Friday 31 March 2023

முக அழகும் அக அழகும் கொண்ட அழகிய இறைத்தூதர் யூஸுஃப் (அலை) அவர்கள்!!!

 

முக அழகும் அக அழகும் கொண்ட                                    அழகிய இறைத்தூதர் யூஸுஃப் (அலை) அவர்கள்!!!

ரமழான் - (1444 - 2023) தராவீஹ் சிந்தனை:- 10.


பத்தாவது நாள் தராவீஹ் தொழுகையை நிறைவேற்றி, ஒன்பதாவது  நோன்பை நோற்று அல்லாஹ்வின் அருள் நிறைந்த மஸ்ஜிதில் இதயத்திற்கு உற்சாகமாகவும்,  ஈமானுக்கு உரமாகவும் அமைந்திருக்கின்ற குர்ஆனின் போதனைகளை செவிமடுக்கும் ஆர்வத்தில் அமர்ந்திருக்கின்றோம். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்முடைய நோன்பையும், தராவீஹ் தொழுகையையும், நம்முடைய இதர நல்லறங்களையும் கபூல் செய்து நிறைவான நன்மைகளை வழங்கியள்வானாக!

இன்றைய தராவீஹ் தொழுகையில் சூரா யூசுஃப்  ஓதப்பட்டது. அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த சூராவில் நபி யூசஸுஃப் (அலை) அவர்களின் முழு வரலாற்றையும் ஆரம்பம் முதல் இறுதி வரை அழகு பட விவரிக்கிறான்.

மற்றெந்த சூராவுக்கும் இல்லாத இரண்டு சிறப்பு இந்த சூராவுக்கு உண்டு.

ஒன்று:- ஒரே சூராவில் ஒரு நபியின் வரலாறு முழுமையையும் சொல்லி இருப்பது.
இரண்டு:- இந்த சூராவின் ஆரம்ப வசனங்களில் யூஸுஃப் (அலை) அவர்களின் வரலாற்றை "அழகிய வரலாறு" என்று குறிப்பிட்டு விட்டு இந்த சூராவின் இறுதி வசனத்தில் இந்த வரலாற்றில் படிப்பினையும் முஃமின்களுக்கு நேர்வழியும், ரஹ்மத்தும் இருக்கிறது என்று கூறி முடிப்பது.

نَحْنُ نَقُصُّ عَلَيْكَ اَحْسَنَ الْقَصَصِ بِمَاۤ اَوْحَيْنَاۤ اِلَيْكَ هٰذَا الْقُرْاٰنَ وَاِنْ كُنْتَ مِنْ قَبْلِهٖ لَمِنَ الْغٰفِلِيْنَ‏

(நபியே!) நாம் வஹீ மூலம் உம் மீது இந்த குர்ஆனை அருள் செய்தது கொண்டு மிக அழகான வரலாற்றை உமக்கு நாம் கூறுகின்றோம் - இதற்குமுன் (இது குறித்து) ஏதும் அறியாதவர்களில் (ஒருவராய்) நீர் இருந்தீர்.

لَـقَدْ كَانَ فِىْ قَصَصِهِمْ عِبْرَةٌ لِّاُولِى الْاَلْبَابِ‌ؕ مَا كَانَ حَدِيْثًا يُّفْتَـرٰى وَلٰـكِنْ تَصْدِيْقَ الَّذِىْ بَيْنَ يَدَيْهِ وَتَفْصِيْلَ كُلِّ شَىْءٍ وَّهُدًى وَّرَحْمَةً لِّـقَوْمٍ يُّؤْمِنُوْنَ

(நிச்சயமாக) அவர்களின் வரலாறுகளில் அறிவுடையோருக்கு (நல்ல) படிப்பினை இருக்கிறது; இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாக இருக்கவில்லை, மாறாக இதற்கு முன் உள்ள (வேதத்)தையும் இது உண்மையாக்கி வைக்கிறது. ஒவ்வொரு விஷயத்தையும் இது விவரித்துக் காட்டுவதாகவும், நம்பிக்கை கொண்ட சமூகத்தவருக்கு நேர்வழியாகவும், ரஹ்மத்தாகவும் இருக்கிறது.

யூஸுஃப் (அலை) அவர்களின் அழகிய இந்த வரலாறு ஆயிரமாயிரம் படிப்பினைகளை சுமந்தது.

யூஸுஃப் சூராவில் அமைந்திருக்கிற படிப்பினைகளை குறித்து 70 க்கும் மேற்பட்ட தனி ரிஸாலாக்களையே நமது முன்னோர்களான இமாம்கள் எழுதி குவித்துள்ளனர்.

அப்படியான அவர்களின் வரலாறு தரும் படிப்பினைகளில் ஒன்று யூஸுஃப் (அலை) அவர்கள் வாழும் காலமெல்லாம் ரகசியங்களை பேணும் இமயமாக திகழ்ந்தார்கள் என்பது தான்.

