Thursday 9 February 2023

நில நடுக்கம்! பாடங்களும்.. படிப்பினைகளும்…

 

நில நடுக்கம்! பாடங்களும்.. படிப்பினைகளும்…


துருக்கி மற்றும் சிரியாவில் திங்கள் கிழமை அன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில்7.8 ஆக பதிவாகியது. இது அந்நாட்டில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனையடுத்து திங்கட்கிழமை பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கமும் 6.0 ரிக்டர் அளவில் மூன்றாவது நிலநடுக்கமும் உணரப்பட்டுள்ளது. இந்த நிலையில் இரண்டாவது நாளான செவ்வாய் கிழமையன்றும் மீண்டும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5 என பதிவாகியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அதன்பின் 5 வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில்  5.4 ஆக பதிவாகியுள்ளது. இந்த நில நடுக்கம் லெபனான் மற்றும் சைப்ரஸ் வரை உணரப்பட்டது. தொடர்ந்து டஜன் கணக்கில் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது.

இரு நாடுகளிலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் அடுத்தடுத்து நிலநடுக்கம் உணரப்படுவதால் மக்கள் மிகவும் அச்சத்தில் இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியா உட்பட உலகின் 45 நாடுகள் நிவாரணப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள இந்த வேளையில் இரு நாடுகளிலும் 30000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வரும் தகவல்கள் உள்ளபடியே கவலையைத் தருகிறது.

இந்த நிலநடுக்கம் இப்பகுதியில் இதுவரை இல்லாத மிகவும் பலமான நிலநடுக்கம் என்பதோடு, கடந்த 50 ஆண்டுகளில் மிக பயங்கரமானதாகும்.

துருக்கியின் 10 மாகாணங்களில், வானளாவிய கட்டிடங்கள் மற்றும் மருத்துவமனைகள் உட்பட 11,000 க்கும் அதிகமான கட்டிடங்கள் அந்த நிலநடுக்கத்தில் அழிக்கப்பட்டன.

மொத்தத்தில், 1.4 மில்லியன் குழந்தைகள் உட்பட 23 மில்லியன் பேர் இந்த நிலநடுக்கத்தால் நேரடியாக பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு (WHO) மதிப்பிடுகிறது. 

'இது இப்போது உடனடியாக செயல்பட வேண்டிய தருணம்' என்று WHO இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேஸ் ஓர் அறிக்கையில் தெரிவித்தார். 'கடந்து செல்லும் ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு மணி நேரமும், உயிரோடிருப்பவர்களைக் கண்டு பிடிப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன  என்றார்.

துருக்கி தீவிரமான பூகம்ப மண்டலங்களில் ஒன்றாக உள்ளது.  மேலும், உலகிலேயே அதிக நிலநடுக்கத்தால் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஜப்பானுக்கு அடுத்து துருக்கியும் ஒன்றாகும். ஏனென்றால் துருக்கி அனடோலியன் தட்டில் அமர்ந்திருப்பது தான் காரணம்.

மேலும், தற்போதைய நில நடுக்கத்தால் துருக்கி உலக வரைபடத்தில் இருந்து 10 மீட்டர் நகர்ந்துள்ளதாக ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இத்தாலி நிலநடுக்க ஆய்வாளர், புவியியல் வல்லுனர் கார்லோ டோஃலோனி வெளியிட்டுள்ள அறிக்கையில், துருக்கியின் நில அடுக்குகள் 10 மீட்டர் வரை நகர்ந்து உள்ளன. துருக்கி மொத்தமாக இதனால் 10 மீட்டர் அல்லது அதற்கும் மேல் நகர்ந்து இருக்கலாம். சிரியா இதைவிட கொஞ்சம் குறைவாக நகர்ந்து இருக்கலாம். ஆனால் இது முதல் கட்ட தகவல்களின் அடிப்படையில்தான் சொல்லப்படுகிறது. முழுமையான விவரங்கள் கிடைத்த பின் துருக்கி எவ்வளவு தூரம் நகர்ந்தது என்று சொல்ல முடியும் என்று கூறப்பட்டு உள்ளது. மொத்தம் 190 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட பகுதிகளில் நிலம் அப்படியே பெயர்ந்து, வெடித்து உள்ளது. இதனால் மொத்த துருக்கியும் மொத்தமாக இதனால் பாதிக்கப்பட்டு உள்ளது. இதில் வெளியே தெரிந்த நிலநடுக்கத்தை விட தெரியாத நிலநடுக்கங்கள் 5-6 சிறிய அளவில் இடை இடையே ஏற்பட்டு உள்ளன. இதனால் துருக்கி தற்போது இருக்கும் இடத்தில் இருந்து லேசான தென் மேற்கு திசையில் நகர்ந்து உள்ளது, என்று அந்த ஆய்வாளர் குறிப்பிட்டு உள்ளார். ( நன்றி: ஒன் இந்தியா, 09/02/2023 )

துருக்கி நில நடுக்கத்திற்கான காரணங்கள் என்ன?

1.   முன்னெச்சரிக்கை, விழிப்புணர்வு இன்மை..

பயங்கரமான இந்த நிலநடுக்கம் ஏற்படுவதை முன்கூட்டியே ஒருவர் துல்லியமாக கணித்துள்ளார். ஆம், நெதர்லாந்தை சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளரான பிரான்க் ஹுகர் பீட்ஸ் என்பவர் புவியியல் ஆய்வு நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார்.

இவர் கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி தனது டவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் கூறியிருப்பதாவது மத்திய-தெற்கு துருக்கி, சிரியா, ஜோர்டான், லெபனான் போன்ற பகுதிகளில் 7.5 என்ற ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் கூடிய விரைவிலோ அல்லது தாமதமாகவோ வரும்எனக் கூறியிருந்தார். ஆனால் அதனை அப்போது யாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

2.   பாதுகாப்பான கட்டமைப்பும், கட்டிட அமைப்பும் இன்மை...

உலகின் அதிக நில அதிர்வு ஏற்படுவதில் இரண்டாம் இடத்தில் உள்ள 'ஆல்பைட் பெல்ட்' (Alpide Belt) என்றழைக்கப்படும் அந்தப் பகுதியில் தான் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. பெரும் அபாயப் பகுதியில் அமைந்துள்ள அது, நிலநடுக்க பேரிடர்களுக்கு நீண்டகால முன்வரலாறைக் கொண்டுள்ளது. உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, துருக்கியில் 1999 மர்மாரா நகரின் பூகம்பத்தில் கிட்டத்தட்ட 18,000 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பத்தாயிரக் கணக்கானவர்கள் காயமடைந்தனர்.

