Sunday 16 June 2024

இப்ராஹீம் நபியின் இதயம் அமைப்போம்!!!

 

இப்ராஹீம் நபியின் இதயம் அமைப்போம்!!!



இப்ராஹீம் (அலை) அவர்களின் இதயம் அமைப்போம்!

இப்ராஹீம் அலை அவர்களின் தனித்துவமான பண்புகளில் ஒன்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வதாகும்.

 

ஒரு காரியத்தை துவங்கும் போதும் ஒரு காரியத்தை முடிக்கும் போதும் பிரார்த்தனை செய்வார்கள்.

 

அந்த பிரார்த்தனை எப்படி அமைந்திருக்கும் என்றால் தமக்கும் தம் சந்ததிகளுக்கும் ஒரு இடம் இருக்கும்.

 

ஊருக்கும் நாட்டுக்கும் ஒரு இடம் இருக்கும்.

 

இறைநம்பிக்கையாளர்களுக்கும் ஒரு இடம் இருக்கும்.

 

மறக்காமல் தீனில் நிலைத்திருக்கக் கோரும் கோரிக்கை இடம் பெற்றிருக்கும்..

 

மார்க்கப்பற்றுடன் வாழும் விண்ணப்பம் இடம் பெற்றிருக்கும்..

 

எல்லாவற்றுக்கும் மேலாக கபூலிய்யத்தின் தேட்டம் இடம் பெற்றிருக்கும்.

 

இறை நம்பிக்கையாளர்களாகிய நாமும் நம் வாழ்வில் அவசியம் இந்த பண்புகளை கொண்டவர்களாக வாழ வேண்டும் என்ற ஆசையை இந்த தியாகத்திருநாளின் சிந்தனையாக அமைத்துக் கொள்வோம்.

 

இப்ராஹீம் (அலை) அவர்களின் சுயநலமில்லாத இந்த பண்புகள் நாம் நம் வாழ்வில் ஏற்று நடந்திட முன்மாதிரியான பண்புகள் ஆகும்.

 

ஆகவே தான் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் 

 

قَدْ كَانَتْ لَـكُمْ اُسْوَةٌ حَسَنَةٌ فِىْۤ اِبْرٰهِيْمَ 

 

இப்ராஹீமிடம் நிச்சயமாக உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது;

( அல்குர்ஆன்: 60: 4 )

 

குறிப்பாக, தேச நலனும் சமூக நலனும் மிகவும் கவனிக்கத்தக்கதாகும்.

 

தாம் ஏற்றிருக்கும் கொள்கையை தம் தேசமும், தம் சமூகமும் தம் சமூகத்தில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு வரும் சமூகமும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

 

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْمُ‏

 

இப்ராஹீமும், இஸ்மாயீலும் இவ்வீட்டின் அடித்தளத்தை உயர்த்திய போது, “எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்” (என்று கூறினார்)

 

رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَـكَ وَ مِنْ ذُرِّيَّتِنَآ اُمَّةً مُّسْلِمَةً لَّكَ وَاَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا اِنَّكَ اَنْتَ التَّوَّابُ الرَّحِيْمُ‏

 

எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக; எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை) ஆக்கி வைப்பாயாக; நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக; எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.

 

رَبَّنَا وَابْعَثْ فِيْهِمْ رَسُوْلًا مِّنْهُمْ يَتْلُوْا عَلَيْهِمْ اٰيٰتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَ يُزَكِّيْهِمْ‌ اِنَّكَ اَنْتَ الْعَزِيْزُ الْحَكِيْمُ

 

எங்கள் இறைவனே! அவர்களிடையே உன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து; அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுத்து; அவர்களைத் தூய்மைப்படுத்தக் கூடிய ஒரு தூதரை அவர்களிலிருந்தே எழுந்திடச் செய்வாயாக - நிச்சயமாக நீயே வல்லமை மிக்கோனுமாகவும், பெரும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றாய்.” ( அல்குர்ஆன்: 2: 127 - 129 )

தேசத்தை நேசிப்பதும், சமூகத்தை நேசிப்பதும் இப்ராஹீம் (அலை) அவர்களின் நடைமுறை!!

