Thursday 8 August 2024

முஸ்லிம் சமூகத்தை நிர்க்கதியாக்கத்துடிக்கும் ஃபாசிஸம்!!

 

முஸ்லிம் சமூகத்தை நிர்க்கதியாக்கத்துடிக்கும் ஃபாசிஸம்!!


வக்ஃபுகளின் மீதான சட்டத் திருத்த மசோதா நேற்று (08/05/2024 வியாழக்கிழமை) மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. 

இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளின் ஒட்டுமொத்த ஆதரவும் கிடைக்காத நிலையில், குறிப்பாக இந்தியா கூட்டணி கட்சிகளையும் தாண்டி பல கட்சிகள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்த நிலையில் மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்பியுள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், 1995-ல் திருத்தம் செய்யப்பட்ட வஃக்புகளின் சட்டம் தற்போது அமலில் உள்ளது. 

இதில் மேலும், மேற்கொண்டு 40 வகையான திருத்தங்கள் செய்து மசோதாவை நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. 

அடுத்த வாரம் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டிருந்த இந்த மசோதா முன்கூட்டியே தாக்கல் செய்தப்பட்டதன் ரகசியம் என்னவெனில், வஃக்பு மசோதாவுக்கு நாடு முழுவதிலும் இருந்து வலுத்து வரும் எதிர்ப்புகள் காரணமாக முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த காலங்களைப் போல திட்டமிட்டபடி பாஜக -வால் மசோதாவை வெற்றிகரமாக ஆக்க முடியவில்லை.

இந்திய ராணுவம் மற்றும் மத்திய ரயில்வே துறைக்கு அடுத்து மூன்றாவது நிலையில் அதிக நிலங்களை கொண்டவை முஸ்லிம்களின் வஃக்பு சொத்து. இதற்கு நாடு முழுவதிலும் சுமார் 9.4 லட்சம் ஏக்கர் அளவிலான 8.7 லட்சம் நிலங்கள் உள்ளன.

கண்களை உறுத்திய சொத்துக்களின் எண்ணிக்கை..

இந்த சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்துள்ளதின் பிண்ணனியை நாம் ஆராய்ந்தோமேயானால் முழு முதற்காரணமாக வக்ஃபு வாரியத்தின் சொத்துகளின் மதிப்பீடு பாசிஸத்தின் கண்களை உறுத்துவதாய் அமைந்துள்ளது எனலாம்.

நேற்றைய (08/08/2024) தமிழ் திசை இந்து நாளேட்டில் குறிப்பிடப்பட்ட செய்தியை நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.

மத்திய அரசின் அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, ‘கடந்த 2009 வரை வஃக்புகளிடம் வெறும் 3 லட்சம் நிலங்கள், 4 லட்சம் ஏக்கர் அளவில் இருந்தன. அடுத்த 13 வருடங்களில் இதன் எண்ணிக்கை 8,72,292 என சுமார் 8 லட்சம் ஏக்கர் என்ற அளவில் அதிகரித்துவிட்டது. இதற்கு 1995-ல் வஃக்புக்களுக்கு கிடைத்த கூடுதல் அதிகாரம் தான் காரணம் என தெரிந்துள்ளது.

புதிய மசோதாவின் முக்கியத் திருத்தங்கள்: 

இந்த சட்ட திருத்தத்தில் வக்ஃபுகளின் சொத்துகள் அனைத்தும் இணையதளம் வழியாக பொதுமக்கள் அனைவரது கவனத்தில் பதிவு செய்யப்படுகிறது. 

 

தற்போது நாடு முழுவதிலும் 32 வக்ஃபு வாரியங்கள் உள்ளன. இவற்றில் ஷியாவுக்களான வஃக்பு வாரியம், உத்தரப்பிரதேசத்தில் மட்டும் அமைந்துள்ளது. இதற்கு ஷியா பிரிவினர் உபியில் அதிகம் இருப்பது காரணம். 

இதுபோல், போரா மற்றும் அகாகானி முஸ்லிம்களுக்காகவும் தனியாக ஒரு வஃக்பு வாரியம் அமைக்க புதிய மசோதாவில் வழிவகை செய்யப்படுகிறது. 

தற்போது மத்திய அமைச்சர் தலைமையிலான வக்ஃபு கவுன்சிலில் பெண் உறுப்பினர்களையும் நியமிக்க புதிய சட்டத்தில் கட்டாயமாகிறது.

சட்டதிருத்தத்தின் காரணம் என்ன? - 

நாட்டின் மூன்றாவது நிலையில் அதிக சொத்துக்கள் கொண்ட வஃக்புகளால், ஏழை முஸ்லிம்களுக்கு பலன் கிடைப்பதில்லை எனக் கருதப்படுகிறது. 

இதன் பெரும்பாலான சொத்துக்கள் முஸ்லிம்களில், பல முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் செல்வந்தர்களால் அனுபவிக்கப்பட்டு வருவதாகவும் புகார்கள் உள்ளன.

மேலும் இப்புகார்களில் இந்த இரண்டு தரப்பினரால் பல வஃக்புகளின் நிர்வாகங்களில் சட்டவிரோதமான தலையீடுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இந்த வஃக்புகள் 11 மாதங்கள் முதல் அதிகபட்சம் 30 வருடங்கள் வரை வாடகைக்கு விடப்படுகிறது.

இந்த விவகாரத்திலும் பல சட்ட மீறல்கள் நடைப்பதாகவும் புகார்கள் உள்ளன. இதுபோல், வாடகைக்கு விடப்படும் நிலங்களில் சட்டவிரோதமாக பல கட்டிடங்கள் உள்ளன. 

இவற்றின் கட்டிட வரைபடங்கள் சம்மந்தப்பட்ட அரசு நிர்வாக அலுவலகங்களில் முறையாகப் பதிவு செய்யப்படுவதில்லை. இவை, வஃக்புக்கு சொந்தமானவை என்பதால் இவற்றின் மீது அரசு நிர்வாக அதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பது சிக்கலாக உள்ளது. 

இதேபோல், வக்ஃபுகளுக்கு தேர்தல் முறையில் முத்தவல்லி உள்ளிட்ட நிர்வாகிகள் அமர்த்தப்டுகின்றனர். இவர்களின் பதவிக்காலம் வெறும் மூன்று வருடங்களுக்கு என்றிருந்தாலும் அவர்கள் தம் செல்வாக்கை பயன்படுத்தி பதவி நீட்டிப்பை பெறுவதாகவும் புகார்கள் உள்ளன.

இதன் பிறகும் அவர்கள் வக்ஃபு சட்டத்திலுள்ள ஓட்டைகளை பயன்படுத்தி நீதிமன்றங்களின் வழக்கு தொடுத்து தேர்தலுக்கு தடை பெறுவதும் வழக்கமாக உள்ளது. 

இந்த தடைகளால் முத்தவல்லி உள்ளிட்ட வக்ஃபுகளின் ஜமாத்துகள் பல ஆண்டுகள் தம் பதவிகளில் அமர்ந்துகொள்வதும் உள்ளது. 

இந்தவகை தவறான முத்தவல்லிகளாலும் குறிப்பிட்ட வக்ஃபுகளுக்கு பெருத்த இழப்பு ஏற்படுவதையும் மத்திய அரசின் புதிய மசோதா முயற்சிப்பதாகக் கருதப்படுகிறது. ( நன்றி: தமிழ் திசை இந்து, 08/08/2024 )

பெண்களை கொண்டு வர வேண்டும் என்பதன் பிண்ணனி என்ன?

 

வக்ஃப் வாரியத்திடம் உள்ள நிலங்களை விற்க முடியாது. நிலங்களை குத்தகைக்கு விடுவதன் மூலமோ, நிலங்களில் உள்ள கட்டடங்களை வாடகைக்கு விடுவதன் மூலமோ, ஈட்டப்படும் வருமானம் முழுவதையும், ஏழைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக மட்டுமே செலவிட வேண்டும் என்பது வக்ஃப் வாரிய விதி. ஆனால், இந்த வருமானத்தில், ஏழைகளோ, பெண்களோ, குழந்தைகளோ பயனடையவில்லை என ஒரு புறம் குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன.

இதன் காரணமாகவே, வக்ஃப் வாரியத்தில் மகளிரையும் உறுப்பினர்களாக சேர்க்கும் விதமான சட்டத்திருத்தம் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அதிகாரிகள் மூலம் தெரியவருகிறது. ( நன்றி: புதிய தலைமுறை, 05/08/2024 )

திருத்தப்பட்ட அம்சங்கள்...

பழைய சட்டத்தின்படி, அத்தகைய முடிவுகள் வக்பு தீர்ப்பாயத்தால் எடுக்கப்பட்டன. இந்த அதிகாரத்தை சொத்துக்களை அபகரிப்பதாகவும், தவறாக பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் அதில் மாற்றம் கொண்டுவரப்பட்டு, ஒரு சொத்து வக்பு வாரிய சொத்தா அல்லது அரசு நிலமா என்பதை மாவட்ட கலெக்டரே தீர்மானிக்கலாம்.

முன்பு, வாரியமே சொத்துக்களை நிர்வகிக்க முடியும். ஆனால் தற்போது, வாரியங்கள் சொத்துக்களை நிர்வகிப்பதில் வெளிப்படை தன்மை கொண்டுவரப்பட்டுள்ளது.

வக்பு வாரியத்தின் முடிவுகளை எதிர்த்து கோர்ட்டில் முறையீடு செய்ய முடியாது; வக்பு தீர்ப்பாயத்தில்தான் முறையிட முடியும். இனிமேல், வக்பு வாரியத்தின் உத்தரவுகளை எதிர்த்து கோர்டில் முறையிடலாம்.

வாரியத்திற்கே சொத்துக்களுக்கான உரிமை இருந்தது. அதில் திருத்தம் கொண்டுவரப்பட்டு, சொத்துக்களுக்கு வாரியம் உரிமை கோர முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வக்பு கவுன்சில் மற்றும் மாநில வக்பு வாரியங்களில் பெண்களுக்கு அனுமதியில்லை. புதிய சட்டத்திருத்தின்படி, மத்திய வக்பு கவுன்சில், மாநில வக்பு வாரியங்களில் முஸ்லிம் பெண்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதோர் இடம்பெறுவர்.

சொத்துக்களை, வக்பு தீர்ப்பாயமே ஆய்வு செய்யும். ஆனால், இனி சொத்துக்களை சர்வே கமிஷனர் முதல் மாவட்ட கலெக்டர் வரை அல்லது கலெக்டரால் நியமிக்கப்படும் துணை கலெக்டர் ஆய்வு செய்வர்.

இதுவரை வக்பு வாரிய குழுவில் 3 முஸ்லிம் எம்.பி.,க்கள் இடம்பெற்றிருப்பர். புதிய விதிகளின்படி, 3 எம்.பி.,க்கள் கொண்ட அந்த குழுவில் முஸ்லிம் அல்லாதவர்களும் இடம்பெற்றிருப்பர்.

வக்பு சொத்துக்களை விற்க முடியாது என்ற சூழல் இருந்த நிலையில், இனி சொத்துக்கள் அனைத்தும், பொதுவான மத்திய தளத்தின் வாயிலாகவே பதிவு செய்ய வேண்டும்.

வக்பு சொத்துக்களை வாரியமே நிர்வகித்து வந்த நிலையில், புது விதிகளின்படி, வக்பு சொத்துக்கள் பற்றிய தகவல்கள் தொகுக்கப்பட வேண்டும்.

 

சொத்துக்களை பதிவு செய்வதில் வருவாய் சட்டங்கள் பொருந்தாது என்ற நிலை இருந்துவந்தது. தற்போது, சொத்து பதிவு செய்யப்படுவதற்கு முன், வருவாய் சட்டங்கள் பின்பற்றப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பு, வக்பு வாரியச் சொத்துக்கள் வாயிலாக கிடைக்கும் வருவாய் தொடர்பான தகவல்கள் பதிவிட வேண்டியதில்லை. இனி, வருவாய் தொடர்பான தகவல்கள் மற்றும் அதன் நடவடிக்கைகள் அனைத்தும் மத்திய தளத்தில் பதிவிட வேண்டும். ( நன்றி: தினமலர், 08/08/2024 )

இந்த மசோதாவில் மேம்போக்காக சில நல்ல அம்சங்கள் இடம் பெற்றுள்ளது போல தோன்றினாலும் வக்ஃபு வாரியத்தின் முழு அதிகாரங்களும் பிடுங்கப்பட்டு, இஸ்லாமிய வக்ஃபுக்கான பல பண்பியல்புகளை, வக்ஃபு சட்டங்களை பாழ்படுத்துவதாக அமைந்துள்ளதை நன்கு ஊன்றி கவனித்தால் அவதானிக்க முடியும். 

வக்ஃபு சட்டத்தில் முதன் முதலில் கை வைத்தவர்கள்...

கி.பி. 17 ம் நூற்றாண்டு வரை இந்தியாவில் மொகலாயர்கள் முழு பலத்துடன் ஆட்சி செய்து கெர்ணடிருந்தனர். எனவே அக்காலத்தில் நாட்டின் மீது அந்நியத் தாக்குதல் எதுவும் நடக்க வில்லை. 

கி.பி 1705 ஆம் ஆண்டு மன்னர் ஔரங்கசீப் அவர்கள் மரணித்த பின் ஆட்சி பலகீனமடைந்தது.

ஆங்கிலேயர்கள் நாட்டில் தடம் பதிக்க ஆரம்பித்தனர். ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட போது ஆரம்பமாக அவர்கள் இஸ்லாமிய மதச்சட்டங்களில் கை வைக்கவில்லை. பின்னர் அவர்கள் பலம்பெற்றபின் மதச்சட்டங்களிலும் கைவைத்தனர். அதில வக்ஃப் சட்டங்களும் தப்பவில்லை. இஸ்லாத்தில் வக்ஃப் இரண்டு வகையாக உள்ளது.

ينقسم الوقف بحسب الجهة التي وقف عليها إلى نوعين:

الوقف الخيري : وهو الذي يوقف في أول الأمر على جهة خيرية، ولو لمدة معينة، ثم يكون بعدها وقفاً على شخص معين أو أشخاص معينين كأن يقف أرضه على مستشفى أو مدرسة، ثم بعد ذلك على نفسه وأولاده.

الوقف الأهلي أو الذري : وهو الذي يوقف في ابتداء الأمر على نفس الواقف أو أي شخص أو أشخاص معينين، ولو جعل آخره لجهة خيرية، كأن يقف على نفسه ثم أولاده من بعدهم على جهة خيرية.

1. நற்காரியங்களுக்கு பொதுவாக வக்ஃப் செய்வது.

2. சந்ததியினருக்காக வக்ஃப் செய்வது.

ஆங்கிலேய அரசு முதல் வகையை அங்கீகரித்தது. வக்ஃபின் இரண்டாவது வகையை சட்டதிற்கு முரண் என அறிவித்தது. 

 

1838 ஆம் ஆண்டு ஒரு நீதிமன்றம் சந்ததிகளுக்கான வக்ஃப் சட்டத்திற்கு முரணானது, என்று தீர்ப்பளித்தது. 

1873 ஆம் ஆண்டு மும்பை ஹை கோர்ட்டும் இது போன்றதொரு தீர்ப்பை வெளியிட்டது. 

1894 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் தேதி ஒரு நீதிமன்றம் ஆங்கில மொழியை அடிப்படையாக வைத்து பின்வருமாறு வக்ஃப் பற்றி தீர்ப்பு வழங்கியது: ஆங்கிலத்தில் கைராத் - நன்மையாக காரியம் என்பது ஏழைகளுக்கு வழங்கினால் தான் நல்ல காரியமாக ஆகும். 

குடும்பத்தினருக்கு வழங்குவதால் அதை நன்மையான காரியம் என்று சொல்ல முடியாது, என்று கூறி சந்ததியினருக்காக செய்யப்பட்ட வக்ஃப் செல்லாது என்று தீர்ப்பு கூறினர். 

கைராத் (நன்மைகள்) என்ற வார்த்தையை ஆங்கில மொழிக்குத் தோதுவாக விளங்கியே நான் தீர்ப்பு கொடுத்துள்ளேன், என்று நீதிபதி பிடிவாதமாகக் கூறினார். இந்த தீர்ப்பின் காரணமாக நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. (நூல்: இஸ்லாம் கா கானூனெ வக்ஃப், நன்றி: nizamudeen-yousufiblogspot.com 19/12/2024 )

வக்ஃபு சட்டத்தில் கைவைத்த ஆங்கிலேய அரசு அன்றிலிருந்து மிகச் சரியாக 110 ஆண்டுகளில் இந்த இந்திய மண்ணில் இருந்தே இஸ்லாமியர்களின் மகத்தான பங்களிப்புடன் முற்றிலுமாக துடைத்தெறியயப்பட்டது. 

இன்ஷா அல்லாஹ் வெகு விரைவில் ஃபாசிஸ அரசும் வேரோடும் வேரடி மண்ணோடும் இஸ்லாமிய சமூகத்தின் மகத்தான பங்களிப்பால் வீழ்த்தப்படும்.

இந்தியாவில் வக்ஃபு சட்டம்...

இந்தியாவில் வக்ஃபு செல்லுபடியாகும் சட்டம் 1913-ல் இயற்றப்பட்டது.

குடும்ப நலனுக்கும், உறவினருக்கும் மட்டுமே நன்மை அளிப்பது தனி வக்ஃப் ஆகும். இதனை வக்ஃபுன் அலல் அவ்லாத்என்பர். ஒரு முஸ்லிம் வக்ஃப் ஏற்படுத்தி, அதன் பயனை உற்றார் உறவினர் நலனுக்கு உடனடியாகத் தந்து, அவர்கள் காலத்துக்குப் பிறகு மார்க்கம் அனுமதிக்கும் அறச் செயல்களுக்குப் பயன்படுத்துமாறு அறிவிப்பதே வக்ஃபுன் அலல் அவ்லாத்ஆகும்.

இஸ்லாமியச் சட்டப்படி, ஏழை எளிய குடும்பத்தார்க்கு வக்ஃபு சொத்தின் வருமானங்களைக் கொடுத்து குடும்பத்தார்க்ள இல்லாது போனால் முஸ்லிம் சமுதாயத்திற்கு கொடுக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தாலும் அந்த வக்ஃபு செல்லும். ஆனால் மேற்கத்திய தத்துவப்படி குடும்பத்தினருக்கு கொடுப்பது தர்மமாகாது. இந்தத் தத்துவம் இந்திய நீதிமன்றங்கள் சில வழக்குகளில் வழங்கிய தீர்ப்பில் எதிரொலித்தது குறிப்பிடத்தக்கதாகும்.