தற்போதைய பேரிடர் ஏற்பட இருந்ததைக் குறித்து விஞ்ஞானிகள் அதிகரித்தளவில் எச்சரித்துள்ளனர் என்பதோடு, கட்டிடங்களைப் பலப்படுத்துமாறும் அவ்வாறு செய்யவில்லை என்றால் அதற்காக உயிர்களின் பயங்கர விலை கொடுக்க வேண்டி வரும் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

ஜனவரி 2020 இல் துருக்கியில் ஏற்பட்ட எலாஜிக் (Elazığ) நகர நிலநடுக்கத்திற்குப் பின்னர், புவியியல் பொறியாளர்கள் சபைத் தலைவர் ஹுசெயின் ஆலன் கூறுகையில், இஸ்தான்புல் தவிர, நேற்றைய நிலநடுக்கத்தால் பெரும் சேதமடைந்த கஹ்ராமன்மாராஸ் மற்றும் ஹாடே உட்பட 18 நகர மையங்கள், 'நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறு கொண்ட முக்கிய அபாயப் பகுதிகளாக உள்ளன என்றார். ஒரு பெரிய நிலநடுக்கத்தில், அங்கே உள்ள கட்டிடங்கள் 'அழிக்கப்படலாம்' என்று அவர் தெரிவித்தார்.

துருக்கியின் மிகவும் மதிப்பிற்குரிய புவியியலாளர்களில் ஒருவரும், நிலநடுக்க அதிர்வுகளைத் தாங்கும் நகரங்களைக் கட்டமைப்பதை அறிவுறுத்துபவருமான பேராசிரியர் டாக்டர் நாசி கோருர், ஜப்பானுக்கும் துருக்கிக்கும் இடையிலான ஒப்பீட்டை நீண்ட காலமாக சுட்டிக் காட்டியுள்ளார்.

2011 இல் 7.4 ரிக்டர் அளவிலான ஃபுக்குஷிமா நிலநடுக்கத்தில் வெறும் நான்கு பேர் மட்டுமே உயிரிழந்தனர், அதேவேளையில் 1999 இல் அதே அளவில் ஏற்பட்ட மர்மாரா நிலநடுக்கத்தில் சுமார் 20,000 பேர் இறந்தனர் என்றவர் எழுதினார். தற்போதைய கஹ்ரமன்மராஸ் நிலநடுக்கத்தில் ஏறக்குறைய அனைத்து மரணங்களையுமே தடுத்திருக்கலாம் என்பதை இது அடிக்கோடிடுகிறது.

கோருர் இந்தப் பிராந்தியத்தில் மிகப் பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கான அபாயத்தைப் பல ஆண்டுகளாக கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார். அந்த நிலநடுக்கத்திற்குப் பின்னர் நேற்றிரவு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறுகையில், இந்த இழப்புகளைத் தடுக்க அவரது குழு ஒரு திட்டத்தைத் தயாரித்திருந்ததாகவும், ஆனால் அதிகாரிகள் அதை புறக்கணித்து விட்டதாகவும் கோருர் கூறினார்.

துருக்கி எதிர் கொள்ள இருக்கும் இன்னுமோர் நில நடுக்கம்?

கோருர் மீண்டும் ஒரு மிகப் பெரிய இஸ்தான்புல் நிலநடுக்கம் குறித்தும் எச்சரித்தார். குறைந்தபட்சம் 16 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த மிகப்பெரும் நகரில் 7 ரிக்டர் அளவிலான ஒரு நிலநடுக்கம் எதிர்பார்க்கப்படுகிறது. முதலாளித்துவ எதிர்க்கட்சியான குடியரசு மக்கள் கட்சி (CHP) கட்டுப்பாட்டில் உள்ள இஸ்தான்புல் நகர சபை, வெறும் 14,000 உயிரிழப்புகள் 'மட்டும்' ஏற்படுத்தும் என்று வாதிடுகிறது. உண்மையான இறப்பு எண்ணிக்கை 400,000 ஐ தாண்டும் என்று கோருர் கணிக்கிறார்.

நிலநடுக்க அதிர்வுகளைத் தாங்கும் வகையான வீடுகளைக் கட்டுவது ஒரு முக்கிய உலகளாவிய பிரச்சினையாகும்,

சர்வதேச பேரிடர் அபாய விஞ்ஞான இதழில் (International Journal of Disaster Risk Science) 2021 இல் சீன, ஆஸ்திரேலிய, அமெரிக்க, கனேடிய மற்றும் ஜேர்மன் விஞ்ஞானிகள் எழுதிய ஒரு கட்டுரை, 2015 இல் அதிர்ச்சிகரமாக 1.5 பில்லியன் பேர் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிப்பதைக் கண்டறிந்துள்ளது. இந்த எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. முக்கியமாக ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ், மத்திய கிழக்கு, மத்திய ஆசியா மற்றும் தெற்காசியாவின் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் இது அதிகரித்து வருகிறது.  

நில நடுக்கம் என்றால் என்ன?

சில வினாடிகள், அல்லது சில நிமிடங்கள். அவ்வளவுதான் நிலநடுக்கத்தின் வாழ்க்கை. ஆனால் அதற்குள் பல்லாயிரம் உயிர்களைக் காவு வாங்கி விடுகிறது நிலநடுக்கம். 

பூமியின் மேற்பரப்பு (Lithosphere) பெரும் பாளங்களாக அமைந்துள்ளது.

இவை நகரும் பிளேட்டு களாக இருக்கிறது. இந்தப் பிளேட்டுகள் ஒரு வருடத் திற்கு ஒரு செ.மீ. முதல் சுமார் 13 செ.மீ. வரை நகர்கிறது. அவ்வாறு நகரும்போது நாம் நில நடுக்கத்தை உணர்கிறோம். 9.0 ரிக்டருக்கும் கூடுதலானவை பெரும் பாதிப்பை ஏற்படுத்துவன ஆகும். ஆகவே, நிலநடுக்கம். எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வரலாம்.

