Monday 14 October 2013

உடமைகளும் தியாகமும்

உடமைகளும் தியாகமும்
அடுத்து புலனுக்கு எட்டுகிற நிதர்சனமானவைகளை தியாகம் செய்ய முன்வருமாறு அல்லாஹ் அழைக்கின்றான்.

இப்னு அப்தில் பர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
ஒரு அனாதை வாலிபருக்கும் நபித்தோழர் அபூலுபாபா (ரலி) அவர்களுக்கும் ஒரு பேரீத்தமரம் சம்பந்தாக நீண்ட நாட்களாக தகராறு இருந்து வந்த்து.
இறுதியாக நபி (ஸல்) அவர்களிடம் இந்த வழக்கு கொண்டு வரப்பட்டது.
ஆதாரங்களின் அடிப்படையில் அது அபூலுபாபா (ரலி) அவர்களுக்கு உரியது என நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள். அதைக் கேட்ட அந்த வாலிபர் மிகவும் அழுதார், சோர்வடைந்தார்,
இதைக் கண்ணுற்ற மாநபி (ஸல்) அவர்களின் இதயம் இரக்கத்தால் சூழ்ந்த்து.
அபூலுபாபாவிடம் அந்த மரத்தை இந்த ஏழை வாலிபனுக்கு கொடுத்துவிடுங்கள் என்று மனித நேயப் பண்பு அடிப்படையில் கேட்டார்கள் நபி (ஸல்) அவர்கள்.
அபூலுபாபா (ரலி) அவர்கள் தர முடியாது என மறுத்துவிட்டார்கள்.

அந்த மரத்தை அவருக்கு கொடுத்துவிட்டீர்களென்றால் சுவனத்தில் அதற்குபகரமாக சுவையூட்டும் ஒரு மதுரமான கனி தரும் மரத்தைப் பெற்றுத்தர நான் பொருப்பேற்றுக் கொள்கிறேன் என்று மீண்டும் அபூலுபாபா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.
இரண்டாம் முறையும் தரஇயலாது என மறுத்துவிட்டார்கள் அபூலுபாபா (ரலி) அவர்கள்.
இவையனைத்தையும் அங்கே இருந்து கண்ணுற்ற மற்றொரு நபித் தோழர் அபுத் தஹ்தாஹ் (ரலி) அவர்கள், நேராக அபூலுபாபா (ரலி) அவர்களிடம் சென்று உங்களின் அந்த மரத்தை என்னுடைய பேரீத்தமர தோட்டத்திற்கு பகரமாக விலைக்கு தர விரும்புவீர்களா? என்று கேட்டார் இதற்கு அபூலுபாபா (ரலி) அவர்கள் சரியென்று ஆமோதிக்கின்றார்கள்.
இப்போது, அபுத் –தஹ்தாஹ் (ரலி) அவர்கள் மகிழ்ச்சியோடு மாநபியை சந்தித்து நடந்த உரையாடலை சொல்லிவிட்டு இந்த ஏழை வாலிபருக்கு நான் அந்த பேரீத்த மரத்தை கொடுத்துவிட்டால், நீங்கள் அபூலுபாபாவிற்கு அறிவித்த அந்த நற்பேறு எனக்கும் கிடைக்குமா?
-என்று வினவியபோது ஆம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அபுத் தஹ்தாஹ் (ரலி) அவர்கள் உஹதிலே ஷஹீதாக்கப்பட்டார்கள். அன்றைய தினத்தில் அன்னாரைப்பற்றி நபி (ஸல்) அவர்கள், எத்தனையோ சுவை தரும் மரங்கள் சுவனத்தில் அபுத்-தஹ்தாஹ் வின் வரவிற்காக காத்து நிற்கின்றன என்றார்கள்.
நூல்: இஸ்தீஆப் பாகம்:3, பக்கம்:102
சுவர்க்கத்தின் ஒரு மரத்திகாக சுமார் 100 பேரீத்த மரங்கள் கொண்ட தோட்டத்தை அபுத்-தஹ்தாஹ் (ரலி) தர முன்வந்தார்களென்றால்.....
அது எப்படி?
அல்லாஹ்விற்காக அர்ப்பணிப்பதினால் ஏற்படும் மாற்றத்தை முன்பொறுமுறை அபுத்-தஹ்தாஹ் (ரலி) அவர்கள் தம் வாழ்வினிலே அனுபவித்ததின் விளைவு.
ஆம்!
“அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுப்போர் (உங்களில்) யார் இருக்கிறார்கள்? (அப்படி கடன் கொடுத்தால்) அல்லாஹ் அதனை பன்மடங்காக அவர்களுக்குத் திருப்பிக் கொடுப்பான். அல்லாஹ் தான் (செல்வத்தை) குறைக்கவும், பெருக்கவும் செய்கின்றான்.

மேலும், நீங்கள் அவன் பக்கமே திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள்
அல்-குர்ஆன்: 2 : 243
எனும் இறைவசனம் இறக்கியருளப்பட்டபோது சுமார் 600 பேரீத்த மரங்கள் கொண்ட பெரிய தோட்டத்தை இதோ அல்லாஹ்விற்காக கடன் தருகிறேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒப்படைத்த மாபெரும் தியாகத்திற்கு சொந்தக்கார்ர் தான் அபுத் – தஹ்தாஹ்(ரலி) அவர்கள்.
நூல்: தஃப்ஸீர், இப்னுகஸீர், பாகம் 1: பக்கம் 39
பொருளாதாரத்தை வளத்தை ஈட்டித் தருகிற உடமைகளை, செல்வத்தை அல்லாஹ் கைர் – சிறந்த்தென்றும், உலக வாழ்வின் அலங்காரம் என்றும் சொல்வான்
அத்தகைய அலங்காரத்தையும், சிறந்த்தையும் இழக்க, அர்ப்பணிக்க முன்வர மாபெரும் இதயம் வேண்டும் அது அங்கிருந்த்து, அபுத் – தஹ்தாஹ் இடம் இருந்த்து.

இன்றைய சூழலில் பேணுதலானவர்களாகவும், வணக்கசாலிகளாகவும் அறியப்படுகின்ற பலர்
தங்கள் வியாபார நேரத்தில் அன்பொழுக பார்க்கவோ, பண்புடன் பேசவோ, இறை தியானத்திற்கு முன்னுரிமை வழங்கவோ முன்வருவதில்லை.
ஏனெனில், வியாபாரமும், வியாபாரத்தின் மூலம கிடைக்கும் ஆதாயமும் தான் தங்களது வாழ்வை தீர்மானிப்பதாக கருதுகின்றான்.

இயற்கையாகவே தீர்க்கமான அறிவு கொண்டவர் என போற்றப்பட்டவர் அபு-த்-தர்தா (ரலி) அவர்கள்.

இஸ்லாத்திறகு வருவதற்கு முன்னால் மதீனாவின் மாபெரும் வியாபாரியாக அறியப்பட்டவர்கள்.
அல்லாஹ்வின் தூதர் மாநபி (ஸல்) அவரகள், அபுத் தர்தா-வின் அறிவுக் கூர்மையை கண்டு வியந்து என் உம்மத்தின் ஹக்கீம் மதிவாணர் அபுத் தர்தா (ரலி) என்று சிறப்பு செய்தார்கள்.

காலித் முஹம்மத் காலித் (ரஹ்) எனும் வரலாற்று ஆசிரியர் அபுத் –தர்தா (ரலி) அவர்களின் வாழக்கை முழுவதும் அல்குர்ஆன் 6-ஆம் அத்தியாயம் 162-ம் வசனத்தின் விளக்கமாக அமைந்திருப்பதை நான் காண்கிறேன் என்று கூறுகிறார்கள்.

அபுத் தர்தா (ரலி) அவர்களே தங்களைப்பற்றி கூறும்போது:
 நான் நபியை சந்தித்து ஈமான் கொள்ளும்போது மதீனா மாநகரின் செல்வாக்கு நிறைந்த வியாபாரி.

ஈமான் கொண்டதின் பின்னர் வியாபாரத்தையும் இறைதியானத்தையும் ஒரே கண்ணோட்டத்தில் – வட்டத்தில் கொண்டு வர முயற்சித்தேன் ஆனால் அது இயலாமல் போனது.
வியாபாரத்தை விட இறை தியானத்திற்கும், வணக்க வழிபாடுகளுக்கும் முன்னுரிமை கொடுக்க ஆரம்பித்தபின்னர்,
நாள் ஒன்றுக்கு 300 தீனார் லாபம் ஈட்டிய போதும்
இறை தியானத்தில் கிடைத்த மன திருப்தி என் வியாபாரத்தின் மூலம் கிடைத்த நான் அடைந்த்தில்லை.
ஏனெனில், நான் அல்லாஹ் விமர்சிக்கும் அழகிய வியாபாரியாக மிளிர வேண்டும் என ஆவல் கொண்டேன்.
ஆம்!
சில மனிதர்கள் இருக்கிறார்கள் அவர்களின் வியாபாரமும், கொள்வினை கொடுப்பினையும் இறைவனை நினைவு கூறுவதை விட்டும் அவர்களைப் பாராமுகமாக்கி விடுவதில்லை. மேலும, இதயங்கள் நிலை குலைந்து, பார்வைகள் நிலைகுத்தி நிற்கின்ற மறுமைநாள் குறித்து அஞ்சிக் கொண்டிருக்கின்றார்கள்
அல்குர்ஆன்: 24:37
இந்த வசனத்தில் கூறப்படும் வாய்மை யாளராய் மாறிடவே நான் விரும்புகின்றேன்.
நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரசூல் (ஸல்) பக்கம் 330
அல்லாஹ்வின் வணிகர் எனும் புகழாரத்தைப் பெற்ற அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃபீ (ரலி) அவர்களின் வாழ்விலும் ஏராளமான முன்மாதிரிகள் உண்டு.

மனித வாழ்க்கையின் பெரும்பகுதி செலவிடப்படும் இடங்களில் முக்கிய இடத்தைப் பெறுவது வீடாகும்.
மனிதன் எங்கு சுற்றி எங்கு திரிந்தாலும் இறுதியில் தன் வீட்டில் இருப்பதையே விரும்புவான்.
மனிதனின் உடமைகளில் மிகவும் நேசத்திற்குரியது தான் வசிக்கும் வீடுதான்
அந்த இல்லம் இறைவனின் அருள் நிரம்பி வழியும் வீடாக இருக்க வேண்டுமெனில்
சில அர்ப்பணிப்புகளை மேற்கொள்ள முன்வர வேண்டும்.
ஏனெனில், அர்ப்பணிப்புகளை மேற்கொள்ளாத இல்லங்களில் குழப்பம் சூழ்ந்துவிடும், பிள்ளைகளுக்கு மத்தியில் விரோதம் முளைத்துவிடும். கணவன் – மனைவி உறவில் விரிசல் ஏற்பட்டுவிடும். அருளுக்கு பதில் வேதனையாக மாறிவிடும்.
இன்றைய அநேக வீடுகள் இஸ்லாம் விரும்பும் வகையில் அமைந்திடாமல் ஷைத்தானின் உறைவிடமாக மாறி இருப்பதைக் காண முடிகிறது.
உங்கள் இல்லஹ்களை மன அமைதி தரும் இடமாக நாம் ஆக்கியுள்ளோம் என்று இறைவன் கூறினாலும்
இறை நினைவும், இறைத்தூதர் வழியும் பின்பற்றப்படாத எந்த ஓர் இல்லத்திலும் மன அமைதியை மருந்துக்கும் காண முடியாது.
என்பதை அர்ப்பணிப்புடன் வாழும் ஓர் இறைநம்பிக்கையாளன் வைத்திருப்பான்.
எனவே தான் அல்லாஹ் இப்படிக்கூறுவான்:
(“அவனது ஒளியின் வழிகாட்டுதலைப் பெற்றவர்கள்) எந்த இல்லங்கள் உயர்த்தப் படுவதற்கும், எங்கே தன் பெயர் நினைவு கூறப்படுவதற்கும் அல்லாஹ் அனுமதி வழங்கியுள்ளானோ அந்த இல்லங்களில் காலை, மாலை நேரங்களில் அவனை துதிப்பவர்களாக காணப்படுகின்றார்கள்.
அல்-குர்ஆன்:24:36
எனவே, மேற்கூறிய எட்டு அம்சங்களும் மனித இயல்போடும், உணர்வோடும் ஒன்ற்றக் கலந்தவை என்பதால் தான் அல்லாஹ் இவைகளை அல்லாஹ் ரசூலின் மீதான நேசத்திற்கும் மேலாக நேசிப்பதை தியாகம் செய்ய முன்வருமாறு அழைக்கின்றான்.
தேவைபட்டால் இவைகளை அல்லாஹ்விற்காக தியாகம் செய்ய முன்வருமாறு கட்டளை பிறப்பிக்கின்றான்.

ஏனெனில், தன் உடமைகளையும், உணர்வுகளையும் தியாகம் செய்ய முன்வருபவர்களால் மட்டும்தான்  தான் மேலாக மதிக்கும் “உயரை இந்த இஸ்லாத்திற்காக தியாகம் செய்ய முன்வருவான்.
இப்போது இதே உணர்வோடு
ரளியல்லாஹீ அன்ஹீம் வரளு அன்ஹீ
அல்லாஹ் அவர்கள பொருந்திக்கொண்டான்!
அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டார்கள்!!
என்று ஸஹாபாக்களை குறித்து வாய்விட்டு சொல்லிப்பாருங்கள். அதன் உள்ளார்ந்த பொருள் ஒரு கனம் உங்கள் உடலை சிலிர்த்து விட்டுச் செல்லும்,

ஏனென்றால் அவர்கள் இறைவின் விருப்பத்தை தங்களின் விருப்பமாக மாற்றிக் கொண்டார்கள் அல்லாஹ் வெறுத்த்தை அவர்களும் வெறுத்தனர். தங்களது உணர்வுகளையும், உடமைகளையும், உயிர்களையும் அல்லாஹ்வின் பாதையில் அர்ப்பணித்தனர். மறக்கப்படாத வரலாற்றுக்கு சொந்தக்காரர்களாக நிர்மானித்திக் கொண்டனர்.

உயிரும்.... தியாகமும்.......
யமாமா புத்தகளம் தங்களை நபியாக வாதிட்ட ருஜ்ஜால் இப்னும் ஹனீஃபா, முஸைலமா மற்றும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் நடைபெற்ற யுத்தமாகும்.
உமர் (ரலி) அவர்கள் ஒரு வீரத்தியாகியின் உடல் முன்னால் நின்று கொண்டு தேம்பித் தேம்பித் அழுதார்கள்.
அவரிடம் தான் அன்றைய போரின் கொடி வழங்கப்பெற்றிருந்த்து ஆனால், இப்போது உயிரின்றி உடல்மட்டும் காயங்களோடு அசைவற்று கிடந்த்து.
அவர் வேறு யாருமல்ல! இஸ்லாமிய வரலாற்றில் அதிகம் அறியப்படும் இரண்டு ஹிஜ்ரத்திலும் கலந்துகொண்ட மாண்புக்க சொந்தக்காரர் உமர் (ரலி) இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் முன்னரே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட  உமர் (ரலி) அன்ஹூ அவர்களின் தகப்பனாருக்கு இன்னொரு தாயின் மூலம் பிறந்த சகோதரர் ஜைதுப்னுல் கத்தாப் (ரலி) அவர்கள்.

உஹத் யுத்தத்தில் எதிரிகளுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் போது ஜைது (ரலி) அவர்களின் வாள் இரண்டாக உடைந்து விட்டது உடைந்த வாளை வைத்து போரிட்டுக் கொண்டிருந்த தம் சகோதரரிடம் உமர் (ரலி) அவர்கள் ஒருவாளை காட்டி இதைவைத்துப் போரிடு என்று கூறிய போது நான் வீரமரணமடையும் வேட்கையிலே வந்திருக்கின்றேன். எனக்கு இந்த வாளே போதும்! என்றார்களாம்.
பத்ரில் துவங்கி அனைத்து யுத்த களங்களிலும் ஷஹீதாக வேண்டும் எனற் எண்ணத்திலேயே கலந்து கொண்ட  அவர்களுக்கு யமாமா தான் நிறைவேற்றிவைத்தது.
அந்த மாவீரரின் முன்னின்று அழுது கொண்டிருந்து உமர் (ரலி) அவர்கள்
யா அல்லாஹ்!
     இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதிலும் பேரார்வத்துடன்
     என்னை முந்திக் கொண்டார்!
     இஸ்லாத்திற்காக உயிரை அர்ப்பணிப்பதிலும்
     என்னை முந்திக் கொண்டார்!
     யா அல்லாஹ்! ஜைதின் மீது உன் அருள் மழையை
     என்றென்றும் பொழியச் செய்வாயாக!
என்று துஆ செய்தார்கள்.
நூல்:ரிஜாலுன் ஹவ்லர் ரசூல் (ஸல்)
பக்கம்:341

இரு நண்பர்கள் ஒன்று சேர்ந்தால் எங்கு போவார்கள் என்பது நமக்குத் தெரியும்.
ஆனால் நபிகளார் காலத்து இரு நண்பர்கள் சஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்களும், அப்துல்லாஹ் இப்னு ஜஹீஷ் (ரலி) அவர்களும் ஒருமுறை சந்தித்துக் கொண்டபோது அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் சஅத் (ரலி) அவர்களிடம் வாங்க இரண்டு பேரும் சேர்ந்து துஆ செய்ய போவோமா என்று கேட்டார்கள்.
சரி என்று சம்மதித்து சஅதும் வந்தார்,
முதலில் துஆ கேட்கும் வாய்ய்பு சஅதிற்கு சென்றது
அவர்கள் “யா அல்லாஹ் நாளை உஹதிலே கடுமையான போர்வீரனை நான் சந்திக்க வேண்டும். அவனுடன் நானும், என்னுடன் அவனும் கடுமையாக மோதிக் கொள்ளவேண்டும். இறுதியாக நான் அவனை வீழ்த்த வேண்டும். அவன் பொருள் எனக்கு சொந்தமாக வேண்டும்.
என்று கேட்டுமுடித்த போது அப்துல்லாஹ் (ரலி) “ஆமீன்என்று சொன்னார்கள்.
பின்பு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள்:
“யா அல்லாஹ்!
நாளை உஹதிலே வீராதி வீரனை நான் சந்திக்க வேண்டும்
அஞ்சா நெஞ்சத்துடன் அவனை உனக்காக நான் எதிர்கொள்ள வேண்டும். அவனுடன் நானும், என்னுடன் அவனும் கடுமையாக மோதிக்கொள்ள வேண்டும்.
இறுதியில், என் உறுப்புக்கள் ஒவ்வொன்றாக சிதைக்கப்பட வேண்டும். 
நாளை மறுமையில் என்னை நீ சந்தித் து அடியானே!
உன் மூக்கு அறுபட்டுள்ளதே!
உன் காது வெட்டப்பட்டுள்ளதே!
என்று நீ கேட்க வேண்டும்
அதற்கு நான்
யா அல்லாஹ்! அதுவா? அதை உனக்காகத்தான், உன் தூதருக்காகத்தான் நான் அர்ப்பணித்தேன்.
என்று சொல்ல வேண்டும்.
அப்போது அதைக்கேட்டுஅடியானே! நீ உண்மையையே சொன்னாய்! என்று என்னிடம் நீ சொல்ல வேண்டும்.
என்று கேட்டார்கள்
அதற்கு சஅத் (ரலி) அவர்கள் ஆமீன் என்று கூறினார்கள்.
இந்த செய்தியை அறிவிக்கும் ஸஅத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
என்னைவிட அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அழகிய துஆவை கேட்டார்கள்.
நான் போர் முடிந்து அவரின் ஷஹீத்தாக்கப்பட்ட உடலை கண்ட போது அவர் கேட்டது போலவே நடந்திருக்க கண்டேன்
நூல்: இஸ்தீஆப், பாகம்:2: பக்கம் : 43
மறக்கப்படுவதில்லை
அல்லாஹ்விற்காக தன் இளமையின் உணர்வுகளை தியாகம் செய்த இறைத்தூதர் யூசுப் (அலை) அவர்களை இந்த சமூகம் மறந்திடக்கூடாது என்பதற்காக அல்லாஹ் அல்குர்ஆனில் அவரின் பெரிலேயே ஒரு அத்தியாத்தை இறக்கிவைத்து அவர்களின் தியாகத்தை கௌரவிக்கின்றான்,

அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக, கொண்ட கொள்கைக்காக, நாட்டைவிட்டு. ஊரை விட்டு, சொந்த பந்தங்களைவிட்டு ஓடிவந்த இளைஞர்களின் தியாகத்தை இந்த சமுதாயம் மறந்திடக்கூடாது என்பதற்காக அல்லாஹ் அல்குர்ஆனில் கஹ்ஃப்-குகைவாசிகள் எனும் பெயரிலே ஒரு அத்தியாத்தை இறக்கியருளி அவர்களின் தியாகத்தை போற்றுகின்றான்.

தன்னுடைய தந்தை, மனைவி, மக்கள், தன்உயிர், என அனைத்தையும் அர்ப்பணிக்கத் துணிந்திட்ட ஒரு மாமனிதரின் தியாகத்தை தியாகத்திற்கே முன்னோடி என்றும், பல்வேறு சிறப்புப் பெயர்களோடும், குர்ஆனின் பல்வேறு இடங்களில் போற்றிப் புகழ்வதோடு இப்ராஹீம் எனும் அவரின் பெயரிலேயே ஓர் அத்தியாயத்தை இறக்கிவைத்து ஒட்டுமொத்த உம்மத்தும் மறந்திடாதவாறு அவர்களின் தியாகத்தை உள்ஹிய்யா எனும் பெயரில் பாதுகாத்து நிலைநிறுத்துகின்றான்

ஸிஃப்பீன் போர்முடிந்து திரும்பிக் கொண்டிருந்த அலீ (ரலி) அவர்கள் வழியில் ஒரு மண்ணறை – கப்ரைக் கண்டு இது யாருடைய கப்ர்? என்று வினவ,
மக்கள் நபித் தோழர் கப்பாப் (ரலி)அவர்களுடையதுஎன்று கூறினார்கள்.
கேட்ட மாத்திரத்திலேயே மண்ணறையின் முன் நின்று தேம்பித் தேம்பி அழுதவர்களாக!
வானை நோக்கி இருகரம் உயரத்தி....
யா அல்லாஹ்! கப்பாப் அவர்கள் பேரார்வத்துடன்
                இஸ்லாத்தை தழுவினார்கள்.

                உனக்கும், உன் நேசருக்கும் அடிபணிந்து வாழும்
                முனைப்போடு தமது தாயகத்தையே துறந்தார்கள்!
                வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணிப்போடும்,
                தியாகத்தோடும் அமைத்துக் கொண்டார்கள்.
யா  அல்லாஹ்!      கப்பாபின் மீது உன் கருணை மழையை
                பொழயச் செய்வாயாக!
என்று துஆ செய்தார்கள்.
நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரசூல்(ஸல்) பக்கம்:235
அமீருல் முஃமினீன், படைத்தளபதி எனும் அதிகாரச் சுமை சந்தித்துவிட்ட போரில் ஏற்பட்ட இழப்பு, வீர்ர்களின் காயம், தியாகம் என எண்ணிப்பார்ப்பதற்கும், நினைத்துப்பார்ப்பதற்கும் எவ்வளவோ இருந்துகூட கப்பாப் (ரலி) அவர்களை நினைக்கத் தூண்டியது, கப்பாப் (ரலி) அவர்களின் அப்பழுக்கற்ற தியாகமே!

உஹத் யுத்தகளம் சண்டை ஓய்ந்த்து
வீர மரணமடைந்தவர்களை அடையாளம் காணும் பயிணில் நபி (ஸல்) அவர்களும், நபித் தோழர்களும் ஈடுபட்டிருந்தனர். தூரத்தில் செந்நிற  மேனியோடு, செங்குருதியின் வெள்ளத்தில் உணர்வற்றுக் கிடந்த அந்த தியாகியின் சடலத்தை நோக்கி மாநபி (ஸல்) அவர்கள் விரைந்தோடிச் சென்று பார்த்தார்கள். அவர் மக்கமாநகரின் பேரழகு முஸஅப் இப்னு உமைர் (ரலி) அவர்கள் ஆவார்கள் வாரி அணைத்த மடியில் தூக்கிவைத்து,
முஸ்அப் அவர்களின் துவக்க கால ஆடம்பர வாழ்வின் வனப்பும், இஸ்லாமிய வாழ்வில் அவர் பெற்ற தியாக வாழ்வின் வடுக்களை நபித் தோழர்களுக்கு எடுத்துக் கூறி நினைவு படுத்தினார்கள்.
நூல்: இஸ்தீஆப், பாகம்:2: பக்கம் : 400
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழுவதற்கும், நினைத்துப் பார்ப்பதற்கும் அங்கே அவரின் பெரிய தந்தை ஹம்ஸா (ரலி) அவர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடக்கின்றார்கள்.
ஆனால், முஸ் அபின் அர்ப்பணிப்பை நபித் தோழர்களிடையே மாநபி (ஸல்) அவர்கள் நினைவுபடுத்தினார்கள்.

தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) – சுபைர் பின் அவ்வாம் (ரலி) இருவரும் நண்பர்கள்.
இஸ்லாமிய வரலாற்றிலும் கூட இருவரின் பெயர்களில் ஒன்றாகவே இடம் பெறும்.
சுவனத்தை கொண்டு நன்மாராயம் சொல்லப்பட்டவர்களில் இருவரும் உண்டு.
தல்ஹா (ரலி) அவர்கள் தங்களுக்கு பிறந்த 10 குழந்தைகளுக்கும்
நபிமார்களின் பெயரை சூட்டினர்கள்
சுபைர் (ரலி) அவர்கள் தங்களுக்கு பிறந்த குழநதை தியாகிகளின் பெயரை சூட்டினார்கள்

முடிந்துவரும் உலகு, குடும்ப உயர்வின் நலன், நாட்டுமக்களின் மீதான அக்கறை என நாளும் மனிதர்கள் மேற்கொள்ளும் தியாகங்களும் அதற்காக அவர்களுக்கு வழங்கப்படும் மரியாதைகளும் கௌரவங்களும்,
மணிமண்டபங்காக , சாலை, வீதி. தெருக்களின் பெயர்களாக, விருதுகாக,
மதிக்கப்படுகிறதென்றால்....
முடிவற்ற உலகு, உலக மக்களின் நலனையும், உயர்வையும், மேலா இஸ்லாத்தின் எழுச்சியையும், மாண்பையுயும் தம் உயிரினும் மேலாக மதிக்கக்கூடிய அல்லாஹ்விற்காகவும், அவரின் தூதருக்காகவும் செய்யவேண்டும் ஓர் முஸ்லிமின் தியாகங்களும், அதற்காக அருக்கு வழங்கப்படும் அங்கீகாரங்களும், அந்தஸ்துகளும்,
எத்துணை மதிப்பு வாய்ந்தவைகளாக இருக்கும் என்பதை இஸ்லாமிய வரலாறு உலகிற்கு உணர்த்திக் கொண்டிருகிறது.

ஆம்!
அத்தகைய தியாகங்கள் ஒரு போதும் வீண் போவதில்லை!
மதிக்கப்படுகின்றது!
ஆம்!
அத்தகைய தியாகிகள் ஒருபோதும் மறக்கப்படுவதில்லை!
போற்றப்படுகின்றார்கள்!

அந்த உயர்வான சிந்தனையைத்தான் ஈதுல் அள்ஹா நமக்கு போதிக்கின்றது.

அல்லாஹ்வின் விருப்பத்தையே நமது விருப்பமாக ஏற்று நடந்திடும் நல்லோர்களில் ஒருவராக உங்களையும் என்னையும் வல்ல ரஹ்மான் ஆக்கி அருள் புரிவானாக! ஆமீன்!



3 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் அருமையான தொகுப்பு மிகவும் பயனலித்தது jazakallah

    ReplyDelete
  2. Good and were imparted article for bayan
    Moulavi Abdul rasheed siraji. Dharapuram

    ReplyDelete