عبد الرحمن
 أخي ابن وهب، حدثنا عمي(عبد الله ابن وهب)، حدثني أبو صخر أن يزيد الرقاشي حدثه سمعت أنس بن مالك ولا أعلم إلا أن أنسا يرفع الحديث إلى رسول الله صلى الله عليه وسلم
 " أن يونس النبي عليه السلام حين بدا له أن يدعو بهذه الكلمات وهو في بطن الحوت قال: (اللهم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين) فأقبلت الدعوة تحت بالعرش فقالت الملائكة يا رب صوت ضعيف معروف من بلاد غريبة فقال أما تعرفون ذاك ؟ قالوا: يا رب ومن هو ؟ قال: عبدي يونس، قالوا: عبدك يونس الذي لم يزل يرفع له عملا متقبلا ودعوة مجابة، قالوا: يا ربنا أولا ترحم ما كان يصنعه في الرخاء فتنجيه من البلاء ؟ قال: بلى، فأمر الحوت فطرحه في العراء
 ورواه ابن جرير، عن يونس، عن ابن وهب

நபி யூனுஸ் {அலை} அவர்கள் மீன் வயிற்றில் இருக்கும் போது “அல்லாஹ்வே! உன்னைத்தவிர வேறு இறைவன் இல்லை! நீ தூய்மையானவன், திண்ணமாக, நான் குற்றம் செய்து விட்டேன்!” என்று அழுது பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்.

“இந்த அழுகுரல் அர்ஷைச் சுற்றியுள்ள வானவர்களுக்கும் கேட்டது. அப்போது, வானவர்கள் “அல்லாஹ்வே! நாங்கள் அதிகம் அறிந்த ஓர் குரல் இப்போது எங்கேயோ தூரமாக இருந்து அபயமும், மன்னிப்பும் கேட்பது போல் தெரிகின்றது. அல்லாஹ்வே! அவரின் குரலில் நாங்கள் பலகீனத்தை உணர்கிறோம்! என்றார்கள்.

அதற்கு, அல்லாஹ் “நீங்கள் அந்த சப்தத்தை கேட்கின்றீர்களா? என்று கேட்டான். அப்போது, வானவர்கள் ஆம்! நாங்கள் கேட்கிறோம்! “அல்லாஹ்வே! யார் அவர்? என்று வினவினார்கள்.

அதற்கு, அல்லாஹ் “என்னுடைய அடியார் யூனுஸ்” என்று பதில் கூறினான்.

அப்போது, வானவர்கள் “அல்லாஹ்வே! உன்னுடைய அடியார் யூனுஸ் நல்ல நிலையில் இருக்கும் போது ஏற்றுக் கொள்ளப்படுகிற அளவிலான இபாதத்களும், பதிலளிக்கத்தக்க நிறைய துஆக்களும் செய்திருக்கின்றாரே! இப்போது, அவர் ஏதோ ஆபத்தில் இருப்பதாக நாங்கள் கருதுகின்றோம். அல்லாஹ்வே! நீ அவரைக் காப்பாற்றி ஈடேற்றம் கொடுப்பாய் அல்லவா?” என்று கேட்டார்கள்.

அதற்கு, அல்லாஹ் “ஆம்! அவரை நான் காப்பாற்றுவேன்! ஈடேற்றம் நல்குவேன்” என பதில் கூறிவிட்டு, மீனுக்கு கரையில் வந்து யூனுஸ் {அலை} அவர்களைக் கக்குமாறு கட்டளையிட்டான். அவ்வாறே மீனும் யூனுஸ் {அலை} அவர்களை கரையில் வந்து கக்கி விட்டுச் சென்றது.

                                                ( நூல்: தஃப்ஸீர் அத் தபரீ )

2. அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளை நினைவு கூர்வது...

