Thursday 22 December 2022

ஈஸா இப்னு மர்யம் {அலை}

 

ஈஸா இப்னு மர்யம் {அலை}


மனிதன் சந்தோசத்திற்கும் மகிழ்ச்சியான தருணத்திற்கும் ஏங்குபவன் ஆவான். அதை அடைந்து கொள்ள மனிதன் படாதபாடுபடுவதை கண்கூடாகக் கண்டு கொண்டிருக்கிறோம்.

அதே நேரம் ஒவ்வொரு மனிதனைப் பொறுத்தவரையிலும் சந்தோஷத்தைத் தரும் விஷயங்கள் வித்தியாசப்படும். வேறுபடும். தனிநபர் சந்தோஷத்தைப் போன்றே ஒரு சமூகத்தின் மகிழ்ச்சியும் முக்கியமான ஒன்றாகும்.

ஒவ்வொரு மத்தைப் பின்பற்றுபவர்களுக்கும் அந்தந்த மதத்தோடு தொடர்பான பண்டிகைகளை், கொண்டாட்டங்கள்  வருடாவருடம் சுற்றிச் சுற்றி வந்துக் கொண்டேயிருக்கின்றன.

அந்த வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகையானது பரவலாக கிறிஸ்தவர்களால் வருடா வருடம் டிசம்பர் மாதத்தின் கடைசிப் பகுதியில் 25 -ம் தேதியன்று உலகின் எல்லாப் பகுதிகளிலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

கிறிஸ்துவர்களும்... கிறிஸ்துவமும்...

உலகில் கிறிஸ்துவர்கள் பெரும்பான்மையாக வாழும் 127 நாடுகளிலும் சிறுபான்மையாக வாழும் 71 நாடுகளிலும் வாழ்கிற 21 ம் நூற்றாண்டின் கணக்குப் படி 2.4 பில்லியன் கிறிஸ்துவர்கள் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

கிறிஸ்துவம் என்பது பல உட்பிரிவுகளையும் வழக்கங்களையும் திருச்சபைகளையும் கொண்டதாகும். இவை இடத்துக்கும் கலாச்சாரத்திற்கும் ஏற்றபடி வேறுபடும் கோட்பாடுகளை (doctrine) கொண்டதாகும்.

2001 ம் ஆண்டு கிறிஸ்துவ கலைக் களஞ்சியத்தின் படி உலகம் முழுவதும் சுமார் 33,830 கிறிஸ்துவப் பிரிவுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துவர்கள் பிரதான மூன்று பிரிவுகளாக வாழ்கின்றனர்.

1. ஆர்த்தோடக்ஸ் கிறிஸ்டியன் (ஒரிஜினல் ரோமை) சேர்ந்தவர்கள். தற்போது ரஷ்யாவில் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.

2. கத்தோலிக் கிறிஸ்டியன் தற்போதைய வாடிகன் ரோமை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுபவர்கள்.

3. புரோட்டஸ்டண்ட் கிறிஸ்டியன் சர்ச் ஆஃப் இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுபவர்கள்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் புரொட்டஸ்டண்ட் பிரிவில் தான் அதிகப்படியாக 780 உட்பிரிவுகளும் 276 கிளைப்பிரிவுகளும் உள்ளன.

இப்படி பல்வேறு பிரிவுகளாக பிரிந்திருக்கும் போதிலும் இவர்கள் அனைவரையும் இணைக்கும் மையப் புள்ளியாக கிறிஸ்துமஸ் பண்டிகை இருக்கிறது.

அனைவருமே அந்த நாளில் தான் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.

கிறிஸ்துமஸும்... பைபிளும்....

இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளாக கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர்-25இல் கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது. இதற்கும் பைபிளிலோ அல்லது ஆரம்பகால உண்மையான கிறிஸ்தவர்களிடமோ சரியான சான்றுகள் ஏதும் இருந்திருக்கவில்லை என்ற தகவல் ஆச்சரியமளிக்கிறது !

இயேசுவின் பிறப்பு பற்றியக் குறிப்பு பைபிளில் காணப்படுகிறது. ஆனால் எங்குமே அவரின் பிறந்தநாளைக் கொண்டாடச் சொல்லவில்லை.

“The customs of the people are worthless, they cut a tree out of the forest, and a craftsman shapes it with his chisel, they adore it with silver and gold, they fasten it with hammer and nails so it will not totter” (Jeremiah 10-3,4).

கிறிஸ்துஸ்துவுக்குப் பின் சுமார் நான்கு நூற்றாண்டுகள் வரை கிறிஸ்துமஸ் கொண்டாடப் பட்டிருக்கவில்லை. Oxford Guide to Ideas and Issues of the Bible (Bruce Metzger and Michael Coogan, editors, 2001) என்ற நூலில் கிறிஸ்துமஸ் பற்றியும், இயேசுவின் பிறந்த தினம் பற்றியும் கீழ்கண்டவாறு விளக்குகிறது,

Twenty-five December was by the fourth century [ A.D.] the date of the winter solstice, celebrated in antiquity as the birthday of Mithras [an ancient Persian god] and of Sol Invictus [the ‘unconquered’ sun god]. In the Julian calendar the solstice fell on 6 January, when the birthday of Osiris [the Egyptian god of the dead] was celebrated at Alexandria. By about 300 CE [ A.D.], 6 January was the date of the Epiphany in the East, a feast always closely related to Christmas” பார்க்க:http://www.gnmagazine.org/issues/gn43/bornchristmas.htm

டிசம்பர் 25 ஐ இயேசுவின் பிறந்த தினமாக கி.பி.354 இல் போப் லிபெரியஸால் பிரபலப்படுத்தப்பட்டு கி.பி,435இல் போப் சிக்ஸ்டஸ் III ஆல் முதல் கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது. இதே நாளில்தான் ரோமர்களும் பார்சியர்களும் தங்கள் கடவுளின் தினமாகக் கொண்டாடி வந்தனர், ரோமன் கத்தோலிக்க அறிஞர் மரியோ ரைட்டி (Mario Righetti ) சொல்வதுபோல்,

“To facilitate the acceptance of the faith by the pagan masses, the Church of Rome found it convenient to institute the 25th of December as the feast of the birth of Christ to divert them from the pagan feast, celebrated on the same day in honor of the ‘Invincible Sun’ Mithras, the conqueror of darkness” (Manual of Liturgical History, 1955, Vol. 2, p. 67). பார்க்க: http://www.ucgstp.org/lit/gn/gn008/gn008f03.htm

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு அடிப்படையாக இருக்கும் ஈஸா {அலை} அவர்களுக்கும் உங்களுக்கும் எனக்கும் இடையேயான நெருக்கமான தொடர்பை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

பாரம்பரியப் பிண்ணனி..

அல்குர்ஆன் போற்றிப் புகழும் பாரம்பரியமான இம்ரான்ஹன்னா தம்பதியரின் குடும்பத்தைச் சேர்ந்த, ஜகரிய்யா (அலை) அவர்களின் பராமரிப்பின் கீழ் வார்த்தெடுக்கப்பட்ட முன்மாதிரித் தாயின் அற்புதப்புதல்வரே இறைத்தூதர் ஈஸா {அலை} அவர்கள்.

وَضَرَبَ اللَّهُ مَثَلًا لِلَّذِينَ آمَنُوا امْرَأَتَ فِرْعَوْنَ إِذْ قَالَتْ رَبِّ ابْنِ لِي عِنْدَكَ بَيْتًا فِي الْجَنَّةِ وَنَجِّنِي مِنْ فِرْعَوْنَ وَعَمَلِهِ وَنَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ (11) وَمَرْيَمَ ابْنَتَ عِمْرَانَ الَّتِي أَحْصَنَتْ فَرْجَهَا فَنَفَخْنَا فِيهِ مِنْ رُوحِنَا وَصَدَّقَتْ بِكَلِمَاتِ رَبِّهَا وَكُتُبِهِ وَكَانَتْ مِنَ الْقَانِتِينَ

நம்பிக்கைகொண்ட பெண்களுக்கு(ம் இரு பெண்களை) அல்லாஹ் உதாரணமாகக் கூறுகிறான். (முதலாவது:) ஃபிர்அவ்னுடைய மனைவி (ஆசியா). அவள் (தன் இறைவனிடம்) ‘‘என் இறைவனே! உன்னிடத்தில் உள்ள சொர்க்கத்தில் எனக்கு ஒரு வீட்டை அமைத்துத் தா, ஃபிர்அவ்னை விட்டும் அவனுடைய செயலை விட்டும் என்னை பாதுகாத்துக் கொள், அநியாயக்கார சமுதாயத்தை விட்டும் என்னை பாதுகாத்துக்கொள்'' என்று பிரார்த்தனை செய்துகொண்டே இருந்தாள்.

(இரண்டாவது:) இம்ரானுடைய மகள் மர்யம். அவள் தன் கற்பை பாதுகாத்துக் கொண்டாள். ஆகவே, அவளுடைய கர்ப்பத்தில் நம் ரூஹிலிருந்து ஊதினோம். அவள் தன் இறைவனின் வசனங்களையும், வேதங்களையும் உண்மையாக்கி வைத்ததுடன் (இறைவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டவளாகவும் இருந்தாள். (அல்குர்ஆன் 66 : 11,12)

எத்தனை தன்மைகளை அல்லாஹ் கூறுகிறான். மர்யமை அல்லாஹ் தன்னுடைய உயர்ந்த அடியார்களில் தேர்ந்தெடுத்து,ஈமான் உள்ளவர்களுக்கு உதாரணமாக ஆக்கியிருக்கிறான்.

அதற்கு காரணங்களையும், அதற்கு அடிப்படை தன்மைகளையும் அல்லாஹ் சேர்த்து கூறுகிறான்.

முதலாவதாக, அவர் தன்னுடைய ஒழுக்கத்தை பாதுகாத்துக் கொண்டார். எனவே, நாம் படைத்த ரூஹை அவர்களில் ஊதினோம்.

அடுத்து கூறுகிறான், அவர் என்னுடைய வார்த்தைகளை எல்லாம் உண்மை படுத்தினார். எல்லா நேரத்திலும், எல்லா காலங்களிலும், எல்லா சூழ்நிலைகளிலும் தடுமாற்றமில்லாத ஈமான்.

நெருங்கிய தொடர்பு...

இந்த உலகில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஒரு இலட்சத்து இருபத்தி நான்காயிரத்துக்கும் மேற்பட்ட நபிமார்களை அனுப்பி இருக்கின்றான். இஸ்லாமிய மார்க்கத்தை பொறுத்தவரையில் அல்லாஹ் அனுப்பிய எல்லா தூதர்களையும் மதிக்க வேண்டும். அவர்களைக் கண்ணியப்படுத்த வேண்டும், அவர்களுடைய தூதுத்துவத்தை நம்பிக்கை கொள்ள வேண்டும். இது இஸ்லாமிய மார்க்கத்தின் பிரதானமான அடிப்படைகளில் ஒன்றாகும்.

ஒரு தூதரை ஏற்றுக் கொண்டு மற்றொரு தூதரை மறுப்பதோ, ஒரு தூதரை புகழ்ந்துரைத்து, இன்னொரு தூதரை இகழ்ந்துரைப்பதோ இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது அல்ல. அப்படியாக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கண்ணியப்படுத்திய தூதர்களில் ஒருவர் தான் ஈஸா {அலை}

இவர்களுக்கும் நமக்கும் இடையே நெருக்கமான ஒரு உறவு இருக்கிறது. காரணம், இவர்களுக்கு அடுத்து தான் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமக்கு தூதராக முஹம்மது {ஸல்} அவர்களை அனுப்பினான்.

இந்த இருவருக்கும் இடையில் வேறு ஒரு தூதர் அனுப்பப்படவில்லை. அதுமட்டுமல்ல, ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள், கடைசி ஒரு தூதர் வருவார், அவர் தூதர்களின் முத்திரையாக இருப்பார். அவருடைய பெயர் அஹமதாக இருக்கும் என்று கூறி நபி {ஸல்} அவர்கள் குறித்து அவருடைய வர்ணிப்புகள் இன்னன்ன, அவருடைய குணங்கள் இன்னன்ன என்ற முழு விபரங்களையும் தங்களை பின்பற்றிய மக்களுக்கு சொல்லி சென்றார்கள்.

இந்த அடிப்படையிலும் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் நமக்கு ஒரு நெருக்கமான உறவு இருக்கிறது.

அல்லாஹ்வுடைய தூதர் {ஸல்} அவர்கள் ஒரு முறை கூறினார்கள், யார் அல்லாஹ்வை வணக்கத்திற்குரிய இறைவனாக ஏற்றுக் கொண்டு, என்னை அவனுடைய தூதராக ஏற்றுக் கொண்டு, ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ்வின் 'குன்' என்ற கலிமாவால் படைக்கப்பட்டவர், அல்லாஹ்வின் புறத்திலிருந்து விஷேசமான முறையில் ரூஹ் ஊதப்பட்டவர் என்று நம்பிக்கை கொள்கிறாரோ அவர் சொர்க்கம் செல்வார்”.

இந்த ஹதீஸில் இறைத்தூதர்களில் விஷேஷமாக ஈஸா {அலை} அவர்களை அல்லாஹ்வுடைய தூதர் {ஸல்} சேர்த்து சொல்கிறார்கள்.

இன்னொரு பக்கம், ஏனைய இறைத் தூதர்களுடைய உம்மத்துகளெல்லாம் சென்று விட்டார்கள். எந்த நபியுடைய உம்மத்தும் இப்பொழுது பூமியில் வாழவில்லை. இரண்டு இறைத் தூதர்களுடைய உம்மத்தை தவிர.

1.             மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய உம்மத்தாகிய யஹூதிகள்.

2.             ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய உம்மத்தாகிய நஸராக்கள்.

இந்த இரண்டு உம்மத்தையும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் குர்ஆனில் பல இடங்களில் பல பெயர்களை கொண்டு குறிப்பிடுகிறான். 'அஹ்லுல் கிதாப்' -வேதமுடையவர்கள், வேதம் பெற்றவர்கள் என்றும் குறிப்பிடுகிறான்.

'பனூ இஸ்ராயீல்' -இஸ்ராயீலின் சந்ததிகள், குடும்பத்தார்கள், வமிசாவழிகள், பிச்சளங்கள் என்றும் கூறுகிறான். இஸ்ராயீல் என்றால் நபி யஅகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய மற்றொரு பெயர் இஸ்ராயீல். அவர்களுடைய வமிசத்தில் தோன்றியவர்கள் தான் யஹூதிகள்.

ஆகவே, இந்த இருவரையும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சோர்த்து பனூ இஸ்ராயீல் என்று கூறுகிறான்.

சில இடங்களில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த இரண்டு சாராரையும் பிரித்து 'அல் யஹூத்' -யஹூதிகள் என்று தனியாகவும், 'அன் நஸாரா' -நஸாராக்கள் என்று தனியாகவும் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

ஈஸா {அலை} அவர்களை அறிந்து கொள்வோம்!!!

ஈஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் அற்புதப்படைப்பாற்றலின் மகத்தான ஓர் எடுத்துக்காட்டு ஆவார்கள். 

அல்லாஹ்வின் வல்லமையை எடுத்துக் கூறும் அத்தாட்சிகளில் ஈஸா நபியின் பிறப்பும் ஒன்றாகும்.

وَالَّتِي أَحْصَنَتْ فَرْجَهَا فَنَفَخْنَا فِيهَا مِنْ رُوحِنَا وَجَعَلْنَاهَا وَابْنَهَا آيَةً لِلْعَالَمِينَ

தனது கற்பைக் காத்துக் கொண்ட (மர்யம் எனும்) பெண்ணிடத்தில் நமது உயிரிலிருந்து (ரூஹிலிருந்து) ஊதினோம். (அவள் கருத் தரித்தாள்) மர்யமையும் அவரது மகனையும் நாம் உலகத்தாருக்கு ஓர்  அத்தாட்சியாக்கினோம். ( அல்குர்ஆன்: 21:91 )

إِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ يُبَشِّرُكِ بِكَلِمَةٍ مِنْهُ اسْمُهُ الْمَسِيحُ عِيسَى ابْنُ مَرْيَمَ وَجِيهًا فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَمِنَ الْمُقَرَّبِينَ

மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்வார்த்தையின் மூலம் உமக்கு (ஒரு குழந்தையை அளிக்க) நற்செய்தி கூறுகிறான். அதன் பெயர் மர்யமின் மகன் ஈஸா அல் மஸீஹ் என்பதாகும். அவர் இவ்வுலகிலும் மறுமை யிலும் உயர்ந்த அந்தஸ்த்துடையவர்களில் உள்ளவராகவும் அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்களில் உள்ளவராகவும் இருப்பார் என வானர்கள் கூறியதை (எண்ணிப்பார்பீராக.)

தொட்டில் பருவத்தில் பேசுவார் எனும் முன்னறிவிப்பு...

وَيُكَلِّمُ النَّاسَ فِي الْمَهْدِ وَكَهْلًا وَمِنَ الصَّالِحِينَ (46) قَالَتْ رَبِّ أَنَّى يَكُونُ لِي وَلَدٌ وَلَمْ يَمْسَسْنِي بَشَرٌ قَالَ كَذَلِكِ اللَّهُ يَخْلُقُ مَا يَشَاءُ إِذَا قَضَى أَمْرًا فَإِنَّمَا يَقُولُ لَهُ كُنْ فَيَكُونُ (47)

மேலும் அவர் தொட்டில் பருவத்திலும் இளமை பருவத்திலும் மக்களிடம் பேசுவார். மேலும் அவர் நல்லவர்களில் உள்ளவருமாவார் என்றும் கூறினர்

அதற்கு மர்யம் எனது இரட்கசனே! எந்த ஆணும் என் னைத் தீண்டாத நிலையில் எனக்கு எவ் வாறு குழந்தை உருவாகும்? என்று கேட்டார். அவ்வாறே அது நடக்கும் என்று அவன் கூறினான். அல்லாஹ் தான் நாடுவதைப்படைக்கிறான். ஏதேனும் ஒரு காரியத்தைப் பற்றி அல்லாஹ் முடிவு செய்துவிட்டால் ஆகுகஎன்பான். உடனே அது ஆகிவிடும்.                          ( அல்குர்ஆன்: 3: 45-47 )

தொட்டில் குழந்தையாக இருக்கும் போது பேசியவர்:-

فَأَتَتْ بِهِ قَوْمَهَا تَحْمِلُهُ قَالُوا يَا مَرْيَمُ لَقَدْ جِئْتِ شَيْئًا فَرِيًّا يَا أُخْتَ هَارُونَ مَا كَانَ أَبُوكِ امْرَأَ سَوْءٍ وَمَا كَانَتْ أُمُّكِ بَغِيًّا فَأَشَارَتْ إِلَيْهِ قَالُوا كَيْفَ نُكَلِّمُ مَنْ كَانَ فِي الْمَهْدِ صَبِيًّا

(ஈஸாவை பெற்றெடுத்து) அவரை சுமந்தவராக தனது கூட்டத் தாரிடம் (மர்யம்) கொண்டு வந்த போது மர்யமே! விபரீதமான ஒரு செயலைச் செய்து விட்டாயே எனக் கூறினர்.ஹாரூனின் சகோதரியே உமது தந்தை கெட்ட மனிதராக இருக்குவுமில்லை. உமது தாயாரும் நடத்தைக் கெட்டவராக இருக்கவும் இல்லையே எனவும் கூறினர். அப்போது மர்யம் தம் குழந்தையை சுட்டிக்காட்னார். தொட்டில் குழந்தையாக இருப்பவரிடம் நாம் எப்படி பேச முடியும் என அவர்கள் கேட்டனர். ( அல்குர்ஆன்: 19:27.28.29. )

தொட்டில் குழந்தையாக இருக்கும் போது நபியாகஆக்கப்பட்டவர் இன்ஜீல் வேதம் கொடுக்கப்பட்டவர்:-

 

قَالَ إِنِّي عَبْدُ اللَّهِ آتَانِيَ الْكِتَابَ وَجَعَلَنِي نَبِيًّا

(தொட்டிலிலிருந்தவாறு) நிச்சயமாக நான் அல்லாஹ்வின் அடிமை யாவேன். அவன் எனககு வேதத்தை வழங்கி நபியாகவும் ஆக்கி யுள்ளான் என்று (அக்குழந்தை )கூறியது. ( அல்குர்ஆன்: 19: 30 )

ஈஸா நபியின் அற்புதப்படைப்பு ஆதம் நபியின் படைப்புக்கு ஒப்பானதாகும்.

إِنَّ مَثَلَ عِيسَى عِنْدَ اللَّهِ كَمَثَلِ آدَمَ خَلَقَهُ مِنْ تُرَابٍ ثُمَّ قَالَ لَهُ كُنْ فَيَكُونُ

அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணத்தைப் போன்றதாகும்.அவன் அவரை மண்ணிலிருந்து படைத்து பின்னர் அவருக்கு (குன்) ஆகுக என்றான். உடனே அவர் (மனிதராக) ஆகிவிட்டார்.( அல்குர்ஆன்: 3: 59 )

ஈஸா நபி அல்லாஹ்வின் அடிமையாவார்:-

قَالَ إِنِّي عَبْدُ اللَّهِ

நிச்சயமாக நான் அல்லாஹ்வின் அடிமையாவேன் என (ஈஸாவாகிய) அவர் கூறினார். (19:30)

لَنْ يَسْتَنْكِفَ الْمَسِيحُ أَنْ يَكُونَ عَبْدًا لِلَّهِ وَلَا الْمَلَائِكَةُ الْمُقَرَّبُونَ وَمَنْ يَسْتَنْكِفْ عَنْ عِبَادَتِهِ وَيَسْتَكْبِرْ فَسَيَحْشُرُهُمْ إِلَيْهِ جَمِيعًا

 

(ஈஸா) மஸீஹோ நெருக்கமான வானவர்களோ அல்லாஹ்வுக்கு அடிமையாக இருப்பதை; தரக்குறைவாகக் கருதமாட்டார்கள். யார் அல்லாஹ்வுக்கு அடிமையாக இருப்பதை தரக் குறைவாகக் கருதி பெருமையடிக்கின்றார்களோ அவர்கள் அனைவரையும் அல்லாஹ் (மறுமையில்) தன்னிடம் ஒன்று திரட்டுவான். (4:172)

ஈஸா நபி வணங்கத்தகுந்தவரல்லர்:-

لَقَدْ كَفَرَ الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهَ هُوَ الْمَسِيحُ ابْنُ مَرْيَمَ قُلْ فَمَنْ يَمْلِكُ مِنَ اللَّهِ شَيْئًا إِنْ أَرَادَ أَنْ يُهْلِكَ الْمَسِيحَ ابْنَ مَرْيَمَ وَأُمَّهُ وَمَنْ فِي الْأَرْضِ جَمِيعًا وَلِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا يَخْلُقُ مَا يَشَاءُ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

