Thursday 4 July 2024

ஹிஜ்ரத் இல்லை என்றால்?

 

ஹிஜ்ரத் இல்லை என்றால்?


இன்று நாம் நம்மை முஸ்லிமாக அடையாளப்படுத்துவதில் அடைகிற பெருமிதமும், ஆனந்தமும் அளவிட முடியாதது.

அந்த ஆனந்தத்தை, அந்த பெருமிதத்தை நாம் அடைய  எவ்வளவு பெரிய தியாகங்களை அர்ப்பணிப்புகளை முதல் நிலை முஸ்லிம்களாக வாழத்துவங்கிய நபி (ஸல்) அவர்களின் காலத்து முஸ்லிம்களான நபித்தோழர்கள் செய்துள்ளார்கள் என்பதை நாம் அவதானிக்க கடமைப் பட்டிருக்கின்றோம்.

அவர்கள் இஸ்லாமிய வாழ்க்கையை துவக்கிய கால கட்டத்தில் தாம் ஒரு முஸ்லிம் என்று கூட தங்களால் சொல்ல முடியாத அளவுக்கு அவஸ்தை பட்டார்கள். தங்கள் ஈமானை மறைத்து, பிறர் கண்ணில் இருந்து இஸ்லாமிய அடையாளத்தை மறைத்து அவர்கள் வாழ்ந்தார்கள்.

அன்றைய இஸ்லாமிய வாழ்வை மூன்று பாகங்களாக இஸ்லாமிய வரலாறு நமக்கு அறிமுகப்படுத்துகின்றது.

ஒன்று மக்கா வாழ்க்கை, இரண்டு மதீனா வாழ்க்கை, மூன்று மக்கா வெற்றி பெற்ற பின்னர் உள்ள பரந்து விரிந்த இப்பிரபஞ்சத்தின் இஸ்லாம் பட்டொளி வீசி சுடர் விட்டு ஒளிர்ந்த வாழ்க்கை.

முந்தைய வாழ்க்கையில் இஸ்லாமிய வாழ்க்கையை வாழ்ந்து விட மாட்டோமா? என்கிற கனவுகளும், ஏக்கங்களும் மட்டுமே இருந்தது.

இரண்டாம் வாழ்க்கை கனவுகளை அடைய, ஏக்கங்களை கைவசமாக்கிட போராட்டங்களையும், உயிர் தியாகங்களையும் முழு மூச்சாக கொண்டு பயணிக்க வேண்டி இருந்தது.

மூன்றாம் வாழ்க்கை இந்த தீன் முழுமையடைந்து எல்லோருக்கும் எல்லாமும் சாத்தியம் என்கிற வாழ்க்கை.

இந்த வாழ்க்கையை சாத்தியமாக்கிய பூமி மதீனா எனும் புண்ணிய பூமி.

ஆம்! இஸ்லாத்திற்கு  பெரும் பெரும் வெற்றிகள் இம்மண்ணில் இருந்தே ஆரம்பிக்கப்ட்டன. 

முழு மனித சமுதாயத்திற்கும் இணைவைப்பு எனும் இருளில் இருந்து ஏகத்துவம் எனும் ஒளியைஏற்படுத்தி மனிதர்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தின் பக்கமும் இம்மண்ணின் பக்கமும் விரைந்தனர். 

பூமியில் உள்ளவர்களுக்காக வெளியாக்கப்பட்ட அவ்வளவு நண்மையும் இந்த கண்ணியமான பூமியில் இருந்தே வெளியானது. 

இஸ்லாமிய சாம்ராஜியம் இங்கு தான் ஆரம்பத்தில் கட்டியெழுப்பப்பட்டு பெரும் வல்லரசுகள் கூட இம்மண்ணில் மண்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இவைகள் எல்லாம் எங்கிருந்து கிடைத்தது இந்த உம்மத்துக்கு? இதன் அஸ்திவாரம் எங்கு அமைக்கப்பட்டது?

அதற்கான விடை இஸ்லாமிய வரலாற்றில் ஒற்றை வார்த்தையில் கிடைக்கும். ஆம்! "ஹிஜ்ரத்" எனும் தூய பயணத்தில் இருந்து தான் இத்தனையும் இந்த உம்மத்துக்கு சாத்தியமானது.

 

ஹிஜ்ரத் இல்லாத இஸ்லாம் என்பது கற்பனை செய்து பார்க்க முடியாத ஒன்றாகும்.

ஹிஜிரி 1445 முடிந்து இன்னும் ஓரிரு நாட்களில் ஹிஜிரி 1446 துவங்க  உள்ளது.

இஸ்லாமியர்களின் புத்தாண்டாகத்தான் நம்மில் பெரும்பாலானவர்களால் ஹிஜ்ரத் பார்க்கப்படுகிறது.

மாறாக,. இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் தாங்கள் பிறந்து வளர்ந்த பூர்வீக பூமியான மக்காவை துறந்து வெளியேறி 1446 ஆண்டுகள் ஆகி விட்டது.

வெறுத்தல், துறத்தல், வெளியேறுதல் என்ற பொருள் தரக் கூடிய பெருமானாரின் ஹிஜ்ரத் நடந்து 1445 ஆண்டுகள் முடிந்து 1446 ஆவது ஆண்டு துவங்க இருக்கிறது.

இந்த செய்தியைத்தான் ஹிஜிரி ஆண்டின் துவக்கம் முதலில் நினைவு கூறுகிறது.

அடுத்து நெருக்கடியை சந்திக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் "ஹிஜ்ரத்தை" நினைவு கூர்ந்து நமக்கான மீட்சியை அங்கிருந்து ஆய்வு செய்து பெற்றுக் கொள்ளுமாறு ஹிஜ்ரத் தூண்டுகிறது.

அடுத்து, இந்த உலகம்  முஸ்லிம்களுக்கு சுறுங்கி விடும் என்று கருதக்கூடாது மாறாக, முஸ்லிம்களுக்காக விசாலமாகிக் கொண்டே செல்லும் என்பதையும் ஹிஜ்ரத் நமக்கு சொல்கிறது.

قُلْ يٰعِبَادِ الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوْا رَبَّكُمْ‌ لِلَّذِيْنَ اَحْسَنُوْا فِىْ هٰذِهِ الدُّنْيَا حَسَنَةٌ ‌ وَاَرْضُ اللّٰهِ وَاسِعَةٌ ‌ اِنَّمَا يُوَفَّى الصّٰبِرُوْنَ اَجْرَهُمْ بِغَيْرِ حِسَابٍ‏

(நபியே!) நீர் கூறும்: ஈமான் கொண்ட நல்லடியார்களே! உங்களுடைய இறைவனுக்கு பயபக்தியாக இருங்கள்; இவ்வுலகில் அழகாய் நன்மை செய்தோருக்கு அழகிய நன்மையே கிடைக்கும் - அல்லாஹ்வுடைய பூமி விசாலமானது; பொறுமையுள்ளவர்கள் தங்கள் கூலியை நிச்சயமாகக் கணக்கின்றிப் பெறுவார்கள். ( அல்குர்ஆன்:  39: 10 )

ஹிஜ்ராவின் தொடக்க காலம் தொட்டு மாநபி ஸல் அவர்கள் இந்த உலகை விட்டு விடை பெறும் வரை இறைச் செய்தி எனும் வஹியின் மூலம் இந்த உம்மத்தை ஆன்மீக வளர்ச்சியிலும் லௌகீக வளர்ச்சியிலும் வார்த்தெடுத்தார்கள். 

இன்று உலகெங்கும் ரீங்காரமிடும் உயர்ந்த, கண்ணியமிக்க அதான்' (பாங்கு) தான் முதன் முதலாக மார்க்கமாக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, தொழுகை அமைப்பு, நோன்பு, ஜிஹாத், ஜகாத், ஸதகா, ஹஜ், போன்ற உயரிய வழிபாடும் வழிபாட்டு முறைகளும் கடமையாக்கப்பட்டது.

மனிதவள மேம்பாட்டுடன் தொடர்பான நல்லொழுக்க விழுமியங்கள் போதிக்கப்பட்டது.

 

மனிதவளத்தை நாசமாக்கும் பல்வேறுபட்ட தீய பண்பாடுகள் அடையாளப்படுத்தப்பட்டு வேரறுக்கப்பட்டது.

ஒரு மனிதன் மனிதனாக வாழ தேவையான அனைத்து வழிகாட்டலும் வழங்கப்பட்டது.

சுமார் பத்தாண்டுகால ஹிஜ்ரத்துக்கு பிந்தைய மதீனா வாழ்க்கை தான் உலக அழிவு நாள் வரையிலான அனைத்து மக்களுக்கும் முன்மாதிரியான வாழ்க்கை முறையாக ஆக்கப்பட்டது.