வாழ்க்கையில் மிக உச்சத்தில் இருந்த தருணம் அது. எகிப்து நாட்டின் உயரிய பொறுப்பில் அங்கம் வகித்துக் கொண்டிருக்கும் போது வஞ்சகம் செய்த அவர்களின் சகோதரர்கள் யூஸுஃப் (அலை) அவர்கள் தங்களது சகோதரர் தான் என அறிந்து கொண்டு " நிச்சயமாக நீர் தாம் யூஸுஃபோ? நீ வாழக்கூடாது என்று தானே நாங்கள் உன்னை கிணற்றில் தூக்கி போட்டோம். ஆனால், இன்றோ நீ எங்களின் துயர் துடைக்கும் இடத்தில் வந்து நிற்கின்றாயே? எப்படி இந்த இடத்திற்கு நீ வந்தாய்?” என்ற இத்தனை கேள்விகளை உள்ளடக்கிய ஒற்றைக் கேள்வியை கேட்ட போது..அவர்கள் வாழ்க்கையில் தாம் சந்தித்த எதையும் சொல்லவில்லை. மாறாக, இரண்டே இரண்டு வார்த்தை தான் சொன்னார்கள். 1.இறையச்சம், 2. பொறுமை இவைகள் தான் என்னுடைய இந்த உச்சத்திற்கு காரணம் என்று.

فَلَمَّا دَخَلُوْا عَلَيْهِ قَالُوْا يٰۤاَيُّهَا الْعَزِيْزُ مَسَّنَا وَاَهْلَنَا الضُّرُّ وَجِئْنَا بِبِضَاعَةٍ مُّزْجٰٮةٍ فَاَوْفِ لَنَا الْكَيْلَ وَتَصَدَّقْ عَلَيْنَاؕ اِنَّ اللّٰهَ يَجْزِى الْمُتَصَدِّقِيْنَ‏

அவ்வாறே அவர்கள் (மிஸ்ரையடைந்து) யூஸுஃப் முன்னிலையில் வந்து அவரிடம்; “அஜீஸே! எங்களையும் எங்கள் குடும்பத்திலுள்ளவர்களையும் பெருந்துயர் பற்றிக்கொண்டது; நாங்கள் சொற்பமான பொருளையே கொண்டுவந்திருக்கின்றோம்; எங்களுக்கு நிரப்பமாகத் (தானியம்) அளந்து கொடுங்கள்; எங்களுக்கு (மேற்கொண்டு) தானமாகவும் கொடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் தானம் செய்பவர்களுக்கு நற்கூலி வழங்குகிறான்என்று கூறினார்கள்.

قَالَ هَلْ عَلِمْتُمْ مَّا فَعَلْتُمْ بِيُوْسُفَ وَاَخِيْهِ اِذْ اَنْتُمْ جٰهِلُوْنَ

அதற்கு அவர்?) “நீங்கள் அறிவீனர்களாக இருந்த போது, யூஸுஃபுக்கும் அவர் சகோதரருக்கும் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா?” என்று வினவினார்.

 قَالُوْۤا ءَاِنَّكَ لَاَنْتَ يُوْسُفُ‌ؕ قَالَ اَنَا يُوْسُفُ وَهٰذَاۤ اَخِىْ‌ قَدْ مَنَّ اللّٰهُ عَلَيْنَاؕ اِنَّهٗ مَنْ يَّتَّقِ وَيَصْبِرْ فَاِنَّ اللّٰهَ لَا يُضِيْعُ اَجْرَ الْمُحْسِنِيْنَ‏

அப்போது அவர்கள்) நிச்சயமாக நீர் தாம் யூஸுஃபோ? என்று கேட்டார்கள்; (ஆம்!) நான் தாம் யூஸுஃபு (இதோ!) இவர் என்னுடைய சகோதரராவர்; நிச்சயமாக அல்லாஹ் எங்கள் மீது அருள் புரிந்திருக்கின்றான்; எவர் (அவனிடம் பயபக்தியுடன் இருக்கிறார்களோ, இன்னும் பொறுமையையும் மேற்கொண்டிருக்கிறாரோ (அத்தகைய) நன்மை செய்வோர் கூலியை நிச்சயமாக அல்லாஹ் வீணாக்கிவிடமாட்டான்என்று கூறினார்.

யூஸுஃப் (அலை) அவர்கள் சொல்லியிருக்க முடியும், நீங்கள் ஏன் என்னை கொல்ல முயற்சித்தீர்கள்? நம் தந்தை என் மீது மட்டும் பாசமாக இருக்கின்றார் என்று. ஏன் நம் தந்தை என் மீது பாசமாக இருந்தார் தெரியுமா? அது ஒரு கனவு. அந்தக் கனவே என் மீது பாசம் கொள்ள தூண்டியது. என்று சொல்லியிருக்க முடியும். ஆனால், தந்தை தான் உம் சகோதரர்களிடம் சொல்லக் கூடாது என்று சொல்லி விட்டாரே!

சொல்லக்கூடாது என்று சொல்லப்பட்ட ஒரு ரகசியத்தை எப்படி அவ்வளவு எளிதாக சொல்லி விட முடியும்?.

சரி நீங்கள் கிணற்றில் போட்டு விட்டு வந்து விட்டீர்கள். அதற்கு பின் என்ன நடந்தது தெரியுமா? என்னை ஒரு கூட்டம் கிணற்றிலிருந்து மீட்டெடுத்து, சந்தையில் விற்கப்பட்டு, அரசர் விலை பேசி வாங்கி அரண்மனைப் பணியாளனாகச் சேர்ந்து அங்கே அரசியின் ஆசைக்கு உடன்பட மறுத்து அப்பப்பா எவ்வளவு பெரிய போராட்டத்தை தான் கடந்து விட்டேன். இதையாவது சொல்லி விட முடியுமா? என்றால், அரசர் தான் அரசி உம்மோடு நடந்து கொண்ட எதையும் “நம் மூவருக்கு மட்டும் தெரிந்ததாக இருக்கட்டும்! இது குறித்து எங்கும், எப்போதும், யாரிடமும் தெரிவித்து விடாதே! என்று சொல்லி விட்டாரே?. அவர் ரகசியமாக இருக்கட்டும் என்று சொன்ன பிறகு எப்படித் தான் அதைக் கூற முடியும்? அப்போது மட்டுமல்ல, அவர்களின் சகோதரர்கள் மட்டுமல்ல, சிறையில் இருந்த போது அறிமுகமான சக கைதிகளிடமும் கூட தாம் கடந்து வந்த பாதை குறித்து ஒரு போதும் வாய் திறந்ததில்லை. தம் ஆரம்ப கால வாழ்க்கை தம் தந்தையால் பாதுகாக்கப்பட வேண்டிய ரகசியம் என்றும், இடைப்பட்ட இளமைக்கால வாழ்க்கை அரசரால் பாதுகாக்கப்பட வேண்டிய ரகசியம் என்றும் உறுதிமொழி வாங்கி விட்டார்களே ஆதலால் தாம் வாழும் வரை இந்த இரு ரகசியங்களையும் தன்னுள்ளே புதைத்துக் கொண்டு தொட முடியாத இமயமாய் உயர்ந்து நிற்கின்றார்கள். ஆதலால் தான் இது வெறும் வரலாறல்ல. அழகிய வரலாறு என்று அல்லாஹ்வால் அறிமுகப்படுத்தப் படுகின்றது.

தந்தை பாதுகாக்கச் சொன்ன ரகசியம்..

 اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ لِىْ سٰجِدِيْنَ‏ قَالَ يٰبُنَىَّ لَا تَقْصُصْ رُءْيَاكَ عَلٰٓى اِخْوَتِكَ فَيَكِيْدُوْا لَـكَ كَيْدًا ؕ اِنَّ الشَّيْطٰنَ لِلْاِنْسَانِ عَدُوٌّ مُّبِيْنٌ‏

சூரியனும், (பதினொரு) நட்சத்திரங்களும் தனக்கு 'சுஜூது' செய்வதாக (சிரம்பணிவதாக) தான் கண்ட கனவு ஒன்றை  (சிறுவராக இருந்த) யூசுப்f அவர்கள் தனது தந்தையான இறைத்தூதர் யஃகூப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் தெரிவித்தபோது தந்தை மகனுக்குக் கூறிய வார்த்தையாக பின்வருமாறு  அல்லாஹ் கூறுவதை நன்கு சிந்தித்துப் பாருங்கள். *அதற்கவர், 'என் அருமை மகனே! உனது கனவை உன் சகோதரர்களிடம் கூறாதே. (அப்படி நீ கூறினால்) அவர்கள் உனக்குக் கடுமையாக சூழ்ச்சி செய்வார்கள். நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்க விரோதியாவான்' எனக் கூறினார்”*. (அல்குர்ஆன், 12:05 )

அரசர் பாதுகாக்கச் சொன்ன ரகசியம்…

يُوْسُفُ اَعْرِضْ عَنْ هٰذَا  وَاسْتَغْفِرِىْ لِذَنْۢبِكِ اِنَّكِ كُنْتِ مِنَ الْخٰطِٮـِٕيْنَ

யூஸுஃபே! இதனை நீர் இம்மட்டில் விட்டு விடும். (பெண்ணே!) உனது பாவத்திற்காக மன்னிப்புத் தேடிக் கொள்; நிச்சயமாக நீ தவறு செய்தவர்களில் ஒருத்தியாக இருக்கின்றாய்என்றும் கூறினார்.

 

ரகசியம் படும் பாடு!!

இன்று நம்மிடையே ரகசியங்கள் என்ன பாடுபடுகின்றது என்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.

நாம் ஒருவரிடம் ஒரு விஷயத்தைச் சொல்லி இதை யாரிடமும் சொல்லாதே என்று சொல்லி விட்டு எங்காவது சென்று வருவதற்குள் நம்மிடமே வந்து ஒருவர் எப்பா உனக்கு விஷயம் தெரியுமா? இப்படி இப்படியாம்பா? என்பார்.

இரு நண்பர்களுக்கு இடையேயான ரகசியம், இரு குடும்ப உறவுகளுக்கு இடையேயான ரகசியம், கணவன் மனைவிக்கு இடையேயான ரகசியம், ஒரு அறையில் நடந்த ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் இன்று கடைவீதியில், ஹவ்ள்க்கடியில், குழாயடியில், முகநூலில், இன்ஸ்டாவில், வாட்ஸ்அப்பில் சர்வதேச அளவில் உலா வருகின்றது.

ரகசியத்தை பாதுகாப்பதும் அமானிதமே..

فعن جابر بن عبد الله رضي الله عنهما عن النبي -صلى الله عليه وسلم-\' قال: «إذا حَدَّثَ الرَّجُلُ الحَديثَ ثم الْتَفَتَ فَهِي أَمَانَةٌ. رواه الترمذي وحسنه

وعنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَعْدٍ , قَالَ : سَمِعْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِىَّ , يَقُولُ : قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم:إِنَّ مِنْ أَعْظَمِ الأَمَانَةِ عِنْدَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ الرَّجُلَ يُفْضِى إِلَى امْرَأَتِهِ وَتُفْضِى إِلَيْهِ ثُمَّ يَنْشُرُ سِرَّهَا. رواه مسلم

ஒருவர் மற்றவரிடம் ஒரு செய்தியைக் கூறிவிட்டு, அங்கும் இங்கும் திரும்பிப் பார்த்துக் கொண்டால், அந்தச் செய்தி நம்பி ஒப்படைக்கப்பட்டதாகும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: அபூதாவூத்)

ஒருவர் ஒரு செய்தியைக் கூறிவிட்டு, இதை ரகசியமாக வைக்க வேண்டும் என்று சொல்ல வில்லை. மாறாக, அதை சொன்ன அந்த நேரத்தில் அவரது செய்கை அதை பகிரங்கப்படுத்தக்கூடாது என்ற விதத்தில் அமைந்திருந்தால், அதுவும் நம்பி ஒப்படைக்கப்பட்ட அமானித செய்தியாகும். நம்பி ஒப்படைக்கப்பட்ட பொருளைப்  பாதுகாப்பது போன்று அந்த செய்தியைப் பாதுகாப்பதும் அவசியமாகும்.

நம்பகத்தன்மை குறைந்தால் அதனால் ஏற்படும் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என்பதற்கு பின்வரும் நபிமொழி சான்றாகும்.

حَدَّثَنَا ‏ ‏يُونُسُ ‏ ‏وَسُرَيْجٌ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏فُلَيْحٌ ‏ ‏عَنْ ‏ ‏هِلَالٍ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءِ بْنِ يَسَارٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏ ‏بَيْنَمَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏جَالِسٌ يُحَدِّثُ الْقَوْمَ فِي مَجْلِسِهِ حَدِيثًا جَاءَ أَعْرَابِيٌّ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ مَتَى السَّاعَةُ قَالَ فَمَضَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُحَدِّثُ فَقَالَ بَعْضُ الْقَوْمِ سَمِعَ فَكَرِهَ مَا قَالَ وَقَالَ بَعْضُهُمْ بَلْ لَمْ يَسْمَعْ حَتَّى إِذَا قَضَى حَدِيثَهُ قَالَ أَيْنَ السَّائِلُ عَنْ السَّاعَةِ قَالَ هَا أَنَا ذَا يَا رَسُولَ اللَّهِ قَالَ إِذَا ضُيِّعَتْ الْأَمَانَةُ فَانْتَظِرْ السَّاعَةَ قَالَ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ ‏ ‏أَوْ قَالَ مَا ‏ ‏إِضَاعَتُهَا قَالَ ‏ ‏إِذَا ‏ ‏تَوَسَّدَ ‏ ‏الْأَمْرَ غَيْرُ أَهْلِهِ فَانْتَظِرْ السَّاعَةَ ‏

நபி (ஸல்) அவர்கள் ஒரு கிராமவாசியிடம் நம்பகத்தன்மை பாழ்படுத்தப்பட்டால் உலக அழிவு நாளை நீ எதிர்பார்க்கலாம்என்றார்கள். அவர் இறைத்தூதரே, அது எவ்வாறு பாழ்படுத்தப்படும்?’ என்று கேட்டதற்கு, ‘ஆட்சியதிகாரம், நீதி நிர்வாகம் போன்ற எந்தப் பொறுப்பும் அதற்குத் தகுதியற்றவர்களிடம் ஒப்படைக்கும் போது மறுமை நாளை எதிர்பார்த்துக் கொள்என நபி (ஸல்) பதிலளித்தார்கள்”. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)

மேலும், நம்பகத்தன்மையை பாழ்படுத்தினால் நரகமும், அதை பாதுகாத்தால் சொர்க்கமும் உண்டு  என்பதை பின்வரும் நபி மொழி விளக்குகின்றது.

حَدَّثَنَا ‏ ‏سُلَيْمَانُ بْنُ دَاوُدَ الْهَاشِمِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏إِسْمَاعِيلُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَمْرٌو ‏ ‏عَنِ ‏ ‏الْمُطَّلِبِ ‏ ‏عَنْ ‏ ‏عُبَادَةَ بْنِ الصَّامِتِ ‏ ‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏اضْمَنُوا لِي سِتًّا مِنْ أَنْفُسِكُمْ أَضْمَنْ لَكُمْ الْجَنَّةَ اصْدُقُوا إِذَا حَدَّثْتُمْ وَأَوْفُوا إِذَا وَعَدْتُمْ وَأَدُّوا إِذَا اؤْتُمِنْتُمْ وَاحْفَظُوا فُرُوجَكُمْ وَغُضُّوا أَبْصَارَكُمْ وَكُفُّوا أَيْدِيَكُمْ ‏

என்னிடம் உங்களில் ஆறு விஷயங்களில் பொறுப்பேற்பவருக்கு நான் உங்களுக்கு சொர்க்கத்தை பிணையாக பெற்றுத் தருகிறேன். நீங்கள் பேசினால் உண்மை பேசுங்கள், நீங்கள் வாக்களித்தால் நிறைவேற்றுங்கள், உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்டதை நிறைவேற்றுங்கள், உங்களது மறைவிடங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள், உங்களது பார்வைகளை தாழ்த்திக்கொள்ளுங்கள், உங்களது கரங்களை தீங்கிலிருந்து தடுத்துக் கொள்ளுங்கள்என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: உப்பாதா பின் ஸாமித் (ரலி), நூல்: அஹ்மது)

அல்லாஹ்வின் பார்வையில் மகாக்கெட்டவன்…

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ عَنْ عُمَرَ بْنِ حَمْزَةَ الْعُمَرِىِّ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَعْدٍ قَالَ سَمِعْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِىَّ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم

إِنَّ مِنْ أَشَرِّ النَّاسِ عِنْدَ اللَّهِ مَنْزِلَةً يَوْمَ الْقِيَامَةِ الرَّجُلَ يُفْضِى إِلَى امْرَأَتِهِ وَتُفْضِى إِلَيْهِ ثُمَّ يَنْشُرُ سِرَّهَا

மறுமையில் அல்லாஹ்விடம் மிக மிகக் கெட்ட  மனிதன் யாரெனில், தானும் தனது மனைவியும் இல்லறத்தில் ஈடுபட்ட  பின்னர் அவளது அந்தரங்கத்தை பிறரிடம் பரப்புபவன் தான்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். ( நூல் : முஸ்லிம் )

ரகசியத்தை வெளிப்படுத்துவது முனாஃபிக்கின் செயலாகும்...

عبدالله بن عمر رضي الله عنهما، أن النّبي صلّى الله عليه وسلم قال: (أربع من كنّ فيه كان منافقا خالصا؛ ومن كانت فيه خصلة منهنّ كانت فيه خصلة من النفاق حتى يدعها: إذا اؤتمن خان، وإذا حدّث كذب، وإذا عاهد غدر، وإذا خاصم فجر ) « رواه البخاري... »

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்: நான்கு பண்புகள் எவனிடம் உள்ளனவோ அவன் வடிகட்டிய  நயவஞ்சகன்  ஆவான். அவற்றில் ஏதேனும் ஒன்று யாரிடமேனும் இருந்தால் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு பண்பு அவனிடம் இருந்து கொண்டே இருக்கும். 1-  நம்பினால் துரோகம் செய்வான்.  2-  பேசினால் பொய்யே பேசுவான். 3-  ஒப்பந்தம் செய்தால் அதை மீறுவான். 4- விவாதம் புரிந்தால் நேர்மை தவறிப் பேசுவான்”. ( நூல்: புகாரி - 34).

ரகசியம் வெளியானதால்…

حَدَّثَنِي الحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ صَبَّاحٍ، حَدَّثَنَا حَجَّاجٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ: زَعَمَ عَطَاءٌ، أَنَّهُ سَمِعَ عُبَيْدَ بْنَ عُمَيْرٍ، يَقُولُ: سَمِعْتُ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَمْكُثُ عِنْدَ زَيْنَبَ بِنْتِ جَحْشٍ، وَيَشْرَبُ عِنْدَهَا عَسَلًا، فَتَوَاصَيْتُ أَنَا وَحَفْصَةُ: أَنَّ أَيَّتَنَا دَخَلَ عَلَيْهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلْتَقُلْ: إِنِّي أَجِدُ مِنْكَ رِيحَ مَغَافِيرَ، أَكَلْتَ مَغَافِيرَ، فَدَخَلَ عَلَى إِحْدَاهُمَا، فَقَالَتْ لَهُ ذَلِكَ، فَقَالَ: «لاَ، بَلْ شَرِبْتُ عَسَلًا عِنْدَ زَيْنَبَ بِنْتِ جَحْشٍ، وَلَنْ أَعُودَ لَهُ» فَنَزَلَتْ: {يَا أَيُّهَا النَّبِيُّ لِمَ تُحَرِّمُ مَا أَحَلَّ اللَّهُ لَكَ} [التحريم: 1]- إِلَى – {إِنْ تَتُوبَا إِلَى اللَّهِ} [التحريم: 4] لِعَائِشَةَ وَحَفْصَةَ: {وَإِذْ أَسَرَّ النَّبِيُّ إِلَى بَعْضِ أَزْوَاجِهِ} [التحريم: 3] لِقَوْلِهِ: «بَلْ شَرِبْتُ عَسَلًا»

நபி(ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களிடம் (அவர்களின் அறையில் அதிக நேரம்) தங்கியிருந்து தேன் சாப்பிடுவது வழக்கம். எனவே, (இது பிடிக்காமல் நபியவர்களுடைய துணைவியரான) நானும் ஹஃப்ஸாவும் எங்களுக்குள் நபி(ஸல்) அவர்கள் (ஸைனபின் அறைக்குச் சென்றுவிட்டு) நம்மில் யாரிடம் முதலில் வந்தாலும் தங்களிடமிருந்து கருவேலம் பிசினின் துர்வாடை வருகிறதே! பிசின் சாப்பிட்டீர்களா? என்று கூறிட வேண்டும்என்று கூடிப் பேசி முடிவு செய்து கொண்டோம்.

எங்களில் ஒருவரிடம் நபி(ஸல்) அவர்கள் வந்தபோது முன்பு பேசிவைத்திருந்தபடி கூறினோம். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘(அப்படியெல்லாம்) ஒரு குறையும் நடந்திடவில்லை. ஸைனப் பின்த் ஜஹ்ஷிடம் (அவரின் அறையில்) தேன் அருந்தினேன். (அவ்வளவுதான் சத்தியமாக) இனிமேல் ஒருபோதும் இவ்வாறு செய்யமாட்டேன்என்று கூறினார்கள். எனவே, ‘நபியே! உங்களுடைய துணைவியரின் திருப்தியை எதிர்பார்த்து, அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த ஒன்றை நீங்கள் ஏன் விலக்கிக் கொள்கிறீர்கள்?’ என்று தொடங்கி நீங்கள் இருவரும் இதற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் (அது உங்களுக்கே நன்று)என முடியும் (திருக்குர்ஆன் 66:1-4) வசனங்களை அல்லாஹ் அருளினான். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : புகாரி-5267 

(இந்த 66:4 வது வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள) நீங்கள் இருவரும்என்பது ஆயிஷா(ரலி) அவர்களையும், ஹஃப்ஸா(ரலி) அவர்களையுமே குறிக்கிறது. (திருக்குர்ஆன் 66:3 வது வசனத்தில்) நபி தம் துணைவியரில் ஒருவரிடம் (ஹஃப்ஸா ரலி )  நான் தேன் தான் அருந்தினேன். (சத்தியமாக இனி நான் அதனை அருந்தமாட்டேன். இது குறித்து யாரிடமும் சொல்லி விடாதே)என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்‌. ஆனால்,  அதை வெளிப்படுத்திய போது அல்லாஹ் அதையும் கண்டித்து வசனத்தை இறக்கினான். 

ரகசியத்தைப் பாதுகாத்த மேன்மக்கள்…

حَدَّثَنَا أَبُو الْيَمَانِ ، أَخْبَرَنَا شُعَيْبٌ ، عَنِ الزُّهْرِيِّ ، قَالَ : أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللهِ أَنَّهُ سَمِعَ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا يُحَدِّثُ

 

أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ حِينَ تَأَيَّمَتْ حَفْصَةُ بِنْتُ عُمَرَ مِنْ خُنَيْسِ بْنِ حُذَافَةَ السَّهْمِيِّ ، وَكَانَ مِنْ أَصْحَابِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم قَدْ شَهِدَ بَدْرًا تُوُفِّيَ بِالْمَدِينَةِ قَالَ عُمَرُ فَلَقِيتُ عُثْمَانَ بْنَ عَفَّانَ فَعَرَضْتُ عَلَيْهِ حَفْصَةَ فَقُلْتُ إِنْ شِئْتَ أَنْكَحْتُكَ حَفْصَةَ بِنْتَ عُمَرَ قَالَ سَأَنْظُرُ فِي أَمْرِي فَلَبِثْتُ لَيَالِيَ فَقَالَ : قَدْ بَدَا لِي أَنْ لاَ أَتَزَوَّجَ يَوْمِي هَذَا قَالَ عُمَرُ فَلَقِيتُ أَبَا بَكْرٍ فَقُلْتُ إِنْ شِئْتَ أَنْكَحْتُكَ حَفْصَةَ بِنْتَ عُمَرَ فَصَمَتَ أَبُو بَكْرٍ فَلَمْ يَرْجِعْ إِلَيَّ شَيْئًا فَكُنْتُ عَلَيْهِ أَوْجَدَ مِنِّي عَلَى عُثْمَانَ فَلَبِثْتُ لَيَالِيَ ثُمَّ خَطَبَهَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم فَأَنْكَحْتُهَا إِيَّاهُ فَلَقِيَنِي أَبُو بَكْرٍ فَقَالَ لَعَلَّكَ وَجَدْتَ عَلَيَّ حِينَ عَرَضْتَ عَلَيَّ حَفْصَةَ فَلَمْ أَرْجِعْ إِلَيْكَ

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: உமர் (ரலி) அவர்கள், தனது மகள் ஹஃப்ஸா (ரலி) விதவையானபோது கூறுகிறார்கள்: நான் உஸ்மான் (ரழி) அவர்களைச் சந்தித்து அவரிடம், ”நீங்கள் விரும்பினால் ஹஃப்ஸாவை மணம் முடித்து வைக்கிறேன்என்று கூறினேன். உஸ்மான் (ரலி) என் விஷயத்தில் நான் யோசனை செய்து கொள்கிறேன்என்றார். சில நாட்கள்வரை நான் எதிர்பார்த்திருந்த பின், உஸ்மான் (ரலி) என்னைச் சந்தித்து, ”இப்போது எனக்கு திருமணம் செய்து கொள்ளும் நோக்கமில்லைஎன்று கூறிவிட்டார். பின்பு அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்களை சந்தித்து, ”நீங்கள் விரும்பினால் ஹஃப்ஸாவை உங்களுக்கு திருமணம் செய்து தருகிறேன்என்று கூறினேன். அபூபக்கர் (ரலி) எதுவும் பதில் கூறாமல் மெªனமாக இருந்தார். அப்போது நான் உஸ்மான் (ரலி) மீது கோபம் கொண்டதைவிட அதிகமாகக் கோபமடைந்தேன்.

சில நாட்களுக்குப் பின் நபி (ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவை பெண் கேட்டார்கள்; மணமுடித்துக் கொடுத்தேன். அப்போது அபூபக்கர் (ரலி) என்னைச் சந்தித்து, ”நீங்கள் என்னிடம் ஹஃப்ஸாவை மணந்து கொள்ளுமாறு கேட்டதற்கு நான் எந்தப் பதிலையும் சொல்லவில்லை என்பதற்காக என் மீது கோபமடைந்தீர்கள் அல்லவா?” என்று கேட்டார்கள். நான் ஆம்என்றேன். நீங்கள் என்னிடம் கூறியபோது என்னை பதில்கூறத் தடுத்த காரணம் நபி (ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவைப் பற்றி (விசாரித்ததை) நினைவு கூர்ந்ததை நான் அறிந்தி ருந்தேன். நான் நபி (ஸல்) அவர்களின் ரகசியத்தை பகிரங்கப்படுத்த விரும்பவில்லை. நபி (ஸல்) அவர்கள் திருமணம் செய்யாமல் விட்டிருந்தால் நான் ஹஃப்ஸாவை ஏற்றுக் கொண்டிருப்பேன்என்று கூறினார்கள். ( நூல்: புகாரி )

 عن أنس : أَتَانَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم ، وَنَحْنُ صِبْيَانٌ ، فَسَلَّمَ عَلَيْنَا ، وَأَرْسَلَنِي فِي حَاجَةٍ ، وَجَلَسَ فِي الطَّرِيقِ يَنْتَظِرُنِي ، حَتَّى رَجَعْتُ إِلَيْهِ ، قَالَ : فَأَبْطَأْتُ عَلَى أُمِّ سُلَيْمٍ ، فَقَالَتْ : مَا حَبَسَكَ ؟ فَقُلْتُ : بَعَثَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم فِي حَاجَةٍ ، قَالَتْ : مَا هِيَ ؟ قُلْتُ : إِنَّهَا سِرٌّ ، قَالَتْ : فَاحْفَظْ سِرَّ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم. البُخَارِي\"في (الأدب المفرد)

அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். எங்களுக்கு ஸலாம் கூறினார்கள். என்னை அழைத்து ஒரு வேலைக்காக அனுப்பி வைத்தார்கள். என் தாயிடம் நான் தாமதமாகச் சென்றபோது, ”ஏன் தாமதம்?” என்று என் தாய் கேட்டார். நான், ”நபி (ஸல்) அவர்கள் என்னை ஒரு வேலையாக அனுப்பி வைத்தார்கள்என்றேன். என் தாயார், ”என்ன வேலை?” என்று கேட்டார். நான் அது ரகசியம்என்றேன். தாயார், ”நபி (ஸல்) அவர்களின் ரகசியத்தைப் பற்றி எவரிடமும் சொல்லிவிடாதே…” என்று கூறினார். அனஸ் (ரலி) அவர்களின் மாணவர் ஸாபித் (ரஹ்) அவர்களிடம், ”ஸாபித்தே! அல்லாஹவின் மீது ஆணையாக! அந்த ரகசியத்தை யாரிடமாவது நான் சொல்வதாயிருந்தால் அதை உம்மிடம் சொல்லி இருப்பேன்என்று கூறினார்கள். ( நூல்: முஸ்லிம்)

حَدَّثَنَا مُوسَى ، عَنْ أَبِي عَوَانَةَ ، حَدَّثَنَا فِرَاسٌ ، عَنْ عَامِرٍ ، عَنْ مَسْرُوقٍ حَدَّثَتْنِي عَائِشَةُ أُمُّ الْمُؤْمِنِينَ قَالَتْ

إِنَّا كُنَّا أَزْوَاجَ النَّبِيِّ صلى الله عليه وسلم عِنْدَهُ جَمِيعًا لَمْ تُغَادَرْ مِنَّا وَاحِدَةٌ فَأَقْبَلَتْ فَاطِمَةُ – عَلَيْهَا السَّلاَمُ – تَمْشِي لاَ وَاللَّهِ مَا تَخْفَى مِشْيَتُهَا مِنْ مِشْيَةِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَلَمَّا رَآهَا رَحَّبَ قَالَ مَرْحَبًا بِابْنَتِي ثُمَّ أَجْلَسَهَا عَنْ يَمِينِهِ ، أَوْ عَنْ شِمَالِهِ ثُمَّ سَارَّهَا فَبَكَتْ بُكَاءً شَدِيدًا فَلَمَّا رَأَى حُزْنَهَا سَارَّهَا الثَّانِيَةَ إِذَا هِيَ تَضْحَكُ فَقُلْتُ لَهَا أَنَا مِنْ بَيْنِ نِسَائِهِ خَصَّكِ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم بِالسِّرِّ مِنْ بَيْنِنَا ثُمَّ أَنْتِ تَبْكِينَ فَلَمَّا قَامَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم سَأَلْتُهَا عَمَّا سَارَّكِ

நபி (ஸல்) அவர்களின் இறப்பு நெருங்கிக் கொண்டிருந்த போது) நபி (ஸல்) அவர்களின் துணைவியர்களான எங்களில் ஒருவர் கூட விடுபடாமல் நாங்கள் அனைவரும் அவர்கள் அருகில் இருந்து கொண்டிருந்தோம். அப்போது (நபியவர்களின் புதல்வியார்) ஃபாத்திமா (ரலி) நடந்து வந்தார்.

அல்லாஹ்வின் மீதாணையாக! அவரின் நடை நபி (ஸல்) அவர்களின் நடைக்கு ஒத்ததாகவே அமைந்திருந்தது. ஃபாத்திமாவைக் கண்ட போது நபி (ஸல்) அவர்கள், “என் மகளே! வருக!என்று வாழ்த்தி வரவேற்றார்கள். பிறகு அவரைத் தமது வலப்பக்கத்தில் அல்லது இடப்பக்கத்தில் அமர்த்திக் கொண்டு, அவரிடம் ரகசியமாக ஏதோ சொன்னார்கள். அதைக் கேட்ட போது ஃபாத்திமா பலமாக அழுதார். அவருடைய துக்கத்தைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் இரண்டாவது முறையாக அவரிடம் ஏதோ இரகசியம் சொன்னார்கள். அப்போது அவர் சிரித்தார்.

அப்போது நான் நபி (ஸல்) அவர்களின் துணைவியரிடையே இருந்து கொண்டு ஃபாத்திமாவிடம், “எங்களை விட்டு விட்டு உங்களிடம் மட்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரகசியம் சொன்னார்கள். பிறகு நீங்கள் அழுதீர்களேஎன்று கூறிவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்தவுடன் அவர்கள் கூறிய ரகசியம் பற்றி ஃபாத்திமாவிடம் கேட்டேன்.

அதற்கு ஃபாத்திமா அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ரகசியத்தை பரப்ப நான் விரும்பவில்லைஎன்று கூறி விட்டார். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்த போது ஃபாத்திமா அவர்களிடம் நான், “உங்கள் மீது எனக்குள்ள உரிமையை முன்வைத்துக் கேட்கிறேன். அந்த ரகசியம் என்ன என்று நீங்கள் சொல்லியே ஆக வேண்டும்என்றேன். ஃபாத்திமா, “சரி இப்போது (தெரிவிக்கிறேன்)என்று கூறிவிட்டு (பின்வருமாறு) தெரிவித்தார்.

முதலாவது முறை என்னிடம் நபி (ஸல்) அவர்கள் ரகசியம் சொன்ன போது, “எனக்கு ஜிப்ரீல் ஒவ்வோர் ஆண்டும் ஒருமுறை குர்ஆனை ஓதிக் காட்டி நினைவூட்டுவார். ஆனால் அவர் இந்த ஆண்டு இரண்டு முறை அதனை ஓதிக் காட்டினார். என் இறப்பு நெருங்கி விட்டதாகவே நான் கருதுகிறேன். ஆகவே நீ அல்லாஹ்வை அஞ்சிக் கொள். பொறுமையாக இரு. நான் உனக்கு முன்னால் நல்லபடி சென்று விடுவேன்என்று சொன்னார்கள். ஆகவே தான் நான் உங்களுக்கு முன்னிலையில் அவ்வாறு அழுதேன்.

எனது பதற்றத்தைக் கண்ட போது, நபி (ஸல்) அவர்கள் இரண்டாவது முறையாக, “ஃபாத்திமா! இறை நம்பிக்கையுள்ள பெண்களுக்குஅல்லது இந்தச் சமுதாயத்தின் பெண்களுக்குநீ தலைவியாக இருக்க விரும்பவில்லையா?” என்று ரகசியமாகக் கேட்டார்கள். (  அறி : ஆயிஷா (ரலி), நூல்: புகாரி-6285 , 6286, 3263 )

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ரகசியத்தைப் பேணி வாழும் நன்மக்களாக நம் அனைவரையும் ஆக்கியருள்வானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

No comments:

Post a Comment