Thursday, 12 June 2025

 

பெருந்துயரம் ஏற்படுவதில் இருந்து காத்தருள்வாய் யாஅல்லாஹ்!!


அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கி 12/06/2025 மதியம் 1:38 மணிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787-8 ரக விமானத்தில் பயணிகள், விமானி இருவர் மற்றும் பணியாளர்கள் உட்பட 242 பேர் இருந்தனர். 

இவர்களில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டிஷ் நாட்டவர்கள், ஒருவர் கனடா நாட்டவர், 7 பேர் போர்த்துகீசிய நாட்டவர்.

குஜரா‌த் மாநிலத்தின் மேகானி நகரில் பி.ஜே மருத்துவக்கல்லூரி விடுதி மீது தான் விமானம் விழுந்துள்ளது. 

இந்த கட்டிடத்தில் இருந்த 60 மருத்துவ மாணவர்கள் காணவில்லை எனவும், அருகில் இருந்த பலர் படுகாயமடைந்து இருக்கலாம் என்ற புதிய தகவல் வெளிவந்துள்ளன.

விமானத்தில் பயணித்த 241 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், இது தவிர விமானம் விழுந்த இடத்தில் எத்தனை பொதுமக்கள் இந்த விபத்தில் சிக்கியுள்ளனர் என்ற தெளிவான விபரங்கள் வெளியாகவில்லை. 

இந்த விபத்தின் முழு பாதிப்புக்கள், சேதங்கள் மற்றும் உயிரிழப்பு குறித்த தெளிவான புள்ளி விபரங்கள் இன்னும் சில மணி நேரங்களில் தெரிய வரும்.

கடந்த கால விமான விபத்துகள்

இந்தியாவில் கடந்த காலங்களில் இதுபோன்று பல்வேறு இடங்களில் விமான விபத்துகள் நடைபெற்றுள்ளது.

இதில், இந்தியாவை உலுக்கிய 10 பெரிய விமான விபத்துகள் குறித்து பார்ப்போம்.

கடந்த 2020-ல் கோழிக்கோடு பகுதியில் பதிவாகியுள்ளது. இதில் 21 பேர் உயிரிழந்தனர்.

துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 1344 காலிகட் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகி 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், விமானம் விழுந்து ஓடுபாதையில் இருந்து சறுக்கி இரண்டாக உடைந்தது.

மே 22, 2010, மங்களூர் விமான விபத்து: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 812 மங்களூரில் ஓடுபாதையை விட்டு விலகி ஏற்பட்ட விபத்தில் 158 பேர் உயிரிழந்தனர்.

ஜூலை 17, 2000, பாட்னா விமான விபத்து: அலையன்ஸ் ஏர் விமானம் 7412-ல் போயிங் 737 விமானம் பாட்னாவில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். விமானம் கட்டுப்பாட்டை இழந்ததே காரணம் ஆகும்.

நவம்பர் 12, 1996, சார்கி தாத்ரி நடுவானில் மோதியது: சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் போயிங் 747 மற்றும் கஜகஸ்தான் ஏர்லைன்ஸ் இலியுஷின் இல்-76 ஆகியவை டெல்லி அருகே மோதி விபத்துக்குள்ளானது. இரு விமானங்களிலும் இருந்த 349 பேரும் உயிரிழந்தனர். விமானியின் தவறு மற்றும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுடன் தவறான தொடர்பு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டது.

ஏப்ரல் 26, 1993, அவுரங்காபாத் விமான விபத்து: இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 491, போயிங் 737, அவுரங்காபாத்தில் இருந்து புறப்பட்ட நிலையில் விபத்துக்குள்ளானது. இதில், ஒரு டிரக் மற்றும் மின் கம்பிகளில் மோதி 55 பேர் உயிரிழந்தனர்.

ஆகஸ்ட் 16, 1991, இம்பால் விமான விபத்து: இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 257 இம்பால் அருகே விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த 69 பேரும் உயிரிழந்தனர்.

பிப்ரவரி 14, 1990, பெங்களூரு விமான விபத்து: இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 605, ஏர்பஸ் A320, பெங்களூருவை நெருங்கும் போது விபத்துக்குள்ளானது. இதில், 92 பேர் உயிரிழந்தனர்.

அக்டோபர் 19, 1988, அகமதாபாத் விமான விபத்து: இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 113 அகமதாபாத்தில் விபத்துக்குள்ளானது. இதில், 133 பேர் உயிரிழந்தனர்.

ஜூன் 21, 1982, பம்பாய் விமான விபத்து: ஏர் இந்தியா விமானம் 403 பம்பாய் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது. இதில், 17 பேர் உயிரிழந்தனர்.

