Thursday 5 December 2013

பாபரி மஸ்ஜிதும்,போராடும் முஸ்லிம் சமூகமும்!



இந்த தேசத்தின் உயர்வுக்கும், விடுதலைக்கும் உயிராலும், உடலாலும்,உணர்வுகளாலும் மாபெரும் அர்ப்பணிப்பை பங்களிப்பை அளித்த ஓர் ஒப்பற்ற சமூகமான முஸ்லிம் சமூகம் இன்று சமநீதி கேட்டு நீதிமன்ற வாயிற்படிகளில் காத்து நிற்கின்ற அவலங்களை உலக சமூகத்திற்கு உணர்த்த வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் முன்னுரையில் இந்தியக் குடிமகன் ஒவ்வொருவருக்கும்                    1) லிபர்ட்டிசுதந்திரம், 2) ஜஸ்டிஸ்சமநீதி, 3) பிரதர்கூட்சகோதரத்துவம், 4) ஈகுவாலிட்டிசமஉரிமை ஆகிய அடிப்படை உரிமைகள் தரப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.
முஸ்லிம் சமூகத்தை பொருத்தவரையில் இந்நான்கு உரிமைகளும் இந்த தேசத்தால் ஏட்டளவில் மட்டுமே உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளதே தவிர நடைமுறையில் இல்லை.
நம்முடைய இறையில்லமான பாபர் மஸ்ஜிதை இழந்து இன்றோடு 21 ஆண்டுகள் ஆகிவிட்டது. இது வரை நீதி கிடைத்தபாடில்லை. இடித்தவர்களும் தண்டிக்கப்படவில்லை.
லிபர்ட்டி
இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடாக இருப்பினும் குடிமக்களின் மத உணர்வுகளை மதித்து அவர்கள் தாங்கள் விரும்பிய எந்த ஒரு மதத்தையும் பின்பற்றும் உரிமை உண்டு என இந்திய அரசியலமைப்புச்சட்டத்தின் 25 முதல் 28 வரையிலான ஷரத்துக்களின் வழியாக உரிமை வழங்கி யுள்ளது. எனவே ஒவ்வொரு மனிதனும் தான் விரும்பிய மதத்தை பின்பற்ற அவனுக்கு சர்வ சுதந்திர உரிமை உண்டு. மேலும், ஒருவனுக்கு மற்றவனது மதத்தை பழிக்கவோ, அவமதிக்கவோ உரிமை கிடையாது. அப்படி ஒருவன் அதைச் செய்தான் என்றால் இந்திய தண்டனைச் சட்டத்தின் படி தண்டிப்பதற்குரிய குற்றங்களாகும். மதம் சம்பந்தமான குற்றங்களை இந்திய தண்டனைச் சட்டமானது தனது 295 முதல் 298 வரையிலான 5 சட்டப்பிரிவுகளின் வாயிலாக விளக்குகிறது. அந்த 5 சட்டப்பிரிவுகளையும் பின்வரும் மூன்று தலைப்புகளின் கீழ்வகைப்படுத்துகிறது.
(offences relating to religions) மதம் சம்பந்தமான குற்றங்கள்     1. வழிபாட்டிற்குரிய இடங்களில் அல்லது பொருள்களின் புனிதத்தன்மைக் கெடுத்தல். (defilement of places of worship or objects of veneration)  பிரிவுகள் 295 மற்றும் 297.            2.மத உணர்வுகளை அவமதித்தல், (outraging the religious feelings) பிரிவுகள் 295-a மற்றும் 298.                            3.மதக் கூட்டங்களுக்கு இடையூறு விளைவித்தல், (disturbing religious assemblies) பிரிவு 296.
             நூல்:இந்திய தண்டனைச் சட்டம், பக்கம்:370,371.
ஆனால்,முஸ்லிம் சமூகம் சுதந்திர இந்தியாவிலிருந்தே மதரீதியான பாகுபாட்டுடனே நடத்தப்பட்டு வருகிறார்கள். உதாரணமாக, பொதுசிவில் சட்டம், மதமாற்றதடைச் சட்டம் என முஸ்லிம்களின் மத உரிமையை, சுதந்திரத்தை பறிப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டு வருவதை நாம் கண்டு வருகிறோம். இன்னும் சொல்லப்போனால் ஒரு பள்ளிவாசல் கட்டுவதற்கு ஓராயிரம் நிபந்தனைகளை கடந்தாக வேண்டியுள்ளது. எனவே மதரீதியான சுதந்திரத்தைப் பொருத்தவரையில் அது வெறும் உத்தரவாக மட்டுமே உள்ளதே தவிர உத்தரவாதமாக இல்லை`
ஜஸ்டிஸ்
பன்நெடுங்காலமாகவே இந்திய தேசத்தின் நீதித்துறையின் செயல்பாடு கவலை அளிப்பதாகவே அமைந்துள்ளது. சிறுபான்மை முஸ்லிம் சமூக மக்களுக்கு எதிரான நிலைப்பாடு,வழக்குகளின் முடிவில் வழங்கப்படும் தண்டனை,என அத்தனையும் முஸ்லிம்களின் நலனுக்கு எதிராகவே அமைந்திருப்பதைக் காணமுடிகிறது.
நீதி வழங்கும் நீதிபதிகள் சட்டப்புத்தகத்தை பார்த்தும், சாட்சிகளை விசாரித்தும்,ஆய்வுசெய்தும் தீர்ப்பளிக்கின்றார்களா? இல்லை மனம் போன போக்கில் தீர்ப்பளிக்கிறார்களா? என்பதை முஸ்லிம்களுக்கெதிரான வழக்குகளில் அவர்கள் அளித்த தீர்ப்புகளே சான்றுபகர்கின்றன.
தீர்ப்பு 1
1986-ல் பாபர் மசூதி வழக்கில் சர்ச்சைக்குரிய இடத்தில் பூஜை நடத்த அனுமதி வழங்கி தீர்ப்பளித்த பைசலாபாத் நீதிபதி கே.எம்.பாண்டே பதவியிலிருந்து ஓய்வு பெற்றபின் 1991-ல் வெளியிட்ட தம் சுயசரிதையில் தான் எந்த அடிப்படையில் அந்த தீர்ப்பை வழங்கினேன் என்று குறிப்பிடும் போதுபூட்டியிருந்த கோயிலின் கதவை பக்தர்களின் தரிசனத்திற்குத் திறந்து விடுவதற்கான உத்திரவை பிறப்பித்த அந்த நாளன்று , எனது நீதிமன்ற அறையின் மேற்கூரையில் கொடிமரத்தைப் பற்றியபடி ஒரு கருப்புக்குரங்கு அமர்ந்திருந்தது. அன்றைய தினம் தீர்ப்பைத் தெரிந்துகொள்ள நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த பைசலாபாத்,அயோத்தி நகரங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அந்தக் குரங்குக்கு வேர்க்கடலை, பழம் முதலானவற்றைக் கொடுத்தனர். அந்தக் குரங்கோ அதைத்தொடக்கூட இல்லை. மாலை 4.40-க்கு நான் தீர்ப்பை படித்தவுடன் அந்தக்குரங்கு அங்கிருந்து சென்றுவிட்டது. பின்னர் எனது பாதுகாப்பிற்காக வந்திருந்த மாவட்ட ஆட்சியரும், போலீஸ் கண்காணிப்பாளரும் என்னை எனது பங்களாவுக்கு அழைத்துச் சென்றனர்.பார்த்தால், எனது பங்களாவின் தாழ்வாரத்தில் அந்தக்குரங்கு. எனக்கு ஆச்சர்யம் தாங்கமுடியவில்லை. நிச்சயமாக ஒரு தெய்வீக சக்திதான் அந்தக் குரங்கு என்பதை உணர்ந்துகொண்டு அதனை வணங்கினேன்.
                     நூல்: புதிய கலாச்சாரம், டிசம்பர் 2010
செப்டம்பர்,30,2010 அன்று அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தரம் வீர் சர்மா, எஸ்.யூ.கான், சுதிர் அகர்வால் ஆகியோர் அளித்த அயோக்கியத்தனமான தீர்ப்பின் பிண்ண்ணியிலும் அந்தக் கருங்குரங்கு இருந்திருக்க வேண்டும். எனினும்,குரங்குகளின் எண்ணிக்கை ஒன்றா?மூன்றா? என்ற தெய்வீக உண்மை, பின்னாளில் இந்த நீதிபதிகள் சுய சரிதை எழுதும் போதுதான் நமக்குத் தெரிய வரும்.
தீர்ப்பு 2
அப்சல் குருவின் தூக்கு தண்டனை, இதில் ஆயிரமாயிரம் கேள்விக் கணைகள் தொக்கி நிற்கின்றன.                  ஜீ நியூஸ் நிறுவனம் நாடாளுமன்ற தாக்குதலில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்டு அப்சல் குரு ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கும் போது நாடாளுமன்ற தாக்குதல் குறித்த திரைப்படம் ஒன்றை எடுத்தது. திரைப்படத்தின் பெயர்டிசம்பர் 13” வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது  இப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தில் தாக்குதலில் ஈடுபட்ட எல்லோருக்கும் தூக்குதண்டனை தீர்ப்பாக வழங்கப்படுகின்றது.           அந்த திரைப்படத்தில் தூக்கு தண்டனையே கீழ் நீதிமன்றத்தால் தீர்ப்பாக வழங்கப்பட்டது.    இப்படித்தான் தீர்ப்பு இருக்க வேண்டுமென திரைப்படம் நீதிமன்றங்களுக்கு அழுத்தங்களைத் தந்தது. மேலும்,அது தான் மக்கள் எதிர் பார்க்கும் தீர்ப்பு என்றது திரைப்படம். இப்படி படம் எடுத்தது தவறு, அதை திரையிட்டது தவறு, உடனே தடைசெய்ய வேண்டும் என பாதிக்கப்பட்டவர்களின் தரப்பு டெல்லி நீதி மன்றத்தில் முறையிட்டனர். டெல்லி நீதிமன்றம் திரைப்படத்தை தடை செய்தது. படம் எடுத்தவர்கள் உச்ச நீதிமன்றம் சென்றனர். நீதிபதிகள் ஊடகங்களின் அழுத்தங்களுக்கெல்லாம் ஆளாகமாட்டார்கள் எனக்கூறி  தடையை அகற்றியது. திரைப்படம் தங்கு தடையின்றி ஓடியது. இறுதியில் திரைப்படத்தில் தரப்பட்ட தண்டனையே நாடாளுமன்ற தாக்குதலில் ஈடுபட்டார்கள் என குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு தரப்பட்டது.                 ஆனாலும் அவர்கள் தான் தாக்குதலில் ஈடுபட்டார்கள் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. கீழ் நீதிமன்ற நீதிபதி திங்காரா கங்காரா என்பவரால் வழங்கப்பட்ட இந்த மொத்தத் தீர்ப்பும் பின்னாளில் உயர் நீதிமன்றத்தால் பல திருத்தங்களுக்கும், தலைகீழ் மாற்றங்களுக்கும் உள்ளாகியது. திரைப்படத்தில் காட்டப்பட்டது போல் நாடாளுமன்ற தாக்குதலின் மூளை என குற்றம் சாட்டப்பட்ட டெல்லி பல்கலை பேரா. எஸ்..ஆர்.ஜீலானி அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பெற்றது.         ஆனால், உயர் நீதிமன்றம்  அவரை விடுவித்தது. உச்ச நீதிமன்றத்தின் அநீதியும் அந்த திரைப்படத்தின் தாக்கமும் என்ன விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை நந்திதா ஹாக்ஸர் என்ற மூத்த வழக்கறிஞர் இப்படிக் குறிப்பிடுகின்றார்.
The supreme court however vacatet the stay on grounds that judges could not be influenced. It failed to appreciate how such film are responsible for creating a climate of fear and mistrust. Today even post acquittal geelani cannot get a house on rent. His children find it har to lead a normal life.(source:13 december a reader with on introduction by arunthathi rai page no:9) “அதாவது உச்ச நீதிமன்றம் அந்த தடையை நீக்கிற்று. நீதிபதிகள் ஊடகங்களின் பாதிப்புகளுக்கு உள்ளாகமாட்டார்கள் என காரணம் சொன்னது. அது போன்ற திரைப்படங்கள் மக்களிடையே அச்சத்தையும், அவ நம்பிக்கை யையும் ஏற்படுத்துவதில் பொறுப்பு வகிக்கின்றன என்பதை கண்டு கொள்ள உச்ச நீதிமன்றம் தவறிவிட்டது. இப்போது ஜீலானி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால், அவர் ஒரு சாதாரண வாழ்க்கையை மக்கள் மத்தியில் வாழ்வதற்கு மிகவும் கஷ்டப்படுகிறார். அவருக்கு ஒரு வாடகை வீடு கூட கிடைப்பதில்லை. அவருடைய குழந்தைகளும் ஒரு சராசரி வாழ்க்கையை நடத்திட முடிவதில்லை.
                                   நூல்: ரீடர் , பக்கம்:9
தீர்ப்பு 3
1997,தில்லி, ரோஸ்டக், சோனிபட்,காஸியாபாத், ஆகிய பகுதிகளில் 20 நாட்டு குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. பயங்கரவாத குற்றச்சாட்டின் பேரில் 18 வயது ஆமிர் கைது செய்யப்பட்டார். 14 ஆண்டுகள் கழித்து அவர் நிரபராதி என நீதிமன்றம் விடுதலை செய்தது. ஆனால், கைது செய்யப்பட்ட மூன்றே ஆண்டுகளில் அவரின் தந்தை அவமானம் தாங்காமல் இறந்துபோனார். அவரின் தாயார் பக்கவாதத்தில் முடங்கிப்போனார். ஆமிரின் உலகமே நொருங்கிப் போனது. இதற்கான நிவாரணத்தை தருவது யார்?
ஒன்று குரங்கைப்பார்த்தோ,அல்லது சினிமாவைப் பார்த்தோ தீர்ப்பு சொல்வார்கள். அல்லது அநியாயமாகவோ தீர்ப்பு வழங்குவார்கள்.
ஆக மொத்தத்தில் சமநீதி என்பது முஸ்லிம்களைப் பொருத்தவரையில் இந்த தேசத்தில் கானல் நீர் போன்றது.
பிரதர்கூட்
ஒருகாலம் இருந்தது அப்போது என் சகோதர சமுதாயம் எம்மை மாமன் மச்சானாகவும், அண்ணண் தம்பிகளாகவும் பாவித்து வந்தது, ஆனால், எங்கிருந்தோ வந்தவர்களெல்லாம் இங்கே வாழ முடிகிறது. என் சகோதரன் ஜீலானி முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக வீடுகேட்டு வீதி வீதியாய் அலைகிறான். எங்கே சென்றது சகோதரத்துவம்?
கோவை கலவரம்,மும்பை கலவரம், குஜராத் கலவரம், சூரத் கலவரம், முஸாஃபர் நகர் கலவரம் என அத்தனை கலவரங்களிலும் முஸ்லிம்களின் சொத்தை சூறையாடியது, முஸ்லிம்களை கொன்று குவித்தது, முஸ்லிம் பெண்களின் கற்பைச் சீரழித்தது என எல்லாம் அருகே வசித்த, நெருங்கிப் பழகிய, உறவு கொண்டாடியவர்கள் தானே! எங்கே சென்றது சகோதரத்துவம்? நம்பியவர்கள் தானே மோசம் செய்தார்கள்.
ஈகுவாலிட்டி
முஸ்லிம் சமூகம் இந்த தேசத்தில் பெற்றிருக்கிற உரிமையின் லட்சணத்தை நீதியரசர் ராஜீந்தர சஜ்ஜார் தமது அறிக்கையில்பிற்படுத்தப்பட்ட மக்கள் அடைந்திருக்கின்ற வளர்சியைக் கூட இந்த முஸ்லிம் சமூகம் பெறவில்லை என தோலுரித்துக்காட்டினார். அத்தோடு நின்று விடாமல் இந்த தேசம் முஸ்லிம் சமூகத்தை சிறைகளில் நிரப்பி வருவதை கவலையோடு இந்த தேசத்தில் 13 சதவீதம் வாழும் சிறுபான்மைமுஸ்லிம் சமூகம், சிறை எண்ணிக்கையில் 21 சதவீதமாக உயர்ந்து நிற்பது வேதனையான விஷயம்என்று தெரிவித்திருந்தார். இந்தியாவில் மொத்தம் உள்ள சிறைச்சாலைகளின் எண்ணிக்கை 1382. மொத்த கைதிகளின் எண்ணிக்கை 3,72,296. இதில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 21% ஆகும்.
முஸ்லிம்களை சிறைக்கு அனுப்புவதில் மதவாத பிஜேபி அரசு, மதசார்பற்ற காங்கிரஸ் அரசு என்ற வேறுபாடு இல்லைநெடுங்காலம் இடது சாரிகளின் கோட்டையாக இருந்த மேற்குவங்கத்தில் கூட கிட்டத்தட்ட சிறை கைதிகளின் எண்ணிக்கையில் சரிபாதி முஸ்லிம்கள் தான். கடந்த ஆண்டு இந்தியா டுடே பத்திரிக்கை மேற்கொண்ட ஆய்வின் முடிவில்இந்தியாவில் வாழும் முஸ்லிமாக இருந்தால் நீங்கள் சிறையில் இருக்கும் அபாயம் இரண்டு மடங்கு அதிகம் என்று தெரிவித்தது.
                     நூல்:இந்தியா டுடே டிசம்பர் 26, 2012
ஆனால்,1992 பாபர் மசூதியை இடித்தவர்கள், அதன் தொடர்ச்சியாக நாட்டில் கலவரங்களை தூண்டியவர்கள் என இன்று வரை காவல்துறையால் கைது செய்யப்படவில்லை. நாட்டில் கவுரவுமாக நடமாடிக்கொண்டிருக்கிறார்கள். நீதிமன்றமும் மவுனமாக இருந்து கொண்டிருக்கிறது.
இது வரை இந்த தேசத்தில் நடைபெற்ற அத்தனை கலவரங்களிலும் உண்மைக் குற்றவாளிகள் யார் என்பதைக் கண்டுபிடித்துக் கூறிய ஸ்ரீ கிருஷ்ணா விசாரணைக் கமிஷன், கோபால் கமிஷன், மிஷ்ரா கமிஷன், லிபர்ஹான் கமிஷன், சச்சார் கமிஷன், என அத்தனை கமிஷன்களும் கொடுத்த அறிக்கைகளும் பிரதமர் அலுவலகத்தில் தான் குறட்டை விட்டு தூங்கிக்கொண்டிருக்கின்றன. இந்நாட்டில் நடை பெற்ற நடைபெறுகின்ற எந்தக் குற்றச் செயல்களுக்குப் பின்னாலும் முஸ்லிம்கள் தாமாக முன் வந்து பங்கு பெற வில்லை. என்பது தான் அனைத்து கமிஷன்களின் அறிக்கை யிலும் இடம் பெற்றிருக்கிறது.
              நூல்: சண்டே இந்தியன், அக்டோபர், 3, 2011.
  நல்ல நேரம் சங்கர ராமன் கொலை இப்போது நடைபெற வில்லை. இல்லையென்றால் இதிலும் பிலால் மாலிக்கிற்கும், பன்னா இஸ்மாயீலுக்கும், போலீஸ் ஃபக்ருத்தீனுக்கும் தொடர்பு உள்ளதாக காவல்துறை களங்கம் கற்பித்திருக்கும்.
ஜே.டி எஸ்.-(ஜாமிஆ ஆசிரியர் ஒற்றுமைச் சங்கம்) –யின் தலைவர் மணீஷா ஷேத்தி என்பவர் கூறும் போது, ”சிறுபான்மையினரைக் காக்கும் வகையில் சீர்திருத்தம் வராவிட்டால் சிறைகளில் அவர்களது எண்ணிக்கை பெருகும்உண்மைதான் சட்டங்களில் மாத்திரமல்ல இந்திய தேசத்தின் அரசியல் தலைவர்களின் நடவடிக்கையிலும் சீர் திருத்தம் வரும்.
முஸ்லிம் சமூகம் என்ன செய்ய வேண்டும்?
இந்திய தேசத்தில் முஸ்லிம்களுக்கெதிரான இந்த நிலைப்பாட்டில் முஸ்லிம் சமூகம் மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் என்ன?
1.விழிப்புணர்வோடு செயல் பட வேண்டும்.     2.விவேகத்தோடு செயல் பட வேண்டும்.                3.ஒரே தலைமையின் கீழ் ஒன்று பட்டு செயல் பட வேண்டும். 4.இறைவனின் மீது நம்பிக்கையோடு இருக்க வேண்டும்.
எல்லாம் சரி, இது இந்திய தேசமல்லவா? இங்கே எப்படி இது சாத்தியமாகும்.
நமக்கெல்லாம் தெரிந்த சரித்திரம் தான் மக்காவில் காஃபிர்களின் தொல்லை தாங்க முடியாமல் அபீ சீனியாவிற்கு ஹிஜ்ரத் சென்ற முஸ்லிம்களை அங்கேயும் சென்று துரத்திவிட மக்காவின் தலைவர்கள் அப்துல்லாஹ் இப்னு அபீ ரபீஆ, அம்ருப்னுல் ஆஸ் என்ற இருவரையும் அனுப்பி வைத்தனர்அது முஸ்லிம் நாடும் இல்லை. ஆகவே என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்க வில்லை நம் முன்னோர்களான ஸஹாபாக்கள். ஜஅஃபர் பின் அபீ தாலிப் {ரலி} தலைமையில் நஜ்ஜாஷி மன்னரிடம் இஸ்லாமிய மார்க்கத்தின் மாண்புகளையும், தாங்கள் அந்த மார்க்கத்தால் அடைந்த கீர்த்தியையும் எடுத்துச் சொல்லி நீதி வழங்குமாறு வேண்டி நின்றார்கள். இறுதியில் நஜ்ஜாஷி மன்னரால் பாதுகாப்பும் வாழும் உரிமையும் அடைந்தார்கள்.
மேற்கூறிய சரித்திரத்தில் பிரச்சனைகளின் போது ஒரே தலைமையின் கீழ் ஒன்றிணைந்து,ஒருங்கிணைந்து தங்களின் விழிப்புணர்வையும்,விவேகத்தையும் காட்டினார்கள். பிரச்சனைகளில் இருந்து மீளவும் செய்தார்கள்.
பைத்துல் முகத்தஸை சிலுவை போராட்ட வீரர்களிடமிருந்து மீட்டெடுத்த சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி {ரஹ்} அவர்களின் விவேகத்தையும், இறை நம்பிக்கையையும் இந்த சமூகம் கையாள வேண்டும்.
யர்மூக் யுத்தத்தில் 3 லட்சம் எதிரிகளை விரண்டோடச் செய்த காலித் பின் வலீத் {ரலி} அவர்களின் வீரத்தையும் இந்த சமூகம் கையாள வேண்டும்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக இறை நம்பிக்கை கொண்ட எந்த ஒரு சமூகத்திற்கும் அல்லாஹ் வெற்றியை பரிசாக அளிக்காமல் இருந்ததில்லை என்கிற நம்பிக்கை யோடு கீழ் காணும் 2-ம் அத்தியாயத்தின் 249-ம் வசனத்தைஎத்தனையோ சின்னஞ்சிறு கூட்டம் அல்லாஹ்வின் உதவி கொண்டு பெரும் பெரும் கூட்டங்களை வெற்றி கொண்டிருக்கிறது.” ஓதிப் பார்த்துக் கொள்ளுங்கள்.
வீழ்த்திடலாம் என்று நினைக்கிற அனைவரிடமும் உரக்கச் சொல்வோம். எங்களை ஒரு போதும் வீழ்த்திட முடியாது. ஏனெனில் நாங்கள் அல்லாஹ்வின் கூட்டம்.
யானைப் படைகளை அபாபீல் எனும் சிறிய பறவையைக் கொண்டு அழித்த அல்லாஹ் பாபரி மஸ்ஜிதை இடித்த கயவர்களை, ஃபாஸிஸ பயங்கரவாதிகளை அழித்திட மீண்டும் ஒரு அபாபீல் கூட்டத்தை அனுப்புவான்` நம்பிக்கையுடன் முஸ்லிம் சமூகம்!
                    வஸ்ஸலாம்!

                                               




  

Thursday 28 November 2013

குறை காணும் குணத்தை விட்டொழிப்போம்!


     
     குறை காணும் குணத்தை விட்டொழிப்போம்!

நிறைவானவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே!

ஒரு சிலர் எப்போதும் பிறரைப் பற்றிக் குறை கூறிக் கொண்டேஇருப்பார்கள்.                                             நிறைவான எந்த விஷயங்களைக் கண்டாலும் அவர்களின் கண்களுக்கு அது மிகச் சாதாரணமாகவே தோன்றும்.
எல்லோரும் குறை உள்ளவர்கள் தான். குற்றம் செய்யாத மனிதர்கள் என்று யாரும் இவ்வுலகத்தில் கிடையாது.
பிறகெப்படி நாம் ஒருவரை யொருவர் குறை பேசுகிறோம்? இதற்கான விடையை ஓர் அறிஞன் இப்படிச் சொல்வான்.  1.தன்னை விட ஒரு காரியத்தை வேறு ஒருவர் திறம் பட செய்து முடிக்கிற போதும்,                              2.ஒரு மனிதரிடம் பொறாமைக் குணம் அதிகரிக்கிற போதும், 3.பிற மனிதன் தன் கடமைகளை ஒழுங்காக நிறைவேற்றுகிற போதும்,
4.தன்னை ஒருவர் மிக உயர்வாக கருதுகிற போதும்,
அங்கே பிறரை குறை காணும் குணம் குடி கொண்டு விடுகிறது.
பிறகு அதைத் தூக்கிக் கொண்டு தினசரி பத்திரிக்கையைப் போன்று அலையோ அலையென்று அலைந்து திரிகின்றோம்.
திருப்தி படுத்த முடியாது
லுக்மான் {அலை} அவர்கள் ஒரு நாள் தன் மகனுடன் ஓரிடத்திற்கு பயணம் மேற்கொண்டார்கள்.         தன்னோடு பலகீனமான ஒரு கோவேறுக் கழுதையையும் அழைத்துச் சென்றார்கள். வழியில் சில மக்கள்  பேசிக் கொண்டனர். “கழுதையிருக்க ஏன் இருவரும் நடந்து செல்கின்றனர்?” என்று.
மகன் தந்தை லுக்மான் {அலை} அவர்களிடம் நாம் இருவரும் முறை வைத்து பயணம் செய்வோம் என்றார். முதலில் லுக்மான் {அலை} அவர்கள் பயணமானார்கள். சிறிது தூரம் சென்ற பின் வழியில் சில மக்கள் பேசிக்கொண்டனர். “சின்னப் பையனை நடக்க விட்டு இரக்கம் இன்றி வாகனத்தின் மீது பயணம் செய்கின்றாரே? இவரெல்லாம் ஒரு பெரிய மனிதரா?” என்று.
வாகனத்திலிருந்து கீழிறங்கி தன் மகனை அமர வைத்து லுக்மான் {அலை} அவர்கள் நடந்து சென்றார்கள். சிறிது தூரம் தான் சென்றிருப்பார்கள்.மீண்டும் வழியில் சில பேர்,”தந்தைக்கு மரியாதை செய்யாத இந்த சிறுவனை என்ன வென்று சொல்வது?” என்று பேசிக் கொண்டனர்.
வேறு வழியின்றி இருவரும் கழுதை மீதேறி அமர்ந்து பயணம் மேற்கொண்டனர்.  சிறிது தூரம் தான் சென்றிருப் பார்கள். மீண்டும் வழியில் சிலர் நின்று கொண்டு “பலகீனமான இந்தக் கழுதையை தந்தையும்,மகனும் சேர்ந்து இப்படி கொடுமை செய்கிறார்களே?” என்று பேசிக்கொண்டனர்.
இப்போது லுக்மான் {அலை] அவர்களும் அவர்களது மகனும் மீண்டும் முன்பு போலவே  நடந்து சென்றனர்
இது போல எப்போதும் சிலர் குறை கண்டுபிடித்துக் கொண்டே இருப்பார்கள். நம்முடைய எந்த செயலாலும் இது போன்றவர்களை திருப்தி படுத்தவே முடியாது.
மிக அருகில் நரகம்
அறிஞர் ஸஅதீ என்பவரின் மகன் இரவின் கடைசி நேரத்தில் இனிய குரலில் குர்ஆன் ஓதும் பழக்கமுடையவராய் இருந்தார். அவரின் தந்தை ஸஅதீ அவரருகே அமர்ந்து ரசித்துக் கேட்டுக் கொண்டிருப்பார். ஒரு நாள் குர்ஆன் ஓதிக் கொண்டிருக்கும் போது “ நான் எவ்வளவு இனிமையாக குர்ஆன் ஓதிக் கொண்டிருக்கிறேன். நீங்களும் எவ்வளவு அருமையாக அருகே அமர்ந்து ரசித்துக் கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்.                              தூங்கிக் கொண்டிருக்கும் தம் குடும்பத்தார்களை நோக்கி “பாக்கியம் கெட்டவர்கள் தூங்கிக் கொண்டிருக்கின்றார்கள்” என்றார். உடனே அறிஞர் ஸஅதீ  தம் மகனை நோக்கி “ குர் ஆனை மூடிவிட்டு, போய் தூங்கு. பிறரை குறை கூறுகிற நோக்கில் நீ குர்ஆனை ஓதினாய் என்றால் ஓதிய நன்மை உன்னை சுவனத்தில் சேர்க்கும்முன், நீ கண்ட குறை உன்னை அதிவேகத்தில் நரகில் தள்ளி விடும்” என்று கண்டித்தார்கள்.                                     இன்றும் நம் சமூகத்தில் நாம் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.  பள்ளிவாசலில் தொழ நுழைந்ததிலிருந்து தொழுது விட்டு வெளியே செல்லும் வரை முஅத்தின்,இமாம் என்று ஆரம்பித்து தலைவர்,செயலாளர்,முதல்வீடு,மூன்றாம்தெரு என்று தொடர்ந்து,வெளிநாட்டில் உள்ளவன் வரை குறை பேசி திருப்தி படுபவர்கள் தான் எத்தனை பேர்?             தொழுத நன்மைகளை உடனடியாக அழித்துவிட்டு கூடுதலான பாவ அழுக்காறுகளை சுமந்து வருகின்றனர்.
கடுமையை உணர்வோம்
அன்னை ஆயிஷா {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:  ”நான் நபி {ஸல்} அவர்களிடம் ஒரு முறை கூறினேன்: “ஸஃபிய்யா “இப்படி” இருக்கிறார் என்னும் குறையே அவருக்குப் போதுமானதாகும்.” {அதாவது ஸஃபிய்யா குள்ளமானவர் என்பது அவருக்கு ஒரு பெரும் குறையாகும்} அது கேட்ட நபி {ஸல்} அவர்கள் “ஆயிஷாவே! நீஎவ்வளவு மாசு படிந்த சொல்லை உன் வாயினால் வெளிப்படுத்திவிட்டாய் எனில், அதனை கடலில் கரைத்து விட்டால் அது கடல் நீர் முழுவதையும் அசுத்தப்படுத்தி இருக்கும்” என்று என்னிடம் கூறினார்கள்.                                
                               நூல்:மிஷ்காத், பக்கம்:414    
அல்லாஹ் கூறுகின்றான்:                            “இறை நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். மேலும் நீதி {நேர்மை} யான சொல்லை மொழியுங்கள்.                       அல்குர்ஆன்:33:70
எப்போதும் குறை கண்டுபிடித்துக் கொண்டிருப்பவர்களிடம் நீதி,நேர்மை என்பதை துளி அளவு கூட காணமுடியாது.
முன்மாதிரியின் முன்மாதிரி
அனஸ் {ரலி} அவர்கள் அறிவிக்கிறார்கள்:               “நான் நபி {ஸல்} அவர்களுக்கு ஒன்பது ஆண்டுகள் பணிவிடை செய்துள்ளேன். ஒரு நாளும் நான் செய்த ஒரு செயலை சுட்டிக்காட்டி “ஏன் இவ்வாறு செய்தாய்?” என என்னிடம் பெருமானார் {ஸல்} அவர்கள் கடிந்து கொண்டது கிடையாது. ஒரு போதும் என்னைக் குறை கூறியதும் கிடையாது.“சீ”என்று கூட சொன்னது கிடையாது.” நூல்:புகாரி.
அன்னை ஆயிஷா {ரலி} அவர்கள் அறிவிக்கிறார்கள்:         “நபி {ஸல்} அவர்கள் ஒரு நாளும் உணவை குறை கூறியது கிடையாது.பிடித்திருந்தால் உண்ணுவார்கள். இல்லையேல் உண்ணாமல் விட்டுவிடுவார்கள்.”             நூல்: புகாரி ”நபி {ஸல்} அவர்களின் சொல்லும், செயலும் தானே நமக்கு முன் மாதிரி! நாமும் அப்படித்தானே செயல் பட வேண்டும்?.                   
சீர் குலைக்கும் ஆயுதம்
இஸ்லாத்தில் ஏகத்துவத்திற்கு அடுத்த அந்தஸ்தைப் பெறுவது சகோதரத்துவம் ஆகும்.   ஏனெனில்,      அல்லாஹ் கூறுவான்:
              (إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ (الحجرات:10
“இறை நம்பிக்கையாளர்கள், ஒருவர் மற்றவருக்குச் சகோதரர் ஆவார்கள். எனவே, உங்கள் சகோதரர்களுக்கிடையே தொடர்புகளைச் சீர்படுத்துங்கள்.           அல்குர்ஆன்:49:10
இந்த சகோதரத்துவத்தை சீர் குலைக்கும் வலிமையான ஆயுதங்கள் எவை என்பதை அடுத்தடுத்த வசனங்களில் அல்லாஹ் தெளிவுபடுத்தும் போது,
1.பிறரை பரிகாசம் செய்ய வேண்டாம்.               2.பிறரை குத்திப் பேச வேண்டாம்.                    3.பிறரை பட்டப் பெயர்களைச் சூட்டி அழைக்க வேண்டாம். 4.பிறரின் மீது தவறான எண்ணங்கள் கொள்ள வேண்டாம்.  5.பிறரின் குறைகளை துருவித்துருவி ஆராய வேண்டாம்.   6.பிறரைப் பற்றி புறம் பேச வேண்டாம்.                    7. பிறரை விட தம்மை உயர்வாகக் கருத வேண்டாம்.
பார்க்க: அல்குர்ஆன்: 49:11முதல்13வரை உள்ள வசனங்கள். அல்லாஹ் சொன்ன வலிமையான ஆயுதங்களில் பிறரின் குறைகளை ஆராய்வதும் ஒன்றாகும்.
எப்போது ஓர் மூஃமினிடத்தில் மேற்கூறிய பண்புகளில் ஏதேனுமொன்று குடி புகுந்துவிடுமோ அப்போதே சகோதரத்துவம் சீர்குலைந்து விடும்.
நபிகளாரின் கண்டிப்பு
மக்கா வெற்றியின் போது நபி {ஸல்} அவர்களின் வருகையையும்,முஸ்லிம்களின் எழுச்சியையும் கண்டு பயந்துபோய் இக்ரிமா எமனுக்குச் சென்று விட்டார். இக்ரிமா வேறு யாருமல்ல. அபூஜஹ்லின் மகன், இவரும் தந்தையைப் போலவே இஸ்லாத்திற்கெதிராக கடும் பகமை கொண்டிருந்தார்.
இவரின் மனைவி உம்மு ஹக்கீம் பின்த் ஹாரிஸ் {ரலி} அவர்கள் எமனுக்குச் சென்று அழைத்து வந்தார்கள். பின்பு மாநபியின் சபைக்கு அழைத்து வந்தார்கள். தூரத்தில் இக்ரிமா வருவதைக் கண்ட பெருமானார் {ஸல்} அவர்கள் “வெகு தூரத்திலிருந்து சிரமத்துடன் பயணித்து வரும் பயணியே, வாருங்கள்! தங்கள் வருகை நல்வரவாகட்டும்!” என்று கூறி தம் அருகே அமர வைத்தார்கள்.
இக்ரிமா கேட்டார்: இப்போது நான் என்ன சொல்ல வேண்டும்.?                                             நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: ஷஹாதத் சொல்லுங்கள். உடனடியாக ஷஹாதாவை மொழிந்து இக்ரிமா முஸ்லிமானார்கள். பின்னர் நபி {ஸல்} அவர்கள் ”இக்ரிமா.. உமக்கு என்ன வேண்டும் கேளுங்கள். எது கேட்டாலும் தருகிறேன்.” என்றார்கள்.
இக்ரிமா {ரலி} அவர்கள் சொன்னார்கள்:       “அல்லாஹ்வின் தூதரே! ஆரம்பமாக என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும். உங்கள் மீதான பகைமையால் உங்களை நான் கடுமையாக ஏசியிருக்கிறேன். போர்களில் கலந்து கொண்டு கண்மூடித்தனமாக நான் நடந்து கொண்டிருக்கிறேன். இவை அத்தனைக்காகவும் என்னை மன்னித்து விடுங்கள்.”  அப்போது நபி {ஸல்} அவர்கள் தம் இரு கைகளையும் வானை நோக்கி உயர்த்தி “யா அல்லாஹ்! இந்த இக்ரிமா எனக்கு எதிராக நடத்திய போருக்காக, என்மேல் கொண்டிருந்த பகைமைக்காக, என்னை ஏசியதற்காக, இவை அத்தனைக்காகவும் இவரை மன்னித்துவிடு” என்று துஆ செய்தார்கள்.           இதனைக் கேட்ட இக்ரிமா {ரலி} அவர்கள்:                   “ அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இந்த மார்க்கத்தை தடுப்பதற்காக எவ்வளவு பொருளாதாரத்தை செலவு செய்தேனோ, அதைவிட பன்மடங்கு இந்த மார்க்கத்தின் உயர்விற்காக நான் செலவு செய்வேன். இந்த மார்க்கத்திற்கெதிராக எவ்வளவு போர்களில் நான் கலந்து கொண்டேனோ, அதைவிட பன்மடங்கு இந்த மார்க்கத்தின் உயர்விற்காக இறைவனின் பாதையில் நான் போர் செய்வேன்.” என முக மலர்ச்சியோடு கூறினார்கள்.  
 மாநபி {ஸல்} அவர்கள், இக்ரிமா {ரலி} அவர்கள் தம்மை நோக்கி சபைக்குள் நுழைகிற போதே அவரின் நோக்கத்தை அறிந்து கொண்டு “அபூஜஹ்லின் மகன் இக்ரிமா நம்பிக்கை கொண்டவராக உங்கள் முன் வருகிறார். அவரைக் கண்டால் அவரின் தந்தையைக் குறித்து குறை கூறி விமர்சனம் செய்யாதீர்கள். இறந்து போன ஒருவரை ஏசினால் அது உயிருடன் இருப்பவருக்கு மனவேதனையையே தரும். என்றார்கள்.”   நூல்: இஸ்தீஆப், பாகம்:2, பக்கம்:269,270,271.      மனிதர்களின் இயல்பே தங்களுக்கு பிடிக்காத ஒருவர் கண்முன்னால் சாதாரணமாக வருகிறார் என்றால் அவரை குறை கூறி இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது தான். ஆனால்,வந்திருப்பதோ அபூஜஹ்லின் மகன் சும்மா விட்டுவிடுவார்களா? நபித்தோழர்கள். ஆகவே தான் நபி{ஸல்} அவர்கள் கண்டிப்போடு அவரின் தந்தை குறித்து குறை கூறி விமர்சனம் செய்யவேண்டாம் என கூறிவிட்டார்கள்.
விளைவு அவர் தனது நெஞ்சில் உள்ள பாரத்தையெல்லாம் இறக்கிவைத்து விட்டு நபித்தோழர் எனும் மாணிக்கமாக மாறிச் சென்றார்.
வஞ்சப்புகழ்ச்சியும் குறைதான்
ஃகலீஃபா உமர் {ரலி} அவர்கள் ஆட்சிக்காலத்தில் ஷாம் தேசத்திலிருந்து ஒரு முஸ்லிம் உமர் {ரலி} அவர்களைக் காண வந்திருந்தார். இருவரும் உரையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த மனிதர் ”அமீருல் முஃமினீன் அவர்களே!   மாநபி {ஸல்} அவர்களுக்குப் பிறகு சிறந்த மனிதராகவும், முஃமின்களின் சிறந்த தலைவராகவும் உங்களைத் தான் நான் கருதுகிறேன். என்றார்.                          அதற்கு உமர் {ரலி} அவர்கள் அப்படியா? என்று கேட்டுவிட்டு, “நீர் எனதருமைத் தோழர் அபூபக்ர் ஸித்தீக் {ரலி] அவர்களைப் பார்த்திருக்கிறீரா? என்று கேட்டார்கள்.     அதற்கு அவர் இல்லை நான் பார்த்ததில்லை என்று பதில் கூறினார். உடனே உமர் {ரலி} அவர்கள் “நீர் மட்டும் என் தோழர் அபூபக்ர் {ரலி} அவர்களை பார்த்திருக்கிறேன் என்று கூறியிருந்தீர் என்றால் உம்மை சாட்டையால் அடித்து விரட்டி இருப்பேன். என் தோழரை குறைபடுத்தி,என்னை உயர்வாக்கி புகழ்கிறீரோ?                       எத்தனையோ நாட்கள் அபூபக்ர் {ரலி} அவர்களின் நெஞ்சில் முளைத்திருக்கும் ரோமத்தைப் போன்றாவது நான் இருந்திருக்கக் கூடாதா? என ஏங்கிய நாட்கள் உண்டு. அப்படிப்பட்ட என் தோழரை குறைத்து மதிப்பிட்டு, என்னை உயர்வாகக் கருதுகிறீரோ?” என்று கேட்டார்கள்.
                நூல்: ஃகுல்ஃபாவுர் ரஸூல் {ஸல்}, பக்கம்:86
உம்மத்தின் நிலை
பெரும்பாலும் குறை கூறுவோர் ”தாம் மிக உயர்வாகவும், மதிப்போடும் நடத்துகிறவர்களிடம் தான் உற்று நோக்கிப் பார்த்து அதை பிறரிடம் கூறிக் கொண்டிருப்பார்கள்.” அதனால் தான் இன்று ஆலிம்கள்,சமுதாயத் தலைவர்கள் மீது வெகு விரைவாக குறை கூற முடிகிறது. ஆனால், அது இந்த உம்மத்திற்கு அழகல்ல என்று பெருமானார் {ஸல்} அவர்கள் நயம்பட உரைத்திருக்கிறார்கள்.             ஹிஜ்ரி 8 ஜமாதில் அவ்வல் மாதம் நடை பெற்ற மூத்தா யுத்தம். அந்த யுத்தத்தில் பெருமானார் {ஸல்} அவர்களால் நியமிக்கப்பட்ட மூன்று தளபதிகள் ஒருவர் பின் ஒருவராக வீர மரணம் அடைய, இறுதியாக இக்கட்டான நேரத்தில் காலித் இப்னு வலீத் {ரலி} அவர்கள் படைத்தளபதி பொறுப்பை ஏற்கிறார்கள். அதுவரை பெரும் நெருக்கடிக்கும், துன்பத்திற்கும் உள்ளான முஸ்லிம்களின் படை காலித் [ரலி} பொறுப் பேற்றதும் புதுத்தெம்பையும், பொலிவையும் அடைகிறது. ஆனாலும் எதிரிப்படையினர் இரண்டு லட்சம் பேர், முஸ்லிம்களின் படையின் எண்ணிக்கையோ வெறும் பத்தாயிரம் தான், காலித் {ரலி} அவர்கள் தங்களது மதியூகத்தால் பெரும் படையை பின் வாங்கி ஓட வைத்தார்கள். ஒரு கட்டத்தில் தொடர்ந்து சென்று தாக்க வேண்டாம் என தளபதி காலித் {ரலி] உத்தரவு பிறப்பிக்கிறார்கள். அன்று மாலையே படையை மதீனாவிற்கு திருப்பிடுமாறு மீண்டும் படையினருக்கு மறு உத்தரவு பிறப்பிக்கிறார்கள் தளபதி காலித் இப்னு வலீத் {ரலி} அவர்கள். வீரர்கள் மதீனா வருவதற்கு முன் இஸ்லாமியப் படை பின்வாங்கி ஓடி வருகிறது எனும் செய்தி காட்டுத் உதீப்போல மதீனமாநகரெங்கும் பரவியது. மதீனாவிற்குள் நுழைந்த படையினரை வரவேற்று வாழ்த்துச் சொல்வதற்குப் பதிலாக, மதீனாவின் எல்லையில் திரண்டிருந்த மக்களெல்லாம் ”அல்லாஹ்வின் பாதையில் மன உறுதியோடு போராடாமல் விரண்டோடி வந்தவர்களே! என்று ஒட்டுமொத்தப் படையினர் மீதும் மண் வாரி தூற்றினர். செய்தி கேள்விப்பட்டு ஓடி வந்த அண்ணலார் தளபதியிடம் யுத்த களம் குறித்து விசாரிக்கிறார்கள். தளபதி காலித் [ரலி} அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! எதிரிகள் இரண்டு லட்சம் பேர்,முஸ்லிகளோ வெறும் பத்தாயிரம் பேர் தான். மேலும் சூழ்நிலைகள் சாதகமாகி,எதிரிகள் பின் வாங்கி ஓடும் போது தான் திரும்பி வந்து விடுவது சாலச் சிறந்ததாக நான் கருதி படையினரை மதீனா திரும்புமாறு நான் கட்டளையிட்டேன். என்று கூறினார்கள். திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தை நோக்கி மாநபி {ஸல்} அவர்கள் “மக்களே! இவர்கள் விரண்டோடி வந்தவர்களல்லர். எதிர்காலத்தில் அல்லாஹ் நாடினால்…உறுதியுடன் போராடுபவர்கள். என்று கூறினார்கள்.
           நூல்: தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம், பக்கம்:213
 இங்கே குறை கூறுவதற்கு முன்னால் குறைகளை சுமத்து வோரின் இடத்தில் தங்களை வைத்துப் பார்க்க வேண்டும். என நபி [ஸல்} அவர்கள் தங்களின் நடவடிக்கயின் மூலம் இந்த உம்மத்திற்கு படிப்பினை தருகிறார்கள்.
மொத்தத்தில் எந்த ஒரு முஸ்லிமும் வேறெந்த ஒருமுஸ்லிமின் குறைகளையும் தேடித் திரிந்து அதைப் பரப்பிக் கொண்டு அலையக் கூடாது என இஸ்லாம் இயம்புகிறது.
அல்லாஹ் கூறுகின்றான்:                             “இறை நம்பிக்கை கொண்டவர்களே! அதிகமான எண்ணங்களில் இருந்து தவிர்ந்துவிடுங்கள். ஏனெனில், எண்ணங்களில் சிலது பாவமாக இருக்கின்றன.மேலும், பிறரின் குறைகளை துப்பறிவதில் ஈடுபடாதீர்கள்.
                                         அல்குர்ஆன்:49:12
நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “ ஓ நாவால் ஈமான் கொண்டு உள்ளத்தால் உறுதி கொள்ளாத கூட்டமே! முஸ்லிம்களைப் பற்றி புறம் பேசாதீர்கள்;மேலு அவர்களின் குறைகளை தேடித்திரியாதீர்கள். எவர் ஒரு முஸ்லிமின் குறைகளை தேடித்திரிகின்றாரோ,அவரின் குறைகளை அல்லஹ்வும் தேடுவான், எவரின் குறைகளை அல்லாஹ் தேட ஆரம்பித்து விடுவானோ அவரை அல்லாஹ் கேவலப் படுத்திவிடுவான் அவர் தன் வீட்டில் வைத்து மறைவாக செய்த போதிலும் சரியே!” அறிவிப்பாளர்: அபூ பர்ஸா {ரலி}
                     நூல்: தஃப்ஸீர் குர்துபீ,பாகம்:9,பக்கம்:139
நெப்போலியன் ஹில் எனும் எழுத்தாளன் சொல்வான் “வீட்டிலும்,வீதியிலும் சுற்றித்திரியும் நாய் தான் உடலைச் சுற்றி பறக்கும் பூச்சிகளைக் கண்டு குரைத்துக் கொண்டிருக்கும். அது போலத்தான் சிலர் மற்றவர்களின்             குறையை பெரிதுபடுத்தி பேசித்திரிவார்கள். அவர்களைக் கண்டுப் பயப்படாதீர்கள். காரியம் ஒன்றையே கருத்தில் கொண்டு முன்னேறுங்கள்.
எனவே குறை  கூறும் குணத்தை விட்டொழிப்போம்!
ஈமானை மாசு படுத்தும் குணத்திலிருந்து விடுபடுவோம்!
ஈருலக நன்மைகளைப் பெறுவோம்!!!
                    வஸ்ஸலாம்!


    

Wednesday 20 November 2013

எண்ணம் போல் வாழ்வு

             எண்ணம் போல் வாழ்வு
நம் வாழ்க்கையை தீர்மானிப்பது நம் செயல்களை விட நம் எண்ணங்கள் தான்
ஓர் அறிஞன் சொன்னான்:
“எண்ணங்களைப் பற்றி கவனமாக இருங்கள்.அவைகள் வார்த்தைகளாக மாறுகின்றன.
வார்த்தைகளில் கவனமாக இருங்கள்.அவை தான் செயல்களாக மாறுகின்றன.
செயல்களில்கவனமாக இருங்கள்.அவை தான் பழக்கமாக மாறுகின்றன.
பழக்கங்களில்கவனமாக இருங்கள். அவை தான் ஒழுக்கமாக மாறுகின்றன.
ஒழுக்கத்தில் கவனமாக இருங்கள். அவை தான் உங்கள் வாழ்க்கையை உருவாக்குகின்றன.”
ஆம்!ஷைத்தான் வழி தவறியதும் அவனுடைய கீழான எண்ணத்தால் தானே!
ஒருவனின் உயர்வும் தாழ்வும் அவனின் எண்ணத்தால் தான் அமைகிறது என்று இஸ்லாம் உரக்கச்சொல்கிறது
அல்லாஹ் கூறுகின்றான்:
”ஒவ்வொருவரும் தத்தமது எண்ணங்களின்{வழிமுறைப்}படி செயலாற்றுகின்றனர்.”                   {அல்குர்ஆன்:17:84}
நபி{ஸல்}அவர்கள் கூறினார்கள்:
”மறுமை நாளில் ஓர் அடியான் அல்லாஹ்வின் சமூகத்தில் கொண்டு வரப்படுவான் அவனோடு மலை போல் குவிக்கப்பட்ட அவனுடைய நற்செயல்களும் கொண்டு வரப்படும். அப்போது அங்கே ஓர் வானவர் “இவரால் பாதிப்புக்குள்ளானவர்கள் எவரும் உண்டோ? வாருங்கள் இவரின் நன்மைகளில் இருந்து அதற்கான ஈட்டை பெற்றுச் செல்லுங்கள்.என்று அறிவிப்புச் செய்வார்.அப்போது சிலமனிதர்கள் அங்கே வந்து அவரின் நன்மைகளில் இருந்து எடுத்துச் சென்றிடுவர். இறுதியில் அம்மனிதர் மட்டும் தனியே நின்று கொண்டிருப்பார்.
அப்போது அல்லாஹ் அவரை அழைத்து “ஓஅடியானே உன்னுடைய பொக்கிஷம் ஒன்று என்னிடம் உள்ளது அதை என் படைப்பினங்களில் எவரும் அறிய மாட்டார்.பரிசுத்த என்வானவர்களும் கூட அறியமாட்டார்கள்.” என்று சொல்வான்.
அப்போது அந்த அடியான் “அல்லாஹ்வே அது என்ன”? என்று கேட்பான்.  அதற்கு அல்லாஹ் ”ஓஅடியானே உன்னுடைய தூய்மையான எண்ணங்கள் தான்! நீ ஒவ்வொரு முறை எண்ணும் போதும் அதற்கு நான் எழுபதுமடங்கு நன்மைகளை எழுதினேன்.” என்பான்.
நூல்:புகாரி, 2449,6534. தன் பீஹுல் gகாஃபிலீன்,பாகம்:2,பக்கம்:377
ஆக எண்ணங்கள் தான் ஒரு மனிதனின் உலக,ஆன்மீக வாழ்வின் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கின்றன.
அல்லாஹ்வைப் பற்றிய எண்ணம்
அல்லாஹ் கூறுகின்றான்:
“அல்லாஹ்வை எவ்வாறு மதிப்பிட வேண்டுமோ அவ்வாறு அவர்கள் மதிப்பிடவில்லை”.               அல்குர்ஆன்:6:91
இந்த இறைவசனத்தின் கருத்தின் அடிப்படை இன்றைய     அநேக முஸ்லிம்களோடு ஒத்துப்போவதை காணமுடிகிறது அல்லாஹ்வின் மீதான நம்பிக்கையில் இந்த உம்மத் எப்படி இருக்கிறது என்பதே இதற்கு போதுமானதாகும்.
அனஸ்{ரலி}அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
“ஒரு மனிதர் “அல்லாஹ்வின் தூதரே! நான் ஒட்டகத்தைக் கட்டி வைத்துவிட்டு அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பதா? அல்லது அதனை கட்டாமல் அப்படியே அவிழ்த்து விட்டுவிட்டு அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பதா?”.என்று வினவினார். அதற்கு நபிகளார், “அதனை நீர் கட்டி வைத்துவிட்டு பிறகு அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வையும்! என்று பதில் கூறினார்கள். நூல்:திர்மிதீ பல்கு தேசத்தைச் சேர்ந்த ஷகீக்{ரஹ்} அவர்கள் ஒரு முறை இப்ராஹீம் பின் அத்ஹம்{ரஹ்} அவர்களைச் சந்தித்து தாம் வியாபார விஷயமாக பயணம் மேற்கொள்வதாக கூறிச் சென்றார்கள். ஆனால் பயணம் சென்ற சில நாட்களிலேயே ஷகீக்{ரஹ்}திரும்பிவிட்டார்கள் எனும் செய்தி கேள்வி பட்டு இப்ராஹீம் பின் அத்ஹம் {ரஹ்} அவர்கள் ஷகீக்{ரஹ்} அவர்களைச் சந்திக்கச் சென்றார்கள். திரும்பி வந்த காரணம் என்ன? என்று வினவியபோது, ஷகீக் {ரஹ்} கூறினார்கள்:              ”நான் நெடுந்தூரம் பயணம் செய்த களைப்பில் ஓரிடத்தில் ஓய்வு பெற ஒரு மரத்தடியில் அமர்ந்தேன். அங்கே நான் கண்ட காட்சி தான் எனக்கு அல்லாஹ்வைப் பற்றியான ஓர் உண்மையை உணர்த்தியது. அப்படியா? என்ன அந்தக் காட்சி கொஞ்சம் விளக்கமாக கூறுங்களேன் என்றார்கள் மாமேதை இப்ராஹீம் {ரஹ்} அவர்கள்.
நான் அமர்ந்திருந்த அந்த மரத்தின் ஒரு கிளையில் ஊனமான,குருடான ஒரு பறவை அதன் கூட்டில் இருந்தது. ஆள் நடமாட்டமே இல்லாத இந்த இடத்தில் யார் வந்து உணவளிக்கப்போகிறார்கள்? என்று நினைத்துக் கொண்டிருந்த அந்த நேரத்தில், எங்கிருந்தோ வந்த இன்னொரு பறவை ஊனமான அந்த பறவைக்கு தன் அலகுகளால் உணவளித்தது. இதனைக் கண்ணுற்ற நான் ”ஏன் நமக்கும் அல்லாஹ் இவ்வாறு உணவளிக்க மாட்டான்? என்ற எண்ணம் தோன்றவே நான் ஊர் திரும்பிவிட்டேன்.” அதற்கு இப்ராஹீம் {ரஹ்} அவர்கள், “தோழரே! நீங்கள் எந்தப் பறவையிலிருந்து படிப்பினை பெற்றிருக்கின்றீர்கள்? தனக்காகவும் - தன் சக உயிரினத்திற்காகவும் பாடுபட்ட அந்த நல்ல பறவையிடமிருந்தல்லவா பாடம் பெற்றிருக்கவேண்டும். காலொடிந்த பறவையிடமிருந்தா வல்லோனை விளங்கிக்கொண்டீர்கள்? என்று கேட்டார்கள்.”                    
            நூல்: அல் உஸுஸில் அஃக்லாக்கியா, பக்கம்,80
நபிகளாரின் மீதான எண்ணம்
அல்லாஹ் கூறுகின்றான்:
“இறைத்தூதர் எதை உங்களுக்கு கொடுக்கிறாரோ அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். அவர் எதனை விட்டும் உங்களை தடுக்கிறாரோ அதனை விட்டும் விலகி இருங்கள்.”                  
                                          அல்குர்ஆன்:59:7
இன்றைய முஸ்லிம்களில் அதிகமானோர் வாழ்வின் அனைத்து துறைகளிலும் மேலோங்கிட துடிக்கின்றனர். ஆனால், அங்கே நபிகளாரின் வார்த்தைக்கோ,வாழ்க்கை வழிகாட்டலுக்கோ முக்கியம் தருவதில்லை.
நபி {ஸல்} அவர்களின் அருமைத்தோழர்களில் ஒருவர் ஜுலைபீப் {ரலி} அவர்கள். தன்னைப் பற்றி தாழ்வு மனப்பான்மை கொண்டிருந்தார்.காரணம் அவ்வளவாக அழகாக இருக்கமாட்டார்.
ஒரு முறை நபி {ஸல்} அவர்கள்,ஜுலைபீப் அவர்களை அழைத்து என்ன திருமணம் செய்து கொள்ளவில்லையா? என்று கேட்டார்கள்.அதற்கு ஜுலைபீப் அவர்கள் ”அருவருப்பான தோற்றம் கொண்ட எனக்கு இந்த மதீனாவில் யார் பெண் கொடுப்பார்? என்று விரக்தியுடன் கேட்டார்”. தோழரே! அல்லாஹ்விடத்தில் நீர் ஒன்றும் அருவெறுப்பானவர் இல்லை. ஊரின் இந்த பகுதியில் உள்ள {ஒரு இடத்தை சுட்டிக்காட்டி}இன்ன மனிதரிடம் சென்று நான் உமக்கு பெண் கேட்டதாக சொல்லுங்கள்.என்று கூறி அனுப்பி வைத்தார்கள் நபி {ஸல்} அவர்கள். அந்த வீட்டிற்குச் சென்று நபிகளார் சொன்ன அந்த விஷயத்தைக் கூறினார்கள். அந்த வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக மறுக்கவும் முடியாமல், ஆமோதிக்கவும் முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தனர்.அவருக்கு பெண் தர அவர்களின் மனம் இடம் தர வில்லை.                          அப்போது உள்ளிருந்தவாரே தமது பெற்றோரின் உரையாடலையும் ஜுலைபீப் அவர்களின் உரையாடலையும் கேட்டுக்கொண்டிருந்த சம்பந்தப்பட்ட அந்தப் பெண்மணி தமது பெற்றோரை அழைத்து, வந்திருப்பவர் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களே எனக்காக அனுப்பிய மணாளன், நீங்கள் எப்படி எனக்காக மாப்பிள்ளை பார்ப்பீர்களோ அதை விட பன்மடங்கு அக்கறையோடு தான் மா நபி {ஸல்} அவர்கள் எனக்கான மணாளனை தேர்ந்தெடுத்து அனுப்பியிருப்பார்கள்.என்று கூறிவிட்டு “அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஏதேனுமொரு விவகாரத்தில் முடிவு செய்துவிட்டால் பிறகு அந்த விவகாரத்தில் மாற்று முடிவு எடுக்கும் அதிகாரம் இறை நம்பிக்கை கொண்டுள்ள எந்த ஆணுக்கும்,இறை நம்பிக்கை கொண்டுள்ள எந்தப் பெண்ணுக்கும் கிடையாது.” எனும் இறை வசனத்தை தம் பெற்றோரிடம் ஓதிக் காண்பித்துவிட்டு என் விஷயத்தில் நபிகளாரின் முடிவையே நான் திருப்தி அடைகிறேன். ஜுலைபீப் அவர்களை என் மணாளராக்க மனப்பூர்வமாக சம்மதிக்கின்றேன்.என்று கூறினார்கள்
நபி {ஸல்} அவர்களின் முன்னே அமர்ந்து அந்த வீட்டில் நடை பெற்ற அத்துனை நிகழ்வினையும் ஜுலைபீப் {ரலி} விவரித்துக்கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்மணி உதிர்த்த வார்த்தைகளை கேட்ட மாநபி {ஸல்} அவர்கள் “அல்லாஹூம் மஸ்புப் அலைஹல் ஃகைர ஸப்பா! வலா தஜ்அல் அய்ஷஹா கத்தா!
இறைவா! அப்பெண்மணியின் வாழ்க்கையில் அனைத்து வகையான நலவுகளையும் கொட்டுவாயாக! கேடுகளும்,சோதனைகளும் நிறைந்த வாழ்வை கொடுத்து விடாதே! என்று அகம் மகிழ துஆ செய்தார்கள். இந்த செய்தியை அறிவிக்கின்ற அபூ பர்ஸா {ரலி} அவர்கள் ”மதீனாவிலேயே,அன்ஸாரிப்பெண்களிலேயே இந்தப் பெண்மணியை விட செல்வச் சீமாட்டியை நாங்கள் கண்டதில்லை”.என்று கூறுகின்றார்கள்
பின்னர் ஜுலைபீப் {ரலி} அவர்களை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியோடு வாழ்ந்துகொண்டிருந்தார்கள் அப் பெண்மணி.
பெருமானார் {ஸல்} அவர்களோடு ஒரு போரில் கலந்து கொள்ள ஜுலைபீப் அவர்கள் புறப்பட்டுச்சென்றார்கள். அந்தப் போரில் அல்லாஹ் முஸ்லிம்களுக்கு வெற்றியை நல்கினான். இறுதியாக ஷஹீதானவர்களை கணக்கிடும் பணியில் நபிகளாரும்,தோழர்களும் ஈடுபட்டிருந்தனர். எவரையாவது விட்டு விட்டீர்களா?என நபியவர்கள் வினவ,ஆம் இன்னின்னாரை விட்டு விட்டோம். என தோழர்கள் கூறினார்கள்.மீண்டும் நபியவர்கள் வினவ, முன்பு போலவே தோழர்கள் பதில் கூறினர். மூன்றாம் முறையும் நபியவர்கள் கேட்டுவிட்டு ஜுலைபீபை காணவில்லையே? சென்று போர்க்களம் முழுவதும் நன்றாக தேடுங்கள் என்றார்கள். ஓரிடத்தில் ஜுலைபீப் ஷஹீதாக்கப்பட்டு கிடப்பதாக நபியிடத்தில் வந்து தோழர்கள் கூறினார்கள்.உடனடியாக கிளம்பி அந்த இடத்திற்கு வந்த நபி {ஸல்} அவர்கள் அங்கே ஜுலைபீபை சுற்றி ஏழு இறை மறுப்பாளர்கள் கொல்லப்பட்டுக்கிடந்ததை பார்த்தார்கள். நபி{ஸல்} அவர்கள் கூறினார்கள்:”இதோ இங்கு ஷஹீதான ஜுலைபீப் ஏழு காஃபிர்களுடன் கடுமையாக போரிட்டு பின்னர் அவர்களை கொன்றுவிட்டு பிறகு அவர் ஷஹீதாகி இருக்கிறார். “அறிந்து கொள்ளுங்கள்! ஜுலைபீப் என்னைச் சார்ந்தவர், நான் அவரைச் சார்ந்தவர்! என்று மூன்று முறை கூறினார்கள். பின்னர் அவரை தம் இரு கைகளாலும் வாரி அணைத்து தூக்கிச் சென்று தாமே கப்ரில் அடக்கம் செய்தார்கள் மா நபி {ஸல்} அவர்கள்.                        நூல்:இப்னு ஹிப்பான்,பாகம்:9,பக்கம்:334,இஸ்தீஆப்,பாகம்:1,பக்கம்:155,156,முஸ்னத் அஹ்மத்,பாகம்:4,பக்கம்:422.
ஒரு முஸ்லிமின் எண்ணங்களில் மிக உயர்ந்தது அவன் அல்லாஹ்வை குறித்தும்,{ஸல்}அவர்களை குறித்தும் மிகச் சரியாக விளங்கி வைத்திருப்பதாகும்.
எனவே மேற்கூறிய வரலாறுகளில் இருந்து பாடம் பெறுவோம்.
தன்னைப்பற்றிய எண்ணம்
ஒரு மனிதன் தன்னைப் பற்றி தற்பெருமை கொள்ளவும் கூடாது,அதே நேரத்தில் கீழான எண்ணமும் கொள்ளக்கூடாது. ஆனால்,இவ்வுலகில் வெற்றிக்கான வாழ்க்கையை தன்னால் வாழ இயலும் என உறுதியாக எண்ணவேண்டும்.
ஒரு முறை யமனின் நஜ்ரான் பகுதியைச் சார்ந்த சில முஸ்லிம்கள் தங்களுக்கு மார்க்கவிஷயங்களை கற்றுத் தரவும்,தங்கள் பகுதியில் அழைப்புப்பணி செய்யவும்,தங்களுக்கு இமாமத் செய்யவும் ஒருவரை தங்களோடு அனுப்பி வைக்குமாறு மாநபி {ஸல்} அவர்களிடம் வேண்டி நின்றனர்.அப்போது நபி {ஸல்} அவர்கள் ”உங்களோடு நம்பிக்கையான ஒருவரை அனுப்பி வைக்கிறேன்” என்றுகூறினார்கள். இந்த நேரத்தில் லுஹர் தொழுகைக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. நபிகளார் கூறிய அந்த நம்பிக்கையாளராக நாமாக இருக்க மாட்டோமா? என்று ஒவ்வொரு ஸஹாபியும் ஆசைப்பட்டனர்.
இகாமத் சொல்லப்பட்டது, நபி {ஸல்} அவர்கள் தொழ வைத்தார்கள்,உமர் {ரலி} அவர்கள் கூறுகின்றார்கள்.தொழுது முடித்ததும் நபி {ஸல்} அவர்கள் வலது புறம் பார்த்தார்கள்,பின்பு இடது புறம் பார்த்தார்கள். என் மீது நபியவர்களின் பார்வை பட வேண்டும், என்னை அழைக்க வேண்டும் என்பதற்காக குதிங்காலால் ஊனி எட்டி எட்டிப் பார்த்தேன்.இறுதியாக நபி {ஸல்} அவர்களின் பார்வை அபூ உபைதா அல் ஜர்ராஹ் {ரலி} அவர்களைச் சென்றடைந்தது. பின்னர் நபி {ஸல்} அவர்கள் அபூ உபைதாவை அழைத்தார்கள், பின்னர் நஜ்ரான் முஸ்லிம்களை அழைத்து இதோ இவரை அழைத்துச் செல்லுங்கள். “ஒவ்வோர் உம்மத்திற்கும் ஓர் நம்பிக்கையாளர் உண்டு.என்னுடைய உம்மத்தின் நம்பிக்கையாளர் அபூ உபைதா அல் ஜர்ராஹ் {ரலி}” என்று கூறினார்கள்.
உமர் {ரலி} அவர்கள் கூறுகின்றார்கள்:
”ஓர் உண்மையை நான் சொல்லியே ஆக வேண்டும் அந்த நேரம் வரை நான் எந்த புகழுக்கும்,பதவிக்கும் ஆசைபட்டது கிடையாது அன்று நான் ஆசை பட்டேன் நபிகளாரின் புனித வாயால் அந்த புகழாரத்தை அடையவேண்டுமென்று ஆனால்  அபூ உபைதா அவர்கள் அதை தட்டிச் சென்று விட்டார்கள்”.           நூல்:ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}, பக்கம்:241
 ஃகைபர் கோட்டையை முற்றுகையிட்டிருந்தது மா நபி {ஸல்} அவர்களின் தலைமையிலான முஸ்லிம்களின் அணி கோட்டைக்கு உள்ளிருந்து குடைச்சல் கொடுத்தனர் அல்லாஹ்வை மறுக்கும் எதிரணியினர்.முதல் நாள் முடிவுக்கு வந்தது. அப்போது நபி {ஸல்} அவர்கள் “ நாளை நான் ””அல்லாஹ்வும்,அவன் தூதரும் நேசிக்கின்ற, அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நேசிக்கின்ற ஒருவரிடம் கொடியை கொடுப்பேன். அல்லாஹ் அவர் கரங்களின் மூலம் வெற்றியை வழங்குவான்”” என்று கூறினார்கள்.
உமர் {ரலி} அவர்கள் கூறுகின்றார்கள்:                               ஓர் உண்மையை நான் சொல்லியே ஆக வேண்டும் அதுவரை நான் எந்த புகழுரைக்கும்,அந்தஸ்துக்கும் ஆசைப் பட்டது கிடையாது. அன்று நான் அல்லாஹ்வும்,அவன் தூதரும் நேசிக்கின்ற ஒருவனாக ஆக வேண்டும், நபிகளாரின் அமுத வாயால் சொல்லப்பட்ட சோபனத்திற்கு சொந்தக்காரனாய் ஆக வேண்டும் என ஆசைப் பட்டேன்”.ஆனால் அதை அலீ {ரலி} அவர்கள் தட்டிச் சென்று விட்டார்கள்.
.                                                               நூல்: ஃகுலஃபாவுர் ரஸூல் {ஸல்}, பக்கம்:294                         இந்த இரு வேறு அறிவிப்புக்களையும் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் ஃகாலித் முஹம்மத் ஃகாலித் {ரஹ்} தங்களது இரு வேறு நூற்களில் பதிவு செய்திருக்கின்றார்கள்.
இங்கே உமர் {ரலி} அவர்கள் தங்களின் மீதான எண்ணத்தை எவ்வாறு அமைத்திருந்தார்கள்!.இது தான் பிற்காலத்தில் ஆட்சியாளராக பரிணமிக்கும் உயர்வைப் பெற்றுத்தந்தது.
பிறரின் மீதான எண்ணம்
அல்லாஹ் கூறுகின்றான்:
“இறை நம்பிக்கையாளர்களே! உங்களின் எண்ணங்களில் அதிகமானதை தவிர்த்துக்கொள்ளுங்கள், ஏனெனில் சில எண்ணங்கள் பாவமாக இருக்கின்றன.”
                                       அல்குர்ஆன்:49:12             இன்று ஒருவரைப் பற்றி நாம் யாரிடமாவது விசாரித்தால் அவரைப்பற்றிய தவறான நடவடிக்கைகளையே நம்மிடம் கூறப்படும். காரணம் சதா அவரைப் பற்றி வேயப்பட்டுள்ள எண்ண வலைகளே! ஆனால், அல்லாஹ் இவ்வாறான நடவடிக்கைகளை கைவிடுமாரு பணிக்கின்றான்.
அன்னை ஆயிஷா {ரலி} அவர்களைப் பற்றி நயவஞ்சகர்கள் அவதூறு பரப்பிய அந்த தருணங்களில் பெரும்பாலான முஃமின்கள் மவுனமாக இருந்தனர்.
அத்தகைய முஃமின்களை நோக்கி அல்லாஹ் பேசினான்:              “நீங்கள் இதனைக் கேள்விப்பட்டதுமே, நம்பிக்கையாளர்களான ஆண்களும்,பெண்களும் தங்களைப் பற்றி  நல்லெண்ணம் கொண்டிருக்க வேண்டாமா? இது ஓர் அப்பட்டமான அவதூறு என்று சொல்லியிருக்க வேண்டாமா?
                                          அல்குர்ஆன்:24:12
ஃபத்ஹ் மக்காவின் போது பிலால் {ரலி} அவர்களை நபி {ஸல்} அவர்கள் கஃபாவின் முகட்டின் மீதேறி பாங்கு சொல்லச் சொன்னார்கள். அப்போது அங்கே நின்று கொண்டிருந்த உத்தாப் இப்னு உஸைத் என்பவன் “இந்த நாளின் கொடுமையான இந்தக் காட்சியை காண்பதற்கு முன்பே என் தந்தை இறந்துவிட்டார்” என ஏளனமாகக் கூறினான். ஹாரிஸ் இப்னு ஹிஷாம் என்பவனோ “அடிமையான இந்த கருப்பு காக்கையை விட்டால் முஹம்மதுக்கு வேறு மனிதரே கிடைக்கவில்லையா? என்று கேலி பேசினான். அபூசுஃப்யான் சொன்னார் “ நான் ஒன்றும் சொல்லமாட்டேன் அப்புறம் அது குறித்து அல்லாஹ் இறை வசனத்தை இறக்கிவிடுவானோ என நான் அஞ்சுகிறேன்” என்றார். அப்போது அல்லாஹ் பின் வரும் வசனத்தை                “மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம்.பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆகும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும்,கோத்திரங்களாகவும் அமைத்தோம்.”உண்மையில் அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்தான்.” நிச்சயமாக, அல்லாஹ் அனைத்தையும்அறிந்தவனாகவும்,தெரிந்தவனாகவும் இருக்கின்றான்.”                           அல்குர்ஆன்:49:13
இறக்கியருளினான்.
பிறரின் மீதான எண்ணத்தின் அளவுகோலை அல்லாஹ் இங்கே விவரித்துக் காட்டுகின்றான்.
ஆக நமது இன்றைய எண்ணமும் செயலும் தான் நாளைய நம் வாழ்க்கையை வடிவமைக்கின்றன.
    எனவே எண்ணங்களை தூய்மையாக்குவோம்!
         உயர்வான வாழ்வைப் பெறுவோம்!
                    வஸ்ஸலாம்.