Tuesday, 28 October 2025

வாழ்வின் உயர்வுக்கு வித்திடும் ஐந்து நெறிமுறைகள்!!

 

வாழ்வின் உயர்வுக்கு வித்திடும் ஐந்து நெறிமுறைகள்!!

இந்த உலகில் சிறந்த முறையில் வாழ வேண்டும் என்றே நம்மில் ஒவ்வொருவரும் விரும்புகின்றனர்.

ஒவ்வொருவரும் தங்களது விருப்பங்களுக்கு தக்கவாறு தங்களுடைய ஆசைகளுக்கு தக்கவாறு தங்களுடைய வாழ்க்கைப் பயணத்தை அமைத்துக் கொள்கின்றனர்.

எனினும் ஒரு முஸ்லிம் என்பவர் இவர்களில் இருந்து வேறுபட்டு தன்னுடைய விருப்பங்களையும், ஆசைகளையும் ஆன்மீக வாழ்வில் உயர்ந்த ஒரு நிலையை அடைய வேண்டும். மனிதர்களிடம் கையேந்தாமல் எவ்வித தேவையும் ஆகாமல் வாழ வேண்டும். இந்த உலகத்தில் வாழ்பவர்களிலேயே மிகச் சிறந்த முஃமினாக, தலை சிறந்த முஸ்லிமாக வாழ வேண்டும். அல்லாஹ்வின் திருப்தியை அவனுடைய பொருத்தத்தை அடைய வேண்டும் என்று இப்படியாக பல ஆசைகளோடு வாழ்ந்து வருகின்றார்கள். அப்படித்தான் ஒரு முஸ்லிமுடைய ஆசையும் விருப்பமும் இருக்க வேண்டும்.

ஒட்டுமொத்தமாக இந்த விருப்பத்தை ஆசையை அடைந்து கொள்ள ஏதேனும் வழி இருக்கிறதா? என்று ஆவலுடன் தேடிக் கொண்டு இருக்கின்றார்கள்.

அப்படியான வழியை நமது நபி (ஸல்) அவர்கள் காண்பித்து தராமல் இருப்பார்களா? இதோ! வாழ்வின் உயர்வுக்கு வித்திடும் இலகுவான ஐந்து நெறிமுறைகளை நமக்கு அழகிய முறையில் அடையாளப் படுத்தி இருக்கின்றார்கள்.

வாருங்கள்! மாநபி ஸல் அவர்கள் அடையாளப் படுத்தி இருக்கும் மகத்தான அந்த ஐந்து நெறிமுறைகள் ஊடாக வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவோம்.

عَنِ الْحَسَنِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم:مَنْ يَأْخُذُ مِنْ أُمَّتِي خَمْسَ خِصَالٍ ، فَيَعْمَلُ بِهِنَّ ، أَوْ يُعَلِّمُهُنَّ مَنْ يَعْمَلُ بِهِنَّ ؟ قَالَ : قُلْتُ : أَنَا يَا رَسُولَ اللهِ ، قَالَ : فَأَخَذَ بِيَدِي فَعَدَّهُنَّ فِيهَا ، ثُمَّ قَالَ : اتَّقِ الْمَحَارِمَ تَكُنْ أَعْبَدَ النَّاسِ ، وَارْضَ بِمَا قَسَمَ اللهُ لَكَ تَكُنْ أَغْنَى النَّاسِ ، وَأَحْسِنْ إِلَى جَارِكَ تَكُنْ مُؤْمِنًا ، وَأَحِبَّ لِلنَّاسِ مَا تُحِبُّ لِنَفْسِكَ تَكُنْ مُسْلِمًا ، وَلاَ تُكْثِرِ الضَّحِكَ ، فَإِنَّ كَثْرَةَ الضَّحِكِ تُمِيتُ الْقَلْبَ.

أخرجه أحمد (2/310 ، رقم 8081) ، والترمذي (4/551 ، رقم 2305) ، وقال : غريب ، والبيهقى في شعب الإيمان (7/78 ، رقم 9543) .قال الألباني في \"السلسلة الصحيحة\" 2 / 637 :أخرجه الترمذي ( 2 / 50 )

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: "என்னுடைய உம்மத்தில் ஐந்து நெறிமுறைகளை ஏற்று அதன் படி பின்பற்றுபவர் யார்? அல்லது என்னுடைய இந்த அறிவுரையை கற்று அதன் படி பின்பற்றுபவர் யார்? என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நான் "இதோ! நான் ஏற்றுக் கொண்டு பின்பற்றுகிறேன்!" என்று கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் "என்னுடைய கையைப் பிடித்து ஒவ்வொன்றாக எண்ணி" பின்வருமாறு கூறினார்கள்.

1) தடை செய்யப்பட்டவைகளில் இருந்து நீர் விலகிக் கொள்வீராக! இறைவனுக்கு கீழ் படிந்தவர்களில் சிறந்தவராய் பரிணமிப்பீர்!

2) அல்லாஹ் உமக்கு விதித்திருப்பதில் திருப்தியும் மனநிறைவும் கொள்வீராக! மக்களில் உம்மை விட செல்வந்தராய் எவரையும் காண மாட்டீர்!

3) உமது அண்டை வீட்டாரிடம் மிகவும் அழகிய முறையில் உறவாடுவீராக! நீர் இறைநம்பிக்கையில் முழுமையானவராய் திகழ்வீர்!

4) உமக்கு விரும்புவதையே பிறருக்கும் விரும்புவீராக! நீர் சிறந்த முஸ்லிமாக மிளிர்வீர்!

5) அதிகமாக சிரிக்காதீர்! அது உமது இதயம் (சீராக இயங்குவதை நிறுத்தி விடும்) மரணிக்க (மங்கிப்போக) காரணமாக ஆகிவிடும்! ( நூல்: அஹ்மத், திர்மிதீ )

1) முதல் நெறிமுறை…

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஹலால் - ஆகுமாக்கி இருப்பதை ஹராம் - தடுத்துக் கொள்வதற்கும், ஹராம் - தடுத்திருப்பதை ஹலால் - ஆகுமாக்கிக் கொள்வதற்கும் எவருக்கும் அனுமதியோ, விருப்பம் தெரிவிக்கும் அதிகாரமோ, மாற்றுக் கருத்து கூறும் உரிமையோ தர வில்லை.

يٰۤاَيُّهَا النَّبِىُّ لِمَ تُحَرِّمُ مَاۤ اَحَلَّ اللّٰهُ لَـكَ‌ۚ تَبْتَغِىْ مَرْضَاتَ اَزْوَاجِكَ‌ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ‏

நபியே! உம் மனைவியரின் திருப்தியை நாடி, அல்லாஹ் உமக்கு அனுமதித்துள்ளதை ஏன் விலக்கிக் கொண்டீர்? மேலும் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன். ( அல்குர்ஆன்: 66: 1 )

وقال سفيان الثوري ووكيع ، عن إسماعيل بن أبي خالد ، عن قيس بن أبي حازم عن عبد الله بن مسعود قال : كنا نغزو مع رسول الله صلى الله عليه وسلم ، وليس معنا نساء ، فقلنا : ألا نستخصي؟ فنهانا رسول الله صلى الله عليه وسلم عن ذلك ، ورخص لنا أن ننكح المرأة بالثوب إلى أجل ، ثم قرأ عبد الله

கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஓர் அறப்போரில் கலந்து கொண்டிருந்தோம். அப்போது எங்களுடன் (எங்கள் துணைவியரோ, வேறு பெண்களை மணமுடித்துக்கொள்ளத் தேவையான செல்வமோ) ஏதும் இருக்கவில்லை. ஆகவே நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடம், (ஆண்மை நீக்கம் செய்துகொள்ள) நாங்கள் காயடித்துக் கொள்ளலாமா? என்று கேட்டோம். அவ்வாறு செய்ய வேண்டாமென நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்தார்கள். அதன் பின்னர் ஆடைக்கு பதிலாகப் பெண்களை மணமுடித்துக் கொள்ள எங்களுக்கு அனுமதியளித்தார்கள். (பின்னர் இந்த திருமணம் முற்றிலுமாக ஹராமாக்கப்பட்டது) என்று கூறிவிட்டு, பின்வரும் வசனத்தை அன்னார் எங்களுக்கு ஓதிக்காட்டினார்கள்:

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تُحَرِّمُوْا طَيِّبٰتِ مَاۤ اَحَلَّ اللّٰهُ لَـكُمْ وَلَا تَعْتَدُوْا‌ ؕ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الْمُعْتَدِيْنَ‏

முஃமின்களே! அல்லாஹ் உங்களுக்கு ஹலாலாக்கி (ஆகுமாக்கி)யுள்ள, பரிசுத்தமான பொருட்களை ஹராமானவையாக (விலக்கப்பட்டவையாக) ஆக்கிக் கொள்ளாதீர்கள்; இன்னும் வரம்பு மீறியும் செல்லாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை. ( அல்குர்ஆன்: 5: 87 )

நாம் என்னதான் வெளிப்படையாக நல்ல பல அமல்களை செய்தாலும், நல்லவராக வலம் வந்தாலும், ஹராமான விஷயங்களில் இறைவனுக்கு அஞ்சி நடக்கவில்லையென்றால், மறுமையில் நாம் அடைகின்ற கைசேதம் குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரிக்கை விடுக்கின்றார்கள்.

حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ الرَّمْلِيُّ قَالَ: حَدَّثَنَا عُقْبَةُ بْنُ عَلْقَمَةَ بْنِ حَدِيجٍ الْمَعَافِرِيُّ، عَنْ أَرْطَاةَ بْنِ الْمُنْذِرِ، عَنْ أَبِي عَامِرٍ الْأَلْهَانِيِّ، عَنْ ثَوْبَانَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ «لَأَعْلَمَنَّ أَقْوَامًا مِنْ أُمَّتِي يَأْتُونَ يَوْمَ الْقِيَامَةِ بِحَسَنَاتٍ أَمْثَالِ جِبَالِ تِهَامَةَ بِيضًا فَيَجْعَلُهَا اللَّهُ عَزَّ وَجَلَّ هَبَاءً مَنْثُورًا . قَالَ ثَوْبَانُ : يَا رَسُولَ اللَّهِ صِفْهُمْ لَنَا جَلِّهِمْ لَنَا - أظهر مواصفاتهم - أَنْ لَا نَكُونَ مِنْهُمْ وَنَحْنُ لَا نَعْلَمُ ؟ قَالَ : أَمَا إِنَّهُمْ إِخْوَانُكُمْ وَمِنْ جِلْدَتِكُمْ وَيَأْخُذُونَ مِنْ اللَّيْلِ كَمَا تَأْخُذُونَ وَلَكِنَّهُمْ أَقْوَامٌ إِذَا خَلَوْا بِمَحَارِمِ اللَّهِ انْتَهَكُوهَا . رواه ابن ماجه»

எனது உம்மத்தில் ஒரு கூட்டத்தாரை நான் அறிவேன். மறுமை நாளில் திஹாமாஎனும் மலைகள் அளவுக்கு நன்மைகளுடன் அவர்கள் வருவார்கள். அவர்களின் நன்மைகளை அல்லாஹ் பரப்பப்பட்ட புழுதியாக ஆக்குவான்என்று நபியவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! அவர்களைப் போன்று நாங்கள் ஆகிவிடாமல் இருப்பதற்காக அவர்களைப் பற்றி எங்களுக்குக் கூறுங்கள்! அவர்களை எங்களுக்குத் தெரியாது!என்றோம்.

அதற்கு நபியவர்கள் அவர்கள் உங்களின் சகோதரர்கள், உங்களைச் சார்ந்தவர்கள் நீங்கள் இரவு வணக்கத்தில் ஈடுபடுவதைப் போன்றே அவர்களும் இரவில் வணக்கம் புரிவார்கள். ஆயினும் அல்லாஹ்வின் தடைகளை மீறுவதற்கான சந்தர்ப்பங்கள் அவர்களுக்கு வாய்த்தால் அல்லாஹ் தடை செய்தவற்றைச் செய்து விடுவார்கள். அவர்களே அக்கூட்டத்தினர்என்று கூறினார்கள். ( நூல்: இப்னு மாஜா )

ஒரு முஸ்லிம் உடைய வாழ்வில் ஹலால் ஹராம் தான் அவன் எத்தகைய முஸ்லிம் என்பதைத் தீர்மானிக்கும் அளவுகோல் ஆகும். மேலும், ஹலால் ஹராம் தான் அவனுடைய முழு வாழ்வையும் அர்த்தமுள்ளதாகவும், உயிர் உள்ளதாகவும் ஆக்குகின்றன. அந்த வகையில் வருமானத்தில் ஹலால் ஹராம் என்பது மிகவும் அவசியமாகும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ لَا يُبَالِي الْمَرْءُ مَا أَخَذَ مِنْهُ أَمِنَ الْحَلَالِ أَمْ مِنْ الْحَرَامِ

 

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தாம் சம்பாதித்தது ஹலாலா ஹராமா என்று மக்கள் பொருட்படுத்தாத ஒரு காலம் (இனி) வரும்!என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள். ( நூல். புகாரி 2059 )

இன்று நம் சமூகத்தில் பலரின் நிலை இவ்வாறுதான் இருக்கிறது எப்படியோ பணம் வந்தால் சரி என்று.

கொஞ்சம் ஹராம் கலந்திருந்தாலும் தொழுகை கூடாது

وقال صلى الله عليه وسلم: " من اشترى ثوباً بعشرة دراهم وفي ثمنه درهم حرام لم يقبل الله صلاته مادام عليه منه شيء "

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.பத்து திர்ஹத்துக்கு வாங்கிய ஆடை.அதில் ஒரு திர்ஹம் ஹராமாக இருந்தாலும் அது இருக்கும் வரை தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது.

ஹராம் கலந்திருந்தால் தர்மம் கூடாது..

. وقال صلى الله عليه وسلم: من اكتسب مالاً من حرام فإن تصدق به لم يقبل منه

. وقال صلى الله عليه وسلم: " من أصاب مالاً من مأثم فوصل به رحماً أو تصدق به أو أنفقه في سبيل الله جمع الله ذلك جميعاً ثم قذفه في النار

ஒருவர் ஹராமான வழியில் சம்பாதித்து அந்த பொருளைக் கொண்டு, உறவைச் சேர்ந்து (உறவுகளுக்கு கொடுத்து) வாழ்கின்றார், மேலும் தர்மம் செய்கின்றார், அல்லது அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்கின்றார். அல்லாஹ் அத்தர்மங்கள் அனைத்துயும், அவருடன் ஒன்று சேர்த்து நரகில் வீசி விடுவான்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

துஆவும், நல்லறங்களும் ஏற்றுக் கொள்ளப்படாது..

قَامَ سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ ، فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ ، ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مُسْتَجَابَ الدَّعْوَةِ ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " يَا سَعْدُ أَطِبْ مَطْعَمَكَ تَكُنْ مُسْتَجَابَ الدَّعْوَةِ ، وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ ، إِنَّ الْعَبْدَ لَيَقْذِفُ اللُّقْمَةَ الْحَرَامَ فِي جَوْفِهِ مَا يُتَقَبَّلُ مِنْهُ عَمَلَ أَرْبَعِينَ يَوْمًا

ஸஅத் பின் அபீ வகாஸ் (ரலி) அவர்கள் ஒருமுறை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் இவ்வாறு விண்ணப்பித்தார்: இறைத்தூதரே! எனது பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக பிரார்த்தனை செய்யுங்கள்! என்று வேண்டி நின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஸஅதே! தூய்மையானவற்றை மட்டும் உண்ணுங்கள்! உங்கள் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும்என்று கூறிவிட்டு. இந்த முஹம்மதின் உயிர் எவன் வசம் இருக்கின்றதோ அவன் மீது ஆணையாக! நிச்சயமாக ஒரு அடியான் தன் வயிற்றிலே இரு கவள ஹராமான உணவை உட்கொண்டு விடுகின்றான். அதன் காரணமாக அவனுடைய நாற்பது நாள் அமல்கள் ஏதும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லைஎன்று கூறினார்கள்.”.

 

ஹஜ், உம்ரா ஏற்றுக் கொள்ளப்படாது

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْفَضْلِ السَّقَطِيُّ قَالَ: نَا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، عَنْ سُلَيْمَانَ بْنِ دَاوُدَ الْيَمَامِيُّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا خَرَجَ الرَّجُلُ حَاجًّا بِنَفَقَةٍ طَيِّبَةٍ، وَوَضَعَ رِجْلَهُ فِي الْغَرْزِ، فَنَادَى: لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، نَادَاهُ مُنَادٍ مِنَ السَّمَاءِ: لَبَّيْكَ وَسَعْدَيْكَ، زَادُكَ حَلَالٌ، وَرَاحِلَتُكَ حَلَالٌ، وَحَجُّكُ مَبْرُورٌ غَيْرُ مَأْزُورٍ، وَإِذَا خَرَجَ بِالنَّفَقَةِ الْخَبِيثَةِ، فَوَضَعَ رِجْلَهُ فِي الْغَرْزِ، فَنَادَى: لَبَّيْكَ، نَادَاهُ مُنَادٍ مِنَ السَّمَاءِ: لَا لَبَّيْكَ وَلَا سَعْدَيْكَ، زَادُكَ حَرَامٌ وَنَفَقَتُكَ حَرَامٌ، وَحَجُّكَ غَيْرُ مَبْرُورٍ» (المعجم الأوسط -5228)

ஹஜ்ஜிற்கு செல்லக்கூடிய, உம்ராவிற்கு செல்லக்கூடிய ஒரு புனித பயணி. அவர் முதல் முதலாக தனது இஹ்ராமை அணிந்து மீக்காதில் இருந்து தல்பியா ஓதுவார். அந்த தல்பியாவில் அவர் கூறுவார்:- ரப்பே! நான் உன்னிடத்தில் வந்துவிட்டேன். உனக்கு இணை துணை இல்லை என்று அவர் கூறுகிறார்.

ஒவ்வொரு உம்ரா, ஹஜ்ஜுடைய பயணிகள் அவர்கள் தல்பியா கூறும்பொழுது அல்லாஹ்வின் புறத்திலிருந்து பதில் சொல்லப்படுகிறது. அப்படி பதில் சொல்லப்படும்பொழுது,அல்லாஹ்வுடைய தூதர் {ஸல்} குறிப்பிட்டார்கள்.

யாருடைய வருமானம் ஹலாலாக இருந்து, அந்த ஹலாலான வருவாயிலிருந்து ஹஜ், உம்ராவுக்கு வருகிறாரோ அவர் தல்பியா கூறும்பொழுது சொல்லப்படும்;உனது தல்பியா ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது, உனது வருகை ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது என்பதாக. யாருடைய வருமானம் ஹராமாக இருந்து, தடுக்கப்பட்ட வழிகளில் இருந்து, அல்லாஹ் அனுமதிக்காத வழியில் சம்பாதித்த சம்பாத்தியங்களிலிருந்து அவர் ஹஜ், உம்ராவிற்கு வந்திருந்தால் அப்போது அல்லாஹ்வின் புறத்திலிருந்து சொல்லப்படும்; உன்னுடைய தல்பியா நிராகரிக்கப்பட்டுவிட்டது, உனது தல்பியா ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதாக. அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல் : அல்முஃஜமுல் அவ்சத், எண் : 5228.

வரலாறு தரும் படிப்பினை..

யூசுஃப் (அலை) அவர்களின் வரலாற்றை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அழகிய வரலாறு என்று துவங்கி, நிச்சயமாக வரலாறுகளில் பாடங்களும் படிப்பினைகளும் இருக்கிறது என்று முடிப்பான்.

யூசுஃப் இந்த உலகில் இருக்கவே கூடாது என்று முடிவு செய்தார்கள் அவர்களின் சகோதரர்கள். ஆனால், யூசுஃப் மட்டும் இல்லை என்றால் அவர்களுக்கு வாழ்க்கையே இல்லை என்று முடிவு செய்தான் அல்லாஹ் ரப்புல் ஆலமீன்.

ஆம்! கன்ஆனில் பஞ்சம் ஏற்பட்டு மிஸ்ரில் உணவுத்துறை அமைச்சராக இருந்த யூசுஃப் (அலை) அவர்களிடம் உதவி கேட்டு வரவழைத்தான் இறைவன்.

இரண்டு மூன்று சந்திப்புளின் பின்னர் மிஸ்ரின் உணவுத்துறை அமைச்சர் தான் தம் சகோதரர் என்பதை அல்லாஹ் அவர்களுக்கு அறியச் செய்தான்.

 

قَالُوٓا۟ أَءِنَّكَ لَأَنتَ يُوسُفُ قَالَ أَنَا۠ يُوسُفُ وَهَٰذَآ أَخِى قَدْ مَنَّ ٱللَّهُ عَلَيْنَآ إِنَّهُۥ مَن يَتَّقِ وَيَصْبِرْ فَإِنَّ ٱللَّهَ لَا يُضِيعُ أَجْرَ ٱلْمُحْسِنِينَ

(அப்போது அவர்கள்) "நிச்சயமாக நீர் தாம் யூஸுஃபோ? என்று கேட்டார்கள்; (ஆம்!) நான் தாம் யூஸுஃபு (இதோ!) இவர் (பின் யாமீன்) என்னுடைய சகோதரராவார்; நிச்சயமாக அல்லாஹ் எங்கள் மீது அருள் புரிந்திருக்கின்றான்; எவர் (அவனிடம்) அச்சத்துடன் இருக்கிறார்களோ, இன்னும் பொறுமையும் மேற்கொண்டிருக்கிறாரோ (அத்ததைய) நன்மை செய்வோர் கூலியை நிச்சயமாக அல்லாஹ் வீணாக்கிவிடமாட்டான்" என்று கூறினார். ( அல்குர்ஆன்: 12: 90 )

இந்த உயரிய பேருபகாரத்திற்கு காரணமாக யூசுஃப் அலை அவர்கள் இரண்டு அம்சத்தை குறிப்பிட்டார்கள். அதில் ஒன்று அல்லாஹ்வின் அச்சம்.

அந்த அச்சம் எது என்பதையும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் குறிப்பிட மறக்க வில்லை.

وَرَٰوَدَتْهُ ٱلَّتِى هُوَ فِى بَيْتِهَا عَن نَّفْسِهِ وَغَلَّقَتِ ٱلْأَبْوَٰبَ وَقَالَتْ هَيْتَ لَكَ قَالَ مَعَاذَ ٱللَّهِ إِنَّهُۥ رَبِّىٓ أَحْسَنَ مَثْوَاىَ إِنَّهُۥ لَا يُفْلِحُ ٱلظَّٰلِمُونَ

அவர் எந்தப் பெண்ணின் வீட்டில் இருந்தாரோ, அவள் அவர்மீது விருப்பங்கொண்டு, கதவுகளைத் தாழிட்டுக் கொண்டு (தன் விருப்பதிற்கு இணங்குமாறு) "வாரும்" என்று அழைத்தாள் - (அதற்கு அவர் மறுத்து,) "அல்லாஹ் (இத்தீய செயலிலிருந்து) என்னைக் காத்தருள்வானாக! நிச்சயமாக (உன் கணவர்) என் எஜமானர், என் இடத்தை அழகாக (கண்ணியமாக) வைத்திருக்கிறார் - அநியாயம் செய்பவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள்" என்று சொன்னார். ( அல்குர்ஆன்: 12: 23 )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தடுத்தவற்றில் அல்லாஹ்வைப் பயந்து ஒதுங்கிக் கொண்டார்.

மேலும், அந்த தவறில் வீழ்ந்திடாமல் இருக்க சில ஆண்டுகள் தன்னை சிறையில் அடைத்திட அவரே முன் வந்தார். அதற்காக அல்லாஹ்விடம் துஆவும் கேட்டார்.

قَالَتْ فَذَٰلِكُنَّ ٱلَّذِى لُمْتُنَّنِى فِيهِ وَلَقَدْ رَٰوَدتُّهُۥ عَن نَّفْسِهِۦ فَٱسْتَعْصَمَ وَلَئِن لَّمْ يَفْعَلْ مَآ ءَامُرُهُ لَيُسْجَنَنَّ وَلَيَكُونًۭا مِّنَ ٱلصَّٰغِرِينَ

அதற்கவள் "நீங்கள் எவர் சம்பந்தமாக என்னை நிந்தித்தீர்ளோ, அவர்தாம் இவர்; நிச்சயமாக நான் அவரை என் விருப்பத்திற்கு இணங்கும்படி வற்புறுத்தினேன் - ஆனால் அவர் (மன உறுதியுடன்) தம்மைக் காத்துக் கொண்டார். இனியும் அவர் நான் இடும் கட்டளைக்கிணங்கி நடந்து கொள்ளாவிட்டால் சிறையில் தள்ளப்படுவார்; மேலும் அவர் சிறுமை அடைந்தவர்களில் ஒருவராகவும் ஆகிவிடுவார்" என்று சொன்னாள்.

قَالَ رَبِّ ٱلسِّجْنُ أَحَبُّ إِلَىَّ مِمَّا يَدْعُونَنِىٓ إِلَيْهِ وَإِلَّا تَصْرِفْ عَنِّى كَيْدَهُنَّ أَصْبُ إِلَيْهِنَّ وَأَكُن مِّنَ ٱلْجَٰهِلِينَ

(அதற்கு) அவர், "என் இறைவனே! இவர்கள் என்னை எதன் பக்கம் அழைக்கிறார்களோ, அ(த்தீய)தை விடச் சிறைக்கூடமே எனக்கு அதிக விருப்பமுடையதாகும்; இவர்களின் சதியை விட்டு நீ என்னைக் காப்பாற்றவில்லையானால், நான் இவர்கள் பால் சாய்ந்து (பாவத்தால்) அறிவில்லாதவர்களில் ஒருவனாகிவிடுவேன்" என்று (பிரார்த்தித்தவராக) கூறினார். ( அல்குர்ஆன்: 12: 32,33 )

அல்லாஹ் தடுத்துள்ள(ஹராமான)வைகள் எது?

قُلْ اِنَّمَا حَرَّمَ رَبِّیَ الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ وَالْاِثْمَ وَالْبَغْیَ بِغَیْرِ الْحَقِّ وَاَنْ تُشْرِكُوْا بِاللّٰهِ مَا لَمْ یُنَزِّلْ بِهٖ سُلْطٰنًا وَّاَنْ تَقُوْلُوْا عَلَی اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ ۟

என் இறைவன் ஹராம் எனத் தடுத்திருப்பவையெல்லாம், வெளிப்படையான அல்லது அந்தரங்கமான, மானக்கேடான செயல்கள்; பாவங்கள்; நியாயமின்றி (ஒருவருக்கொருவர்) கொடுமை செய்வது ஆதாரமில்லாமலிருக்கும் போதே; நீங்கள் அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தல், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்யாகக்) கூறுவது (ஆகிய இவையே என்று நபியே!) நீர் கூறுவீராக. ( அல்குர்ஆன்: 7: 33 )

قُلْ تَعَالَوْا اَتْلُ مَا حَرَّمَ رَبُّكُمْ عَلَیْكُمْ اَلَّا تُشْرِكُوْا بِهٖ شَیْـًٔا وَّبِالْوَالِدَیْنِ اِحْسَانًا وَلَا تَقْتُلُوْۤا اَوْلَادَكُمْ مِّنْ اِمْلَاقٍ نَحْنُ نَرْزُقُكُمْ وَاِیَّاهُمْ وَلَا تَقْرَبُوا الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ وَلَا تَقْتُلُوا النَّفْسَ الَّتِیْ حَرَّمَ اللّٰهُ اِلَّا بِالْحَقِّ ذٰلِكُمْ وَصّٰىكُمْ بِهٖ لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ 

வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நான் ஓதிக் காண்பிக்கிறேன்; எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்; பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்; வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; வெளிப்படையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்; அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் - கொலை செய்யாதீர்கள் - இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான்.

وَلَا تَقْرَبُوْا مَالَ الْیَتِیْمِ اِلَّا بِالَّتِیْ هِیَ اَحْسَنُ حَتّٰی یَبْلُغَ اَشُدَّهٗ وَاَوْفُوا الْكَیْلَ وَالْمِیْزَانَ بِالْقِسْطِ لَا نُكَلِّفُ نَفْسًا اِلَّا وُسْعَهَا وَاِذَا قُلْتُمْ فَاعْدِلُوْا وَلَوْ كَانَ ذَا قُرْبٰی وَبِعَهْدِ اللّٰهِ اَوْفُوْا ذٰلِكُمْ وَصّٰىكُمْ بِهٖ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ 

 

அநாதையின் பொருளின் பக்கம் அவன் பிராயத்தை அடையும் வரையில் அழகான முறையிலன்றி நீங்கள் நெருங்காதீர்கள்; அளவையும், நிறுவையையும் நீதத்தைக் கொண்டு நிரப்பமாக்குங்கள்; நாம் எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி கஷ்டப்படுத்துவதில்லை; நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் - நியாயமே பேசுங்கள்; அல்லாஹ்வுக்கு (நீங்கள் கொடுத்த) உறுதி மொழியை நிறைவேற்றுங்கள். நீங்கள் நினைவு (கூர்ந்து நடந்து கொள்ளும் பொருட்டே அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கிறான். ( அல்குர்ஆன்: 6: 151, 152 )

حُرِّمَتْ عَلَیْكُمُ الْمَیْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنْزِیْرِ وَمَاۤ اُهِلَّ لِغَیْرِ اللّٰهِ بِهٖ وَالْمُنْخَنِقَةُ وَالْمَوْقُوْذَةُ وَالْمُتَرَدِّیَةُ وَالنَّطِیْحَةُ وَمَاۤ اَكَلَ السَّبُعُ اِلَّا مَا ذَكَّیْتُمْ ۫وَمَا ذُبِحَ عَلَی النُّصُبِ وَاَنْ تَسْتَقْسِمُوْا بِالْاَزْلَامِ ذٰلِكُمْ فِسْقٌ اَلْیَوْمَ یَىِٕسَ الَّذِیْنَ كَفَرُوْا مِنْ دِیْنِكُمْ فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِ اَلْیَوْمَ اَكْمَلْتُ لَكُمْ دِیْنَكُمْ وَاَتْمَمْتُ عَلَیْكُمْ نِعْمَتِیْ وَرَضِیْتُ لَكُمُ الْاِسْلَامَ دِیْنًا فَمَنِ اضْطُرَّ فِیْ مَخْمَصَةٍ غَیْرَ مُتَجَانِفٍ لِّاِثْمٍ ۙ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟

            (தானாகச்) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்ட (அறுக்கப்பட்ட)தும், கழுத்து நெறித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீழே விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப் பட்டுச் செத்ததும், (கரடி, புலி போன்ற) விலங்குகள் கடித்(துச் செத்)தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன; (அனுமதிக்கப்பட்டவற்றில்) எதை நீங்கள் (உயிரோடு பார்த்து, முறைப்படி) அறுத்தீர்களோ அதைத் தவிர; (அதை உண்ணலாம். அன்றியும் பிற வணக்கம் செய்வதற்காகச்) சின்னங்கள் வைக்கப் பெற்ற இடங்களில் அறுக்கப்பட்டவையும்; அம்புகள் மூலம் நீங்கள் குறி கேட்பதும் (உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன) - இவையாவும் (பெரும்) பாவங்களாகும்; இன்றைய தினம் காஃபிர்கள் உங்களுடைய மார்க்கத்தை (அழித்து விடலாம் என்பதை)ப் பற்றிய நம்பிக்கையை இழந்து விட்டார்கள்; எனவே நீங்கள் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சி நடப்பீர்களாக; இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்; ஆனால் உங்களில் எவரேனும் பாவம் செய்யும் நாட்டமின்றி, பசிக் கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (மேலே கூறப்பட்ட விலக்கப்பட்டவற்றைப் புசித்து) விட்டால் (அது குற்றமாகாது). ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், கருணை மிக்கோனாகவும் இருக்கின்றான். ( அல்குர்ஆன்: 5: 3 )

حُرِّمَتْ عَلَیْكُمْ اُمَّهٰتُكُمْ وَبَنٰتُكُمْ وَاَخَوٰتُكُمْ وَعَمّٰتُكُمْ وَخٰلٰتُكُمْ وَبَنٰتُ الْاَخِ وَبَنٰتُ الْاُخْتِ وَاُمَّهٰتُكُمُ الّٰتِیْۤ اَرْضَعْنَكُمْ وَاَخَوٰتُكُمْ مِّنَ الرَّضَاعَةِ وَاُمَّهٰتُ نِسَآىِٕكُمْ وَرَبَآىِٕبُكُمُ الّٰتِیْ فِیْ حُجُوْرِكُمْ مِّنْ نِّسَآىِٕكُمُ الّٰتِیْ دَخَلْتُمْ بِهِنَّ فَاِنْ لَّمْ تَكُوْنُوْا دَخَلْتُمْ بِهِنَّ فَلَا جُنَاحَ عَلَیْكُمْ ؗ وَحَلَآىِٕلُ اَبْنَآىِٕكُمُ الَّذِیْنَ مِنْ اَصْلَابِكُمْ وَاَنْ تَجْمَعُوْا بَیْنَ الْاُخْتَیْنِ اِلَّا مَا قَدْ سَلَفَ اِنَّ اللّٰهَ كَانَ غَفُوْرًا رَّحِیْمًا 

உங்களுக்கு (மணமுடிக்க) விலக்கப்பட்டவர்கள்: உங்கள் தாய்மார்களும், உங்கள் புதல்வியரும், உங்கள் சகோதரிகளும், உங்கள் தந்தையின் சகோதரிகளும்; உங்கள் தாயின் சகோதரிகளும், உங்கள் சகோதரனின் புதல்வியரும், உங்கள் சகோதரியின் புதல்வியரும், உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களும், உங்கள் பால்குடி சகோதரிகளும், உங்கள் மனைவியரின் தாய்மார்களும் ஆவார்கள்; அவ்வாறே, நீங்கள் ஒரு பெண்ணை விவாகம் செய்து அவளுடன் நீங்கள் சேர்ந்துவிட்டால், அவளுடைய முந்திய கணவனுக்குப் பிறந்த உங்கள் கண்காணிப்பில் இருக்கும் மகளை நீங்கள் கல்யாணம் செய்யக்கூடாது; ஆனால் நீங்கள் ஒரு பெண்ணை மணந்த பின்னர், அவளுடன் வீடு கூடாமலிருந்தால் (அவளை விலக்கி அவளுக்கு முந்திய கணவனால் பிறந்த பெண்ணை விவாகம் செய்து கொள்வதில்) உங்கள் மீது குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த குமாரர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்து கொள்ளக்கூடாது. இரண்டு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவியராக) ஒன்று சேர்ப்பது விலக்கப்பட்டது - இதற்கு முன் நடந்து விட்டவை தவிர (அவை அறியாமையினால் நடந்து விட்டமையால்), நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனுமாக இருக்கின்றான். ( அல்குர்ஆன்: 4: 23 )

2) இரண்டாவது நெறிமுறை:-

عن أنس رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: «إِنَّ عِظَمَ الْجَزَاءِ مَعَ عِظَمِ الْبَلَاءِ، وَإِنَّ اللهَ إِذَا أَحَبَّ قَوْمًا ابْتَلَاهُمْ، فَمَنْ رَضِيَ فَلَهُ الرِّضَا، وَمَنْ سَخطَ فَلَهُ السخطُ»  

"சோதனை எந்த அளவுக்கு அதிகமாக இருக்குமோ அந்த அளவுக்கு அதற்கு வழங்கப்படும் கூலியும் மகத்தானதாக இருக்கும். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஒரு சமூகத்தை நேசிப்பானேயானால் அவன் அவர்களை சோதிப்பான். யார் அதைப் பொருந்திக் கொள்வாரோ அல்லாஹ்வும் அவரைப் பொருந்திக் கொள்வான். யார் அந்த நிலையை பொருந்திக் கொள்ளாமல் அல்லாஹ்வின் மீது கோபம் கொள்வாரோ அல்லாஹ்வும் அவர் மீது கோபம் கொள்வான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )

وَعَنْ أبي يَحْيَى صُهَيْبِ بْنِ سِنَانٍ قَالَ: قَالَ رَسُولُ الله ﷺ: عَجَباً لأمْرِ الْمُؤْمِنِ إِنَّ أَمْرَهُ كُلَّهُ لَهُ خَيْرٌ، وَلَيْسَ ذَلِكَ لأِحَدٍ إِلاَّ للْمُؤْمِن: إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ فَكَانَ خَيْراً لَهُ، وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ صَبَرَ فَكَانَ خيْراً لَهُ. رواه مسلم.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.. ''முஸ்லிமின் அனைத்து விஷயங்களும் ஆச்சிரியமானது தான். அவரது அனைத்து விஷயங்களும் நன்மையானதே. அவருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டால் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறார் . அது அவருக்கு நன்மையாக அமைகிறது. அவருக்கு துன்பம் ஏற்பட்டால் பொறுமையை மேற்கொள்கிறார். அதுவும் அவருக்கு நன்மையாக அமைகிறது.'' ( நூல்: முஸ்லிம் )

மேற்கூறிய நபிமொழியில் ஒருவரது அனைத்து விஷயங்களும் நன்மையாகவே அமைகிறது என்ற நபிகளாரின் கூற்று கவனிக்கத்தக்கது. ஏனெனில், அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவருக்கு வழங்கிய விதியை நம்பி, பொருந்திக் கொள்வதால் மகிழ்ச்சியில் உபகாரியான , மகத்துவமிக்க அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறார். துன்பத்தில் அல்லாஹ்வின் ஆணைக்கு அடிபணிந்து பொறுமையைக் கைக்கொள்கிறார். அல்லாஹ் விதித்ததை ஏற்று திருப்தி கொள்கிறார். ஆகவே, இந்த இரு நிலைகளும் அவருக்கு மிக்க நன்மையானவையாக ஆகிவிடுகிறது.

عَنْ يَحْيَى بْنِ أَيُّوبَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ زَحْرٍ، عَنْ عَلِيِّ بْنِ يَزِيدَ، عَنْ القَاسِمِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي أُمَامَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: عَرَضَ عَلَيَّ رَبِّي لِيَجْعَلَ لِي بَطْحَاءَ مَكَّةَ ذَهَبًا، قُلْتُ: لَا يَا رَبِّ وَلَكِنْ أَشْبَعُ يَوْمًا وَأَجُوعُ يَوْمًا - أَوْ قَالَ ثَلَاثًا أَوْ نَحْوَ هَذَا - فَإِذَا جُعْتُ تَضَرَّعْتُ إِلَيْكَ وَذَكَرْتُكَ، وَإِذَا شَبِعْتُ شَكَرْتُكَ وَحَمِدْتُكَ رواه الإمام أحمد في "المسند" (36 / 528) والترمذي (2347).

அபூ உமாமா ரலி அவர்கள் அறிவித்தார்கள்:- அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எனக்கு குறைஷிகளின் குடியிருப்பான பத்ஹா அளவுக்கு தங்கத்தை வழங்குவதாக பத்ஹாவை தங்கத்தால் நிரப்பி காட்டினான். நான் "வேண்டாம் ரப்பே!" ஒரு நாள் வயிறு நிரம்ப நான் உணவு உண்பேன்! ஒரு நாள் நான் பசித்திருப்பேன்! என்று கூறி விட்டேன். என்று மூன்று முறை சொன்னதாக அல்லது அது போன்ற வார்த்தைகளை மூன்று முறை சொன்னதாக கூறினார்கள். பின்னர், அல்லாஹ்வே, நான் பசித்திருக்கும் போது பணிவோடு வணங்குவேன். உன்னை அதிகம் நினைவு கூறுவேன். நான் வயிறு நிரம்ப உண்ணும் போது உனக்கு நன்றி செலுத்துவேன்! உனக்கே புகழை உரித்தாக்குவேன்!" என்று கூறினேன்" என்று இறைவனிடம் கூறியதாக நபி ஸல் அவர்கள் கூறினார்கள். ( நூல்: அஹ்மத் )

عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ قَالَتْ: ((دَخَلَ عَلَيَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ فَقَالَ: «هَلْ عِنْدَكُمْ شَيْءٌ» ؟ فَقُلْنَا: لَا، قَالَ: «فَإِنِّي إِذَنْ صَائِمٌ»، ثُمَّ أَتَانَا يَوْمًا آخَرَ فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، أُهْدِيَ لَنَا حَيْسٌ، فَقَالَ: «أَرِينِيهِ فَلَقَدْ أَصْبَحْتُ صَائِمًا فَأَكَلَ»؛ (رواه مسلم).

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: ஒரு நாள் நபி ஸல் அவர்கள் வீட்டிற்கு வந்தார்கள். வீட்டில் உண்பதற்கு ஏதும் இருக்கிறதா? என்று கேட்டார்கள். நான் இல்லை, என்று சொன்னேன். அதற்கு நபி ஸல் அவர்கள் "இன்று நான் நோன்பாளி" என்று சொல்லி விட்டு சென்றார்கள். மறுநாள் அதே போன்று வீட்டிற்கு வந்தார்கள். நான் இன்று நம் வீட்டிற்கு நெய்யும் பேரீச்சம் பழமும் கலந்து செய்யப்படும் உணவு அன்பளிப்பு வந்துள்ளது என்றேன். என்னிடம் காட்டு என்று கூறிய நபி ஸல் அவர்கள் நேற்று நான் நோன்பு வைத்திருந்தேன் என்று கூறியவாறு சாப்பிட்டார்கள். ( நூல்: முஸ்லிம் )

تُوفِّيَ ابنُ التابعي الجليل عروة بن الزبير رضي الله عنه، بعد أن دهسته الخيل بأقدامها، وقطعت قدمه في يوم الوفاة نفسه، فاحتار الناس على أي شيء يُعزُّونه؛ على فقد ابنه، أم على قطع رِجْله، فدخلوا عليه، فقال لهم: اللهم لك الحمد، أعطيتني أربعة أعضاء، وأخذت واحدًا، وتركت ثلاثة، فلك الحمد، وكان لي سبعة أبناء، أخذت واحدًا، وأبقيت ستة، فلك الحمد؛ لك الحمد على ما أعطيت، ولك الحمد على ما أخذت، أُشهدكم أني راضٍ عن ربي.

தாபிஈ உர்வா இப்னு ஜுபைர் (ரஹ்) அவர்களின் மகனார் வஃபாத் ஆகி இருந்த நாள் அது. அன்றைய நாளிலேயே அவர்கள் வளர்த்து வந்த குதிரை ஒன்று மிரண்டு போய் தன்னுடைய கால் குளம்பால் உர்வா இப்னு ஜுபைர் (ரஹ்) அவர்களின் கால் பாதத்தை பதம் பார்த்தது. அதன் காரணமாக அவர்களின் பாதத்தின் பெரும் பகுதி சேதமடைந்து காயமுற்றார்கள்.

இதை அறிந்த மதீனா மக்கள் "உர்வா இப்னு ஜுபைர் ரஹ் அவர்களின் மகன் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதா? அல்லது அவர்களின் உடல் நிலை குறித்து விசாரிப்பதா? என கவலையுற்றனர்.

துக்கம் கேட்டு, நலம் விசாரிக்க மதீனா மக்கள் உர்வா இப்னு ஜுபைர் ரஹ் அவர்களின் வீட்டிற்கு வந்த போது, உர்வா இப்னு ஜுபைர் ரஹ் அவர்களின் துஆவைக் கேட்டு கண் கலங்கினர். அவர்களின் தளராத மனம் கண்டு நெகிழ்ந்து போயினர்.

உர்வா இப்னு ஜுபைர் ரஹ் அவர்கள்:- "அல்லாஹ்வே! என் உடலில் ஆற்றலை வெளிப்படுத்தும் நான்கு உறுப்புகளை தந்தாய்! உனக்கே புகழனைத்தும்! இப்போது அந்த நான்கில் ஒரு உறுப்பை எடுத்துக் கொண்டு, மூன்று உறுப்புகளை விட்டு வைத்திருக்கின்றாய்! உனக்கே புகழனைத்தும்!

அல்லாஹ்வே! எனக்கு ஏழு மக்களை தந்தாய்! அதில் ஒன்றை எடுத்துக் கொண்டு, ஆறு மக்களை விட்டு வைத்திருக்கின்றாய்! அல்லாஹ்வே! நீ எனக்கு வழங்கினாயே அதற்காக உனக்கே புகழனைத்தும்! அல்லாஹ்வே! நீ எடுத்துக் கொண்டாயே அதற்காக உனக்கே புகழனைத்தும்! மக்களே! என் இறைவன் எனக்கு வழங்கிய வாழ்க்கை நிலையை நான் பொருந்திக் கொண்டேன்" என்பதற்கு உங்களை என் ரப்பிடத்தில் நான் சாட்சியாக்குகின்றேன்!" என்று துஆச் செய்தார்கள். ( நூல்: ஸியரு அஃலாமின் நுபலா, ஹுல்யத்துல் அவ்லியா ) 

3) மூன்றாவது நெறிமுறை:-

عن سعد بن أبي وقاص - رضِي الله عنه - عن رسول الله - صلى الله عليه وسلم - أنه قال: ((أربعٌ من السعادة: المرأةُ الصالحة، والمسكنُ الواسِع، والجارُ الصالح، والمَرْكَب الهنيء

 

"நல்ல மனைவி வாழ்க்கை துணைவியாக கிடைப்பது, நல்ல அண்டை வீட்டார் அமைவது, நல்ல வாகனம் கிடைப்பது, விசாலமான வீடு இருப்பது ஆகியவை ஒரு மனிதனின் நற்பேறில் உள்ளதாகும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: அஹ்மத் )

عن ابن مسعود رضي الله عنه قال: قال رجل لرسول الله كيف لي أن أعلم إذا أحسنت وإذا أسأت؟ فقال النبي صلى الله عليه وسلم: «إذا سمعت جيرانك يقولون: قد أحسنت، فقد أحسنت وإذا سمعتهم يقولون: قد أسأت، فقد أسأت» [رواه ابن ماجه وهو حديث صحيح].

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:-

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களின் சமூகம் வந்து "நான் நல்லவனாக இருக்கின்றேன் என்றோ, அல்லது கெட்டவனாக இருக்கின்றேன் என்றோ எப்படி தெரிந்து கொள்வது?" என்று வினவினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "உம்முடைய அண்டை வீட்டார் நீர் நல்ல முறையில் நடந்து கொள்வதாக கூறினால் நீர் நல்லவராக இருக்கின்றீர் என்றும், உன்னுடைய அண்டை வீட்டார் நீர் தீய முறையில் நடந்து கொள்வதாக கூறினால் நீர் தீயவராக இருக்கின்றீர் என்றும் விளங்கிக் கொள்வீராக!" என்று பதில் கூறினார்கள். ( நூல்: இப்னுமாஜா )

பணமா? பக்கத்து வீட்டாரின் உரிமையா?....

قَالَ وَقَفْتُ عَلَى سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، فَجَاءَ المِسْوَرُ بْنُ مَخْرَمَةَ، فَوَضَعَ يَدَهُ عَلَى إِحْدَى مَنْكِبَيَّ، إِذْ جَاءَ أَبُو رَافِعٍ مَوْلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا سَعْدُ ابْتَعْ مِنِّي بَيْتَيَّ فِي دَارِكَ؟ فَقَالَ سَعْدٌ وَاللَّهِ مَا أَبْتَاعُهُمَا، فَقَالَ المِسْوَرُ: وَاللَّهِ لَتَبْتَاعَنَّهُمَا، فَقَالَ سَعْدٌ: وَاللَّهِ لاَ أَزِيدُكَ عَلَى أَرْبَعَةِ آلاَفٍ مُنَجَّمَةً، أَوْ مُقَطَّعَةً، قَالَ أَبُو رَافِعٍ: لَقَدْ أُعْطِيتُ بِهَا خَمْسَ مِائَةِ دِينَارٍ، وَلَوْلاَ أَنِّي سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «الجَارُ أَحَقُّ بِسَقَبِهِ»، مَا أَعْطَيْتُكَهَا بِأَرْبَعَةِ آلاَفٍ، وَأَنَا أُعْطَى بِهَا خَمْسَ مِائَةِ دِينَارٍ، فَأَعْطَاهَا إِيَّاهُ

நான், ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்களிடம் தங்கியிருந்தேன். அப்போது மிஸ்வர் இப்னு மக்ரமா (ரலி) வந்து, தம் கையை என்னுடைய தோள் புஜங்களில் ஒன்றில் வைத்தார்கள். அப்போது (அடிமையாயிருந்து) நபி(ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அபூ ராஃபிஉ (ரலி) அங்கே வந்து, ‘ஸஅதே! உம்முடைய வீட்டிலுள்ள எனக்குச் சொந்தமான இரண்டு அறைகளை என்னிடமிருந்து வாங்கிக் கொள்வீராக!எனக் கூறினார்கள்.

அதற்கு ஸஅத்(ரலி) அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவற்றை நான் வாங்க மாட்டேன்!என்றார்கள். அருகிலிருந்த மிஸ்வர் (ரலி) அவர்கள், ஸஅத் (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீர் வாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்!என்றார்கள். அப்போது ஸஅத் (ரலி), ‘அல்லாஹ்வீன் மீது ஆணையாக! தவணை அடிப்படையில் நாலாயிரம் வெள்ளிக் காசைத் தவிர உமக்கு அதிகமாகத் தரமாட்டேன்!என்று கூறினார்கள்.

 

அதற்கு அபூ ராஃபிவு (ரலி), ‘ஐநூறு தங்கக் காசுகளுக்கு அது கேட்கப்பட்டுள்ளது; அண்டை வீட்டில் இருப்பவர் அண்மையில் இருப்பதால் அவரே அதிகம் உரிமை படைத்தவர் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றிராவிட்டால் ஐநூறு தங்கக் காசுக்கு கேட்கப்பட்டதை நாலாயிரம் வெள்ளிக்காசுக்கு உமக்கு விற்க மாட்டேன்என்று கூறிவிட்டு ஸஅதுக்கே விற்றார்.

அறிவிப்பவர் : அம்ர் இப்னு ஷரீத் ( நூல்: புகாரி )

قال صلى الله عليه وسلم: «إن الله عز وجل يحب ثلاثة: وذكر منهم رجل كان له جار سوء يؤذيه فيصبر على أذاه حتى يكفيه الله إياه بحياة أو موت» [رواه أحمد ].

ஒரு மனிதனுக்குத் தொல்லை தரும் அண்டை வீட்டார் இருக்கிறார்கள். அவரோ அவரின் தொல்லைகளைப் பொறுத்துக் கொண்டால் அல்லாஹ் அவரின் வாழ்வுக்கும், இறப்புக்கும் போதுமானவனாக இருப்பான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி, நூல்: அஹ்மத் )

كان أبو حنيفة يأتي بعد صلاة العشاء يريد أن يسبح الله، ويصلي ويبكي ويدعو ويقرأ القرآن، لكن هذا الجار عزوبي ليس عنده إلا طبل يضرب عليه ويرقص.

فكان أبو حنيفة لا يستطيع أن ينام ولا يستطيع أن يقرأ، ولا أن يصلي، فيصبر ويحتسب، وفي ليلة من الليالي الطويلة ما سمع أبو حنيفة الصوت، انتظر هل يسمع صوتاً، ما سمع الرقص ولا سمع ضرب الطبل، فعجب! طرق على باب الدار فما أجابه أحد، سأل الجيران: أين فلان؟ قالوا: أخذته شرطة السلطان، قال: سبحان الله! جاري يأخذونه ولا يخبرونني! ثم ذهب في الليل فركب بغلته ولبس ثيابه، فاستأذن على السلطان وسط الليل.

இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) அவர்கள் இஷாத் தொழுகைக்குப் பிறகு இரவுப் பகுதியை பெரும்பாலும் குர்ஆன் ஓதுவது, தஸ்பீஹ் செய்வது, தொழுகையில் ஈடுபடுவது, அல்லாஹ்வை நினைத்து அழுது கண்ணீர் வடிப்பது என வணக்க வழிபாடுகளிலேயே கழித்து வந்தார்கள்.

அபூ ஹனீஃபா ரஹ் அவர்களின் அண்டை வீட்டில் ஒரு இளைஞன் வசித்து வந்தான். அவன் இரவு நேரத்தில் மேளதாளம் அடித்து பாட்டு பாடி இமாம் அபூ ஹனீஃபா ரஹ் அவர்களின் வணக்க வழிபாடுகளுக்கு இடையூறு செய்து வந்தான். நீண்ட நாட்களாக அவன் இதையே வழமையாக செய்து வந்தான்.

இமாம் அபூ ஹனீஃபா ரஹ் அவர்களுக்கும் நிம்மதியாக வணக்க வழிபாடுகளைச் செய்ய முடியவில்லை. எனினும் அவன் தருகிற தொல்லைகளை சகித்துக் கொண்டு பொறுமை காத்து வந்தார்கள்.

இப்படி இருக்கும் நிலையில் ஒரு நாள் இரவு நீண்ட நேரமாகியும் அவன் வீட்டில் இருந்து எந்த சப்தமும் வரவில்லை. எவ்வித இடையூறும் இல்லாதவாறு அன்றைய இபாதத்களை நிறைவு செய்தார்கள் இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) அவர்கள்.

என்றாலும் அவர்களின் மனம் ஏனோ கனத்திருந்தது. என்னவாக இருக்கும் நமது அண்டை வீட்டார் இன்று பாட்டு பாட வில்லை. மேளதாளம் அடிக்கவில்லை? அவருக்கு ஏதாவது ஆகியிருக்குமோ? என்று கவலைப்பட்டவர்களாக வீட்டை விட்டு வெளியே வந்து அண்டை வீட்டாரின் கதவை தட்டினார்கள் இமாம் அவர்கள்.

வீட்டில் இருந்து எந்த பதிலும் எந்த சப்தமும் வரவில்லை. இதே நேரத்தில் இன்னொரு அண்டை வீட்டார் இமாம் அபூ ஹனீஃபா ரஹ் அவர்களின் சப்தம் கேட்டு வெளியே வந்தார்.

அவரிடம் இந்த வீட்டில் வசித்து வந்த இளைஞர் எங்கே? என்று இமாம் அபூ ஹனீஃபா ரஹ் அவர்கள் கேட்க, அதற்கவர் அரசின் காவலாளிகள் வந்து கைது செய்து சிறையில் அடைத்து விட்டார்கள் என்று கூறினார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியுடன் "சுப்ஹானல்லாஹ்" கூறியவர்களாக என் அண்டை வீட்டாரை என்னிடம் தகவல் சொல்லாமலே இப்படி அழைத்துச் சென்று விட்டார்களா?" என்று கடிந்து கொண்டு தங்களது கோவேறு கழுதையின் மீதேறி அரச மாளிகைக்கு நடுஇரவில் புறப்பட்டு சென்றார்கள்.

அரண்மனைக்கு வந்த இமாம் அபூ ஹனீஃபா ரஹ் அவர்கள் அங்குள்ள காவலாளிகளிடம் "அரசரை சந்திக்க அனுமதி கேட்டு வருமாறு" கூறினார்கள்.

قال الجنود للسلطان: أبو حنيفة إمام الدنيا يريد مقابلتك، فقام السلطان من نومه والتقى به عند الباب يعانقه، قال له: يا أبا حنيفة لماذا ما أرسلت إلينا؟ نحن نأتيك لا أن تأتينا، قال: كيف أخذتم جاري وما أخبرتموني به؟ قالوا: إنه فعل وفعل وفعل، قال: ردوا عليّ جاري، قالوا: لو طلبت الدنيا لأعطيناك الدنيا، فركب جاره معه على البغلة وأخذ جاره يبكي.

அரண்மனையின் காவலர்கள் அரசரிடம் இமாம் அபூ ஹனீஃபா ரஹ் அவர்கள் வந்திருப்பதாகவும், தங்களைச் சந்திக்க அனுமதி கோரியதாகவும் கூற, அரசரோ அவரின் அறையில் இருந்து வெளியேறி அரண்மனை வாசலுக்கு வந்தார். வந்த அரசர் அபூ ஹனீஃபா ரஹ் அவர்களே! யாரையாவது அனுப்பி இருந்தால் உங்களை சந்திக்க நானே வந்திருப்பேனே? ஏன் இந்த நடுநிசியில் நீங்கள் இங்கே வந்துள்ளீர்கள்? என்று கேட்டார்.

அதற்கு இமாம் அபூ ஹனீஃபா ரஹ் அவர்கள் "எனது அண்டை வீட்டாரை என்னிடம் தகவல் ஏதும் சொல்லாமல் உங்கள் காவலர்கள் கைது செய்து கொண்டு வந்து விட்டனர். எதற்காக அவரை கைது செய்தனர்? என்று வினவினார்கள்.

அதற்கு அந்த காவலர்கள் அவர் இரவு நேரத்தில் இன்னின்ன வாறு பிறருக்கு இடையூறு செய்து வருவதாக தகவல்கள் கிடைத்தது ஆதலால் அவரை கைது செய்தோம் என்று கூறினர்.

அப்போது இமாம் அபூ ஹனீஃபா ரஹ் அவர்கள் என் அண்டை வீட்டாரை என்னோடு அனுப்பி விடுங்கள் என்று அரசரிடம் கேட்டார்கள். அப்போது அரசர் "நீங்கள் இந்த உலகத்தை கேட்டால் அதைக் கூட உங்களுக்கு தர தயாராக இருக்கிறோம். உங்கள் அண்டை வீட்டார் என்ன? தாராளமாக அழைத்துச் செல்லுங்கள்" என்று அரசர் மறுமொழி பகர்ந்தார்.

தன் அண்டை வீட்டாரை தன் வாகனத்தில் ஏற்றி வீட்டிற்கு அழைத்து வந்தார்கள். வரும் வழி முழுவதும் அந்த அண்டை வீட்டார் அழுது கொண்டே வந்தார்.

قال أبو حنيفة: ما لك؟ قال: آذيتك كل هذه الأيام والأعوام والسنوات وما تركتك تنام ولا تصلي ولا تقرأ، ولما فقدتني ليلة أتيت تتشفع فيّ، أشهد الله ثم أشهدك أنني تائب إلى الله.

வீடு வந்ததும் ஏன் அழுகின்றாய்? என்று அன்பொழுக அபூ ஹனீஃபா ரஹ் அவர்கள் கேட்டபோது, அதற்கவர் "நான் பல ஆண்டுகளாக, நாட்கணக்கில் உங்களுக்கு இடையூறு செய்து வந்தேன். உங்களை தொழ விடாமல், ஓத விடாமல், திக்ர் செய்ய விடாமல், தூங்க விடாமல் தொந்தரவு செய்து வந்தேன்.

ஆனால், நீங்களோ இத்தனை தொந்தரவு தந்தும் நேற்று ஒரு நாள் என்னைக் காணாது நான் இருக்கும் இடம் தேடி வந்து எனக்கு பரிந்துரை செய்து என் விடுதலைக்கு உரியவராக ஆகி இவ்வளவு உபகாரத்தோடு நடந்து கொள்கின்றீர். இப்போது நான் சொல்கிறேன். அல்லாஹ்வை முன்னிறுத்தி சொல்கிறேன். நான் செய்த பாவங்களுக்காக நான் அல்லாஹ்விடம் தவ்பாச் செய்து மீளப் போகிறேன்" என்று அழுதவாறு கூறினார். ( நூல்: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா, ரபீவுல் அப்ரார் லி இமாமிஸ் ஜமக்ஜரீ (ரஹ்).. )

4) நான்காவது நெறிமுறை:-

وخرج الإمام أحمد من حديث معاذ أنه سأل النبي صلى الله عليه وسلم عن أفضل الإيمان ، قال : أفضل الإيمان أن تحب لله وتبغض لله ، وتعمل لسانك في ذكر الله ، قال : وماذا يا رسول الله ؟ قال : أن تحب للناس ما تحب لنفسك ، وتكره لهم ما تكره لنفسك

நபி ஸல் அவர்களின் சமூகம் தந்த ஒருவர் ஈமானில் மிகச் சிறந்தது எது? என்று கேட்டார். அப்போது, நபி (ஸல்) அவர்கள் அந்த மனிதரை நோக்கி நீர் அல்லாஹ்வுக்காக கோபப்படுவதும் நேசிப்பதும், உமது நாவை எப்போதும் அல்லாஹ்வின் திக்ரில் திளைத்திருக்க வைப்பதுமாகும்" என்று கூறினார்கள். அது எப்படி அல்லாஹ்வின் தூதரே! என்று மீண்டும் அவர் கேட்ட போது "உமக்கு எதை நீ விரும்புகின்றாயோ, அதையே பிறருக்கும் நீ விரும்புவாயாக! உம் விஷயத்தில் எதை நீ வெறுப்பாயோ அதையே பிறரின் விஷயத்திலும் வெறுப்பாயாக!என்று அறிவுரை வழங்கினார்கள். ( நூல்: அஹ்மத் )

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قالَ: «لاَ يُؤْمِنُ أَحَدُكُمْ، حَتَّى يُحِبَّ لِأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ

"உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) ஈமான் கொண்டவர் ஆகமாட்டார் என அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்" என அனஸ் ரலி அவர்கள் அறிவித்தார்கள். ( நூல்: புகாரி )

 

மார்க்க மற்றும் உலக விவகாரங்கள் அனைத்திலும் தனக்கு விரும்புவதை தனது சகோதர முஸ்லிம்களுக்கு விரும்பி தான் வெறுப்பதை தனது சகோதர முஸ்லிம்களுக்கு வெறுக்காத வரையில் யாரும் முழுமையான இறைநம்பிக்கையை அடைந்து கொள்ளமாட்டார் என நபி (ஸல்) அவர்கள் மேற்கொண்ட இரு ஹதீஸிலும் தெளிவு படுத்துகிறார்கள்.

மரணத்தின் விளிம்பில் இருக்கும் போதும் தமக்கு விருப்பமாக இருந்த ஒன்றை தமது சகோதரருக்கும் விரும்பிய நபித்தோழர்கள்....

ففي معركة اليرموك استشهد عدد من المسلمين، وأصيب بعضهم بجروح خطيرة، وكان من بين الذين أصيبوا: الحارث بن هشام، وعكرمة بن أبي جهل، وعياش بن ربيعة، فلقد سقط الثلاثة في أرض المعركة جرحى، فأسرع إليهم بعض الصحابة ونقلوهم إلى الخيمة التي يتم فيها علاج الجرحى من المسلمين، وأحسّ الحارث بن هشام بالعطش الشديد، فأشار إلى رجل كان يساعد الجرحى بأن يحضر له الماء، وجلس الرجل بجوار الحارث ليسقيه، فنظر الحارث إلى عكرمة وهو يرقد بجواره فأحسَّ بأنّه يريد الماء، فقال الحارث في نفسه: لو شربت الماء فلن يتبقى ماء لعكرمة، فقال للرجل: خذ الماء لعكرمة فإنّه عطشان، فقال له الرجل: وأنت أيضًا عطشان!! فقال له الحارث: الماء قليل فأعطه لعكرمة، فأخذ الرجل الماء وأعطاه لعكرمة، فنظر عكرمة لـ"عياش ابن ربيعة" فأحسّ أنه يريد الماء، فقال الرجل: الماء قليل فأعطه لعياش!! فنظر عيّاش للرجل الذي كان بجواره، فقد كانوا سبعة في الخيمة قد أصيبوا بجراحٍ خطيرة، فقال الرجل: الماء قليل فأعطه للرجل الذي يرقد بجواري، وهكذا ظلَّ كلَّ واحدٍ من هؤلاء السبعة يطلب من الرجل أن يسقى أخاه الذي بجواره، فلما وصل إلى السابع وجده قد مات، فعاد إلى السادس ليعطيه الماء فوجده قد مات، فعاد إلى الخامس ليجده قد مات، فعاد به إلى الرابع فوجده قد مات، فنظر إلى "عياش" ليعطيه الماء فوجده قد مات، فنظر إلى عكرمة ليعطيه الماء فيجده قد مات، فيسرع إلى الحارث ليعطيه الماء فيجده قد مات.. فآثر كلَّ واحدٍ منهم الآخر على نفسهِ حتى ماتوا جميعًا!!

யர்மூக் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த தருணம் அது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபித்தோழர்கள் காயமுற்று வீழ்ந்து கிடக்கின்றார்கள்.

அப்போது, காயமுற்றவர்களுக்கு மருந்திடவும், தண்ணீர் கொடுப்பதற்காகவும் படையில் பங்கெடுத்த தோழர்கள் சிலர் மருந்து உபகரணங்கள் மற்றும் தண்ணீர் பையுடன் விரைகிறார்கள்.

தூரத்தில் ஒரு முனகல் சப்தம் அருகே சென்று பார்க்கிறார். அங்கே, ஹாரிஸ் இப்னு ஹிஷாம் (ரலி) அவர்கள் கடும் தாகத்தோடு காணப்படுகின்றார்கள்.

தண்ணீர் பையை திறந்து ஹாரிஸ் (ரலி) அவர்களின்ன் வாயின் அருகே கொண்டு சென்ற போது, அவருக்கு சற்று தொலைவில் இன்னொருவரின் முனகல் சப்தம் கேட்க, கடும் தாகத்தோடு இருந்த ஹாரிஸ் (ரலி) அவர்கள் சப்தம் கேட்ட திசையை நோக்கி அவரின் தாகத்தை போக்குமாறு சைகை செய்கின்றார்.

தண்ணீர் பையோடு அவருக்கு அருகே சென்ற பார்த்த போது, அங்கே இக்ரிமா இப்னு அபூஜஹ்ல் (ரலி) கடுமையான தாகத்தோடு காணப்படுகின்றார்கள்.

அவருக்கு சற்று தொலைவில் இருந்து இன்னொருவரின் முனகல் சப்தம், இக்ரிமா (ரலி) அவர்கள் அவரின் தாகத்தைப் போக்குமாறு சைகை செய்கின்றார்.

தண்ணீர் பையோடு ஓடிச் சென்று பார்த்தால் அங்கே, அயாஷ் இப்னு ரபீஆ (ரலி) அவர்கள் நாவறண்டு தாகத்தோடு காணப்பட்டார்கள். வாயின் அருகே தண்ணீரை கொண்டு செல்கிற போது அயாஷ் (ரலி) அவர்கள் ஷஹீதாகி விட்டார்.

இக்ரிமா (ரலி) அவர்களை நோக்கி மீண்டும் தண்ணீர் பையோடு ஓடிச் சென்று பார்த்தால் அவரும் ஷஹீதாகி விட்டார்.

ஹாரிஸ் (ரலி) அவர்களுக்கு தண்ணீர் கொடுக்கலாம் என்று அங்கே ஓடிச் சென்றால் அவரும் ஷஹீதாகி விட்டார். ( நூல்: அல்மஃகாஸீ லிஇமாமி அல்வாகிதீ )

5) ஐந்தாவது நெறிமுறை:-

இன்று மக்கள் அதிகம் சிரித்து மகிழ்வதையே விரும்புகின்றனர். ஆகையால் தான் பொழுது போக்கு எனும் பெயரில் ப்ரான்க் நிகழ்வை பதிவு செய்தும் அதை ரசித்தும் சிரித்தும் சிலர் மகிழ்கின்றனர்.

மேலும், திரைப்படங்களிலும் சிரித்து மகிழ நகைச்சுவை எனும் பெயரில் மகா மட்டமான, மனித பண்பாடுகளுக்கு எதிரான காட்சிகள் காட்டப்படுகின்றன.

தொலைக்காட்சிகளிலும் கூட நகைச்சுவைக்கு என்று தனித்தனியே சேனல்கள் இருப்பதும், நகைச்சுவைக்காக தனித்தனி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுவதையும் நாம் பார்த்து வருகின்றோம்.

சிரிப்பது என்பது வேறு சிரித்துக் கொண்டே இருப்பது என்பது வேறு.

சிரிப்பதால் மனிதனுக்கு உடல் ரீதியாக சில நன்மைகள் கிடைத்தாலும் சிரித்துக் கொண்டே இருப்பதால் உடல் மற்றும் மன ரீதியாக பல ஆபத்துக்கள் இருப்பதை நாம் உணர வேண்டும்.

முதலாவதாக வெட்க உணர்வு நம்மை விட்டும் அகன்று விடும். இதய செயல்பாடு மற்றும் செயல் திறனும் பாதிக்கப்படும்.

ஆகவே தான் நபி (ஸல்) அவர்கள் அதிகமாக சிரிப்பதை தடுத்தார்கள். இதய செயல்பாட்டை மங்கச் செய்து விடும் என்று எச்சரிக்கை செய்தார்கள்.

எனவே, நகைச்சுவை உணர்வும் சிரிப்பும் இஸ்லாத்தின் பார்வையில் தவறானது என்பதாக புரிந்து கொள்ளக் கூடாது. மாறாக, சில கட்டுப்பாடுகளுடன் அது அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று விளங்கிக் கொள்ள வேண்டும்.

 

நபி ஸல் அவர்கள் சிரித்துள்ளார்கள். நபி ஸல் அவர்கள் பிறரை நகைச்சுவை உணர்வோடு பேசி சிரிக்க வைத்துள்ளார்கள். பிறரும் நபி ஸல் அவர்களை சிரிக்க வைத்துள்ளார்கள் என்பதை வரலாற்றின் ஊடாக நாம் பார்க்க முடிகிறது.

وَحَدَّثَنِى عَبْدُ الْحَمِيدِ بْنُ بَيَانٍ حَدَّثَنَا خَالِدٌ عَنْ بَيَانٍ قَالَ سَمِعْتُ قَيْسَ بْنَ أَبِى حَازِمٍ يَقُولُ قَالَ جَرِيرُ بْنُ عَبْدِ اللَّهِ

مَا حَجَبَنِى رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- مُنْذُ أَسْلَمْتُ وَلاَ رَآنِى إِلاَّ ضَحِكَ

நான் இஸ்லாத்தைத் தழுவிய நாளிலிருந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை விட்டு மறைந்து (மறுபடியும்) என்னைக் கண்டால் அவர்கள் சிரிக்காமல் இருந்ததில்லை" என ஜரீர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )

عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ أَنَّ رَجُلاً عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم كَانَ اسْمُهُ عَبْدَ اللهِ ، وَكَانَ يُلَقَّبُ حِمَارًا ، وَكَانَ يُضْحِكُ رَسُولَ اللهِ : وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் அப்துல்லாஹ் என்றொருவர் இருந்தார். அவர் கழுதை என்ற புனைப்பெயரால் அழைக்கப்பட்டார். அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை சிரிக்கவைப்பார்" என 

உமர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். ( நூல்: புகாரி )

பிறரை Prank செய்து சிரிக்க கூடாது...

عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى قَالَ:- حَدَّثَنَا أَصْحَابُ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، أَنَّهُمْ كَانُوا يَسِيرُونَ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَسِيرٍ ، فَنَامَ رَجُلٌ مِنْهُمْ ، فَانْطَلَقَ بَعْضُهُمْ إِلَى نَبْلٍ مَعَهُ فَأَخَذَهَا ، فَلَمَّا اسْتَيْقَظَ الرَّجُلُ فَزِعَ ، فَضَحِكَ الْقَوْمُ ، فَقَالَ : مَا يُضْحِكُكُمْ ؟ فَقَالُوا : لاَ ، إِلاَّ أَنَّا أَخَذْنَا نَبْلَ هَذَا فَفَزِعَ ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : لاَ يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يُرَوِّعَ مُسْلِمًا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அவர்களின் தோழர்கள் ஒரு பயணத்தில் சென்றுகொண்டிருந்தார்கள். அப்போது அவர்களில் ஒருவர் உறங்கிவிட்டார். வேறு சிலர் (உறங்கிக்கொண்டிருந்தவருடன்) இருந்த அம்புகளுக்கு அருகில் சென்று அதை எடுத்துவைத்துக் கொண்டார்கள். அம்மனிதர் உறங்கி எழுந்தவுடன் (அம்பு காணாமல் போனதைக் கண்டு) திடுக்குற்றார். (இதைப் பார்த்த) கூட்டம் சிரித்துவிட்டது. நபி (ஸல்) அவர்கள் ஏன் நீங்கள் சிரிக்கிறீர்கள்? என்று கேட்டார்கள்.

அதற்கு அவர்கள் இவரது அம்புக்களை நாங்கள் எடுத்து (மறைத்து) வைத்துக் கொண்டோம். அவர் விழித்தவுடன் திடுக்குற்றார் என்று கூறினார்கள். ஒரு முஸ்லிமை திடுக்குறச் செய்வது எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஆகுமானதல்ல என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அப்துர் ரஹ்மான் இப்னு அபீ லைலா அவர்கள் அறிவித்தார்கள். ( நூல்: அஹ்மத் )

مَرَّ الْحَسَنُ الْبَصْرِيُّ بِشَابٍّ وَهُوَ يَضْحَكُ ، فَقَالَ لَهُ : يَا بُنَيَّ هَلْ جُزْتَ عَلَى الصِّرَاطِ ؟ قَالَ : لَا فَقَالَ : هَلْ تَبَيَّنَ لَكَ ، إِلَى الْجَنَّةِ تَصِيرُ أَمْ إِلَى النَّارِ ؟ قَالَ : لَا. قَالَ : فَفِيمَ هَذَا الضَّحِكُ ؟ قَالَ : فَمَا رُؤِيَ الْفَتَى ضَاحِكًا بَعْدَهُ قَطُّ. يَعْنِي أَنَّ قَوْلَ الْحَسَنِ وَقَعَ فِي قَلْبِهِ فَتَابَ عَنِ الضَّحِكِ.

ஒரு நாள் இமாம் ஹஸன் அல் பஸரீ (ரஹ்) அவர்கள் வீதி வழியாக சென்று கொண்டிருந்தார்கள். அங்கே ஓர் இளைஞன் ஏதோ ஒரு காட்சியைக் கண்டு சிரித்துக் கொண்டிருந்தான்.

அவனிடம், ஓ மகனே! நீ ஸிராத்துல் முஸ்தகீம் பாலத்தை கடந்து விட்டாயா? என்று கேட்டார். அவன், ”இல்லைஎன்றான்.

நீ சுவனம் செல்வாயா? அல்லது நரகம் செல்வாயா? என்பது உமக்கு தீர்மானமாகத் தெரிந்து விட்டதா?” என்று கேட்டார்கள். அதற்கவன் இல்லைஎன்றான். அப்படியென்றால், எதற்காக நீ இப்படிச் சிரிக்க வேண்டும்? என்று மீண்டும் கேட்டார்கள்.

இமாம் ஹஸன் பஸரீ (ரஹ்) கூறுகின்றார்கள்: இந்த நிகழ்வுக்குப் பின்னர் அந்த இளைஞனை சிரிப்பவனாக ஒரு போதும் நான் கண்டதில்லை. நான் கூறிய நல்லுபதேசம் அவனுடைய உள்ளத்தில் நல்ல மாற்றத்தை உருவாக்கி இருக்கின்றது." ( நூல்: தம்பீஹுல் ஃகாஃபிலீன், பாகம்: 1, பக்கம்: 149 )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த ஐந்து நெறிமுறைகளைப் பின்பற்றி வாழ்ந்து வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய அருள் புரிவானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!