மர்யமுடைய மகன் மஸீஹ் தான் அல்லாஹ் என்று கூறியோர் (ஏக இரட்சகனான அல்லாஹ்வை) நிராகரித்து விட்டனர்.        மர்யமின் மகன் மஸீஹையும் அவரது தாயாரையும் பூமியில் உள்ள அனைவரையும் அல்லாஹ் அழிக்க நாடினால் அவனிடமிருந்து (அதைத் தடுக்க) சிறிதளவேனும் சக்தி பெற்றவர் யார்? என்று நபியே நீர் கேட்பீராக. வானங்கள் பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவைகளின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைப்பான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். ( அல்குர்ஆன்: 5: 17 )

لَقَدْ كَفَرَ الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهَ هُوَ الْمَسِيحُ ابْنُ مَرْيَمَ وَقَالَ الْمَسِيحُ يَا بَنِي إِسْرَائِيلَ اعْبُدُوا اللَّهَ رَبِّي وَرَبَّكُمْ إِنَّهُ مَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنْصَارٍ

நிச்சயமாக மர்யமின் மகன் அல் மஸீஹ் தான் அல்லாஹ் எனக் கூறியவர்கள் (ஏக இரட்சகனான அல்லாஹ்வை நிராகரித்து விட்ட னர். இஸ்ராயீலின் சந்ததிகளே! என் இறைவனும் உங்கள் இறை வனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சுவர்க்கத்தை அல்லாஹ் தடுத்து விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம் தான். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர் களும் இல்லை என்றே அல் மஸீஹ் கூறினார். ( அல்குர்ஆன்: 5: 72 )

ஈஸா {அலை) அல்லாஹ்வின் மகன் அல்ல மர்யம் (அலை) -ன் மகனாவார்):-

وَقَالَتِ الْيَهُودُ عُزَيْرٌ ابْنُ اللَّهِ وَقَالَتِ النَّصَارَى الْمَسِيحُ ابْنُ اللَّهِ ذَلِكَ قَوْلُهُمْ بِأَفْوَاهِهِمْ يُضَاهِئُونَ قَوْلَ الَّذِينَ كَفَرُوا مِنْ قَبْلُ قَاتَلَهُمُ اللَّهُ أَنَّى يُؤْفَكُونَ

உஸைர் அல்லாஹ்வின் மகன் என்று யூதர்கள் கூறு கின்றனர். மஸீஹ் (ஈஸா) அல்லாஹ்வின் மகன் என்று கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர். இது அவர்களது வாய்களால் கூறும் (வெற்று ) வார்த்தைகளாகும். இதற்கு முன் (ஏக இரட்சகனை) நிராகரித்தோரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப் போகின்றனர். அல்லாஹ் இவர் களை அழித்துவிடுவான். இவர்கள் எவ்வாறு திசைதிருப்பப் படுகின்றனர். ( அல்குர்ஆன்: 9: 30 )

مَا كَانَ لِلَّهِ أَنْ يَتَّخِذَ مِنْ وَلَدٍ سُبْحَانَهُ إِذَا قَضَى أَمْرًا فَإِنَّمَا يَقُولُ لَهُ كُنْ فَيَكُونُ

 

எந்தப் பிள்ளையையும்; தனக்கென எடுத்துக் கொள்வது அல்லாஹ் வுக்கு தகுமானதல்ல.அல்லாஹ் தூய்மையானவன். ஏதேனும் ஒரு விடயத்தை அவன் முடிவு செய்தால் அதற்கு ‘‘குன்’’ (ஆகுக) என்று கூறுவது தான் உடனே அது ஆகிவிடும்.( அல்குர்ஆன்: 19: 35 )

மூன்று கடவுளர்கள் எனும் கொள்கையை போதித்தார்களா?:-

لَقَدْ كَفَرَ الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهَ ثَالِثُ ثَلَاثَةٍ وَمَا مِنْ إِلَهٍ إِلَّا إِلَهٌ وَاحِدٌ وَإِنْ لَمْ يَنْتَهُوا عَمَّا يَقُولُونَ لَيَمَسَّنَّ الَّذِينَ كَفَرُوا مِنْهُمْ عَذَابٌ أَلِيمٌ

நிச்சயமாக அல்லாஹ் என்பவன் (பிதா சுதன் பரிசுத்த ஆவி என) மூவரில் ஒருவன் என்று கூறுபவர்களும் நிராகரித்து விட்டனர். (உண்மையாக) வணங்கப்படத் தகுதியானவன் ஒரே ஓரு இரட்சகனைத் தவிர வேறு யாருமில்லை. ஒரே இறைவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் (வேறு) யாருமில்லை. அவர்கள் தமது கூற்றிலிருந்து விலகிக் கொள்ளவில்லையானால் (ஏக இறைவனை) மறுப்போருக் குத் துன்புறுத்தும் வேதனை வந்தடையும். ( அல்குர்ஆன்: 5: 73 )

وَإِذْ قَالَ اللَّهُ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ أَأَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُونِي وَأُمِّيَ إِلَهَيْنِ مِنْ دُونِ اللَّهِ قَالَ سُبْحَانَكَ مَا يَكُونُ لِي أَنْ أَقُولَ مَا لَيْسَ لِي بِحَقٍّ إِنْ كُنْتُ قُلْتُهُ فَقَدْ عَلِمْتَهُ تَعْلَمُ مَا فِي نَفْسِي وَلَا أَعْلَمُ مَا فِي نَفْسِكَ إِنَّكَ أَنْتَ عَلَّامُ الْغُيُوبِ مَا قُلْتُ لَهُمْ إِلَّا مَا أَمَرْتَنِي بِهِ أَنِ اعْبُدُوا اللَّهَ رَبِّي وَرَبَّكُمْ وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيدًا مَا دُمْتُ فِيهِمْ فَلَمَّا تَوَفَّيْتَنِي كُنْتَ أَنْتَ الرَّقِيبَ عَلَيْهِمْ وَأَنْتَ عَلَى كُلِّ شَيْءٍ شَهِيدٌ إِنْ تُعَذِّبْهُمْ فَإِنَّهُمْ عِبَادُكَ وَإِنْ تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ

மர்யமின் மகன் ஈஸாவே! அல்லாஹ்வையன்றி, என்னையும் என் தாயாரையும் கடவுளாக்கிக் கொள்ளுங்கள் என்று நீர்தான் மக்களுக்கு கூறினீரா? என்று அல்லாஹ் (மறுமையில்) கேட்கும்போது யா அல்லாஹ்! மிகத் தூய்மையானவன். எனக்கு உரிமையில்லாத வார்த்தையை நான் கூற எனக்கு எந்த அதிகாரமுமல்லை. நான் அவ்வாறு கூறியிருந்தால் நிச்சயமாக அதை நீ அறிந்திருப்பாய். என் உள்ளத்தில் உள்ளதை நீ அறிவாய். உன் உள்ளத்தில் உள்ளதை நான் அறிய மாட்டேன். நிச்சயமாக மறைவானவற்றை நீயே அறிபவன் என்று அவர் கூறுவார்.

எனது இரட்சகனும் உங்கள் இரட்சகனுமாகிய அல்லாஹ்வை நீங்கள் வணங்குங்கள் என்று நீ (கூறும் படி)நீ எனக்கு கட்டளையிட்டதைத் தவிர வேறு எதனையும் அவர்களுக்கு நான் கூறவில்லை. நான் அவர்களுடன் இருந்தபோது அவர்களை அவதானித்துக் கொண்டிருந்தேன். என்னை நீ கைப்பற்றியதும் நீயே அவர்களை கண்கானிப்பவனாக இருந்தாய். நீ தான் யாவற்றையும் கண்காணிப்பவனாக இருக்கின்றாய்.

அவர்களை நீ தண்டித்தால், நிச்சயமாக அவர்கள் உனது அடியார் களே! அவர்களை நீ மன்னித்தால் நிச்சயமாக நீ மிகைத்தவன், ஞான மிக்கவன் (எனவும் அவர் கூறுவார்). ( அல்குர்ஆன்: 5: 116-118 )

يَا أَهْلَ الْكِتَابِ لَا تَغْلُوا فِي دِينِكُمْ وَلَا تَقُولُوا عَلَى اللَّهِ إِلَّا الْحَقَّ إِنَّمَا الْمَسِيحُ عِيسَى ابْنُ مَرْيَمَ رَسُولُ اللَّهِ وَكَلِمَتُهُ أَلْقَاهَا إِلَى مَرْيَمَ وَرُوحٌ مِنْهُ فَآمِنُوا بِاللَّهِ وَرُسُلِهِ وَلَا تَقُولُوا ثَلَاثَةٌ انْتَهُوا خَيْرًا لَكُمْ إِنَّمَا اللَّهُ إِلَهٌ وَاحِدٌ سُبْحَانَهُ أَنْ يَكُونَ لَهُ وَلَدٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَكَفَى بِاللَّهِ وَكِيلًا

வேதமுடையோரே! உங்கள் மார்க்கத்தில் வரம்பு மீறாதீர்கள். அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதை யும்) கூறாதீர்கள். மர்யமின் மகன் ஈஸா மஸீஹ் அல்லாஹ்வின் தூதரும் அவனது வார்த்தையுமாவார். அவ்வார்த்தையை அவன் மர்யமிடம் போட்டான். அவனிடமிருந்து வந்த ஓர் ஆத்மாவே அவர்! ஆகவே அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நீங்கள் விசுவாசி யுங்கள். (கடவுள்கள்;) மூவர் என்று கூறாதீர்கள். அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள். (அது) உங்களுக்குச் சிறந்ததாகும். நிச்சயமாக (வணங்கப்படத்தகுதியானவன்) அல்லாஹ ஒவனே. அவனுக்குப் பிள்ளை (மகன்) இருப்பதை விட்டும் அவன் மிகத்தூய்மையானவன். வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. பெறுப்பேற்க அல்லாஹ்வே போதுமானவன். ( அல்குர்ஆன்: 4: 171 )

ஈஸா நபி போதித்த கொள்கை என்ன? அவர்களின் பணி என்ன? 

ஈஸா நபி போதித்த கொள்கை ஓரிறைக் கொள்கை:-

إِنَّ اللَّهَ رَبِّي وَرَبُّكُمْ فَاعْبُدُوهُ هَذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ

நிச்சயமாக அல்லாஹ்வே எனது இரட்சகனும் உங்கள் இரட்சகனு மாவான். எனவே அவ னையே வணங்குங்கள். இதுவே நேரான வழியாகும் என ஈஸா கூறினார். (3:51)

ஈஸா நபி போதித்த மார்க்கம், இஸ்லாம்:-

شَرَعَ لَكُمْ مِنَ الدِّينِ مَا وَصَّى بِهِ نُوحًا وَالَّذِي أَوْحَيْنَا إِلَيْكَ وَمَا وَصَّيْنَا بِهِ إِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى أَنْ أَقِيمُوا الدِّينَ وَلَا تَتَفَرَّقُوا فِيهِ كَبُرَ عَلَى الْمُشْرِكِينَ مَا تَدْعُوهُمْ إِلَيْهِ اللَّهُ يَجْتَبِي إِلَيْهِ مَنْ يَشَاءُ وَيَهْدِي إِلَيْهِ مَنْ يُنِيبُ

நூஹுக்கு எதை அல்லாஹ் வலியுறுத் தினானோ அதையே உங்களுக்கும் மார்க்கமாக்கினான். (முஹம்மதே!) மார்க்கத்தை நிலை நாட்டுங்கள். அதில் பிரிந்து விடாதீர்கள் என்பதே உமக்கு நாம் வஹியாக அறிவித்ததும் இப்றாஹீம், மூஸா, ஈஸா ஆகியோருக்கு நாம் உபதேசித்ததுமாகும். நீர் எதை நோக்கி அழைக்கிறீரோ, அது இணை கற்பிப்போருக்குப் பழுவாக இருக்கின்றது. அல்லாஹ் தான் நாடியோரைத் தனக்காகத் தேர்வு செய்கிறான். தன்னிடம் மீளுவோரை நேர்வழியில் செலுத்துகிறான். ( அல்குர்ஆன்: 42: 13 )