 

ஜனவரி 1, 1978, பம்பாய் விமான விபத்து: ஏர் இந்தியா போயிங் 747 விமானம் மும்பையில் இருந்து புறப்பட்ட பிறகு அரபிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், பயணித்த 213 பேரும் உயிரிழந்தனர். ( நன்றி: மாலைமலர், 12/06/2025 )

மரணம் நிகழக் கூடிய ஒன்றாகும்

இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு உயிரினத்திற்கும் மரணம் என்பது சந்தேகத்திற்கு வழியில்லாத உறுதியாக நிகழக் கூடிய ஒன்றாகும். 

“(பூமியில்) உள்ள அனைத்து உயிரினமும் அழிந்து போகக்கூடியவையே!” (அல்குர்ஆன்: 55: 26 )

அது போலவே இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் மரணம் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி உறுதியாக நிகழக் கூடிய ஒன்றாகும். 

"ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே ஆகவேண்டும்; அன்றியும் இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்; எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை” (அல்குர்ஆன்: 3: 185 )

ஆனாலும், இதை அறிந்திருந்தும் மனிதர்களில் பெரும்பாலோர் மரணத்தை மறந்தவர்களாக வாழ்கின்றனர். 

ஒரு முஸ்லிம் மரணத்தை அதிகமாக நினைப்பதும் அதற்காக தம்மை தயார் படுத்திக் கொள்வதும் மிக மிக அவசியமாகும். 

நபி (ஸல்) அவர்களைப் பார்த்து அல்லாஹ் கூறும் போது,

நிச்சயமாக நீரும் மரிப்பவர்! நிச்சயமாக அவர்களும் மரிப்பவர்களே!” (அல் குர்ஆன் 39:30)

இவ்வுலகில் ஒருவருக்கொருவர் போட்டிப் போட்டுக்கொண்டு செல்வம் சேர்ப்பதிலும் அதனைக் கொண்டு வளங்களை பெருக்கிக் கொள்வதிலுமே ஆனந்தம் அடைகின்றனர்.

 

நம்முடைய இவ்வுலக வாழ்வு என்பது நிரந்தரமற்ற தற்காலிக வாழ்வு என்பதை ஏனோ மறந்து விடுகிறோம். இவ்வுலகில் வாழ்ந்த, வாழும், வாழ இருக்கும் எந்த மனிதருக்கும் நிரந்தர வாழ்வு என்பது கிடையாது.

அல்லாஹ் கூறுகிறான்:“(நபியே!) உமக்கு முன்னர் எந்த மனிதனுக்கும் (அவன்) என்றென்னும் இருக்கக்கூடிய நித்திய வாழ்வை நாம் (இங்கு) கொடுக்கவில்லை” (அல்குர்ஆன்: 21: 34 )

திடீர் மரணம் என்பது...

திடீரென ஏற்படும் மரணத்திற்கு 

مَوْتُ الْفَجْأَةِ

மவ்துல் பஜ்அஹ்என்று அரபியில் சொல்லப்படும்.

மனிதர்களில் சிலர் நோயுற்று பல நாட்கள் படுக்கையில் கிடந்து மரணிக்கிறார்கள். இன்னும் சிலர் பேரிடர்களில், விபத்துக்களில் சிக்கி திடீரென மரணிக்கிறார்கள்.

இவ்விரு வகையான மரணம் நல்லவர்களுக்கும் வரும். கெட்டவர்களுக்கும் வரும். கெட்டவர்களுக்கு மட்டுமே திடீர் மரணம் வரும் என்பது பிழையான கருத்தும், தவறான நம்பிக்கையும் ஆகும்.

திடீர் மரணம் என்பது நீரில் மூழ்கி மரணித்தல், கிணற்றில் விழுந்து மரணித்தல், வாகன விபத்தில் மரணித்தல், கொலை செய்யப்பட்டு மரணித்தல் வெட்டப்பட்டோ, சுடப்பட்டோ மரணித்தல், மரம் விழுந்து அல்லது மரத்திலிருந்து விழுந்து மரணித்தல், தீப்பற்றி மரணித்தல், காலரா, வாந்தி பேதி, கொரோனா போன்ற நோயினால் மரணித்தல், பிரசவ நேரம் தாய் மரணித்தல், அல்லது குழந்தை மரணித்தல், கட்டிடம் விழுந்து மரணித்தல், இடிபாடுகளுக்குள் சிக்கி மரணித்தல் போன்றவையாகும். இவ்வாறு மரணிப்பது திடீர் மரணம் என்று சொல்லப்படும். 

எனினும் நபி (ஸல்)  அவர்கள் திடீர் மரணத்தை விட்டும் பாதுகாப்பு தேடியுள்ளார்கள்.

كَانَ النَّبِيُّ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمْ يَتَعَوَّذُ مِنْ مَوْتِ الْفَجْأَةِ، وَكَانَ يُعْجِبُهُ أَنْ يُمَرَّضَ قَبْلَ أَنْ يَمُوتَ»

மாநபி  (ஸல்) அவர்கள் திடீர் மரணத்தை விட்டும் பாதுகாப்புத் தேடுபவர்களாக இருந்தார்கள். மேலும் அவர்கள் மரணிப்பதற்கு முன் நோயுற்றிருப்பதை விரும்பினார்கள். ( நூல்: அல்முஃஜமுல் கபீர் லித்தபறானீ )

திடீரென ஏற்படும் மரணம் என்றால் என்ன? என்பதற்கும் நபி (ஸல்) அவர்கள் இறைவனிடம் பாதுகாப்புக் கேட்டதாக சொல்லப்படும் இன்னொரு நபிமொழி சான்றாக அமைந்துள்ளது.

عَنْ أَبِي الْيَسَرِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْعُو فَيَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَرَمِ، وَالتَّرَدِّي، وَالْهَدْمِ، وَالْغَمِّ، وَالْحَرِيقِ، وَالْغَرَقِ، وَأَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِي الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ، وَأَنْ أُقْتَلَ فِي سَبِيلِكَ مُدْبِرًا، وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ لَدِيغًا رواه النسائي برقم 5532 

யாஅல்லாஹ்! முதுமையில், தள்ளாமையில் மரித்துப் போவதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்!

யாஅல்லாஹ்! உயரமான இடத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு மரணம் ஏற்படுவதில் இருந்து பாதுகாப்புத் தேடுகிறேன்!

யாஅல்லாஹ்! கவலையில் சிக்குண்டு மரணம் ஏற்படுவதில் இருந்து பாதுகாப்புத் தேடுகிறேன்!

யா அல்லாஹ்! நெருப்பில் எரிந்து சாவதிலிருந்து பாதுகாப்புத் தேடுகிறேன்.

யாஅல்லாஹ்! நீரில் மூழ்கிச் சாவதிலிருந்து, தண்ணீரிலே சிக்கி மூழ்கிச் சாவதிலிருந்து பாதுகாப்புத் தேடுகிறேன்!

  “யா அல்லாஹ்! கட்டிடம் இடிந்து விழுந்து, அந்த இடிபாடுகளிலே சிக்கி சாவதிலிருந்து பாதுகாப்புத் தேடுகிறேன்”!

யாஅல்லாஹ்! உன் பாதையில் புறப்பட்டு, பயணித்து, போரிட்டு, போரில் புறமுதுகிட்டு ஓடி ஒளிந்து மரணம் தழுவுவதை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன்!

யாஅல்லாஹ்! மரண நேரத்தில் ஷைத்தான் என்னை உரசிச் செல்வதில் இருந்து பாதுகாப்புத் தேடுகிறேன்!

யாஅல்லாஹ்! பாம்பு, தேள் முதலிய நச்சுத்தன்மை கொண்ட விஷ ஜந்துக்கள் தீண்டி மரணம் ஏற்படுவதில் இருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்! ( நூல்: நஸாயி )

இவ்வகை மரணம் சிலருக்கு நல்லதாயும், சிலருக்கு கெட்டதாயும் அமையும்.

عَنْ عَائِشَةَ، قَالَتْ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ مَوْتِ الْفَجْأَةِ؟ فَقَالَ: «رَاحَةٌ لِلْمُؤْمِنِ، وَأَخْذَةُ أَسَفٍ لِلْفَاجِرِ»

அன்னை ஆயிஷா  (ரழி) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள். நான் பெருமானார்  (ஸல்) அவர்களிடம் திடீர் மரணம் பற்றிக் கேட்ட போது அது இறை நம்பிக்கையாளனுக்கு சுகமானதும், கெட்டவனுக்கு கைசேதமும் ஆகும்என்று கூறினார்கள். ( நூல்: முஸ்னத் அஹ்மத் )

ஆகையால் நல்ல மனிதர்களைப் பொறுத்து திடீர் மரணம் நல்லதாகவும், கெட்ட மனிதர்களைப் பொறுத்து அது கெட்டதாகவும் அமைந்து விடுகிறது.

எனவே, நல்லவனாயினும், கெட்டவனாயினும் நபி (ஸல்)  அவர்கள் திடீர் மரணத்தை விட்டும் பாதுகாப்புத் தேடியிருப்பதை அடிப்படையாகக் கொண்டு நாமும் பாதுகாப்பு தேடிக் கொள்வதே சிறந்ததாகும்.

No comments:

Post a Comment