Thursday 10 October 2013

அரியணையில் அமர வைக்கும் வாழ்வின் அரிய தருணங்கள்

அரியணையில் அமர வைக்கும்
வாழ்வின் அரிய தருணங்கள்

மனித வாழ்க்கை என்பது சில போது இன்பமயமாகவும், இன்னும் சிலபோது துன்பமயமாகவும் அமைந்திருக்கிறது.
எது எப்படி இருந்தாலும் மனித வாழ்க்கையை அலங்கரிப்பதும், ரசிக்கவைப்பதும், சில பல அரிய தருணங்களே! ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் இந்த அரிய தருணங்கள் பல புதைந்துகிடக்கின்றன.
சிலர் தான் சாதித்த சாதனைகளின் பதிவுகளை அரிய தருணமாக கூறுவர்.
சிலர், தான் உழைத்த உழைப்பின் மூலம் பெற்ற விருதுகளை அரிய தருணமாக கூறுவர்.
இன்னும் சிலரோ தம் திருமண நாட்கள், பிரபலமானவர்களுடைய தொடர்புகள், சந்திப்புகள்,
என அரிய தருணங்களின் நீண்ட பட்டியலை தருவார்கள் இந்த தருணங்கள் எல்லாம் மனதில் நீங்கா நினைவுகளாக இதுபோன்ற சந்தர்ப்பங்கள் இனி வாராதா என ஏக்கங்களாக மனித சிந்தனையில் நீக்கமற நிறைந்திருக்கும்.

ஆனால் இவைகள் மட்டுமே நமது வாழ்வின் அரிய தருணங்கள் அல்ல.
நமது வாழ்வில் வந்து போகின்ற அனைத்து மனித்துளிகளும் அரிய தருணங்களே!
இந்த நாள், இந்தநொடி, இந்த நிமிடம் என எதுவுமே இதற்குமுன் வந்த்தில்லை!
இனி ஒரு போதும், அது வரப்போவதுமில்லை.
ஆகவே, நமது வாழ்வின் அரிய தருணங்களை நாமே தீர்மானிக்க வேண்டும்.
நம் வாழ்வில் அரிய தருணம் எப்போது வரும்? என்று காத்துக்கிடக்கச் சொல்லவில்லை இஸ்லாம்.
மாறாக,
அதை உருவாக்கச் சொல்கிறது,
அதை கொணருமாறு ஏவுகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
மறுமை நாளில் ஐந்து விஷயங்களைப் பற்றி கணக்கு தராதவரை எந்தவொரு மனிதனும் அல்லாஹ்வின் நீதி மன்றத்திலிருந்து நகர முடியாது.
1.       உன் வாழ்நாளை எவ்வகையில் கழித்தாய்?
2.       கற்றறிந்த கல்வியின்படி எந்த அளவிற்கு செயல்பட்டாய்?
3.       செல்வத்தை எந்த வழிகளில் பெருக்கினாய்?
4.       எந்த வழிகளில் செலவு செய்தாய்?
5.       உன் உடலை எந்தப் பணிகளில் ஈடுபடுத்தினாய்?
அறிவிப்பாளர்- அபூபர்ஸா அல் அஸ்லம் (ரலி) நூல்: திர்மிதி

இதில் முதல் கேள்வி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த்து.
அது தான் நமது தலைப்பின் கருவும் கூட!
ஏனெனில், மனிதனின் ஆயுள் முழுவதையும் சுற்றித் தான் பல அரிய தருணங்கள் பரவிக் கிடக்கின்றன.
அதை உருவாக்கியவர்களும், தீர்மானித்தவர்களும் எளிதாக பதில் கூறுவதோடு மாத்திரமல்லாமல் எஞ்சிய கேள்விகளுக்கும் இலகுவாக பதில் கூறி தப்பித்து விடுவார்கள்.
எப்படி தீர்மானிப்பது?
     தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டிருந்தவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும் போது அவர்களிடம் நீங்கள் எந்நிலையில் இருந்தீர்கள்? எனக் கேட்பார்கள். அதற்கு அவர்கள் பூமியில் நாங்கள் பலவீனர்களாய் இருந்தோம் என பதிலளிப்பார்கள்.
அல்லாஹ்வின் பூமி விசாலமானதாய் இருக்கவில்லையை? அதில் நீங்கள் நாட்டைத் துறந்து (ஹிஜ்ரத்) சென்றிருக்க வேண்டாமா? எனத வானவர்கள் மீண்டும் கேட்பார்கள். இவர்களுக்குரிய இடம் நரகம் தான்! மேலும் அது மிக்க் கேடான இடமாகும். ஆனால், எவ்வித முயற்சியையும் மேற்கொள்ள முடியாமல், எந்த வழிவகையும் கிடைக்காமல், உண்மையிலேயே இயலாதவர்களாயிருக்கும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை அல்லாஹ் மன்னிக்க்க்கூடும். அல்லாஹ் மகா மன்னிப்பாளனாகவும் பிழை பொறுப்பவனும் ஆவான்”.
அல்குர்ஆன்-4-97,98,99
இந்த இறைவசனம் ஹிஜ்ரத் செய்யாமல் ஊரிலேயே தங்கி விட்டிருந்தவர்களை குறித்து அல்லாஹ்வால் விமர்சித்து இறக்கப்பட்டது.

இந்த இறைவசனம் இறங்கிய செய்தி மதீனாவில் இருந்து மக்காவில் மிகவும் பலவீனமாக, சுகவீனமாக்க் கிடந்த நபித்தோழர் ஆபூளம்ரா (ரலி) அவர்களுக்கு கிடைத்த்து.

என்ன? அல்லாஹ் நம்நிலையை பெண்களோடும், குழந்தைகளோடும் இணைத்துச் சொல்லி இருக்கின்றானே?
என்று கூறி, தமது மக்களை அழைத்து என்னை எப்படியாவது மதீனாவில் கொண்டு. நபி (ஸல்) அவர்களிடம் சென்று விட்டு விடுங்கள், என்று முறையிட்டார்
அவரின் மக்களும் ஒரு கட்டிலில் அவரை தூக்கி சுமந்து மதீனாவை நோக்கி வந்து கொண்டிருக்கும் பொது தன்யிலம் எனும் இடத்தில் அபூளம்ரா (ரலி) வஃபாத் ஆகிவிடுகிறார்கள்!
மக்காவில் இருந்த இணை வைப்பாளர்கள் இதை கேள்விபட்டு ஒழுங்காக இங்கேயே இருந்திருந்தால் தமது மரண நேரத்தில் தமது குடும்பத்தார்களை கண்ணாரக் கண்டிருப்பார்.

முஹம்மத், முஹம்மத் என்று கூறி அநியாயமாக போகிற வழியிலேயே ஒரு வழிப் போக்கனைப் போல இறந்து விட்டாரே! என ஏளனமும், கேலியும் செய்தனா.

மதீனாவில் இருந்த ஏனைய நபித்தோழர்களுக்கு இந்த செய்தி எட்டிய போது,

அல்லாஹ் விலக்கு அளித்தவர்களில் ஒருவராக இருந்த போதும், இறையச்சத்தோடும், ஆர்வத்தோடும் ஹிஜ்ரத் செய்து ஹிஜ்ரத் பூமியின் (மதீனாவில்) என்லையில் வைத்து இறந்து, ஹிஜ்ரத் செய்த மொத்த நன்மையையும், பலனையும் அடையாமல் இறந்துவிட்டாரெ என ஏக்கத்தோடும், வருத்த்த் தோடும் கூறிக்கொண்டனர்.

அனைத்தையும் கேட்டகும் ஆற்றல் பெற்றிருக்கும் வல்ல அல்லாஹ் இணைவைப்பாளர்களின் வசை பாடுதலையும் இறை நம்பிக்கையாளர்களின் ஆசை வார்த்தைகளையும் கேட்டுக் கொண்டிருந்தான்.
அடுத்த கணமே....
எவர் அல்லாஹ்வின் வழியில் ஹிஜ்ரத் செய்கின்றாரோ, அவர் பூமியில் கணக்கிலடங்கா தங்கு மிடங்களையும்  வாழ்விற்கான பெரும் வளங்களையும் காண்பார்.
மேலும், எவர் அல்லாஹ்வின் பக்கமும் அவனுடைய தூதரின் பக்கமும் ஹிஜ்ரத் செய்வதற்க்காத்த் தன்னுடையை வீட்டைவிட்டு வெளியேறிய பிறகு (வழியிலேயே) அவருக்கு மரணம் ஏற்பட்டு விட்டால், திண்ணமாக அவருக்கு நற்கூலி வழங்குவது அல்லாஹ்வின் பொறுப்பாகிவிட்டது அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும். கருணை பொழிபவனாகவும் இருக்கின்றான்”.
அல்குர்ஆன்-4-40
எனும் இறைவசனத்தை இறக்கியருளி இறை நம்பிக்கையாளர்களின் இதயங்களை இன்புறச் செய்தான், இறை மறுப்பாளர்களின் செவிகளில் இடி விழச் செய்தான்.

இவ்வசனம் இறங்கியதும் ஹிஜ்ரத்திற்கான பயணத்தில் ஏற்படும் மரணத்திற்கு என்ன கூலி என்பதை தீர்வாக தந்துவிட்டல்லவா மரணமெய்திருக்கிறார் அபூளம்ரா (ரலி) என பெருமிதத்துடன் கூறினார்கள்.
நூல்-இஸ்தீஆப் பாகம்2, பக்கம்-9
இஸ்தீஆப் பாகம்3, பக்கம் 131
தஃப்ஸீர் இப்னு கஸீர்- பாகம்1, பக்கம் -710, 711
விதிவிலக்கு அளிக்கப்பட்டவர்களில் ஒருவராக இருந்தும் கூட ஈமானிய மான உணர்ச்சியால் உந்தப்பட்டு தனக்கான அரிய தருணமாக மாற்றியதோடு இறுதி நாள் வரை இந்த உம்மத்திற்கான ஒரு தீர்வையும் அல்லாஹ்விடம் இருந்து பெற்றுத்தந்தார்கள்.

இப்படிச்சொல்வார்கள் மூன்றுவகையான மனிதர்கள் இருக்கின்றார்கள்.
v  சிலர் நேரத்தினால் தள்ளிக் கொண்டு செல்லப்படுகின்றவர்கள் – இவர்கள் அரிய தருணங்களுக்காக தவமிருந்து காத்துக் கிடந்து தங்கள் வாழ்வை வீணாக்குகின்றவர்கள் இவர்கள்
v  வேறு சிலர் நேரத்தை தள்ளிக்கொண்டிருப்பவர்கள் – இவர்கள் காலம் கடந்து பயிருடுபவர்களைப் போன்றவராவர்.
v  மற்றும் சிலர் நேரத்தின் மீது பயணம் செய்பவர்கள் – இவர்கள் தான் நேரத்திற்கு கடிவாளமிட்டு சாதனை படைப்பவர்கள்
மேலே சொன்ன அபூளம்ரா (ரலி) அவர்கள் மூன்றாம் வகை மனிதர்களைச் சார்ந்தவர்கள்

யர்மூக் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரம்
முதல் நாள் சண்டை முடிந்து ஓய்வில் அமர்ந்திருந்தனர் முஸ்லிம் படைவீரர்கள்.
ரோமபுரியின் படைத்தளபதிகளில் ஒருவரான ஜுர்ஜஹ் என்பவர் முஸ்லிம்களின் படைத்தளபதி காலித் பின் வலீத் (ரலி) அவர்களை சந்திக்க விரும்புவதாக அனுமதி வேண்டி நின்றார்.
அனுமதி வழங்கி உள்ளே வரச்சொல்லி ஆணையிட்டார்கள் தளபதி காலித் பின் வலீத் (ரலி) அவர்கள்.
வந்தவர் பணிவாக காலித் (ரலி) அவர்கள் முன் வந்து அமர்ந்தார். பின்னர் நடைபெற்ற உரையாடல் இதோ
ஜுர்ஜஹ் –      காலித் அவர்களே! பொய் சொல்லக்கூடாது உண்மையை
                மட்டும் சொல்ல வேண்டும்.
                ஏனெனில் சுதந்திரமானவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள்
                நான் கேள்விப்பட்டது உண்மையா?
காலித் (ரலி) –   என்ன கேள்வி பட்டீர்கள்?
ஜுர்ஜஹ் -    உங்கள் நபி வானில் இருந்து ஒரு வாளைப் பெற்று
                உங்களுக்கு வழங்கினார்களாம் அதனால் தான் உங்கள்
                வாள் வீச்சுக்கு முன்னால் வல்லரசுகளும், வலிமைவாய்ந்த
                படைகளும் வலுவிழந்து போகிறார்களாம்.
காலித் (ரலி -   அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.
ஜுர்ஜஹ் -    பின்னர் எப்படி உங்களுக்கு அந்தப் பெயர் வந்த்து?
காலித் (ரலி -   அல்லாஹ் எங்களுக்கு ஒரு தூதரை – நபியை
                அனுப்பினான், எங்களில் அவர்களை நம்பியவர்களும்
                இருந்தனர், மறுத்தவர்களும் , பொய்ப்படுத்தியவர்களும்
                இருந்தனர்.
                காலித் (ரலி) தொடர்ந்தார், நான் அவர்களை மறுத்தேன்,
                பொய்ப்படுத்தினேன். பின்பு அல்லாஹ் என் இதயத்தை
                இஸ்லாத்திற்காக வென்றெடுத்தான்.
                அந்த நபியைக் கொண்டு என்னை நேர்வழியில் ஆக்கினான்.
                பின்னர் நான் அவர்களிடத்தில் அக் காலத்திலும்
                இறைவனுக்கும், இறைத்தூதரான உங்களுக்கும் மரணம்
                வரை விசுவாசமாய் இருப்பேன் என வாக்குப் பிரமாணம்
                செய்து கொடுத்தேன்.
                அப்போது என்னை தங்களுக்கு அருகே அழைத்த
                அண்ணலார் நீர் அல்லாஹ்வின் வாள்களில் ஓர் வாள்
                எனக்கூறினார்கள். அன்றிலிருந்து நான் ஸைஃபுல்லாஹ்
                என அழைக்கப்படுகிறேன்.
ஜுர்ஜஹ் -    எதன் பக்கம் நீங்கள் அழைக்கின்றீர்கள்?
காலித் (ரலி)-   ஏகத்துவத்தின் பக்கமும், இஸ்லாத்தின் பக்கமும்.
ஜுர்ஜஹ் -    இன்று ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டாலும்
                உங்களுக்கு கிடைத்திருக்கும்  இது போன்ற கூலியும்
                நம்மையும் அவருக்கு கிடைக்குமா?
காலித் (ரலி) -  ஆம்! இதைவிட மிகச் சிறப்பாக கிடைக்கபடும்.
ஜுர்ஜஹ் -    எப்படி உங்களை விட மிகச்சிறப்பான கூலி கிடைக்கும்?
காலித் (ரலி) -  நாங்கள் நபியின் காலத்தில் வாழ்ந்தோம், அல்லாஹ்வின்
                வேச வசனங்கள் நாங்கள் வாழ்ந்த காலத்தில்தான்
                இறங்கியது.
                அல்லாஹ்வின் அற்புதங்களையும், உதவிகளையும்  
                அத்தாட்சிகளையும் கண்ணாறக் கண்டோம். ஆனால், இன்று
                இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறவர்களோ –
                இவையனைத்தையும் காணாமலே நம்பிக்கை
                கொள்கிறார்கள்.
                அல்லாஹ்வை மறைவான நிலையில் நம்பிக்கை
                கொள்ளும் உங்களை கௌரவிக்கும் அல்லாஹ்வின் அருள்
                மிகவும் சிறப்பிற்குரியதல்லவா?
ஜுர்ஜஹ் -      அப்படியென்றால் காலித் (ரலி) அவர்களே எனக்கு இஸ்லாத்தை கற்றுக் கொடுங்கள் மாலையில் தொடங்கிய உரையாடல் அதிகாலை வரைத் தொடர்ந்தது. இஸ்லாத்தின் உயரிய கடமையான தொழுகையையும் ஜுர்ஜஹ் கற்றுக் கொண்டார்.
அதிகாலைத் தொழுகையில் கலந்து கொண்டார்,
இஸ்லாமிய படையின் முதல்வரிசையில் நின்றார்,
ஏகத்துவ புத்துணர்வோடு எதிரிகளின் களம் புகுந்து சுழன்று சுழன்று போரிட்டார்.
அவரின் முழு சிந்தனையும் இறைவனுக்காக, இறை மார்க்கத்திற்காக உயிர் நீத்து ஷஹீத் ஆக வேண்டும் என்பதாகவே இருந்த்தை அவரின் வேகம் முஸ்லிம்களுக்கு உணர்த்தியது.
சுப்ஹானல்லாஹ்....
சிறிது நேரத்தில் அந்த அரியாசனத்தையும் அவர் பெற்றார்.
தனக்கு கிடைத்த தருணத்தை அரிய தருணமாக மாற்றி ஷஹீத் எனும் அரியாசணத்தை அடைந்தார்.
நூல்- ரிஜாலுன் ஹவ்லத் ரசூல் (ஸல்)
பக்கம்-299, 300,301
அன்றொரு நான் எப்போதும் உற்சாகமாய், மகிழ்சிகரமாய் சுற்றிக்கொண்டிருக்கும் ஓர் வாலிபர் வாடிய முகத்தோடு கலைந்த கேசத்தோடு, தளர்ந்த தேகத்தோடு மஸ்ஜிதுந் நபவீயின் ஓர் ஓரத்திலே அமர்ந்திருப்பதைக் கண்ட பெருமானார் மெதுவாக அவ்வாலிபரை நோக்கி சென்றார்கள்.
ஜாபிரே! என்ன? இப்படி ஒடிந்து போய் ஓரமாக அமர்ந்திருக்கின்றீர் என தலையை தடவியவாரே அண்ணலார் கேட்க, அன்போடும், அரவணைப்போடும் கேட்ட அண்ணலாரின் அந்த அணுகுமறையில் தன் பாரத்தை எல்லாம் கண்ணீரோடு இறக்கிவைத்தார் ஜாபிர் (ரலி) அவர்கள்
அல்லாஹ்வின் தூதரே! எனது தந்தை உஹத் போரில் கலந்து ஷஹீத் ஆகிவிட்டார்..
ஜாபிர் (ரலி) அவர்களின் தந்தை அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் உஹது யுத்த்த்தில் கலந்து கொண்டு நிகழ்வே நெகிழ்ச்சியானது
உஹத்திற்கான அழைப்பு அண்ணலாரிடமிருந்து வருகிறது
ஜாபிர் (ரலி)            -  தந்தையே நான் கலந்து கொள்கிறேன்.
அப்துல்லாஹ் (ரலி)-  மகனே! நீ இளைஞன் உனக்கு எதிர் காலத்தில்
                மற்றுமோர் வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால்,
                நான் வயோதிகன் என் ஆயுளில் இன்னொரு
                வாய்ப்பு கிடைப்பது அரிது.
ஜாபிர் (ரலி)            -  யுத்தத்தில் கலந்து கொள்ள வலிமையும், இளமையும்
                     தேவை உங்களிடம் இரண்டுமே இல்லை. வீட்டில்
                     பெண்மக்களுக்கு அணுசரணையாக இருந்துவிடுங்கள்.
                     எனக்கு விட்டுக் கொடுங்கள்.
அப்துல்லாஹ் (ரலி)-  அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக போராடி உயிர்
                     நீக்கும் பாக்கியம் கிடைக்கப் பெறவே நான்
                     ஆசிக்கின்றேன் மேலும் அதற்கான கூலி சுவனம்
                     மாத்திரம் இல்லையென்றால் உனக்கு தான் விட்டுக்
                     கொடுத்திடுவேன். சகோதரன் எனும் முறையில்
                     வீட்டுப் பெண்களுக்கு உரிய கடமைகளை நீயே
                     வீட்டில் இரு.
ஜாபிர் (ரலி)     -    சீட்டுக்குலுக்குவோம், பிறகு யார் என முடிவு
                     செய்வோம்.
                     இறுதியாக அப்துல்லாஹ் (ரலி) அவர்களின் பெயரே
                     குலுக்கலில் முன்னிலை பெற்றது.
இப்படித்தான் உஹதில் அவர் கலந்து கொண்டார்.
தொடர்ந்தார் ஜாபிர் (ரலி)
சில கடன்களையும், பெண்மக்களையும் விட்டுச்சென்று விட்டார் என் தந்தை.

அல்லாஹ் உமது காரியத்தை இலகுவாக்குவான்.
என அண்ணலார் (ஸல்) அவர்கள் ஆறுதல் கூறிவிட்டு ஜாபிரே! உமக்கொன்றை சொல்லட்டுமா?
சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே! என்றார், ஜாபிர் (ரலி) அவர்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்-
உனக்கு ஒரு சுபச் செய்தியை சொல்லட்டுமா? அதுவும் உன் தந்தையை ஏறித்து!
அல்லாஹ் உம்முடைய தந்தைக்கு உயிர் கொடுத்தான்,
எல்லோரிடமும் திரைக்கு அப்பாலிருந்து பேசும் வல்ல அல்லாஹ் உம் தந்தையிடம் நேருக்கு நேராக, சமீபமாக இருந்து பேசினான்.
அப்போது அல்லாஹ் என் அடியாரே! என்னிடம் உம் விருப்பத்தைக் கூறும்! அதை நான் நிறைவேற்றுகின்றேன் என்றான்.
அப்போது உன் தந்தை அல்லாஹ்விடம் இறைவாஎன்னை மீண்டும் உலகிற்கு உயிர்கொடுத்து அனுப்பு மீண்டும் ஒருமுறை உனக்காக போராடி உன் மார்க்கத்தின் உயர்வுக்காக காயம்பட்டு மீண்டும் உயிர் நீத்த (ஷஹீதாக) விரும்புகின்றேன் என்றார்.
அப்போது அல்லாஹ்- என்னுடைய நடைமுறையில் முரண் கிடையாது இறந்து போனவர்களை மீண்டும் உயிர் கொடுத்து உலகிற்கு அனுப்ப மாட்டோம் என நாம் விதித்துள்ளோம்என்றான்.
உடனே அப்துல்லாஹ் (ரலி) – அப்படியானால் இது போல் ஆசிக்கின்றவர்களின் நிலை என்ன என்று நீ சொல்லிவிடுஎன்றார்கள்
அப்போது தான் வல்ல ரஹ்மான்.
இறை வழியில் கொல்லப்பட்டவர்களை இறந்தவர்களாக ஒரு போதும் எண்ணிவிடாதீர்! உண்மையில் அவர்கள் உயிரோடு இருக்கின்றார்கள். அவர்கள் தம் இறைவனிடத்தில் இருந்து தங்களுக்கு தேவையான வாழ்வாதாரத்தைப் பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள்
அல்குர்ஆன்- 3-169
அல்லாஹ் ஷைத்தானுக்கும் கூட தன்னோடு உரையாடும் அரிய தருணத்தை வழங்கினான்.
ஆனால், அந்த அரிய வாய்ப்பை ஷைத்தான் எவ்வாறு நாசமாக்கினான் என்று அல்குர்ஆனின் பல வசனங்கள் படம் பிடித்து காட்டுகின்றது.
ஆனால், மேன்மையும், தகுதியும் வாய்ந்த அந்த நபித்தோழர் அந்த அரிய தருணத்தை தமக்கும், இந்த உம்மத்திற்குமான அரியாசணமாக மாற்றிக் காட்டினார் என்பதையே மேற்கூறிய சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு,
அரசாங்க வேலை இப்ப வருமா? அப்ப வருமா? என்று காத்து கிடப்பது போன்று.....

நம் வாழ்வினில் எப்போது அரிய தருணம் வரும்? என்று நிறைய பேர் காத்துக் கிடக்கின்றார்கள்.

அது எப்போதும் வருவதில்லை!
அதை நாம் தான் உருவாக்கிட முன்வரவேண்டும்.

அதுவும் இப்போதே....
இங்கேயே.....
இன்றே........
நிகழ் காலத்திலேயே........

அல்லாஹ்!      அரிய தருணங்களை
                அரயாசனமாக்கிடும்
                ஆற்றலை தருவானாக! ஆமீன்.



1 comment:

  1. மௌலானா! அருமை சூப்பர்

    ReplyDelete