Sunday 5 May 2019

ரமழான் சிந்தனை – தொடர் 1. வெறும் சொல் அல்ல அது!!!


ரமழான் சிந்தனைதொடர் 1.
வெறும் சொல் அல்ல அது!!!

 



முதல் நாள் தராவீஹ் தொழுகையை மிகச் சிறப்பாக முடித்து விட்டு முதல் நோன்புக்கான ஆயத்தப்பணிகளில் நாம் ஈடுபட்டு இருக்கின்றோம்.

அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் 30 நோன்பையும், இதர வணக்க, வழிபாடுகளையும் எவ்வித தடங்கல் இன்றி பரிபூரணமாக நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் நல்குவானாக! ஆமீன்!!

இன்றைய நாளின் தராவீஹ் தொழுகையில் அல் பகரா அத்தியாயத்தின் 176 வசனங்கள் ஓதப்பட்டிருக்கின்றன.

அதில் அல்லாஹ் முஃமின்கள், முஷ்ரிக்குகள், காஃபிர்கள், யூதர்கள், கிறிஸ்துவர்கள், நட்சத்திர வணங்கிகள், நயவஞ்சகர்கள், பனூ இஸ்ரவேலர்கள் என பல தரப்பினர்கள் குறித்து பேசுகின்றான்.

ஆதம் {அலை}, இப்ராஹீம் {அலை}, இஸ்மாயீல் {அலை}, யஃகூப் {அலை} ஸுலைமான் {அலை} ஆகியோர் குறித்தும் நபி {ஸல்} அவர்களின் தூதுத்துவம், சுவர்க்கம் நரகம் குறித்தும், வானவர்கள், ஷைத்தான் குறித்தும் பேசுகின்றான்.

ஈமான், தொழுகை, ஜகாத், ஹஜ், உம்ரா, மறுமை நம்பிக்கை, ஹலால், ஹராம் கிப்லா திசை மாற்றம் என முஸ்லிம்களின் வாழ்க்கையோடு தொடர்பில் இருக்கிற பல்வேறு அம்சங்கள் குறித்து பல இடங்களில் பேசுகின்றான்.

நயவஞ்சகம், வாக்குறுதி மீறல், சூனியம் செய்தல், அதைக் கற்றல், அதற்கான எச்சரிக்கைகள் உண்மை பேசுதல், சோதனை, சோதனையின் போது பொறுமை, சோதனைகளின் பல முனைகள், அதற்கான சோபனம் என நல்ல, தீய பண்பாடுகள் குறித்தும் அல்லாஹ் பேசுகின்றான்.

என்றாலும், இந்த நேரத்தில் இத்துனை அம்சங்கள் குறித்தும் பேசுவது சாத்தியமில்லை என்பதால் நமக்கு பயன் தருகிற மிக முக்கியமான அம்சங்கள் குறித்து இன்று பார்ப்போம்.

قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّنْ لَنَا مَا هِيَ إِنَّ الْبَقَرَ تَشَابَهَ عَلَيْنَا وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ لَمُهْتَدُونَ (70)

இன்றைய முதல் நாள் தராவீஹ் தொழுகையில் ஓதப்பட்ட பகரா அத்தியாயத்தின் 70 –ஆவது வசனத்தில் பனூ இஸ்ரவேலர்களின் காலத்தில் நடைபெற்ற ஓர் சம்பவத்தை நினைவு கூறும் அல்லாஹ் அந்தச் சமூகம் இன்ஷா அல்லாஹ் என்று கூறியதால் அவர்களது எதிர்கால தேவையொன்று மிகவும் இலகுவாக்கி கொடுக்கப்பட்டதாக இயம்புகின்றான்.

ஒவ்வொரு மனிதனுக்கும் தான் வாழும் வாழ்க்கையின் மீது பல்வேறு எதிர்பார்ப்புகள் இருக்கும். தன் வாழ்க்கையின் எதிர்காலம் குறித்தான கனவுகளும் இருக்கும்.

எதிர்பார்ப்புகளும் எதிர்காலத்தைப்பற்றிய கனவுகளும் இல்லாதவன் சிறந்த மனிதனாகவே கணிக்கப்படமாட்டான்.

ஆம்! ஓர் இறை நம்பிக்கையாளனிடத்திலும் இத்தகைய அம்சங்களும், அதற்கான தேடல்களும் இருக்க வேண்டுமெனெ இஸ்லாம் விரும்புகின்றது.


وَلِكُلٍّ وِجْهَةٌ هُوَ مُوَلِّيهَا فَاسْتَبِقُوا الْخَيْرَاتِ أَيْنَ مَا تَكُونُوا يَأْتِ بِكُمُ اللَّهُ جَمِيعًا إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

அல்லாஹ் கூறுகின்றான்: “ஒவ்வோர் சமுதாயமும் அதன் இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. ஆகவே, (இறை நம்பிக்கையாளர்களே!) நன்மையானவற்றில் நீங்கள் ஒருவருக்கொருவர் முன்னேறிச் செல்லுங்கள்.

عَنْ حُسَيْنِ بن عَلِيٍّ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " إِنَّ اللَّهَ يُحِبُّ مَعَالِيَ الأُمُورِ وأَشْرَافَهَا ، وَيَكْرَهُ سَفَاسِفَهَا ".

ஹுஸைன் இப்னு அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நிச்சயமாக! அல்லாஹ் காரியங்களில், செயல்பாடுகளில் மிக உயர்வானதையும், சிறப்பானதையுமே நேசிக்கின்றான்.

காரியங்களில், செயல்பாடுகளில் மிகவும் கீழானவற்றை வெறுக்கின்றான்என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                            ( நூல்: தப்ரானீ, 2856 )

எதிர் காலத்தைப்பற்றிய இலட்சியங்களாக இருக்கட்டும், வாழ்க்கை குறித்தான எதிர்பார்ப்புகளாக இருக்கட்டும் அதற்கான எல்கை எது என்பதை மேற்கூறிய ஆயத்தும், நபிமொழியும் நமக்கு உணர்த்துகின்றது.

ஆகவே, ஓர் முஃமின் அவனது எதிர்பார்ப்புகளையும், எதிர்காலக் கனவுகளையும் சுமந்து நிற்கிற அந்த தருணங்களில் அதை இறைவனின் விருப்பத்தோடும், நாட்டத்தோடும் தொடர்பு படுத்துவது அவசியமாகும்.

ஆம்! எதிர்காலக் கனவுகளையும், தேடல்களையும், திட்டங்களையும்இன்ஷா அல்லாஹ்..” என்ற வார்த்தைப் பிரயோகத்தோடு அமைத்துக் கொள்வது அவசியம் என இஸ்லாம் கற்றுத் தருகின்றது.

இன்ஷாஅல்லாஹ் என்கிற வார்த்தை அல்குர்ஆனிலே 6 இடங்களில் இடம் பெறுகின்றது.

அல்லாஹ்வின் முன்மாதிரி

لَـقَدْ صَدَقَ اللّٰهُ رَسُوْلَهُ الرُّءْيَا بِالْحَـقِّ‌ ۚ لَـتَدْخُلُنَّ الْمَسْجِدَ الْحَـرَامَ اِنْ شَآءَ اللّٰهُ اٰمِنِيْنَۙ مُحَلِّقِيْنَ رُءُوْسَكُمْ وَمُقَصِّرِيْنَۙ لَا تَخَافُوْنَ‌ؕ فَعَلِمَ مَا لَمْ تَعْلَمُوْا فَجَعَلَ مِنْ دُوْنِ ذٰلِكَ فَتْحًا قَرِيْبًا‏ 

அல்லாஹ் தனது தூதருக்கு (அவர் கண்ட) கனவை உண்மையாக்கி விட்டான். (எனவே) அல்லாஹ் நாடினால் நீங்கள் பாதுகாப்பாகவும், உங்கள் தலைகளை மழித்தும், தலை முடியைக் குறைத்தும், அஞ்சாமலும் மஸ்ஜிதுல் ஹராமில் நுழைவீர்கள். நீங்கள் அறியாததை அவன் அறிவான். இது அல்லாத சமீபத்திய வெற்றியையும் அவன் ஏற்படுத்தி விட்டான்.                  ( அல்குர்ஆன்: 48: 20 )

அனைத்திற்கும் சக்தியுள்ள, ஆகுக! என்றால் ஆகிவிடும் என்கிற மகத்தான ஆற்றல் கொண்ட அல்லாஹ்வே இன்ஷாஅல்லாஹ் என்று கூறுகின்றான் என்றால் அந்த வார்த்தையின் பலத்தை, அதன் முக்கியத்துவத்தை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இன்ஷாஅல்லாஹ் சொல்வது மேன்மக்களின் பண்பு

மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கிள்ர் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடனான உரையாடலின் போது இன்ஷாஅல்லாஹ் சொன்னார்கள்.

قَالَ سَتَجِدُنِىْۤ اِنْ شَآءَ اللّٰهُ صَابِرًا وَّلَاۤ اَعْصِىْ لَكَ اَمْرًا 

"அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்! உமது எந்தக் கட்டளைக்கும் மாறுசெய்ய மாட்டேன்'' என்று (மூஸா) கூறினார். ( அல்குர்ஆன்:18:69 )


மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஷுஐபு அலைஹிஸ்ஸலாம் அவர்களுடனான உரையாடலின் போது இன்ஷாஅல்லாஹ் சொன்னார்கள்.


  قَالَ اِنِّىْۤ اُرِيْدُ اَنْ اُنْكِحَكَ اِحْدَى ابْنَتَىَّ هٰتَيْنِ عَلٰٓى اَنْ تَاْجُرَنِىْ ثَمٰنِىَ حِجَجٍ‌ۚ فَاِنْ اَتْمَمْتَ عَشْرًا فَمِنْ عِنْدِكَ‌ۚ وَمَاۤ اُرِيْدُ اَنْ اَشُقَّ عَلَيْكَ‌ؕ سَتَجِدُنِىْۤ اِنْ شَآءَ اللّٰهُ مِنَ الصّٰلِحِيْنَ‏ 

قَالَ ذٰ لِكَ بَيْنِىْ وَبَيْنَكَ‌ ؕ اَيَّمَا الْاَجَلَيْنِ قَضَيْتُ فَلَا عُدْوَانَ عَلَـىَّ‌ ؕ وَاللّٰهُ عَلٰى مَا نَقُوْلُ وَكِيْلٌ‏ 

"எட்டு ஆண்டுகள் நீர் எனக்குக் கூலி வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் எனது இந்த இரு புதல்விகளில் ஒருத்தியை உமக்கு மணமுடித்துத் தருகிறேன். பத்து ஆண்டுகளாக முழுமையாக்கினால் (அது) உம்மைச் சேர்ந்தது. நான் உமக்குச் சிரமம் தர விரும்பவில்லை. அல்லாஹ் நாடினால் என்னை நல்லவராகக் காண்பீர்'' என்றும், "இதுவே எனக்கும், உமக்கும் இடையே உள்ள ஒப்பந்தம். இரண்டு காலக் கெடுகளில் எதை நான் நிறைவேற்றினாலும் என் மீது குற்றமில்லை. நாம் பேசிக் கொண்டதற்கு அல்லாஹ்வே பொறுப்பாளன்'' என்று (மூஸா) கூறினார்.  (அல்குர்ஆன்: 28: 27, 28 )

இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தம் தந்தை இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடனான உரையாடலின் போது இன்ஷாஅல்லாஹ் சொன்னார்கள்.

  فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْىَ قَالَ يٰبُنَىَّ اِنِّىْۤ اَرٰى فِى الْمَنَامِ اَنِّىْۤ اَذْبَحُكَ فَانْظُرْ مَاذَا تَرٰى‌ؕ قَالَ يٰۤاَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ‌
 سَتَجِدُنِىْۤ اِنْ شَآءَ اللّٰهُ مِنَ الصّٰبِرِيْنَ‏ 

“அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்தபோது "என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல்   கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறு'' என்று (இப்ராஹீம்) கேட்டார்.

 "என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்'' என்று (இஸ்மாயீல்) பதிலளித்தார்.                                   ( அல்குர்ஆன்:  37:102 )

யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தம் சகோதரர்களுடனான உரையாடலின் போது இன்ஷாஅல்லாஹ் சொன்னார்கள்.

فَلَمَّا دَخَلُوْا عَلٰى يُوْسُفَ اٰوٰٓى اِلَيْهِ اَبَوَيْهِ وَقَالَ ادْخُلُوْا مِصْرَ اِنْ شَآءَ اللّٰهُ اٰمِنِيْنَؕ‏ 

“அவர்கள் யூஸுஃபிடம் சென்றபோது, தமது தாய், தந்தையரை தம்முடன் அரவணைத்துக் கொண்டார். "அல்லாஹ் நாடினால் அச்சமற்று எகிப்து நகரில் நுழையுங்கள்!'' என்றார்.                                      ( அல்குர்ஆன்:   12: 99. )


இன்ஷாஅல்லாஹ் சொல்லவில்லையானால்?...

وهـذا ما حصل للنبي - صلى الله عليه وسلم - حينما سأله اليهود عن خبر الفتية، فقال: أخبركم غداً. ولم يقل: إن شاء الله، فاحتبس الوحي عنه حتى شق عليه، فأنزل الله هذه الآية يأمره بالاستثناء في مثل هذا، ولو نسيه فإنه يستثني عندما يذكره.
قال الله - تعالى -: {وَلا تَقُولَنَّ لِشَيءٍ, إنِّي فَاعِلٌ ذَلِكَ غَدًا * إلاَّ أَن يَشَاءَ اللَّهُ وَاذكُر رَّبَّكَ إذَا نَسِيتَ... } [الكهف: 23 - 24].

நபி {ஸல்} அவர்களிடம் யூதர்களில் சிலர் வந்து குகைவாசிகள் குறித்து கேள்வி கேட்டனர். அதற்கு நபி {ஸல்} அவர்கள் மறந்து நாளை வாருங்கள் பதில் சொல்கின்றேன் என்று கூறினார்கள்.

இன்ஷா அல்லாஹ் சொல்லாமல் நாளை கூறுகின்றேன் என்று சொன்ன ஒரே காரணத்திற்காக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் வஹியின் தொடர்பை 15 நாள் நிறுத்தி வைத்திருந்தான்.

16 –ஆம் நாள் பின்வரும் வசனத்தோடு ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் வருகை தந்து ஓதிக்காண்பித்தார்கள்.

وَلَا تَقُوْلَنَّ لِشَاىْءٍ اِنِّىْ فَاعِلٌ ذٰ لِكَ غَدًا ۙ‏ 
اِلَّاۤ اَنْ يَّشَآءَ اللّٰهُ‌
 وَاذْكُرْ رَّبَّكَ اِذَا نَسِيْتَ وَقُلْ عَسٰٓى اَنْ يَّهْدِيَنِ رَبِّىْ لِاَقْرَبَ مِنْ هٰذَا رَشَدًا‏ 

“அல்லாஹ் நாடினால் (என்பதைச் சேர்த்தே) தவிர, நாளை நான் இதைச் செய்பவன் என்று எதைப் பற்றியும் கூறாதீர்! நீர் மறந்து விடும்போது உமது இறைவனை நினைப்பீராக! "எனது இறைவன் இதை விட சமீபத்தில் வழிகாட்டி விடக் கூடும்'' என்று கூறுவீராக!”                       (  அல்குர்ஆன்: 18:23, 24. )

عن أبي هريرة - رضي الله عنه - قال: قال رسول الله - صلى الله عليه وسلم
«قال سليمان بن داود: لأطوفنّ الليلة على سبعين امرأة ـ وفي رواية: تسعين
 تلد كل امرأة منهن غلاماً يقاتل في سبيل الله، فقال الملك: قل: إن شاء الله. فلم يقل: إن شاء الله. فطاف عليهنّ فلم يلد منهن إلاّ امرأة واحدة نصف إنسان، قال - صلى الله عليه وسلم -: والذي نفسي بيده لو قال: إن شاء الله لم يحنث، وكان دركاً لحاجته» رواه البخاري ومسلم.

(ஒருமுறை இறைத்தூதர்) தாவூத் (அலை) அவர்களின் புதல்வர் சுலைமான் (அலை) அவர்கள், ‘நான் இன்றிரவு (என்னுடைய) நூறு துணைவியரிடமும் சென்று வருவேன். அப்பெண்களில் ஒவ்வொருவரும் இறைவழியில் அறப்போர் புரியும் (வீரக்) குழந்தை ஒன்றைப் பெற்றெடுப்பார்கள்என்று கூறினார்கள். அப்போது (சுலைமான் -அலை) அவர்களிடம் அந்த வானவர் (ஜிப்ரீல்)இன்ஷா அல்லாஹ் இறைவன் நாடினால்என்று (சேர்த்துச்) சொல்லுங்கள்என்றார். (ஆனால்,) சுலைமான் (அலை) அவர்கள், ‘இன்ஷா அல்லாஹ்என்று கூறவில்லை; மறந்துவிட்டார்கள்.

அவ்வாறே சுலைமான் (அலை) அவர்களும் தம் துணைவியரிடம் சென்றார்கள். ஒரே ஒரு மனைவியைத் தவிர வேறெவரும் குழந்தை பெற்றெடுக்கவில்லை. அந்த ஒரு மனைவியும் (ஒரு புஜமுடைய) அரை மனிதரைத்தான் பெற்றெடுத்தார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அவர் இன்ஷா அல்லாஹ் இறைவன் நாடினால்என்று கூறியிருந்தால் அவர் தம் சத்தியத்தை முறித்திருக்கமாட்டார். (சபதத்தை நிறைவேற்றியிருப்பார்.) தம் தேவை நிறைவேறுவதைப் பெரிதும் அவர் நம்பியிருப்பார்என்று கூறினார்கள்.  ( நூல்: புகாரி :5242 )

எனவே, எதிர்கால திட்டங்கள் குறித்த எவைகளையும் இன்ஷாஅல்லாஹ் கூறிய பின்னரே கூறுவோம்.

அல்லாஹ்வின் உதவியையும், பரக்கத்தையும் பெறுவோம்!!!

வஸ்ஸலாம்!!!