Thursday 20 October 2022

காதலின் பெயரால் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்!!

 

காதலின் பெயரால் அதிகரிக்கும் 

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்!!

கடந்த அக்டோபர் 13 ம் தேதி சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஓடும் ரயில் முன்பு கல்லூரி மாணவியை தள்ளி கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த இளைஞர் சதீஷ் தனிப்படை போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

சென்னை அருகே உள்ள ஆதம்பாக்கம் ராஜா தெரு காவலர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (47). இவரது மனைவி வரலட்சுமி (43). இவர் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் சத்யா.

சத்யா (20). இவர் தியாகராய நகரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாமாண்டு படித்து வந்த இளம் பெண்ணை. அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் தயாளனின் மகன் சதீஷ் (23). என்பவர் சத்யாவை ஒரு தலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது.

தன் காதலை ஏற்க மறுத்த அந்த இளம் பெண்ணை சென்று கொண்டிருந்த மின்சார ரயில் முன்பாக தள்ளி விட்டு கொலை செய்துள்ளான் சதீஷ்.

7 தனிப்படை அமைத்து தேடிய காவல் துறை நள்ளிரவில் கைது செய்துள்ளது.

பரபரப்பான பரங்கிமலை இரயில் நிலையத்தில் பலபேர் முன்னிலையில் கொஞ்சம் கூட பயமின்றி துணிவுடன் இந்த கொடூர கொலையை நிகழ்த்தியுள்ளான் இந்த இளைஞன்.

தலை சிதைந்த உடலின் பல பாகங்களும் துண்டாகி கொலையுண்ட மகளின் மரணச் செய்தி கேட்ட தந்தையும் அதிர்ச்சி தாளாமல் மாரடைப்பில் மரணமானார்.

இரு உயிர்கள் பலியாகுவதற்கு காரணமான சதீஷ்ஷுக்கு நீதிமன்றம் உச்சபட்ச தண்டனையுடன் அளிக்கும் தீர்ப்பும் அதை விரைவாக செயல்படுத்துவதுமே இது போன்ற பெண்களுக்கு எதிராக துணிவுடன் வன்முறையில் ஈடுபடுவோருக்கு அச்சத்தை ஏற்படுத்தும்.

எங்கே செல்கிறது சமூகமும் நாடும்?

இருபத்தோராம் நூற்றாண்டில் அபிவிருத்தி, சமத்துவம், சாதனைகள் என்று உலகளாவிய ரீதியில் முன்னேற்றங்களையும் மேம்பாடுகளையும் நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் இந்த சமூகத்தில் இன்னும் பெண்கள் தொடர்பான பிரச்சனைகளில் முழுமையான தீர்வை எட்டவில்லை என்பதே நிதர்சனம்.

உலக அளவில் அனைத்து துறைகளிலும் பெண்கள் அபரிதமான வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிற போதிலும் அதை விட அதிக அளவில் பெண்கள் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்பது உண்மை.

1993 ஐநா அமைப்பு பெண்களுக்கு எதிரான வன்முறைகளை செயல்களை சட்டப்படி குற்றம் என அறிவித்து உத்தரவிட்டது.

பெண்கள் குறிப்பிட்ட வயதுப் பருவத்தில் தான் வன்முறைகளை எதிர்கொள்கின்றனர் என்ற பிறழ்வான எண்ணக்கரு பரவலாக நிலவி வருகிறது. 

 

ஆயினும் ஒவ்வொரு வயதுக் குழுக்களிலுமுள்ள பெண்கள் பல்வேறு வகைப்பட்ட பிரச்சினைகளை சந்திக்க வேண்டி உள்ளது.  

அதனடிப்படையில் ஆராய்ந்த உலக சுகாதார அமைப்பினது அறிக்கையின் படி (WHO), பொதுவாக பெண்கள் தத்தமது வாழ்நாளில் ஐவகைப்பட்ட நிலைகளில் வெவ்வேறு இடர்களை எதிர்கொள்கின்றனர்.

01) பிறப்பிற்கு முன்னர்  சந்திக்கும் பிரச்சனைகள்

02) மழலைப் பருவத்தின் துஷ்பிரயோகங்கள்

 03) சிறுமியர் பருவ இடர்கள்

04) வளர்சிதை மாற்றம் மற்றும் வயது வந்தோர் பிரச்சினைகள்

 05) முதியோர் பருவ வன்முறைகள்

பாலியல் கொடுமை, குடும்ப வன்முறை, போர்கள், கலவரங்கள், மோதல்களில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்கள் மற்றும் பிற வடிவங்களினால் வன்முறைக் கொடுமைகளுக்கு உலகம் முழுவதும் பெண்கள் ஆளாகி வருகின்றனர்.

உலகில் மூன்றில் ஒரு பெண், அவளின் வாழ்நாளில் வன்முறைக்கு ஆளாகிறாள் என்கிறது ஒரு ஆய்வு.

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடந்த 2021-ம் ஆண்டில் 4.28 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது, 2020-ம் ஆண்டைக் காட்டிலும் 15.3% அதிகம் ஆகும். கரோனா பேரிடர் காரணமாக பொதுமுடக்கம் அமலில் இருந்த 2020-ல் 3.71 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது, 2019-ல் பதிவான 4.05 லட்சம் வழக்குகளைவிட 8.3% குறைவாகும்.

என தேசிய  குற்ற ஆவண காப்பக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பெண்கள் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தரும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டமும்.. இந்திய பெண்கள் பாதுகாப்புச் சட்டமும்...

இந்திய அரசியல்  அமைப்புச்சட்டப் பிரிவுகள் 14 மற்றும் 15 இரண்டும், எல்லா வகையான வேறுபாடுகளையும் களைந்து, சமத்துவத்தோடும் சகோதரத்துவத்தோடும் வாழ்வதற்கான உரிமையை வலியுறுத்திக் கூறுகிறது. பிரிவு 21-ல் பெண்கள் எவ்வாறு மாண்போடும், சமமான வகையில் பொது இடங்களிலும் பணியிடங்களிலும் மதித்து நடத்தப்பட வேண்டும் என்பதை தெளிவுபடுத்துகிறது. ஆனால் நடைமுறையில் நாம் காண்பதோ பெண்களின் பாதுகாப்பற்ற நிலை. இந்நிலை இந்தியாவில் மிகவும் உயர்ந்துள்ளதை ஐக்கிய நாடுகள் சபை வன்மையாக கண்டித்து பெண்கள் பாதுகாப்பினை வலியுறுத்தியது.

இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு 2010-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதுதான் ""பணி இடங்களில் பாலியல் வன்முறைக்கு எதிரான பெண்கள் பாதுகாப்புச் சட்டம் 2010''.  இந்திய      அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் பெண்களுக்கான முழுமையான பாதுகாப்பினை வழங்கும் என்பதில் எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லை. இச்சட்டத்தின் முக்கிய நோக்கமே, பணி இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தருவதே ஆகும். அரசின் இந்த அரிய சட்ட முயற்சி பெண்கள் முன்னேற்றத்திற்கு மிகுந்த பயனளிக்கும்.

 

இச்சட்டம் எல்லா இடங்களிலும் பணி செய்யும் பெண்களுக்கு பொருத்தமானதாக உள்ளது.  பெண்கள் பாலியல் ரீதியான வன்முறைகளால் பாதிக்கப்பட்டால் இச்சட்டம் மூலம் நீதி பெறலாம். மேலும், பாலியல் வன்முறைக்குத் தூண்டிய அதிகாரிகளையோ, ஏனைய ஆண்களையோ, சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுத்து தண்டிக்கலாம்.

இச் சட்டத்தின் கீழ் ஒவ்வோர் அமைப்பிலும் உள்ளார்ந்த புகார் குழுக்களை ஏற்படுத்தி அதன் மூலம் புகார் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. இச்சட்டத்திற்கு கீழ்ப்படியாத அதிகாரிகள் சிறைத் தண்டனையும், 50,000/- க்கும் அதிகமான அபராதத்தையும் சந்திக்க நேரிடும். பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் செய்த 90 நாட்களில் விசாரணையை முடித்து நடவடிக்கையை எடுக்க இச்சட்டம் வலியுறுத்துகிறது.  

கொலைக்கான பிண்ணனி..

இப்போது நடைபெற்ற கொலைக்கான காரணம் என்ன? கொலை செய்தவனின் வாக்குமூலம் என்ன? என்பதை ஆய்வு செய்தால் நமக்கு இரண்டு விஷயங்கள் கிடைத்திருக்கின்றன.

கொலைக்கான முதல் காரணம் "ஒரு தலைக் காதல்" ஆகும்.

இன்று காதலை  சினிமாவின் மூலமாகவே சமூகத்தில் பெரும்பாலோர் அறிந்து வருகின்றனர்.

சினிமாவின் ஆரம்ப கால கட்டத்தில் காதல் என்பது பருவ வயதைத் கடந்த அனைவருக்கும் வருகிற உணர்வாகவே சினிமாவில் சித்தரிக்கப்பட்டது.

காலம் போகப் போக பணக்கார (ஜமீன், நாட்டாமை,) வீட்டு ஆணை பெண்ணும், பெண்ணை ஆணும் காதலிப்பது போல் சித்தரிக்கப்பட்டது.

பின்னர் படித்த ஆண் படிக்காத பெண்ணையும் படிக்காத ஆண் படித்த பெண்ணையும் காதலிப்பது போல் சித்தரிக்கப்பட்டது.

பின்னர் உயர் ஜாதி ஆண் கீழ் ஜாதிப் பெண்ணையும் கீழ் ஜாதி ஆண் மேல் ஜாதிப் பெண்ணையும் காதலிப்பது போல் சித்தரிக்கப்பட்டது.

இந்த கால கட்டத்தில் நிறைய கலப்பு திருமணங்கள் தமிழகத்தில் நடைபெற்றது. அது ஊக்குவிப்பும் செய்யப்பட்டது.

அதன் பின்னர் காதலுக்கு புது சாயமும் வர்ணமும் பூச ஆரம்பித்தது சினிமா.

கண்டதும் காதல், காணாமலேயே காதல், இமைகளில் தொடங்கி இதயத்தில் முடியும் காதல், இதயத்தில் துவங்கி இமையில் இணையும் காதல், பள்ளி பருவத்து காதல், பல பேருடன் காதல், ஆசிரியர் மாணவி/ மாணவன் மீது காதல்.

வேறொருவருடன் நிச்சயம் செய்யப்பட்ட ஆணின் மீது  பெண்ணின் மீது காதல்,  அடுத்தவரின் மனைவி மீது காதல்,  அடுத்தவரின் கணவன் மீது காதல். நண்பனின் தங்கை மீது காதல், வீட்டு உரிமையாளர் மகள் மீது காதல், நகைச்சுவை நடிகர்களின் நகைச்சுவை ஊடாக கள்ளக்காதல்  என பல்வேறு காதலை சினிமா கற்பனை எனும் பெயரில் மக்களின் மனங்களில் கற்பித்தது.

 

பின்னர், காதலுக்கு துணை நிற்கும் நண்பர்கள், காதலுக்கு தூது போகும் பெற்றோர், காதுலுக்கு மாமா வேலை பார்க்கும் வீட்டின் பிஞ்சுக் குழந்தைகள், காதல் திருமணங்களை நடத்தி வைக்கும் காவல் துறை என காதலை, காதல் செய்வதை ஊக்குவிக்கும் கதையம்சம் கொண்ட திரைப்படங்களை வெற்றிப் படங்களாக தந்தது.

பின்னர் காதலுக்கு இடையூறாக யார் நின்றாலும் அவர்களை எதிர்ப்பது, தூக்கி எறிவது, அவர்களின் உறவை முறிப்பது, அவர்களுடன் சண்டை செய்வது என புது வகையான சிந்தனைகளை புகுத்தியிருக்கின்றது சினிமா.

எனவே,  காதல் என்பது இருபாலருக்கும் ஏற்படும் பொதுவான ஒரு உணர்வு என்பதை இயல்பான ஒன்று என்பதை பதிவு செய்து விட்டு காதல் செய்வது கட்டாயம் என்பது போன்ற சினிமா உருவாக்கி இருக்கும் சித்தாந்தம் தவறு என்பதை உறுதி பட பதிவு செய்ய வேண்டும்.

இது போன்ற சினிமாக்களின் ஊடாகவே இளைஞர்களும் யுவதிகளும் பருவ வயதில் வழிகெட்டு நெறி பிறழ்ந்து ஒன்று தங்களையே அழித்துக் கொள்ள (தற்கொலை)  அல்லது பிறரை அழிக்க (கொலை) செய்ய முன் வருகின்றனர். என்று கூறி சினிமாவின் மீதான மோகத்தை முதலில் உடைத் தெறிய வேண்டும்.

முஸ்லிம் இளைஞர்களே உங்களுக்காக!!!

ஒவ்வொரு மனிதர்களும் தவறான காரியங்களை செய்வதை விட்டும் உடல் உறுப்புகளை பாதுகாப்பதானது அல்லாஹ் தந்த அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவதாகப் பார்க்கப்படுகின்றது. இப்படிப்பட்ட இந்த அருட்கொடைகளை பாவ காரியங்களின் பக்கம் திருப்புபவர்களை அல்லாஹ் கடுமையான வேதனையைக் கொண்டு எச்சரிக்கை செய்திருக்கிறான்.          

அல்லாஹ் தந்த உறுப்புகளில் முக்கியானவைகள்தான் செவிப்புலனும் பார்வைப்புலனுமாகும். இந்த இரண்டும் மனிதனது உள்ளத்தை தவறான பாதையின் பக்கம் அழைத்துச் செல்பவைகளாக இருந்து கொண்டிருக்கின்றன. அல்லாஹ்வுத்தஆலா அவன் தந்த உறுப்புகளை எப்படி பயன்படுத்தினோம் என்று மறுமையில் விசாரிக்க இருக்கிறான்.

நிச்சயமாக செவிப்புலன்கள், பார்வைப்புலன்கள் உள்ளங்கள் இவை ஒவ்வொன்றும் அவைகள் பற்றி விசாரிக்கப்பட இருக்கின்றன” (ஸுரதுல் இஸ்ரா:36)
என்று அல்லாஹ் கூறியிருக்கிறான்.

இமாம் இப்னுல் கையும் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்

உடல் உறுப்புகள் ஏழாகும். அவைகளாவன: கண்கள், காதுகள், வாய், மர்ம உறுப்பு, கைகள், கால்களாகும். இந்த உறுப்புகள் வெற்றிக்கும் கைசேதத்துக்கும் மத்தியில் இணைக்கப்பட்டிருக்கின்றன. யார் கவனமில்லாமல் அவைகளை பாதுகாக்கவில்லையோ அவன் கைசேதத்திற்குரியவனாவான். யார் அவைகளை கண்காணித்து பேணி பாதுகாத்து வருகிறாரோ அவர் வெற்றி பெற்றவராவார். அந்த உறுப்புகளை பாதுகாப்பது நலவுகளின் அஸ்திவாரமாகும். அவைகளை பாதுகாக்காமல் புறக்கணிப்பது எல்லா தீங்குகளுக்குறிய அஸ்திவாரமாகும்.

அல்லாஹ் கூறுகிறான் விசுவாசிகள் தங்களது பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுமாறும் மர்ம உறுப்புகளை பாதுகாக்குமாறும் (நபியே) நீர் கூறுவீராக…. (ஸூரதுன் நூர்30)” (இஹாததுன் லிஹான்:1/80)

மேற்கண்ட அல்குர்ஆன் வசனத்தில் சொல்லப்படுகின்ற பார்வையை தாழ்த்துதல், மர்ம உறுப்பைப் பாதுகாத்தல் என்ற விடயங்களை ஒன்று சேர்த்து பார்க்கின்ற போது பார்வையை தாழ்த்துவதானது மர்ம உறுப்பை பாதுகாப்பதற்குரிய காரணியாக இருந்து கொண்டிருக்கின்றது. பார்வையை தவறான பாதையில் செலுத்துவது மானக்கேடான காரியங்கள் இடம்பெறுவதற்குரிய காரணியாக அமையும் என்ற செய்தியை சுட்டிக் காட்டியிருக்கிறது.

அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்.கண்ணுடைய விபச்சாரம் தவறான விடயங்களை பார்ப்பதாகும். நாவினுடைய விபச்சாரம் கெட்ட வார்த்தைகளைப் பேசுவதாகும். கையினுடைய விபச்சாரம் மோசமானவைகளை தொடுவதாகும். காலினுடைய விபச்சாரம் மோசமானவைகளின் பக்கம் நடந்து செல்வதாகும். உள்ளம் ஆசை கொள்கின்றது. மர்ம உறுப்பு அதனை உண்மையாகவும் பொய்யாகவும் ஆக்குகின்றதுஎன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புஹாரி:2643, முஸ்லிம்:2657)

இமாம் அல் அமீன் அஷ்ஷின்கீதீ ரஹிமகுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்

இந்த ஹதீஸில் சொல்லப்படுகின்ற கண்ணுடைய விபச்சாரம் தவறான விடயங்களை பார்ப்பதாகும்என்ற செய்தியில் வருகின்ற கண்ணுடைய விபச்சாரம் என்பது ஹலாலாக்கப்படாதவைகளை பார்ப்பைக் குறித்து நிற்கின்றது. எனவேதான் இப்படிப்பட்டவைகளை பார்ப்பது ஹராம் என்பதற்கும் இவைகளிலிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்குரிய தெளிவான ஆதாரமாக இது இருந்து கொண்டிருக்கின்றது. இந்த நபிமொழிகள் இது போன்ற அதிகமான தகவல்களை தருகின்றன.

(மோசமான) பார்வைகள் விபச்சாரத்திற்குரிய காரணம்தான் என்பது அறியப்பட்ட விடயமாகும். உதாரணத்திற்கு பார்வைகளில் அதிகமானவைகள் அழகான பெண்ணின் பால் செல்கின்றன. அதன் காரணமாக சிலவேளைகளில் அந்தப் பெண்ணை நேசிப்பது அவனுடைய உள்ளத்தில் உருவாகி அது அவனை அழிவின் பக்கம் செல்வதற்கும் காரணமாக அமைகிறது. அல்லாஹ் எங்களைப் பாதுகாப்பானாக- எனவேதான் (தவறான) பார்வைகள் விபச்சாரத்திற்குரிய ஊடகங்களாகும். (அழ்வாஉல் பயான் 5/510)

எனவேதான் இப்படியான ஒவ்வொரு செய்திகளையும் நுணுக்கமாக வசிக்கின்ற போது மனிதனை தவறான நடத்தைகளுக்கு அழைத்து செல்பவைகளாக கண்களும் காதுகளும் காணப்படுகின்றன. அவைகளைக் கொண்டு மனிதன் தவறான ஆபாசமான விடயங்களைப் பார்ப்பதானது, கேட்பதானது மனிதனை பாவத்தின் பால் அழைத்து செல்கின்றன.

அந்தடிப்படையில்தான் இன்றைய முஸ்லிம்கள் எந்தவொரு வயது வித்தியாசமுமின்றி திரைப்படங்கள் சினிமாக்களுக்கு அடிமையாகி இருக்கிறார்கள். சினிமாக்கள் ஆபாசம் நிறைந்ததாகவும், பெண்கள் அரைகுறை ஆடைகளுடன் நடிப்பததனாலும் மனித உள்ளங்களில் ஒரு விதமான தவறான எண்ணங்களை அது தோற்றுவிக்கின்றன.

ஆகவேதான் முஃமினான ஆண்களையும் பெண்களையும் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு அல்லாஹ் கூறி இருப்பதனால் சினிமாக்கள் பார்ப்பது முஃமின்கள் மீது ஹராமான ஒன்றாக காணப்படுகின்றது.

எப்படி உணவு விஷயத்தில், வியாபார நேரத்தில் ஹராத்தை தவிர்ந்து கொள்கிறோமோ அதே போன்று இந்த வியத்தை விட்டும் தவிர்ந்து கொள்ள அல்லாஹ் அருள்புரிவானாக.

காதல் என்றால் திருமணம் தான் எல்லை.

சீர்கெட்ட சமூக அமைப்பில் புரிந்து வைக்கப்பட்டுள்ள அல்லது புகுத்தப்படுகிற காதலை புறந்தள்ளிவிட்டு இன்னாரை திருமணம் செய்து வாழவேண்டும் என்ற விருப்பத்துடன் ஒருவர் கொள்ளும் நேசம் காதல் குறித்த மார்க்கத்தின் நிலைப்பாடு என்ன என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு ஆணுக்கு பெண் மீதோ ஒரு பெண்ணுக்கு ஆணின் மீதோ விருப்பம் ஏற்ப்படலாம், அந்த விருப்பம் திருமண பந்தத்தின் மூலம் மட்டுமே இணைய வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது. 

பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக திருமணம் செய்துகொள்ளுங்கள்.” ( அல்குர்ஆன்:  4: 3 )

இங்கு உங்களுக்கு விருப்பமானவர்களை என்று கூறியதிலிருந்து ஒரு பெண் மீது விருப்பம் ஏற்ப்பட்டு பின்பு அவளைத் திருமணம் செய்வதை அல்லாஹ் அனுமதிப்பதை புரிந்துகொள்கிறோம்.

திருமணம் செய்வதற்காக பெண் பேசிய பின் ஏற்ப்படும் விருப்பத்தைத் தான் இது குறிக்கும் என்று கூற முடியாது. ஏனென்றால் திருமணத்திற்க்காக பெண் பேசுவதற்கு முன்னரே ஒரு பெண் மீது விருப்பம் கொள்வதை அங்கீகரிக்கும் விதத்தில் இன்னொரு வசனம் உள்ளது.

“(இத்தா இருக்கும் பெண்ணை) பெண் பேசுவதை நீங்கள் சாடையாக எடுத்துக் கூறுவதிலோ அல்லது உங்கள் மனங்களில் மறைத்து வைப்பதிலோ குற்றமில்லை. நிச்சயமாக நீங்கள் அவர்களை நினைப்பீர்கள் என்பதை அல்லாஹ் அறிவான். எனினும் நல்ல வார்த்தையை கூறுவதைத் தவிர (திருமணம் செய்வதாக) ரகசியமாக வாக்குறுதி கொடுத்துவிடாதீர்கள். மேலும் (இத்தாவின்) தவணை முடிகின்றவரை திருமண ஒப்பந்தத்தை உறுதி செய்யாதீர்கள்.

[அல்குர்ஆன் 2:235]

இந்த வசனத்தில் இத்தாவில் இருக்கும் பெண்ணை திருமணம் செய்ய விரும்பும் ஒருவர் இத்தா முடியும் வரை பெண் பேசக் கூடாது என்று அல்லாஹ் தடை செய்கின்றான். ஆனால் நீங்கள் அவர்களை நினைப்பீர்கள் என்பதை அல்லாஹ் அறிவான் என்றும் கூறுகிறான். இதன் மூலம் பெண் பேசுவதற்கு முன்பே ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்துடன் விரும்புவது குற்றமாகாது என்பதைப் புரிகிறோம்

 

அண்ணலின் நினைவில் அன்னை ஹஃப்ஸா

تزوَّجت حفصة -رضي الله عنها- من خُنَيْس بن حذافة السهمي، وقد دخلا الإسلام معًا، ثم هاجر خُنَيْس إلى الحبشة في الهجرة الأولى، التي كانت مكوَّنة من اثني عشر رجلاً وأربع نسوة، يرأسهم عثمان بن عفان t ومعه السيدة رقيَّة ابنة رسول الله ، ثم هاجر خُنَيْس بن حُذافة مع السيدة حفصة –رضي الله عنها- إلى المدينة، وقد شهد مع رسول الله r بدرًا، ولم يشهد من بني سهم بدرًا غيره، وقد تُوُفِّيَ متأثِّرًا بجروح أُصيب بها في بدر:

وبعد وفاة زوجها يرأف أبوها عمر بن الخطاب بحالها، ثم يبحث لها عن زوج مناسب لها، فيقول: لقيتُ عثمان فعرضتُ عليه حفصة، وقلتُ: إن شئتَ أنكحتُكَ حفصة ابنة عمر. قال: سأنظر في أمري. فلبثتُ لياليَ ثم لقيني، فقال: قد بدا لي أن لا أتزوج في يومي هذا. قال عمر: فلقيتُ أبا بكر، فقلتُ: إن شئتَ أنكحتُكَ حفصة ابنة عمر. فصمت أبو بكر، فلم يُرْجِع إليَّ شيئًا، فكنت أَوْجَد عليه منِّي على عثمان، فلبثتُ ليالي، ثم خطبها رسول الله ، فأنكحتها إيَّاه، فلقيني أبو بكر، فقال: لعلَّك وَجَدْتَ علَيَّ حين عرضتَ علَيَّ حفصة، فلم أُرجع إليك شيئًا؟ فقلتُ: نعم. قال: فإنه لم يمنعني أن أرجع إليك فيما عرضتَ علَيَّ إلاَّ أنِّي كنتُ علمتُ أن رسول الله قد ذكرها، فلم أكن لأفشي سرَّ رسول الله r، ولو تركها رسول الله r لقبلتُها.

 

உமர்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: கணவன் இறந்ததால் என் மகள் ஹஃப்ஸா விதவையான போது, உஸ்மானைச் சந்தித்து ஹஃப்ஸாவைப் பற்றி அவரிடம் எடுத்துச் சொன்னேன், நீங்கள் நாடினால் ஹஃப்ஸாவை உங்களுக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என்றேன், அதற்கவர் இது விஷயத்தில் நான் யோசிக்க வேண்டும் என்றார். சில தினங்கள் பொறுத்திருந்தேன். அதன் பின் அவர் இப்போது நான் திருமணம் செய்ய வேண்டியதில்லை என்று எனக்குத் தோன்றுகிறது என்றார்.

பிறகு அபூபக்கரை சந்தித்து தாங்கள் நாடினால் உங்களுக்கு நான் ஹஃப்ஸாவைத் திருமணம் செய்து வைக்கிறேன் என்றேன். அதற்கவர் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்துவிட்டார் அதனால் உஸ்மான் மீது இருந்த வருத்தத்தை விட அவர் மீது அதிக வருத்தப்பட்டேன்

பிறகு சில நாட்கள் கழிந்தபின் நபி(ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவை பெண் பேசினார்கள். அவர்களுக்கு ஹஃப்ஸாவைத் திருமணம் செய்து வைத்தேன்.

பின்பு அபூபக்கர்என்னைச் சந்தித்து என்னிடம் நீங்கள் ஹஃப்ஸாவைப் பற்றி எடுத்துச் சொன்னபோது உங்களுக்கு நான் எதுவும் பதிலளிக்கவில்லை என்பதால் என்மீது நீங்கள் வருத்தப்பட்டிருக்கலாம் என்றார், அதற்க்கு நான் ஆம் என்றேன். அல்லாஹுவின் தூதர் (ஸல்) நினைவு கூர்ந்தார்கள்  என்பதே உங்களுக்கு பதில் சொல்வதற்கு எனக்குத் தடையாக இருந்தது. ஏனென்றால் அல்லாஹுவின் தூதரின் ரகசியத்தை நான் பரப்பமாட்டேன். ஒருவேளை நபி அவர்கள் அவரைத் திருமணம் செய்யாமல் விட்டிருந்தால் நீங்கள் சொன்னதை நான் ஏற்றுக்கொண்டிருப்பேன் என்று கூறினார். நூல்: புகாரி 4005

இந்த ஹதீஸில் ஹஃப்ஸாவை அல்லாஹுவின் தூதர்(ஸல்) நினைவு கூர்ந்ததாக அபூபக்கர் (ரலி) அவர்கள் சொல்வது திருமணம் செய்துகொள்கிற விருப்பத்தை வெளிப்படுத்தியது, அதனால்தான் அவர்களை நீங்கள் திருமணம் செய்துகொள்கிறீர்களா என்ற கேள்விக்கு ஒன்றுமே சொல்லாமல் இருந்தார்கள். அதோடு நபி(ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவைத் திருமணம் செய்யாமல் விட்டிருந்தால் தானே ஹஃப்ஸாவை ஏற்றுக்கொண்டிருப்பேன் என்றும் சொல்கிறார்கள்.

இந்த ஹதீஸிலிருந்து, ஒரு பெண்ணை பெண் பேசுவதற்கு முன்பே திருமணம் செய்வதற்கான விருப்பம் கொள்வதும் அதனை நெருங்கிய நண்பரிடம் வெளிப்படுத்துவதும் ஆகுமானது என்பதை புரிகிறோம்.

மேற்கண்ட வசனங்கள் மூலமும் ஹதீஸ் மூலமும் புரியப்படும் நேசம் கொள்ளுதல் என்பது மனிதனின் சுய அதிகாரத்தை மீறி அவனது மனதில் ஏற்ப்படும் விருப்பம் தான், அன்னியப் பெண்ணை பார்ப்பதற்கும் பழகுவதற்கும் மார்க்கத்தில் பல கட்டுப்பாடுகள் இருந்தாலும் இது ஏற்ப்பட வாய்ப்புள்ளது.

ஒரு பெண் முகம் உட்பட தன்னை முழுமையாக மறைத்த நிலையில் இருந்தாலும் அவளது பேச்சின் மூலமோ அல்லது நல்ல நடத்தை மூலமோ ஒரு ஆண் கவரப்படுவதர்க்கு வாய்ப்பு உள்ளது. அல்லது அவளைப் பற்றி தெரியவரும் நல்ல விஷயங்களாலும் பிரியம் ஏற்ப்படலாம்.

 

இந்த விருப்பம் முறையான வழியில் திருமணத்தை நோக்கி முன்னேறுவதாக மட்டுமே இருக்க வேண்டும்.

காதலின் பெயரால், அன்பின் பெயரால் பெண்ணை நிர்பந்தம் செய்ய முடியாது...

زوج بريرة كان عبدا يقال له مغيث ، كأني أنظر إليه يطوف خلفها يبكي ودموعه تسيل على لحيته فقال النبي صلى الله عليه وسلم لعباس : يا عباس ، ألا تعجب من حب مغيث بريرة ومن بغض بريرة مغيثا ؟.

فلما رأى مغيث إصرار بريرة على صده ، وأنها عازمة على تركه ، استشفع بالنبي صلى الله عليه وسلم ، فشفع له عندها ، فقال النبي صلى الله عليه وسلم : لو راجعته ، فإنه زوجك وأبو ولدك . قالت : يا رسول الله ، تأمرني ؟ قال : إنما أنا أشفع . قالت : لا حاجة لي فيه

رواه البخاري

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: பரீரா (ரலி) கணவர் அடிமையாக இருந்தார். அவருக்கு முஃகீஸ் (ரலி) என்று பெயர் சொல்லப்படும். அவர் (பரீரா தம்மைப் பிரிந்துவிட நினைக்கிறார் என்பதை அறிந்த போது) தமது தாடியில் கண்ணீர் வழியும் அளவிற்கு அழுத வண்ணம் பரீராவிற்குப் பின்னால் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்ததை இப்போதும் நான் காண்பது போன்றுள்ளது.

       அப்போது நபி {ஸல்} அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் அப்பாஸ் அவர்களே! முஃகீஸ் பரீராவின் மீது வைத்துள்ள நேசத்தையும் பரீரா முஃகீஸின் மீது கொண்டுள்ள கோபத்தையும் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா? என்று கேட்டார்கள்.

முஃகீஸீடமிருந்து பரீரா பிரிந்துவிட்டபோது) நபி (ஸல்) அவர்கள் முஃகீஸிடம் நீ திரும்பிச் செல்லக் கூடாதா? என்று (பரீராவிடம்) கேட்டார்கள். அதற்கு பரீரா அல்லாஹ்வின் தூதரே! எனக்குத் தாங்கள் கட்டளையிடுகின்றீர்களா? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் (இல்லை) நான் பரிந்துரைக்கவே செய்கின்றேன் என்றார்கள். அப்போது பரீரா (அப்படியானால்) அவர் எனக்குத் தேவையில்லை என்று கூறிவிட்டார். ( நூல்: புகாரீ (5283) )

பரீரா (ரலி) அவர்கள் ஆரம்பத்தில் அடிமையாக இருந்தார்கள். அப்போது அவர்கள் முஃகீஸ் என்ற நபித்தோழரை திருமணம் செய்திருந்தார்கள். இவர்களும் அடிமையாகவே இருந்தார்கள். இந்நிலையில் பரீரா (ரலி) அவர்களை அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் விலைக்கு வாங்கி விடுதலை செய்தார்கள். இதனால் பரீரா (ரலி) அவர்கள் சுதந்திரமானவர்களானார்கள்.

இஸ்லாத்தின் சட்டப்படி ஒருவர் அடிமையிலிருந்து விடுதலையானால் அவர் விரும்பினால் முந்தைய கணவருடன் வாழலாம், விரும்பினால் அவரை விட்டுவிடவும் செய்யலாம். இதன் அடிப்படையில் பரீரா (ரலி) அவர்கள் முஃகீஸ் (ரலி) அவர்களுடன் வாழ விரும்பவில்லை.

ஆனால் முஃகீஸ் (ரலி) அவர்களோ பரீரா (ரலி) அவர்கள் மீது அளவுகடந்த அன்பை வைத்திருந்தார்கள். அவர்களுடன் வாழ விரும்பினார்கள். ஆனால் பரீரா (ரலி) அவர்கள் தொடர்ந்து மறுத்துவந்தார்கள். எனினும் பரீரா (ரலி) அவர்கள் பின்னால் அழுது கொண்டே சென்று தன்னுடன் வாழுமாறு கோரினார்கள். ஆனாலும் பரீரா (ரலி) அவர்கள் ஏற்கவில்லை.

முஃகீஸ் (ரலி) அவர்கள், பரீரா (ரலி) அவர்கள் மீது வைத்திருந்த அன்பைக் கண்டு இரக்கமுற்ற நபி (ஸல்) அவர்கள் சேர்ந்து வாழ்ந்தால் என்ன? என்று பரீரா (ரலி) அவர்களிடம் கூறினார்கள். இதைக் கேட்ட பரீரா (ரலி) அவர்கள், இது அல்லாஹ்வின் கட்டளையா? அல்லது உங்கள் சொந்த விருப்பமா? என்று கேட்கிறார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இது என் சொந்த விருப்பம்தான், நான் பரிந்துரைதான் செய்கிறேன்என்றார்கள்.

சுயநலம் வேண்டாம்…

கொலைக்கான இரண்டாம் காரணம் கொடூரமான "சுயநலம்".

கொலை செய்த குற்றவாளி "எனக்கு கிடைக்காத இவள் வேறு எவருக்கும் கிடைக்க கூடாது"  என்பதற்காகவே கொன்றேன் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளான்.

சுயநலம் என்பது மற்றவர்களின் ஆசைகள், ஆர்வங்கள், தேவைகள் மற்றும் உணர்வுகளைப் பற்றி சிந்திக்காமல், எப்போதும் தனக்காக மட்டுமே எல்லாவற்றையும் செய்ய விரும்புவதாகும்.

இந்த உலகில் உயிரோடு படைக்கப்பட்ட எல்லா உயிரினங்களும், தன்னை சுற்றி வாழும் மற்ற உயிரினங்கள் மீது ஏதோ ஒரு விதத்தில் அக்கறை கொள்ளக் கூடியதாகத்தான் படைக்கப்பட்டுள்ளன.

மனிதர்களின் பார்வையில் அக்கறை என்பது இரண்டு விதமாகப் பார்க்கப்படுகிறது. ஒன்று நான், எனது, என்னுடைய, எனக்காக, என் குடும்பம், என் உறவு, என் நண்பர்கள்என்ற சுயநலம் கலந்த சுயநல அக்கறையாகும்.

மற்றொன்று சமூகம் தவறான வழியில்  பயணிக்கும் பொழுது என் நாட்டவர், என் சமூகத்தார்என்று கூறும் சுயநலமில்லா பொதுநலம் கொண்ட சமூக அக்கறையாகும். 

இவ்விரண்டில் சுயநல அக்கறை என்பது எல்லா மனிதர்களிடத்திலும் ஒரு குறிப்பிட்டக் காலகட்டத்தில் தானாக உருவெடுத்துவிடும்.

உடனடியாக அந்த சுயநலத்தை கட்டுப்படுத்தி பிறர் நலன் நாடுவதின் பால் திருப்பி விட வேண்டும்.

சுயநலம் என்பது இஸ்லாத்திற்கு அப்பாற்பட்டது. பிறர்நலம் என்பது இஸ்லாத்திற்கு உட்பட்டது என இஸ்லாம் வரையறை செய்கிறது.

சுயநலம் என்பது நயவஞ்சகத்தன்மை. பொதுநலம், பிறர்நலம் என்பது இறைநம்பிக்கையின் ஓர் அடையாளம். என்று இஸ்லாம் கூறுகிறது.

பிறர் நலம் நாடுவது என்றால் தமக்கு விரும்புவதையே பிறருக்கு விரும்புவதும், பிறர் நலனை கெடுக்காமலிருப்பதும், அவருக்கு அனைத்து நலன்களையும், பலன்களையும் சேர்த்து வைப்பதும் ஆகும். அவருக்கு தம்மால் வரும் கெடுதிகளையும், பிறரால் ஏற்படும் கெடுதிகளையும் விட்டு தடுப்பது ஆகும்.  இவ்வாறு பிறர் நலனில் அக்கறையுடன் நடப்பவரே உண்மையான முஸ்லிம் ஆவார்.

பிற முஸ்லிம்கள் எவருடைய நாவு, கையின் தொல்லைகளில்இருந்து பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிமாவார் என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: புகாரி)

சுயநல சிந்தனை எப்போதும் ஆபத்தானதே! சுயநலம் உள்ளவர்களால் சில போது சமூகத்திற்கே ஆபத்து நேரிடும் வாய்ப்பு உண்டு.

உச்ச பட்ச தண்டனை உடனே வழங்க வேண்டும்...

குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டியதன் காரணம் என்ன?

1. குற்றம் செய்தவனுக்கு வழங்கப்படும் தண்டனை, மீண்டும் மீண்டும் குற்றம் செய்வதிலிருந்து அவனைத் தடுக்க வேண்டும்.

2. ஒரு குற்றவாளிக்கு வழங்கப்படும் தண்டனையைக் கண்டு மற்றவர்கள் குற்றம் செய்ய அஞ்ச வேண்டும்.

3. குற்றவாளியால் பாதிப்புக்கு உள்ளானவன் தனக்கு நீதி கிடைத்து விட்டதாக நம்ப வேண்டும். அவன் மன நிறைவு அடைய வேண்டும்.

குற்றவாளிகள் தண்டிக்கப்பட இந்த மூன்றைத் தவிர வேறு காரணங்கள் இருக்க முடியாது.

குற்றம் செய்தவர்கள் மீண்டும் குற்றம் செய்யாமலும், குற்றம் செய்ய நினைப்பவர்கள் அதன் பால் நெருங்காமலும் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் உலகமெங்கும் சிறைச் சாலைகள், காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள் எல்லாம் ஏற்படுத்தப்பட்டுள்ளன, குற்றவாளிகளுக்கு எந்த விதமான தண்டனையும் வழங்கக் கூடாது என்று உலகில் எந்த அரசாங்கமும் கூறுவதில்லை.

ஆனால் உலக நாடுகள் பலவற்றில் இயற்றப்பட்டுள்ள குற்றவியல் சட்டங்களால் குற்றங்களை குறைக்க இயலவில்லை.அது மட்டுமின்றி குற்றவாளிகளுக்கு சிறைச் சாலைகளில் செய்து தரப்படுகின்ற வசதிகள் குற்றங்களை அதிகப் படுத்தவே வழி வகுக்கின்றன.

ஒரு நாட்டின் அரசாங்கம் எத்தகைய சட்டங்களைக் கொண்டு வந்தாலும் இவை குறைந்த பாடில்லை.

இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.

ஒன்று, தவறு செய்வதைத் தூண்டக் கூடிய காரணிகள் ஒழிக்கப்படாமல் இருப்பது,

இரண்டு, தவறு செய்தவனுக்குத் தகுந்த தண்டனை வழங்கப்படாமலிருப்பது.

ஒரு புறம் பெண்கள் பாதுகாப்பு சட்டம் இயற்றுவதாக கூறிக்கொண்டு இன்னொரு புறம்  பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தீர்ப்பில் குற்றவாளியின் செயலை சாதாரணமாகவும், அதற்கு புதியதோர் விளக்கமும் தரும் போக்கு அதிகரித்து வருகிறது.

திரையுடன் பெண்களை தொடுவது தவறல்ல.
திருமணம் செய்யாமலேயே ஆணும் பெண்ணும் இணைந்து வாழலாம்.
கரு தரித்தால் விரும்பினால் கலைத்துக் கொள்ளலாம்.
திருமணம் ஆனாலும் மனம் விரும்பும் வேறு ஒருவருடன் உடலுறவு வைப்பது தவறல்ல.
ஆணும் ஆணும் பெண்ணும் பெண்ணும் இணைந்து வாழலாம்.
கற்பழித்து கொலை செய்தவனுக்கு பொது மன்னிப்பு (குஜராத் பில்கீஸ் பானு வழக்கு)
இவையனைத்தும் நம் நாட்டின் நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்பாகும்.

ஆனால், பெண்களுக்கு எதிரான அனைத்து குற்றங்களையும் குற்றச் செயல்களையும் இஸ்லாம் இல்லாமல் ஆக்கியது.

பெண்களுக்கு எதிராக குற்றச் செயல்கள் ஏற்படும் அனைத்து காரணிகளையும் தடை செய்தது.

பெண்கள் பிறப்பு கேள்விக்குறியான போது இஸ்லாம் பெண்கள் பிறப்பை  உறுதி செய்தது. பெண்கள் இறப்பை தடுத்து நிறுத்தியது!

பெண்கள் பாலியல் ரீதியாக அடைந்த அனைத்து வகையான தீமைகளுக்கும் முற்றுப் புள்ளி வைத்தது. எல்லாவற்றிற்கும் மேலாக குற்றங்களுக்கு உச்ச பட்ச தண்டனையை உடனடியாக வழங்கியது.

ஆகவே, எதிர்காலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையவும், இல்லாமலும் ஆக வேண்டுமானால் உச்சபட்ச தண்டனையை உடனே வழங்க அரசும், நீதிமன்றங்களும் முன்வர வேண்டும். 

1 comment:

  1. கேரளாவின் சிறப்பு NIA நீதிமன்றத்தால், ஐந்து முஸ்லிம் இளைஞர்கள் சட்டவிரோதமாக ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்தார்கள் என்று குற்றம் சாட்டப்பட்ட வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்கு 13வருடங்கள் தேவைப்பட்டிருக்கிறது.

    இந்த வழக்கில் எந்த விதமான நேரடி சாட்சியமும், பறிமுதல் செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட பொருட்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் எடுக்கப்பட்டது என்று சொல்வதற்கு இல்லை.

    நீதிமன்றத்தின் நேரம் தான் இந்த வழக்கில் வீணடிக்கப்பட்டிருக்கிறது என்று நீதிபதி கமானீஸ் அவர்கள் தீர்ப்பளித்திருக்கிறார்.

    2009ல் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. சட்டவிரோதமாக இந்தியாவிற்கு எதிராக போர் செய்வதற்காகவே ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்தார்கள் என்பது தான் இந்த வழக்கு.

    குற்றம் சாட்டபட்டவர்களுக்கு எதிராக எந்த வித முகாந்திரமும் இல்லாத்தால் இந்த வழக்கிலிருந்து ஐந்து பேரும் விடுவிக்கப்பட்டதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
    இந்த வழக்கிற்கும் 13 ஆண்டுகள் ஆகலாம் அல்லவா?

    ReplyDelete