Thursday 13 October 2022

இப்படியா வாழ்ந்தார்கள் ஏந்தல் ஹபீப் {ஸல்} அவர்கள்?!

 

இப்படியா வாழ்ந்தார்கள் ஏந்தல் ஹபீப் {ஸல்} அவர்கள்?!


வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் ஏந்தல் நபி {ஸல்} அவர்கள்.

ஆடம்பரமாக வாழ்வதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருந்தும் பகட்டில்லாமல் வாழ்ந்தார்கள். எளிமையின் சிகரமாக விளங்கினார்கள் என்று நபி {ஸல்} அவர்களைக் குறிப்பிட்டால் மிகையாகாது.

அந்தளவுக்கு நடை, உடை, பாவனை, பழக்க வழக்கம், உணவு, இருப்பிடம் என்று அனைத்திலும் தாமாக விரும்பி எளிமையைத் தேர்வு செய்து அழகிய ஒரு வாழ்க்கையை வாழ்ந்து காட்டினார்கள்.

தனக்காகவும், தன் வாரிசுகளுக்காகவும், தன் குடும்பத்துக்காகவும் பொதுச் சொத்துக்களை தன் கணக்கில் சேர்க்கும் தலைவர்களை நெடுங்காலமாக உலகம் கண்டு வருகிறது. ஆனால், எளிமையை மட்டுமே செழுமையாகக் கண்ட, முகம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்வு, நீதமான வாழ்வின் புதிய அத்தியாயத்திற்கு அடித்தளமாக மாறியதை ஆச்சரியக்கண்களால் பார்த்து வியக்கிறது உலகம்.

ஆடம்பரம், எளிமையற்ற, இரக்கமற்ற வாழ்க்கையாக இல்லாமல் பொதுநலம், எளிமை, அடக்கமென்று ஏந்தல் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை உலகின் அனைவருக்கும் முகவரியாக, முன்மாதிரியாக காட்சியளிக்கிறது.

 

தாம் வாழ்ந்ததும்... பிறருக்கு வழங்கி வாழ்ந்ததும்...


أَنَّهُ انْطَلَقَ هُوَ وَصَاحِبٌ لَهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمْ يَجِدَاهُ فَأَطْعَمَتْهُمَا عَائِشَةُ تَمْرًا، وَعَصِيدَةً، فَلَمْ نَلْبَثْ أَنْ جَاءَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَقَلَّعُ يَتَكَفَّأُ، فَقَالَ: «أَطْعَمْتِهِمَا؟» قُلْنَا: نَعَمْ قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَسْأَلُكَ عَنِ الصَّلَاةِ؟ قَالَ: «أَسْبِغِ الْوُضُوءَ، وَخَلِّلِ الْأَصَابِعَ، وَإِذَا اسْتَنْشَقْتَ فَأَبْلِغْ، إِلَّا أَنْ تَكُونَ صَائِمًا»

நான் நபி {ஸல்} அவர்களைச் சந்திப்பதற்காகச் சென்றிருந்தேன். அவர்களின் ஆடு மேய்ப்பவர் அப்போது தான் பிறந்த ஒரு குட்டியைத் தூக்கிக் கொண்டு வந்தார். கிடாய்க் குட்டியா? பெட்டையா?’ என்றார்கள். அவர் கிடாய்என்றார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு ஆட்டை அறுத்து விருந்து சமைக்கச் சொன்னார்கள்.