நிலநடுக்கம் அல்லது பூகம்பம் என்பது பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகி அதனால் சக்தி வெளியேற்றப்படும் போது, தளத்தட்டுகள் நகர்வதனால் இடம்பெறும் அதிர்வைக் குறிக்கும். இதனை டெக்டோனிக் தட்டுகள் என்று கூறலாம். இந்த அதிர்வுகள் ரிக்டர் அளவு நிலநடுக்கமானியினால்  அளக்கப்படுகிறது. அந்த வகையில் அதிர்வுகள் 3 ரிக்டருக்கும் குறைவாக இருந்தால் நிலநடுக்கங்களை உணர்வது கடினமாகும். லேசான நிலநடுக்கம் ஏற்படும். அதேவேளை 7 ரிக்டருக்கும் கூடுதலான அதிர்வுகள் பதிவாகியிருந்தால் அது பூமியில் பலத்த சேதம் மற்றும் சுனாமியை ஏற்படுத்தும்.

டெக்டோனிக் தட்டு என்றால் என்ன, அவற்றின் இயக்கம் பூகம்பங்களை எவ்வாறு ஏற்படுத்துகிறது?

பூமியின் பல பகுதிகளிலும், புவி அதிர்ச்சிகள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கின்றன. எனினும் அந்த அதிர்ச்சி ஓரிடத்தில் மிகுதியானால், அதைப் பூகம்பம் என்பர். நமது பூமியின் லித்தோஸ்பெரிக் மேற்பரப்பு  டெக்டோனிக் தட்டை உருவாக்குகிறது. 

இந்த தட்டுகள் பெரிய, ஒழுங்கற்ற வடிவிலான திடமான பாறைகளாகும். அவை கண்டம் மற்றும் கடல்சார் லித்தோஸ்பியரால் ஆனவை. 

அதாவது, பூமியின் மேற்பரப்பு, மலைகளும், குன்றுகளும், பள்ளத்தாக்குகளும், சமவெளிகளும், ஆறுகளும், கடல்களும் நிறைந்தது. கடினமான பாறைகள் காற்றாலும், ஆறுகளாலும் சிறிது சிறிதாக உடைக்கப்பட்டு மலையடிவாரங்களில் தட்டுகளாக படிகின்றன. இதே செயல்முறை ஆண்டுதோறும் நடப்பதால் டெக்டோனிக் தட்டுகள் ஒன்றன் மீது ஒன்றாகப் படிகின்றன.

இந்த டெக்டோனிக் தட்டுகள் தொடர்ந்து மெதுவாக நகரும் போது அவை உராய்வு காரணமாக அவற்றின் விளிம்புகளில் சிக்கிக்கொள்ளும். விளிம்பில் உள்ள அழுத்தம் உராய்வைக் கடக்கும்போது, அது பூகம்பத்தை விளைவிக்கும். 

அத்தகைய எதிர்வினை பூமியின் மேலோடு வழியாக அதாவது பூமியின் இடைபடுகை வழியாக பயணிக்கும் அலைகளின் வடிவத்தில் ஆற்றலை வெளியிடுகிறது. இது இறுதியில் பூமியின் மேற்பரப்பான நிலப்பரப்பை  உலுக்குகிறது. இந்த பூகம்பம் சம அளவிலான ஒரே மூலத்தால் உருவாக்கப்பட்டு பூமிக்குள்ளேயே அல்லது அதன் மேற்பரப்பில் பரப்பப்படுவதால் அவை நில அதிர்வு அலைகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

பூகம்பம் எதை உருவாக்குகிறது?

பூகம்பங்கள் நான்கு முக்கிய வகை மீள் அலைகளை உருவாக்குகின்றன. அவற்றில் இரண்டு பூமிக்குள் பயணிக்கும் உடல் அலைகள் என்று அழைக்கப்படுகின்றன. மற்ற இரண்டும் பூமியின் மேற்பரப்பில் பயணிப்பதால் மேற்பரப்பு அலைகள் என்று அழைக்கப்படுகின்றன. நில அதிர்வு அலைகளின் வீச்சு மற்றும் அதிர்வெண் ஆகியவை நிலநடுக்கமானி எனப்படும் ஒரு கருவியால் பதிவு செய்யப்படுகிறது.

பூமிக்கடியில் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு போன்றவற்றை சேகரிப்பதற்காக மனிதனால் செயற்கையான முறையில் சிறிய பூகம்பங்களும் உருவாக்கப்படுகின்றன. நில அதிர்வு ஆய்வுகளின்படி, செயற்கையான நில அதிர்வு அலைகள் மூலம் தான் சில புதைபடிவ எரிபொருள் தொழில்கள் இயற்கை எரிவாயு மற்றும் நிலக்கரி பற்றிய தரவைக் கண்டுபிடிக்கின்றன என்பது தெரியவந்துள்ளது. 

இயற்கையான பூகம்பங்கள் பொதுவாக புவியியல் மாற்றங்களால் நிகழ்கின்றன. அவை பூமியின் மேலோட்டத்தின் அதாவது இடைப்பகுதியில் உள்ள பாறைகளில் ஒரு பிளவை ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாகவே பூமியின் நிலப்பரப்பில் அதிர்வுகள் ஏற்படுகின்றன. ( நன்றி:- NEWS 18 tamil JANUARY 23, 2021 )

சன்மார்க்க ரீதியில் முஸ்லிம்களாகிய நாம் சிந்திக்க வேண்டிய அம்சங்களும் உள்ளன.

1.பூமி மனிதனுக்காகவே பிரத்யேகமாக படைக்கப்பட்ட ஒரு படைப்பு..

நாம் வாழும் பூமியின் மேற்பகுதி சுமார் 70 சதவீத (கடல்) நீராலும், 30 சதவீதம் நிலத்தாலும் சூழப்பட்டுள்ளது. 

வானத்தைப் போலவே பூமியிலும் பல அடுக்குகள் இருப்பதாக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் குர்ஆனில் கூறிய வசனத்தை மெய்ப்பிக்கும் வகையில் இன்றைய விஞ்ஞானிகள் ஆய்வும் அமைந்துள்ளது.

‘‘அல்லாஹ்தான் ஏழு வானங்களையும் இன்னும் பூமியில் இருந்தும் அவற்றைப் போலவும் படைத்தான். அவற்றின் (வானங்கள், பூமியின்) இடையே அவன் கட்டளை இறங்கிக் கொண்டே இருக்கிறது’’ (திருக்குர்ஆன்–65:12)

ஏழு வானங்களையும், பூமியில் அவற்றைப் போலவும் படைத்ததாகத் திருமறையில் அல்லாஹ் குறிப்பிடும்  இந்த அம்சத்தை  நாம் வாழும் இந்தப் பூமியைப் போன்றே இந்த பிரபஞ்சத்தில் மேலும் ஆறு பூமிகள் இருப்பதாக இந்த வசனத்திற்கு நாம் பொருள் விளங்கிக் கொள்ளக்கூடாது. 

