Thursday 22 August 2019

ஆளுமைக்கு இலக்கணம் வகுத்த உமர் (ரலி) அவர்கள்!!!


ஆளுமைக்கு இலக்கணம் வகுத்த உமர் (ரலி) அவர்கள்!!!



இருபத்தி இரண்டரை லட்சம் சதுர மைல் பரப்பளவு எல்கைகள், பத்தரை ஆண்டுகள் ஆட்சியதிகாரம், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வெற்றிகள், ரோமம், பாரசீகம் உட்பட சிறியதும், பெரியதுமான நகரங்களின் நூற்றுக்கணக்கான பகுதிகளின் வெற்றிகள், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மஸ்ஜித்களின் நிர்மாணம் என நீண்ட பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் உமர் இப்னு அல் கத்தாப் (ரலி) அவர்கள்.

14 நூற்றாண்டுகளைக் கடந்தும் உலகின் வரலாற்று ஆசிரியர்களாலும், அரசியல் விற்பன்னர்களாலும் வியந்து போற்றப்படுகின்ற மகத்தான அரசியல் ஆளுமை அமீருல் முஃமினீன் உமர் (ரலி) அவர்கள்.

இதே துல்ஹஜ் மாதத்தில் (பிறை 23 அல்லது 24) சன்மார்க்கப் போராளியாக வீர மரணம் அடைந்தார்கள்.

அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக்கொள்வானாக!

மிகச் சாதாரண நிலையில் இருந்து துவங்கிய அவர்களின் வாழ்க்கை, ஒட்டு மொத்த அரபுலகத்திலும் கல்வி பெற்ற பதினேழு நபர்களில் ஒருவராக விளங்கி, வியாபாரம், வீரம், விவேகம், அறிவாற்றல் என நடை போற்று, ஏகத்துவ ஜோதியில் ஒன்றறக்கலந்து ஒரு முஸ்லிமாய், முன்மாதிரி முஸ்லிமாய், சுவன சோபனம் பெற்ற பாக்கியவானாய் மிளிர்ந்து, அளப்பெரும் பரந்து விரிந்த எல்கையின் இஸ்லாமிய ஆட்சியாளாராய் பரிணமித்து இவ்வுலகை விட்டும் பெருமானார் {ஸல்} அவர்களின் ஒத்த வயதில் உயிர் நீத்து உலகத்தின் அத்துனை ஆளுமைகளுக்கும் முன்மாதிரியாய் வரலாற்றில் இலங்கிக் கொண்டிருக்கும் உமர் (ரலி) அவர்களை இந்த உம்மத் நினைத்துப்பார்க்க கடமைப்பட்டிருக்கின்றது.

பெருமானார் {ஸல்} அவர்களின் துஆவும்.. சோபனமும்…

உமர் அவர்களின் அறிவு நுட்பத்தையும், வீரத்தையும், விவேகத்தையும் உணர்ந்த பெருமானார் {ஸல்} அவர்கள் அல்லாஹ்விடத்தில் “அல்லாஹ்வே! சத்திய தீனுல் இஸ்லாத்திற்கு அபூ ஜஹ்ல் மற்றும் உமர் ஆகிய இருவரில் ஒருவரைக் கொண்டு அதுவும் அந்த இருவரில் உன் நேசம் யாரின் மீது இருக்கிறதோ அந்த ஒருவரைக் கொண்டு கண்ணியத்தை வழங்குவாயாக!” என்று இருகரம் ஏந்தி பிரார்த்தித்தார்கள்.

அல்லாஹ் பூமான் நபி {ஸல்} அவர்களின் பிரார்த்தனையை அங்கீகரித்து உமர் (ரலி) அவர்களுக்கு ஹிதாயத்தை நல்கினான்.

ஒரு நாள் வெண்ணிற ஆடை அணிந்திருந்த நிலையில் உமர் (ரலி) அவர்களை மாநபி {ஸல்} அவர்கள் கண்டார்கள்.

“உமரே! இது புத்தாடையா? அல்லது துவைத்து சுத்தம் செய்யப்பட்ட ஆடையா? என கேட்டார்கள்.

அதற்கு, உமர் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! இது துவைத்து சுத்தம் செய்யப்பட்ட ஆடை” என்று பதிலளித்தார்கள்.

அப்போது, பூமான் நபி {ஸல்} அவர்கள் “உம் வாழ்வில் நீர் புத்தாடைகள் பல அணிவீர்! புகழக்குரிய வாழ்வை வாழ்வீர்! வீரமரணம் அடைவீர்! அல்லாஹ் உமக்கு ஈருலகத்தையும் கண்குளிர்ச்சி மிக்கதாய் அமைத்திடுவான்” என சோபனமும் சொன்னார்கள்.

உமர் என்கிற சாதாரண ஒருவரை உமர் ரலியல்லாஹு அன்ஹு, அமீருல் முஃமினீன், ரோல் மாடல் ஆஃப் பொலிடிக்கல்ஸ் என்கிற உயரிய இடத்திற்கு கொண்டு வந்து நிறுத்தியது பெருமானார் {ஸல்} அவர்களின் துஆவும், சோபனமும் என்றால் அது மிகையல்ல.

இன்னும் சொல்லப்போனால் உமர் என்பவர் பெருமானார் {ஸல்} அவர்கள் இந்த முழு மனித சமூகத்திற்கும் வழங்கிய பேரற்புதம்.

யார் அந்த உமர்?

“உக்காழ்” இது எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் மக்காவின் பிரபல்யமான சந்தை (வணிக கேந்திரம்) அன்றைய உலக நாடுகளின் அறியப்பட்ட அனைத்து வியாபாரிகளும் தங்களின் சரக்குகளோடு வாரக் கணக்கில், மாதக் கணக்கில் தங்கி பொருளீட்டி செல்வார்கள்.

ஆனால், அங்கே போடப்பட்டுள்ள ஒரு (பெஞ்ச்) இருக்கையில் சதா ஒரு பெரிய மதுக் கோப்பையை கையில் ஏந்தியவாறு, போதை இறங்கியதும் மீண்டும் வாயில் ஊற்றி போதை ஏற்றியவாறு அமர்ந்திருப்பார் கத்தாபின் மகன் உமர்.
அபுஜஹ்ல், உத்பா போன்ற பெருந்தலைகள் கூட உமரைக்கண்டு அஞ்சுவார்கள்.

தனக்கு ஏதேனும் பணம் தேவைப்பட்டால் வந்திருக்கும் வியாபாரிகளை நாளு தட்டு தட்டி பறித்துக்கொள்வார்.

ஏதாவது பெண் தேவைப்பட்டால் வீதியில், சந்தையில் என கண்ணில் படும் பெண்களை அழைத்துச் சென்றுவிடுவார்.

மதுவிற்கு அடிமை, பெண் சுகத்திற்கு அடிமை, ரோம, பாரசீக வியாபாரிகள் பொழுது போக்கிற்காக மல்யுத்த வீர்ர்களை அழைத்து வந்து சண்டை நடத்தி பரிசுகள் வழங்குவார்கள்.

அப்படி ஒருமுறை ஒரு மல்யுத்த வீரன் தன்னோடு சண்டையிட்ட அனைவரையும் வென்று
    
என்னை ஜெயிக்க மக்காவில் யாரடா இருக்கின்றான்? என அறைகூவல் விடுத்தான்.

