வழிகாட்டும் வான்மறை - தராவீஹ் சிந்தனை - 13.
மனந்திறந்து பாராட்டுவோம்!!!
12 –ஆவது நோன்பை
நிறைவு செய்து,
13 –ஆவது நாள் தராவீஹ் தொழுகையை மிகச் சிறப்பாக முடித்து விட்டு
அடுத்த நோன்பு நோற்பதற்கான ஆயத்தப்பணிகளில் நாம் ஈடுபட்டு இருக்கின்றோம்.
அல்ஹம்துலில்லாஹ்!
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது நோன்பையும், தராவீஹ் தொழுகையையும்
கபூல் செய்வானாக! எஞ்சியிருக்கிற நாட்களின் நோன்புகளையும், வணக்க,
வழிபாடுகளையும் எவ்வித தடங்கலும் இன்றி பரிபூரணமாக
நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் நல்குவானாக! ஆமீன்!!
இன்றைய நாளின்
தராவீஹ் தொழுகையில் அல் கஹ்ஃப்
அத்தியாயத்தின் சிறு பகுதியும் மர்யம், தாஹா ஆகிய அத்தியாயங்கள் நிறைவு செய்யப்பட்டு, அல் அன்பியா அத்தியாயத்தின் சில பகுதிகள் என 318 வசங்கள் ஓதப்பட்டிருக்கின்றது.
ஓதப்பட்ட பல
இடங்களில் மனித குலத்திற்கு தேவையான அற்புதமான வழிகாட்டல்கள், இம்மை,
மறுமை சார்ந்த பல்வேறு கட்டளைகள், நபி ஜகரிய்யா,
நபி யஹ்யா, நபி ஈஸா, நபி இப்ராஹீம்,
நபி இஸ்மாயீல், நபி இஸ்ஹாக், நபி மூஸா,
நபி ஹாரூன், நபி இத்ரீஸ்
(அலைஹிமுஸ்ஸலாம்) ஆகியோர்களின் வரலாறு என அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பல்வேறு
விஷயங்களை பேசுகின்றான்.
சூரா மர்யமில்
அல்லாஹ் ரப்புல் ஆலமீன்,
ஜகரிய்யா (அலை) அவர்களை, யஹ்யா (அலை) அவர்களை, மர்யம் (அலை) அவர்களை,
இப்ராஹீம் (அலை) அவர்களை, மூஸா (அலை) அவர்களை,
இஸ்மாயில் (அலை) அவர்களை, இத்ரீஸ் (அலை) அவர்களை அவர்களிடம் இருந்த சிறப்புப் பண்புகளை அடையாளமிட்டுக்
கூறி பாராட்டுகின்றான். அவர்களின் அந்த பண்புகளால் அவர்களின் அந்தஸ்துகளை
உயர்த்தியதாகவும் கூறுகின்றான்.
وَاذْكُرْ فِي الْكِتَابِ إِبْرَاهِيمَ إِنَّهُ كَانَ صِدِّيقًا
نَبِيًّا
உதாரணமாக
இப்ராஹீம் (அலை) அவர்களை நபி என்று அடையாளப்படுத்தினாலே போதுமானதாகும். ஆனால், அவரிடம் காணப்பட்ட வாய்மையை அல்லாஹ் முற்படுத்திக்கூறி அதன் பின்னரே நபி என்று
அடையாளப்படுத்துகின்றான்.
எந்தளவுக்கு
இப்ராஹீம் (அலை) வாய்மையோடு இருந்தார்கள். ஏகத்துப் பிரச்சாரத்தை தம் தந்தையிடம்
அவர் வெறுக்கும் வரை,
விரட்டி அடிப்பேன் என்று ஒதுக்கும் வரை முன் வைத்துக்
கொண்டே இருந்தார்.
இதற்காக அல்லாஹ்
கொடுத்த சன்மானம் என்ன?
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் வயது முதிர்ந்த நிலையில் இரண்டு
ஆண்மக்களை கொடுத்தான். இரண்டு மக்களையும் நபியாக கொடுத்தான் என்று முடிக்கின்றான்.
சூரா
மும்தஹினாவின் நான்காவது வசனத்தில் சூரா அல் அன்ஆமுடைய 80, 81 வது வசனத்தில் இதே
போன்றே அவர்களின் சொந்த சமூகத்தோடும், ஏகத்துவ பிரச்சாரத்தை
முன்னெடுத்துச் சென்றதோடு,
அல்லாஹ்வுக்காக பகைமை பாராட்டி அவர்களின் இணைவைப்புக்
கொள்கையில் இருந்து ஒதுங்கி வாய்மையோடு வாழ்ந்து கொண்டிருந்தார்.
இதற்காக அல்லாஹ்
வழங்கிய சன்மானம் என்ன?
உலக மக்களுக்கெல்லாம் முன்மாதிரியான மனிதராக அல்லாஹ் ரப்புல்
ஆலமீன் இப்ராஹீம் (அலை) ஆக்கினான் என்று அந்த ஆயத்தின் தொடரை முடிக்கின்றான்.
அடுத்து, மூஸா (அலை) அவர்களை நபி என்றும் ரஸூல் என்றும் கூறியிருந்தால் போதுமானது தான்.
وَاذْكُرْ فِي الْكِتَابِ مُوسَى إِنَّهُ كَانَ مُخْلَصًا وَكَانَ
رَسُولًا نَبِيًّا
ஆனால், அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மூஸா (அலை) மனத்தூய்மை நிறைந்தவராய் காணப்பட்டார்
என்று பாராட்டிப் பேசி அதன் பின்னரே அவர்களை ரஸூல் என்றும் நபி என்றும்
அடையாளப்படுத்துகின்றான்.
இந்த கள்ளம்
கபடமற்ற மனத்தூய்மையால் மூஸா (அலை) அவர்களுக்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் வழங்கிய
சன்மானம் என்ன?
நபிமார்களை
அல்லாஹ்வே தேர்ந்தெடுத்து அனுப்பிக் கொண்டிருக்கும் மரபை அவர்களின் துஆவால்
அவர்களின் சகோதரர் ஹாரூனை அல்லாஹ் நபியாக ஆக்கி தம் மரபை மாற்றி அமைத்து, தம் நெருக்கத்தைப் பெற்றவராக அதுவும் எப்படி தம்மோடு அதிகம் உரையாடும்
பாக்கியத்தை வழங்கினான்.
மேலும், மாநபி ஸல் அவர்களின் விண்ணேற்றப் பயணத்தில் ஐம்பது வக்த் தொழுகையை ஐந்து வக்த்
தொழுகையாக குறைத்திடும் பரிந்துரை செய்யும் அளவுக்கு நெருக்கத்தை வழங்கினான்.
وَاذْكُرْ فِي الْكِتَابِ إِسْمَاعِيلَ إِنَّهُ كَانَ صَادِقَ
الْوَعْدِ وَكَانَ رَسُولًا نَبِيًّا
அடுத்து, இஸ்மாயில் (அலை) அவர்களையும் அல்லாஹ் அவர்களிடம் காணப்பட்ட "வாக்குறுதியை
நிறைவேற்றும் பண்பை" பாராட்டிக் கூறிய பின்னரே அவர்களை நபி என்று அறிமுகம்
செய்கின்றான்.
وَاذْكُرْ فِي الْكِتَابِ إِدْرِيسَ إِنَّهُ كَانَ صِدِّيقًا نَبِيًّا
அப்படியே இத்ரீஸ் (அலை) அவர்களையும் அவர்களது வாய்மையை
பாராட்டிப் பேசி அவர்களை நபி என்கிறான்.
أُولَئِكَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ
مِنْ ذُرِّيَّةِ آدَمَ وَمِمَّنْ حَمَلْنَا مَعَ نُوحٍ وَمِنْ ذُرِّيَّةِ
إِبْرَاهِيمَ وَإِسْرَائِيلَ وَمِمَّنْ هَدَيْنَا وَاجْتَبَيْنَا إِذَا تُتْلَى
عَلَيْهِمْ آيَاتُ الرَّحْمَنِ خَرُّوا سُجَّدًا وَبُكِيًّا
தொடர்ந்து, ஆதம் (அலை) நூஹ் (அலை) ஆகியோரின் வழித்தோன்றலில் வந்த நபிமார்கள், அவர்களின் வழித்தோன்றல்களை நல்லோர்களாக, ஹிதாயத் பெற்றவர்களாக, நபிமார்களாக நாம் தேர்ந்தெடுந்ததற்கு அவர்களிடம் காணப்பட்ட ஒரு சிறந்த பண்பே
என்று பாராட்டிப் பேசி மர்யம் சூராவின் இரண்டாவது ஆயத்தில் இருந்து ஸகரிய்யா (அலை)
பாராட்டிப் பேச ஆரம்பித்து சூராவின் 58 வது ஆயத்தில்
பாராட்டோடே முடிக்கின்றான்.
எனவே, ஒரு இறைநம்பிக்கையாளருக்கு
உலகில் பாராட்டும் குணம் என்பது முதன்மையான குணம் என்பதை
நாம் புரிந்து கொள்ள வேண்டும். பாராட்டும் பண்பு என்பது அல்லாஹ்வின் பண்பு என்பதை
நாம் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
உண்மையில், ஒருவரை அவரிடம் காணும் சிறப்பு பண்புகளை பாராட்டி மகிழ, மகிழ்விக்க வேண்டும் என்பநைத் தான் இந்த 57 வசனங்களின் ஊடாக இன்றைய தராவீஹ் சிந்தனையாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பாராட்டப்படும்
ஒவ்வொரு நொடியும் மனிதனின் ஆற்றல் பன்மடங்கு பெருகுவதாக அறிவியல் ஆய்வு ஒன்று
கூறுகிறது.
பாராட்டுகளை
விரும்பாத மனிதர்கள் இங்கு இல்லை. ஆனால் பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் கொண்ட
மனிதர்கள் பலர் இல்லை.
பணி புரியும்
இடங்களாகட்டும்,
குடும்பங்களாகட்டும் நாம் எவ்வளவுதான் ஈடுபாடாக நம்முடைய
கடமைகளை செய்தாலும் நம்மை சார்ந்தவர்கள் அநேகமாக நம்மை குறைகூறிக்கொண்டேதான்
இருக்கக்கூடும். அப்போதுதான் அடுத்தமுறை இதைவிட திறமையாக நாம் நம்முடைய
பொறுப்புக்களை செய்வோம் என்றோ அல்லது கொஞ்சம் பாராட்டினாலோ அல்லது புகழ்ந்து
பேசினாலோ நாம் தெனாவட்டாக மாறிவிடுவோம் என்றோ அவர்கள் கருதுவதுண்டு .
வீட்டு வேலைகளை
செய்வது மனைவியின் கடமை இதில் என்ன பாராட்ட இருக்கிறது ? சம்பாதித்து போடுவது கணவனின் கடமை இதையெல்லாமா பாராட்ட வேண்டும் ? நாம் கொடுக்கும் காசுக்கு பொருளைத் தருகிறார்கள் இதில் பாராட்ட என்ன
இருக்கிறது ?
ஊதியத்திற்காக பணி புரிபவர்களுக்கு என்ன பாராட்டு
வேண்டிக்கிடக்கு ?
கல்வியை கற்றுகொள்வதும், சமத்தாக இருப்பதும்
குழந்தைகளின் கடமை அதற்கொன்றும் பாராட்டு வேண்டியதில்லை! இப்படித்தான் நம்மில்
அநேகர் நினைக்கின்றோம்.
ஆனால், உண்மை என்னவென்றால்
தான் முக்கியமானவனாகக் கருதப்பட வேண்டும், தான் அங்கீகரிக்கப் படவேண்டும், பிறரால்
விரும்பப்படவேண்டும் எனும் ஆசையின் ஆணி வேர்கள் எல்லா மனிதர்களுக்குள்ளும்
பின்னிப் பிணைந்திருக்கின்றன.
"மனித மனம் தனது
ஆழத்தில் பாராட்டுக்காக ஏங்குகிறது” என்கிறார் வில்லியம்
ஜேம்ஸ்.
"இப்போதெல்லாம்
பாராட்டும் பழக்கமே குறைந்து விட்டது” என்று சொன்னால் உடனே நாம்
எல்லோரும் தலையாட்டுவோம்.“ஆமாம். யாருமே யாரையுமே பாராட்டுவதில்லை. எல்லோருக்கும் ஈகோ” என சலித்துக் கொள்ளுவோம் .
ஆனால் அப்படியே
நாம் கொஞ்சம் யோசித்துப்பார்த்தால், நாம் நம்முடைய அன்றாட
வாழ்வில் எத்தனை பேரை பாராட்டிக்கொண்டிருக்கின்றோம் என்றால், கேள்வி தான் மிஞ்சும்.
டேல் கார்நிஜி
என்ற ஆங்கில எழுத்தாளர் மிக பிரசித்தம். அதிலும் அவரின் “ How to win Friends
and influence people” பலரும் விரும்பி படிக்கும்
புத்தகங்களுள் ஒன்று. அதில் அவர் மனிதர்களுடன் நல்ல உறவு / நிறைய நண்பர்கள்
வேண்டுபவர்கள் அவர்களை மனம் விட்டு பாராட்டுங்கள் என மறுபடி, மறுபடி சொல்கிறார்.
அர்னாட் பென்னட்
என்ற ஆங்கில நாவலாசிரியர்,
தன் அந்தரங்கச் செயலர் குறித்து பிரமாதமாகப்
புகழ்ந்துரைத்தார். பதிப்பகத்தார்கள் அந்தப் பெண்ணைச் சந்திக்க விரும்பினர். ‘உங்கள் செயல் திறனுக்கு என்ன காரணம்?’ அந்தப் பெண்ணிடமே
கேட்டனர்.
அவர், ‘என் முதலாளிதான் காரணம். ஒரு சிறிய செயலை நான் சரியா செய்தாலும் மனம் திறந்து
பாராட்டுவார் .என் குறைகளைப் பெரிது படுத்தாமல் என் நிறைகளை நினைவூட்டுவார். எனவே, நான் குறைகளைக் குறைத்து, திறமைகளை
வளர்த்துக்கொண்டேன்’
என்று சொன்னார்.
மாநபி {ஸல்} அவர்களின் பாராட்டுக்களை சுவன சோபனமாக
பெற்ற நபித்தோழர்கள்…
நபி (ஸல்) அவர்கள்
சில சந்தர்ப்பங்களில் நபித்தோழர்களோடு அமர்ந்திருந்த சபைகளில் சில நபித்தோழர்களின்
பெயரைக் கூறி இவர் சுவனவாசி என்று சொல்லி இருக்கிறார்கள். ஒரு வகையில் இதுவும் கூட
பாராட்டும் வகையைச் சேர்ந்தது தான்.
ஒரே நேரத்தில்
பத்து நபித்தோழர்களை நபி ஸல் அவர்கள் சுவனத்தைக் கொண்டு சோபனம் சொல்லி
இருக்கிறார்கள்.
பெயர்
குறிப்பிடாமலும் சாடையாகவும் சொல்லி இருக்கிறார்கள். அப்படி சொல்லப்பட்ட ஒரு சோபனமும் சுவாரஸ்யமான ஒரு நிகழ்வும்....
حَدَّثَنَا
عَبْدُ الرَّزَّاقِ حَدَّثَنَا مَعْمَرٌ عَنِ الزُّهْرِيِّ قَالَ أَخْبَرَنِي
أَنَسُ بْنُ مَالِكٍ رضي الله عنه قَالَ : كُنَّا جُلُوسًا مَعَ رَسُولِ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ : ( يَطْلُعُ عَلَيْكُمْ الْآنَ رَجُلٌ
مِنْ أَهْلِ الْجَنَّةِ ) فَطَلَعَ رَجُلٌ مِنْ الْأَنْصَارِ تَنْطِفُ لِحْيَتُهُ
مِنْ وُضُوئِهِ قَدْ تَعَلَّقَ نَعْلَيْهِ فِي يَدِهِ الشِّمَالِ ، فَلَمَّا كَانَ
الْغَدُ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَ ذَلِكَ ،
فَطَلَعَ ذَلِكَ الرَّجُلُ مِثْلَ الْمَرَّةِ الْأُولَى ، فَلَمَّا كَانَ
الْيَوْمُ الثَّالِثُ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَ
مَقَالَتِهِ أَيْضًا فَطَلَعَ ذَلِكَ الرَّجُلُ عَلَى مِثْلِ حَالِهِ الْأُولَى ،
فَلَمَّا قَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَبِعَهُ عَبْدُ
اللَّهِ بْنُ عَمْرِو بْنِ الْعَاصِ فَقَالَ : إِنِّي لَاحَيْتُ أَبِي
فَأَقْسَمْتُ أَنْ لَا أَدْخُلَ عَلَيْهِ ثَلَاثًا ، فَإِنْ رَأَيْتَ أَنْ
تُؤْوِيَنِي إِلَيْكَ حَتَّى تَمْضِيَ فَعَلْتَ . قَالَ نَعَمْ قَالَ أَنَسٌ :
وَكَانَ عَبْدُ اللَّهِ يُحَدِّثُ أَنَّهُ بَاتَ مَعَهُ تِلْكَ اللَّيَالِي
الثَّلَاثَ فَلَمْ يَرَهُ يَقُومُ مِنْ اللَّيْلِ شَيْئًا ، غَيْرَ أَنَّهُ إِذَا
تَعَارَّ وَتَقَلَّبَ عَلَى فِرَاشِهِ ذَكَرَ اللَّهَ عَزَّ وَجَلَّ وَكَبَّرَ
حَتَّى يَقُومَ لِصَلَاةِ الْفَجْرِ . قَالَ عَبْدُ اللَّهِ : غَيْرَ أَنِّي لَمْ
أَسْمَعْهُ يَقُولُ إِلَّا خَيْرًا . فَلَمَّا مَضَتْ الثَّلَاثُ لَيَالٍ وَكِدْتُ
أَنْ أَحْتَقِرَ عَمَلَهُ قُلْتُ : يَا عَبْدَ اللَّهِ إِنِّي لَمْ يَكُنْ بَيْنِي
وَبَيْنَ أَبِي غَضَبٌ وَلَا هَجْرٌ ثَمَّ ، وَلَكِنْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَكَ ثَلَاثَ مِرَارٍ : ( يَطْلُعُ
عَلَيْكُمْ الْآنَ رَجُلٌ مِنْ أَهْلِ الْجَنَّةِ ) فَطَلَعْتَ أَنْتَ الثَّلَاثَ
مِرَارٍ ، فَأَرَدْتُ أَنْ آوِيَ إِلَيْكَ لِأَنْظُرَ مَا عَمَلُكَ فَأَقْتَدِيَ
بِهِ ، فَلَمْ أَرَكَ تَعْمَلُ كَثِيرَ عَمَلٍ ، فَمَا الَّذِي بَلَغَ بِكَ مَا
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ؟ فَقَالَ مَا هُوَ
إِلَّا مَا رَأَيْتَ ، قَالَ : فَلَمَّا وَلَّيْتُ دَعَانِي فَقَالَ : مَا هُوَ
إِلَّا مَا رَأَيْتَ ؛ غَيْرَ أَنِّي لَا أَجِدُ فِي نَفْسِي لِأَحَدٍ مِنْ
الْمُسْلِمِينَ غِشًّا وَلَا أَحْسُدُ أَحَدًا عَلَى خَيْرٍ أَعْطَاهُ اللَّهُ
إِيَّاهُ . فَقَالَ عَبْدُ اللَّهِ : هَذِهِ الَّتِي بَلَغَتْ بِكَ ، وَهِيَ
الَّتِي لَا نُطِيقُ .
அனஸ் (ரலி)
அவர்கள் அறிவிக்கின்றார்கள்:- “நாங்கள் நபி (ஸல்) அவர்களோடு
அமர்ந்திருந்தோம்,
அப்போது நபி (ஸல்) அவர்கள் “இப்போது ஒரு மனிதர் வருவார் அவர் சுவனவாதி” என்று கூறினார்கள்.
அப்போது எங்கள்
முன் அன்ஸாரித் தோழர்,
உளு செய்த தண்ணீரின் ஈரம் சொட்டச் சொட்ட, இடதுகையில் செருப்பை தூக்கியவாறு பள்ளியில் நுழைந்தார்.
இரண்டாவது நாளும், நபிகளார் அது போன்று கூறவே, அவர்தான் எங்கள் முன்
தோன்றினார்,
மூன்றாவுத நாளும்
நபிகளார் அது போன்று கூறவே அவர்தான் எங்கள் முன் தோன்றினார்.
நபி (ஸல்) அவரக்ள்
எழுந்து சென்றுவிட்ட போது,
அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள், நேராக அவரிடம் சென்று “நான் என் தந்தையிடம் சண்டையிட்டு, மூன்று நாள் வீட்டிற்கு
வரமாட்டேன் என சத்தியமிட்டு கூறிவிட்டேன். ஆகவே, மூன்று நாள் உங்களோடு உங்கள் வீட்டில் தங்கிக் கொள்கின்றேன்” என்று கூறியுள்ளார்.
அதற்கு அந்த
அன்ஸாரித் தோழர் சரி என சொல்லிவிட்டார், பிறகு அப்துல்லாஹ் இப்னு
அம்ரு அவரோடு தங்கிய அந்த நாட்களைப்பற்றி என்னிடம் விவரித்தார். அவர் ஒருநாளும்
இரவுத் தொழுகையில் ஈடுபடவில்லை,
ஆனால், படுக்கையில் புரண்டால் அல்லாஹ்வை நினைவு கூறுவார். பாங்கு சொன்னதும் விழித்து
ஃபஜ்ர் தொழ செல்வார். மற்றபடி நம்மைப் போன்றுதான் வணக்க வழிபாடுகளைச்
செய்கின்றார்.
வேறு ஒன்றும் சிறப்பாக செய்ய நான் காணவில்லை.
பின்பு, நான் அவரிடம்,
நான் ஒன்றும் என் தந்தையோடு பிணங்க வில்லை. மாறாக, மாநபி (ஸல்) அவர்கள் கூறிய சோபனத்தையும், அதைத் தொடர்ந்து மூன்று
முறை நீங்களே வந்த்தையும் வைத்து, உங்களோடு இருந்து அதைக்
கண்ணுற்று நானும் கடைபிடிக்கவே ஆவல்கொண்டு உங்களோடு தங்கினேன்.
ஆனால், அப்படியொன்றும் நீங்கள் உயர்வாக அமல் செய்ய நான் காணவில்லை. நபிகளார் சொன்னால்
அது உண்மையாகத் தான் இருக்கும், சொல்லுங்கள் இப்போதே!
அந்த உயர்வான
நல்லறம் எது?
அவர் கூறினார்: “எப்போதும் நான் மற்றெந்த
முஸ்லிம்களின் மீதும்,
குரோதமே, பகைமையோ கொண்டதில்லை.
அல்லாஹ் எனக்கு
கொடுத்தைக் கொண்டு நான் திருப்தி கொள்கின்றேன். எந்த சந்தர்ப்பத்திலும் பிறருக்கு
வழங்கப்பட்டிருக்கும் எந்த பாக்கியத்தின் மீதும் நான் பொறாமை கொண்டதில்லை.என்றார்” இதைக் கேட்ட அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள் "இதற்கு ஒரு போதும்
நாம் சக்தி பெற மாட்டோம்" என்று கூறினார்கள். ( நூல்: முஸ்னத்
அஹ்மத், முஸன்னஃப் அப்துர் ரஜ்ஜாக் )
عَنْ
عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ نِمْتُ فَرَأَيْتُنِي فِي الْجَنَّةِ
فَسَمِعْتُ صَوْتَ قَارِئٍ يَقْرَأُ فَقُلْتُ مَنْ هَذَا فَقَالُوا هَذَا
حَارِثَةُ بْنُ النُّعْمَانِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ
وَسَلَّمَ كَذَلِكَ الْبِرُّ كَذَلِكَ الْبِرُّ وَكَانَ أَبَرَّ النَّاسِ
بِأُمِّهِ
“தூங்கிக் கொண்டிருந்த
நான் -கனவில்- என்னை சொர்க்கத்தில் இருப்பதாகக் கண்டேன். அங்கு ஒருவர் ஓதிக்
கொண்டிருக்கும் சப்தத்தை செவியுற்ற நான், இவர் யார்? என்று கேட்டேன். அதற்கவர்கள், ஹாரிஸா இப்னு நுஃமான்
என்று பதிலளித்தார்கள்! என்று கூறிய நபி (ஸல்) அவர்கள், இது போன்றுதான் நல்லறங்களுக்குக் கூலி கிடைக்கும்! இது போன்றுதான்
நல்லறங்களுக்குக் கூலி கிடைக்கும்! தாயிக்குப் பணிவிடை செய்யும் மனிதர்களிலேயே
அவர் மிகச் சிறந்த பணிவிடையாளராகத் திகழ்ந்தார் என்றார்கள். (அறிவிப்பவர் : ஆயிஷா
-ரலி, அஹ்மத் : 24172)
ஆச்சர்யமூட்டும் செயலை ஒருவர் செய்யக்
கண்டால் பாராட்டுவது…
روى
النسائي (931)، وأبو داود (773)، والترمذي (404) عن رِفَاعَةَ بْنِ رَافِعٍ،
قَالَ: " صَلَّيْتُ خَلْفَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
فَعَطَسْتُ فَقُلْتُ: الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا
فِيهِ مُبَارَكًا عَلَيْهِ، كَمَا يُحِبُّ رَبُّنَا وَيَرْضَى، فَلَمَّا صَلَّى
رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ انْصَرَفَ فَقَالَ: مَنَ
الْمُتَكَلِّمُ فِي الصَّلَاةِ؟ فَلَمْ يُكَلِّمْهُ أَحَدٌ، ثُمَّ
قَالَهَا الثَّانِيَةَ: مَنَ الْمُتَكَلِّمُ فِي الصَّلَاةِ؟ ،
فَقَالَ رِفَاعَةُ بْنُ رَافِعِ ابْنِ عَفْرَاءَ: أَنَا يَا رَسُولُ اللَّهِ. قَالَ:
كَيْفَ قُلْتَ؟ قَالَ: قُلْتَ الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا
مُبَارَكًا فِيهِ مُبَارَكًا عَلَيْهِ كَمَا يُحِبُّ رَبُّنَا وَيَرْضَى، فَقَالَ
النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: وَالَّذِي نَفْسِي بِيَدِهِ
لَقَدْ ابْتَدَرَهَا بِضْعَةٌ وَثَلَاثُونَ مَلَكًا أَيُّهُمْ يَصْعَدُ بِهَا .
நாங்கள் ஒரு நாள்
நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றித்)தொழுது கொண்டிருந்தோம்.
அவர்கள் ருகூவிலிருந்து தலையை உயர்த்திய போது "சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்' (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக் கொள்கிறான்) எனக் கூறினார்கள்.
அவர்களுக்குப் பின்னாலிருந்த ஒரு மனிதர் "ரப்பனா வல(க்)கல் ஹம்து. ஹம்தன்
கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹீ - எங்கள் இறைவா! புகழ் அனைத்தும் உனக்கே உரியது.
தூய்மையும் சுபிட்சமும் மிக்க உனது திருப்புகழை நிறைவாகப் போற்றுகிறேன்'' என்று கூறினார். தொழுது முடித்ததும் நபி (ஸல்) அவர்கள், "(இந்த வார்த்தைகளை) மொழிந்தவர் யார்?'' என்று
கேட்டார்கள். அந்த மனிதர்,
"நான்தான்'' என்றார்.
"முப்பதுக்கும் மேற்பட்ட வானவர்கள் "இதை நம்மில் முதலில் பதிவு செய்வது
யார்' என (தமக்கிடையே) போட்டியிட்டுக் கொள்வதை நான் கண்டேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ரிஃபாஆ பின் ராஃபிஉ
அஸ்ஸுரக்கீ (ரலி),
நூல்: புகாரி 799
இதே சம்பவம் அனஸ்
(ரலி) அவர்கள் வழியாக முஸ்லிமில் இடம் பெறுகிறது. இந்த அறிவிப்பில் அந்த மனிதர்
இந்த வாசகத்தை எதற்காகச் சொன்னார்? எந்தச் சூழ்நிலையில்
சொன்னார்?
என்ற கூடுதல் விபரம் இடம் பெற்றுள்ளது.
روى
مسلم (600) عَنْ أَنَسٍ : " أَنَّ رَجُلًا جَاءَ فَدَخَلَ الصَّفَّ وَقَدْ
حَفَزَهُ النَّفَسُ، فَقَالَ: الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا
مُبَارَكًا فِيهِ، فَلَمَّا قَضَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
صَلَاتَهُ قَالَ: أَيُّكُمُ الْمُتَكَلِّمُ بِالْكَلِمَاتِ؟
فَأَرَمَّ الْقَوْمُ، فَقَالَ: أَيُّكُمُ الْمُتَكَلِّمُ بِهَا؟
فَإِنَّهُ لَمْ يَقُلْ بَأْسًا فَقَالَ رَجُلٌ: جِئْتُ وَقَدْ حَفَزَنِي
النَّفَسُ فَقُلْتُهَا، فَقَالَ: لَقَدْ رَأَيْتُ اثْنَيْ عَشَرَ مَلَكًا
يَبْتَدِرُونَهَا، أَيُّهُمْ يَرْفَعُهَا
ஒரு மனிதர்
மூச்சிறைக்க (விரைந்து) வந்து தொழுகை வரிசையில் சேர்ந்து, "அல்ஹம்துலில்லாஹி ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி' (தூய்மையும் வளமும் வாய்ந்த அதிகமான புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது)
என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும்
"உங்களில் இவ்வார்த்தைகளை மொழிந்தவர் யார்?'' என்று கேட்டார்கள். மக்கள் (பதிலளிக்காமல்) அமைதியாக இருந்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மீண்டும்), "உங்களில் இதை மொழிந்தவர் யார்? ஏனெனில், அவர் தவறாக ஏதும் சொல்லவில்லை'' என்று
கூறினார்கள். உடனே அந்த மனிதர் "நான் மூச்சிறைக்க வந்து தொழுகையில்
சேர்ந்தேன். ஆகவே,
இவ்வாறு சொன்னேன்'' என்று
பதிலளித்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "பன்னிரண்டு
வானவர்கள் தமக்கிடையே "இதை எடுத்துச் செல்பவர் யார்' எனும் விஷயத்தில் போட்டியிட்டுக்கொண்டிருந்ததை நான் கண்டேன்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), முஸ்லிம் (1051)
وعند
أحمد (12034): "فقال: أيكم المتكلم فإنه قال خيرا، ولم يقل بأسا
، قال: يا رسول الله أنا؛ أسرعت المشي، فانتهيت إلى الصف، فقلت الذي قلت. قال: لقد
رأيت اثني عشر ملكا، يبتدرونها أيهم يرفعها ثم قال: إذا جاء أحدكم إلى
الصلاة، فليمش على هينته، فليصل ما أدرك، وليقض ما سبقه
"
முஸ்னத் அஹ்மத்
அவர்களின் ஒரு ரிவாயத்தில் கூடுதலாக பின்வருமாறு இடம் பெற்றுள்ளது:- "உங்களில் இப்படிக் கூறியவர் யார்? அவர் சிறந்ததையே
கூறினார். தவறாக ஒன்றும் கூறவில்லை" என்று நபி ஸல் அவர்கள் கூறிய போது, அந்த நபித்தோழர் "நான் வேகமாக வந்தேன். ஸஃப்ஃபில் இணைந்தேன். நீங்கள்
கேட்ட வாறு நான் கூறினேன்" என்றார். அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "பன்னிரண்டு வானவர்கள் தமக்கிடையே
"இதை எடுத்துச் செல்பவர் யார்' எனும் விஷயத்தில்
போட்டியிட்டுக்கொண்டிருந்ததை நான் கண்டேன்'' என்று கூறிவிட்டு, உங்களில் எவரும் தொழுகை நடந்து கொண்டிருக்கும் போது மூச்சிறைக்க ஓடி வர
வேண்டாம். நடந்தே வாருங்கள்! தொழுகையில் கிடைத்ததை பூர்த்தி செய்யுங்கள்!
விடுபட்டதை முழுமை படுத்துங்கள்" என்றார்கள்.
அந்த நபித்தோழர்
ருகூவுக்குப் பின் இதைக் கூற வேண்டும் என்பதற்காக இப்படிச் சொல்லவில்லை. மாறாக
ருகூவு கிடைக்குமோ அல்லது தவறி விடுமோ என்று அவர் மூச்சிறைக்க வேகமாக வருகிறார்.
அவர் வேகமாக வந்ததால் ருகூவு கிடைத்து விடுகிறது. இந்த மகிழ்ச்சியில் அல்லாஹ்வைப்
புகழ்வதற்காகத் தான் மேற்கண்ட வாசகத்தைக் கூறினார் மாநபி ஸல் அவர்கள் நான்
சொல்லித்தராத ஒன்றை ஏன் சொன்னீர் என்று கண்டிக்காமல் அந்த நிகழ்ச்சியின்
பிண்ணனியில் நடைபெற்றதைக் கூறி பாராட்டினார்கள்.
அல்லாஹ்வின், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் பாராட்டைப் பெற்ற
நபித்தோழர்...
حَدَّثَنَا
عَفَّانُ ، ثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ ، عَنْ
سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ ، قَالَ: أَقْبَلَ صُهَيْبٌ مُهَاجِرًا إِلَى
النَّبِيِّ صلى الله عليه وسلم ، فَاتَّبَعَهُ نَفَرٌ مِنْ قُرَيْشٍ ، وَنَزَلَ
عَنْ ⦗ص: 694⦘
رَاحِلَتِهِ وَانْتَثَلَ مَا فِي كِنَانَتِهِ ثُمَّ قَالَ: يَا مَعْشَرَ قُرَيْشٍ
لَقَدْ عَلِمْتُمْ أَنِّي مِنْ أَرْمَاكُمْ رَجُلًا ، وَايْمُ اللَّهِ لَا
تَصِلُونَ إِلَيَّ حَتَّى أَرْمِيَ بِكُلِّ سَهْمٍ مَعِي فِي كِنَانَتِي ، ثُمَّ
أَضْرِبَ بِسَيْفِي مَا بَقِيَ فِي يَدِي مِنْهُ شَيْءٌ ، ثُمَّ افْعَلُوا مَا
شِئْتُمْ ، وَإِنْ شِئْتُمْ دَلَلْتُكُمْ عَلَى مَالِي وَقَيْنَتِي بِمَكَّةَ
وَخَلَّيْتُمْ سَبِيلِي " ، قَالُوا: نَعَمْ ، فَفَعَلَ فَلَمَّا قَدِمَ
عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم الْمَدِينَةَ قَالَ: " رَبِحَ الْبَيْعَ
أَبَا يَحْيَى رَبِحَ الْبَيْعَ أَبَا يَحْيَى ، قَالَ: وَنَزَلَتْ {وَمِنَ
النَّاسِ مَنْ يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاةِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ
بِالْعِبَادِ} "
ஸுஹைப் இப்னு
ஸினான் ரோமபுரியைச் சார்ந்தவர் சிறுவயதிலேயே மக்காவிற்கு வந்தவர். பின் நாளில்
மக்காவில் அறியப்படுகிற பெரும் தனவந்தராக விளங்கியவர்.
ஆபரணங்களை அழகிய
முறையில் வடிவமைக்கும் நுட்பம் நிறைந்த ஆசாரி. தொழில் ரீதியாக மிகவும் நேர்மையும், கைதேர்ந்த விற்பன்னராகவும் இருந்ததால் மிக விரைவிலேயே பெரும் புகழுக்கும், செல்வாக்கிற்கும் சொந்தக்காரராகி விட்டிருந்தார்.
இந்நிலையில், அல்லாஹ்வின் தூதர் {ஸல்}
அவர்கள் மக்காவிலே தங்களின் ஏகத்துவ பிரச்சாரத்தை
துவக்கியிருந்த ஆரம்ப காலகட்டம் அது.
அல்லாஹ் அவரின்
இதயத்திலும் ஏகத்துவ விருட்சத்தை வேர்விட வைத்தான். ஆம், 31 – வது நபராக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு, முந்தைய மேன்மக்களின்
பட்டியலில் இடம் பெற்றுக் கொண்டார்கள்.
அதே நாளில் தான்
அம்மார் இப்னு யாஸிர் அவர்களும் 32 – வது நபராக இஸ்லாத்தை
ஏற்றுக் கொண்டு,
தம்மையும் அந்த பட்டியலில் இணைத்துக் கொண்டார்கள்.
வழக்கம் போல ஆரம்ப
கால நபித்தோழர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களும், துன்பங்களும் இவர்களுக்கு
ஏற்பட்டது. என்றாலும் மக்கா குறைஷிகளுக்கு நிகரான செல்வந்தராக இருந்ததால் பாதிப்பு
கொஞ்சம் குறைவு.
அல்லாஹ்
ஹிஜ்ரத்தைக் கடமையாக்கியிருந்த தருணம் அது. தம்மோடு இருந்த எல்லோரும் கொஞ்சம்
கொஞ்சமாக ஹிஜ்ரத் செய்து,
மதீனா சென்று மாநபி {ஸல்} அவர்களோடு இணைந்து கொண்டார்கள்.
ஒருவாராக ஸுஹைப்
இப்னு ஸினான் (ரலி) அவர்களும் ஹிஜ்ரத் செய்ய ஆயத்தமாகி, புறப்பட்டு மதீனாவிற்கு பயணமானார்கள்.இந்தச் செய்தி பக்கா கேடிகளான மக்கா
தலைவர்களுக்கு பேரிடியாய் இருந்தது.
ஸுஹைப் இப்னு
ஸினான் (ரலி) அவர்களை வழி மறித்தனர். தொடர்ந்து செல்லவிடாமல் முன்னும் பின்னுமாக
சுற்றிவளைத்தனர்.
மறித்து நின்ற
மக்கா தலைவர்களை நோக்கி “என்னையும்,
நான் எப்படிப்பட்ட அம்பு எறியும் வீரன் என்பதையும் நீங்கள்
நன்கு அறிவீர்கள்.
என்னிடத்தில் ஒரு
அம்பு மீதமிருக்கும் வரை உங்களால் என்னை ஒன்றும் செய்திட இயலாது.
அப்படியே என்
அம்புகள் முழுவதும் தீர்ந்து போனாலும் எனக்கு கவலையில்லை. ஏனெனில், என்னிடம் வாள் இருக்கிறது. நான் எப்படிப்பட்ட வாள் வீரன் என்பதை நீங்கள் நன்கு
அறிவீர்கள்.
என் வாள் ஒடிந்து
போகும் வரை உங்களால் என்னை ஒன்றும் செய்திட இயலாது.
அப்படியே வாள்
ஒடிந்து போனாலும் எனக்கு கவலையில்லை. ஏனெனில், நான் மல்யுத்தம்
புரிவதில் வல்லவன் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்” என்று ஆவேசமாக அதே நேரத்தில் மிகவும் நேர்த்தியாகக் கூறினார்கள்.
இதைக் கேட்ட மக்கா
தலைவர்கள் ”அதுவல்ல விஷயம்,
நீர் ரோமைச் சார்ந்தவர். இங்கு வந்து பெரும் செல்வந்தராக
மாறிவிட்டீர். உம்மிடம் இருக்கும் அவ்வளவு சொத்துக்களும் எங்கள் ஊரில் நீர்
சம்பாதித்தது.
ஆனால், எங்களுக்கு எதிராக செயல்படும் முஹம்மதிற்கும், அவர்களின் தோழர்களுக்கும் அது பயன் படுவதை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க
மாட்டோம்”
என்றனர்.
அவர்களின்
நோக்கத்தை புரிந்து கொண்ட ஸுஹைப் இப்னு ஸினான் (ரலி) அவர்கள் “ஓ! அப்படியா?
என் செல்வத்தையும், என் பொற்குவியல்களை
பாதுகாத்து வைத்திருக்கின்ற கருவூலத்தையும், நான் அது
எங்கிருக்கின்றது என்று அறிவித்து கொடுத்து விட்டேன் என்றால், என் உயிரை விட மேலாக மதிக்கும் இஸ்லாமிய மார்க்கத்திற்காக நான் மேற்கொண்டிருக்கின்ற
இந்த பயணத்தை தடுக்க மாட்டீர்களல்லவா? என்று கேட்டார்கள்.
உடனே மக்கா
தலைவர்கள் “அது போதும் எங்களுக்கு,
அதை நீர் சொல்லி விட்டீர் என்றால் தடை விலகும். உமது பயணம்
இனிதே தொடரும்”
என்றார்கள்.
உடனடியாக, சத்தியம் வாங்கி விட்டு அவர்களின் சொத்து எங்கெல்லாம் இருக்கின்றது என்றும், அவர்களின் கருவூலத்தின் சாவி எங்கு மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றது என்றும்
ஸுஹைப் இப்னு ஸினான் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
பின்பு, மதீனா சென்று மாநபி {ஸல்}
அவர்களை சந்திக்க விளைந்த போது, அல்லாஹ்வின் தூதர் {ஸல்}
அவர்கள் முகமலர்ச்சியோடு “ரபிஹல் பைஅ அபா யஹ்யா –
அபூ யஹ்யா செய்து விட்டு வந்திருக்கின்ற வியாபாரம் மிகவும்
லாபகரமானது”
என்று பாராட்டி வரவேற்றார்கள்.
அல்லாஹ்வும் தன்
பங்கிற்கு “மனிதர்களில் இப்படியும் ஒருவர் இருக்கின்றார்; அவர் அல்லாஹ்வின் உவப்பைத் தேடி, தன் வாழ்வையே
அர்ப்பணித்து விடுகின்றார். இத்தகைய அடியார்களிடத்தில் அல்லாஹ் மிகவும்
பரிவுடையோனாய் இருக்கின்றான்” (அல்குர்ஆன்:2:207) ஓர் இறைவசனத்தை இறக்கி வைத்து ஸுஹைப் இப்னு ஸினான் (ரலி) அவர்களைப் பாராட்டி
சந்தோஷப்படுத்தினான்.
அல்லாஹ்வின் தூதர்
{ஸல்}
அவர்கள் பிரிதோர் சந்தர்ப்பத்தில் “அல்லாஹ்வைக் கொண்டும் மறுமை நாளைக் கொண்டும் இறை நம்பிக்கை கொண்டிருப்போர், எப்படி ஒரு தந்தை தம் பிள்ளையை நேசிப்பாரோ அது போன்று ஸுஹைப் இப்னு ஸினான்
(ரலி) அவர்களை நேசிக்கட்டும்!” என்று கூறினார்கள்.
(நூல்:இஸ்தீஆப், பாகம்:1,
பக்கம்:393 – 396. தஃப்ஸீர் இப்னு கஸீர், பாகம்:1,
பக்கம்:323,324. ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்},
பக்கம்:130,131.)
அல்லாஹ்வின் பண்பான, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின்
பண்பான “பாராட்டும் நற்பண்பை” அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக!
ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!
No comments:
Post a Comment