إِنَّ الدِّينَ عِنْدَ اللَّهِ الْإِسْلَامُ وَمَا اخْتَلَفَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ إِلَّا مِنْ بَعْدِ مَا جَاءَهُمُ الْعِلْمُ بَغْيًا بَيْنَهُمْ وَمَنْ يَكْفُرْ بِآيَاتِ اللَّهِ فَإِنَّ اللَّهَ سَرِيعُ الْحِسَابِ

அல்லாஹ்விடம் நிச்சயமாக மார்க்கம் (என்பது) இஸ்லாம்; தான். வேதம் கொடுக்கப்பட்டோர் தம்மிடம் அறிவு வந்த பின்னரும் தமக்குள் காணப்பட்ட பொறாமையின் காரணமாகவேயன்றி   முரண்படவில்லை. எவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரிக்கின்றார்களோ (அவர் களை) நிச்சயமாக அல்லாஹ் விசாரணை செய்வதில் தீவிரமானவன். ( அல்குர்ஆன்: 3: 19 )

யூதர்களுக்கு மட்டும் தூதுவராக அனுப்பப்பட்டவர்:-

وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ

இஸ்ராயிலின் சந்ததிகளே! நிச்சயமாக நான் உங்க ளுக்கு அனுப் பப்பட்ட அல்லாஹ்வின் தூதராவேன் என மர்யமின் மகன் ஈஸா கூறினார். (61:6, 3:49, 61:14)

முந்தைய வேதங்களையும், பிந்தைய நபியின் வருகையையும் உண்மைப் படுத்தியவர்:-

மூஸா நபிக்கு கொடுக்கப்பட்ட வேதத்தை உண்மைப் படுத்தியவர்:

وَقَفَّيْنَا عَلَى آثَارِهِمْ بِعِيسَى ابْنِ مَرْيَمَ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيْهِ مِنَ التَّوْرَاةِ وَآتَيْنَاهُ الْإِنْجِيلَ فِيهِ هُدًى وَنُورٌ وَمُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيْهِ مِنَ التَّوْرَاةِ وَهُدًى وَمَوْعِظَةً لِلْمُتَّقِينَ

தமக்கு முன்னுள்ள தவ்ராத்தில் இருப்பதை உண்மைப்படுத்து பவராக மர்யமின் மகன் ஈஸாவை (நபிமார்களான) அவர்களின் அடிச்சுவட்டில் நாம் தொடரச் செய்தோம். மேலும் நாம் அவருக்கு இன்ஜீலையும் வழங்கினோம். அதிலே நேர்வழியும் ஒளியும் இருக்கின்றன. இன்னும் அது தனக்கு முன்னுள்ள தவ்ராத்தை உண்மைப்படுத்தக் கூடியதாகவும் நேர்வழியாகவும் பயபக்தியாளர்களுக்கு    நல்லுபதேசமாகவும் இருக்கிறது. ( அல்குர்ஆன்: 5:46, 3:48, 5:110, 57:27 )

முஹம்மத் நபி பற்றி ஈஸா நபியின் முன்னறிவிப்பு:

وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِنْ بَعْدِي اسْمُهُ أَحْمَدُ فَلَمَّا جَاءَهُمْ بِالْبَيِّنَاتِ قَالُوا هَذَا سِحْرٌ مُبِينٌ

இஸ்ராயீலின் சந்ததிகளே! நிச்சயமாக நான் எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை உண்மைப்படுத்துபவனாகவும் எனக்குப் பின்வரவுள்ள அஹ்மத் என்ற பெயருடைய தூதரைப் பற்றி நற்செய்தி கூறுபவனாகவும் உங்களிடம் அனுப்பப்பட்ட தூதராவேன் என்று மர்யமுடைய மகன் ஈஸா கூறியதை நபியே (முஹம்மதே) நீர்       நினைவூட்டுவீராக! அவர் தெளிவான சான்றுகளுடன் வந்த போது இது தெளிவான சூனியமே என அவர்கள் கூறினர். ( அல்குர்ஆன்: 61:6 )

கடந்த காலமும்... எதிர் காலமும்...

ஈஸா நபி சிலுவையில் அறையப்படவில்லை:

وَقَوْلِهِمْ إِنَّا قَتَلْنَا الْمَسِيحَ عِيسَى ابْنَ مَرْيَمَ رَسُولَ اللَّهِ وَمَا قَتَلُوهُ وَمَا صَلَبُوهُ وَلَكِنْ شُبِّهَ لَهُمْ وَإِنَّ الَّذِينَ اخْتَلَفُوا فِيهِ لَفِي شَكٍّ مِنْهُ مَا لَهُمْ بِهِ مِنْ عِلْمٍ إِلَّا اتِّبَاعَ الظَّنِّ وَمَا قَتَلُوهُ يَقِينًا

அல்லாஹ்வின் தூதராகிய மர்யமின் மகன் ஈஸா மஸீஹை நாங்கள் கொலை செய்தோம் என்று அவர்கள் கூறியதினாலும் (சபிக்கப் பட்டனர்) அவர்கள் அவரை கொல்லவுமில்லை. அவரைச் சிலுவையில் அறையவு மில்லை. மாறாக அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கபட்டான்.நிச்சயமாக அவர் விஷயத்தில் கருத்து முரண்பாடு கொண்டோர் அவர் பற்றிய சந்தேகத்தில் இருக் கின்றனர். வெறும் யூகத்தை பின் பற்றுவதை; த் தவிர அவரைப் பற்றி எவ்வித அறிவும் அவர்களுக்கு இல்லை. உண்மையாக அவர்கள் அவரைக் கொலை செய்யவில்லை; ( அல்குர்ஆன்: 4: 156-157 )