சந்தையில் கூடியிருந்த ஒட்டுமொத்த மக்களின் பார்வையும் பெஞ்ச்-சின் மீது அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்த உமரின் மீது விழுந்தது.

உமர் எழுந்தார், நடையில் தள்ளாட்டம் இல்லை.
மல்யுத்த வீரரின் அருகே வந்தார்,
மக்களின் ஆரவாரம், பலத்த கரகோஷம்
முன்நெற்றியில் ஒரு அடி விட்டார்.
பலபேரை பந்தாடிய வீரன் சப்த நாடிகளெல்லாம் அடங்கி உமரின் காலில் வீழ்ந்து கிடந்தான்.
வீரனின் நெஞ்சின்மீது காலை வைத்துக் கொண்டு
என்னை வீழ்த்த இந்த உலகத்தில் யாரடா இருக்கிறார்கள் என்று கர்ஜித்தார் உமர்.
இப்படி தன் உடல் பலத்தால் மக்காவையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தவர் தான்கத்தாபின் மகன் உமர்.

இஸ்லாமிய ஜோதி மக்காவின் இருளை விரட்டிக் கொண்டிருந்த நேரம்.
ஆம்! ஏகத்துவ அழைப்பை மாநபி (ஸல்) அவர்கள் அந்த முரட்டி மக்களிடையே எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்த தருணம் அது.

மாநபி (ஸல்) அவர்கள் ஏற்றிவைத்த ஏகத்துவ தீபத்தை அணைத்திட அத்துனை வழிகளும் முயற்சி மேற்கொண்டு தோல்விக்கு மேல் தோல்வியைத் தழுவிய இறைமறுப்பாளர்கள் இறுதியாக நபி (ஸல்) அவர்கள் இறந்தால் மட்டுமே இது சாத்தியம்.

இப்போது முஹம்மது இறந்து போவது சாத்தியமில்லை எனவே, முஹம்மதின் இறப்பை நாம் தான் தீர்மானிக்க வேண்டும். ஆம்! கொலை செய்திட வேண்டும்.

அறிவிப்புச் செய்தார்கள். 100- செந்நிற ஒட்டகம் முஹம்மதின் தலையை கொய்து வருபவருக்கு…. நவூது பில்லாஹ்…. மக்கத்து தலைவர்களை சந்தித்தார் உமர்!

100- ஒட்டகங்களை தயார் செய்து வையுங்கள்! இதோ! திரும்பி வரும்போது அறிவிப்பை உண்மை யாக்கிடுவேன்! -என்று முழங்கியவாறு உருவிய வாளுடன் புறப்பட்டார்!

அப்போது உமருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை
அவர் செல்லும் பாதை ஏகத்துவ அருளை நோக்கி என்று….

ஆம்! வழியில் பனீ ஜஹ்ரா கோத்திரத்தைச் சார்ந்த ஒரு மனிதர் உமரை சந்தித்தார்! உமரிடம் அவர் கேட்டார்!
உருவிய வாளுடன் எங்கே செல்கிறீர்?
முஹம்மதின் தலையை கொய்துவர…..
முஹம்மதை கொலை செய்துவிட்டு எப்படி நீங்கள் நிம்மதியாக நடமாடமுடியும்?
பனூ ஹாஷிம் குலம் விட்டு விடுவார்களா?
இல்லை எங்கள் பனூ ஜஹ்ரா குலத்தார்கள்தான் விட்டுவிடுவார்களா?
என்றார் அவர்.

உம்முடைய பேச்சே சரியில்லையே!
நீரும் மதம் மாறிவிட்டீரா?
உம்மை தான் முதலில் முடிக்க வேண்டும் என்றார் உமர்.

உமரே! அது இருக்கட்டும்! உமக்கொரு அதிர்ச்சியான தகவலை சொல்லட்டுமா?
உமரின் சகோதரி பாத்திமாவும் அவரின் கணவரும் மதம் மாறிவிட்டனர்.
முதலில் அவர்களை முடித்துவிட்டுவாரும்!
புயலென கிளம்பினார். தம்வீட்டை நோக்கி

அங்கே….தாஹா அத்தியாயத்தின் 14-ம் வசனம் ஓதப்பட்டுக்கொண்டிருந்தது.
திண்ணமாக! நான் தான் அல்லாஹ்! என்னைத்தவிர வேறு இறைவன் இல்லை. எனவே எனக்கு அடிபணிவீராக! என்னை நினைவு கூர்வதற்காக தொழுகையை நிலை நிறுத்துவீராக!

பொறுமையாக நின்று கேட்டார்! மாறினார் உமர்! மாற்றினார் தன் முழு நிலையையும்அன்றிலிருந்து இஸ்லாம் எழுச்சியடைவதற்காக தன் முழு வாழ்க்கையையும் மாற்றினார்.             ( நூல்: தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம் )

عن ابن عباس قال : سألت عمر بن الخطاب : لأي شيء سميت الفاروق ؟ قال : أسلم حمزة قبلى بثلاثة أيام ـ ثم قص عليه قصة إسلامه . وقال في آخره : قلت ـ أي حين أسلمت : يا رسول الله، ألسنا على الحق إن متنا وإن حيينا ؟ قال : ( بلى، والذي نفسي بيده، إنكم على الحق وإن متم وإن حييتم ) ، قال : قلت : ففيم الاختفاء ؟ والذي بعثك بالحق لنخرجن، فأخرجناه في صفين، حمزة في أحدهما، وأنا في الآخر، له كديد ككديد الطحين، حتى دخلنا المسجد، قال : فنظرت إلىّ قريش وإلى حمزة، فأصابتهم كآبة لم يصبهم مثلها، فسماني رسول الله صلى الله عليه وسلم ( الفاروق ) يومئذ .

உமர் (ரலி) அவர்கள் ஆட்சியாளராக மதீனாவில் வீற்றிருந்த ஒரு நாள் காலைப் பொழுதில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார்கள். உரையாடலின் இடையே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்களிடம்மக்களெல்லாம் உங்களை ஃபாரூக் என்று அழைக்கின்றார்களே? உங்களுக்கு ஃபாரூக் என்ற பெயர் வரக்காரணம் என்ன?” என்று கேட்டார்கள்.

நான் திருக்கலிமாவை மொழிந்த பின் முதன் முறையாக அண்ணலாரின் திருச் சமூகத்திற்கு வந்தேன்.

அப்போது அங்கே ஹம்ஜா அவர்கள் நிற்பதைக் கண்டேன். அப்போது தான் ஹம்ஜா (ரலி) அவர்கள் எனக்கு மூன்று நாட்களுக்கு முன்பாக இஸ்லாத்தில் இணைந்து கொண்டதை அறிந்து கொண்டேன்.

நேராக, மாநபி {ஸல்} அவர்களின் அருகாமையில் சென்று அல்லாஹ்வின் தூதரே! நாம் இறந்தாலும் உயிர் வாழ்ந்தாலும் சத்தியத்தின் மீது தானே இருக்கின்றோம்என்று கேட்டேன். அதற்கு, நபி {ஸல்} அவர்கள் ஆம்! எனது உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் இறந்தாலும், உயிர் வாழ்ந்தாலும் சத்தியத்தின் மீது தான் இருக்கின்றீர்கள் என்று கூறினார்கள்.

அதற்கு, நான் அப்போது ஏன் நாம் மறைவாக செயல்பட வேண்டும்? உங்களை சத்திய மார்க்கத்தைக் கொண்டு அனுப்பிய அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாம் வெளிப்படையாக சத்தியத்தைக் கூறியே ஆகவேண்டும்என்று கூறினேன்.

