Tuesday 10 February 2015

புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே!



புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே!





சங்கைமிகு உலமாக்களே! மற்றும் வெள்ளிமேடை ப்ளஸ்ஸின் பார்வையாளர்களே!

السلام عليكم ورحمة الله وبركاته

உங்களின் மேலான தேடலோடு எம்முடைய வலைப்பூவின் பார்வையாளர்களின் வருகை இலட்சத்தை தொட்டிருக்கின்றது.

அல்ஹம்துலில்லாஹ்…

கடந்த 2013 –ஆம் ஆண்டு இதே பிப்ரவரி மாதத்தில் ”விருதுகளும்… விண்மீன்களும்..” எனும் தலைப்பில் தான் முதன் முதலாக உங்களின் பார்வைக்கு வலைப்பூவில் பதிவிட்டேன்.

அல்லாஹ்வின் அருளால் தற்போது வரை, கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 83 தலைப்புகளில் பதிவிட்டிருக்கின்றேன்.

பல்வேறு பட்ட விமர்சனங்கள், பாராட்டுக்கள், ஆலோசனைகள், கருத்துப் பரிமாற்றங்கள் என ஏராளமான உலமாக்களின் தொடர்புகளை அல்லாஹ் இந்த வலைப்பதிவின் மூலம் அல்லாஹ் எனக்கு நல்கினான்.

ஆரம்பமாக, என்னைப் படைத்து எனக்கு கல்வியறிவை தந்து ஹாஃபிளாக, ஓர் ஆலிமாக உலவ விட்ட வல்ல ரஹ்மானைப் போற்றிப் புகழ்கின்றேன்.

அல்ஹம்துலில்லாஹ்….

இந்த நேரத்தில்,  மறைந்த என் பெற்றோர்களையும், என் ஆசிரியப் பெருந்தகைகள் மற்றும் மறைந்த எங்கள் உஸ்மானிய்யா அரபுக்கல்லூரியின் முதல்வர் பட்டணம் ஹாபிஸா எனச் செல்லமாக அழைக்கப்படும் ஷாகுல் ஹமீது ஹஸ்ரத் கிப்லா அவர்களையும்,

ஓதும் காலங்களில் கிதாப் முதாஅலாவின் சில முறைகளை கற்றுத் தந்த மௌலவி, A.U. அபூபக்கர் உஸ்மானி, ஹயாத்கான் உஸ்மானி, ஆகியோரையும், பயான் சம்பந்தமான சில அணுகுமுறைகளை கற்றுத்தந்த எனது ஆசிரியர்கள், இல்யாஸ் உஸ்மானி, ஜலீல் அஹ்மத் உஸ்மானி மற்றும் ஷவ்கத் அலி உஸ்மானி ஆகியோரையும்,

தமிழகத்தின் பல்வேறு பகுதி ஆலிம்களின் கவனத்திற்கு இந்தச் சிறியோனின் வலைப்பூவை கொண்டு சென்ற சதக் மஸ்லஹி அவர்களையும், ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளைத் தந்த மலேசியா அலி மில்லத் ரியாஜி, அவர்களையும்,

நம்முடைய வலைப்பூவில் வெளியான கட்டுரைகளை புத்தகமாக வெளிவருவதற்கு முயற்சி மேற்கொண்டிருக்கிற திருப்பூர் ஹபீப் சிராஜி மற்றும் சமூக ஆர்வலர் களக்காடு சுகம் மருத்துவமனையின் நிறுவனர் ப. ஆதம் ஷேக் அலி அவர்களையும், புத்தகத்தின் அச்சுக்கோர்வையில் பல்வேறு பணிகளுக்கும் மத்தியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிற சமநிலைச் சமுதாயத்தின் ஆசிரியர் ஜாஃபர் பாக்கவி அவர்களையும்,

ஒவ்வொரு வாரமும் கட்டுரையை வாசித்துப் பார்த்து கட்டுரையின் நிறைகுறைகளை திறந்த மனதோடு எம்மோடு பரிமாறும் சிந்தனைச்சரம் பத்திரிக்கையின் ஆசிரியர் பீர் முஹம்மது பாக்கவி அவர்களையும், பயான் வெளியிடுவதற்கு லேப்டாப் வாங்கி கொடுத்த களக்காடு சுகம் மருத்துவமனையின் நிறுவனர் ப. ஆதம் ஷேக் அலி அவர்கள் மற்றும் களக்காடு, சிங்கம் பத்து இமாம் யூஸுஃப் பாக்கவி ஆகியோரையும்,

மற்றும் ஆரம்பத்தில் நம்முடைய பதிவுகளை அப்லோட் செய்து தந்த மேலப்பாளையம் செர்ரி நெட் சென்டர் காஸிம் அவர்களையும், தற்போது நம் வலைப்பூவின் டிஸைனராக இருக்கின்ற நாகர் கோவில் ஷாலோம் கம்ப்யூட்டர்ஸ் ஐசக் சுதாகரன் அவர்களையும்,

வலைப்பூவில் பதிவிட மும்முறமாக ஈடுபட்டிருக்கும் போது சில போது எம்முடைய காரியங்களை எம்மால் செய்யமுடியாத போது, எமக்காக அந்த பணிகளை சிரமம் பார்க்காமல் செய்யும் எம்மோடு பணிபுரியும் சக ஆலிம்களான அலிபாதுஷா ரஹ்மானி மற்றும் முஹம்மது அனஸ் கஷ்ஷாஃபி ஆகியோரையும்

பார்வையாளர்களான மேலான உங்களையும்…

நன்றிப்பெருக்கோடு நினைவு கூர்ந்து பார்க்கின்றேன்.

”ஜஸாஹுமுல்லாஹு கைரன் ஃபித்தாரைன்”

அல்லாஹ் இவர்கள் அனைவருக்கும் ஈருலகிலும் மேலான நற்கூலியை வழங்குவானாக! ஆமீன்!

அல்லாஹ் நாடினால்… எதிர்வரும் காலங்களிலும் எம் பணியை தொடர்ந்து செய்திட ஆவலுடன் இருக்கின்றேன்.

உடல் ஆரோக்கியத்தையும், கல்வியறிவையும் இந்தச் சிறியோனுக்கு வழங்கிட எல்லாம் வல்ல ரஹ்மானிடம் துஆ செய்யுங்கள்.

                         என்றென்றும் உங்கள் துஆவின் ஆதரவில்….
                                பஷீர் அஹ்மத் உஸ்மானி

இன்ஷா அல்லாஹ்..

இந்த வார ஜும்ஆவின் தலைப்பு…

இஸ்லாத்தின் ஒளியில்.. பேறு பெற்ற இளைஞர் சமூகம்!!

மனித வாழ்வின் முக்கியப் பருவம் இளமைப் பருவம். இப்பருவம் அளப்பரிய ஆற்றலைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

இளமைப் பருவம் என்பது இறைவனால் மனித சமூகத்திற்கு வழங்கப்பட்டிருக்கின்ற மகத்தான அருட்கொடையும் கூட.

இளமைப் பருவத்தை இஸ்லாமிய ஒளியில் திட்டமிட்டு மிகச் சரியாக பயன்படுத்துகிற இளைஞர் சமூகம் மாத்திரமே வாழ்விலும், சமூகத்திலும் வெற்றி பெற்றவர்களாக வலம் வர இயலும்.

இளமைப் பருவத்தை இஸ்லாத்தின் நிழலில் அழைத்துச் சென்றவனுக்கு வல்ல இறைவன் நாளை மஹ்ஷர் பெருவெளியில் தன் அரியாசணத்தின் கீழ் நிழல் தருவான் என இஸ்லாம் உயர்த்திக் கூறுகின்றது.

ஆனால், வாழ்வியல் வெற்றி, சமூக வெற்றி, மஹ்ஷர் வெற்றி என இந்த வெற்றி பெற்றவர்களின் பட்டியலில் சிலர் மட்டுமே இடம் பெற்றிருக்கின்றார்கள்.

பெரும்பாலானவர்கள் இடம் பெறவில்லை என்பதும், அழிவின் விளிம்பில் இருக்கிறார்கள் என்பதும் தான் வருத்தத்தை தருகிற நிதர்சனமான உண்மையாகும்.

எனவே, அழிவின் விளிம்பில் இருக்கிற இளைஞர்களை ஈடேற்றத்தின் பால் அழைத்து வருவதும், இருளில் தத்தளித்துக் கொண்டிருக்கிற இளைஞர்களை விடியலை நோக்கி பயணிக்க வைப்பதும், தோல்வியை ஆரத்தழுவிக் கொண்டிருக்கிற இளைஞர்களை வெற்றி பெற்றவர்களின் பட்டியலில் இடம் பெறச் செய்வதும் இன்றைய இஸ்லாமிய சமூகத்தின் இன்றியமையாத கடமையாகும்.

அதுவே, இன்றைய சமூகச் சூழலில் கட்டாயமும் கூட.

எனவே, நாம் இளைஞர் சமூகத்தை பாதுகாக்கிற பயணத்தை தொடங்கி விட்டோம் எனில், சீர்திருத்தம் செய்ய முயல்கிறோம் என்றால் அழிவின் விளிம்பில் இருக்கிற, இருளில் தத்தளித்துக் கொண்டிருக்கிற, தோல்வியை ஆரத்தழுவிக் கொண்டிருக்கிற இளைஞர் சமூகத்தை அடையாளம் கண்டு கொள்வது மிகவும் அவசியமாகும்.

இதோ அவர்களின் அடையாளங்களும்... சீர்திருத்த முறைகளும்...

1. கற்பனையில் வாழ்ந்து கொண்டிருக்கும் இளைஞன், இவன் அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கின்றான்.

இவனைக் கண்டு பிடிப்பது ஒன்றும் அரிதான காரியம் இல்லை. படித்த படிப்பிற்கான வேலையை மட்டுமே செய்வேன் என விடாப்பிடியாக இருந்து கொண்டு, வீட்டிற்கும், ஊருக்கும், சமூகத்திற்கும், நாட்டிற்கும் பயன் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பவன்.

இவன் வாழ்க்கை வெறும் கனவுகளிலும், கற்பனைகளிலும் மட்டுமே கரைந்து கொண்டிருக்கும்.

இவனுக்கு வாழ்க்கை என்றால் என்ன? என்றே தெரியாது. இத்தைகைய மனப் பாங்கு கொண்ட இளைஞர்கள் சமூகத்தில் நிறைந்தே காணப்படுகின்றார்கள்.

இவர்களுக்கான சீர்திருத்தங்களில் மிக முக்கியமானது இது தான்.



புதன்கிழமை இரவுக்குள் பதிவிடப்படும்

No comments:

Post a Comment