நாட்டு நலன்நாட்டுப் பற்றை முஸ்லிம் சமூகத்திற்கு யாரும் கற்றுத் தர வேண்டிய அவசியம் எந்தக் காலத்திலும் யாருக்கும் இல்லை.

அது முஸ்லிம் சமூகத்தின் இரத்த நாளங்களில் இரண்டறக் கலந்த ஒன்றாகும்.

وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَٰذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ

இரண்டே இரண்டு ஜீவன்களை சுமந்து நின்ற ஒரு பூமியை "நிம்மதி தரும் பூமியாகஅங்கு இனிமேல் வாழ இருக்கும் உருவாக இருக்கும் மக்களுக்கு நெருக்கடி இல்லாத ரிஜ்க் வாழ்வாதாரம் செழிக்கும் பூமியாக" அமைத்து தந்திடு என் இறைவா! என இறைவனிடம் இறைஞ்சிக் கேட்ட இறைத்தூதர் இப்ராஹீம் நபியின் பிரார்த்தனையை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தான் பிறந்த தாய் நாட்டை நேசிப்பது தாய் நாட்டின் மீது ஏற்படும் பற்று என்பது அது ஒவ்வொரு மனிதனுக்கும் ஏற்படும் இயற்கையான பண்பாகும் என்று இஸ்லாம் கூறுகிறது.

தாய் நாட்டை நேசிக்கும் பண்பை ஒரு மனிதன் தன் உயிரை நேசிப்பது போன்று உணர்வான் என்று ஓரிடத்தில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

لقد اقترن حب الأرض في القرآن الكريم بحب النفس، قال تعالى: {وَلَوْ أَنَّا كَتَبْنَا عَلَيْهِمْ أَنِ اقْتُلُوا أَنفُسَكُمْ أَوِ اخْرُجُوا مِن دِيَارِكُم مَّا فَعَلُوهُ إِلَّا قَلِيلٌ مِّنْهُمْ} [النساء: 66]،

மேலும், நாம் (அவர்களைப் பார்த்து) நீங்கள் உங்களை வெட்டி மாய்த்துக் கொள்ளுங்கள், அல்லது உங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேறிவிடுங்கள்என்று கட்டளைவிட்டிருப்போமானால், அவர்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் அவ்வாறு செய்திருக்க மாட்டார்கள் - அவர்கள் தங்களுக்கு உபதேசம் செய்யப்பட்டபடி நடந்திருப்பார்களானால், அது அவர்களுக்கு நன்மையாகவும், (அவர்கள் நம்பிக்கையை) மிகவும் உறுதிப்படுத்துவதாகவும் இருந்திருக்கும். ( அல்குர்ஆன்: 4: 66 )

இன்னொரு இடத்தில் மார்க்கத்தோடு இணைத்து அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

واقترن في موضع آخر بالدين: {لَّا يَنْهَاكُمُ اللَّهُ عَنِ الَّذِينَ لَمْ يُقَاتِلُوكُمْ فِي الدِّينِ وَلَمْ يُخْرِجُوكُم مِّن دِيَارِكُمْ أَن تَبَرُّوهُمْ وَتُقْسِطُوا إِلَيْهِمْ} [الممتحنة: 8]، كل هذا يدل على تأثير الأرض، وعلى أن طبيعة الإنسان التي طبعه الله عليها حب الوطن والديار.

மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்கவில்லை - நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான்.

عن عبد الله بن عباسٍ رضي الله عنهما أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم لمكة: «ما أطيبكِ من بلد، وأحبَّكِ إليَّ! ولولا أن قومي أخرجوني منكِ ما سكنتُ غيركِ»

நபி {ஸல்} அவர்கள் ஹிஜ்ரத் பயணத்தின் போது மக்கா நகரை நோக்கி மக்காவே நீ உலகிலேயே எனக்கு மிகவும் விருப்பமான பூமி. அல்லாஹ்விடத்தில் மிகவும் கண்ணியமான தேசம். உன் சமூகம் என்னை விரட்டியிருக்காவிட்டால் நான் உன்னை விட்டுச் சென்றிருக்க மாட்டேன்என்று கூறினார்கள். (முஸ்னத் அபூயஃலா).

وأخرج الأزرقي في (أخبار مكة) عن ابن شهاب قال: "قدم أصيل الغفاري قبل أن يضرب الحجاب على أزواج النبي فدخل على عائشة رضي الله عنها فقالت له: يا أصيل! كيف عهدت مكة؟ قال: عهدتها قد أخصب جنابها، وابيضت بطحاؤها، قالت: أقم حتى يأتيك النبي فلم يلبث أن دخل النبي، فقال له: «يا أصيل! كيف عهدت مكة؟» قال: والله عهدتها قد أخصب جنابها، وابيضت بطحاؤها، وأغدق أذخرها، وأسلت ثمامها، فقال: «حسبك يا أصيل لا تحزنا» (وأخرجه باختصار أبو الفتح الأزدي في كتابه "المخزون في علم الحديث، وابن ماكولا في الإكمال)، وفيه قال رسول الله صلى الله عليه وسلم: «ويها يا أصيل! دع القلوب تقر قرارها» أرأيت كيف عبر النبي الكريم محمد صلى الله عليه وسلم عن حبه وهيامه وحنينه إلى وطنه بقوله: «يا أصيل دع القلوب تقر»

 

மாநபி {ஸல்} அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனா வந்த சில நாட்களுக்குப் பின்னர் மக்காவில் இருந்து அஸீலுல் ஃகிஃபாரி (ரலி) எனும் நபித்தோழர் மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் மேற்கொண்டார். மதீனா வந்தடைந்ததும் நேராக மாநபி {ஸல்} அவர்களைக் காண நபி {ஸல்} அவர்களின் வீட்டிற்கு வந்தார்கள். வீட்டில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் இருந்தார்கள். அஸீலைப் பார்த்ததும் முதல் விஷயமாக அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் நீர் மக்காவில் இருந்து புறப்படும் போது மக்கா எப்படி இருந்தது? என்று கேட்டார்கள். அதற்கவர், மக்காவின் பசுமையான காட்சிகளை வார்த்தையால் வர்ணிக்க ஆரம்பித்த அந்த நேரத்தில் ஆயிஷா (ரலி) அவர்கள் கொஞ்சம் பொறுத்திருங்கள்! இதோ நபி {ஸல்} இப்போது வந்து விடுவார்கள். வந்ததும் சொல்லுங்கள் என்றார்கள்.

 

சற்று நேரத்திலேயே அங்கு வந்த மாநபி {ஸல்} அவர்களும் சொல்லி வைத்தாற் போன்று முதலாவதாக கேட்ட விஷயம் மக்கா எப்படி இருக்கின்றது? என்பது தான். அப்போது, அஸீலுல் ஃகிஃபாரி (ரலி) அவர்கள் மக்காவின் அழகை அதன் பசுமையை, அதன் எழிலை வர்ணித்த அந்த விதம் மாநபி {ஸல்} அவர்கள் தமது கண் முன்னே மக்காவை கொண்டு வந்து நிறுத்தியது போல் உணர்ந்தார்கள். போதும், போதும்.. மீண்டும் மீண்டும் அந்த மக்காவைப் பற்றி பேசி எம்மை கவலையில் ஆழ்த்தி விட வேண்டாம்!என்று கூறினார்கள்.

 

இன்னொரு அறிவிப்பில்.. அஸீலே! என் இதயம் ஆசுவாசமாக இருக்க விட்டு விடுவீராக!என்று கூறினார்கள். ( இந்த நிகழ்வு பர்தாவின் சட்டம் இறக்கப்படும் முன்பு நிகழ்ந்த சம்பவம் ஆகும். ) ( நூல்: அஃக்பாரு மக்கா )

 

நபி {ஸல்} அவர்களால் வார்த்தெடுக்கப்பட்ட தோழர்களும் பிறந்த மண்ணை நேசித்தார்கள். ஹிஜ்ரத் செய்து மதீனா வந்தபின் அங்குள்ள இடத்தின் சூழல் ஒத்துக்கொள்ளாமல் காய்ச்சலில் விழுந்த அபூபக்கர் சித்திக் (ரலி)பிலால் (ரலி) போன்றவர்கள்  பிறந்த மண்ணை நினைத்து வெளிப்படுத்திய கவிதைகள் பிரச்சித்தி பெற்றது.

 

 

وإن بلالاً الذي ضحى بكل شيء في سبيل عقيدته ودينه هو بلال الذي كان يهتف في دار الهجرة بالحنين إلى مكة في أبيات تسيل رقة وتقطر حلاوة:

 

ألا ليت شعري هل أبيتن ليلة *** بواد وحولي أذخر وجليل

 

 وهل أردن يومًا مياه مجنة *** وهل يبدون لي شامة وطفيل

 

இத்கிர் மற்றும் ஜலீல் என்ற பசுமையான புற்றரைகள் என்னைச் சூழ இருக்க மக்காவின் அந்தப் பள்ளத்தாக்கில் ஓர் இரவேனும் தூங்கும் நாள் எனக்குக் வரக் கூடாதா?; மஜன்னாவின் (மக்காவின்; ஒரு இடம்) நீரைப் பருகும் வாய்ப்பு ஒரு நாளேனும் கிட்டாதா? ஷாமா, துஃபைல் என்ற இரு மலைகளும் எனக்குத் தென்படக் கூடாதா? என பிலால் (ரலி) தமது தேச உணர்வின் மன உளைச்சலை கவியாக பாடியுள்ளார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)  நூல்:புகாரி.1889, 3926.

 

நபித்தோழர்கள் முதல் பின்னால் வந்த தாபியீன்கள், தபவுத் தாபியீன்கள், ஹதீஸ்கலை வல்லுனர்கள், திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள், இமாம்கள் என அனைவரும் தங்களது பெயரோடு தங்களது தாய் பூமியின் பெயரையும் இணைத்து அழைப்பதையே விரும்பினார்கள்.

 

ஸல்மான் அல் ஃபார்ஸி (ரலி), ஸுஹைப் இப்னு ஸினான் அர் ரூமீ (ரலி), பிலால் அல் ஹபஷீ (ரலி), இமாம் புகாரி (ரஹ்) இமாம் திர்மிதீ (ரஹ்), இமாம் நஸாயீ (ரஹ்).

 

ஆக இஸ்லாம் எப்படி கொள்கை கோட்பாடுகளை சொல்லித் தந்திருக்கின்றதோ அதே போன்று தம் நாட்டின் மீதான பற்றையும் அதை வெளிப்படுத்துவதன் எல்லையையும் சேர்த்தே சொல்லித் தந்திருக்கின்றது. அந்த வகையில் இஸ்லாத்தின் கொள்கைக்கு முரண்பாடில்லாத வகையில் ஒவ்வொரு முஸ்லிமும் இந்த நாட்டின் மீது நலனும், அக்கறையும், பற்றும் கொண்டிருக்கின்றனர்

சொந்த சமூகத்தின் மீதான நேசம்....

 

عن عكرمة، عن ابن عباس قال: أسرت الروم عبد الله بن حذافة السهمي، صاحب النبي صلى الله عليه وسلم، فقال له الطاغية: تنصّر وإلا ألقيتك في البقرة، لبقرة من نحاس، قال: ما أفعل. فدعا بالبقرة النحاس فملئت زيتاً وأغليت، ودعا برجل من أسرى المسلمين فعرض عليه النصرانية، فأبى، فألقاه في البقرة، فغذا عظامه تلوح، وقال لعبد الله: تنصّر وإلا ألقيتك. قال: ما أفعل.

 

உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் ரோமை நோக்கி அனுப்பப்பட்ட ஒரு படைக்கு அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபதுஸ் ஸஹ்மீ (ரலி) தளபதியாக நியமிக்கப் பட்டார்கள்.

 

நீண்ட போராட்டத்திற்கு பின் முஸ்லிம் படையினர் கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.

 

முஸ்லிம்கள் கடும் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். அப்துல்லாஹ் (ரலி) தளபதியல்லவா? கொஞ்சம் கூடுதலாகவே சித்ரவதை செய்யப்பட்டார்கள்.

 

அவர்களுக்கு முன்னால் தோன்றிய ரோம அரசன் இஸ்லாத்தை விட்டு விடுமாறு கூறி கட்டாயப்படுத்தினான். தொடர்ந்து சித்ரவதையை மேற்கொள்ளுமாறு தம் பணியாளர்களுக்கு கட்டளையிட்டான்.

 

ஆனால், கொஞ்சம் கூட இசைந்து கொடுக்க வில்லை அப்துல்லாஹ் (ரலி) அவர்கள்.

 

உடனடியாக மிகப்பெரிய அடுப்பு தயார் செய்யப்பட்டு மிகப் பிரமாண்டமான அண்டா வரவழைக்கப்பட்டு அண்டா முழுவதும் நீரால் நிரப்பப்பட்டது.

 

தீ மூட்டப்பட்டு, தண்ணீர் கொதிக்க வைக்கப்பட்டது. கொதிக்கும் தண்ணீருக்கு முன்னால் கொண்டு வரப்பட்ட அப்துல்லாஹ் (ரலி) அவர்களை நோக்கி நீர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டால் உம்மை நான் விட்டு விடுகின்றேன்என்றான் அரசன்.

 

ஒரு போதும் நான் அத்தகைய இழிவான காரியத்தை செய்ய மாட்டேன் என்று கூறினார் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள்.

 

கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த முஸ்லிம்களில் ஒருவரை பிடித்து கொதிக்கும் வெந்நீருக்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்தி இஸ்லாத்தை விட்டு விட்டால் உம் உயிரை காப்பாற்றிக் கொள்ளலாம் என்ன சொல்கிறாய்? என்று கேட்டான் அரசன்.

 

என் உயிரை விட இஸ்லாமே மேலானது என்றார் அவர். உடனே கொதிக்கும் நீரில் தூக்கி போட்டான். கை வேறு கால் வேறு என உடலின் அத்துணை அங்கங்களும் பிரிந்து போனது. இதைக் கண்ணுற்ற அப்துல்லாஹ் (ரலி) அப்படியே கதறுகின்றார்கள்.

 

மீண்டும் இன்னொரு முஸ்லிம் கொண்டு வரப்பட்டு அது போன்றே கொடூரமாக கொலை செய்யப்படுகின்றார்.

 

மீண்டும் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் முன் வந்த அரசன் அடுத்து நீ தான் என்ன சொல்கின்றாய்? மதம் மாறுகின்றாயா? இல்லையா? என்று கேட்டான்.

 

فأمر به أن يلقى في البقرة فبكى، فقالوا: قد جزع، قد بكى: قال ردوه. قال: لا ترى أني بكيت جزعاً مما تريد أن تصنع بي، ولكني بكيت حيث ليس لي إلا نفسٌ واحدة يفعل بها هذا في الله، كنت أحب أن يكون لي من الأنفس عدد كل شعر في، ثم تسلّط علي فتفعل بي ذها.

 

அவர்கள் மறுக்கவே, தலை கீழாக கட்டப்பட்டு கொதிக்கும் நீரின் மேலாக தொங்க விடப்படுகின்றார்கள். ஒரு கட்டத்தில் தேம்பி தேம்பி அழுகின்றார்கள்.

 

இந்த செய்தி அரசனுக்கு தெரிவிக்கப்பட்டு, அரசன் அவர்களை அவிழ்த்து விடச் சொல்லி அருகில் அழைத்து அழுததின் காரணம் என்ன என்று கேட்டான்.

 

நான் ஒன்றும் நீ ஏற்பாடு செய்திருக்கின்ற இந்த தண்டனையைக் கண்டு அஞ்சி நடுங்கி அழவில்லை. மாறாக, என்னிடம் சன்மார்க்கத்திற்காக கொடுப்பதற்கு இந்த உயிரைத் தவிர வேறு உயிரை என்னுள் அல்லாஹ் படைக்கவில்லையே என்று தான்.

 

அல்லாஹ் மாத்திரம் என் தலைமுடியின் அளவுக்கு உயிர் கொடுத்திருப்பானேயானால் அவையனைத்தையும் சத்திய மார்க்கத்திற்கு சன்மானமாக வழங்கியிருப்பேனே! என்று நினைத்து தான் நான் அழுகின்றேன் என்றார்கள்.

 

قال: فأعجب منه: وأحبّ أن يطلقه، فقال: قبل رأسي وأطلقك. قال: ما أفعل. قال تنصّر وأزوجك بنتي وأقاسمك ملكي. قال: ما أفعل. قال قبل رأسي وأطلقك وأطلق معك ثمانين من المسلمين. قال: أما هذه فنعم. فقبّل رأسه، وأطلقه، وأطلق معه ثمانين من المسلمين.

 

இதுவரை மரணத்தின் விளிம்பில் நிற்கிற எத்தனையோ மனிதர்களின் கெஞ்சல்களை கேட்டுப் பழகிய அரசனுக்கு அப்துல்லாஹ் (ரலி) அவர்களின் இந்த அணுகுமுறை புதிதாகத் தோன்றியது.

 

அப்படியே ஆச்சர்யத்தின் உச்சத்திற்கே சென்ற அரசன் அவரை விடுவிக்க ஆசை கொண்டான். அருகில் சென்ற அரசன் எனது நெற்றியில் முத்தமிடும்! உம்மை விடுதலை செய்கின்றேன்! நீர் கிறிஸ்துவனாக மதம் மாறிவிடு! உமக்கு எனது மகளை திருமணம் செய்து தருகின்றேன். எனது ஆட்சியில் பாதி நிலப்பரப்பை ஆளும் அதிகாரத்தைத் தருகின்றேன்என்றான். 

 

ஒரு போதும் நான் அதற்கு சம்மதிக்க மாட்டேன் என்று கூறினார். அதற்கு அந்த அரசன் என் நெற்றியில் முத்தமிட்டால் நான் உம்மையும் உம்மோடு சிறை பிடித்திருக்கிற உம்முடைய படை வீரர்கள் 80 நபர்களை விடுதலை செய்து விடுகின்றேன்என்று கூறினான்.

 

அதற்கு, அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபத்துஸ் ஸஹ்மீ (ரலி) அவர்கள் அப்படி என்றால் உலகில் நீ தான் மிகச் சிறந்த மனிதன் இப்போதே உம் நெற்றியின் மீது முத்தமிடுகின்றேன்என்று கூறி முத்தமிட்டார்கள்.

 

فلما قدموا على عمر بن الخطاب قام إليه عمر فقبل رأسه، قال: فكان أصحاب رسول الله صلى الله عليه وسلم يمازحون عبد الله فيقولون: قبلت رأس علج، فيقول لهم: أطلق الله بتلك القبلة ثمانين من المسلمين.

 

சக தோழர்களை விடுவித்த மகிழ்ச்சியில் மதீனா நோக்கி வந்த அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபத்துஸ் ஸஹ்மீ (ரலி) அவர்களை மதீனாவின் எல்லையில் பெரும் கூட்டத்தோடு வந்து நின்று வரவேற்றார்கள் கலீஃபா உமர் (ரலி) அவர்கள்.

 

சுற்றியிருந்த மக்களில் சிலர் உயிருக்கு பயந்து எதிரியின் நெற்றியில் முத்தமிட்டு வந்த கோழைஎன்பதாக விமர்சித்து அப்துல்லாஹ் (ரலி) அவர்களை கேலி பேசினர்.

 

உடனே, உமர் (ரலி) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா (ரலி) அவர்களின் நெற்றியில் முத்தம் பதித்துவிட்டு சுற்றியிருந்த மக்களை நோக்கி அவர் கொடுத்த ஒரு முத்தம் தான் 80 முஸ்லிம்களின் உயிரையும், ஈமானையும் காப்பாற்றியுள்ளதுஎன்று கூறினார்கள். ( நூல்: உஸ்துல் ஃகாபா )

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்திய தொழிலதிபர் பிரோஸ் மெர்ச்சண்ட் (வயது 66) ப்யூர் கோல்ட் நகைக்கடையின் உரிமையாளர் ஆவார். இவர் 'தி பர்காட்டன் சொசைட்டி' என்ற தொண்டு நிறுவனம் மூலம் 2008 ம் ஆண்டு முதல் பல நல்ல காரியங்களும் செய்து வருகிறார். கருணை உள்ளம் படைத்த இவர், வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான கைதிகள் விடுதலையாகி சொந்த ஊர் செல்ல உதவி வருகிறார்.

 

அப்படித்தான் பிரோஸ் மெர்ச்சண்ட் , இந்த ஆண்டு 2024 ரம்ஜான் பண்டிகைக்கு முந்தைய நல்லெண்ண நடவடிக்கையாக, 900 கைதிகளை விடுவிக்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகளுக்கு 10 லட்சம் திர்ஹம் (நஷ்ட) ஈட்டுத்தொகை வழங்கினார்.

 

அமீரகம் முழுவதும் உள்ள சிறைகளில் உள்ள 900 கைதிகளை விடுவிக்க பியூர் கோல்ட் நிறுவனம் சார்பாக சுமார் 2.25 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார்.

 

குறிப்பாக அஜ்மானைச் சேர்ந்த 495 கைதிகள், புஜைராவிலிருந்து 170 கைதிகள், துபாயில் இருந்து 121 கைதிகள், உம்முல் குவைனில் இருந்து 69 கைதிகள் மற்றும் ர் ராஸ் அல் கைமாவிலிருந்து 28 கைதிகளை விடுவிக்க முக்கிய பங்கு வகித்துள்ளார்.

 

மேலும், பிரோஸ் மெர்ச்சண்ட் மூலமாக 

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முழுவதும் உள்ள மத்திய சிறைகளில் இருந்து 

ஏற்கனவே பல ஆண்டுகளாக பல்வேறு மதம் மற்றும் நாடுகளைச் சேர்ந்த 20,000 கைதிகள் விடுதலை பெற்று தங்கள் குடும்பத்துடன் வாழ முக்கிய பங்கு வகித்துள்ளார்.

 

அத்துடன் சிறையில் வாடியவர்களின் கடன்களை அடைத்து அவர்களைசொந்த நாட்டிற்கு திரும்ப விமான டிக்கெட்டுகளுக்கான நிதியையும் பிரோஸ் மெர்ச்சண்ட் மூலம் வழங்கி வருவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.

 

மேலும், 2024 ஆம் ஆண்டில் 3,000 க்கும் மேற்பட்ட கைதிகளை விடுதலை செய்ய வைக்க வேண்டும் என்பதே தனது நோக்கம் என்றும் பிரோஸ் மெர்ச்சண்ட் கூறினார். ( நன்றி: ஒன் இந்தியா, 27/02/2024 )

 

பிழைக்க வந்த இடத்தில் அறியாமையாலோ, தவறுதலாகவோ, அல்லது ஏதேனும் கவனக்குறைவின் காரணமாகவோ குற்றம் செய்து தமது வாழ்க்கையை இழந்து சிறையில் வாடும் எண்ணற்ற நிராயுதபாணியான முஸ்லிம் சிறைவாசிகளை மீட்டு அவர்களை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வர துடிக்கும் இத்தகைய மனித நேயம் என்பது ஒருவர் தம் சொந்த சமூகத்தின் மீது எவ்வளவு தூரம் நேசம் வைத்திருக்கிறார் என்பதற்கான அடையாளமாகும்.

 

ஆகவே, நாமும் நம் தேசத்தின் மீது நலன் நாட வேண்டும். நம் சமூகத்தின் மீதும் நலன் நாட வேண்டும்.

 

இதுவும் இப்ராஹீம் (அலை) அவர்களின் அழகிய நடைமுறைகளில் ஒன்றாகும்.

2 comments:

  1. மாஷா அல்லாஹ்

    அருமை அருமை

    ReplyDelete
  2. நாட்டுப்பற்றை வித்தியாசமான கோணத்தில் தாங்கள் அலசி ஆராய்ந்து இந்த பயான் குறிப்புகளை வழங்கியுள்ளீர்கள்.
    الحمد لله وجزاكم الله خير الجزاء يا استاذ الكريم

    ReplyDelete