பின்னர், முஸ்லிம்களை இரண்டு அணிகளாக ஆக்கி, ஓர் அணியில் நானும் இன்னொரு அணியில் ஹம்ஜா (ரலி) அவர்களும் இருந்து கொண்டு, நபி {ஸல்} அவர்களை இரு அணிகளுக்கு நடுவில் ஆக்கிக் கொண்டோம்.

திருகையிலிருந்து மாவுத்துகள்கள் பறப்பது போன்று எங்களது அணிகளில் இருந்து புழுதிகள் பறந்தன. அதே வேகத்தில் நாங்கள் கஅபாவுக்குள் நுழைந்தோம்.

அங்கே, என்னையும் ஹம்ஜாவையும் நபி {ஸல்} அவர்களோடு சேர்ந்தாற்போல் பார்த்த குறைஷிகளுக்கு அன்று வரை ஏற்பட்டிராத கைசேதமும், துக்கமும் ஏற்பட்டது.

குறைஷிகளின் முகத்தில் தென்பட்ட கவலை ரேகைகளை பார்த்த பூமான் நபி {ஸல்} அவர்கள் அன்று தான் எனக்கு ஃபாரூக் சத்தியத்தையும், அசத்தியத்தையும் பிரித்துக் காட்டியவர்என்று பெயரிட்டார்கள். அன்று முதல் மக்களும் என்னை அவ்வாறே அழைக்கத் தொடங்கினர்.

ஷஹாதாவை மொழிந்த அடுத்த நொடியிலேயே இஸ்லாத்தை தன் உயிரை விட உயர்வாகக் கருதினார்கள். அவர்கள் வாயில் இருந்து வெளிப்பட்ட ““அல்லாஹ்வின் தூதரே! நாம் இறந்தாலும் உயிர் வாழ்ந்தாலும் சத்தியத்தின் மீது தானே இருக்கின்றோம்  இந்த வார்த்தையே நம் உயிரைக் கொடுத்தேனும் இஸ்லாம் உயர்வானது என்பதை எதிரிகளுக்கு உணர்த்த வேண்டும் என்ற அவர்களின் நெஞ்சுரத்தை வெளிப்படுத்தியது.

அத்தோடு நின்றிடாமல் இஸ்லாத்தை அழிக்க நினைத்தோர் மத்தியில் வலம் வந்து எதிரிகளின் மனதில் அச்ச உணர்வை ஏற்படுத்தினார்கள்.

இதன் பின்னர் நடந்த நிகழ்வுகளை நபித்தோழர்கள் சிலரின் வாயிலாக வரலாற்றில் பதிவானதை நாம் பார்ப்போம்.

وعن صهيب بن سنان الرومى رضي الله عنه قال : لما أسلم عمر ظهر الإسلام، ودعى إليه علانية، وجلسنا حول البيت حلقًا، وطفنا بالبيت، وانتصفنا ممن غلظ علينا، ورددنا عليه بعض ما يأتى به .

ஸுஹைப் இப்னு ஸினான் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவிய பின்பு தான் இஸ்லாம் வெளி உலகுக்குத் தெரிய வந்தது. பகிரங்கமாக இஸ்லாமிய அழைப்பும் கொடுக்கப்பட்டது. கஅபாவைச் சுற்றி கூட்டமாக நாங்கள் அமர்ந்தோம். மேலும், எங்களுக்கு கஅபாவை தவாஃபும் செய்ய முடிந்தது. எங்களிடம் கடுமையாக நடந்து கொண்டவர்களிடம் அவர்கள் செய்யும் கொடுமைகளில் சிலவற்றுக்காவது நாங்கள் பதிலடி கொடுத்தோம்”.

وعن عبد الله بن مسعود قال : ما زلنا أعزة منذ أسلم عمرما كنا نقدر أن نصلى عند الكعبة حتى أسلم عمر  .

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவியதன் பின்னரே நாங்கள் பலம் மிக்கவர்களாக ஆனோம். மேலும், அது வரை நாங்கள் கஅபாவின் அருகே கூட நெருங்க முடியாதவர்களாகவே இருந்தோம்”.                   ( நூல்: ரஹீக் அல் மஃக்தூம் )

உமர் (ரலி) அவர்களின் வாழ்க்கைத் தரத்தை, புகழை, உயர்வை தீர்மானித்த அந்தத் தருணம் இது தான் என்றால் அது மிகையல்ல.

ஆர்வமும்… தன்னம்பிக்கையும்…

ويوم جاء وفد نجلاان من اليمن مسلمين، وسألوه أن يبعث معهم من يعلمهم القرآن والسنة والاسلام، قال لهم رسول الله:
" لأبعثن معكم رجلا أمينا، حق أمين، حق أمين.. حق أمين"..!!
وسمع الصحابة هذا الثناء من رسول الله صلى الله عليه وسلم،  فتمنى كل منهم لو يكون هو الذي يقع اختيار الرسول عليه، فتصير هذه الشهادة الصادقة من حظه ونصيبه..
يقول عمر بن الخطاب رضي الله عنه:
" ما أحببت الامارة قط، حبّي اياها يومئذ، رجاء أن أكون صاحبها، فرحت الى الظهر مهجّرا، فلما صلى بنا رسول الله صلى الله عليه وسلم الظهر، سلم، ثم نظر عن يمينه، وعن يساره، فجعلت أتطاول له ليراني..
فلم يزل يلتمس ببصره حتى رأى أبا عبيدة بن الجرّاح، فدعاه، فقال: أخرج معهم، فاقض بينهم بالحق فيما اختلفوا فيه.. فذهب بها أبا عبيدة؟..!!
ان هذه الواقعة لا تعني طبعا أن أبا عبيدة كان وحده دون بقية الأصحاب موضع ثقة الرسول وتقديره..

ஒரு முறை யமனின் நஜ்ரான் பகுதியைச் சார்ந்த சில முஸ்லிம்கள் தங்களுக்கு மார்க்கவிஷயங்களை கற்றுத் தரவும்,தங்கள் பகுதியில் அழைப்புப்பணி செய்யவும்,தங்களுக்கு இமாமத் செய்யவும் ஒருவரை தங்களோடு அனுப்பி வைக்குமாறு மாநபி {ஸல்} அவர்களிடம் வேண்டி நின்றனர்.

அப்போது நபி {ஸல்} அவர்கள்உங்களோடு நம்பிக்கையான ஒருவரை அனுப்பி வைக்கிறேன்என்றுகூறினார்கள். இந்த நேரத்தில் லுஹர் தொழுகைக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. நபிகளார் கூறிய அந்த நம்பிக்கையாளராக நாமாக இருக்க மாட்டோமா? என்று ஒவ்வொரு ஸஹாபியும் ஆசைப்பட்டனர்.


இகாமத் சொல்லப்பட்டது, நபி {ஸல்} அவர்கள் தொழ வைத்தார்கள்,உமர் {ரலி} அவர்கள் கூறுகின்றார்கள்.தொழுது முடித்ததும் நபி {ஸல்} அவர்கள் வலது புறம் பார்த்தார்கள்,பின்பு இடது புறம் பார்த்தார்கள்.

என் மீது நபியவர்களின் பார்வை பட வேண்டும், என்னை அழைக்க வேண்டும் என்பதற்காக குதிங்காலால் ஊனி எட்டி எட்டிப் பார்த்தேன்.

இறுதியாக நபி {ஸல்} அவர்களின் பார்வை அபூ உபைதா அல் ஜர்ராஹ் {ரலி} அவர்களைச் சென்றடைந்தது. பின்னர் நபி {ஸல்} அவர்கள் அபூ உபைதாவை அழைத்தார்கள்.

பின்னர் நஜ்ரான் முஸ்லிம்களை அழைத்து இதோ இவரை அழைத்துச் செல்லுங்கள். “ஒவ்வோர் உம்மத்திற்கும் ஓர் நம்பிக்கையாளர் உண்டு.என்னுடைய உம்மத்தின் நம்பிக்கையாளர் அபூ உபைதா அல் ஜர்ராஹ் {ரலி}” என்று கூறினார்கள்.


உமர் {ரலி} அவர்கள் கூறுகின்றார்கள்:

ஓர் உண்மையை நான் சொல்லியே ஆக வேண்டும் அந்த நேரம் வரை நான் எந்த புகழுக்கும்,பதவிக்கும் ஆசைபட்டது கிடையாது.

 நபிகளாரின் புனித வாயால் அந்த புகழாரத்தை அடையவேண்டுமென்று அன்று நான் ஆசைப்பட்டேன் ஆனால்,  அபூ உபைதா அவர்கள் அதை தட்டிச் சென்று விட்டார்கள்.
        
                                                  ( நூல்:ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}, பக்கம்:241)

فقال رسول الله صلى الله عليه وسلم لأعطين الراية غدا رجلا يحبه الله ورسوله يفتح الله على يديه ليس بفرار قال يقول سلمة فدعا رسول الله صلى الله عليه وسلم عليا رضوان الله عليه وهو أرمد فتفل في عينه ثم قال خذ هذه الراية فامض بها حتى يفتح الله عليك
يقول عمر بن الخطاب رضي الله عنه:

" ما أحببت الامارة قط، حبّي اياها يومئذ، رجاء أن أكون صاحبها،

 ஃகைபர் கோட்டையை முற்றுகையிட்டிருந்தது மா நபி {ஸல்} அவர்களின் தலைமையிலான முஸ்லிம்களின் அணி. கோட்டைக்கு உள்ளிருந்து குடைச்சல் கொடுத்தனர் அல்லாஹ்வை மறுக்கும் எதிரணியினர்.

முதல் நாள் முடிவுக்கு வந்தது.  அப்போது நபி {ஸல்} அவர்கள்நாளை நான் அல்லாஹ்வும்,அவன் தூதரும் நேசிக்கின்ற, அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நேசிக்கின்ற ஒருவரிடம் கொடியை கொடுப்பேன். அல்லாஹ் அவர் கரங்களின் மூலம் வெற்றியை வழங்குவான்  என்று கூறினார்கள்.

உமர் {ரலி} அவர்கள் கூறுகின்றார்கள்:                             

ஓர் உண்மையை நான் சொல்லியே ஆக வேண்டும் அதுவரை நான் எந்த புகழுரைக்கும்,அந்தஸ்துக்கும் ஆசைப் பட்டது கிடையாது. அன்று நான் அல்லாஹ்வும்,அவன் தூதரும் நேசிக்கின்ற ஒருவனாக ஆக வேண்டும், நபிகளாரின் அமுத வாயால் சொல்லப்பட்ட சோபனத்திற்கு சொந்தக்காரனாய் ஆக வேண்டும் என ஆசைப் பட்டேன்”.ஆனால் அதை அலீ {ரலி} அவர்கள் தட்டிச் சென்று விட்டார்கள்.


.                                                               நூல்: ஃகுலஃபாவுர் ரஸூல் {ஸல்}, பக்கம்:294 

இந்த இரு வேறு அறிவிப்புக்களையும் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் ஃகாலித் முஹம்மத் ஃகாலித் {ரஹ்} தங்களது இரு வேறு நூற்களில் பதிவு செய்திருக்கின்றார்கள்.

விவேகமும்… வீரமும்…


فَقَدِمَ عَلَى أَبِي بَكْرٍ، فَقَالَ لَهُ عُمَرُ:
هَلْ لَكَ يَا مُعَاذُ أَنْ تُطِيْعَنِي؟ تَدْفَعُ هَذَا المَالَ إِلَى أَبِي بَكْرٍ، فَإِنْ أَعْطَاكَهُ فَاقْبَلْهُ.
فَقَالَ: لاَ أَدْفَعُهُ إِلَيْهِ، وَإِنَّمَا بَعَثَنِي نَبِيُّ اللهِ لِيَجْبُرَنِي.
فَانْطَلَقَ عُمَرُ إِلَى أَبِي بَكْرٍ، فَقَالَ: خُذْ مِنْهُ، وَدَعْ لَهُ.
قَالَ: مَا كُنْتُ لأَفْعَلَ، وَإِنَّمَا بَعَثَهُ رَسُوْلُ اللهِ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- لِيَجْبُرَهُ.
فَلَمَّا أَصْبَحَ مُعَاذٌ، انْطَلَقَ إِلَى عُمَرَ، فَقَالَ:
مَا أَرَانِي إِلاَّ فَاعِلَ الَّذِي قُلْتَ، لَقَدْ رَأَيْتُنِي البَارِحَةَ - أَظُنُّهُ قَالَ - أُجَرُّ إِلَى النَّارِ، وَأَنْتَ آخِذٌ بِحُجْزَتِي.
فَانْطَلَقَ إِلَى أَبِي بَكْرٍ بِكُلِّ مَا جَاءَ بِهِ، حَتَّى جَاءهُ بِسَوْطِهِ.
وفي خلافة أبي بكر رجع معاذ من اليمن، وكان عمر قد علم أن معاذا أثرى.. فاقترح على الخليفة أبي بكر أن يشاطره ثروته وماله..!
ولم ينتظر عمر، بل نهض مسرعا الى دار معاذ وألقى عليه مقالته..

كان معاذ ظاهر الكف، طاهر الذمة، ولئن كان قد أثري، فانه لم يكتسب اثما، ولم يقترف شبهة، ومن ثم فقد رفض عرض عمر، وناقشه رأيه..
وتركه عمر وانصرف..
وفي الغداة، كان معاذ يطوي الأرض حثيثا شطر دار عمر..
ولا يكاد يلقاه.. حتى يعنقه ودموعه تسبق كلماته وتقول:
" لقد رأيت الليلة في منامي أني أخوض حومة ماء، أخشى على نفسي الغرق.. حتى جئت وخلصتني يا عمر"..
وذهبا معا الى أبي بكر.. وطلب اليه معاذ أن يشاطره ماله، فقال أبو بكر:" لا آخذ منك شيئا"..
فنظر عمر الى معاذ وقال:" الآن حلّ وطاب"..
ما كان أبو بكر الورع ليترك لمعاذ درهما واحدا، لو علم أنه أخذه بغير حق..
وما كان عمر متجنيا على معاذ بتهمة أو ظن..
وانما هو عصر المثل كان يزخر بقوم يتسابقون الى ذرى الكمال الميسور، فمنهم الطائر المحلق، ومنهم المهرول، ومنهم المقتصد.. ولكنهم جميعا في قافلة الخير سائرون.

மதீனாவில் பொருளாதார நெருக்கடியொன்று ஏற்பட்ட போது, ஒரு மாலைப் பொழுதில் கலீஃபா அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களை அழைத்து ஆலோசித்துக் கொண்டிருந்தார்கள்.

பேச்சின் ஊடாக உமர் (ரலி) அவர்கள், அபூபக்ர் (ரலி) அவர்களிடம் ஒரு யோசனை எம்மிடம் உண்டு. வேண்டுமானால் முஆத் (ரலி) அவர்களை அழைத்து அவர்கள் யமனில் சம்பாதித்த அவரின் தேவைக்குப் போக மீதமிருக்கிற அனைத்து சொத்துக்களையும் அரசுக்கு ஒப்படைக்கு மாறு சொல்லுங்கள். நீங்கள் ஆட்சியாளர் தானே! அவர் தந்தார் என்றால் இந்த நிலை கொஞ்சம் மாறிவிடும் அல்லவா?” என்று கூறினார்கள்.

அது கேட்ட அபூபக்ர் (ரலி) அவர்கள்அவர்களாக விரும்பி எதைத் தந்தாலும் நாம் பெற்றுக் கொள்வோம்! மாறாக, அவரிடம் இருந்து எதையும் கட்டாயப்படுத்தி நான் பெற்றுக் கொள்ளமாட்டேன்.” என்றும், மேலும், முஆத் அவர்களை நபி {ஸல்} அவர்கள் யமனுக்கு அனுப்பும் போதே பொருளீட்டுவதற்கும் சம்பாத்யம் செய்வதற்கும் அனுமதி அளித்திருந்தார்கள்என்று கூறி மறுத்து விட்டார்கள்.

அபூபக்ர் (ரலி) அவர்கள் மறுத்ததும், முஆத் (ரலி) அவர்களை நேரிடையாகச் சந்தித்து மதீனாவின் நிலையை எடுத்துக் கூறி தமது அபிப்பிராயத்தைக் கூறினார்கள்.

முஆத் (ரலி) அவர்கள் மறுத்து விடுகின்றார்கள். முஆத் (ரலி) மறுத்ததும் அங்கிருந்து விடைபெற்று வீட்டிற்கு வந்து விடுகின்றார்கள்.

உமர் (ரலி) அவர்களின் அபிப்பிராயத்தை நிராகரித்த முஆத் (ரலி) அவர்கள் நீண்ட நேரம் யோசித்தார்கள். சட்டென அவருக்கு பழைய கனவொன்று மின்னல் கீற்று போல் பளிச்சிட்டு மறைந்தது. மீண்டும் அதிகம் உமர் (ரலி) அவர்களின் அபிப்பிராயம் குறித்து சிந்தித்தார்கள் முஆத் (ரலி) அவர்கள்.

ஒருவாராக உமர் (ரலி) அவர்களின் வீட்டை நோக்கி நடந்தார்கள். அந்த நடையில் அவர்கள் எடுத்த முடிவின் வேகம் தென்பட்டது.

வீட்டின் கதவை தட்டி உமர் (ரலி) அவர்களை வெளியே அழைத்த முஆத் (ரலி) அவர்கள்உமர் அவர்களே! நான் உங்களுடைய ஆலோசனையையும், அபிப்பிராயத்தையும் ஏற்கின்றேன்

என்னுடைய இந்த மனமாற்றத்திற்கு என்ன காரணம் என்று என்னிடம் நீங்கள் அவசியம் கேட்கத்தான் வேண்டும்?” என்றார் முஆத் (ரலி) அவர்கள்.

உம்முடைய மன மாற்றத்திற்கான காரணம் என்ன? என்று உமர் (ரலி) அவர்கள் வினவியதற்கு

ஒரு முறை நான் கனவொன்று கண்டேன். அதில் ஆழமான நீர்ச்சுழலில் நான் சிக்கிக்கொண்டேன். இன்னும் சிறிது நேரத்தில் மூழ்கப்போகிறேன் எனும் அச்சம் மனதை ஆட்கொண்ட போது, நீங்கள் தான் வந்து கரம் கொடுத்து என் கரம் பிடித்து காப்பாற்றினீர்கள்என்று முஆத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

பின்னர், உமர் அவர்களையும் அழைத்துக் கொண்டு அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று தமது பொருளாதாரம் முழுவதையும் கொடுத்து விட்டு, அமீருல் முஃமினீன் அவர்களே! இதோ இங்கிருப்பவைகள் மட்டும் தான் நான் சம்பாதித்தது! அதை நான் அல்லாஹ்விற்காக தந்துவிட்டேன்என்று கூறி சென்று விட்டார்கள்.

( நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}, பக்கம்:139, ஸியரு அஃலா மின் நுபலா, பாகம்:1 )


உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலம். காதிஸிய்யா யுத்தத்திற்காக காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் தலைமையில் ஓர் படையை அமீருல் முஃமினீன் உமர் (ரலி) அவர்கள் அனுப்பி வைத்திருந்தார்கள்.

காதிஸிய்யா போர் கிஸ்ரா வம்ச ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த போர் ஆகும். இதற்குப் பிறகு ஈராக் பகுதி முழுவதும் இஸ்லாமிய நிழலின் கீழ் வந்தது.

படை சென்ற பின்னர் ஒரு நாள் நகர் வலம் வந்து கொண்டிருந்த உமர் (ரலி) அவர்களின் காதில் பேரிடியாய் வந்து விழுந்தது அந்த வார்த்தைகள்.

ஏகத்துவத்தையும், இறை நம்பிக்கையையும் உரசிப்பார்ப்பதாய் உணர்ந்தார்கள் உமர் (ரலி) அவர்கள்.

ஆம்! மக்கள்காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களின் தலைமையை ஏற்றுச் சென்றிருக்கும் முஸ்லிம் படை நிச்சயம் வெற்றியுடன் தான் திரும்பும்என்று பேசிக்கொண்டனர்.

உடனடியாக அபூ உபைதா இப்னு அல் ஜர்ராஹ் (ரலி) அவர்களின் கையில் ஒரு கடிதத்தைக் கொடுத்தனுப்பி இதை கொண்டு காதிஸிய்யாவிற்குச் செல்லுங்கள். அனைத்துப்படை வீரர்களுக்கு மத்தியில் இதைப்படித்துக் காட்டச் சொல்லுங்கள்என்று உமர் (ரலி) அவர்கள் அபூ உபைதா (ரலி) அவர்களை அனுப்பி வைத்தார்கள்.

போர் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. படைவீரர்களின் ஊடாகச் சென்ற அபூ உபைதா (ரலி) அவர்கள் தளபதி காலித் (ரலி) அவர்களிடம் கொடுத்து ஆட்சித்தலைவர் சொன்ன விபரத்தைச் சொன்னார்கள்.

காலித் இப்னு வலீத் (ரலி) கடிதத்தைப் பிரித்தார்கள். படித்தார்கள். அதில் இடம் பெற்றிருந்த வாசகம் இதோஆட்சித்தலைவர் உமர் அவர்களிடமிருந்து தளபதி மற்றும் படைவீரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்…. இதோ இந்த நிமிடத்திலிருந்து காலித் (ரலி) படைத்தளபதி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக அபூ உபைதா (ரலி) நியமிக்கப்படுகின்றார். இது அமீருல் முஃமினீன் அவர்களின் உத்தரவு!

உடனடியாக முஸ்லிம்கள் அதை ஏற்று செயல்பட்டனர். அதே படையில் ஒரு வீரராக காலித் (ரலி) அவர்கள் பங்கு பெற்றார்கள்.