ஈஸா நபி அல்லாஹ்வின் பால் உயிரோடு உயர்த்தப்பட்டார்:-

بَلْ رَفَعَهُ اللَّهُ إِلَيْهِ وَكَانَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا

மாறாக, அவரை அல்லாஹ் தன்னள வில் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனாகவும் மிகைத்தவனாகவும் ஞானமிக்கவனாகவும் இருக்கிறான். ( அல்குர்ஆன்: 4:158, 3: 52-56 )

ஈஸா நபியின் மீள் வருகை உலக அழிவின் ஓர் அடையாளம்:-

وَإِنْ مِنْ أَهْلِ الْكِتَابِ إِلَّا لَيُؤْمِنَنَّ بِهِ قَبْلَ مَوْتِهِ وَيَوْمَ الْقِيَامَةِ يَكُونُ عَلَيْهِمْ شَهِيدًا

வேதமுடையோரில் எவரும் (அவர் பூமிக்கு வந்து ) மரணிப்பதற்கு முன்னரே அவரை நம்பிக்கை கொள்ளாமல் இருக்கமாட்டார்கள். மறுமை நாளிலோ அவர் (வேதமுடைய) அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்பவராக இருப்பார். (4:159)

وَإِنَّهُ لَعِلْمٌ لِلسَّاعَةِ فَلَا تَمْتَرُنَّ بِهَا وَاتَّبِعُونِ هَذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ

நிச்சயமாக (ஈஸாவாகிய) அவர் இறுதிநாளின் அடையாளமாவார். அது குறித்து நீங்கள் சந்தேகம் கொள்ள வேண்டாம். நீங்கள் என்னையே பின்பற்றுங்கள். இதுவே நேர்வழியாகும் (என்று நபியே நீர் கூறும்) ( அல்குர்ஆன்: 43: 61 )

இது தான் வரலாறு.. இது தான் உண்மை..

 ( اَلۡحَـقُّ مِنۡ رَّبِّكَ فَلَا تَكُنۡ مِّنَ الۡمُمۡتَرِيۡنَ‏ ﴿۶۰

இதுவே ஈஸா நபி விஷயமாக இறைவனிடமிருந்து வந்த உண்மை வரலாறாகும். அதுபற்றிய விவாதத்திற்கு இனி அவசியமில்லை.

  فَمَنۡ حَآجَّكَ فِيۡهِ مِنۡۢ بَعۡدِ مَا جَآءَكَ مِنَ الۡعِلۡمِ فَقُلۡ تَعَالَوۡا نَدۡعُ اَبۡنَآءَنَا وَاَبۡنَآءَكُمۡ وَنِسَآءَنَا وَنِسَآءَكُمۡ وَاَنۡفُسَنَا وَاَنۡفُسَكُمۡ ثُمَّ نَبۡتَهِلۡ فَنَجۡعَل لَّعۡنَتَ اللّٰهِ عَلَى الۡكٰذِبِيۡنَ‏ ﴿۶۱

(நபியே!) இதுபற்றிய முழு விபரமும் உமக்கு வந்து சேர்ந்த பின்னரும் எவரேனும் ஒருவர் உம்மிடம் இதைக் குறித்து தர்க்கம் செய்தால்: வாருங்கள்! எங்கள் புதல்வர்களையும், உங்கள் புதல்வர்களையும், எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும், எங்களையும் உங்களையும் அழைத்து (ஒன்று திரட்டி வைத்துக் கொண்டு) 'பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்என்று நாம் பிரார்த்திப்போம்!"" என நீர் கூறும். ( அல்குர்ஆன்: 3: 60, 61, 62 )

 اِنَّ هٰذَا لَهُوَ الۡقَصَصُ الۡحَـقُّ ‌‌ۚ وَمَا مِنۡ اِلٰهٍ اِلَّا اللّٰهُ‌ؕ وَاِنَّ اللّٰهَ لَهُوَ الۡعَزِيۡزُ الۡحَكِيۡمُ‏ ﴿۶۲

நிச்சயமாக இதுதான் உண்மையான வரலாறு, அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை, நிச்சயமாக அல்லாஹ் - அவன் யாவரையும் மிகைத்தோன், மிக்க ஞானமுடையோன்.

கிறிஸ்துமஸ் வாழ்த்துகக்கூறுவது பற்றி மார்க்க அறிஞர்கள்-:

ஒரு முஸ்லிம் வாழ்த்துக்கள் கூறுவதாலேயே இறைவனை மறுத்தவனாக மாட்டான். ஆனால் ஒரு பாவத்தைச் செய்தவனாக ஆகும் வாய்ப்புண்டு. ஏனெனில், ஒரு கிறிஸ்தவர் இயேசுவை கடவுளின் குமாரர் என்று நம்புகிறார். அவருடைய திருநாள் அன்று அவருக்கு வாழ்த்துக் கூறுவதன் மூலம் நாம் அவர் நம்பிக்கைக்கு அங்கீகாரம் அளித்தவராகிறோம்.

எனவே, இறுதி வேதம் குர்ஆன் சொல்லுகின்ற முறையில் ஈஸா நபியை கிறிஸ்தவர்கள் நம்பவுமில்லை ஏற்கவுமில்லை.

 

அவர்களது நம்பிக்கைகளும் கொள்கைகளும் தவறானவை என்பதை புரிந்து கொள்வதோடு நபிமார்களின் ஈமான் தொடர்பான அம்சங்களை முழுவதுமாக அறிந்து நம்பிக்கை கொள்வோம்!!

5 comments:

  1. மாஷா அல்லாஹ் அறிந்த செய்திகளாக இருந்தாலும் புதிய கோணத்தில் தனக்கே உரிய பாணியில் தரமாக தந்துள்ளீர்கள்

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ் சிறப்பான படைப்பு அல்லாஹுத்தஆலா தங்களுக்கு மென்மேலும் பரக்கத் செய்வானாக

    ReplyDelete
  3. அருமையான பயான் பாரகல்லாஹ்

    ReplyDelete