روى الحاكم في المستدرك على الصحيحين ج4/ص278, قال رحمه الله:" أخبرني أحمد بن محمد بن سلمة العنزي ثنا عثمان بن سعيد الدارمي ثنا عبد الله بن صالح المقرئ ثنا سليمان بن هرم القرشي وحدثنا علي بن حمشاد العدل ثنا عبيد بن شريك ثنا يحيى بن بكير ثنا الليث بن سعد عن سليمان بن هرم عن محمد بن المنكدر عن جابر بن عبد الله رضي الله عنهما قال خرج علينا النبي صلى الله عليه وسلم فقال:" خرج من عندي خليلي جبريل آنفا فقال يا محمد والذي بعثك بالحق إن لله عبدا من عبيده عبد الله تعالى خمس مائة سنة على رأس جبل في البحر عرضه وطوله ثلاثون ذراعا في ثلاثين ذراعا والبحر محيط به أربعة آلاف فرسخ من كل ناحية وأخرج الله تعالى له عينا عذبة بعرض الأصبع تبض بماء عذب فتستنقع في أسفل الجبل وشجرة رمان تخرج له كل ليلة رمانة فتغذيه يومه فإذا أمسى نزل فأصاب من الوضوء وأخذ تلك الرمانة فأكلها ثم قام لصلاته فسأل ربه عز وجل عند وقت الأجل أن يقبضه ساجدا وأن لا يجعل للأرض ولا لشيء يفسده عليه سبيلا حتى بعثه وهو ساجد قال ففعل فنحن نمر عليه إذا هبطنا وإذا عرجنا فنجد له في العلم أنه يبعث يوم القيامة فيوقف بين يدي الله عز وجل فيقول له الرب أدخلوا عبدي الجنة برحمتي فيقول رب بل بعملي فيقول الرب أدخلوا عبدي الجنة برحمتي فيقول يا رب بل بعملي فيقول الرب أدخلوا عبدي الجنة برحمتي فيقول رب بل بعملي فيقول الله عز وجل للملائكة قايسوا عبدي بنعمتي عليه وبعمله فتوجد نعمة البصر قد أحاطت بعبادة خمس مائة سنة وبقيت نعمة الجسد فضلا عليه

ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு நாள் நாங்கள் குழுமியிருந்த சபைக்கு வருகை தந்த அண்ணல் நபி {ஸல்} எங்களை நோக்கிதோழர்களே! கொஞ்ச நேரத்திற்கு முன்பாகத்தான் என் நண்பர் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் வருகை தந்து வியத்தகு வரலாறு ஒன்றைக் கூறி என்னை நெகிழ்ச்சியில் ஆழ்த்திப்போனார்என்று கூறி விட்டு எங்களிடம்என்னிடம் வருகை தந்த ஜிப்ரயீல் (அலை) அவர்கள்முஹம்மத் {ஸல்} அவர்களே! சத்தியத்தைக் கொண்டு உங்களை நபியாக அனுப்பிய அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ்வின் அடியார்களில் ஒரு நல்லடியார் இருந்தார்.

அந்த அடியார் நாற்புறமும் கடலால் சூழப்பட்ட மலைப்பிரதேசத்தில் மலையின் உச்சியில் 500 ஆண்டு காலம் அல்லாஹ்வை வணங்கி வழிபடுவதிலேயே கழித்து வந்தார்.

கடல் சூழ்ந்தஉப்பு நீர் நிறைந்த அந்தப் பகுதியிலும் கூட அல்லாஹ் அவருக்கு மதுரமான ஓர் நீரூற்றை ஓடச் செய்தான். அருகில் ஓர் மாதுளை மரத்தையும் உருவாக்கிக் கொடுத்தான்.

தினமும் மாலை நேரத்தில் மலையின் உச்சியிலிருந்து கீழிறங்கு வரும் அவர் அந்த மாதுளை மரத்திலிருந்து ஒரு கனியை உண்டு விட்டு, அந்த நீரூற்றிலிருந்து சிறிது நீர் அருந்தி விட்டு உளூ செய்து விட்டு மீண்டும் மலை உச்சிக்கு சென்று வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு விடுவார்.

ஒரு நாள் அந்த நல்லடியார் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும் போதுயாஅல்லாஹ்! என் உயிர் பிரியும் தருவாயில் என் ரூஹ் உனக்கு நான் ஸஜ்தா செய்யும் நிலையிலேயே பிரிய வேண்டும் என ஆசிக்கின்றேன்! மேலும், என் உடலை மறுமை நாள் பரியந்தம் வரையில் அந்த நிலையிலேயே நீ பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்! மேலும், அதே நிலையிலேயே நான் எழுப்பப்பட வேண்டும்! என்னுடைய இந்த ஆசையை நீ நிறைவேற்றித் தர வேண்டும்என்று கோரினார்.