பிறகு என்னை நோக்கி ‘‘நான் உனக்காகத் தான் இந்த ஆட்டை அறுத்தேன் என்று எண்ண வேண்டாம். நம்மிடம் நூறு ஆடுகள் உள்ளன. அவற்றில் ஒரு ஆடு குட்டியை ஈன்றால் உடனேயே அதற்குப் பதிலாக பெரிய ஆடு ஒன்றை நாம் அறுத்து உண்போம்’’ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: லகீத் பின் ஸபுரா (ரலி), ( நூல்: அஹ்மத்-17846 (17172 )

 

أَقْبَلْتُ أَنَا وَصَاحِبَانِ لِي، وَقَدْ ذَهَبَتْ أَسْمَاعُنَا وَأَبْصَارُنَا مِنَ الْجَهْدِ، فَجَعَلْنَا نَعْرِضُ أَنْفُسَنَا عَلَى أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَيْسَ أَحَدٌ مِنْهُمْ يَقْبَلُنَا، فَأَتَيْنَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَانْطَلَقَ بِنَا إِلَى أَهْلِهِ، فَإِذَا ثَلَاثَةُ أَعْنُزٍ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «احْتَلِبُوا هَذَا اللَّبَنَ بَيْنَنَا»، قَالَ: فَكُنَّا نَحْتَلِبُ فَيَشْرَبُ كُلُّ إِنْسَانٍ مِنَّا نَصِيبَهُ، وَنَرْفَعُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَصِيبَهُ، قَالَ: فَيَجِيءُ مِنَ اللَّيْلِ فَيُسَلِّمُ تَسْلِيمًا لَا يُوقِظُ نَائِمًا، وَيُسْمِعُ الْيَقْظَانَ، قَالَ: ثُمَّ يَأْتِي الْمَسْجِدَ فَيُصَلِّي، ثُمَّ يَأْتِي شَرَابَهُ فَيَشْرَبُ

நானும், எனது இரு நண்பர்களும் பசியின் காரணமாக செவிகள் அடைத்து, பார்வைகள் மங்கிய நிலையில் (மதீனா) வந்தோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்களிடம் எங்களின் நிலையை எடுத்துச் சொன்னோம். எங்களை ஏற்று, தங்க வைத்து உணவளிக்க யாரும் முன் வரவில்லை. பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நாங்கள் சென்றோம்.

அவர்கள் எங்களைத் தமது வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கிருந்த மூன்று ஆடுகளைக் காட்டி இந்த ஆடுகளில் பால் கறந்து நம்மிடையே பங்கு வைத்துக் கொள்வோம் என்று கூறினார்கள். எனவே நாங்கள் பால் கறந்து எங்களில் ஒவ்வொருவரும் தமது பங்கை அருந்தி விட்டு நபிகள் நாயகத்தின் பங்கை எடுத்து வைத்து விடுவோம்.

அவர்கள் இரவில் வந்து உறங்குபவரை எழுப்பாத வகையிலும், விழித்திருப்பவருக்குக் கேட்கும் வகையிலும் ஸலாம் கூறுவார்கள். பின்னர் பள்ளிவாசலுக்குச் சென்று தொழுது விட்டு தமது பங்கை அருந்துவார்கள். அறிவிப்பவர்: மிக்தாத் (ரலி), ( நூல்: முஸ்லிம்-4177 ) 

 

ابْنَ أُخْتِي «إِنْ كُنَّا لَنَنْظُرُ إِلَى الهِلاَلِ، ثُمَّ الهِلاَلِ، ثَلاَثَةَ أَهِلَّةٍ فِي شَهْرَيْنِ، وَمَا أُوقِدَتْ فِي أَبْيَاتِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَارٌ»، فَقُلْتُ يَا خَالَةُ: مَا كَانَ يُعِيشُكُمْ؟ قَالَتْ: ” الأَسْوَدَانِ: التَّمْرُ وَالمَاءُ، إِلَّا أَنَّهُ قَدْ كَانَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جِيرَانٌ مِنَ الأَنْصَارِ، كَانَتْ لَهُمْ مَنَائِحُ، وَكَانُوا يَمْنَحُونَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَلْبَانِهِمْ، فَيَسْقِينَا

உர்வா பின் ஸுபைர் (ரலி)அவர்கள் கூறினார்கள்:- “ என்னிடம் ஆயிஷா (ரலி) அவர்கள், என் சகோதரி மகனே!- நாங்கள் பிறை பார்ப்போம். மீண்டும் பிறை பார்ப்போம். பிறகும் பிறை பார்ப்போம். இப்படி இரண்டு மாதங்களில் மூன்று முறை பிறை பார்ப்போம்-. அப்படியிருந்தும், அல்லாஹ்வின் தூதருடைய வீட்டில் (அடுப்பில்) நெருப்பு மூட்டப்படாது என்று கூறினார்கள். நான், என் சிற்றன்னையே! நீங்கள் எதைக் கொண்டு தான் வாழ்ககை நடத்தினீர்கள்? என்று கேட்டேன்.

அதற்கு அவர், இரு கருப்பான பொருட்கள் (ஒன்று) பேரீச்சம் பழம் (மற்றொன்று) தண்ணீர். என்றாலும், அல்லாஹ்வின் தூதருக்கு அன்சாரிகளான சில அண்டை வீட்டார் இருந்தார்கள். அவர்களிடம் சில அன்பளிப்பு ஒட்டகங்கள் (மனீஹாக்கள்) இருந்தன. (அவற்றைக் குறிப்பிட்ட காலத்திற்கு இலவசமாக பயனபடுத்திக் கொள்வதற்காக அவர்கள் இரவல் வாங்கியிருந்தனர்.) அவர்கள் (அவற்றிலிருந்து கிடைக்கின்ற) தமக்குரிய பாலை நபி (ஸல்) அவர்களுக்குக் கொடுப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு அருந்தக் கொடுப்பார்கள், என்று கூறினார்கள். ( நூல்: புகாரி-2567 , 6459 )

பிஸ்ர் இப்னு ரபீஆ அல்கூஃபீ(ரஹ்) கூறியதாவது: “நான், ஆயிஷா(ரலி) அவர்களிடம் ‘(ஈதுல் அள்ஹாபெருநாளில் அறுக்கப்படும்) குர்பானி இறைச்சியை மூன்று நாள்களுக்கு மேல் வைத்துச் சாப்பிடுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்களா?’ என்று கேட்டேன்.

 

அவர்கள், ‘மக்கள் (பஞ்சத்தால்) பசி பட்டினியோடு இருந்த ஓர் ஆண்டில் தான் அவர்கள் அப்படி(த் தடை) செய்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் (பட்டினியைப் போக்க) வசதி உள்ளவர், ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்று விரும்பினார்கள். (பிறகு) நாங்கள் ஆட்டுக் காலை எடுத்து வைத்துப் பதினைந்து நாள்களுக்குப் பிறகும் கூட அதைச் சாப்பிட்டு வந்தோம்என்று பதிலளித்தார்கள்.

உங்களுக்கு இப்படிச் செய்ய வேண்டிய கட்டாயம் என்ன வந்தது?’ என்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் சிரித்துவிட்டு,

முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் சென்று சேரும் வரை அவர்களின் குடுமபத்தார் தொடர்ச்சியாக மூன்று நாள்கள் கூட (கறிக்) குழம்புடன் வெள்ளைக் கோதுமை ரொட்டியை வயிறு நிரம்பச் சாப்பிட்டதில்லைஎன்று கூறினார்கள். ( நூல்: திர்மிதீ )

பழகுவதற்கும், அணுகுவதற்கும் மிகவும் இயல்பானவர்கள்...

அபூ ஹாஸிம் (ரஹ்) அறிவிக்கின்றார்கள்:- “.ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் புர்தா -- குஞ்சங்கட்டப்பட்ட ஒரு சால்வையைக் கொண்டு வந்தார் என்று ஸஹ்ல்(ரலி) கூறிவிட்டு --"புர்தா என்றால் என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்டபோது (அங்கிருந்தோர்) 'ஆம்! புர்தா என்பது சால்வைதானே! என்றனர். ஸஹ்ல் 'ஆம்' எனக் கூறிவிட்டு மேலும், அப்பெண்மணி 'நான் என்னுடைய கையாலேயே இதை நெய்திருக்கிறேன். இதனை உங்களுக்கு அணிவிக்கவே நான் கொண்டு வந்தேன்" என்றதும் அது தேவையாயிருந்ததால் நபி(ஸல்) அவர்கள் அதைப் பெற்றார்கள்.

பிறகு அவர்கள் அதைக் கீழாடையாக அணிந்து எங்களிடம் வந்தபோது ஒருவர் 'இது எவ்வளவு அழகாக இருக்கிறது! எனக்கு இதை நீங்கள் அணிவித்து விடுங்கள்" என்று கேட்டார்.

உடனே அங்கிருந்தோர் 'நீர் செய்வது முறையன்று; நபி(ஸல்) அவர்களுக்கு அது தேவைப்பட்டதால் அதை அணிந்திருக்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள் கேட்பவர்களுக்குக் கொடுக்காமலிருக்க மாட்டார்கள் என்று தெரிந்து கொண்டே நீர் அதை அவர்களிடன் கேட்டு விட்டீரே' எனக் கூறினார்கள்.

அதற்கவர் அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் அதை (சாதாரணமாக) அணிந்து கொள்வதற்ககாகக் கேட்கவில்லை:

அது எனக்கு கஃபனாக ஆகி விடவேண்டும் என்றே கேட்டேன்" என்றார். 'பின்பு அது அவருக்குக் கஃபனாகவே ஆகிவிட்டது" என்று ஸஹ்ல் கூறினார். ( நூல்: புகாரி – 1277 )

நபி (ஸல்) அவர்கள் ஒரு பாயின் மீது படுப்பது வழக்கம். அதனால் அவர்கள் மேனியில் பாயின் அழுத்தம் பதிந்து விடும். இதைக் கண்ட நாங்கள் 'அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அனுமதித்தால் இதன் மீது விரித்துக் கொள்ளும் விரிப்பைத் தயாரித்துத் தருகிறோம்; அது உங்கள் உடலைப் பாதுகாக்கும்' எனக் கேட்டோம். அதற்கு நபி {ஸல்} அவர்கள் 'எனக்கும், இந்த உலகத்துக்கும் என்ன உறவு உள்ளது? மரத்தின் நிழல் சற்று நேரம் இளைப்பாறி விட்டுச் செல்லக்கூடிய ஒரு பயணிக்கும், அந்த மரத்துக்கும் என்ன உறவு உள்ளதோ அது போன்ற உறவு தான் எனக்கும், இவ்வுலகத்துக்கும் உள்ளது' எனக் கூறி அதை நிராகரித்து விட்டார்கள். இதை அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார். ( நூல் : திர்மிதி 2299. )

ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றார்கள்:- “பேரீச்சம் நாறினால் நிரப்பப்பட்ட பதனிடப்பட்ட தோலே இறைத்தூதர்(ஸல்) அவர்களின் படுக்கை விரிப்பாக இருந்தது.

( நூல்: புகாரி – 6456 )

அபூ புர்தா(ரஹ்) அறிவிக்கின்றார்கள்:- “ஆயிஷா(ரலி) எங்களிடம் ஒட்டுப் போட்ட (கம்பளி) ஆடை ஒன்றை எடுத்துக் காட்டி, 'இதை உடுத்திக் கொண்டிருக்கும்போது தான் நபி(ஸல்) அவர்கள் மரணமடைந்தார்கள்" என்று கூறினார்கள். ( நூல்: புகாரி – 3108 )

بَيْنَمَا نَحْنُ جُلُوسٌ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَسْجِدِ دَخَلَ رَجُلٌ عَلَى جَمَلٍ ، فَأَنَاخَهُ فِي الْمَسْجِدِ ، ثُمَّ عَقَلَهُ ، ثُمَّ قَالَ لَهُمْ: أَيُّكُمْ مُحَمَّدٌ؟ وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُتَّكِئٌ بَيْنَ ظَهْرَانَيْهِمْ . فَقُلْنَا: هَذَا الرَّجُلُ الْأَبْيَضُ الْمُتَّكِئُ . فَقَالَ لَهُ الرَّجُلُ: ابْنَ عَبْدِ الْمُطَّلِبِ . فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: قَدْ أَجَبْتُكَ. فَقَالَ الرَّجُلُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنِّي سَائِلُكَ فَمُشَدِّدٌ عَلَيْكَ فِي الْمَسْأَلَةِ ، فَلَا تَجِدْ عَلَيَّ فِي نَفْسِكَ. فَقَالَ: سَلْ عَمَّا بَدَا لَكَ فَقَالَ: أَسْأَلُكَ بِرَبِّكَ وَرَبِّ مَنْ قَبْلَكَ ، آللهُ أَرْسَلَكَ إِلَى النَّاسِ كُلِّهِمْ؟ فَقَالَ: اللَّهُمَّ نَعَمْ. قَالَ: أَنْشُدُكَ بِاللهِ ، آللهُ أَمَرَكَ أَنْ نُصَلِّيَ الصَّلَوَاتِ الْخَمْسَ فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ؟ قَالَ: اللَّهُمَّ نَعَمْ. قَالَ: أَنْشُدُكَ بِاللهِ ، آللهُ أَمَرَكَ أَنْ نَصُومَ هَذَا الشَّهْرَ مِنَ السَّنَةِ؟ قَالَ: اللَّهُمَّ نَعَمْ. قَالَ: أَنْشُدُكَ بِاللهِ ، آللهُ أَمَرَكَ أَنْ تَأْخُذَ هَذِهِ الصَّدَقَةَ مِنْ أَغْنِيَائِنَا فَتَقْسِمَهَا عَلَى فُقَرَائِنَا؟ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: اللَّهُمَّ نَعَمْ. فَقَالَ الرَّجُلُ: آمَنْتُ بِمَا جِئْتَ بِهِ ، وَأَنَا رَسُولُ مَنْ وَرَائِي مِنْ قَوْمِي ، وَأَنَا ضِمَامُ بْنُ ثَعْلَبَةَ أَخُو بَنِي سَعْدِ بْنِ بَكْرٍ.

நபி {ஸல்} அவர்களுடன் நாங்கள் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தபோது ஒட்டகத்தின் மீது அமர்ந்தவராக ஒருவர் பள்ளிக்குள் நுழைந்தார். பள்ளியினுள்ளே ஒட்டகத்தைப் படுக்க வைத்துப் பின்னர் அதனைக் கட்டினார். பின்பு அங்கு அமர்ந்திருந்தர்களிடம் உங்களில் முஹம்மத் யார்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்களோ மக்களிடையே சாய்ந்து அமர்ந்திருந்தார்கள்.

இதோ சாய்ந்து அமர்ந்திருக்கும் இந்த வெண்மை மனிதர்தாம் (முஹம்மத் நபி)என்று நாங்கள் கூறினோம். உடனே அம்மனிதர் நபி (ஸல்) அவர்களை அப்துல் முத்தலிபின் பேரரே!என்றழைத்தார். அதற்கு நபியவர்கள் என்ன விஷயம்?’ என்று கேட்டார்கள். அப்போது அம்மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்கப் போகிறேன். சில கடினமான கேள்விகளையும் கேட்கப் போகிறேன்.

அதற்காக நீங்கள் என் பேரில் வருத்தப்படக் கூடாதுஎன்றார். அதற்கவர்கள் நீர் விரும்பியதைக் கேளும்என்றார்கள். உடனே அம்மனிதர் உம்முடையதும் உமக்கு முன்னிருந்தோரதும் இரட்சகன் மீது ஆணையாகக் கேட்கிறேன்; அல்லாஹ்தான் உம்மை மனித இனம் முழுமைக்கும் தூதராக அனுப்பினானா?’ என்றார். அதற்கு அவர்கள் அல்லாஹ் சாட்சியாக ஆம்!என்றார்கள்.

அடுத்து அவர் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு உம்மிடம் கேட்கிறேன்; அல்லாஹ்தான் இரவிலும், பகலிலுமாக நாங்கள் ஐந்து நேரத் தொழுகையைத் தொழுது வரவேண்டுமென்று உமக்குக் கட்டளையிட்டிருக்கிறானா?’ என்றார். அதற்கவர்கள் ஆம்! அல்லாஹ் சாட்சியாகஎன்றார்கள்.

அடுத்து அவர் இறைவன் மீது ஆணையாக உம்மிடம் கேட்கிறேன்; அல்லாஹ் தான் ஒவ்வோர் ஆண்டிலும் குறிப்பிட்ட இந்த மாதத்தில் நாங்கள் நோன்பு நோற்க வேண்டும் என்று உமக்குக் கட்டளையிட்டிருக்கிறானா?’ என்றார். அதற்கவர்கள் ஆம்! அல்லாஹ் சாட்சியாகஎன்றார்கள்.

அடுத்து அவர், ‘இறைவன் மீது ஆணையாக உம்மிடம் கேட்கிறேன்; அல்லாஹ்தான் எங்களில் வசதி படைத்தவர்களிடமிருந்து இந்த (ஸகாத் என்னும்) தர்மத்தைப் பெற்று எங்களில் வறியவர்களுக்கு நீர் அதனை வினியோகிக்க வேண்டுமென்று உமக்குக் கட்டளையிட்டிருக்கிறானா?’ என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம் (இறைவன் மீது சாட்சியாக)என்றார்கள்.

உடனே அம்மனிதர் நீங்கள் (இறைவனிடமிருந்து) கொண்டு வந்தவற்றை நான் நம்பி ஏற்கிறேன்என்று கூறிவிட்டு நான், என்னுடைய கூட்டத்தார்களில் இங்கு வராமல் இருப்பவர்களின் தூதுவனாவேன். நான்தான் ளிமாம் இப்னு ஸஃலபா, அதாவது பனூ ஸஃது இப்னு பக்ர் சகோதரன்என்றும் கூறினார். அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி),  ( நூல்: புகாரி )

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا سِمَاكٌ، ح وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَاللَّفْظُ لَهُ، قَالَ: أَخْبَرَنَا أَبُو خَيْثَمَةَ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، قَالَ

قُلْتُ لِجَابِرِ بْنِ سَمُرَةَ: أَكُنْتَ تُجَالِسُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: نَعَمْ كَثِيرًا، «كَانَ لَا يَقُومُ مِنْ مُصَلَّاهُ الَّذِي يُصَلِّي فِيهِ الصُّبْحَ، أَوِ الْغَدَاةَ، حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، فَإِذَا طَلَعَتِ الشَّمْسُ قَامَ، وَكَانُوا يَتَحَدَّثُونَ فَيَأْخُذُونَ فِي أَمْرِ الْجَاهِلِيَّةِ، فَيَضْحَكُونَ وَيَتَبَسَّمُ»

நீங்கள் நபி (ஸல்) அவர்களின் அவையில் அமர்ந்ததுண்டா?’’ என்று ஜாபிர் பின் ஸமுரா (ரலி) என்ற நபித்தோழரிடம் கேட்டேன். அதற்கவர் ஆம்’’ என்றார். மேலும் தொடர்ந்து வைகறைத் தொழுகை முடிந்ததும் சூரியன் உதிக்கும் வரை நபி (ஸல்) அவர்கள் தொழுத இடத்திலேயே அமர்ந்திருப்பார்கள். சூரியன் உதித்த பின்னர் எழுவது தான் அவர்களின் வழக்கம்.

நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு அமர்ந்திருக்கும் போது நபித்தோழர்களும் அமர்ந்திருப்பார்கள். அப்போது அறியாமைக் காலத்தில் (இஸ்லாத்தை ஏற்காத காலத்தில்) தமது நடவடிக்கைகள் குறித்து நபித்தோழர்கள் பேசுவார்கள். அதை நினைத்துச் சிரிப்பார்கள். இதைப் பார்க்கும் நபி (ஸல்) அவர்கள் புன்னகைப்பார்கள்’’ என்று கூறினார். அறிவிப்பவர்: ஸிமாக் பின் ஹர்பு, ( நூல்: முஸ்லிம் )

أُتِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِرَجُلٍ تَرْعَدُ فَرَائِصُهُ قَالَ: فَقَالَ لَهُ: «هَوِّنْ عَلَيْكَ فَإِنَّمَا أَنَا ابْنُ امْرَأَةٍ مِنْ قُرَيْشٍ كَانَتْ تَأْكُلُ الْقَدِيدَ فِي هَذِهِ الْبَطْحَاءِ»

ஒரு மனிதர் முதன் முதலாக நபி (ஸல்) அவர்களைச் சந்திக்க வந்தார். பொதுவாக மன்னர்கள் முன்னிலையில் நடுநடுங்கிக் கொண்டு தான் மக்கள் நிற்பார்கள். நபி (ஸல்) அவர்களையும் அதுபோல் கருதிக்கொண்டு உடல் நடுங்கிட வந்தார். சாதாரணமாக இருப்பீராக! உலர்ந்த இறைச்சியைப் சாப்பிட்டு வந்த குறைஷி குலத்துப் பெண்ணுடைய மகன் தான் நான்’’ என்று அவரிடம் கூறி சகஜ நிலைக்குக் கொண்டு வந்தார்கள். அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்துல்லாஹ், ( நூல்: ஹாக்கிம் )

அன்பும், கருணையும் நிறைந்தவர்கள்..

நபி {ஸல்} அவர்கள் வீதியில் செல்லும் போது சிறுவர்களைக் கண்டால் அவர்கள் முந்திக் கொண்டு சிறுவர்களுக்கு சலாம் கூறுவார்கள். நூல் : புகாரி 6247

நபி {ஸல்} அவர்கள் சிறுவர்களாகிய எங்களுடன் கலந்து பழகுவார்கள். எனது தம்பி அபூ உமைரிடம் உனது குருவி என்ன ஆனது?’ என்று விசாரிக்கும் அளவுக்கு சிறுவர்களுடன் பழகுவார்கள். நூல் : புகாரி 6129

நான் அபீஸீனியாவிலிருந்து வந்தேன். அப்போது நான் சிறுமியாக இருந்தேன். வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஆடையை அவர்கள் எனக்கு அணிவித்தார்கள். அந்த வேலைப்பாடுகளைத் தொட்டுப் பார்த்து அருமை அருமைஎன்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : உம்மு காலித் (ரலி), நூல் : புகாரி 3874

நான் நபி {ஸல்} அவர்களுடன் முதல் தொழுகையைத் தொழுதேன். பின்னர் அவர்கள் தமது குடும்பத்தாரிடம் சென்றார்கள். அவர்களுடன் நானும் சென்றேன். அப்போது எதிரில் சிறுவர்கள் சிலர் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரின் கன்னத்தையும் தடவிக் கொடுத்துக் கொண்டே சென்றனர். அறிவிப்பவர் : ஜாபிர் பின் ஸமூரா (ரலி) நூல் : முஸ்லிம் 4297

நபி {ஸல்} அவர்கள் மிகச் சிறந்த நற்குணம் கொண்டவர்களாக இருந்தனர். ஒரு நாள் என்னை ஒரு வேலைக்கு அனுப்பினார்கள். நபிகள் நாயகம் கூறிய வேலையைச் செய்ய வேண்டும் என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டு அல்லாஹ்வின் மீது ஆணையாக போக மாட்டேன்எனக் கூறினேன். நான் புறப்பட்டு கடை வீதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களுக்கருகில் வந்தேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என் பின்புறமாக எனது பிடரியைப் பிடித்தனர். அவர்களை நான் நோக்கிய போது அவர்கள் சிரித்தனர். அனஸ்! நான் கூறிய வேலையைச் செய்தாயா?’ எனக் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! இதோ செய்கிறேன்என்று கூறினேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக ஒன்பது வருடங்கள் அவர்களுக்கு நான் பணிவிடை செய்துள்ளேன். நான் செய்த ஒரு காரியம் குறித்து ஏன் இப்படிச் செய்தாய்?’ என்றோ, நான் செய்யாத ஒரு காரியம் குறித்து இப்படிச் செய்திருக்க மாட்டாயா?’ என்றோ அவர்கள் கடிந்து கெண்டதில்லைஎன அனஸ் (ரலி) அறிவிக்கிறார். நூல் : முஸ்லிம் 4272

நபி {ஸல்} அவர்கள், தம்மிடம் யார் வந்து அறிவுரை கேட்டாலும் கேட்பவர் யார், அவருடைய பண்பு நலன்கள் என்ன, எந்தக் கோத்திரம்- கிளையைச் சேர்ந்தவர், நகர்ப்புறவாசியா, கிராமத்து வாசியா என்பதையெல்லாம் பார்த்து அவர்களுக்கு ஏற்றாற்போல் அறிவுரைகள் வழங்குவார்கள்.

ஒருமுறை ஒரு மனிதர்  நபிகளாரிடம் வந்து அறிவுரை வழங்கும்படி கேட்டபோது, “கோபம் கொள்ளாதேஎன்றார். அவர் அடிக்கடி கோபப்படும் ஆளாக இருந்ததுதான் காரணம்.வேறொரு சந்தர்ப்பத்தில் ஒருவர் வந்து இஸ்லாம் என்றால் என்ன?” என்று கேட்டபோது, “பசித்தவருக்கு உணவு அளிப்பதுஎன்றார். அன்று முதல் கேள்வி கேட்டவர் ஏழைகளுக்கு உணவு வழங்கத் தொடங்கிவிட்டார்.

இப்படித்தான் ஒரு நாள் ஒரு கிராமத்து அரபி. கல்வி அறிவு  இல்லாதவர்.  அவர் ஒருமுறை இறைத்தூதர் நபி {ஸல்} அவர்களிடம் வந்து, “நீங்கள் இறைத்தூதர்தான் என்பதை நான் எப்படி அறிந்து கொள்வேன்?” என்று கேட்டார்.

தம் எதிரில் இருக்கும் கிராமத்து அரபியைப் பார்த்தார் நபிகளார். ஓர் எளிய அற்புதச் செயலை நிகழ்த்திக் காட்டினாலே அவருக்குப் போதுமானது என்று நபிகளார் நினைத்தார். இதோ இந்தப் பேரீத்தம்மரத்திலுள்ள ஒரு பேரீத்தங் கொத்தை நான் அழைக்கிறேன். அது இறங்கி வந்துவிட்டால் நான் இறைத்தூதர்தான் என்று ஒப்புக்கொள்வீர்களா?” என்று கேட்டார் நபிகளார். அந்தக் கிராமத்து மனிதரும் மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டார். நபிகளார் அந்தப் பேரீத்தங்கொத்தை அழைத்தார். அது இறங்கிவந்து நபிகளாரின் அருகில் விழுந்தது. பிறகு நபியவர்கள் திரும்பிச் செல் என்று கூறியதும் அவ்விதமே அது திரும்பிச் சென்றது.

அந்தக் கிராமத்து மனிதர், நபிகளாரின் கையைப் பற்றிக்கொண்டு நீங்கள் உண்மையில் இறைவனின் தூதர்தான்என்று ஏற்றுக்கொண்டு இஸ்லாத்தைத் தழுவினார். (ஆதாரம்: ஜாமிஉத் திர்மிதீ, நபிமொழி எண்-3551)

ஏந்தல் நபி {ஸல்} அவர்களின் எளிமையைப் பின்பற்றுவோமாக!!!

1 comment: