Thursday, 25 August 2022

குப்பைகளை இங்கே கொட்டாதீர்!!!

 

குப்பைகளை இங்கே கொட்டாதீர்!!!

இந்த உலகத்தில் குப்பைகள் இல்லா  இடமில்லை என்று சொல்லும் 

அளவுக்கு குப்பைகள் குவிந்து வருகின்றன.

நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளில் கொட்டப்படும் குப்பைகளால் வரும் ஆபத்துக்களை பற்றி பேசும் அளவுக்கு  நம்மிடம் நாமே கொட்டும் குப்பைகளால் ஏற்படும் ஆபத்துக்களை உணராமல் இருந்து வருகிறோம்.

ஒரு புறம் நம் வயிறு குப்பைகள் நிரப்பப்படும் குப்பை தொட்டியாக மாறி வருகிறது.

இன்னொரு புறம்  நம் ஐந்து புலன்கள்  மூலம் ஒவ்வொரு கணமும் கணக்கின்றி நம் மனதில் குப்பைகள் வந்து குவிந்து கொண்டே இருக்கின்றன.

ஆனால் நம் வயிற்றிலும் மனதிலும் குவிந்துள்ள குப்பைகளை நாம்  அறிவதில்லை  ,அறிய முடிவதும் இல்லை அவற்றை அகற்றும் வழியும் தெரியவில்லை

உண்மையை சொல்லவேண்டுமெனில் அதை அகற்றும் எண்ணமே இங்கே நம்மில் பலருக்கும் இல்லை.

ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மண்ணில் எந்த குப்பையைப்

போட்டாலும் பூமி அதை உரமாக மாற்றி உயிர்களும் தாவரங்களும் உயிர் வாழ வகை செய்திடுகிறது.

இன்று அதில் கூட மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரிக்கப்பட்டு மிகப் பெரிய எச்சரிக்கை எல்லாம் விடப்படுகிறது.

ஆனால், நம் வயிற்றில் விழும் குப்பைகள் நம் மனதில் விழும் குப்பைகளால் நாம் உயிர் வாழ்வதே இன்று கேள்விக்குறியாகி வருகிறது.

வயிறு குப்பை தொட்டியானால்?....

இன்று மனித சமூகம் சந்திக்கும் பல்வேறு நோய்களுக்கு காரணம் வயிறு குப்பை தொட்டியாக இருப்பது தான் என பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

புற்றுநோய், இதய நோய், சர்க்கரை நோய் இந்த வரிசையில் தற்போது உடல் பருமன் பாதிப்பும் சேர்ந்துள்ளது. 

1975ஆம் ஆண்டிற்கு பிறகு உலகில் உள்ள மக்கள் தொகையில் உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக  உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சுமார் 135 மில்லியன் மக்கள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இந்தியன் ஜர்னல் ஆஃப் கம்யூனிட்டி மெடிசின் தெரிவித்துள்ளது. உடல் பருமனாகி விட்டால் அத்துடன் சேர்ந்து பல்வேறு விதமான நோய்களும் வரத் தொடங்கும்.

உடல் பருமன் எதனால் உண்டாகிறது? இது எப்படிப்பட்ட பாதிப்புகளை உண்டாக்கும் என்பதை முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

உடலில் அதிக கொழுப்பு சேர்வதால் உடல் பருமனாகிறது. ஒருவரின் உடல் நிறை குறியீட்டெண்ணை ( Body Mass Index (BMI)) வைத்து அவர் பருமனாக உள்ளாரா, இல்லையா? என்பதை அறிய முடியும். BMI 25-க்கு மேல் இருந்தால் அதிக எடை என்று அர்த்தம், இதுவே 30-க்கு மேல் இருந்தால் உடல் பருமன் என்று அர்த்தம். இதை ஒருவரின் உடல் எடை மற்றும் உயரத்தை வைத்து கணிக்கப்படுகிறது.

உடல் நோய் மற்றும் உளவியல் நோய்...

உடலில் அதிக கொழுப்பு சேர்தல், அதிக சர்க்கரை சேர்தல், எந்தவித உடற்பயிற்சியும் இல்லாமல் இருத்தல் போன்றவற்றால் தான் உடல் பருமன் ஏற்படுகிறது. இதனால் இதய நோய், உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற நீண்ட கால பாதிப்புகள் தரும் நோய்கள் உருவாகலாம். இத்துடன் சில வகையான புற்றுநோய்களும் ஏற்படலாம், மேலும் ஒருவருக்கு உடல் பருமனாக இருந்தால் அது அவரின் முழு உடலில் செயல்பாட்டை பாதிக்கும். என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உடல் பருமனாக இருப்பதால் பலரின் கேலி கிண்டலுக்கு ஆளாக வாய்ப்பு அதிகம். இது ஒருவரின் மனநலனை நேரடியாக பாதிக்கும். இதனால் தங்களது வாழ்க்கையின் மீது வெறுப்பு அதிகம் இருப்பது போன்று உணர்வார்கள். தனிமை, மன உளைச்சல், மன அழுத்தம் போன்ற பாதிப்புகளும் இவற்றால் ஏற்படுகிறது என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

வயிறும் நம் கடமையும்...

ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டுமென்றால் நாம் அதிகம் பேண வேண்டியது நமது வயிற்றைத்தான். 

நாம் சாப்பிடக்கூடிய உணவுகளும், அருந்தக்கூடிய பானங்களும் வயிற்றினுள் சென்று அதை செரிமானமாக்கி நமது உடலுக்குத் தேவையான சக்திகளை வழங்கக்கூடிய வேலைகளைச் செய்வது நமது வயிறுதான். பல இயந்திரங்கள் சேர்ந்து செய்யக்கூடிய மிகப்பெரிய வேலைகளை நமது வயிற்றில் இருக்கக்கூடிய உறுப்புகள் செய்து முடிக்கின்றன. 

அவைகள் நம் கற்பனைக்கு எட்டாத காரியங்களை எல்லாம் நமக்குத் தெரியாமலேயே செய்து கொண்டிருப்பது வல்ல இறைவன் நம் மீது புரிந்த மிகப்பெரிய கருணையாகும்.

முதலில் நாம் அதற்காகவே ஒரு முறை நன்றி கூற கடமைப் பட்டுள்ளோம். (அல்ஹம்துலில்லாஹ்) எல்லாப்புகழும் இறைவனுக்கே! 

மிகவும் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டிய வயிற்றுக்குள் கண்டதையும் கண்ட நேரத்தில் சாப்பிட்டு அல்லது அளவுக்கதிகமாக சாப்பிட்டு, அதன் காரணமாக நமது உடல் ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவித்துக் கொண்டிருக்கிறோம். 

உணவும் நமது கடமையும்...

உணவு உண்ணும் விஷயத்தில் மக்கள் பல தரப்பட்ட நிலையில் இருக்கிறார்கள்.

வாழ்வதற்காக உண்பவர்கள் சிலர் இருக்கிறார்கள், இவர்கள் இலட்சியவாதிகள் தங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கிக் கொள்பவர்கள். 

உண்பதற்காகவே சிலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உணவு உண்பதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாதவர்களும் இருக்கிறார்கள். நேரத்திற்கு சாப்பிட மாட்டார்கள். அப்படியே சாப்பிட்டாலும் கட்டுப்பாடுகளை எல்லாம் பேண மாட்டார்கள். இன்னும் சிலர் உணவே இல்லாமல் சிரமப்பட்டுக் கொண்டு வாழ்பவர்கள்.

 

இந்த மூன்று வகையினர் தான் உடல் ரீதியான  பல வியாதிகளையும், உடல் பருமனையும் விலை கொடுத்து வாங்கிக் கொள்கின்றனர். 

எனவே, உணவு விஷயத்தில் நாம் பல்வேறு வழிகாட்டல்களை தெரிந்து கொள்ள கடமைப்பட்டுள்ளோம். அதுவும் இஸ்லாமிய வழிகாட்டல்களை நாம் பின்பற்ற கடமைப்பட்டுள்ளோம்.

உணவும் இஸ்லாமிய வழிகாட்டலும்...

மனித வாழ்வில் உணவு என்பது இன்றியமையாத ஒன்று என்பதை ஆதம் (அலை) அவர்களைப் படைத்து சுவனத்தில்  உலவ விட்ட போதே அல்லாஹ் உணர்த்தி விட்டான். மேலும் உண்ணும் உணவில் கட்டுப்பாடு எவ்வளவு முக்கியம் என்பதையும் அல்லாஹ் அப்போதே வரையறுத்தும் விட்டான்.

உணவுக் கட்டுப்பாட்டை மீறியது தான் இந்த உலகுக்கு ஆதம் அலைஹிஸ்ஸலாம் அனுப்பப்பட்டதற்கான பிரதான காரணம் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள  வேண்டும். . எச்சரிக்கையும்....

1.       அளவை மீறிச்சாப்பிடக் கூடாது. 

 "உண்ணுங்கள், பருகுங்கள்; 'இஸ்ராஃப்' - வீண் விரயம் செய்யாதீர்கள்; நிச்சயமாக (அல்லாஹ்வாகிய) அவன் 'இஸ்ராஃப்' - வீண் விரயம் செய்வோரை நேசிப்பதில்லை."
(
அல்குர்ஆன்: 7:31)

இங்கே 'இஸ்ராஃப்' என்பதன் நேரடிப் பொருள் 'எல்லையை மீறுதல்' என்பதாகும். எல்லையை மீறுதல் பல வகைப்படும். அதில் அளவை மீறிச் சாப்பிடுதலும் ஒரு வகையாகும். இதன் காரணமாகவே அளவை மீறிச் சாப்பிடுதல் அனுமதிக்கத் தக்கதல்ல என விரிவுரையாளர்கள் சிலர் விளக்கம் தருகிறார்கள். ( நூல்: மஆரிபுல் குர்ஆன் )

روي عن أمير المؤمنين علي (رضي الله عنه) لابنه الحسن (رضي الله عنه): (يا بني!.. ألا أعلمك أربع كلماتٍ تستغني بها عن الطب؟.. فقال: بلى، قال: لا تجلس على الطعام إلا وأنت جائعٌ، ولا تقم عن الطعام إلا وأنت تشتهيه، وجوّد المضغ، وإذا نمت فاعرض نفسك على الخلاء.. فإذا استعملت هذا استغنيت عن الطب.. وقال: إنّ في القرآن لآيةً تجمع الطب كله: ﴿…كُلُواْ وَاشْرَبُواْ وَلاَ تُسْرِفُواْ﴾).

அலீ ரலி அவர்கள் தங்களுடைய மகன் ஹஸன் ரலி அவர்களுக்கு செய்த உபதேசத்தில் ஒன்று:- மகனே!   மருத்துவமனை வாழ்க்கையை விட்டும் உன்னை தூரமாக்கிடும் நான்கு விஷயங்களை உனக்கு கூறட்டுமா? என்று கேட்டார்கள். அதற்கு, ஆம் தந்தையே அவசியம் கூறுங்கள்! என்று ஹஸன் ரலி அவர்கள் பதில் கூறவே, 1. பசித்தால் மட்டுமே உணவை உண்ணு. 2. இன்னும் உண்ண வேண்டும் எனும் ஆசை வரும் போதே உணவுத் தட்டில் இருந்து எழுந்து விடு. 3. உணவை மென்று விழுங்குவாயாக! 4. அனைத்து சிந்தனைகளையும் தூக்கி வைத்து விட்டு உறங்குவாயாக! இவைகளை சரியாக பேணி வந்தால் மருத்துவமனை வாழ்க்கையை விட்டும் தூரமாகி விடுவாய். ஏனெனில், குர்ஆனில் ஒரு வசனம் ஒட்டுமொத்த நோய்க்கான நிவாரணிகளை கூறுகிறது என்று சொல்லி அல்குர்ஆன்: 7:31 வசனத்தை ஓதிக் காண்பித்தார்கள்.

قال عمر - رضي الله عنه -:

 أيها الناس، إياكم والبطنة من الطعام، فإنها مكسلة عن الصلاة، مفسدة للجسد، مورثة للسقم، وإن الله تبارك وتعالى يبغض الحبر السمين، ولكن عليكم بالقصد في قوتكم، فإنه أدنى من الإصلاح، وأبعدَ من السَرَف، وأقوى على عبادة الله، وإنه لن يهلك عبد حتى يؤثر شهوته على دينه. [موسوعة ابن أبي الدنيا 4/ 92].

ஹள்ரத் உமர் (ரலி) அவர்கள் ஒருமுறை தங்களது குத்பாவில் நீங்கள் வயிறு நிரம்ப உண்ணுவதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன். அப்படி வயிறு நிரம்ப உண்ணுவதால் தொழுகையில் சோம்பலும் உடலுக்கு நோவினையும் உண்டாகிறது. எனவே உணவில் நடுநிலையைக் கையாளுங்கள். அது உங்களின் பெருமையை தூரமாக்கும். உடலுக்கு ஆரோக்கியம் தரும். வணக்கம் புரிய சக்தி தரும். அறிந்து கொள்ளுங்கள்! மனிதன் தனது மார்க்கத்தை விட மனோ இச்சையை தேர்ந்தெடுக்கா தவரை அவன் அழியமாட்டான்என்று கூறியுள்ளார்.

பிரபல மருத்துவ நிபுணர் ரிச்சர்ட் பார்ட் என்பவர் மிக நீண்ட ஆய்விற்கு பிறகு எப்போதும் தேவையை விட அதிகம் சாப்பிடும் மனிதர்களுக்கு கீழ்க்கண்ட நோய்கள் துளிர்விடுவதாக கூறியுள்ளார்.

 

1. Brain Diseases (மூளை சம்பந்தப்பட்ட நோய்கள்)

 

2. Eyes Diseases (கண் சம்பந்தப்பட்ட நோய்கள்)

 

3. E.N.T. Diseases (காது. மூக்கு,தொண்டை சம்பந்தப்பட்ட நோய்கள்)

 

4. Chest & Loung Diseases (தோள் புஷம், ஈரல் சம்பந்தப்பட்ட நோய்கள்)

 

5. Heart & Volves Diseases (இதயம், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள்)

 

6. Gall Bladder Diseases (பித்தப்பை சம்பந்தப்பட்ட நோய்கள்)

 

7. Diabetese (நீரழிவு நோய்)

 

8. High Blood Pressure (அதிக இரத்த அழுத்தம்)

 

9. Depression (மன அழுத்தம்)

 

மேலும் அவர் தேவையை விட அதிகம் சாப்பிடுபவர்களுக்கு மேற்கண்ட நோய்களின் அறிகுறிகள் தாக்குவதற்கு அதிகம் வாய்ப்பு உள்ளதால் அனைவரும் அளவோடு சாப்பிட வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளார். (நூல் : சுன்னதே நபவீ அவ்ர் ஜதீத் சையின்ஸ்)

பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் உணவை நன்றாக அரைத்து சாப்பிடாவிட்டால் பற்கள் வெகுசீக்கிரம் பழுதடைந்து விடுகிறது. வாயில் ஒரு பக்கமாகவே அரைத்து சாப்பிட்டாலும் மறுபக்கம் பழுதடைந்து விடுகிறது. எனவே உணவை நன்றாக அரைத்துச் சாப்பிடுங்கள். மட்டுமின்றி சரியாக அரைக்காமல் அப்படியே முழுங்கினால் குடலுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. வயிறு அழற்சி (Stomack Inflamation)உண்டாகிறது. வயிற்று அமிலத்தன்மை (Stomack Asititie) குறைவு ஏற்பட்டு நோய் உண்டாவதுடன் செரிமானம் (Digestive System) சரியாக ஏற்படுதில்லைஎன்று கூறுகிறார்கள். (நூல் : சுன்னதே நபவீ அவ்ர் ஜதீத் சையின்ஸ்)

2.       ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் உணவை உண்ணக் கூடாது.

ஆரோக்கியமும், உணவு உண்ணும் பாக்கியமும்  இறைவன் அடியார்களுக்கு வழங்கும் மகத்தான அருட்கொடையாகும்.

فعن عبيد الله بن مِحْصَن الأنصاري –رضي الله عنه- أن رسول الله صلى الله عليه وسلم قال " 

من أَصْبَحَ مِنْكُمْ آمِنًا في سِرْبِهِ، مُعَافًى في جَسَدِهِ، عِنْدَهُ قُوتُ يَوْمِهِ، فَكَأَنَّمَا حِيزَتْ له الدُّنْيَا ".رواه الترمذي ( 2346)

அப்துல்லாஹ் இப்னு மிஹ்ஸன் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: எவர் படுக்கையில் இருந்து நிம்மதியோடு எழுகின்றாரோ, எழுந்த அன்றைய நாளில் உடலில் ஆரோக்கியத்தை உணர்கின்றாரோ, எழுந்த அன்றைய நாளில் உணவை உண்கின்றாரோ அவருக்கு இந்த உலகம் முழுவதும் கிடைத்ததற்குச் சமமாகும்என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.                                  ( நூல்: திர்மிதீ )

இப்படிப்பட்ட ஆரோக்கியத்தை வீணாக்கும் பழுது படுத்தும் உணவுகளை உண்பதை விட்டும் கவனமாக இருக்க வேண்டும்.

உணவுகளை இரண்டு வகையாக இஸ்லாம் பிரிக்கின்றது . 1) ஹலால் (சாப்பிட அனுமதிக்கப்பட்ட தூய்மையான உணவு). 2) ஹராம் (சாப்பிட அனுமதிக்கப்படாத தூய்மையற்ற உணவு) அந்த வகையில் மனித ஆரோக்கியத்தை அச்சுறுத்தும் உணவு முறைகளை‌த் தடுக்கிறது இஸ்லாம்.
மனிதனின் ஆரோக்கியத்திற்கு எதிராக இருக்கும் அத்தனை உணவுகளும் தடுக்கப்பட்ட (ஹராம்) உணவுகளாகும்.

நம்பிக்கை கொண்டோரே, நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள். நீங்கள் அல்லாஹ்வையே வணங்குவோராக இருந்தால் அவனுக்கே நன்றி செலுத்துங்கள்என்று திருக்குர்ஆன் (2:172) சுட்டிக்காட்டுகிறது. 

உங்கள் கரங்களால் உங்களை நீங்களே அழிவுக்குள்ளாக்காதீர்கள். (அல்குர்ஆன்: 2: 195 ) 

3.  வயிறு புடைக்க சாப்பிடக் கூடாது.
மிக்தாம் இப்னு மஅதீகரிப் (ரலி) அறிவிக்கின்றார்கள்:- "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: "ஆதமின் மகன் (மனிதன்) இட்டு நிரப்பக் கூடிய பைகளில் வயிறை விட மோசமானது வேறெதுவுமில்லை. ஆதமின் மகனுக்கு அவனது முதுகை நிமிர்த்தக் கூடிய சில கவளங்களே போதும். அதற்கு மேலும் அவன் உண்டே ஆக வேண்டுமானால் (வயிற்றின்) மூன்றில் ஒரு பாகத்தை தனது உணவுக்காகவும், இன்னொரு மூன்றில் ஒரு பாகத்தை தனது பானத்திற்காகவும், மற்றொரு மூன்றில் ஒரு பாகத்தை தனது சுவாசத்திற்காகவும் அவன் ஒதுக்கிக் கொள்ளவும்." ( நூல்: திர்மிதீ  மாஜா முஸ்னத் அஹ்மத் )

அபூஹுரைரா ரலி அவர்கள் அறிவிக்கின்றார்கள்:- "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: "வயிறுதான் உடலின் தடாகம் போன்று இருக்கிறது. உடலின் அனைத்து குருதிக் குழாய்களும் நரம்புகளும் அதிலிருந்து பருகுகின்றன. வயிறு சீராக இருக்குமானால் அனைத்து நாளங்களும் அதிலிருந்து ஆரோக்கியமான உணவைப் பருகிச் செல்லும். வயிறு சீர்குலைந்து இருக்குமானால் அனைத்து நாளங்களும் நோய்களைக் கவ்விக் கொண்டு உடல் முழுதுக்கும் பரவிச் செல்லும். ( நூல்: பைஹகீ )

4. தேர்ந்தெடுக்கப்பட்ட உணவு உண்ண வேண்டும்.

உணவு உண்பதைப் பொறுத்த வரையில் வயதுக்கு ஏற்ற உணவு, உடல் உழைப்புக்கு ஏற்ற உணவு, ஆண் பெண் என்ற வேறுபாட்டிற்கு தக்க உணவு, பசியின் அளவுக்கு ஏற்ப உணவு, ருசிக்கு தக்க உணவு என அவரவர் அந்தந்த தேவைக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கப்பட்ட உணவுகளையே உண்ண வேண்டும் என இஸ்லாம் வழிகாட்டுகிறது. وقال سعيد بن جبير: صنعت لابن عباس - رضي الله عنه - وأصحابه ألوانا من الطعام والخبيص، فقال لي: يا سعيد إنا قوم عرب، فاصنع لنا مكان هذه الألوان الثريد (1)، ومكان هذه الأخبصة الحيس (2)، ولولا أنك رجل منا أهل البيت ما قلت لك. [موسوعة ابن أبي الدنيا 4/ 124].

ஸயீத் இப்னு ஜுபைர் ரலி அவர்கள் இப்னு அப்பாஸ் ரலி மற்றும் அவர்களின் தோழர்களுக்காக ஒரு முறை (கலர் கலரான) வகை வகையான உணவுகளைத் தயார் செய்து வைத்தார்கள். அதைப் பார்த்த இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் நாங்கள் அரபுகள் எங்கள் பகுதியின் உணவுகளை எங்களுக்கு இன்னின்ன வகையில் (கலரில்) தயார் செய்து தாருங்கள் " என்று கூறினார்கள்.

இன்றைக்கு மேற்கத்திய, ஐரோப்பிய, அரபுலக, சைனீஸ், பர்மீய உணவு வகைகளை நாம் உண்டு வருகிறோம்.

அந்தந்த பகுதிகளில் வாழும் மக்களுக்கே அந்தந்த பகுதிகளின் உணவுகள் வெகுவாக ஒத்துக் கொள்ளும். மேலும், அந்தந்த தட்பவெப்ப நிலையைப் பொறுத்து அவர்களின் உடலுக்கு தேவையான கலோரிகளை கொடுக்கும்.

1. வயதுக்கு ஏற்ற உணவு.

குழந்தை பிறந்த இரண்டு ஆண்டுகளுக்கு தாய்ப்பாலே குழந்தையின் பிரதான உணவாகும்.

وَالْوَالِدَاتُ يُرْضِعْنَ أَوْلَادَهُنَّ حَوْلَيْنِ كَامِلَيْنِ لِمَنْ أَرَادَ أَنْ يُتِمَّ الرَّضَاعَةَ وَعَلَى الْمَوْلُودِ لَهُ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوفِ لَا تُكَلَّفُ نَفْسٌ إِلَّا وُسْعَهَا لَا تُضَارَّ وَالِدَةٌ بِوَلَدِهَا وَلَا مَوْلُودٌ لَهُ بِوَلَدِهِ

தம் குழந்தைகளுக்கு பால்குடியை நிறைவு செய்ய வேண்டும் என்று தந்தையர்களில் எவராவது விரும்பினால் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு இரண்டாண்டு காலம் முழுமையாகப் பாலூட்ட வேண்டும். இந்நிலையில், அத் தாய்மார்களுக்கு நல்ல முறையில் உணவளிப்பதும், உடை கொடுப்பதும் குழந்தைகளின் தந்தையர்கள் மீது பொறுப்பாகும்

ஆனால், எவர் மீதும் அவரது சக்திக்கு ஏற்பவே தவிர பொறுப்பு சுமத்தப்பட மாட்டாது. தாயும் தனது குழந்தைக்கு பாலூட்டும் காரணத்தால் சிரமத்திற்கு உள்ளாக்கப்பட மாட்டாள். தந்தையும் தனது குழந்தையினால் சிரமத்திற்கு உள்ளாக்கப் படமாட்டார்”. பார்க்க: முழு இறைவசனத்தையும்              ( அல்குர்ஆன்: 2: 233 )

ஆனால், இன்று பல்வேறு காரணங்களால் குழந்தை பருவத்தில் கிடைக்க வேண்டிய உணவு கிடைக்காமலேயே பல்வேறு குழந்தைகள் ஆரோக்கிய கேடுகளுக்கு ஆளாகின்றன.

இரண்டு ஆண்டுகள் கழித்து தாய்ப்பால் நிறுத்திய பின்னர் எளிதில் ஜீரணமாகும் அல்லது நாம் உண்ணும் உணவை நம் குழந்தைகளுக்கு உண்பதற்கு வழங்க வேண்டும். பின் வரும் சம்பவத்தில் 3 வயதைத் தொட்டு நிற்கும் குழந்தைக்கு அவர்கள் உண்ணும் உணவான ரொட்டியை குழந்தைக்கு உண்ணக் கொடுத்தார்கள் என்பதைப் பார்க்க முடிகின்றது.

மாயிஸ் (ரலி) அவர்களுக்கு விபச்சாரம் செய்ததற்கான குற்றவியல் தண்டனை வழங்கப்பட்டு சில நாட்கள் கூட கழிந்திருக்காத நிலையில் அண்ணலாரையும், நபித்தோழர்களையும் அதிர்ச்சியடையச் செய்த ஓர் சம்பவம் நபிகளாரின் சபையில் நடந்தேறியது.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் திருச்சமூகத்திற்கு அஸ்த் குலத்தின் கிளையான ஃகாமிதிய்யா கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி வருகை தந்தார்கள்.

வந்த அந்தப் பெண்மணி அல்லாஹ்வின் தூதரே! நான் விபச்சாரம் செய்து விட்டேன். எனக்கு உரிய தண்டனையை நிறைவேற்றி என்னை தூய்மை படுத்துங்கள்! என்றார்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அப்பெண்மணியை திருப்பி அனுப்பி விட்டார்கள். அப்பெண் மறு நாளும் அல்லாஹ்வின் தூதரின் முன் வந்து நின்று முன்பு சொன்னது போலவே சொன்னார்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் திரும்பிச் செல்லுமாறு கூறிய போது, அப்பெண்மணி அல்லாஹ்வின் தூதரே! ஏன் என்னை திருப்பியனுப்புகின்றீர்கள்? மாயிஸ் இப்னு மாலிக் {ரலி} அவர்களின் விஷயத்தில் நடந்து கொண்டதைப் போன்றல்லவா என் விஷயத்திலும் நடந்து கொள்கின்றீர்கள்.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் தகாத உறவில் ஈடுபட்டு கர்ப்பமாக இருக்கின்றேன்என்று கூறினார்.

நபி {ஸல்} அவர்கள் ஆச்சர்யத்தோடு நீயா அது?” என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி ஆம்என்றார்.

அப்படியானால் உமது வயிற்றினுள் உள்ள குழந்தையை பெற்றெடுத்து விட்டு வா!என்று அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

குழந்தையை பெற்றெடுத்த பின்னர் அப்பெண்மணி ஒரு துணியில் அந்தக் குழந்தையை சுற்றியெடுத்துக் கொண்டு, மாநபி {ஸல்} அவர்களிடம் வந்து இது நான் பெற்றெடுத்த குழந்தைஎன்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள், “நீ சென்று அந்தக் குழந்தைக்கு அமுதூட்டு! பால்குடி மறக்கடிக்கப்பட்ட பின் வா! என்று கூறி அனுப்பி வைத்தார்கள்.

அமுதூட்டும் காலம் நிறைவடைந்த பின்னர், அக்குழந்தையை அழைத்துக் கொண்டு, அக்குழந்தையின் கையில் ரொட்டித் துண்டு ஒன்றை கொடுத்து அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் சபைக்கு வந்து, “அல்லாஹ்வின் தூதரே! இதோ நான் பால்குடி மறக்கடித்து விட்டேன். இப்போது என் குழந்தை உணவை உட்கொள்ள ஆரம்பித்து விட்டதுஎன்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள், அக்குழந்தையை அன்ஸாரிகளில் ஒருவரிடம் ஒப்படைத்தார்கள்.

அதன் பின்னர் அந்தப் பெண்ணுக்கு கல்லெறி தண்டனை வழங்குமாறு உத்தரவிட்டார்கள். எனவே, அவருக்காக மார்பளவு குழி தோண்டப்பட்டது.

பின்னர் அக்குழிக்குள் அப்பெண் நிறுத்தி வைக்கப்பட்ட பின் கல்லெறியுமாறு மக்களுக்கு கட்டளையிட, மக்கள் அவர் மீது கல்லெறிந்து அல்லாஹ்வின் தண்டனையை நிறைவேற்றினார்கள்.

அப்போது, காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள் கல் ஒன்றை எடுத்து அப்பெண்ணின் தலைமீது எறிந்தார்கள். பீறிட்டு வந்த இரத்தம் காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களின் முகத்தில் தெரித்தது.

அப்போது, காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள் அப்பெண்ணை சபித்தார்கள்; ஏசினார்கள்.

இதை அருகில் நின்று கேட்ட மாநபி {ஸல்} அவர்கள் காலிதே! நிறுத்துங்கள். என் உயிர் எவன் வசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! அப்பெண்மணி அழகிய முறையில் தவ்பா பாவமன்னிப்புத் தேடிக்கொண்டார்.

பொது நிதியை மோசடி செய்த ஒருவன் இப்படி பாவமன்னிப்புக் கோரினால் அவனுக்கும்கூட மன்னிப்பு வழங்கப்பட்டிருக்கும்.என்று கூறினார்கள்.

பிறகு அப்பெண்ணுக்கு ஜனாஸா தொழுகை நடத்த ஏற்பாடு செய்யுமாறு நபித்தோழர்களை பணித்தார்கள்.

அவருக்காக ஜனாஸா தொழுகையை தாமே தொழவைத்தார்கள். பின்னர் அப்பெண்மணி நல்லடக்கமும் செய்யப்பட்டார்.

( நூல்: முஸ்லிம், பாபு மன் இஃதரஃப அலா நஃப்ஸிஹி பிஸ்ஸினா, புகாரி, பாபு மன் தரகல் ஃபவாஹிஷ், ஹதீஸ் எண்: 6820, 6824, மிஷ்காத், கிதாபுல் ஹுதூத், பக்கம்: 310 )

5.பசித்தால் மட்டுமே உண்ண வேண்டும்..

*وعن معاذ بن جبل - رضي الله عنه - قال: ثلاث من فعلهن فقد تعرض للمقت؛ الضحك من غير عجب، والنوم من غير سهر، والأكل من غير جوع. [الحلية (تهذيبه) 1/ 185].

முஆத் இப்னு ஜபல் ரலி அவர்கள் கூறினார்கள்:- மூன்று விஷயங்களை எவர் செய்கிறாரோ அவர் நோவினைக்கு உள்ளாவார். அதில் ஒன்று "பசியில்லாத போதும் சாப்பிடுபவர்" என்று.

இன்று வளர்ச்சியடைந்த நகர்ப்புறங்களில் அனைத்து நேரங்களிலும் உணவகங்களில் ஏதேனும் ஒன்றை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருப்பதை நாம் பார்க்கின்றோம்.

முன்மாதிரி மனிதர்களின் உணவு உண்ணும் பழக்கங்கள்...

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆயுள் முழுவதும் (தமது மரணம் வரை) எப்பொழுதும் இரண்டு தினங்கள் தொடர்ந்து கேழ்வரகு ரொட்டியையும் வயிறு நிரம்பச் சாப்பிட்டதில்லை." ( அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி); நூல்: திர்மிதீ. )

"அபூஹுரைரா (ரலி) அவர்கள் (ஒரு நாள்) தம் முன்னே பொறிக்கப்பட்ட ஓர் ஆட்டை(ச் சாப்பிடுவதற்காக) வைத்திருந்த ஒரு கூட்டத்தாரைக் கடந்து சென்றார்கள். அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களை(த் தம்முடன் சாப்பிட வருமாறு) அழைத்தார்கள். ஆனால் அன்னார் அவர்களுடன் சாப்பிட மறுத்து "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொலி நீக்கப்படாத கோதுமை ரொட்டியால் வயிறு நிரம்பாத நிலையிலேயே இந்த உலகிலிருந்து சென்று விட்டார்கள்" என்று கூறினார்கள்."

அறிவிப்பவர்: சயீத் (ரஹ்); (நூல்:புகாரி-541)

وعَنْ نَافِعٍ قَالَ : كَانَ ابْنُ عُمَرَ لاَ يَأْكُلُ حَتَّى يُؤْتَى بِمِسْكِينٍ يَأْكُلُ مَعَهُ ، فَأَدْخَلْتُ رَجُلًا يَأْكُلُ مَعَهُ ، فَأَكَلَ كَثِيرًا ، فَقَالَ : يَا نَافِعُ ! لاَ تُدْخِلْ هَذَا عَلَيَّ ، سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ :
( الْمُؤْمِنُ يَأْكُلُ فِي مِعًى وَاحِدٍ وَالْكَافِرُ يَأْكُلُ فِي سَبْعَةِ أَمْعَاءٍ ) رواه البخاري (5393) ومسلم (2060)

இப்னு உமர் ரலி அவர்கள் எப்போதும் யாராவது ஒரு மிஸ்கீனுடன் தான் உணவு உண்ணுவார்கள். அப்படி ஒரு நாள் ஒரு மிஸ்கீனுடன் உணவு உண்டார்கள். அவர் அதிகமாக உண்டார். உணவு உண்டு சென்றதும் தமது பணியாளர் நாஃபிஉ ரலி அவர்களை அழைத்து " இனி இவரை நம்மோடு உணவு உண்ண அழைத்து வர வேண்டாம். ஏனெனில், நபி ஸல் அவர்கள் கூறினார்கள் " ஒரு இறைநம்பிக்கையாளர் ஒரு குடலில் உண்பார். மாற்றான் ஏழு குடலில் உண்பான்" என்றார்கள். ( நூல் புகாரி)

روي عن عائشة رضي الله عنها أنها قالت : ( أول بلاء حدث في هذه الأمة بعد نبيها الشبع ؛ فإن القوم لما شبعت بطونهم سمنت أبدانهم ، وضعفت قلوبهم ، وجمحت شهواتهم )

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: "நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பிறகு உண்டான முதல் பித்அத் வயிறு நிறையச் சாப்பிடுவதுதான். மனிதர்களின் வயிறு நிரம்பி விடும் போது அவர்களின் உள்ளங்கள் உலகின் பக்கம் சாயத் துவங்கி விடுகின்றன."

روى أسد بن موسى من حديث عون بن أبي جحيفة عن أبيه قال
أكلت ثريدا بلحم سمين فأتيت النبي صلى الله عليه وسلم وأنا أتجشأ ، فقال : « كفَّ عنا جشاءك ، فإن أكثرهم شبعا في الدنيا أطولهم جوعا يوم القيامة »

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சபையிலே நான் ஏப்பம் விட்டேன். அதற்கு (நபி) அவர்கள் "உமது ஏப்பத்தை எங்களை விட்டும் தடுத்து வைப்பீராக. ஏனெனில், இவ்வுலகில் அதிகம் தனது வயிற்றை நிரப்புபவர்களே மறுமையில் நீண்ட நேரம் பசிக்கக் கூடியவர்களாக இருப்பார்கள்" எனக் கூறினார்கள்.

عن أبي هريرة رضي الله عنه قال: دخلت على النبي صلى الله عليه وسلم وهو يصلي جالسا, فقلت: يا رسول الله! اراك تصلي جالسا فما أصابك؟ فقال النبي صلى الله عليه وسلم: الجوع يا أبا هريرة! فبكيت, فقال: لا تبك يا أبا هريرة, فانّ شدة الحساب يوم القيامة لا تصيب الجائع اذا احتسب في دار الدنيا.

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஒரு நாள் நான்  அல்லாஹ்வின்  தூதர் {ஸல்} அவர்களின் வீட்டிற்கு  அண்ணலாரைக்  காண்பதற்காகச்  சென்றேன்.அப்போது, அண்ணலார் வீட்டில் உட்கார்ந்து தொழுது கொண்டிருந்தார்கள்.

நான் நபி {ஸல்} அவர்கள் தொழுது முடிக்கும் வரை காத்திருந்து விட்டு, தொழுது முடித்த  பின் அல்லாஹ்வின் தூதரே! தாங்கள்  உட்கார்ந்து தொழ நான் கண்டேனே!  உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது?” என  வினவினேன்.

அப்போது, நபி {ஸல்} அவர்கள்:-  அபூஹுரைராவே! பசி தான் காரணம்  என்றார்கள். அதைக் கேட்டதும் நான் அழுது  விட்டேன். அப்போது, அல்லாஹ்வின் தூதர்  {ஸல்} அவர்கள் என்னை நோக்கி அபூஹுரைராவே! இப்போது  நான் என்ன  சொல்லிவிட்டேன்! என்று அழுகின்றீர்கள்?”  நாளை மறுமை நாளில் கேள்வி கணக்கின்  கஷ்டத்தை உணரும் பட்சத்தில் உலகில் பசியோடு இருக்கும் நிலை ஒன்றும் பெரிதாகத் தெரியாது என்று பதில் கூறினார்கள். ( நூல்: அபூதாவூத் )

ஒரு நாள் நபி {ஸல்} அவர்கள் தமது அருமை  மகளார் ஃபாத்திமா (ரலி) அவர்களின்  வீட்டிற்கு பேரர்களான ஹஸன், ஹுஸைன்  ( ரலி அன்ஹுமா ) இருவரையும்  பார்க்கச் சென்றார்கள்.

வீட்டில் பேரர்கள் இல்லாததைக் கண்ட பெருமானார் {ஸல்} அவர்கள் ஃபாத்திமாவே!  குழந்தைகளை காணவில்லையே எங்கே  சென்றிருக்கின்றார்கள்?  என்று  கேட்டார்கள்.

உங்களது மருமகன் தான் அவர்களை ( ஓர்  இடத்தின் பெயரைச் சொல்லி) அங்கே  விளையாட அழைத்துச் சென்றிருக்கின்றார் என்று ஃபாத்திமா (ரலி) பதில் கூறினார்கள்.

குறிப்பிட்ட இடத்தில் அன்னையர் திலகம்  கூறியவாறே தம் மகன்களோடு அலீ (ரலி)  அவர்கள் விளையாடிக் கொண்டிருப்பதை நபி {ஸல்} அவர்கள் கண்டார்கள்.

அண்ணலாரைக் கண்டதும் பேரர்கள் 

இருவரும் பாசத்தோடு நபி {ஸல்} அவர்களின் கரங்களில் தஞ்சம் புகுந்தனர்.  அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் பேரர்களின் தலையை அன்பாக வருடி விட்டார்கள்.

பின்னர், அலீ (ரலி) அவர்களை நோக்கி அலீ அவர்களே! இந்த உச்சி வெயிலில் ஏன்  குழந்தைகளை விளையாட அழைத்து வந்தீர்கள்?”  என்று அன்பு கலந்த கண்டிப்போடு  வினவினார்கள்.

அதற்கு, அலீ (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! வீட்டில் உண்பதற்கு உணவேதும் இல்லை. ஏற்கனவே, இருவரும் நேற்றிலிருந்துஒன்றும் உண்ணவில்லை. நானும்,  ஃபாத்திமாவும் தான். விளையாட அழைத்து வந்தால்  விளையாட்டின்  கவனத்தில்  உணவை மறந்து விடுவார்கள் அல்லவா? அது தான் அழைத்து வந்தேன் என்று பதில்  கூறினார்கள்.                  ( நூல்: திர்மிதீ )

ஸஅது இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்கள்  கூறுகின்றார்கள்: நாங்கள் அல்லாஹ்விற்காக மேற்கொண்ட  யுத்தம் ஒன்றின் பயணத்தின் போது உண்ண உணவில்லாமல் சிரமப்பட்டோம். பல நாட்கள் இப்படியே கழிந்தது. ஒரு நாள் எனக்கு பசி  தாங்க வில்லை. அங்கிருந்த முள் மரம்  ஒன்றின் இலை, தளைகளைப் பறித்து கழுவி சாப்பிட்டேன். அனைத்துத் தோழர்களும்  என்னைப் பார்த்து சாப்பிட்டனர். இறுதியில்  எங்களின் மலம் கால்நடைகளின்  புழுக்கையைப் போல் இருப்பதை நாங்கள்  உணர்ந்தோம்.       ( நூல்: புகாரி )

ஸஅத் இப்னு முஆத் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: அல்லாஹ்விற்காக மேற்கொண்ட யுத்தம்  ஒன்றின் பயணத்தின் போது உண்ண  உணவில்லாமல் சிரமப்பட்டேன். ஒரு நாள்  இரவு சிறுநீர் கழிப்பதற்காக ஓரிடத்தில்  ஒதுங்கினேன். அப்போது என் சிறுநீர் பட்ட  இடத்தில் ஏதோ சரசர வென்று சப்தம்  வருவதை உணர்ந்து அதைக் கையால் எடுத்துப் பார்த்தேன். அது காய்ந்து போன  ஒட்டகத்தின் தோலின் ஒரு பகுதியாக  இருந்தது. மறுநாள் காலை அதை நான் சுத்தமாக கழுவி,நன்கு காயவைத்து, பொடியாக்கி, பின்பு நன்கு உலர வைத்து அதை தண்ணீரோடு  சேர்த்து சாப்பிட்டேன்”.                 ( நூல்: திர்மிதீ )

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள்  தங்களது வறுமை நிலையை மறுமை நாளின் நிலையோடு ஒப்பிட்டு சகிப்புத்தன்மையை வெளிப்படுத்தினார்கள்.

 

பின்நாளில் இதே ஸஅத் இப்னு அபீ வக்காஸ்  (ரலி) அவர்கள் தங்கள் சொத்தின் மூன்றில்  இரண்டை, சரிபாதியை அல்லாஹ்வின்  மார்க்கத்திற்காக அர்ப்பணிக்க முன் வந்த  செய்தியை வரலாறு பதிவு செய்திருக்கின்றது

இதே ஸஅத் இப்னு முஆத் (ரலி) அவர்களின் ஜனாஸாவை மலக்குமார்கள் சுமந்ததோடு, 70000 வானவர்கள் ஜனாஸா  தொழுகையிலும் கலந்து கொண்டு துஆச்  செய்யும் நற்பேற்றைப் பெற்றார்கள் எனும்  செய்தி வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறது.

இப்னு உமர் ரலி அவர்கள் கூறினார்கள்:- நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட நாள் முதற் கொண்டு இன்று வரை வயிறு நிரம்ப சாப்பிட்டதில்லை " என்று கூறினார்கள்.

 

قدم عبد الله بن عدي مولى ابن عُمَر من العراق، فزاره وسلّم عليه وقال: أُهديتٌ لك هديةً. قال: ما هي؟. قال: جوارش. قال: وما جوارش؟. قال: يهضم الطعام. قال: ما ملأتُ بطني طعامًا منذ أربعين سنةً. فما أصنع به؟.

 

ஒரு தடவை இராக்கில் இருந்து வந்த அவர்களின் பணியாளர் அப்துல்லாஹ் இப்னு அதீ  மருத்துவ குணம் வாய்ந்த ஒரு உணவை இப்னு உமர் ரலி அவர்களிடம் கொடுத்தார். அப்போது இப்னு உமர் (ரலி) அவர்கள் இது என்ன? என்று கேட்டார். அவர் அந்த உணவைப் பற்றி சொன்னதும் இப்னு உமர் ரலி (சுவையான உணவுகளை) வயிறு நிரம்ப உண்டு நாற்பது ஆண்டுகள் ஆகி விட்டது என்று கூறி அதைப் பெற மறுத்து விட்டார்கள். ( நூல்: அல் மவ்ஸூஅத்து லி இப்னி அபித்துன்யா )

ஆகவே, குப்பைகளைக் கொட்டும் குப்பைத் தொட்டி போன்று கண்ட கண்ட உணவுகளை நம் வயிற்றினில் குப்பையைப் போடுவது போன்று போடுவதிலிருந்து நம்மை பாதுகாப்போம்!

கொடும் நோய், ஆரோக்கிய இழப்பு ஆகியவற்றிலிருந்து விடுதலை பெறுவோம்!!

Thursday, 18 August 2022

நாட்டிற்கு தேவை நீதிபதிகளே! "நிதிபதி"கள் அல்ல!!

 அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...


20/01/1444. 19/08/2022. 

வெள்ளிக்கிழமை.

நாட்டிற்கு தேவை நீதிபதிகளே! 

"நிதிபதி"கள் அல்ல!!

கடந்த மாதம் 18ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 12ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில்  கடந்த 08/08/2022 அன்று மக்களவையில் பேசிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், "உச்சநீதிமன்றத்தின் மூலம் உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்று நீங்கள் எதிர்பார்த்தால் உங்கள் எண்ணம் தவறானது என உணர்ந்துகொள்ள வேண்டிய நேரம் இது. கடந்த 50 ஆண்டுகளாக என்னுடைய உச்சநீதிமன்ற வழக்கறிஞர் அனுபவத்திலிருந்து இதை கூறுகிறேன்" என அவர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து பேசிய அவர், "ஒருவேளை வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை நீதிமன்றம் வழங்கினாலும், அந்த தீர்ப்பு கள யதார்த்தத்தை மாற்றிவிடாது" என்றும் விமர்சித்துள்ளார். 

மேலும், அவர் பேசியதாவது, "நான் உச்சநீதிமன்றத்தில் பங்கெடுத்து இந்த ஆண்டுடன் 50 வருடங்கள் முடிவடைகிறது. இந்த 50 ஆண்டுக்கால அனுபவத்திலிருந்து சொல்கிறேன். உச்சநீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டேன். நீங்கள் முற்போக்கான தீர்ப்புகள் குறித்து பேசிக்கொண்டிருக்கலாம். ஆனால், அது களத்தில் அமல்படுத்தப்படுவதற்கு நிறைய வேறுபாடுகள் உள்ளன. 

மேலும், மிகவும் சென்ஸ்டிவ்வான வழக்குகள் தேர்ந்தெடுக்கப்பட்ட நீதிபதிகளுக்கு மட்டுமே ஒதுக்கப்படுகிறது என்றும், வழக்கின் தீர்ப்பின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை சட்டத்துறைக்கு முன்பே தெரிந்திருக்கும் எனவும் சிபல் குறிப்பிட்டுள்ளார். "உச்சநீதிமன்றம் குறித்து விமர்சிக்க எனக்கு விருப்பம் இல்லைதான். ஆனால் பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் பேசவில்லையெனில் வேறு யார் பேசுவார்? 

யதார்த்தம் என்னவெனில் நமக்கு நன்கு தெரிந்த சர்ச்சைக்குரிய விஷயங்கள் சில குறிப்பிட்ட நீதிபதிகளுக்கு ஒதுக்கப்பட்டு பின்னர் தீர்ப்பு வெளியாகிறது. குறிப்பிட்ட வழக்குகளை குறிப்பிட்ட நீதிபதிகளுக்கு என ஒதுக்கும் போது அதன் மூலம் நீதிமன்றம் சுதந்திரமாக செயல்பட முடியாது" என விமர்சித்த கபில்,

"நீதித்துறை இவ்வாறு இருக்கும்போது மக்கள் மனம் மாறாவிட்டால் நிலைமை மாறாது. நமது மக்கள் கருணை உள்ள சர்வாதிகாரம் என்கிற மனோநிலைக்கு வந்துவிட்டனர். சக்திவாய்ந்தவர்களின் கால்களில் மக்கள் விழுகிறார்கள். ஆனால் தற்போது நிலைமை மாறி வருகிறது. மக்கள் வெளியே வந்து தங்கள் உரிமைகளைப் பாதுகாக்கக் கோர வேண்டிய நேரம் வந்துவிட்டது. நமது சொந்த உரிமைகளுக்கா எழுந்து நின்று அதற்காக போராடும்போதுதான் உண்மையான சுதந்திரம் கிடைக்கும்" என சிபல் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். ( நன்றி: one india tamil. Mon Aug 8, 19:20 )

இந்த விமர்சனத்தை வைத்த இரண்டு நாட்களில் அவர் சொன்னதை மெய்பபிப்பது போன்று "2002 குஜராத் கோத்ரா கலவர வழக்கில் பாதிக்கப்பட்ட பில்கீஸ் பானு" கூட்டு பாலியல் & கொலை வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு கடந்த 14 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வந்த 11 கொடூர குற்றவாளிகளை  நாட்டின் சுதந்திர  தின பவள விழாவையொட்டி   குஜராத் மாநில அரசு விடுதலை செய்துள்ளது.

மகத்தான இந்த உத்தரவைப் பிறப்பித்த குஜராத் அரசு " உச்ச நீதிமன்றம் பில்கிஸ் பானு குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடும், அவருக்கு அரசு வேலையும், பாதுகாப்பான வீடும் குஜராத் அரசு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் 2019 ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது. இதனை குஜராத் மாநில அரசு இன்று வரை மதிக்கவில்லை. 

ஆனால், பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வழக்கின் கொடுங்குற்றவாளிகளை விடுதலை செய்திருப்பது நாட்டின் மனசாட்சிக்கு விடப்பட்ட சவால் ஆகும் என்பதை நாம் உணர வேண்டும்.

நீதிமன்றங்களும்... நீதிபதிகளும்....

நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடி மகிழும் இந்த நேரத்தில் இந்த தேசத்தின் மக்கள் 1950 ம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்றத்தின் தலைமையின் கீழ் பெறப்படும் நீதி பரிபாலனத்தை மிகவும் கவனமாக அவதானித்து வருகிறார்கள்.

வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புகள், தமது தீர்ப்பால் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த நீதிபதிகள் என உச்ச நீதிமன்றத்திற்கு பல அடையாளங்களும் பெருமிதமும் இருந்தாலும் சாதாரண அடித்தட்டு இந்திய குடிமகனுக்கு தகுந்த நேரத்தில் நீதியும் நியாயமும் கிடைக்கிறதா என்றால்? அது சந்தேகத்திற்கு இடமின்றி இல்லை என்றே சொல்லலாம். தற்போதைய பில்கீஸ் பானு விவகாரத்தில் அது உறுதி படுத்தப்பட்டுள்ளது.

முஸ்லிம் சமூகம் என்ற ஒற்றை காரணத்தினால்...

கபில் சிபல் குறிப்பிட்டதைப் போன்று "தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது ஆனால், கள நிலவரமோ கள யதார்த்தமோ வேறு மாதிரியாக இருக்கிறது" என்பது முற்றிலும் உண்மையே!

உதாரணமாக பாபர் மசூதி தீர்ப்பை கூறலாம். வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு என எல்லா ஊடகங்களும் குறிப்பிட்டன. ஆனால், முஸ்லிம் சமூகத்தின் ஆலயம் என்பதால் மட்டுமே உண்மைக்கும் ஆதாரங்களுக்கும் எதிரான தீர்ப்பை வழங்க முடிந்தது.

நாட்டில் 60000 நீதிமன்றங்கள், 17 லட்சம் வழக்கறிஞர்கள் இருந்தும் சிறுபான்மை சமூக மக்களின் நீதி தேடி அலையும் விவகாரங்களின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?

நாடாளுமன்ற மேலவையில் நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றிய  உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்த...

சட்டம் மற்றும் நீதி துறை அமைச்சர் திரு. கிரண் ரிஜ்ஜு 21-07-2022 அன்று நிலுவையிலுள்ள வழக்குகளை கீழ்வருமாறு பட்டியலிட்டுள்ளார் :

உச்ச நீதிமன்றத்தில் உள்ள நிலுவை வழக்குகள்  (01-07-2022 வரை)     – 72,062

உயர் நீதி மன்றங்களில் உள்ள நிலுவை வழக்கு.  (15-07-2022 வரை)        – 59,45,709

மாவட்ட மற்றும் கீழமர்வு நீதிமன்றங்களில் உள்ள நிலுவை (15-07-2022 வரை)  – 4,19,79,353

சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டோர் இந்தியாவில் உள்ள சிறை கைதிகளில் 76% சதவிகித நபர்கள் விசாரணையின்றி சந்தேகத்தின் அல்லது அனுமானத்தின் அடிப்படையில் சிறையிலடைக்கப்பட்டவர்களே என்று தேசிய குற்ற ஆவணக்குழும்ம் – National Crime Records Bureau NCRB-  கூறுகிறது.

இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் நான்கு பேர்களில் மூன்று பேர் விசாரணையின்றி அடைக்க பட்டுள்ள கைதிகளாவர் . மொத்தமுள்ள 4,88,511 கைதிகளில் 3,71,848 கைதிகள்-அதாவது 76.1% நபர்கள் விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டோர், மீதமுள்ள 1,12,589 பேர் அதாவது 23% பேர் தண்டிக்கப்பட்வர்கள் ஆவர் . இதெல்லாம் NCRB ன் 2020 ம் ஆண்டு புள்ளிவிவரம்.

விசாரணையின்றி அடைக்கப்பட்ட கைதிகளில் முஸ்லீம்களும், தாழ்த்தப்பட்ட வகுப்பினரான எஸ்.சி, மற்றும் எஸ்.டி பிரிவினரும், சீக்கியர்களும் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். அதாவது, இந்திய (2011)  மக்கள் தொகையில் அவர்களது பங்கை காட்டிலும், கைதிகளில் அவர்கள் பங்கு அதிகமுள்ளதாக NCRB  புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

உதாரணமாக இந்திய மக்கள் தொகையில் 14.2% உள்ள முஸ்லீம் மதப்பிரிவு மக்கள் விசாரணையின்றி அடைபட்டுள்ள கைதிகளில் 19.6% உள்ளனர்.

எனவே தான் கபில் சிபலின் ஆதங்கம் நியாயமானது உண்மையானது என முஸ்லிம் சமூகம் கருதுகிறது.

இஸ்லாத்தின் பார்வையில் நீதியும்... நீதிபதிகளும்...

வணக்க வழிபாடுகளை எப்படி இறைவனுக்காக மட்டுமே செய்ய வேண்டும் என இஸ்லாம் கட்டளை இடுகிறதோ அதே போன்று மக்களுக்கிடையே நீதி பரிபாலனம் செய்வதையும் அல்லாஹ்வுக்காக செய்ய வேண்டும் என இஸ்லாம் கட்டளை பிறப்பிக்கிறது.

அந்த வகையில் நீதி பரிபாலனம் என்பது மிக முக்கியமான இடத்தைப் பெறுகிறது.

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُوْنُوْا قَوَّامِيْنَ بِالْقِسْطِ شُهَدَآءَ لِلّٰهِ وَلَوْ عَلٰٓى اَنْفُسِكُمْ اَوِ الْوَالِدَيْنِ وَالْاَقْرَبِيْنَ‌ ؕ اِنْ يَّكُنْ غَنِيًّا اَوْ فَقِيْرًا فَاللّٰهُ اَوْلٰى بِهِمَا‌ فَلَا تَتَّبِعُوا الْهَوٰٓى اَنْ تَعْدِلُوْا ‌ۚ وَاِنْ تَلْوٗۤا اَوْ تُعْرِضُوْا فَاِنَّ اللّٰهَ كَانَ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرًا‏

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் நீதியை நிலைநாட்டுவோராக ஆகிவிடுங்கள். உங்களுக்கோ, பெற்றோருக்கோ, உறவினர்களுக்கோ பாதகமாக இருந்தாலும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுங்கள். (யாருக்காக சாட்சி சொல்கிறீர்களோ அவர்) செல்வந்தராக இருந்தாலோ அல்லது ஏழையாக இருந்தாலோ அவ்விருவருக்கும் அல்லாஹ்வே பொறுப்பாளன். எனவே, நீதி செலுத்துவதில் சுய விருப்பத்தைப் பின்பற்றாதீர்கள்! நீங்கள் மாற்றிக் கூறினாலோ அல்லது (சாட்சி கூற) மறுத்தாலோ நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிபவனாக இருக்கிறான்.

(அல்குர்ஆன்:4:135)

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُوْنُوْا قَوَّا امِيْنَ لِلّٰهِ شُهَدَآءَ بِالْقِسْطِ‌ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَاٰنُ قَوْمٍ عَلٰٓى اَ لَّا تَعْدِلُوْا‌ ؕ اِعْدِلُوْا هُوَ اَقْرَبُ لِلتَّقْوٰى‌ وَاتَّقُوا اللّٰهَ‌ ؕ اِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ بِمَا تَعْمَلُوْنَ‏

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்கு சாட்சியாளர்களாக ஆகிவிடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள வெறுப்பு நீங்கள் நீதி செலுத்தாமலிருக்க உங்களைத் தூண்டவேண்டாம். நீதி செலுத்துங்கள்! அதுவே இறையச்சத்திற்கு மிக நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

(அல்குர்ஆன்:5:8)

இந்த இரு வசனங்களை விருப்பு வெறுப்பின்றி படித்துப் பாருங்கள்! நீதிக்கு சாட்சியாக இருப்பதன் முக்கியத்துவத்தைப் பறைசாற்றுகின்ற அற்புதமான வசனங்கள் இவை.

அதாவது நீதி வழங்கும் போது சுய விருப்பத்தைப் பின்பற்றக் கூடாது. யாருக்காக நாம் சொல்கிறோமோ அவன் செல்வந்தனாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று இறைவன் அழுத்தமாகப் பதிய வைக்கின்றான்.

மேலும், சாட்சியைப் புரட்டினாலோ, சாட்சியைப் புறக்கணித்தாலோ நீங்கள் செய்வதை அல்லாஹ் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான்; அநியாயக்காரர்களை தண்டிக்க  அல்லாஹ் போதுமானவன் என்ற கருத்தில் இறைவன் அச்சுறுத்துகின்றான்.

மேலும்,  ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை காரணமாக, குரோதம் காரணமாக நீதி செலுத்த விடாமல், அநியாயமாக நடக்க உங்களை உங்கள் உள்ளம் தூண்டி விட வேண்டாம் என்று கூறி, நீதிக்குத்தான் சாட்சியாக இருக்க வேண்டும் என்று இறைவன் தெள்ளத் தெளிவாகப் பறைசாற்றுகின்றான்.

உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒட்டு மொத்த மனிதர்களுக்கும் இந்த வசனம் அதி உன்னதமான பாடத்தை நடத்துகின்றது.

இறைவனை வணங்க தொழுகையில் ஈடுபடும் ஒருவர் கோபத்தோடு இருந்தாலோ, உணர்ச்சி வயப்பட்ட நிலையில் இருந்தாலோ அவர் தொழுகையில் ஈடுபடக்கூடாது என்று கட்டளை பிறப்பிப்பது போன்றே நீதி பரிபாலனம் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கும் நீதிபதி கோபத்தோடு இருக்கும் நிலையில் தீர்ப்பளிக்க வேண்டாம் என இஸ்லாம் வலியுறுத்துகிறது.

حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَبْدُ المَلِكِ بْنُ عُمَيْرٍ، سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي بَكْرَةَ، قَالَ

كَتَبَ أَبُو بَكْرَةَ إِلَى ابْنِهِ، وَكَانَ بِسِجِسْتَانَ، بِأَنْ لاَ تَقْضِيَ بَيْنَ اثْنَيْنِ وَأَنْتَ غَضْبَانُ، فَإِنِّي سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لاَ يَقْضِيَنَّ حَكَمٌ بَيْنَ اثْنَيْنِ وَهُوَ غَضْبَانُ»

அப்துர்ரஹ்மான் ரலி அவர்கள் அறிவிக்கின்றார்கள்:- " (என் தந்தை) அபூபக்ரா (ரலி) அவர்கள் தம் புதல்(வரும் என் சகோதரருமான உபைதுல்லாஹ் என்ப)வருக்குக் கடிதம் எழுதினார்கள். அவர் (ஈரான்-ஆப்கன் எல்லையிலிருந்த) சிஜிஸ்தான் பகுதியில் (நீதிபதியாக) இருந்தார். “நீ கோபமாக இருக்கும்போது இருவரிடையே தீர்ப்பளிக்க வேண்டாம். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், நீதிபதி எவரும் கோபமாக இருக்கும்போது இருவருக்கிடையே தீர்ப்பளிக்க வேண்டாம் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்’’ (என்று அக்கடிதத்தில் எழுதினார்கள்). (நூல்: புகாரி)

வழக்காடுபவரின் சாதுரியத்தைக் கண்டு உணர்ச்சி வசப்பட்டு தீர்ப்பளிக்க கூடாது..

வழக்காடுபவரின் சாதுரியத் தன்மையை வைத்துத் தீர்ப்பு சொல்வது குறித்து நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

أَنَّهُ سَمِعَ خُصُومَةً بِبَابِ حُجْرَتِهِ فَخَرَجَ إِلَيْهِمْ، فَقَالَ: «إِنَّمَا أَنَا بَشَرٌ، وَإِنَّهُ يَأْتِينِي الخَصْمُ، فَلَعَلَّ بَعْضَكُمْ أَنْ يَكُونَ أَبْلَغَ مِنْ بَعْضٍ، فَأَحْسِبُ أَنَّهُ صَادِقٌ فَأَقْضِي لَهُ بِذَلِكَ، فَمَنْ قَضَيْتُ لَهُ بِحَقِّ مُسْلِمٍ، فَإِنَّمَا هِيَ قِطْعَةٌ مِنَ النَّارِ فَلْيَأْخُذْهَا أَوْ لِيَتْرُكْهَا»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் அறைவாசலில் (நின்று) சிலர் சப்தமிட்டுத் தகராறு  செய்து கொள்வதைக் கேட்டார்கள். ஆகவே, வெளியே வந்து அவர்களிடம் சென்று, “நான் மனிதன்தான். என்னிடம் வழக்காடுபவர் வருகின்றார். (அவரது அந்தரங்க நிலை எனக்குத் தெரியாது.) உங்களில் ஒருவர் மற்றவரைவிட வாக்கு சாதுர்யம் மிக்கவராக இருக்கலாம். அவர் உண்மையே பேசுகிறார் என்றெண்ணி நான் அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்து விடுகிறேன்.

ஆகவே, அடுத்த முஸ்லிமுக்குரிய உரிமையை (உண்மை தெரியாமல்) யாருக்குரியதென நான் தீர்ப்பளித்துவிடுகிறேனோ (அவர் அதைப் பெற வேண்டாம். ஏனெனில்,) அதுவெல்லாம் நரக நெருப்பின் ஒரு துண்டுதான். (இதை நினைவில் கொண்டு விரும்பினால்) அதை அவர் எடுத்துக் கொள்ளட்டும்; அல்லது விட்டுவிடட்டும்’’ என்று கூறினார்கள். ( நூல்: புகாரி )

திருக்குர்ஆனில் அல்லாஹ் பல இடங்களில் உண்மை நீதிபதிகளுக்கு உரிய அடையாளங்களைக் கூறுகின்றான். 

நபி தாவூது [அலை] நபி சுலைமான் [அலை] அவர்களிடம் வந்த ஒரு  வழக்கையும், அதற்கு அவர்கள் வழங்கிய தீர்ப்பையும் கூறிவிட்டு, நீதிபதிகளிடம் இருக்கவேண்டிய மூன்று அம்சங்களை உபதேசமாக அல்லாஹ் கூறுகின்றான். 

இதை கல்விக்கடல் இமாம் ஹசன் பசரீ [ரஹ் ] அவர்கள் , திருக்குர்ஆனிலிருந்து நமக்கு பகுத்துத் தருகின்றார்கள்.

1. நீதி வழங்க கையூட்டும் எதுவும் வாங்கக் கூடாது! என்பதாகும்.

கையூட்டு வாங்கிக் கொண்டு நீதி வழங்கினால் நீதி சேர வேண்டியவருக்கு சேராது என்பது அனைவருக்கும் அறிந்த பேருண்மையாகும். அவர்கள் கையூட்டு வாங்காதிருக்க வழி , நீதிபதிகள் தன்னிறைவு கொள்ளுமளவு வாழ்க்கைப்படி அளிக்க வேண்டும். அதற்கு மேலும் அவர்கள் வாங்கினால், அவர்களை உடனடியாக எந்த இரக்கமும் காட்டாமல் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

2. மக்களை அஞ்சாமல் மாபெரும் வல்லோனாகிய அல்லாஹ்வை மட்டும் அஞ்ச வேண்டும் என்பதாகும்.

நீதிபதிகள் தீர்ப்பு வாசிக்கும் பொழுது அந்த நீதிதேவன் கவனித்துக் கொண்டிருக்கின்றான். அதில் அநீதி இருக்குமானால், அல்லாஹ் தங்களுக்கு தண்டனை வழங்கிவிடுவான்  என்ற அச்சம் இருக்கவேண்டும். சத்தியத்தை வாசிக்கும் பொழுது  , அதன் விளைவாக எவ்வளவு பெரிய தீங்கு விளையும் என்றிருந்தாலும், அச்சத்தியத்துக்கு ஒரு போதும் துணைபோகக் கூடாது. மனிதர்களை அஞ்சி தீர்ப்பு வழங்குவது  மக்களின் வயிற்றிலடிப்பதாகும். நீதிபதிகள் நீதியை நிலை நாட்டுவதனால், அவர்களுக்கு கெட்ட ஆபத்துகள் ஏற்படும் என்றால் அவர்களுக்கு தக்க பாதுகாப்புத்தருவது அரசின் கடமை.

3. அற்ப ஆசைகளுக்கு அடி பணியக்கூடாது என்பதாகும்.

ஏனென்றால் , வேண்டாத ஆசைகள் வளர வளரத்தானே அதை நிறைவேற்றிக் கொள்ள தீய வழிகளைக் கையாள நேரிடும். பண முதலைகளின்  பண மூட்டையைக் கண்டதும் பல்லிளிக்க நேரிடும்? எனவே அளவு கடந்த ஆசை நீதிபதிகளுக்கு கூடாது.

நீதிபதிகள் தம்மிடம் வழக்காடுபவர்களை தமது குடும்பத்தவராக மதிக்க வேண்டும். தமக்கும், தமது குடும்பத்தினருக்கும் எந்தவொரு தீர்ப்பை விரும்புவார்களோ அதையே மற்றவருக்கும் விரும்புதல் வேண்டும்.

وعن أبي هريرة  قالَ: قالَ رسُولُ اللَّه ﷺ: سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ في ظِلِّهِ يَوْمَ لا ظِلَّ إلَّا ظِلُّهُ: إِمامٌ عادِلٌ، وشابٌّ نَشَأَ فِي عِبَادَةِ اللَّه تَعالى، وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ في المَسَاجِدِ، وَرَجُلانِ تَحَابَّا في اللَّه: اجتَمَعا عَلَيهِ، وتَفَرَّقَا عَلَيهِ، وَرَجُلٌ دَعَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ، وَجَمَالٍ فَقَالَ: إِنِّي أَخافُ اللَّه، ورَجُلٌ تَصَدَّقَ بِصَدَقَةٍ فأَخْفَاها، حتَّى لا تَعْلَمَ شِمالُهُ مَا تُنْفِقُ يَمِينهُ، ورَجُلٌ ذَكَرَ اللَّه خالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ متفقٌ عَلَيْهِ.

மறுமையில் அல்லாஹ்வின் நிழலில் இன்பமடைவோரில், ''தமக்கும் வழங்கும் தீர்ப்பு போன்றே மற்றவருக்கும் வழங்கும் நீதிபதிகள் இருப்பர் '' என்று நபி பெருமானார் [ஸல்] நவின்றுள்ளார்கள். 

இந்த நாட்டின் பிரதமர் 75 வது பவள விழா சுதந்திர தின உரையில் பெண்களின் பாதுகாப்பு பேணப்படும் என்று உறுதி கூறுகிறார். அடுத்த நாள் பில்கீஸ் பானு எனும் பெண்ணின் உரிமையை அவரின் சொந்த மாநிலம் அவர் முதல்வராக இருந்து பணியாற்றிய  அரியணையில் அமர்ந்திருக்கும் அரசு பற்றிப் பறிக்கிறது. இது எந்த மாதிரியான நியாயம்? என்று தெரியவில்லை.

நீதித்துறையில் உள்ள ஊழலும் அரசின் கையிலுள்ள அதிகாரமும் இதை ஆளுபவர்களின் எண்ணத்திற்கேற்ப வளைக்க பெரிதும் உதவுகிறது. இதனால் பாதிக்கப்படுவது இந்திய மக்களே.

பாதிக்கப்பட்ட பொதுமக்களின் கடைசி புகலிடமாக கருதப்படும் உச்ச நீதி மன்றம் தனது கடமையில் இருந்து நழுவுவதையும் கடந்த சில ஆண்டுகளில் கண்ணுற்றோம், இன்றும் காண்கிறோம்.

தேர்தல் நன்கொடைபத்திர வழக்கு, ஆதார் வழக்கு, அரசியல் பிரிவு 370 ரத்து, இந்திய குடியுரிமை திருத்த சட்டம் எதிர்த்த வழக்குகளை உச்ச நீதி மன்றம் உரிய விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் இழுத்தடிப்பது உண்மையில் இந்திய மக்களுக்கு மறுக்கப்படும் நீதிதானே! இதனால் பயன்பெறுவது  Luxurious litigant  ஒன்றிய அரசுதான் என்பதை மறுக்கவியலுமா?

எனவே, நீதிபதிகள் நீதி பரிபாலன விஷயத்தில் இறைவனை பயந்து அஞ்சி தீர்ப்பு வழங்க வேண்டும்.

ஏனெனில், இறைவனின் கோபமும் தண்டனையும் கடுமையானது.

اِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيْدٌ ؕ

நிச்சயமாக, உம்முடைய இறைவனின் பிடி மிகக் கடுமையானது". ( அல்குர்ஆன்: 85: 12 )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அநியாயம் விளைவிக்கும் நீதிபதிகளிடம் இருந்து இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாத்து அருள் புரிவானாக!!

ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!


மனித நேயத்தை மாண்புடன் கடைப்பிடிப்போம்!!!

 19/01/1444. 

18/08/2022

வியாழக்கிழமை இரவு.

மனித நேயத்தை மாண்புடன் கடைப்பிடிப்போம்!!!

ஐ.நா.பொது சபை, ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19 ம் நாளை  உலக மனித நேய தினமாக அனுசரிக்கப்படும் என அறிவித்தது.

ஏற்கனவே ஜுன் 21 ம் தேதி சர்வதேச மனித நேய தினமாக அனுஷ்டிக்கப்படும் போது மீண்டும் இன்னொரு தேதியில் அதே பெயரில் ஒரு தினம் கொண்டாடப்படுகிறது என்றால் மனித நேயம் குறித்த சிந்தனையும் விழிப்புணர்வும் மக்களை இன்னும் சென்றடைய வில்லை என்பது புலப்படுகிறது.

மனிதநேயம் என்பது மனித வாழ்க்கையில் மிக உத்தமமான ஓர் உணர்வாகும். 

தமிழில் மனிதநேயத்தை மனிதபிமானம், மனிதத்துவம் என்றும் குறிப்பிடுவர்.

மனிதம் இருக்கிறதா ? நேயம் என்றால் என்ன ?” போன்ற கேள்விகளுக்கு இடையில் உலகம் ஜீவித்துக் கொண்டிருக்கும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!

அரசியல் லாபங்கள், அதிகார ஆசை, மத இன உணர்வுகளின் தீவிரச் செயல்பாடுகள், காழ்ப்புணர்ச்சி, சுயநலம் போன்ற காரணங்களால், மனித வாழ்வு ரணமாக ஆகியிருக்கிறது.

தனிமனித நிம்மதியும், பொது அமைதியும் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கும் இச்சூழலில், ”உலக மனித நேய தினம்” என்பதன் வாயிலாக நாம் மனிதத்துவத்தின் மாண்புகளை நாம் அறிந்து கொள்வோம்.

இஸ்லாத்தில் மனிதநேயம் என்பது உயர்வானதாகவும், மேலும் மற்ற கோட்பாடுகளை விடவும் வித்தியாசமானதாகவும் போற்றப்படுகிறது.

ஒரு மனிதனை வாழவைப்பதும், அவனது வாழ்க்கைக்கு முடிந்தளவுக்கு உதவி புரிவதும், அவனுக்கு ஏற்படும் துன்பங்களிலிருந்து அவனை விடுவிப்பதும் தான் மனித நேயத்தின் உயர் கோட்பாடுகளாக மதிக்கப்படுகின்றன.

وإذا نظرنا إلى المصدر الأول للإسلام؛ وهو القرآن كتاب الله، وتدبرنا آياته، وتأملنا موضوعاته واهتماماته، نستطيع أن نصفه بأنَّه: "كتاب الإنسان"؛ فالقرآن كله إما حديث إلى الإنسان، أو حديث عن الإنسان؛ ولو تدبرنا آيات القرآن كذلك لوجدنا أنّ كلمة "الإنسان" تكررت في القرآن ثلاثًا وستين مرةً، فضلًا عن ذكره بألفاظ أخرى مثل: "بني آدم"، التي ذكرت ست مرات، وكلمة "الناس" التي تكررت مائتين وأربعين مرة في مكيِّ القرآنِ ومدنيِّه؛
ولعل من أبرز الدلائل على ذلك أنّ أول ما نزل من آيات القرآن على رسول الإسلام محمد -صلى الله عليه وسلم- خمسُ آيات من سورة "العلق" ذكرت كلمة "الإنسان" في اثنتين منها، ومضمونها كلها العناية بأمر الإنسان. قال تعالى: (اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ * خَلَقَ الْإِنْسَانَ مِنْ عَلَقٍ * اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ * الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ * عَلَّمَ الْإِنْسَانَ مَا لَمْ يَعْلَمْ)[العلق: 1-5].

மனிதன் என்பதைக் குறிக்கும் இன்ஸான் எனும் வார்த்தை 63 முறையும், மனிதர்கள் என்பதைக் குறிக்கும் நாஸ் எனும் வார்த்தை 240 முறையும், அனைவரையும் உள்ளடக்கிய பனீ ஆதம் (ஆதமுடைய மக்கள்) எனும் வார்த்தை 6 முறையும் குர்ஆனில் இடம் பெற்றுள்ளது.

இதற்கெல்லாம் மேலாக மாநபி ஸல் அவர்களுக்கு முதலில் இறக்கியருளப்பட்ட முதல் 5 வசனங்களில் 2 முறை இன்ஸான் எனும் வார்த்தை பயன் படுத்தப்பட்டுள்ளது.

எனவே, மனிதர்களிடம்  இடம் பெற வேண்டிய பண்புகளில் பிரதானமானது இன்ஸானிய்யத் எனும் மனிதத்துவம் தான் என்பதையே இது சுட்டிக் காட்டுகிறது.

இன்னும் சொல்லப்போனால் குர்ஆன், ஒன்று மனிதர்களிடம் பேசுகிறது. அல்லது மனிதர்களுக்காகப் பேசுகிறது. ஆகவே குர்ஆனை கிதாபுல் இன்ஸான் மனிதர்களுக்கான வேதம் என்று கூட சொல்லலாம்.

அந்த அளவுக்கு மனிதத்துவம் குறித்து இஸ்லாம் பேசுகிறது.


مَنْ قَتَلَ نَفْسًۢا بِغَيْرِ نَفْسٍ اَوْ فَسَادٍ فِى الْاَرْضِ فَكَاَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيْعًا ؕ وَمَنْ اَحْيَاهَا فَكَاَنَّمَاۤ اَحْيَا النَّاسَ جَمِيْعًا ‌ؕ
ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால், அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார். ஒரு மனிதனை வாழ வைத்தவர், எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்’ (திருக்குர்ஆன் 5:32)


عن عبد الله بن عمرو رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم
الرَّاحِمونَ يرحَمُهم الرَّحمنُ تبارَك وتعالى؛ ارحَموا مَن في الأرضِ يرحَمْكم مَن في السَّماءِ.


‘கருணையாளர்களின் மீது இறைவன் கருணை செலுத்துகின்றான். எனவே, நீங்கள் பூமியில் உள்ளவர்கள் மீது கருணை காட்டுங்கள். வானில் உள்ளவர்கள் உங்கள் மீது கருணை காட்டுவார்கள்’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ்பின் அமர் (ரலி), நூல்: அபூதாவூத், திர்மிதி)


حَدَّثَنَا مُحَمَّدٌ ، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ ، عَنِ الأَعْمَشِ ، عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ وَأَبِي ظَبْيَانَ عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللهِ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم
لاَ يَرْحَمُ اللَّهُ مَنْ لاَ يَرْحَمُ النَّاسَ
‘மக்கள் மீது கருணை காட்டாதவன் மீது, அவன் மீது இறைவன் கருணை காட்டமாட்டான்’ என நபி (ஸல்) கூறினார்கள்.  (நூல்: புகாரி, முஸ்லிம்)

‘எவரொருவர் தமது சகோதரருக்கு ஏற்படும் உலக துன்பங்களிலிருந்து அவரை விடுவிக்கிறாரோ, அவரை இறைவன் அவருக்கு ஏற்படப்போகும் மறுஉலக துன்பங்களிலிருந்து விடுவிக்கின்றான்; மேலும், தமது சகோதரருக்கு உதவிபுரியும் காலமெல்லாம், அவருக்கு இறைவன் உதவி புரிந்து கொண்டேயிருப்பான் என நபி (ஸல்) கூறினார்கள்’ (அறிவிப்பாளர்: அபூஹூரைரா, நூல் – அஹ்மது).

மனித நேய மாண்பாளருக்கான இறைவனின் இரண்டு சோபனங்கள்.

روى البخاري ومسلم في صحيحيهما من حديث أبي هريرة رضي الله عنه: أن النبي صلى الله عليه وسلم قال: «بَيْنَمَا رَجُلٌ يَمْشِي بِطَرِيقٍ، وَجَدَ غُصْنَ شَوْكٍ عَلَى الطَّرِيقِ، فَأَخَذَهُ فَشَكَرَ اللَّهُ لَهُ، فَغَفَرَ لَهُ»
“ஒருவர் (தொழுவதற்காக) நடந்து வரும் பாதையில் ஒரு முள் மரக்கிளை கிடப்பதைக் கண்டு, அதை அந்தப் பாதையை விட்டும் அகற்றும் பணியில் ஈடுபட்டார். அப்பணி அவரை (ஆரம்ப நேரத்தில்  தொழுவதைவிட்டும்) பிற்படுத்திவிட்டது. இப்படிப்பட்ட அந்த மனிதருக்கு அல்லாஹ் நன்றி செலுத்துகிறான். அவருக்குப் பாவமன்னிப்பும் அளிக்கிறான்”. என இறைத்தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.

மனித நேயத்தின் முதல் படி...

இன்று சக மனிதனை கண்டுகொள்ளாத மனிதநேயமற்ற நிலை மனிதர்களிடம் உண்டாக காரணமாக அமைந்திருப்பது பிறப்பால், நிறத்தால், இனத்தால், மொழியால் மனிதனை பிரித்துப் பார்க்கும் ஏற்றத்தாழ்வுகளும் பாகுபாடுகளும் தான்.

ஆனால், இஸ்லாம் சக மனிதனை எப்படி பார்க்க வேண்டும் என்ற இலக்கணத்தை வகுத்து தந்துள்ளது.

மனிதர்கள் ஒருவருக்கொருவர் மனித நேயத்துடன் நடந்து கொள்வதற்கு அடிப்படைத் தேவை சகோதர உணர்வு. நாம் அனைவரும் சகோதரர்கள், ஒரு தாய் மக்கள் என்ற உணர்வு எழுந்தாலே ஒரு வித நேசம்,, நெருக்கம் உண்டாகும். 

இஸ்லாம் அத்தகைய சகோதர உணர்வை ஏற்படுத்தி விடுகிறது.

மக்கள் அனைவரும் ஜாதி, மதப் பாகுபாடின்றி ஒரு தாய், தந்தைக்குப் பிறந்தவர்களே என்று கூறி அன்பு செலுத்துவதற்கான அடிப்படை உணர்வை தூண்டி விடுகிறது.

يٰۤـاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمُ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيْرًا وَّنِسَآءً‌ ۚ وَاتَّقُوا اللّٰهَ الَّذِىْ تَسَآءَلُوْنَ بِهٖ وَالْاَرْحَامَ‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلَيْكُمْ رَقِيْبًا‏

மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 4:1)

 يٰۤاَيُّهَا النَّاسُ اِنَّا خَلَقْنٰكُمْ مِّنْ ذَكَرٍ وَّاُنْثٰى وَجَعَلْنٰكُمْ شُعُوْبًا وَّقَبَآٮِٕلَ لِتَعَارَفُوْا‌ ؕ اِنَّ اَكْرَمَكُمْ عِنْدَ اللّٰهِ اَ تْقٰٮكُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ

மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன். ( அல்குர்ஆன் 49:13 )

பிலால் ரலி அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட துவக்கத்தில் மாநபி ஸல் அவர்களின் கட்டளையின் படி தமது இஸ்லாத்தை மறைத்தே வைத்திருந்தார்கள். ஒரு கட்டத்தில் பிலால் ரலி அவர்களின் ஈமானிய நிலை பிலால் ரலி அவர்களின் எஜமானன் உமைய்யாவிற்கு தெரிய வரவே அன்றிலிருந்து பிலால் ரலி அவர்களை துன்புறுத்த ஆரம்பித்தான் உமைய்யா.

மாநபி ஸல் அவர்களின் கவனத்திற்கு இந்த செய்தி வந்த போது மாநபி ஸல் அவர்கள் மிகவும் வருந்தினார்கள். ஒரு முறை அபூபக்ர் ரலி அவர்களிடம் " நம்மிடம் பொருளாதாரம் இருந்தால் பிலாலை அடிமைத்தனத்தில் இருந்து விலை கொடுத்து வாங்கி விடுவித்து விடலாமே" என்று தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள்.

இந்த வார்த்தை அபூபக்ர் ரலி அவர்களை உறங்க விட வில்லை.

ذات يوم، كان أمية بن خلف يضرب بلالاً بالسوط في رمضاء مكة، فمرَّ عليه أبو بكر -رضي الله عنه- فقال له: يا أمية ألا تتقي الله في هذا المسكين؟ إلى متى ستظل تعذبه هكذا؟ فقال أمية: أنت أفسدته فأنقذه مما ترى، وواصل أمية ضربه لسيدنا بلال -رضي الله عنه- وقد يئس منه، فطلب أبو بكر -رضى الله عنه- شراءه، وأعطى أمية بن خلف قبحه الله ثلاث أواق من الذهب مقابل أن يترك بلالًا وشأنه، فقال أمية لأبي بكر الصديق: فواللات والعزى، لو أبيت إلا أن تشتريه بأوقية واحدة لبعتكه بها، فقال أبو بكر: والله لو أبيت أنت إلا مائة أوقية لدفعتها.

ஒரு நாள் பிலால் ரலி அவர்களை உமைய்யா ரமளா எனும் இடத்தில் வைத்து சித்ரவதை செய்து கொண்டிருந்ததைப் பார்த்த அபூபக்ர் ரலி அவர்கள் உமைய்யாவிடம் " ஒரு ஏழையை, ஒன்றுமில்லாத ஒருவரை இப்படியா சித்ரவதை செய்வாய்? என்று கேட்டார்கள்.

அவ்வளவு இரக்கம் இருந்தால் நீர் வேண்டுமானால் அவரை இந்த நிலையில் இருந்து காத்திட வேண்டியது தானே அபூபக்ர்? என்று ஏளனத்துடன் உமைய்யா கேட்டான்.

இந்த ஒரு தருணத்திற்காகத் தான் காத்திருந்தது போல  அவரின் எஜமானிடம் பிலால்(ரலி)அவர்களை விலைக்கு கேட்கிறார்கள். 10 தங்க காசுகளுக்கு பிலால் (ரலி) அவர்களை அபூபக்கர் (ரலி) அவர்களிடம் உமைய்யா விற்று விட்டு எக்காளத்தில் கூறினான் "இவரை நீர் ஒரு தங்கக் காசுக்கு கேட்டிருந்தாலும் நான் விற்றிருப்பேன் எனக் கூறுகிறான். பிலால் (ரலி) அவர்களுக்காக வேண்டி நீ 100 தங்கக் காசுகள் கேட்டிருந்தாலும் நான் தந்திருப்பேன் என அபூபக்கர்(ரலி) அவர்கள் அவனுக்கு பதில் அளித்தார்கள். பின்னர் பிலால்(ரலி) அவர்களை அபூபக்கர் (ரலி) அவர்கள் விடுதலை செய்தார்கள்.

அடிமை என்ற ஒரே காரணத்திற்காக கருப்பு நிறத்தவர் என்பதற்காக ஒரு தங்க காசுக்கு கூட ஈடாக மதிக்க மறுத்த உமைய்யாவிடம் மனித மாண்பை மனித நேயப் பண்பால் உணர்த்தினார்கள் அபூபக்ர் ரலி அவர்கள்.

(3 ஊக்கியா தங்கம் 40 ஊக்கியா தங்கம் என பல்வேறு ரிவாயத்துகள் உள்ளன.)

இன்றைக்கு பிறர் படும் துன்பங்களை  வேடிக்கை பார்ப்பது, சிரிப்பது, ரசிப்பது, என காலம் மாறிக் கொண்டிருக்கிறது. ப்ராங்க் வீடியோ எனும் பெயரில் நகைச்சுவையாக பார்க்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அடுத்தவருக்கு ஏற்படும் சிரமங்களை தமக்கு ஏற்பட்ட சிரமங்களாக எண்ண வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது.

நபிமார்கள் ஏகத்துவம்,  தொழுகை நோன்பு,  ஜகாத் என நம்பிக்கை மற்றும் வழிபாடு தொடர்பான அம்சங்களை மாத்திரம் மக்களுக்கு  காட்டிகொடுக்க வரவில்லை மாறாக! எத்தனையோ மனித நேயப் பணிகளையும் செய்து காட்டி மக்களை ஆர்வமூட்டினர்.  

கிணற்றிலே தண்ணீர் எடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த   பெண்களுக்கு மூஸா (அலை) குடங்களில் தண்ணீர் நிரப்பிகொடுத்தார்கள் என அல்லாஹ் குர்ஆனில் கூறுகின்றான்.

ஒடுக்கப்பட்ட  (பனூ இஸ்ராயீல்) மக்களுக்காக குரல்கொடுத்த நிகழ்வுகளை குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்.

வெண்குஷ்டம் மற்றும் தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டவர்ளுக்கு ஈஸா அலை அவர்கள் மருத்துவம் பார்த்ததாக அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகிறான்.

ذكره ابن بطال في "شرح صحيح البخاري" (1/87) بقوله: "روى الوليد بن مسلم، عن أبي بكر، عن ضمرة بن حبيب، قال: كان بين أبى ذر وبين بلال محاورة، فعيره أبو ذر بسواد أمه، فانطلق بلال إلى رسول الله - صلى الله عليه وسلم -، فشكي إليه تعييره بذلك، فأمره رسول الله - صلى الله عليه وسلم - أن يدعوه، فلما جاءه أبو ذر، قال له رسول الله - صلى الله عليه وسلم - : شتمت بلالاً وعيَّرته بسواد أمه؟ قال: نعم، قال رسول الله - صلى الله عليه وسلم -: تمت ما كنت أحسب أنه بقى في صدرك من كبر الجاهلية شيء، فألقى أبو ذر نفسه بالأرض، ثم وضع خده على التراب، وقال: والله لا أرفع خدي من التراب حتى يطأ بلال خدي بقدمه، فوطأ خده بقدمه".

அபூதர் ஃகிஃபாரி ரலி அவர்களும், பிலால் ரலி அவர்களும்  நபிகள் நாயகத்தின் நெருங்கிய அன்பைப் பெற்றவர்கள். ஒரு சமயம். அவர்களுக்கிடையே சிறிய பிரச்சினை எழுந்தது. அபூதர் (ரலி) அவர்கள்  கோபத்தால்    மிகவும் உணர்ச்சி வசப்பட்டு  பிலாலை நோக்கி, “கறுப்புத் தாய்க்குப் பிறந்தவனே” என்று கூறினார். அதனால் ஏற்பட்ட மனவேதனை தாங்காமல் பிலால் (ரலி) நபிகளாரிடம் சென்று முறையிட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அபூதர் (ரலி)அவர்களை அழைத்து இதைப் பற்றி விசாரித்தார்கள்.

நபி (ஸல்): பிலாலைக் குறித்து இழிவாகப் பேசினீரா?

அபூதர் (ரலி) : ஆம்

நபி (ஸல்): அவருடைய தாயாரைக் குறை கூறினீரா?

அபூதர் (ரலி) : (மவுனமாக  இருந்தார்கள்)

நபி (ஸல்): அறியாமைக் கால மடமைத்தனம் இன்னும் உம்மிடம் குடி கொண்டிருக்கிறதே" என்று கண்டிப்பான குரலில் கூறினார்கள்.

அபூதர் (ரலி) அவர்களின் முகம் வெளுத்தது. அச்சத்துடன் பெருமானாரிடம் கேட்டார்: “என்னிடம் பெருமை இருப்பதற்கான அடையாளமா இது?”

நபி (ஸல்): ஆம்.

பின்னர் நபி (ஸல்) தன்னை விட கீழானவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை அபூதர் ரலி அவர்களுக்குக்  கற்றுக் கொடுத்தார்கள். இந்தப் பாடத்தைப் பெற்றுக் கொண்ட அபூதர் (ரலி) பிலாலை (ரலி) நோக்கி ஓடினார். அவரது கரம் பற்றி மன்னிப்புக் கேட்டார். மன்னிப்பு கேட்டதுடன், பிலாலின் முன்னால் வந்து தன் கன்னத்தை பூமியின் (தரையின் வைத்தார். பிலாலின் பாதங்களைத் தம் கைகளால் பிடித்து இவ்வாறு கூறினார்:

உமது காலால் என் கன்னத்தை மிதியுங்கள். பிலாலே, என் ஆணவம் அடியோடு அழியட்டும்”

அபூதர் அவர்களை பிலால் வாரி அணைத்தார். உச்சி முகர்ந்து, “இறைவன் உம்மை மன்னிப்பானாக” என்று கூறினார். (நூல்: முஸ்லிம்)

மனித நேயம் என்பது பிறருக்கு உதவுவது மாத்திரம் அல்ல.

சக மனிதனை மனிதனாக அங்கீகரிப்பதும் மனித நேயம் தான்.

இன்று இங்கே தான் பெரும்பாலானவர்கள் வீழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

நம் சிறு சிறு செயலிலும், சொல்லிலும், அசைவிலும் கூட மனித நேயம் மலரச் செய்வோம் !