அல்லாஹ்வும் அவரின் கோரிக்கைக்கு செவி சாய்த்து அப்படியே செய்தான்.

வானவர்களாகிய நாங்கள் விண்ணுலகத்திலிருந்து பூமிக்கு வரும் போதும், பூமியிலிருந்து விண்ணுலகிற்கு செல்லும் போதும் அவரை அதே நிலையிலேயேக் கண்டோம்.

தொடர்ந்து ஜிப்ரயீல் (அலை) அவர்கள் கூறினார்கள்: “ நாளை மறுமையில் மஹ்ஷர் பெருவெளியில் மக்களோடு மக்களாக அந்த நல்லடியார் அல்லாஹ்வின் சந்நிதானத்தில் நின்றிருப்பார்.

அப்போது, அல்லாஹ் வானவர்களிடம், அவரை நோக்கிஇதோ என்னுடைய இந்த அடியானை என் அருளின் துணை கொண்டு சுவனத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்என்பான்.

அதற்கு, அவர் அல்லாஹ்விடம்அல்லாஹ்வே! நான் செய்த என்னுடைய அமலின் துணை கொண்டு என்னை சுவனத்திற்கு அழைத்துச் செல்லுமாறு வானவர்களுக்கு நீ ஆணையிடுவாய் என்றல்லவா நான் எதிர் பார்த்தேன். ஆனால், நீயோ உன் அருளின் துணை கொண்டு சுவனத்திற்கு அழைத்துச் செல்லுமாறு ஆணையிடுகின்றாய்! அப்படியானால், என்னுடைய 500 ஆண்டு கால இபாதத் என்னவாயிற்று?” என்று வினவுவார்.

அப்போது, அல்லாஹ் தன் வானவர்களுக்குஇந்த அடியானுக்கு நான் வழங்கிய அருட்கொடைகளையும், இந்த அடியான் செய்த இபாதத்களையும் கணக்குப் பாருங்கள்என்று கட்டளையிடுவான்.

அப்போது வானவர்கள்இவரின் 500 ஆண்டு கால இபாதத் அனைத்தும் நீ அவருக்கு வழங்கிய அருட்கொடைகளில் ஒன்றான கண்பார்வைக்கு ஈடாகி விட்டது.

நீ வழங்கிய மற்றெந்த அருட்கொடைகளுக்கும் ஈடாக வேறெந்த அமலும் அவரின் பதிவேட்டில் இல்லைஎன்று அல்லாஹ்விடம் கூறுவார்கள்.

فيقول أدخلوا عبدي النار قال فيجر إلى النار فينادي رب برحمتك أدخلني الجنة فيقول ردوه فيوقف بين يديه فيقول يا عبدي من خلقك ولم تك شيئا فيقول أنت يا رب فيقول كان ذلك من قبلك أو برحمتي فيقول بل برحمتك فيقول من قواك لعبادة خمس مائة عام فيقول أنت يا رب فيقول من أنزلك في جبل وسط اللجة وأخرج لك الماء العذب من الماء المالح وأخرج لك كل ليلة رمانة وإنما تخرج مرة في السنة وسألتني أن أقبضك ساجدا ففعلت ذلك بك فيقول أنت يا رب فقال الله عز وجل فذلك برحمتي وبرحمتي أدخلك الجنة أدخلوا عبدي الجنة فنعم العبد كنت يا عبدي فيدخله الله الجنة قال جبريل عليه السلام إنما الأشياء برحمة الله تعالى يا محمد". هذا حديث صحيح الإسناد


அது கேட்ட அல்லாஹ் வானவர்களிடம்இதோ இந்த அடியானை நரகத்திற்கு இழுத்துச் செல்லுங்கள்என்பான்.

அவர் நரகத்திற்கு இழுத்து செல்லப்படுவார். வழி நெடுக அவர்இறைவா! உன் அருளின் துணை கொண்டே என்னை சுவனத்தில் நுழையச்செய்!” என அலறுவார்.

அந்த அலறலைக் கேட்டதும் அல்லாஹ் வானவர்களிடம்அந்த அடியானை என் முன் கொண்டு வந்து நிறுத்துங்கள்!” என்பான். அவர் அல்லாஹ்வின் திருமுன் நிறுத்தப்படுவார்.

அப்போது, அல்லாஹ்வுக்கும் அந்த அடியானுக்கும் இடையே நடக்கின்ற அந்த உரையாடல் இதோ….

அல்லாஹ்: என் அடியானே! ஒன்றுமே இல்லாமல் இருந்த உன்னை படைத்தது யார்?

அடியான்: நீ தான் என் இறைவா!

அல்லாஹ்: என் அடியார்களிலேயே 500 ஆண்டு கால ஆயுளையும், வணக்க வழிபாடுகள் செய்கிற ஆற்றலையும் கொடுத்து உன்னை வாழ வைத்தது யார்?

அடியான்: நீ தான் என் இறைவா!

அல்லாஹ்: கடலும்உப்பு நீரும் சூழ்ந்த இடத்தில் மதுரமான நீரூற்றையும், புற்பூண்டுகளே முளைத்திடாத பாறையிலிருந்து மாதுளை மரத்தையும் உனக்குக் கொடையாக வழங்கியது யார்?

அடியான்: நீதான் என் இறைவா!

அல்லாஹ்: உன் ரூஹ் ஸஜ்தாசிரம் பணிந்த நிலையில் பிரிய வேண்டும் என்று நீ ஆசித்த போது உன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொடுத்தது யார்?

அடியான்: நீதான் என் இறைவா!

இந்த உரையாடலை முடித்து வைக்கும் முகமாக, இறுதியாக அல்லாஹ் அந்த அடியானிடம்என் அடியானே! இவை அனைத்தும் என் அருளின் மூலமாகத்தான் நீ பெற்றாய்! இப்போதும், நீ என் அருளின் துணை கொண்டு தான் சுவனத்திற்கும் செல்ல இருக்கின்றாய்! அடியானே! என் அடியார்களில் நீ நல்லவனேஎன்று கூறி விட்டு வானவர்களை நோக்கிஇதோ இந்த என் அடியானை என் அருளின் துணை கொண்டு சுவனத்தில் கொண்டு போய் விட்டு விடுங்கள்!” என்பான்.

இதைக் கூறி விட்டு ஜிப்ரயீல் (அலை) அவர்கள் என்னிடம்முஹம்மத் {ஸல்} அவர்களே! ஓர் அடியானைச் சுற்றி ஈருலகிலும் நடைபெறும் அத்துனை காரியங்களும் அல்லாஹ்வின் அருளின் துணை கொண்டே தான் அமையப் பெறுகின்றதுஎன்று கூறி விடை பெற்றுச் சென்றார்என்று நபி {ஸல்} அவர்கள் எங்களிடம் கூறினார்கள்.                 ( நூல்: முஸ்தத்ரக் அலஸ் ஸஹீஹைன் )

3. முன் வாழ்ந்த நபிமார்கள், அவர் தம் சமூக மக்களின் வாழ்க்கை வரலாறுகளை, நினைவு கூர்வது...

عن أبي موسى الأشعري – رضي الله عنه ـ ، أن رسول الله – صلى الله عليه وسلم ـ نزل بأعرابي فأكرمه ، فقال له : « يا أعرابي سل حاجتك » قال : يا رسول الله ، ناقة برحلها, وأعنز يحلبها أهلي . قالها مرتين ، فقال له رسول الله – صلى الله عليه وسلم ـ:أعجزت أن تكون مثل عجوز بني إسرائيل ؟ فقال أصحابه : يا رسول الله ، وما عجوز بني إسرائيل ؟ قال : « إن موسى أراد أن يسير ببني إسرائيل فأضل عن الطريق ، فقال له علماء بني إسرائيل : نحن نحدثك أن يوسف أخذ علينا مواثيق الله أن لا نخرج من مصر, حتى ننقل عظامه معنا ، قال : وأيكم يدري أين قبر يوسف ؟ قالوا : ما تدري أين قبر يوسف إلا عجوز بني إسرائيل ، فأرسل إليها, فقال: دليني على قبر يوسف, فقالت : لا والله لا أفعل حتى أكون معك في الجنة ، قال : « وكره رسول الله– صلى الله عليه وسلم ـ ما قالت, فقيل له : أعطها حكمها فأعطاها حكمها فأتت بحيرة ، فقالت : أنضبوا هذا الماء . فلما نضبوه قالت : احفروا هاهنا, فلما حفروا إذا عظام يوسف ، فلما أقلوها من الأرض, فإذا الطريق مثل ضوء النهار »


நபி {ஸல்} அவர்கள் மேற்கொண்ட ஒரு பிரயாணத்தின் போது ஒரு கிராமத்தில் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.அப்போது ஒரு கிராமவாசி நபி {ஸல்} அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தார்.

நபி {ஸல்} அவர்களை மிகவும் கண்ணியப்படுத்தினார்.இச்செயலை கண்டு அக மகிழ்ந்து போன நபி {ஸல்} அவர்கள் மதீனா வந்தால் அவசியம் தங்களைச் சந்திக்க வருமாறு அழைப்பு கொடுத்துவிட்டு விடைபெற்றார்கள்.

சிறிது காலம் கழித்து அக்கிராம வாசி மதீனா வந்தார். நபி {ஸல்} அவர்களை மஸ்ஜிதுந் நபவீயில் சந்தித்தார். அவரை நபி {ஸல்} அவர்கள் அன்புடன் வரவேற்று உபசரித்தார்கள்.

அவர் விடைபெற்ற போது என்னிடம் ஏதாவது கேளுங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் அக்கிராம வாசியிடம் கேட்டார்கள். அதற்கவர் எனக்கு ஓர் ஒட்டகம் தேவை அதை நான் வாகனமாக பயன் படுத்திக் கொள்வேன் என்றார். மீண்டும் நபிகளார் வேறு ஏதாவது கேளுங்கள்! என்றார்கள். அதற்கவர், அதை பாதுகாக்க ஒரு நாய் வேண்டும் என்றார். மீண்டும் நபிகளார் வேறு ஏதாவது கேளுங்கள்! என்றார்கள், அதற்கவர் அவ்விரண்டையும் கவனித்துக் கொள்ள ஒரு பணிப்பெண்ணைத்தாருங்கள் என்று கேட்டார்.

இதுதான் உங்கள் தேவையா? என மாநபி (ஸல்) கேட்ட போது, ஆமாம் அல்லாஹ்வின் தூதரே! இதுவே எனக்குப் போதும் என்றார் அவர்.

அல்லாமா குஷைரீ (ரஹ்) அவர்கள் பதிவு செய்திருக்கும் இன்னொரு ரிவாயத்:
அக்கிராமவாசி பால் கறக்கும் ஓர் ஒட்டகம், பாலை கறக்க ஓர் பாத்திரம், பாலை அளக்க ஒரு அளவை தாருங்கள் என்றார்.

இதைக்கேட்ட நபிகளார் வேறு ஏதாவது கேளுங்கள்! என்று கூறிய போது இவை மட்டும் போதும் என்றார் அக்கிராமவாசி.

அல்லாமா தப்ரானீ (ரஹ்) அவர்கள் பதிவு செய்திருக்கும் ரிவயாத்
அக்கிராமவாசி ஓர் ஒட்டகம் தேவை, தாங்கள் அதை வழங்கினால் வாகனமாக பயன்படுத்திக் கொள்வேன், இன்னும் சில ஆடுகளைத் தந்தால் அதன் பாலைக் கறந்து என் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்வேன் என்றார். இதுதான் உங்களின் தேவையா? என்று வினவியபோது ஆமாம் இறைத்தூதரே! இதுவே எனக்குப் போதும் என்றார்.

இதைக்கேட்டதும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்: அல்லாஹ்வின் தூதராகிய நான் உமது தேவை குறித்து கேட்டபோது இவ்வளவு மலிவான பொருளை கேட்டு விட்டீரே! மூஸா (அலை) அவர்கள் காலத்தில் வாழ்ந்த மூதாட்டி மூஸா (அலை) அவர்களிடம் கேட்டது போல நீங்களும் கேட்க தவறி விட்டீரே! உம்மை விட அம்மூதாட்டி எவ்வளவோ சிறந்தவள் என்றார்கள்.

உடனே சுற்றியிருந்த தோழர்கள் யார் அந்த மூதாட்டி? அப்படி என்ன தான் கேட்டார்?ஆர்வமாய் அண்ணலாரிடம் கேட்டார்கள்.

மூஸா நபியவர்கள் பனூ இஸ்ரவேலவர்களை எகிப்திலிருந்து பைத்துல் முகத்தஸ்ஸிற்கு அழைத்துச் செல்ல முயன்ற போது பாதை தெரியாமல் பயணம் தடைபட்டது. அது குறித்து ஆலோசித்த போது அங்கிருந்த மூத்த வயதுடையவர்கள்இஸ்ரவேலவர்கள் பைத்துல் முகத்தஸ்ஸிற்கு பயண மேற்கொள்வதாக இருந்தால் தமது ஜனாஸாவையும் உடன் எடுத்துச் செல்ல வேண்டும் என நபி யூஸுப் (அலை) அவர்கள் வஸிய்யத் செய்ததாகவும் அதனால் தான் பயணம் தடை படுவதாகவும்சொன்னார்கள்.

சக இறைத்தூதர் நபி யூசுப் (அலை) அவர்களின் அடக்கத்தலம் குறித்து விசாரித்த போது இது குறித்த தகவல் வயது முதிர்ந்த ஒரு மூதாட்டிற்கு தெரியும் என தெரிந்து கொண்டார்கள்.

இறுதியில், அம் மூதாட்டியை சந்தித்த மூஸா (அலை) அடக்கத்தலம்குறித்து விசாரித்தார்கள்.

நான் அறிவித்து தந்தால் எனக்கு என்ன சன்மானம் தருவீர்கள்?என அம்மூதாட்டி கேட்டார்.என்ன வேண்டும்?எது கேட்டாலும் தருகிறேன் என்று மூஸா (அலை) அவர்கள் பதில் கூறினார்கள்.

அப்படியானால், மறுமையில் சுவனத்தில் உங்களுடன் நான் இருக்க வேண்டும் என தமது கோரிக்கையை முன் வைத்தார்கள்.அம்மூதாட்டியின் ஆர்வத்தையும், ஆவலையும் கண்டு வியந்த நபி மூஸா (அலை) அவர்கள் ஒப்புக்கொண்டு அல்லாஹ்விடம் துஆ செய்தார்கள்.

பின்பு அம்மூதாட்டி காண்பித்த நீரோடை அருகேயிருந்து யூஸுப் (அலை) அவர்களின் பிரேதம் கண்டெடுக்கப்பட்டு, பைத்துல் முகத்தஸை நோக்கி கொண்டு செல்லப்பட்டு அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.

                                     ( நூல்: அல் முஸ்தத்ரக் அல் ஹாகிம் )

மேற்கூறிய சம்பவத்தில் அந்தக் கிராமவாசியிடம் வாழ்க்கையில் எப்போதுமே மிக உயர்ந்த அம்சங்களையே விரும்பவேண்டும் என நேரிடையாகச் சொல்லாமல் முன் வாழ்ந்த சமூகத்தின் ஒருவரின் வரலாற்றுப் பிண்ணனியோடு அதன் வீரியத்தை உணர்த்தினார்கள் மாநபி {ஸல்} அவர்கள்.

எனவே, மேற்கூறிய மூன்று நிகழ்வுகளின் மூலம் பெற வேண்டிய பாடம் இது தான்.

அருட்கொடைகளை நினைவு கூர்வதால் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்ற எண்ணமும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அல்லாஹ்வின் பேருதவியும், வரலாற்றை நினைவு கூர்வதால் அழகிய படிப்பினையும் கிடைக்கிறது.

ஆகவே, வாழ்க்கையில் எப்போதும் இம்மூன்று அம்சங்களையும் மறவாமல் நினைவு கூர்ந்து வாழ்வோம்!

அல்லாஹ் நம் அனைவருக்கும் தௌஃபீக் செய்தருள்வானாக! ஆமீன்!!!