சிறுநீர் கழிப்பது முதற்கொண்டு மனித வாழ்க்கையை சீராக கொண்டு செல்வது வரையிலான வாழ்க்கை முறை கற்றுக் கொடுக்கப்பட்டது. 

சுவர்கத்தைப் பற்றி வாயால் ஓதி காதால் கேட்ட ஒரு சமூகம் தாங்கள் வாழும் காலத்திலேயே சுவனவாசிகளை கண்ணாரக் கண்டது.

ஏன்? கனவில் கூட தம்மோடு வாழ்ந்தவர்கள் சுவர்கத்தில் நுழைவதைப் பார்த்தது. சுவனத்திற்குள் சென்று தம் தோழர்களின் அந்தஸ்துகளைக் கண்டது.

நரகத்தைப் பற்றி வாயால் ஓதி காதால் கேட்ட ஒரு சமூகம் தாங்கள் வாழும் காலத்திலேயே நரகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பாக எறியப்பட்ட கல் விழும் சப்தத்தைக் கேட்டது. 

ஹிஜ்ரத்துக்குப் பிந்தைய வாழ்க்கை தான் எவ்வளவு விந்தையானது

ஹிஜ்ரத் பயணம் என்பது....

لمنهج القرآن الكريم في إيثار الإجمال والإيجاز في أغلب الشـأن أشارت بعض الآيات الكريمة إلى أسباب الهجرة إشارات تعتمد على اللفظة الموحية والكلمة الجامعة،

ஹிஜ்ரத் பயணம் என்பது உலக ஆசையை, சுக போக வாழ்க்கையை, உயிர் வாழ வேண்டும் என்ற நோக்கில் அமைந்த பயணம் அல்ல அது.

மாறாக, அந்த பயணம் மேற்கொள்வதற்கான அடிப்படை காரணங்களை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அல்குர்ஆனில் பல்வேறு இடங்களில் பதிவு செய்துள்ளான்.

1) வெளியேற்றம் என்பது அந்த மக்களின் மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டது.

மிகவும் சிறுபான்மையாக இருந்த அவர்கள் இறை நம்பிக்கை கொண்ட ஒரே காரணத்திற்காக பல்வேறு வகைகளில் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.  எனவே, சித்ரவதையில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

فقد جاء في الآية 195 من سورة آل عمران ﴿.. فَٱلَّذِينَ ‌هَاجَرُواْ ‌وَأُخۡرِجُواْ ‌مِن ‌دِيَٰرِهِمۡ
‌ؕ وَ اللّٰهُ عِنْدَهٗ حُسْنُ الثَّوَابِ‏
فَالَّذِيْنَ هَاجَرُوْا وَاُخْرِجُوْا مِنْ دِيَارِهِمْ وَاُوْذُوْا فِىْ سَبِيْلِىْ وَقٰتَلُوْا وَقُتِلُوْا لَاُكَفِّرَنَّ عَنْهُمْ سَيِّاٰتِهِمْ وَلَاُدْخِلَنَّهُمْ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ‌ۚ ثَوَابًا مِّنْ عِنْدِ اللّٰهِ
وبناء الفعل للمجهول في (أخرجوا) يدل على أن المسلمين أجبروا على الخروج من ديارهم بسبب ما أصابهم من أذى على أيدي المشركين.

எனவே யார் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறினார்களோ மேலும் வெளியேற்றப்பட்டார்களோ, மேலும் என் பாதையில் துன்பப்பட்டார்களோ, மேலும் போரிட்டார்களோ, மேலும் (போரில்) கொல்லப்பட்டார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் நிச்சயமாக அகற்றி விடுவேன்; இன்னும் அவர்களை எவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கின்றனவோ அந்தச் சுவனபதிகளில் நிச்சயமாக நான் புகுத்துவேன்” (என்று கூறுவான்); இது அல்லாஹ்விடமிருந்து (அவர்களுக்குக்) கிட்டும் சன்மானமாகும்; இன்னும் அல்லாஹ்வாகிய அவனிடத்தில் அழகிய சன்மானங்கள் உண்டு. ( அல்குர்ஆன்: 3: 195 )

2) இறைவனின் திருப் பொருத்தத்தை தேடிய நிலையில் வெளியேறிய பயணம் அது.

وورد هذا الفعل بصيغة المبني للمجهول في الآية 8 في سورة الحشر للدلالة على نفس المعنى
لِلْفُقَرَآءِ الْمُهٰجِرِيْنَ الَّذِيْنَ اُخْرِجُوْا مِنْ دِيَارِهِمْ وَاَمْوَالِهِمْ يَبْتَغُوْنَ فَضْلًا مِّنَ اللّٰهِ وَرِضْوَانًا وَّيَنْصُرُوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ‌ؕ اُولٰٓٮِٕكَ هُمُ الصّٰدِقُوْنَ‌ۚ‏

எவர்கள் தம் வீடுகளையும், தம் சொத்துகளையும் விட்டு, அல்லாஹ்வின் அருளையும், அவன் திருப் பொருத்தத்தையும் தேடியவர்களாக வெளியேற்றப்பட்டனரோ அந்த ஏழை முஹாஜிர்களுக்கும் (ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் அப்பொருளில் பங்குண்டு); அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் உதவி செய்து கொண்டிருக்கின்றனர் அவர்கள் தாம் உண்மையாளர்கள். ( அல்குர்ஆன்: 59: 8 )

3) இது தான் அது தான் என வரையறுக்கப்படாத பல்வேறு அநியாயங்கள் அவர்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையில் அதிலிருந்து விடுபட்டு வாழ வேண்டிய அவசியத்தில் மேற்கொண்ட பயணம் அது.

وفي سورة النحل جاء في الآية 41 ﴿وَٱلَّذِينَ ‌هَاجَرُواْ ‌فِي ‌ٱللَّهِ ‌مِنۢ ‌بَعۡدِ ‌مَا ‌ظُلِمُواْ…﴾ فالمهاجرون ظلموا قبل هجرتهم، ظلمهم المشركون ظلما متعدد الدرجات متنوع الأشكال، غير أن الآية لم تفصل أنواع الظلم وكيف وقع على هؤلاء المهاجرين الصابرين، وهي بهذا أشمل في الدلالة وأبلغ في المعنى، وأوقع في النفس، وأعمق في الحس.

وَالَّذِيْنَ هَاجَرُوْا فِى اللّٰهِ مِنْۢ بَعْدِ مَا ظُلِمُوْا لَـنُبَوِّئَنَّهُمْ فِى الدُّنْيَا حَسَنَةً وَلَاَجْرُ الْاٰخِرَةِ اَكْبَرُ لَوْ كَانُوْا يَعْلَمُوْنَۙ‏

கொடுமைப்படுத்தப்பட்ட பின்னர், எவர்கள் அல்லாஹ்வுக்காக நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றார்களோ, அவர்களுக்கு, நாம் நிச்சயமாக அழகான தங்குமிடத்தை இவ்வுலகத்தில் கொடுப்போம். இன்னும், அவர்கள் அறிந்து கொண்டார்களேயானால் மறுமையிலுள்ள (நற்) கூலி (இதைவிட) மிகவும் பெரிது; ( அல்குர்ஆன்: 16: 41 )

பிலால் (ரலி) கப்பாப் (ரலி) போன்றோர் வேதனை செய்யப்பட்டது. யாஸிர் (ரலி) சுமைய்யா (ரலி) போன்றோர் கொடுமை படுத்தப்பட்டது. பெருமானார் (ஸல்) அவர்கள் உட்பட பல முஸ்லிம்களுக்கு கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.  இவையெல்லாம் விட ஒட்டுமொத்த மக்காவும் சேர்ந்து மூன்றாண்டுகள் ஊர் விலக்கம் செய்தது என இழைக்கப்பட்ட அநீதிகளின் பட்டியல் மிக நீண்டது‌

4) இணைவைப்பு, இறைநிராகரிப்பு போன்ற சோதனையில் மீண்டும் வீழ்ந்திடாமல் தம் ஈமானைப் பாதுகாக்க மேற்கொண்ட பயணம் அது.

ஏனெனில், மக்கா குறைஷிகளின் எண்ண ஓட்டம் அப்படியாக இருந்தது. நாம் இழைக்கும் கொடுமைகளை தாங்க முடியாமல் மீண்டும் அவர்கள் பழைய இணைவைப்பு கொள்கைக்கு மாறி விடுவார்கள் என்று.

وأما الآية 110 في سورة النحل أيضا
ثُمَّ اِنَّ رَبَّكَ لِلَّذِيْنَ هَاجَرُوْا مِنْۢ بَعْدِ مَا فُتِنُوْا ثُمَّ جٰهَدُوْا وَصَبَرُوْۤا اِنَّ رَبَّكَ مِنْۢ بَعْدِهَا لَغَفُوْرٌ رَّحِيْم
فتتحدث عن فتنة بعض المهاجرين قبل هجرتهـم، وللمفسرين في تفسير معنى الفتنة الواردة في الآية آراء مختلفة، بعضها يذهب إلى أنها العذاب بقصد الردة، وبعضها الآخر يذهب إلى أن المعنى أن بعض المسلمين أعطى الكفار ما أرادوا بلسانه مكرها فكأنهم بذلك قد فتنوا أنفسهم..

இன்னும் எவர்கள் (துன்பங்களுக்கும்) சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டபின் (தம் வீடுகளைத் துறந்து) ஹிஜ்ரத் செய்து (வெளிக்கிளம்பினார்களோ), பின்பு அறப்போர் புரிந்தார்களோ இன்னும் பொறுமையைக் கையாண்டார்களோ, அவர்களுக்கு (உதவி செய்ய) நிச்சயமாக உம்முடைய இறைவன் இருக்கின்றான்; இவற்றுக்குப் பின்னரும், உம்முடைய இறைவன் மன்னிப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.  ( அல்குர்ஆன்: 16: 110 )

5) நிம்மதியாக இறைவனை வணங்கி வழிபட வேண்டும் என்ற ஆசைப் பயணம் அது.

உமர் (ரலி) அவர்கள் முஸ்லிமாகும் வரை நாங்கள் கஅபாவுக்கு அருகில் தொழக்கூட முடியாதவர்களாகவே இருந்தோம்என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரழி) கூறுகிறார்கள். ( நூல்: முக்தஸருஸ்ஸீரா)

இந்த செய்தியை பாருங்கள்! உமர் ரலி அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட அந்த தருணத்தில் சிறிய ஒரு இன்பம் அவர்களுக்கு ஏற்பட்டது. அந்த இன்பம் கூட இறைவனை நிம்மதியாக வணங்கி வழிபடும் விஷயமாகவே அமைந்திருந்தது. நாளடைவில் அதுவும் தடைபட்டது.

எனவே, இனியும் மக்காவில் வாழ்வது இஸ்லாமிய வாழ்க்கை வாழ்வதை கேள்விக்குறியாக்கி விடும் என்ற அச்சத்தால் இறைவனை நிம்மதியோடு வணங்க வேண்டும் என்ற நோக்கில் ஹிஜ்ரத் பயணம் மேற் கொண்டார்கள்.

முதல் படியே வெற்றிப்படி தான்....

அபீசீனியாவிற்குச் சென்ற முதல் ஹிஜ்ரத் ஆகட்டும், மதீனாவிற்கு மேற்கொண்ட இரண்டாம் ஹிஜ்ரத் ஆகட்டும் இரண்டு பயணங்களுமே மகத்தான வெற்றியையே முஸ்லிம் உம்மாவிற்கு பெற்றுத்தந்தது.

அங்கே, அபீசீனிய மன்னர் நஜ்ஜாஷி முஸ்லிம்களுக்கு புகலிடம் வழங்கினார். வாழ வழிவகை செய்தார். முஸ்லிம்களை கண்ணியப்படுத்தினார். தாமும் முஸ்லிமாகி அல்லாஹ் வழங்கிய கண்ணியத்தை பெற்றுக் கொண்டார்.

இங்கே மதீனாவாசிகள் அவர்களின் அற்புதமான பண்பாட்டால் முஸ்லிம்களுக்கு அடைக்கலம் தந்து தங்களுடைய அனைத்திலும் ஹிஜ்ரத் செய்து வந்தவர்களுக்கு சரிசமமாக பங்களித்து இதய சிம்மாசனத்தில் அமர வைத்து அழகு பார்த்தார்கள்.

ஒரு முஸ்லிம் முஹாஜிர்களின் தியாக மனப்பான்மையோடு, அன்ஸாரிகளின் அர்ப்பணிப்பு உணர்வோடு வாழ வேண்டும் என்ற உயரிய அடிப்படையை முன்மாதிரியாக இந்த "ஹிஜ்ரத்" நமக்கு உணர்த்துகிறது.

எந்த இறைவனை வணங்கி வழிபட முடியவில்லை என்று கருதி அச்ச மேலீட்டால் ஹிஜ்ரத் பயணம் மேற்கொண்டார்களோ, அந்த ஹிஜ்ரத் அவர்களின் விருப்பமான “இறைவனை வணங்கிட” வாய்ப்புகளை வளமாக வழங்கிய போது அந்த மேன்மக்கள் எப்படி நடந்து கொண்டார்கள்?..

எதிரிகள் தாக்குதல் நடத்திடும் அச்சம் நிலவிய போதும் தொழுகையில் இன்பம் கண்ட நபித்தோழர்...

வரலாற்று ஆசிரியர் காலித் முஹம்மத் காலித் (ரஹ்) அவர்கள் அப்பாத் இப்னு பிஷ்ர் (ரலி) அவர்களின் வரலாற்றை கூறுகின்ற போது அல்லாஹ்வின் ஒளி பொருந்திய அப்பாத் இப்னு பிஷ்ர்என்றே தமது நூலான ரிஜாலுன் ஹவ்லர் ரஸூலில் அறிமுகப்படுத்துவார்கள்.

ஹிஜ்ரி நான்காம் ஆண்டு நடை பெற்ற படையெடுப்புக்கு தாதுர் ரிகாவுஎனும் பெயர். இந்த யுத்தத்தில் தான் யுத்த கால தொழுகை முறை அறிமுகம் ஆனது.

நபித்தோழர்களின் ஈமானை பரிசோதிக்கும் முகமாக அமைந்து விட்டதோ எனும் எண்ணுமளவிற்கு பல்வேறு சோதனைகள் அங்கே நடைபெற்றன.

முறைவைத்து தான் பயணம் மேற்கொள்ளப்பட்டது. மொத்த படை வீரர்கள் 700 நபர்கள். ஆறு நபருக்கு ஒரு ஒட்டகம் வீதம் பயணத்திற்கு பயன் படுத்தப் பட்டது.

எந்த அளவுக்கெனில், நபித்தோழர்களின் பலருடைய நகங்களெல்லாம் கிழிந்து விழுந்து விட்டன.

பாறைகளையும், பாலைகளையும் கடந்து சென்றதால் பலருக்கு காயம் ஏற்பட்டு தங்களது துணிகளை கிழித்து காயத்திற்கு ஒட்டுப்போட்டுக்கொண்டனர்.

ஆதலால், அந்தப் போருக்கே தாதுர் ரிகாவு ஒட்டுத்துணிப்போர் என பெயர் வழங்கப்பட்டது.

பெரிய அளவில் போரெல்லாம் நடைபெறவில்லை. எதிரிகளை அச்சுறுத்துவதற்காகவே அந்தப் போர் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் முஸ்லிம்கள் திரும்பி விட்டனர்.

 

بعد أن فرغ رسول الله والمسلمين من غزوة ذات الرقاع نزلوا مكانا يبيتون فيه، واختار الرسول للحراسة نفرا من الصحابة يتناوبونها وكان منهم عمار بن ياسر وعباد بن بشر في نوبة واحدة.

ورأى عباد صاحبه عمار مجهدا، فطلب منه أن ينام أول الليل على أن يقوم هو بالحراسة حتى يأخذ صاحبه من الراحة حظا يمكنه من استئناف الحراسة بعد أن يصحو.

ورأى عباد أن المكان من حوله آمن، فلم لا يملأ وقته اذن بالصلاة، فيذهب بمثوبتها مع مثوبة الحراسة..؟!       

وقام يصلي..

واذ هو قائم يقرأ بعد فاتحة الكتاب سور من القرآن، احترم عضده سهم فنزعه واستمر في صلاته..!

ثم رماه المهاجم في ظلام الليل بسهم ثان نزعه وأنهى تلاوته..

ثم ركع، وسجد.. وكانت قواه قد بددها الاعياء والألم، فمدّ يمينه وهو ساجد الى صاحبه النائم جواره، وظل يهزه حتى استيقظ..

ثم قام من سجوده وتلا التشهد.. وأتم صلاته.

وصحا عمار على كلماته المتهدجة المتعبة تقول له:

" قم للحراسة مكاني فقد أصبت".

ووثب عمار محدثا ضجة وهرولة أخافت المتسللين، ففرّوا ثم التفت الى عباد وقال له:

" سبحان الله..

هلا أيقظتني أوّل ما رميت"؟؟

فأجابه عباد:

" كنت أتلو في صلاتي آيات من القرآن ملأت نفسي روعة فلم أحب أن أقطعها.

ووالله، لولا أن أضيع ثغرا أمرني الرسول بحفظه، لآثرت الموت على أن أقطع تلك الآيات التي كنت أتلوها"..!!

வழியில் ஓரிடத்தில் இளைப்பாருவதற்காக நபிகளார் படையினரை அனுமதித்தார்கள். இந்த இரவில் நமக்காக காவல் காற்பது யார்? என்று நபி {ஸல்} அவர்கள் வினவிய போது, முஹாஜிர்களில் அம்மார் இப்னு யாஸிர் (ரலி) அவர்களும், அன்ஸார்களில் அப்பாத் இப்னு பிஷ்ர் (ரலி) அவர்களும் முன் வந்தனர்.

 

நபிகளாரும், நபித்தோழர்களும் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். இரவின் ஒரு பகுதி கழிந்ததும் அப்பாத் (ரலி) அவர்கள், அம்மார் (ரலி) அவர்களிடம் நீங்கள் தூங்கிக் கொள்ளுங்கள். நான் காவல் காக்கின்றேன். பின்னர் நான் உறங்குகின்றேன் நீங்கள் காவல் காத்துக் கொள்ளுங்கள்.

கொஞ்ச நேரம் போனது அவர்களின் மனம் முழுவதும் இந்த ரம்மியமான இரவு வீணாகி விடக்கூடாது. பேசாமல் சிறிது நேரம் தொழுது விடுவோம் என ஆசை கொண்டிருந்தது.

தொழுகைக்கு தக்பீர் கட்டி நின்றார்கள். ஃபாத்திஹா வுக்குப் பின்னர் சூரா கஹ்ஃப் ஓத ஆரம்பித்தார்கள்.

பின்னால், வேவு பார்த்து வந்த எதிரி ஒருவன் அப்பாத் அவர்களின் மீது அம்பொன்றை எய்தான். பிடுங்கி தூர எறிந்து விட்டு தொழுகையை தொடர்ந்தார்கள்.

மீண்டும் ஒரு அம்பு, மீண்டும் ஒரு அம்பு என மூன்று அம்புகள் எய்யப்பட்டது. ஆனாலும் அசராமல் பிடுங்கி எறிந்து விட்டு தொழுகையைப் பூர்த்தி செய்து விட்டு அம்மார் (ரலி) அவர்களை எழுப்பினார்கள்.

எழுந்து பார்த்த அம்மார், அப்படியே அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்று விட்டார்கள்.

ஏன் முதல் முறை நீங்கள் தாக்கப்படும் போதே என்னை எழுப்பியிருக்க வேண்டாமா? எனக் கேட்டார்கள்.

தொழுகையில், குர்ஆனின் கஹ்ஃப் அத்தியாயத்தை ஓதிக் கொண்டிருந்தேன். இடையில் நிறுத்த என் மனம் விரும்ப வில்லை.

அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சொல்கின்றேன் அம்மாரே! நான் குர்ஆன் ஓதுவதை நிறுத்துவதை விட மரணித்து போவதையே விரும்புனேன். அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் படைக்கு காவலாக இருக்கும் படி கட்டளை இட்டிருந்ததால், என் மரணம் படைக்கு பாதகமாக அமைந்து விடக்கூடாதே என அஞ்சினேன்என்றார்கள். (நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}, அல் மஃகாஸீ லில் வாகிதீ)

மரணம் சமீபமாக இருக்கும் போது தொழ வேண்டும் என்று ஆசைப்பட்ட நபித்தோழர்....

فخرجوا به من الحرم ليقتلوه، فقال: دعوني أصلي ركعتين، ثم انصرف إليهم فقال: لولا أن تروا أن ما بي جزع من الموت لزدت، فكان أول من سن الركعتين عند القتل هو

குபைப் (ரலி) அவர்களைக் கொலை செய்வதற்காக மக்காவின்) புனித எல்லைக்கு வெளியே உள்ள இடத்திற்கு அவரைக் கொண்டு வந்தபோது, ‘என்னை இரண்டு ரக்அத்கள் தொழ விடுங்கள்என்று (குபைப்) கேட்டார். அவர்களும் அனுமதித்தபோது இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு, ‘மரணத்தை அஞ்சித் தான் நான் (நீண்ட நேரம் தொழுகிறேன்) என்று நீங்கள் எண்ணாவிட்டால் நான் (தொழுகையை) அதிகமாக்கியிருப்பேன்என்று கூறினார். ( நூல்: புகாரி )

மரணத்தின் விளிம்பில் இருக்கும் போது கூட தொழுகையை விடாத ஒப்பற்ற நபித்தோழர்...

 

عن هشام بن عروة ، عن أبيه ؛ أن المسور بن مخرمة أخبره ؛ أنه دخل على عمر بن الخطاب من الليلة التي طعن فيها . فأيقظ عمر لصلاة الصبح . فقال عمر : نعم . ولا حظ في الإسلام لمن ترك الصلاة . فصلى عمر ، وجرحه يثعب دما .

உமர் (ரலி) அவர்கள் கத்தியால் குத்தப்பட்டு மரணத்தின் மடியில் இருந்த மூன்று நாட்கள் எல்லா அறபோதங்களையும் செய்துகொண்டிருந்தார்கள்.

கலீஃபா உமர்  (ரலி) அவர்கள் தொழுகைக்கான அழைப்பொலி கேட்கும்போதெல்லாம் இரத்தம் வடிந்துகொண்டிருந்த நிலையிலேயே தொழுது கொண்டார்கள். தொழுகையை விட்டவனுக்கு இஸ்லாத்தில் இடம் இல்லைஎன்றார்கள் கலீஃபா. ( நூல்: முஸ்னத் அப்துர் ரஜ்ஜாக் )

ஆகவே, தான் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பின்பற்றத்தகுதியானவர்களின் பட்டியலில் அவர்களையும் இணைத்துக் கூறுகின்றான். அவர்களைப் பின்பற்றினால் அல்லாஹ்வின் பொருத்தம் உண்டு. மேலான ஜன்னத்தும் உண்டு என்று கொண்டாடிக் கூறுகின்றான்.

وَالسّٰبِقُوْنَ الْاَوَّلُوْنَ مِنَ الْمُهٰجِرِيْنَ وَالْاَنْصَارِ وَالَّذِيْنَ اتَّبَعُوْهُمْ بِاِحْسَانٍ رَّضِىَ اللّٰهُ عَنْهُمْ وَرَضُوْا عَنْهُ وَاَعَدَّ لَهُمْ جَنّٰتٍ تَجْرِىْ تَحْتَهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَاۤ اَبَدًا‌ ؕ ذٰ لِكَ الْـفَوْزُ الْعَظِيْمُ‏

இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக்கொண்டவர்களும், அவர்களை(எல்லா) நற்கருமங்களிலும் பின் தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான்; அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள்; அன்றியும் அவர்களுக்காக, சுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும். ( அல்குர்ஆன்: 9: 100 )

எல்லாவற்றுக்கும் மேலாக உங்களுக்கும் எனக்கும் ஹிஜ்ரத் பெற்றுத் தந்த பேறு ஒன்று இருக்கிறது.

இறைவன் நம்மை அழைக்கும் போது, நமக்கு ஏதேனும் கட்டளைகளை செய்யுமாறு கூறும் போது "இறைநம்பிக்கை கொண்டவர்களே!" என்று அழைக்கும் நற்பேற்றை பெற்றுத்தந்தது இந்த ஹிஜ்ரத் பயணம் தான்.

ஆகவே, பிறக்க இருக்கும் 1446 ஹிஜ்ரி புத்தாண்டை இந்த வரலாற்று நினைவுகளை அசை போட்டு வரவேற்போம்!

ஹிஜ்ரத்தின் மேன்மைகளை விளங்கி, உள்வாங்கி உண்மை முஸ்லிம்களாக வாழ்வோம்!!

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

5 comments:

  1. அல்ஹம்துலில்லாஹ் ஹஜ்ரத்

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ் ஹழ்ரத்

    ReplyDelete
  3. واه واه ما شاء الله 💐

    ReplyDelete
  4. மாஷா அல்லா அருமையான பதிவு காலத்திற்கு ஏற்ற தகுந்த பொக்கிஷம் அல்லாஹுத்தஆலா தங்களுக்கு ஈருலகிலும் நற்பாக்கியத்தை நல்குவானாக

    ReplyDelete
  5. அல்ஹம்துலில்லாஹ் ஹஜ்ரத்.
    ஹிஜ்ரத் குறித்து அருமையான தகவல்களை புதுமையான கண்ணோட்டத்தில் வழங்கியுள்ளீர்கள். جزاكم الله خير الجزاء يا استاذ الكريم 💖

    ReplyDelete