மாறாக, எவ்வாறு விண்ணில் ஏழு வானங்கள் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளதோ, அவ்வாறே பூமியும் அதுபோன்று படைக்கப்பட்டுள்ளது என்றே பொருள் கொள்ள வேண்டும்.

நாம் வாழும் பூமியின் கட்டமைப்பு என்பது நான்கு முக்கிய அடுக்குகளைக் கொண்டுள்ளது. இவை மேல் அடுக்கான (கிரஸ்ட்) பூமித்தட்டு, அதற்குக் கீழே அமைந்துள்ள மேன்டில்எனப்படும் இரண்டாம் அடுக்கு, (இன்னர் கோர், அவுட்டர் கோர்,) உட்கரு எனப்படும் மைய அடுக்கு ஆகும். 

பூமியின் அடுக்குகளில் இந்த நான்கு அடுக்குகள் முக்கியமானவை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இன்னும் சில அடுக்குகள் இருப்பதை விஞ்ஞானிகள் ஒப்புக் கொண்டாலும் அதை பிரித்தறியவில்லை.

 

பல அடுக்குகளைக் கொண்ட இந்த பூமியில் தான் மனிதர்களான நம்மை அவனுடைய பிரதிநிதிகளாக படைத்து வாழ வைத்துள்ளான்.

இந்த பூமியும், பூமியில் வாழும் நாமும் படைத்தவனின் கட்டளைக்களுக்கு உட்பட்டே இயங்கிக் கொண்டு இருக்கின்றோம் என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

2.   பாவத்தை கை விடுவோம்! பாவ மன்னிப்பை கையில் எடுப்போம்!!

ஒரு ஊர் மக்கள் ஈமான் கொண்டு இறையச்சத்துடன் நடந்தால் வானம்-பூமியின் பரக்கத்துகளை மட்டுமே அவர்களுக்காக அல்லாஹ் திறந்து விடுவதாகக் கூறுகின்றான். 

وَلَوْ أَنَّ أَهْلَ الْقُرَى آمَنُوا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكَاتٍ مِنَ السَّمَاءِ وَالْأَرْضِ وَلَكِنْ كَذَّبُوا فَأَخَذْنَاهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ

நிச்சயமாக, இக்கிராமங்களில் உள்ளவர்கள் நம்பிக்கை கொண்டு, (அல்லாஹ்வை) அஞ்சி நடந்தால் அவர்களுக்கு வானம் மற்றும் பூமியில் இருந்து பாக்கியங்களைத் திறந்து விடுவோம்.                           ( அல்குர்ஆன்: 7: 96 )

ஆனால்,  இறை போதனைகளை ஒரு சமூகம் மறந்து நடக்கும் போது அவர்களுக்கு எல்லாவற்றின் வாசல்களையும் திறந்து விடுவோம் என்று அல்லாஹ் கூறுகின்றான்.  அதாவது, அவர்களுக்குப் பொருளாதார வாசலும் திறக்கப்படும். அதில் அழிவுகளும், முஸீபத்துகளும் சேர்ந்தே திறக்கப்படும் என அல்குர்ஆன் கூறுவது சிந்திக்க வேண்டிய அம்சமாகும்.

فَلَمَّا نَسُوا مَا ذُكِّرُوا بِهِ فَتَحْنَا عَلَيْهِمْ أَبْوَابَ كُلِّ شَيْءٍ حَتَّى إِذَا فَرِحُوا بِمَا أُوتُوا أَخَذْنَاهُمْ بَغْتَةً فَإِذَا هُمْ مُبْلِسُونَ

அவர்களுக்கு உபதேசிக்கப்பட்டதை அவர்கள் மறந்து விட்ட போது, சகலவற்றின் வாயில்களையும் அவர்களுக்கு நாம் திறந்து விட்டோம். தமக்கு வழங்கப்பட்டதைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சியாக இருந்த போது திடீரென அவர்களை நாம் பிடித்தோம். அப்போது அவர்கள் (அனைத்து நலன்களிலிருந்தும்) நிராசையடைந்து விட்டனர்.                                 ( அல்குர்ஆன்: 6: 44 )

ابن أبي الدنيا حديثا مرسلا: «إن الأرض تزلزلت على عهد رسول الله صلى الله عليه وسلم، فوضع يده عليها، ثم قال: اسكني، فإنه لم يأن لك بعد، ثم التفت إلى أصحابه، فقال: إن ربكم ليستعتبكم فأعتبوه،

ஒரு சமயம் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் நபித்தோழர்களோடு அமர்ந்திருக்கும் ஓர் சபையில் நில நடுக்கத்தின் பிரதிபலிப்பை மக்களோடு அண்ணலாரும் உணர்ந்த போது தோழர்களை நோக்கிய நபிகளார் மக்களே! உங்கள் இறைவன் உங்களுக்கு தண்டனை கொடுக்க நாடுகின்றான். எனவே, நீங்கள் அவனிடம் பாவமன்னிப்புக் கோரி தண்டனையிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்என்று கூறினார்கள்.                                                                       ( நூல்: இப்னு அபித் துன்யா )

وكتب عمر بن عبد العزيز إلى الأمصار: أما بعد؛ فإن هذا الرجف شيء يعاتب الله عز وجل به العباد، وقد كتبت إلى الأمصار أن يخرجوا في يوم كذا وكذا، في شهر كذا وكذا، فمن كان عنده شيء فليتصدق به، فإن الله عز وجل يقول: {قد أفلح من تزكى - وذكر اسم ربه فصلى} [سورة الأعلى: 14 - 15]. وقولوا كما قال آدم: {ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين} [سورة الأعراف: 23]. وقولوا كما قال نوح: {وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين} [سورة هود: 47]. وقولوا كما قال يونس: {لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين} [سورة الأنبياء: 87]. 

உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட நில நடுக்கம் ஒன்றின் போது அது பாதித்த ஊர்களின் கவர்னர்களின் வாயிலாக வசிக்கும் மக்களுக்கு கடிதம் மூலம் “வசதி வாய்ப்புள்ளவர்கள் தர்மம் செய்யுங்கள், ஆதம் (அலை), நூஹ் (அலை) ஆகியோர் ஓதிய துஆக்களையும், யூனுஸ் (அலை) அவர்களின் யூனுஸ் கலிமாவையும் ஓதுங்கள்” என்றார்கள். ( நூல்: இப்னு அபித் துன்யா )

3.   மனிதனுக்காக எப்போதும் மரணம் காத்துக் கொண்டே இருக்கும்..

மரணிப்பதற்கு முன் இறுதியாக மனித மனது என்ன சிந்திக்கும் என்ற ஆய்வு சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது

பெர்லின் சாரிட் பல்கலைக்கழகம் மற்றும் ஓஹியோவில் உள்ள சின்சினாட்டி பல்கலைக்கழக விஞ்ஞானிகள், ஜென்ஸ் ட்ரேயரின் தலைமையின் கீழ் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

மரணத்தின் இறுதி கட்டத்தில் மூளையில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிப்பதோடு, மரணத்தின் இறுதித் தருணத்தில் இருக்கும் மனிதனை எப்படி காப்பாற்றலாம் என்பதும் இந்த ஆய்வின் முக்கியமான நோக்கங்களாக இருந்தது.

இந்த ஆய்வுக்காக, சில (9) நோயாளிகளின் குடும்பத்தினரின் முன்னனுமதியை பெற்று, நோயாளிகளின் நரம்பு மண்டலத்தை விஞ்ஞானிகள் நெருக்கமாக கண்காணித்தார்கள்.

சாலை விபத்துகளில் படுமோசமாக காயமடைந்தவர்கள், பக்கவாதம் மற்றும் இதய செயலிழப்பால் (கார்டியாக் அரெஸ்ட்) பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை விஞ்ஞானிகள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்படுத்தினார்கள்.

மரணிக்கும் நேரத்தில் மனிதர்களின் மூளையும், விலங்கின் மூளையும் ஒன்றுபோல் செயல்படுவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

ஜென்ஸ் ட்ரேயர் தலைமையிலான விஞ்ஞானிகளின் குழு மனிதர்களைப் பொறுத்தவரை இந்த செயல்முறையை இன்னும் ஆழமாக புரிந்து கொள்ள விரும்பியது. அதனால் சில நோயாளிகளின் மூளைகளின் நரம்பியல் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டன.

மின்முனையக் கீற்றுகளை (Electrode strips) பயன்படுத்தி இந்த நோயாளிகளை மயக்க நிலையில் இருந்து மீட்டெடுக்க முயற்சி செய்யக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள்.

ஒன்பது நோயாளிகளில் எட்டு பேருடைய மூளையின் அணுக்கள், மரணத்தை தவிர்க்க முயற்சிப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். மூளையின் அணுக்களும், நரம்பணுக்களும் இதயத் துடிப்பு நின்ற பிறகும்கூட வேலை செய்ததை அவர்கள் கண்டறிந்தனர்.

மேலும், இந்த ஆராய்ச்சியின் முடிவில் ஜென்ஸ் ட்ரேயர் இவ்வாறு கூறுகிறார்: "சோடியம் அயனிகளின் ஊடுருவலால், நரம்பு மண்டலத்தின் பிளாஸ்மா சவ்வின் உள்ளேயும் வெளியேயும் இடையே ஏற்படும் ஆற்றல் வேறுபாட்டால் ஏற்படும் இழப்பு, அணுக்களின் உருமாற்றத்தை தொடங்குகிறது. ஆனால் இது மரணம் அல்ல. ஏனெனில் மீண்டும் உடலில் மின்முனைவை அளித்து, அதை மீட்டெடுக்க முடியும். இதனால் மரணத்தில் இருந்து மனிதனை மீட்டெடுத்து, இறப்பை தவிர்க்க முடியும்." 

எனினும், இறப்பை தவிர்ப்பதற்கான நடைமுறைகளை கண்டறிய இன்னும் நிறைய ஆராய்ச்சிகளை செய்ய வேண்டியிருக்கிறது. இதற்கான ஆராய்ச்சியும், மரணத்தை போன்றே சிக்கலானது என்று கூறுகிறார் ஜென்ஸ் ட்ரேயர். அதாவது, மரணம் தொடர்புடைய கேள்விகளுக்கு பதில் கிடைப்பதும் எளிதானதில்லை. ( நன்றி: பிபிசி தமிழ் 28/112022 )

ஆனால், இஸ்லாம் இவ்வுலகிற்கு கூறும் மிகவும் முக்கியமான அறை கூவல் ஒன்று உண்டு.

அது மரணம் குறித்தான உறுதியான ஒற்றை அறை கூவல்.

قُلْ إِنَّ الْمَوْتَ الَّذِي تَفِرُّونَ مِنْهُ فَإِنَّهُ مُلَاقِيكُمْ

நபியே! அவர்களை நோக்கி நீங்கள் கூறுங்கள். வெருண்டோடும் மரணம் உங்களை நிச்சயமாக பிடித்துக் கொள்ளும் என்று சொல்லுங்கள். எந்த மரணத்தில் இருந்து நீங்கள் வெருண்டு ஓடுகிறீர்களோ, அந்த மரணத்தை பார்த்து பயந்து ஓடுகிறீர்களோ நிச்சயமாக அது உங்களை சந்தித்தே தீரும். (அல்குர்ஆன் 62 : 8)

أَيْنَمَا تَكُونُوا يُدْرِكْكُمُ الْمَوْتُ وَلَوْ كُنْتُمْ فِي بُرُوجٍ مُشَيَّدَةٍ

நீங்கள் எங்கிருந்த போதிலும் மரணம் உங்களை அடைந்தே தீரும். மிகப் பலமான உயர்ந்த கோட்டை கொத்தளத்தின் மீது நீங்கள் இருந்த போதிலும் சரியே. (அல்குர்ஆன் 4 : 78)

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இவ்வாறு கூறுகிறான்:-

إِذْ يَتَلَقَّى الْمُتَلَقِّيَانِ عَنِ الْيَمِينِ وَعَنِ الشِّمَالِ قَعِيدٌ

مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ

وَجَاءَتْ سَكْرَةُ الْمَوْتِ بِالْحَقِّ ذَلِكَ مَا كُنْتَ مِنْهُ تَحِيدُ

வலது புறத்தில் ஒருவரும், இடது புறத்தில் ஒருவருமாக இருவர் அவன் செய்யும் செயலை குறிப்பெடுத்து கொண்டிருக்கின்றனர். மனிதன் எதை கூறிய போதிலும் அதனை எழுத காத்துக்கொண்டிருக்கும் ஒருவர் அவனிடம் இல்லாமலில்லை. அவன் வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையும் உடனுக்குடன் பதியப்படுகிறது. மரணத்தின் கஷ்டம் மெய்யாகவே வந்து விடும் பட்சத்தில் அவனை நோக்கி நீ தப்பிவிட கருதியது இதுதான் என்று கூறப்படும். (அல்குர்ஆன் : 50:17 - 19)

وَلَنْ يُّؤَخِّرَ اللّٰهُ نَفْسًا اِذَا جَآءَ اَجَلُهَا‌ؕ وَاللّٰهُ خَبِيْرٌۢ بِمَا تَعْمَلُوْنَ

.      ஆனால், அல்லாஹ், எந்த ஆத்மாவுக்கும் அதன் தவணை வந்துவிட்டால் (அதனைப்) பிற்படுத்த மாட்டான் - நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் தெரிந்தே இருக்கின்றான். ( அல்குர்ஆன்: 63: 11 )

فَلَوْلَاۤ اِذَا بَلَغَتِ الْحُـلْقُوْمَۙ‏

وَاَنْتُمْ حِيْنَٮِٕذٍ تَـنْظُرُوْنَۙ‏.

وَنَحْنُ اَقْرَبُ اِلَيْهِ مِنْكُمْ وَلٰـكِنْ لَّا تُبْصِرُوْنَ

  فَلَوْلَاۤ اِنْ كُنْتُمْ غَيْرَ مَدِيْنِيْنَۙ‏ 

تَرْجِعُوْنَهَاۤ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏

மரணத் தறுவாயில் ஒருவனின் (உயிர்) தொண்டைக் குழியை அடையும் போது - அந்நேரம் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆயினும், நாமோ அவனுக்கு உங்களை விட சமீபமாக இருக்கிறோம். எனினும் நீங்கள் பார்க்கிறீர்களில்லை. எனவே, (மறுமையில் உங்கள் செயல்களுக்கு) கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள் என்று இருந்தால் -  நீங்கள் உண்மையாளராக இருப்பின், (அவ்வுயிரை) மீளவைத்திருக்கலாமே?".
(
அல்குர்ஆன்: 56: 83 - 87 )

அல்லாஹ் தாவூத் (அலை)அவர்களுடைய இபாதத்களை போற்றி புகழ்ந்து அல்குர்ஆனிலே நமக்கு நினைவூட்டுகிறான்-

وَوَهَبْنَا لِدَاوُودَ سُلَيْمَانَ نِعْمَ الْعَبْدُ إِنَّهُ أَوَّابٌ

தாவூதுக்கு சுலைமானை நாம் மகனாக தந்தருள் புரிந்தோம். அவர் மிக நல்லடியார். மெய்யாகவே அவர் ஒவ்வொரு விஷயத்திலும் நம்மை நோக்கி நின்றார். ( அல்குர்ஆன் 38 : 30 ) என அல்லாஹ் தாவூத் (அலை) அவர்களை குர்ஆனிலே நினைவு கூறுகிறான்.

வார நாட்களில் ஒவ்வொரு நாளையும் தாவூத் (அலை) தர்தீப் செய்து வைத்திருப்பார்கள். மக்களை சந்தித்து நற்செய்தி கூறுவதற்காக, ஆட்சி அதிகாரங்களை நிர்வகிப்பதற்காக, குடும்பத்திற்காக, பிறகு அல்லாஹ்வை வணங்குவதற்காக. முற்றிலும் வணக்க வழிபாட்டை தவிர வேறு எதையும் அந்த நாளில் செய்ய மாட்டார்கள்.

தாவூத் (அலை) வணக்க வழிபாட்டுக்காக, யாரும் தொந்தரவு செய்து விடாமல் வணக்க வழிபாட்டில் மிக கவனத்தோடு, அந்த திக்ரிலே தொழுகையிலே மூழ்கி இருப்பார்கள். திடீரென்று ஒரு மனிதர் வருகிறார். அப்போது தாவூத் (அலை) அவர்கள் கேட்கிறார்கள். நீங்கள் யார்? என்று. அவர் கூறுகிறார்:- நான்தான் மலக்குல் மவ்த். தாவூத் (அலை) திகைத்து நிற்கிறார்கள், மலக்குல் மவ்த் சொல்கிறார்கள்;

أنا من لا يهاب الملوك ، ولا تمنع منه القصور ، ولا يقبل الرشوة

மன்னர்களை நான் பயப்படமாட்டேன். அவர்களின் அரண்மனை என்னை தடுத்து நிறுத்தாது. நான் யாரிடமும் லஞ்சம் வாங்க மாட்டேன். 

அப்போது தாவூத் (அலை) சொல்கிறார்கள்; அப்படி என்றால் நீங்கள் மலக்குல் மவுத் ஆக தான் இருக்க வேண்டும் என்று. 

أتيتني ولم أستعد بعد

يا داود أين فلان قريبك ؟ أين فلان جارك ؟ قال : مات ، قال : أما كان لك في هؤلاء عبرة لتستعد ؟!

மலக்குல் மவ்த் அவர்களே! நீங்கள் என்னிடத்தில் வந்துவிட்டீரே! இன்னும் நான் அதற்கான தயாரிப்பு செய்யவில்லையே! 

அதற்க்கு மலக்குல் மவுத் "தாவூதே!உன்னுடைய இன்ன உறவினர் எங்கே? உன்னுடைய இன்ன அண்டை வீட்டார் எங்கே? யாரெல்லாம் இறந்து விட்டார்களோ அவர்களை எல்லாம் நினைவு கூறி உன்னுடைய அந்த உறவினர் எங்கே? உன்னுடைய அந்த அண்டைவீட்டார் எங்கே? என்று கேட்கிறார். 

அப்போது தாவூத் (அலை) அவர்கள் சொல்கிறார்கள். அவர்கள் எல்லாம் இறந்து விட்டார்கள் என்று. உடனே மலக்குல் மவ்த் கேட்கிறார். அவர்கள் இறந்ததை நீங்கள் பார்த்தீர்கள் அல்லவா? உமக்கு அவர்களிலே படிப்பினை இருக்கவில்லையா?

சகோதரர்களே! ஒரு நபியுடைய நிலைமை இப்படி என்றால், நம்முடைய நிலையை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

பொதுவாக பேரிடர்கள், இயற்கைச் சீற்றங்கள் போன்றவை அல்லாஹ்வின் தண்டனையாக, கோபப்பார்வையாக இருந்த போதிலும் அதில் இறந்து போகிற முஸ்லிம்கள், முஃமின்கள் குறித்து நாம் நல்லவைகளையே எண்ண வேண்டும். அவர்கள் பாவிகள் என்ற முடிவுக்கு நாம் வந்து விடக்கூடாது.

வெள்ளம், மழை, சுனாமி பூகம்பம், நில நடுக்கம், தீ விபத்து, வாகன விபத்து என்று பல வகையிலும் மனிதர்கள் மரணிக்கிறார்கள்.

திடீர் என்று மரணம் அடைவது துர்மரணம் என்று பரவலாக நம்பப்படுகிறது.  இந்த நம்பிக்கைக்கு ஆதாரம் எதுவும் இல்லை.

 

திடீர் மரணத்தை விட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாதுகாப்புத் தேடியதாக சில ஹதீஸ்கள் உள்ளன. எனினும் இது துர்மரணம் என்பதற்காகக் கூறப்பட்டதாக நாம் புரிந்து கொள்ள முடியாது.

ஏனெனில் திடீர் மரணம் என்பதும் நல்ல மரணமே என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. ஈமானுடன் வாழும் ஒருவருக்கு இது போல் ஏற்படும் திடீர் மரணம் நன்மையைத் தான் தரும் என்பதை இந்தச் சான்றுகளிலிருந்து அறியலாம்.

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ سُمَيٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " الشُّهَدَاءُ خَمْسَةٌ: المَطْعُونُ، وَالمَبْطُونُ، وَالغَرِقُ، وَصَاحِبُ الهَدْمِ، وَالشَّهِيدُ فِي سَبِيلِ اللَّهِ "

பிளேக் நோயில் இறந்தவர்கள், வயிற்றுப் போக்கில் இறந்தவர்கள், தண்ணீரில் மூழ்கி இறந்தவர்கள், இடிபாடுகளில் இறந்தவர்கள், மற்றும் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் ஆகியோர் உயிர் தியாகிகள் (ஷஹீத்கள்) என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 654, 721, 2829,

ஷஹீத்கள் என்று நீங்கள் யாரை நினைக்கிறீர்கள்? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டனர். அதற்கு நபித்தோழர்கள் யார் போருக்குச் சென்று கொல்லப்படுகிறாரோ அவர் தான் என்று கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்படியானால் என் சமுதாயத்தில் உயிர் தியாகிகள் மிகவும் குறைவாகவே இருப்பார்கள். அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர் ஷஹீத் ஆவார். வயிற்றுப் போக்கால் இறந்தவர் ஷஹீத் ஆவார். பிரசவத்தின் போது மரணிக்கும் பெண்ணும் ஷஹீத் ஆவார் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி) ( நூல்: அஹ்மத் 17129, 21627, 21628, 21644, 21694 )

حَدَّثَنَا بِشْرُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا عَاصِمٌ، عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الطَّاعُونُ شَهَادَةٌ لِكُلِّ مُسْلِمٍ»

பிளேக் நோய் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஷஹாதத் (உயிர் தியாகி) என்ற நிலையைத் தரும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) ( நூல்: புகாரி 2830, 5732 )

மேலும், நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பல நபித்தோழர்களுக்குத் திடீர் மரணம் நிகழ்ந்துள்ளது. அதைத் துர்மரணம் என்று நபி (ஸல்) அவர்கள் கருதவும் இல்லை. அதைத் துர் மரணம் என்று அடையாளப் படுத்தவும் இல்லை.

حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ: أَخْبَرَنِي هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّ رَجُلًا قَالَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ أُمِّي افْتُلِتَتْ نَفْسُهَا، وَأَظُنُّهَا لَوْ تَكَلَّمَتْ تَصَدَّقَتْ، فَهَلْ لَهَا أَجْرٌ إِنْ تَصَدَّقْتُ عَنْهَا؟ قَالَ: «نَعَمْ»

ஒரு சமயம் ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து என் தாய் திடீரென்று மரணித்து விட்டார். அவர் பேசியிருந்தால் தர்மம் செய்யச் சொல்லியிருப்பார். எனவே அவர் சார்பில் நான் தர்மம் செய்தால் அவருக்கு அதன் நன்மை கிடைக்குமா? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம் என்றனர். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ( நூல்: புகாரி 1388, 2760 )

இது போல் திடீர் மரணம் அடைந்த எவரது மரணத்தையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் துர்மரணம் என்று கூறியதில்லை.

நபி ஸல்) அவர்களின் காலத்தில் இதுப்போன்ற அழிவு ஏன் ஏற்படவில்லை?

أَنَّ عُبَادَةَ بْنَ الصَّامِتِ رَضِيَ اللَّهُ عَنْهُ وَكَانَ شَهِدَ بَدْرًا وَهُوَ أَحَدُ النُّقَبَاءِ لَيْلَةَ الْعَقَبَةِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ وَحَوْلَهُ عِصَابَةٌ مِنْ أَصْحَابِهِ بَايِعُونِي عَلَى أَنْ لَا تُشْرِكُوا بِاللَّهِ شَيْئًا وَلَا تَسْرِقُوا وَلَا تَزْنُوا وَلَا تَقْتُلُوا أَوْلَادَكُمْ وَلَا تَأْتُوا بِبُهْتَانٍ تَفْتَرُونَهُ بَيْنَ أَيْدِيكُمْ وَأَرْجُلِكُمْ وَلَا تَعْصُوا فِي مَعْرُوفٍ فَمَنْ وَفَى مِنْكُمْ فَأَجْرُهُ عَلَى اللَّهِ وَمَنْ أَصَابَ مِنْ ذَلِكَ شَيْئًا فَعُوقِبَ فِي الدُّنْيَا فَهُوَ كَفَّارَةٌ لَهُ وَمَنْ أَصَابَ مِنْ ذَلِكَ شَيْئًا ثُمَّ سَتَرَهُ اللَّهُ فَهُوَ إِلَى اللَّهِ إِنْ شَاءَ عَفَا عَنْهُ وَإِنْ شَاءَ عَاقَبَهُ فَبَايَعْنَاهُ عَلَى ذَلِك * رواه البخاري

பத்ருப்போரில் கலந்துகொண்டவரும், இரவில் நடந்த அகபா உடன்பாட்டில் கலந்து கொண்ட (பன்னிரண்டு) தலைவர்களில் ஒருவருமான உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருநாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மைச் சுற்றிலும் தம் தோழர்களின் ஒரு குழுவினர் அமர்ந்திருக்க, “அல்லாஹ்வுக்கு எதையும் (எவரையும்) இணையாக்கமாட்டீர்கள் என்றும், திருட மாட்டீர்கள் என்றும், விபசாரம் புரியமாட் டீர்கள் என்றும், உங்கள் குழந்தைகளைக் கொல்லமாட்டீர்கள் என்றும், நீங்களாக அவதூறு எதனையும் புனைந்துகொண்டு வரமாட்டீர்கள் என்றும், எந்த நல்ல காரியத்திலும் (எனக்கு) மாறு செய்யமாட்டீர்கள் என்றும் என்னிடம் உறுதிமொழி கொடுங்கள்!

உங்களில் எவர் (இந்த உறுதிமொழியின் மீது) நிலைத்திருக்கிறாரோ அவருக்குரிய நற்பலனைத் தருவது அல்லாஹ்வின் பொறுப்பாகும். இவற்றில் (மேற்கூறப்பட்ட குற்றங்களில்) ஏதேனுமொன்றை ஒருவர் செய்து, அதற்காக அவர் இந்த உலகத்திலயே தண்டிக்கப்பட்டுவிட்டால் அதுவே அவருக்குரிய பரிகாரமாகிவிடும். இவற்றில் ஏதேனுமொன்றை ஒருவர் செய்து அல்லாஹ் அவரது குற்றத்தை (உலகவாழ்வில்) மறைத்துவிட்டால் அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் விடப்படுகிறார். அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்; அவன் நாடினால் அவரை மன்னிப்பான்என்ற சொன்னார்கள். உடனே நாங்கள் அவற்றுக்காக நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தோம். (நூல் : புகாரி 18 7056)

عُبَادَةَ بْنِ الصَّامِتِ وَهُوَ مَرِيضٌ قُلْنَا أَصْلَحَكَ اللَّهُ حَدِّثْ بِحَدِيثٍ يَنْفَعُكَ اللَّهُ بِهِ سَمِعْتَهُ مِنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ دَعَانَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَبَايَعْنَاهُ فَقَالَ فِيمَا أَخَذَ عَلَيْنَا أَنْ بَايَعَنَا عَلَى السَّمْعِ وَالطَّاعَةِ فِي مَنْشَطِنَا وَمَكْرَهِنَا وَعُسْرِنَا وَيُسْرِنَا وَأَثَرَةً عَلَيْنَا وَأَنْ لَا نُنَازِعَ الْأَمْرَ أَهْلَهُ إِلَّا أَنْ تَرَوْا كُفْرًا بَوَاحًا عِنْدَكُمْ مِنْ اللَّهِ فِيهِ بُرْهَانٌ * رواه البخاري

நாங்கள் உற்சாகமாயிருக்கும் போதும் சோர்ந்திருக்கும் போதும் வசதியாயிருக்கும் போதும் சிரமத்திலிருக்கும் போதும் எங்களை விடப் பிறருக்கு முன்னுரிமை வழங்கப்படும் போதும் கூட (ஆட்சித் தலைவரின் கட்டளை யை)ச் செவியேற்று (அவருக்குக்) கீழ்ப்படிந்து நடப்போம்; ஆட்சியதிகாரத்திலிருப்பவர் களுடன் நாங்கள் சண்டையிடமாட்டோம்; எந்த விஷயம் பகிரங்கமான இறைமறுப்பு என்பதற்கு அல்லாஹ்விடமிருந்து எங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதோ அத்தகைய விஷயத்தை ஆட்சியாளரிடம் நாங்கள் கண்டாலே தவிரஎன்று எங்களிடம் நபி (ஸல்) அவர்கள் உறுதிமொழி வாங்கியதும் அவர்கள் எங்களிடம் பெற்ற பிரமாணங்களில் அடங்கும். (நூல் : புகாரி 7056)

يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا جَاءَكَ الْمُؤْمِنَاتُ يُبَايِعْنَكَ عَلَى أَنْ لَا يُشْرِكْنَ بِاللَّهِ شَيْئًا وَلَا يَسْرِقْنَ وَلَا يَزْنِينَ وَلَا يَقْتُلْنَ أَوْلَادَهُنَّ وَلَا يَأْتِينَ بِبُهْتَانٍ يَفْتَرِينَهُ بَيْنَ أَيْدِيهِنَّ وَأَرْجُلِهِنَّ وَلَا يَعْصِينَكَ فِي مَعْرُوفٍ فَبَايِعْهُنَّ وَاسْتَغْفِرْ لَهُنَّ اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ 60:12

நபியே! (முஹம்மதே!) நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் வந்து அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டோம்; திருட மாட்டோம்; விபச்சாரம் செய்ய மாட்டோம்; எங்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டோம்; நாங்களாக இட்டுக் கட்டி எந்த அவதூறையும் கூற மாட்டோம்; நல்ல விஷயத்தில் உமக்கு மாறு செய்ய மாட்டோம்என்று உம்மிடம் உறுதி மொழி கொடுத்தால் அவர்களிடம் உறுதி மொழி எடுப்பீராக! அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுவீராக! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன் 60:12)

தீமை பெருகி விட்டால் நல்லவர்கள் அழிக்கப்படுவார்களா? 

قَالَتْ زَيْنَبُ بِنْتُ جَحْشٍ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَنَهْلِكُ وَفِينَا الصَّالِحُونَ قَالَ نَعَمْ إِذَا كَثُرَ الْخَبَثُ * رواه البخاري

நான் அல்லாஹ்வின் தூதரே! நம்மிடையே நல்லவர்கள் இருக்க, நாம் அழிந்து விடுவோமாஎன்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம்; தீமை பெருகிவிட்டால்…” என்று பதிலளித்தார்கள். (நூல் : புகாரி 3346)

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நில நடுக்கத்தில் இறந்து போனவர்களுக்கு ஷஹீத்களின் அந்தஸ்தை வழங்கியருள்வானாக! அவர்களின் பிழைகளை பொறுத்தருள்வானாக! அவர்களின் குடும்பத்தார்களுக்கு சிரந்த பகரத்தை வழங்கியருள்வானாக!! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்! வஸ்ஸலாம்!!!

4 comments:

  1. மாஷா அல்லாஹ் காலத்திற்கு தேவையான அருமையான பதிவு அல்லாஹுத்தஆலா தங்களுக்கு ஈருலகிலும் பரக்கத் செய்வானாக

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete