Thursday 7 April 2022

திருக்குர்ஆனுடன் நம்முடைய தொடர்பு எப்படி இருக்க வேண்டும்?

 

திருக்குர்ஆனுடன் நம்முடைய தொடர்பு எப்படி இருக்க வேண்டும்?


அல்லாஹ்வின் மகத்தான கருணையும், அருளும் பிரவாகமெடுத்து பாய்ந்தோடும் அருள் நிறைந்த ரமழான் மாதத்தின் முந்தைய பத்தின் முதல் ஜும்ஆவில் நாம் வீற்றிருக்கின்றோம்.

ரமழானின் முதல் பத்து நாட்களில் அல்லாஹ்விடம் அவனது அருளையும், இரண்டாம் பத்தில் அல்லாஹ்விடம் அவனது மேலான மன்னிப்பையும், மூன்றாம் பத்தில் கொடிய நரகிலிருந்து அவனிடம் விடுதலையையும் கேட்டுப் பிரார்த்திக்குமாறு மாநபி {ஸல்} அவர்கள் நமக்கு வலியுறுத்தி இருக்கின்றார்கள்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எல்லையில்லா அவனது அருளை, கருணையை உங்களுக்கும், எனக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும், என் குடும்பத்தாருக்கும் ஈருலகத்திலும் நிரப்பமாக வழங்கியருள்வானாக!

ரமழான் மாதத்திற்கு அல்லாஹ் பல்வேறு சிறப்புக்களை வழங்கியிருக்கின்றான். அதில் மகத்தானதும், பிரதானமானதும் குர்ஆனில் போற்றிப் புகழ்ந்து கூறப்பட்டிருக்கும் “குர்ஆன்” இறக்கியருளப்பட்ட மாதம் என்பது தான்.

மாநபி {ஸல்} அவர்கள் கூட தங்களுக்கு வழங்கப்பட்ட அற்புதங்களில் ஆக உயர்ந்ததாக, மிகச் சிறந்ததாக குர்ஆனையே குறிப்பிடுவார்கள்.

அத்தகைய திருக்குர்ஆனின் மாண்புகளையும், மகத்துவத்தையும் இந்த வார ஜும்ஆ உரையில் நாம் பார்க்க இருக்கின்றோம்.

அத்தோடு அந்த குர்ஆனோடு நாம் எப்படி தொடர்பு வைத்திருக்கின்றோம்? என்பதையும் அந்த குர்ஆனோடு தொடர்பு வைத்திருந்தவர்களை எல்லாம் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எந்த அளவுக்கு உயர்த்தி இருக்கின்றான். மரணத்திற்குப் பின்னால் மண்ணறையிலும், நாளை மறுமையிலும் எவ்வளவு உயர்வை வழங்க காத்திருக்கின்றான் என்பதையும் நாம் உணர வேண்டும்.

நாளை மறுமையில் நடைபெறுகிற ஒரு காட்சியை அல்லாஹ் அல்குர்ஆனின் அல்ஃபுர்கான் அத்தியாயத்தின் 30 –வது வசனத்தில் குறிப்பிடுகின்றான்.

وَقَالَ الرَّسُولُ يَارَبِّ إِنَّ قَوْمِي اتَّخَذُوا هَذَا الْقُرْآنَ مَهْجُورًا

“அந்நாளில் எனது இறைவனே! நிச்சயமாக எனது சமூகத்தினர் இந்தக்குர்ஆனை ஏற்றுக் கொள்ளாது புறக்கணித்து விட்டனர்” என்று நம்முடைய தூதர் கூறுவார்”.                                             ( அல்குர்ஆன்: 25: 30 )

قال ابن القيم رحمه الله:
«هجر القرآن أنواع:
- هجر سماعه، والإيمانِ به، والإصغاءِ إليه.
- هجر العمل به، والوقوفِ عند حلاله وحرامه وإن قرأه وآمن به.
- هجر تحكيمه والتحاكم إليه في أصول الدِّين وفروعه، واعتقاد أنه لا يفيد اليقين، وأنَّ أدلَّته لفظيةٌ لا تحصل العلم.
- هجر تدبُّره وتفهُّمه، ومعرفة ما أراد المتكلم به منه.
- هجر الاستشفاء والتداوي به في جميع أمراض القلوب وأدوائها، فيطلب شفاء دائه من غيره، ويهجر التداوي به.
وكلُّ هذا داخل في قوله تعالى: ﴿وَقَالَ الرَّسُولُ يَا رَبِّ إِنَّ قَوْمِي اتَّخَذُوا هَذَا الْقُرْآنَ مَهْجُورًا﴾ [الفرقان: 30].
الفوائد» لابن القيم: (1/ 82)].

இந்த இறைவசனத்திற்கு விளக்கம் தருகிற இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹ்) அவர்கள் ஆறு வகையான புறக்கணித்தலை பட்டியலிடுகின்றார்கள்.

1. குர்ஆனை நம்பாது, உண்மை படுத்தாது புறக்கணிப்பது. இது இணை வைப்பாளர்கள் மற்றும் நயவஞ்சகர்களின் புறக்கணித்தலாகும்.

2. குர்ஆனை ஓதுவதையும், ஓதப்படுவதை செவிமடுத்துக் கேட்பதையும் புறக்கணிப்பது. இதுவல்லாத வீணான கவிதைகளுக்கும், பாடல்களுக்கும் முன்னுரிமை தருவது.

3. குர்ஆனின் படி செயல்படுவதை புறக்கணிப்பது. அதாவது ஹலால் ஹராம் விஷயத்தில் கட்டுப்பாடாக இருப்பதில் இருந்தும், ஏவல் விலக்கலில் கட்டுப்பட்டு நடப்பதில் இருந்தும், குர்ஆனின் வசனங்களை நம்புவதில் இருந்தும் புறக்கணிப்பது.

4. மார்க்கத்தின் அடிப்படை கொள்கை மற்றும் கிளை விவகாரங்களில் குர்ஆனின் தீர்ப்புக்களை மதிக்காமல் புறக்கணிப்பது. அதாவது, அது வெறும் எழுத்து மட்டும் தான் அதனால் எந்தப்பயனும் இல்லை என்றும், அதை நம்புவதால் எந்த பிரயோஜனமும் இல்லை என்றும் நம்புவதாகும்.

5. குர்ஆனின் வசனங்களை சிந்திக்காமல், அதனின் பொருளை விளங்காமல், அதனுடையை விளக்கங்களை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டாமல், அல்லாஹ்வின் வார்த்தையின் நோக்கத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசையில்லாமல் புறக்கணிப்பது.

6. குர்ஆனின் வசனங்களைக் கொண்டு உடல் மற்றும் உள ரீதியான பிரச்சினைகளுக்கு நிவாரணம் பெறுவதை புறக்கணிப்பது. மேலும், மற்ற நிவாரணிகளில் தான் நிவாரணம் கிடைக்கும் என்று நம்புவது. உதாரணமாக, சூனியக்காரர்களிடமும், இன்ன பிற நபர்களிடமும் சென்று சிகிச்சை பெறுவது. ( நூல்: அல்ஃபாவாயிது லி இமாமி இப்னில் கய்யிமி )

இந்த ஆறு வகையான புறக்கணிப்பில் நாம் எந்த இடத்தில் இருக்கின்றோம் என்பதை சிந்தித்துப் பார்த்து சீர் செய்திட கடமைப்பட்டுள்ளோம். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த ஆறு வகையான புறக்கணிப்பில் இருந்தும் நம் அனைவரையும் பாதுகாத்து அருள் புரிவானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!

புனிதம் நிறைந்த மாதத்தில்.. புனிதம் நிறைந்த இரவில்,,

அருள்மிகு மாதமான ரமழான் மாதத்தில் ஒட்டுமொத்த மனித குலம் நேர்வழி பெறுவதற்கான பொக்கிஷமான வாழ்வியல் வழிகாட்டும் நெறிமுறைகளை உள்ளடக்கிய திருக்குர்ஆன் இறங்கிய மாதமாகும்.

شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنَ الْهُدَى وَالْفُرْقَانِ

ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டி யாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாக வும், (நன்மை, தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. (அல்குர்ஆன் : 2:185)

إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ (1) وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ (2) لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ

நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணிய மிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் (நாளில்) இறக்கி னோம். மேலும் கண்ணியமிக்க இரவு (நாள்) என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? கண்ணிய மிக்க (அந்த) இரவு (நாள்) ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும்.                      ( அல்குர்ஆன் : 97:1-3 )

மற்ற நபிமார்களுக்கு வழங்கப்பட்ட ஸுஹுஃபுகள் எனும் ஏடுகளும், தவ்ராத், இன்ஜில், ஜபூர் ஆகிய வேதங்களும், அந்தந்த நபிமார்களுக்கு ஒரே தடவையில் மொத்தமாக அருளப்பெற்றன. ஆனால் குர்ஆன் லவ்ஹுல் மஹ்ஃபூல் என்ற மூல ஏட்டிலிருந்து முதல் வானத்திலிருக்கும் பைத்துல் இஸ்ஸா (மதிப்புமிக்க இல்லம்) என்ற இறை இல்லத்திற்கு மொத்தமாக அருளைப் பெற்றது ரமழான் மாதத்தில்தான். அதிலும் குறிப்பாக ஆயிரம் மதங்களை விட சிறந்த லைலத்துல் கத்ர் என்ற இரவில்தான்.

அதன் பின்னர் சுமார் 23 ஆண்டுகளில் கால சூழ்நிலைக்கு ஏற்ப, சிலரின் ஆசைகளுக்கு ஏற்ப, சிலரின் சந்தேகங்களுக்கு விடையாய், சிலரின் கோரிக்கைகளுக்கு பதிலாய், சிலரின் பிரச்சினைகளுக்கு தீர்வாய், சிலரின் நற்செயல்களுக்கு சோபனமாய் அவ்வப்போது ஜிப்ரயீல் அலை அவர்களின் மூலமாக நபி {ஸல்} அவர்களுக்கு அருளப்பட்டது.

சரித்திரத்தையே புரட்டிப்போட்ட அற்புத நூல் திருக்குர்ஆன்...

உலகத்தின் சரித்திரத்தையே மாற்றிய பெரும்பங்கு குர்ஆனுக்கு உண்டு என்று அறுதியிட்டுக் கூறலாம். கல்வியறிவில் மிகவும் பின் தங்கிய, மூட பழக்க வழக்கங்களிலும் சடங்கு சம்பிரதாயங்களிலும் மூழ்கிப்போயிருந்த  அரபுலக மக்களை உயர்ந்த அந்தஸ்திலும், ஆட்சி பீடத்திலும் அமர்த்திய சரித்திரம் திருகுர்ஆனுக்கு மட்டுமே உண்டு என்றால் அது மிகையல்ல.

وعندما عرف عمر بن الخطاب بإسلام أخته وزوجها ذهب إليها حتى يرجعها إلى دين قريش وتترك دين محمد، وعندما ذهب إلى بيت أخته كان خباب بن الأرت يقرأ لها ولزوجها سورة طه، وعندما دنا عمر بن الخطاب من البيت سمع قراءة خباب عليهما، فلما دخل قال لهما: ما هذا الذي سمعت؟، ولقد عرفت أنكما اتبعتما دين محمد، وحاول البطش بزوج أخته سعيد بن زيد، فقامت فاطمة بنت الخطاب لتكفه عن زوجها فضربها ضربا مبرحا، فقالت له: نعم قد أسلمنا وآمنا بالله ورسوله، فاصنع ما بدا لك، ولما رأى الدم يسيل من أخته ندم على ضربها، وقال لها أعطني الصحيفة التي سمعتكم تقرؤون منها، فقالت له: والله يا أخي لا يمسها إلا الطاهر، وطلبت منه أن يتوضأ حتى يأخذ الصحيفة، فقام عمر فاغتسل وقرأ بعض آيات سورة طه وقال ما أحسن هذا الكلام وأكرمه .

நபி {ஸல்} அவர்களை அற்ப ஆதாயங்களுக்காக கொன்று குவித்திட வேண்டும் என்ற ஆவேசத்தில் புறப்பட்ட உமர் (ரலி) அவர்கள், கப்பாப் (ரலி) அவர்கள் உமர்(ரழி) அவர்களின் சகோதரிக்கும், சகோதரியின் கணவருக்கும் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்த திருமறை வசனத்தின் சூரா தாஹாவின் 1 முதல் 14 வரையுள்ள வசனங்களை ஓதிக் காண்பித்ததை) கேட்டதன் தாக்கத்தால் இஸ்லாத்தில் இணைந்த வரலாறு முக்கியத்துவம் வாய்ந்தது.

இதே உமர் (ரலி) அவர்கள் தான் 22 ½ லட்சம் சதுர மைல் பரப்பளவை ஆட்சி செய்த இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் ஆட்சியாளராய் உயர்வு பெற்றார்கள்.

மிகுந்த அறிவாற்றலும், பேச்சாற்றலும், கவி வளமும் நிறைந்தவரான துபைல் இப்னு அம்ர் அத்தவ்ஸி (ரலி) அவர்கள் மக்கா வந்தபோது குறைஷித் தலைவர்களின் பேச்சால் நபி {ஸல்} அவர்களது பேச்சு எதையும் கேட்டுவிடக்கூடாது என்று தன் காதில் பஞ்சை வைத்தவராக மக்காவின் வீதியெங்கும் சுற்றித் திரிந்தார். ஒரு சந்தர்ப்பத்தில் நபி {ஸல்} அவர்களின் ஓதியதை செவியேற்று அதனால் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தில் இணைந்தார். அவர் மூலமே அந்நிய மண்ணில் முதன் முதலாக பெருங்கொண்ட மக்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள் என்பதும், அவர்களின் மூலமே இந்த உம்மத்திற்கு அபூஹுரைரா (ரலி) எனும் மகத்தான பொக்கிஷம் கிடைத்தது என்பது இன்னொரு முக்கியத்துவம் வாய்ந்த வரலாறாகும்.

வாழ்க்கையில் எந்த தருணத்தில் குர்ஆனை அணுகினாலும் தீர்வு தரும் மகத்தான நூல் திருக்குர்ஆன்...

وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ

நீங்கள் இந்த குர்ஆனை செவியேற்காதீர்கள். (அது ஓதப்படும் போது) அதில் (குழப்பம் செய்து) கூச்சலிடுங்கள், நீங்கள் அதனால் மிகைத்து விடுவீர்கள் என்றும் காஃபிர்கள் (தங்களைச் சார்ந்தோரிடம்) கூறினர். (அல்குர்ஆன்: 41: 26)

திருக்குர்ஆனின் சத்திய ஈர்ப்பு பெருமையும், ஆணவமும் கொண்ட நிராகரிப்பவர்களின் உள்ளங்களில் உள்ள பிடிவாதத்தைக் கூட அசைத்துப் பார்த்திருக்குமேயானால் ஈமானிய இதயங்களுக்கு அது அவ்வளவு பயன் தரும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நபி {ஸல்} அவர்கள் மரணித்துவிட்டார்கள் என்ற செய்தியைக் கேள்வி பட்ட  உமர் (ரலி) அவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.அவ்வாறு சொல்பவர்களை குறித்து உமர் (ரலி) அவர்கள் சில நயவஞ்சகர்கள் நபி {ஸல்} அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று நினைக்கின்றனர். நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் மரணிக்கவில்லை என தன்னைக் கட்டுப் படுத்த முடியாமல் கூறினார்.

அவ்வாறு யாராவது சொன்னால் சொல்பவர்களின் தலையை நான் எடுப்பேன் எனவும் குரலில் கடுமையை வெளிப்படுத்தினார்கள். இத்தகைய நிலைப்பாட்டிலிருந்த உமர் (ரலி) அவர்களை அந்த சந்தர்ப்பத்தில் அபூபக்கர் (ரலி) ஒரு வசனத்தை ஓதியதும் அடுத்த கனமே தன்னை மாற்றிக்கொண்டதாக வரலாறு நமக்கு சான்றுரைக்கின்றது.

وعمر 

 يُكلّم الناس، فقال: "اجلس"، فأبى، فقال: "اجلس"، فأبى، فتشهد أبو بكر 

، فمال إليه الناسُ، وتركوا عمر، فقال: "أما بعد، فمَن كان منكم يعبد محمدًا ﷺ، فإنَّ محمدًا ﷺ قد مات، ومَن كان يعبد الله، فإنَّ الله حيٌّ لا يموت، قال الله تعالى

 وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ أَفَإِنْ مَاتَ أَوْ قُتِلَ انْقَلَبْتُمْ عَلَى أَعْقَابِكُمْ وَمَنْ يَنْقَلِبْ عَلَى عَقِبَيْهِ فَلَنْ يَضُرَّ اللَّهَ شَيْئًا وَسَيَجْزِي اللَّهُ الشَّاكِرِينَ 

، فوالله لكأنَّ الناس لم يكونوا يعلمون أنَّ الله أنزل الآيةَ حتى تلاها أبو بكر 

، فتلقَّاها منه الناس، فما يسمع بشر إلا يتلوها.

அபூபக்கர் (ரலி) அவர்கள் மக்களை நோக்கி ”எனதருமை மக்களே! எனது உரையை செவிமடுத்துக் கேளுங்கள் உங்களில் யார் முஹம்மதை வணங்கினீர்களோ அவர் ஏனைய மனிதர்களை போலவே இறந்து போகக் கூடியவராக இருக்கின்றார். ஆனால் உங்களில் யார் முஹம்மதினுடைய இறைவனை வணங்கினீர்களோ அந்த இறைவன் தான் என்றென்றும் உயிர்வாழக் கூடியவன் மற்றும் என்றென்றும் நிலைத்திருப்பவன் என்று கூறி பின்வரும் வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

முஹம்மது(ஸல்) (இறைவனின்) தூதரே அன்றி (வேறு) அல்லர். அவருக்கு முன்னரும் (அல்லாஹ் வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றுவிட்டார்கள். அவர் இறந்துவிட்டால் அல்லது கொல்லப்பட்டால், நீங்கள் உங்கள் குதிகால்களின் மேல் (புறங்காட்டித்) திரும்பி விடுவீர்களா? அப்படி எவரேனும் தம் குதிகால்கள் மேல் (புறங்காட்டி) திரும்பி விடுவாரானால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்து விட முடியாது. அன்றியும், அல்லாஹ் நன்றி யுடையோருக்கு அதி சீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான்.                       ( அல்குர்ஆன்: 3: 144 )

இதன் பின்னர் நடந்ததை உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: “இறைவன் மீது  சத்தியமாக! அபூபக்கர் (ரலி) அவர்கள் ஓதிக்காட்டிய அந்த வசனத்தை செவியேற்ற பின்பு எனது உணர்வுகள் என்னை விட்டு அகன்றுவிட்டது! எனது பாதங்கள் நிலை கொள்ளவில்லை. இறைத்தூதர் {ஸல்} அவர்கள் மரணமடைந்துவிட்டார்களே என்பதை அறிந்தவுடன் நினைவற்ற நிலையில் நான் கீழே விழுந்து விட்டேன் என்று கூறினார்கள்.

ஆவேசத்தாலும், கோபத்தாலும் ஆட்பட்டிருந்த தன்னை கட்டுப் படுத்த முடியாத நிலையில் இருந்த உமர் (ரலி) அவர்களை கட்டுக்குள் கொண்டு வந்தது திருமறையின் ஒரு வசனம் தான்.

كان مسطح بن أثاثة ممن تكلم في الإفك، فلما أنزل الله براءة عائشة، قال أبو بكر الصديق: -وكان ينفق على مسطح بن أثاثة لقرابته منه وفقره- والله لا أنفق على مسطح شيئًا أبدًا بعد الذي قال لعائشة ما قال فأنزل الله

 وَلَا يَأْتَلِ أُولُو الْفَضْلِ مِنْكُمْ  

 إلى قوله وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ 

قال أبو بكر الصديق

بلى والله إني لأحب أن يغفر الله لي، فرجع إلى مسطح النفقة التي كان ينفق عليه، وقال والله لا أنزعها منه أبدًا

தன் அருமை மகளான ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அவதூறு பரப்பப்பட்டபோது அதில் பங்கெடுத்த மிஸ்தஹ் (ரலி) என்பவருக்கு இதற்கு முன்னால் தான் செய்து வந்த உதவியை இனிமேல் அவருக்கு டொடர்ந்து தரப்போவதில்லை என அபூபக்கர் (ரலி) சத்தியம் செய்தார்கள்.

அப்போது, அல்லாஹ். இன்னும், உங்களில் (இறைவனின்) கொடை அருளப் பெற்றவர்களும், தக்க வசதி உடையவர்களும், உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், (தம்மிடங்களை விட்டு) அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் (எதுவும்) கொடுக்க முடியாது என்று சத்தியம் செய்ய வேண்டாம். (அவர்கள் தவறு செய்திருப்பின்) அதை மன்னித்து (அதைப்) பொருட்படுத்தாமல் இருக்கவும், அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்ப மாட்டீர்களா? மேலும் அல்லாஹ் (பிழை பொறுப்பவன்) மிக மன்னிப்பவன், அன்பு மிக்கவன். (அல்குர்ஆன் : 24:22)

இந்த வசனத்தில் (உலுல் : பழ்ல்-செல்வம் படைத்தோர்) என்று அபூபக்கர் (ரலி) அவர் களையே அல்லாஹ் குறிப்பிட்டான். மஸாகீன் (ஏழைகள்) என்று மிஸ்தஹ் அவர்களைக் குறிப்பிட்டான். இதையடுத்து அபூபக்கர் (ரலி) அவர்கள் ஆம்! அல்லாஹ்வின் மீது ஆணையாக எங்கள் இறைவா எங்களை நீ மன்னிப்பதையே நாங்கள் விரும்பு கிறோம் என்று கூறி தாம் முன்பு செய்து வந்தது போலவே (மிஸ்தஹுக்குப் பொருள் உதவி) செய்து வரத்தொடங்கினார்கள்.      ( நூல்: புகாரி )

நிச்சயமாக அல்லாஹ் இந்த குர்ஆனைக் கொண்டு எத்தனையோ கூட்டத்தாரின் அந்தஸ்தை உயர்த்துகின்றான். இந்தக் குர்ஆனைக் கொண்டு (அதனை உதாசீனப்படுத்தும்) எத்தனையோ எத்தனையோ கூட்டத்தாரைத் தாழ்த்துகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம்:முஸ்லிம்)

முஸ்லிம் சமுதாயத்தைத் தாண்டி வரலாற்று ஆய்வாளர்கள் உட்பட அனைவராலும் அறியப்பட்ட பிரபலமான ஒருவர் தான் அபூஹுரைரா (ரலி) அவர்கள். ஹதீஸ் நூற்களில் எந்த ஒரு பாடத்திலும் நபி {ஸல்} அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள் என்ற சொற்றொடர் இடம் பெற்றிருக்கும்.

அந்த அளவிற்கு அதிகமான ஹதீஸ்களை அறிவித்த மிகப் பெரும் மேதையாக அவர்கள் திகழ்கிறார் என்றால் அதற்கு காரணம் திருமறையின் ஒரு வசனம்தான்.

عن أبي هريرة أنه قال: لولا آية في كتاب الله ما حدثتُ أحدًا شيئًا: { إِنَّ الَّذِينَ يَكْتُمُونَ مَا أَنزلْنَا مِنَ الْبَيِّنَاتِ وَالْهُدَى } الآية (10) .

இதைக் குறித்து அபூஹுரைரா(ரழி) அவர்கள் கூறுகிறார்கள். திருக்குர்ஆனின் ஒரு வசனம் மாத்திரம் இல்லாமல் இருந்திருக்குமாயின் நான் யாருக்கும் எதையும் அறிவித்திருக்கமாட்டேன்.

நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும் அதனை நாம் நெறிநூலில் மனிதர் களுக்காக விளக்கிய பின்னரும் யார் மறைக்கின் றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக் கிறான். மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள். (அல்குர்ஆன்: 2:159) என்று சுட்டிக்காட்டினார்கள்.

குர்ஆனைக் கற்றவர்களுக்குத் தான் முதலிடமும் மரியாதையும்…

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ ، عَنْ أَيُّوبَ ، عَنْ أَبِي قِلاَبَةَ ، عَنْ عَمْرِو بْنِ سَلِمَةَ ، قَالَ (1) : قَالَ لِي أَبُو قِلاَبَةَ : أَلاَ تَلْقَاهُ فَتَسْأَلَهُ ، قَالَ (1) فَلَقِيتُهُ فَسَأَلْتُهُ ، فَقَالَ :

كُنَّا بِمَاءٍ مَمَرَّ النَّاسِ ، وَكَانَ يَمُرُّ بِنَا الرُّكْبَانُ ، فَنَسْأَلُهُمْ : مَا لِلنَّاسِ ، مَا لِلنَّاسِ ؟ مَا هَذَا الرَّجُلُ ؟ فَيَقُولُونَ : يَزْعُمُ أَنَّ اللَّهَ أَرْسَلَهُ ، أَوْحَى إِلَيْهِ ، أَوْ أَوْحَى اللَّهُ بِكَذَا ، فَكُنْتُ أَحْفَظُ ذَلِكَ الْكَلاَمَ ، وَكَأَنَّمَا يُغْرَى فِي صَدْرِي ، وَكَانَتْ الْعَرَبُ تَلَوَّمُ بِإِسْلاَمِهِمُ الْفَتْحَ ، فَيَقُولُونَ : اتْرُكُوهُ وَقَوْمَهُ ، فَإِنَّهُ إِنْ ظَهَرَ عَلَيْهِمْ فَهُوَ نَبِيٌّ صَادِقٌ ، فَلَمَّا كَانَتْ وَقْعَةُ أَهْلِ الْفَتْحِ ، بَادَرَ كُلُّ قَوْمٍ بِإِسْلاَمِهِمْ ، وَبَدَرَ أَبِي قَوْمِي بِإِسْلاَمِهِمْ ، فَلَمَّا قَدِمَ قَالَ : جِئْتُكُمْ وَاللهِ مِنْ عِنْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم حَقًّا ، فَقَالَ : صَلُّوا صَلاَةَ كَذَا فِي حِينِ كَذَا ، وَصَلُّوا صَلاَةَ كَذَا فِي حِينِ كَذَا ، فَإِذَا حَضَرَتِ الصَّلاَةُ ، فَلْيُؤَذِّنْ أَحَدُكُمْ ، وَلْيَؤُمَّكُمْ أَكْثَرُكُمْ قُرْآنًا ، فَنَظَرُوا فَلَمْ يَكُنْ أَحَدٌ أَكْثَرَ قُرْآنًا مِنِّي ، لِمَا كُنْتُ أَتَلَقَّى مِنَ الرُّكْبَانِ ، فَقَدَّمُونِي بَيْنَ أَيْدِيهِمْ ، وَأَنَا ابْنُ سِتٍّ ، أَوْ سَبْعِ سِنِينَ ، وَكَانَتْ عَلَيَّ بُرْدَةٌ ، كُنْتُ إِذَا سَجَدْتُ تَقَلَّصَتْ عَنِّي ، فَقَالَتِ امْرَأَةٌ مِنَ الْحَيِّ : أَلاَ تُغَطُّوا عَنَّا اسْتَ قَارِئِكُمْ ، فَاشْتَزَوْا فَقَطَعُوا لِي قَمِيصًا ، فَمَا فَرِحْتُ بِشَيْءٍ فَرَحِي بِذَلِكَ الْقَمِيصِ.

ஆறு வயதில் இமாமத் செய்த அம்ரு பின் சலமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நாங்கள் மக்கள் கடந்து செல்லும் பாதையிலிருந்த ஒரு நீர் நிலையின் அருகே இருந்தோம். வாகனத்தில் பயணிப்பவர்கள் எங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். நாங்கள் அவர்களிடம், “”மக்களுக்கென்ன? மக்களுக்கென்ன? இந்த மனிதருக்கு (முஹம்மதுக்கு) என்ன?” என்று கேட்டுக் கொண்டிருந்தோம். அதற்கு அவர்கள், “”அந்த மனிதர் தன்னை அல்லாஹ் (இறைத் தூதராக) அனுப்பியிருப்பதாக…. அல்லது அல்லாஹ் அவரை இன்ன (குர்ஆன்) போதனைகளைக் கொடுத்து அனுப்பியிருப்பதாகக்…. கூறுகிறார்என்று (குர்ஆனின் சில வசனங்களை ஓதிக் காட்டிக்) கூறுவார்கள். உடனே நான் அந்த (இறை)வாக்கை மனப்பாடம் செய்து கொள்வேன். அது என் நெஞ்சில் பதிக்கப்பட்டது போல ஆகிவிட்டது. அரபுகள், தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள மக்கா வெற்றியை (தக்க தருணமாகக் கருதி) எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆகவே அவர்கள், “”அவரை அவருடைய குலத்தா(ரான குறைஷிய)ருடன் விட்டு விடுங்கள். ஏனெனில், அவர்களை அவர் வென்றுவிட்டால் அவர் உண்மையான இறைத்தூதர் தாம் (என்று நிரூபணமாகிவிடும்)என்று சொன்னார்கள்.

மக்கா வெற்றியாளர்கள் சம்பவம் நிகழ்ந்தவுடன் ஒவ்வொரு குலத்தாரும் விரைந்து வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். என் தந்தை என் குலத்தாருடன் விரைந்து இஸ்லாத்தை ஏற்றார். நபி (ஸல்) அவர்களிடமிருந்து என் தந்தை திரும்பி வந்த போது, “”அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உண்மையிலேயே நபி (ஸல்) அவர்களிடமிருந்து உங்களிடம் வந்துள்ளேன். நபி (ஸல்) அவர்கள், “”இன்ன தொழுகையை இன்ன வேளையில் தொழுங்கள்.

இன்ன வேளையில் இப்படித் தொழுங்கள். தொழுகை (வேளை) வந்து விட்டால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்; உங்களில் எவர் குர்ஆனை அதிகம் அறிந்து வைத்துள்ளாரோ அவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக் கட்டும்என்று சொன்னார்கள்எனக் கூறினார்கள். ஆகவே, மக்கள் (குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார் எனத்) துருவிப் பார்த்த போது நான் பயணிகளிடம் கேட்டு அறிந்துகொண்ட காரணத்தால் என்னை விட அதிகமாகக் குர்ஆனை அறிந்தவர்கள் எவரும் (எங்களிடையே) இருக்கவில்லை.

ஆகவே, (தொழுவிப்பதற்காக) என்னை அவர்கள் முன்னால் நிறுத்தினார்கள். நான் அப்போது ஆறு அல்லது ஏழு வயதுடைய(சிறு)வனாக இருந்தேன். நான் ஒரு சால்வையைப் போர்த்தி யிருந்தேன். நான் சஜ்தா செய்யும் போது அது என் முதுகை (விட்டு நழுவிப் பின் புறத்தைக்) காட்டிவந்தது. ஆகவே, அந்தப் பகுதிப் பெண்மணியொருவர், “”உங்கள் ஓதுவாரின் பின்புறத்தை எங்களிடமிருந்து மறைக்க மாட்டீர்களா?” என்று கேட்டார். ஆகவே, அவர்கள் (துணியொன்றை) வாங்கி வந்து எனக்குச் சட்டையொன்றை வெட்டித் தந்தார்கள். நான் அந்தச் சட்டையின் காரணத்தால் அடைந்த மகிழ்ச்சியைப் போல வேறெதனாலும் மகிழ்ச்சியடைந்ததில்லை.                                          ( நூல்: புகாரி ) 

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ قَالَ : حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ عَنْ عُبَيْدِ اللهِ عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ :

لَمَّا قَدِمَ الْمُهَاجِرُونَ الأَوَّلُونَ الْعُصْبَةَ – مَوْضِعٌ بِقُبَاءٍ – قَبْلَ مَقْدَمِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم كَانَ يَؤُمُّهُمْ سَالِمٌ مَوْلَى أَبِي حُذَيْفَةَ ، وَكَانَ أَكْثَرَهُمْ قُرْآنًا.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: முதல்கட்டமாக (மதீனாவிற்கு நாடு துறந்து வந்த) முஹாஜிரீன்கள்-குபா பகுதியில் உள்ள- அல்உஸ்பா எனும் இடத்திற்கு வந்(து சேர்ந்)த போது அங்குள்ள மக்களுக்கு அபூஹுதைஃபா (ரலி) அவர்களின் அடிமை சாலிம் (ரலி) அவர்களே அவர்களுக்கு தலைமை தாங்கித் தொழுவித்துக்கொண்டிருந்தார்கள்.

இது நபி (ஸல்) அவர்கள் நாடு துறந்து (மதீனாவிற்கு) வருவதற்கு முன்பு நடைபெற்றது. அவர் (சாலிம்) குர்ஆனை நன்கு ஓதத் தெரிந்தவராக இருந்தார். ( நூல்: புகாரி )

ஹுதைஃபா (ரலி) அவர்களின் அடிமை ஸாலிம் அவர்கள் அதிகம் திருக்குர்ஆன் மனனம் செய்திருந்ததால் அவர்கள் அடிமையாக இருந்தும் மற்றவர்களுக்கு தொழுவித்தார்கள்.

حدثنا إسحاق، أخبرنا مالك، عن أبي حازم، عن سهل بن سعد الساعدي؛ أن رسول الله صلى الله عليه وسلم جاءته امرأة فقالت: يا رسول الله، إني قد وَهَبت نفسي لك. فقامت قياما طويلا فقام رجل فقال: يا رسول الله، زَوّجنيها إن لم يكن لك بها حاجة. فقال رسول الله صلى الله عليه وسلم: "هل عندك من شيء تُصدقها إياه"؟ فقال: ما عندي إلا إزاري هذا. فقال رسول الله صلى الله عليه وسلم: "إن أعطيتها إزارك جلستَ لا إزار لك، فالتمس شيئا". فقال: لا أجد شيئا. فقال: "التمس ولو خاتما من حديد" فالتمس فلم يجد شيئا، فقال له النبي صلى الله عليه وسلم: "هل معك من القرآن شيء؟" قال: نعم؛ سورة كذا، وسورة كذا -لسور يسميها -فقال له رسول الله صلى الله عليه وسلم: "زوجتكها بما معك من القرآن"

ஒரு பெண்மணி தன்னையே இறைத்தூதருக்குகொடையாக அளிக்க  முன்வந்தாள்.  ஆனால்,  அவரை அண்ணலார்  திருமணம்  முடிக்கவில்லை.  அப்போது ஆங்கு  வீற்றிருந்த  தோழர்களில்  ஒருவர்  இறைவனின் தூதரே,  தங்களுக்கு  இப்பெண்ணை  மணமுடிக்கும் எண்ணம்  இல்லையெனில்  எனக்கு  மணமுடித்துத் தாருங்கள்  எனக்  கோரினார்.  அவளுக்கு  மஹராகக் கொடுக்க  உங்களிடம்  என்ன உள்ளது?  என விசாரித்தபோது  ஏதுமில்லை  என அவர் கையை விரித்தார்.

குர்ஆனில்  இருந்து  எதனையாவது  கற்று வைத்துள்ளாயா?  என  அடுத்த கேள்வியை அண்ணலார் தொடுத்தார்கள். ஆம், கற்றுள்ளேன்.  இன்னின்ன அத்தியாயங்களை அறிந்து  வைத்துள்ளேன். ஆழ் உள்ளத்திலிருந்து அவற்றை உங்களால் ஓதமுடியுமா?

ஆம், அப்படியெனில் இப்பெண்ணை அழைத்துச்செல், அந்தஅத்தியாயங்களுக்கு பகரமாக  (அதாவது அவற்றை இப்பெண்ணுக்கு கற்பிக்க வேண்டும் என்னும் நிபந்தனையின் கீழ்)  உங்களுக்கு மணமுடித்துத் தருகிறேன்  என்றார்கள்  அண்ணலார்.                                             ( நூல்: புகாரி, முஸ்லிம் )

வாழும்போதும்  மட்டுமல்ல,  இறந்த பின்பும்  குர்ஆனைக் கற்றவர்களுக்குத் தான்  முதலிடமும்  மரியாதையும். 

 

حَدَّثَنَا ابْنُ مُقَاتِلٍ ، أَخْبَرَنَا عَبْدُ اللهِ ، أَخْبَرَنَا لَيْثُ بْنُ سَعْدٍ ، حَدَّثَنِي ابْنُ شِهَابٍ ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا

أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم كَانَ يَجْمَعُ بَيْنَ الرَّجُلَيْنِ مِنْ قَتْلَى أُحُدٍ فِي ثَوْبٍ وَاحِدٍ ثُمَّ يَقُولُ أَيُّهُمْ أَكْثَرُ أَخْذًا لِلْقُرْآنِ فَإِذَا أُشِيرَ لَهُ إِلَى أَحَدِهِمَا قَدَّمَهُ فِي اللَّحْدِ وَقَالَ أَنَا شَهِيدٌ عَلَى هَؤُلاَءِ وَأَمَرَ بِدَفْنِهِمْ بِدِمَائِهِمْ وَلَمْ يُصَلِّ عَلَيْهِمْ وَلَمْ يُغَسِّلْهُمْ.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் உஹுதுப் போரில் கொல்லப்பட்டவர்களை இரண்டிரண்டு பேராக ஒரே ஆடையில் கஃபனிட்டுவிட்டு, “”இவர்களில் குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார்?” எனக் கேட்டார்கள். இருவரில் ஒருவர் சுட்டிக் காட்டப்பட்டதும் அந்த ஒருவரது உடலைக் கப்றின் உட்குழியில் முதலில் வைத்துவிட்டு, “”இவர்களுக்கு மறுமை நாளில் நானே சாட்சியாவேன்எனக் கூறினார்கள். பின்பு இரத்தத்துடனேயே அடக்குமாறு கட்டளையிட்டார்கள். இவர்கள் நீராட்டப்படவில்லை; இவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தவுமில்லை.                              ( நூல்: புகாரி ) 

 

 

ஆக, திருக்குர்ஆனோடு நெருங்கிய தொடர்புடையவர்கள் அனைவருமே உயர்வை அனுபவித்தார்கள். நேர்வழியில் நிலைத்திருந்தார்கள். நேரிய பாதையில் பயணித்தார்கள்.

சஹாபாக்களின் வாழ்வின் அனைத்து நிலைப்பாடுகளிலும் திருமறை வசனங்கள் தாக்கத்தை ஏற்படுத்தியது போன்று நம் வாழ்விலும் சிறந்த மாற்றம் ஏற்பட வேண்டுமெனில் நாம் ஓதுவதுடன் நிறுத்திக் கொள்ளாமல் திருமறையின் வசனங்களின் படி வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்.

நமக்கான நபிகளாரின் பயங்கரமான எச்சரிக்கை...

 كنا مع النبي - صلى الله عليه وسلم - فشخص ببصره إلى السماء، ثم قال: هذا أوان يختلس العلم من الناس، حتى لا يقدرون على شيء منه. فقال زياد بن لبيد الأنصاري: كيف يختلس منا، وقد قرأنا القرآن؟ فوالله، لنقرأنه ولنقرئنه نساءنا وأبناءنا. فقال: ثكلتك أمك يا زياد! إن كنت لأعدك من فقهاء أهل المدينة، هذه التوراة والإنجيل عند اليهود والنصارى،

ஜியாது இப்னு லபீத் (ரலி) அறிவிக்கின்றார்கள். “நபி(ஸல்) அவர்கள் ஏதோ ஒன்றைச் சொல்லிவிட்டு அதுதான் கல்வி அகற்றப்படும்போது நடக்கும் என்றார்கள். நான் அல்லாஹ்வின் தூதரே கல்வி எப்படி அகற்றப்படும்? நாங்கள்தான் குர்ஆனை ஓதிக் கொண்டிருக்கிறோமே எங்கள் குழந்தைகளுக்கும் அதைக் கற்றுக் கொடுக்கிறோமே. இப்படி ஒவ்வொரு தலைமுறையும் தங்கள் குழந்தைகளுக்கு மறுமை நாள் வரை கற்றுக் கொடுப்பார்களேபிறகு எப்படி கல்வி அகற்றப்படும்? என்று கேட்டேன். அதற்கு, நபி {ஸல்} அவர்கள் “ஜியாதே! உன் தாய் உன்னை இழக்கட்டும்! மதீனாவில் உள்ள மனிதர்களில் மார்க்க விளக்கம் கொண்ட ஒருவராக உன்னை நாள் கருதிக் கொண்டிருந்தேன். யூதர்களும், கிறித்தவர்களும் தவ்றாத்தையும் இன்ஜீலையும் ஓதி வருவதை நீ பார்க்கவில்லையா? ஆனாலும் அவர்கள் அதிலுள்ள எதையும் தங்களுக்குள் செயல் படுத்துவதில்லை” என்று சொன்னார்கள்.                                       ( நூல்: சுனன் இப்னு மாஜா )

குர்ஆன்படி செயல்படாத காலகட்டத்தில்தான் உலக அழிவு நாள் ஏற்பட இருக்கிறது என நபி {ஸல்} அவர்கள் எச்சரித்த செயல்பாடு இல்லாத காலகட்டத்தை நாம் நெருங்கிவிட்டோம் என்பதை நாம் வாழும் இந்த காலம் நமக்கு உணர்த்தவில்லையா?.

மேன்மை பொருந்திய திருமறையுடன் ஏனைய மாதங்களில் தொடர்பு இல்லாதவர்கள் கூட தொடர்பு வைக்கும் ஒரு மாதம் உண்டென்றால் அது தான் ரமழான் மாதம் இத்தகைய இந்த மாதத்தில் மட்டுமல்ல ஏனைய மற்ற காலக்கட்டத்திலும் கூட திருமறையுடனான நம் தொடர்பை வலுப்படுத்துவோம்.

குர்ஆனுடன் நம் தொடர்பு எப்படி இருக்கவேண்டும்?..

اتَّبِعُوا مَا أُنْزِلَ إِلَيْكُمْ مِنْ رَبِّكُمْ وَلَا تَتَّبِعُوا مِنْ دُونِهِ أَوْلِيَاءَ قَلِيلًا مَا تَذَكَّرُونَ

(மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து, உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள். அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர் (களாக்கி கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள். நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள். (அல்குர்ஆன்: 7: 3 )

قَالَ ابْنُ عَبَّاسٍ: ضَمِنَ اللَّهُ تَعَالَى لِمَنْ قَرَأَ الْقُرْآنَ وَعَمِلَ بِمَا فِيهِ أَلَّا يَضِلَّ فِي الدُّنْيَا، وَلَا يَشْقَى فِي الْآخِرَةِ، وتلا الآية. وعنه: مَنْ قَرَأَ الْقُرْآنَ وَاتَّبَعَ مَا فِيهِ هَدَاهُ اللَّهُ مِنَ الضَّلَالَةِ،

இப்னு அப்பாஸ் கூறினார்கள்: “எவன் அல்லாஹ்வின் திருமறையை பின்பற்று கின்றானோ அவன் இம்மையிலும் வழி கெடமாட் டான். மறுமையிலும் நஷ்டமடைய மாட்டான். பின்னர், இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் எவன் எனது நேர்வழியை பின்பற்றுவானோ அவன் வழி தவறவும், நஷ்டமடையவும் மாட்டான். (20:123) எனும் திருமறை வசனத்தை ஓதினார்கள்.

 

திருமறையை ஓதுவதுடன் நிறுத்திவிடாமல் செயல்படுத்துவதிலும், பின்பற்றுவதிலும் நாம் கவனம் செலுத்தவேண்டும்.

6 comments:

  1. அருமையான பதிவு

    ReplyDelete
  2. மாஷாஅல்லாஹ் அல்லாஹு உங்களுடைய கல்வியிலே பரக்கத் செய்வானாக ஆமீன்

    ReplyDelete
  3. மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக

    ReplyDelete
  4. மாஷா அல்லாஹ் சிறந்த பதிவு

    ReplyDelete
  5. Masha Allah very good information about Al Quraan with aayath and hadees with rawi jazakallahau qhair.

    ReplyDelete
  6. மாஷா அல்லாஹ். அருமையான பயான் குறிப்பு.

    ReplyDelete