அபூ உபைதா (ரலி) அவர்களின் தலைமையில் முஸ்லிம்களின் படை வெற்றியோடு மதீனா திரும்பியது.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களால்ஸைஃபுல்லாஹ்என்று கண்ணியப்படுத்தப்பட்டுள்ளேன். ஆகவே, என்னை நீக்கம் செய்தது செல்லாது என்றோ, தனியாய் பிரிந்து சென்று வேறு அணியில் முஸ்லிம்களை ஒன்றிணைப்பேன் என்றோ காலித் அவர்கள் சூளுரைக்கவில்லை.

மாறாக, அதே யுத்தகளத்தில் சாதாரண ஒரு படை வீரராகவே களம் கண்டார்கள் காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள்.

பின்னாளில், ஒரு நாள் உமர் (ரலி) அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த போது காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள் கலீஃபா அவர்களே! ”நான் எந்த ஒரு யுத்தகளத்திலும் இஸ்லாமிய யுத்த விதிகளை மீறியது கிடையாது. எந்த ஒரு மோசடியும் செய்தது கிடையாது. என் தலைமைப்பதவியை தவறாக பயன்படுத்தியதும் கிடையாது. எல்லா நிலையிலும் நான் ஓர் உண்மை இறை விசுவாசியாகவே நடந்து கொண்டிருக்கின்றேன்.

பின்னர் ஏன் நீங்கள் என்னை பதவி நீக்கம் செய்தீர்கள்? என்று கேட்டார்கள்.

அதற்கு உமர் (ரலி) அவர்கள்என்னுடைய தனிப்பெரும் நேசத்திற்கும், பாசத்திற்கும் உடையவர்கள் நீங்கள். எப்போதும் உங்கள் மீது நான் தனிப்பெரும் கண்ணியம் வைத்துள்ளேன். உங்களை மோசடியாளனாகவோ அல்லது வேறு எந்த சிந்தனைகொண்டவனாகவோ காணவில்லை.

மாறாக! அல்லாஹ்வை மட்டுமே நினைத்த இதயங்கள்! அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேடி கெஞ்சிய நாவுகள்! இப்பொது அதை உதறிவிட்டு காலித் போனால் வெற்றி, அவர் தலைமை தான் வெற்றிக்குரிய தலைமை என்று அல்லாஹ்வை மறந்து பேச எத்தனித்து விட்டனர்.

வேறு வழியில்லை உம்மை பதவியிலிருந்து இறக்கினால் தான் இம்மக்களுக்கு அல்லாஹ்வின் உதவி ஞாபகம் வரும் என்பதற்காகத் தான் உம்மை பதவி நீக்கம் செய்தேன்என்றார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்…. என்று கூறி முக மலர்ச்சியுடன் அங்கிருந்து விடை பெற்றுச்சென்றார்கள் காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள்.

                              (நூல்: குலஃபாவுர்ரஸூல் {ஸல்}, பக்கம்:186-187)

கண்டிப்பும்.. கனிவும்..

فقد روى البيهقي في سننه عن عبد الرحمن بن القاسم حدثنا مالك قال:
  وكان من عمّال عمر بن الخطاب -رضي الله عنه- - نمرقتين
 لامرأة عمر -رضي الله عنه
 فدخل عمر فرآهما فقال: (من أين لك هاتين؟ اشتريتهما؟ أخبريني ولا تكذبيني!) قالت: بعث بهما إليّ فلان، فقال: قاتل الله فلانا إذا أراد حاجة فلم يستطعها من قِبَلِي أتَانِي من قِبَلِ أهلي؛ فاجتذبهما اجتذابا شديدا من تحتِ من كان عليهما جالسا، فخرج يحملهما فتبعته جاريتها فقالت: إنّ صوفهما لنا، ففتقهما وطرح إليها الصّوف، وخرج بهما فأعطى إحداهما امرأة من المهاجرات، وأعطى الأخرى امرأة من الأنصار".

ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களின் மனைவிக்கு, அரசவையில் பணி புரிந்த ஒருவர் இரண்டு தலையணையை அன்பளிப்பாக வழங்குகின்றார். ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் அரசவையில் அரசர் சாய்ந்து அமர்கின்ற மாதிரியான இரு தலையணையை தம் வீட்டினுள் பார்க்கிறார்கள்.

உடனே, தன் மனைவியிடம், இந்த இரண்டும் எங்கிருந்து வந்தது? அல்லது நீ விலைக்கு வாங்கினாயா? உண்மையைச் சொல், மறைக்காதே என ஜனாதிபதியாக தன் மனைவியிடம் சற்று வேகத்தோடு கேட்கிறார்கள்.

இதை இன்ன நபர் நமக்கு அன்பளிப்பாக அனுப்பியுள்ளார் என தன் மனைவி கூறிய பதிலைக் கேட்டு, “அல்லாஹ் அவருடன் போரிடுவானாக...எனக் கோபமாகக் கூறினார்கள்.
 
அந்த நபர் தனக்கு உண்டான ஒரு தேவையை நிறைவேற்றித் தருமாறு என்னிடம்  வந்தார். அதை நான் அனுமதிக்கவில்லை. இப்போது என் குடும்பத்தினர் வழியாக சமரசம் பேசவே இந்த இரண்டு தலையணையை அன்பளிப்பு என்ற பெயரில் கொடுத்து அனுப்பியுள்ளார் என கூறினார்கள்.

பின்னர் அந்த இரண்டு தலையணையையும் உமர் (ரலி) அவர்கள் ங்களின் மனைவியிடமிருந்து பிடுங்கிச் செல்கிற போது, எதுவும் பேச இயலாது விக்கித்து நின்ற உமர் (ரலி) அவர்களின்  மனைவி தன் கணவர் உமர் (ரலி) அவர்கள் பின் சென்று, அதன் மேல் இருக்கின்ற கம்பளி உறை நம்முடையது என்றதுமே அதை மட்டும் எடுத்துக் கொடுத்து விடுகிறார்கள்.
 
பின்பு, ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் அதில் ஒன்றை முஹாஜிர்களில் ஒரு பெண்ணுக்கும், இன்னொன்றை அன்ஸாரிகளில் ஒரு பெண்ணுக்கும் அன்பளிப்பாக கொடுத்து விடுகிறார்கள்.                                                                                            ( நூல்: பைஹக்கீ )

மக்களுக்கு பணிவிடை செய்வதிலே…

حَدَّثَنَا عَطَّافُ بْنُ خَالِدٍ ، قَالَ : حَدَّثَنَا زَيْدُ بْنُ أَسْلَمَ ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ ، رَضِيَ اللَّهُ عَنْهُ خَرَجَ لَيْلَةً يَحْرُسُ النَّاسَ ، فَمَرَّ بِامْرَأَةٍ وَهِيَ فِي بَيْتِهَا وَهِيَ تَقُولُ

تَطَاوَلَ هَذَا اللَّيْلُ وَاسْوَدَّ جَانِبُهْ ... وَطَالَ عَلَيَّ أَنْ لاَ خَلِيلَ أُلاَعِبُهْ
فَوَاللَّهِ لَوْلاَ خَشْيَةُ اللهِ وَحْدَهْ ... لَحُرِّكَ مِنْ هَذَا السَّرِيرِ جَوَانِبُهْ
فَلَمَّا أَصْبَحَ عُمَرُ أَرْسَلَ إِلَى الْمَرْأَةِ ، فَسَأَلَ عَنْهَا ، فَقِيلَ
 هَذِهِ فُلاَنَةُ بِنْتُ فُلاَنٍ ، وَزَوْجُهَا غَازٍ فِي سَبِيلِ اللهِ ، فَأَرْسَلَ إِلَيْهَا امْرَأَةً ، فَقَالَ : كُونِي مَعَهَا حَتَّى يَأْتِيَ زَوْجُهَا ، وَكَتَبَ إِلَى زَوْجِهَا ، فَأَقْفَلَهُ ، ثم دخل على حفصة ابنته رضي الله عنها فقال اني سائلك عن آمر قد أهمني فافرجيه عني. في كم تشتاق امرأة الى زوجها فخفضت رأسها واستحيت قال : فان الله لا يستحي من الحق قَالَتْ : أَرْبَعَةَ أَشْهُرٍ ، أَوْ خَمْسَةَ أَشْهُرٍ ، أَوْ سِتَّةَ أَشْهُرٍ ، فكتب عمر رضي الله عنه ان لا تحـبس الجيوش فوق أربعة اشهر
رواه سعيد بن منصور في سننه واخرجه عبد الرزاق في مصنفه

உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலம் அது. ஒரு நாள் இரவு உமர் (ரலி) அவர்கள் நகர்வலம் வருகின்றார்கள். ஒரு வீட்டிலிருந்து ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்கிறது. அழுகையின் ஊடாக இடையே ஏதோ சில வாசகங்களையும் அப்பெண்மனி உதிர்த்துக் கொண்டிருந்தார்.

செவியைக் கூர்மையாக்கி கேட்கின்றார்கள். அப்பெண்மனிஎத்துனை இரவுகள் என் துணைவர் இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது. எத்துனை நீண்டதாகத் தெரிகிறது இந்த இரவுகள்? என் துணைவர் என்னுடன் கொஞ்சிக் குலாவாமல் எங்கோ இருப்பதனால்….

அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சொல்கின்றேன்! அல்லாஹ்வின் அச்சம் மட்டும் என் உள்ளத்தில் இல்லாது போயிருக்குமானால், இந்த கட்டில் என்றோ அதன் உண்மைத் தன்மையை இழந்திருக்கும்என் தேகமும் தான்…” என்ற பொருள் பட கவி நடையில் தன் உணர்வை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.

கவிதை வரிகள் உமர் (ரலி) அவர்களின் உள்ளத்தைப் பிழிந்தது. நெருஞ்சி முள்ளாய் தைத்தது. அங்கிருந்து அமைதியாய் அகன்று விட்டார்கள்.

மறுநாள் காலை அந்த வீட்டின் விவரங்களை சேகரிக்க உத்தரவுகள் பரந்தன. இறுதியில், அப்பெண்மனியின் கணவர் அறப்போரில் கலந்து கொள்ளச் சென்று, நீண்ட காலம் ஆகியும் திரும்பி வரவில்லை என்கிற தகவல் பெறப்பட்டு கலீஃபா உமர் (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

உடனே, கலீஃபா உமர் (ரலி) அவர்கள்ஒரு பெண்ணை தன்னோடு அழைத்துக் கொண்டு அப்பெண்மனியின் வீட்டிற்குச் சென்றார்கள். அப்பெண்மனியை அழைத்துதன்னோடு அழைத்து வந்த அப்பெண்மனியை சுட்டிக் காட்டி இதோ! இப்பெண்மனியை  உங்களுக்குத் துணையாக வைத்துக் கொள்ளுங்கள்! தங்கள் கணவருக்கு நான் கடிதம் எழுதி அவர் உடனே ஊருக்குப் புறப்பட்டு வர ஏற்பாடு செய்கிறேன்என்று கூறினார்கள்.

பின்னர், நேராக தங்களுடைய மகளான உம்முல் முஃமினீன் அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்றுமகளே! கடந்த இரு தினங்களாக என் நெஞ்சில் நெருஞ்சி முள்ளாய் குத்திக் கொண்டிருக்கிற ஒரு விஷயத்திற்கு நீ தெளிவாக விடையளித்து, என் உள்ளத்தை சிரமத்தில் இருந்து மீட்டெடுக்க வேண்டும்என்று கூறி விட்டு

தம் கணவனை விட்டும் பிரிந்து வாழ்கிற ஒரு பெண் எவ்வளவு நாள் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி, இயல்புகளோடு இருக்க இயலும்என்று கேட்டார்கள்.

இந்தக் கேள்வியைச் சற்றும் எதிர்பாராத அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்கள் வெட்கத்தால் தலை கவிழ்ந்தார்கள். தந்தையே! என்ன கேள்வி கேட்கிறீர்கள் என்று தெரிந்து தான் கேட்கின்றீர்களா?” என்று கேட்டார்கள்.

அதற்கு, உமர் (ரலி) அவர்கள்அல்லாஹ் சத்தியத்தைச் சொல்வதற்கு வெட்கப்படுவதில்லைஎன்கிற இறைவசனத்தை ஓதிக் காண்பித்து விட்டு, நடந்த சம்பவத்தை கூறினார்கள்.

அப்போது, அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்கள்நான்கு மாதம் அல்லது ஆறு மாதம்என்று பதில் கூறினார்கள்.

இதைக் கேட்டதும் உமர் (ரலி) அவர்கள் விரைவாக மஸ்ஜிதுன் நபவீயை நோக்கி வந்தார்கள். அறப்போரில் பங்கு பெற உலகின் நாலா பாகங்களுக்கும் சென்றிருக்கிற அத்துனை படைத் தளபதிகளுக்கும்நான்கு மாதங்களுக்கு மேலாக படையில் பங்கு பெற்றிருக்கும் போர் வீரர்கள் அனைவருக்கும் ஒரு மாத காலம் விடுப்பு கொடுத்து அவரவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப் பட வேண்டும்; இனிமேல் எந்தப் படை வீரர்களும் நான்கு மாதத்திற்கு மேல் போர்ப் பணி செய்யக்கூடாதுஎன கடிதம் எழுதி தூது அனுப்பினார்கள்.

        ( நூல்: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக், ஃகுலஃபாவுர் ரஸூல் {ஸல்}…. }

இறைவனை அஞ்சுவதிலே..

في كتاب سمط النجوم العوالي للامام العصامي وفي الرياض النضرة للمحب الطبري
لما رجع رضي الله عنه من الشام إلى المدينة - انفرد عن الناس؛ ليتعرف أخبار رعيته، فمر بعجوز لها خباء، فقصدها، فقالت: يا هذا، ما فعل عمر؟ قال: قد أقبل من الشام سالماً، فقالت: لا جزاه الله عني خيراً. قال لها: ولم؟ قالت: لأنه ما فاتني من عطائه منذ ولي أمر المسلمين دينار ولا درهم، فقال: وما يدري عمر بحالك وأنت في هذا الموضع؟! فقالت: سبحان الله: ما ظننت أن أحداً يلي على الناس، ولا يدري ما بين مشرقها ومغربها. فبكى عمر، فقال: واعمراه بك أتدافعه منك حتى العجائز، ثم قال لها: يا أمة الله، بكم تبيعيني ظلامتك من عمر؟ فإني أرحمه من النار، فقالت: لا تهزأ بي، يرحمك الله؟ فقال عمر: لست بهزاء - فلم يزل بها حتى اشترى ظلامتها بخمسة وعشرين ديناراً - فبينما هو كذلك إذ أقبل: علي بن أبي طالب، وعبد الله بن مسعود - رضي الله عنهما - فقالا: السلام عليك يا أمير المؤمنين. فوضعت العجوز يدها على رأسها، وقالت: واسوأتاه، شتمت أمير المؤمنين في وجهه، فقال: لا عليك، يرحمك الله.
ثم طلب وفاء فلم يجده، فقطع قطعة من مرقعته، وكتب فيها: " بسم الله الرحمن الرحيم. هذا ما اشترى عمر ظلامتها منذ ولي إلى يوم كذا بخمسة وعشرين ديناراً، فما تدعيه عند وقوفه في المحشر بين يدي الله تعالى فهو منه بريء شهد على ذلك من فلانة: علي بن أبي طالب، وعبد الله بن مسعود " .
قال أبو طلحة: ثم دفع الكتاب إلي، وقال: إذا مت فاجعله في كفني؛ ألقى به ربي عز وجل.

கலீஃபா உமர் (ரலி) அவர்கள் ஆட்சிக்காலம். அபூ உபைதா (ரலி) அவர்களின் அழைப்பின் பேரில் ஷாமுக்குச் சென்று விட்டு மதீனா நோக்கி, தம் நண்பர்கள் இப்னு மஸ்வூத் (ரலி), அலீ (ரலி) மற்றும் சிலரோடு திரும்பிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது, அவர்களில் இருந்து பிரிந்து தங்களின் ஆட்சியின் நிலைகள் குறித்து மக்கள் என்ன கூறுகின்றார்கள் என அறிய ரகசியமாக ஆய்வு செய்வதற்காக புறப்பட்டார்கள்.

அப்போது வயதான மூதாட்டி ஒருவரை உமர் (ரலி) அவர்கள் கடந்து சென்றார்கள். அந்த மூதாட்டி உமர் (ரலி) அவர்கள் யார் என்று தெரியாமல் அவர்களிடம் பேச்சுக் கொடுத்தார்.

பேச்சின் ஊடாக உமர் (ரலி) அவர்களிடம் எங்கு சென்று கொண்டிருக்கின்றாய்?  நீ யார்? என்று கேட்டார் அந்த மூதாட்டி.

அதற்கு, உமர் (ரலி) அவர்கள் தாம் மதீனாவைச் சார்ந்தவர் என்றும் மதீனாவிற்கு ஒரு வேளையாக வந்து விட்டு மீண்டும் மதீனா திரும்புவதாகக் கூறினார்கள்.

அம்மூதாட்டி, “உமர் எப்படி இருக்கின்றார்?” என்று கேட்டார். உமர் (ரலி) அவர்கள் அவர் சலாமத்தாக நலமோடு உள்ளார்என்றார்கள்.

அதற்கு அம்மூத்தட்டி அல்லாஹ் உமருக்கு நற்கூலி வழங்காமல் இருப்பானாக! என்றார்கள். அதைக்கேட்ட உமர் ரலி அவர்கள் ஏன்? இப்படித் துஆச் செய்கின்றீர்கள் என வினவினார்கள்.

அவர் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இது நாள் வரை எனக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என்றாள் அம்மூதாட்டி.

உன் நிலைகள் உமருக்கு எப்படி தெரியும்?  என்று கலீஃபா உமர் (ரலி) கேட்ட போது, ம்மூதாட்டி, “சுப்ஹானல்லாஹ்! மக்களின் ஆட்சியை பொறுப்பேற்றிருக்கிற ஒருவரின் ஆட்சிக்கு உட்பட்ட மேற்கு மற்றும் கிழக்கு பற்றி தனக்கு தெரியாது என்று சொல்வாரா என்ன உமர்?” என்று கேட்டார்.

இது கேட்ட உமர் (ரலி) அழுதார்கள். அழுது கொண்டே தங்களின் ஆன்மாவோடு  ”உமரே! உம்மை விடவும் மிகச்சிறந்த அறிவாளிகள் எல்லாம் உலகில் உண்டு! இதோ இந்த மூதாட்டி உட்பட என்றார்கள்.

அல்லாஹ்வின் அடிமைப் பெண்ணே! உமர் உனக்கு செய்த அநீதிக்கு பகரமாக என்னிடம் விலை பெற்றுக்கொள்.அவரை நரகை விட்டும் நான் காப்பாற்ற பிரியப்படுகின்றேன் என்றார்கள் உமர் (ரலி) அவர்கள். 

அதைக் கேட்ட அம்மூதாட்டி,  என்னைக் கேலி செய்யாதீர்! யாரோ ஒரு உமருக்காக நீர் இரக்கப்படுகின்றீர்! அல்லாஹ் உமக்கு அருள் புரிவான்! என்றார்.

அதற்கு, உமர் ரலி,  இல்லை அல்லாஹ்வின் அடிமைப் பெண்ணே!  நான் கேலி செய்யவில்லை, உண்மையைத் தான் பேசுகிறேன் என்று கூறி - ஒரு வழியாக உமரின் அநீதிக்கு 25 தீனாரை பகரமாக அம்மூதாட்டியின் கையில் கொடுத்தார்கள்.

அப்போது, அப்பக்கம் வந்த அலி (ரலி), மற்றும் இப்னு மஸூத் (ரலி) ஆகிய இருவரும் அமீருல் முஃமினீன் அவர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் என்றார்கள்.

அதை செவியுற்ற அந்த மூதாட்டி,இவ்வளவு நேரம் அமீருல் முஃமினீன் அவர்களை, அவர்களின் முகத்திற்கு நேராகவே திட்டிவிட்டேனே! என்று பயந்து நடுங்கினார்.

இதைப் பார்த்த உமர் (ரலி) அவர்கள் நீங்கள் பயப்படவேண்டாம் என்று கூறி, ஒரு தோல் பேப்பரில் ஒரு ஒப்பந்தம் எழுதினார்கள்.

அதில் எழுதப்பட்ட விஷயம் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்....  உமர் ஆட்சிப்பொறுப்பு ஏற்றது முதல்  இன்று வரை எனக்கு செய்த அநீதிக்கு பகரமாக 25 தீனார் பெற்றுக் கொண்டு நான் அவரை விடுதலை செய்கிறேன்.

மேலும் நாளை மறுமையில் அல்லாஹ்வுக்கு முன்னிலையில் அவரை விசாரனைக்கு நிறுத்தமாட்டேன் என்று உறுதி கூறுகிறேன் என்று எழுதி  அலி (ரலி) மற்றும் இப்னு மஸ்வூத் (ரலி) ஆகிய இருவரையும் சாட்சியாக்கி அந்த தோல் பேப்பரை தங்களோடு மதீனா கொண்டு வந்தார்கள்.

இந்தச் செய்தியை நினைவு படுத்தும் அபூதல்ஹா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: பின்னர், ஒரு நாள் என்னை அழைத்த உமர் (ரலி) அவர்கள் அந்த தோல் பேப்பரை என்னிடம் கொடுத்து, அபூதல்ஹாவே! நான் மரணித்து என்னை கஃபன் செய்கிற போது இந்த தோல் பேப்பரையும் என்னோடு இணைத்து விடுங்கள்! இந்தக் கடிதத்தோடு என் ரப்பைச் சந்திக்க விரும்புகின்றேன்என்றார்கள்.

( நூல்: அர் ரியாளுன் நள்ரா லில் முஹிப்பி லிஇமாமி அத் தபரீ (ரஹ்), ஸமத்துன் நுஜூமுல் அவாலீ லிஇமாமி அல் உஸாமீ (ரஹ்)... )

அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக்கொள்வானாக!