அப்துல் பத்தாஹ் Vவி ரசமையா (1894)’ என்ற வழக்கில், வக்ஃபு சொத்தின் வருமானம் குடும்பத்திற்கு என்றும், அவர்களுக்குப் பிறகு சந்ததிகள் இல்லாது போனால் பொது மக்களுக்கு என்றும் ஏற்படுத்தப்பட்ட வக்ஃப் செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது ஷரீஅத் சட்டத்திற்கு மாறானதாக இருந்தால் முஸ்லிம் வக்ஃபு சட்டம் இயற்றுமாறு முஸ்லிம்கள் அரசைக் கேட்டுக் கொண்டனர். இதன் விளைவாகவே 1913ல் முஸ்லிம் வக்ஃபு சட்டம் ஏற்பட்டது.

 

1913ம் ஆண்டு வக்ஃபு சட்டத்தின் ஷரத்துக்கள் அந்த ஆண்டுக்குப் பின்னர் ஏற்படுத்தப்பட்ட குடும்ப வக்ஃப்களை மட்டுமே செல்லுபடியாக்கியது. 

அதற்கு முந்தைய வக்ஃபுகளை அல்ல என்று நீதிமன்றங்கள் தீர்ப்பளித்து வந்தன. பின்னர் 1933-ல் முஸ்லிம் வக்ஃபு சட்டம் அமலுக்கு வந்தது. இதன் மூலம் 1913க்கு முந்தைய வக்ஃபுகளுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

வக்ஃபு வாரியமும்... வக்ஃபு சட்டமும்...

முத்தவல்லிகள் பொறுப்புடன் செயலாற்றுவதற்காக 1954-ம் ஆண்டு வக்ஃபு சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின் ஷரத்துகளுக்கு உட்பட்டே வக்ஃபு வாரியமும், முத்தவல்லிகளும் வக்ஃபு சொத்துக்களை நிர்வகிக்க வேண்டும். 

வக்ஃபு வாரியத்திற்கு எதிராக ஏதேனும் வழக்குகள் தொடர வேண்டுமானால் எழுத்துபூர்வமாக வாரியத்தின் அனுமதி பெற்று, வழக்கு தொடர்வது பற்றி அறிவிப்பு கொடுத்து, இரண்டு மாதங்கள் கழிந்த பிறகே வழக்கு தொடர முடியும்.

தமிழ்நாடு 11 உறுப்பினர்கள் கொண்ட வக்ஃபு வாரியம் 1958-ம் ஆண்டு முதன் முதலாக உருவாக்கப்பட்டது. 1966-ல் அது கலைக்கப்பட்ட பின் 1971-ல் அடுத்த வக்ஃப் வாரியம் நிறுவப்பட்டது. மூன்றாவதாக 1984-ல் வக்ஃப் வாரியம் ஏற்பட்டது. 

ஆட்சி மாறும் போதெல்லாம் வக்ஃபு வாரியம் கலைக்கப்படுவதும், புதிய உறுப்பினர்களைக் கொண்ட வாரியம் நியமிக்கப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது.

1984ம் ஆண்டு திருத்தப்பட்ட வக்ஃபு சட்டம் இயற்றப்பட்டது. எனினும், எல்லா மாநிலங்களிலும் அது அமலுக்கு வரவில்லை. ஆதலால் அதற்கு முன்பிருந்த 1954ம் ஆண்டு சட்டமே இப்போதும் அமலில் இருக்கிறது. ( நன்றி: கோட்டகுப்பம். வேர்டுபிரஸ்.காம் 20/09/2024 )

வக்ஃபும் அதன் தோற்றமும்…


الحبس عن التصرف ويقال : وقفت كذا أي حبسته أو تصدقت به أو أبدته أي جعلته في سبيل الله إلى الأبد ، 

வக்ஃபு என்ற வார்த்தைக்கு பயன்படுத்தாமல் தடுத்து வைத்தல் என்று பொருள்.

அதாவது ஏதேனும் ஒன்றை நான் தர்மத்துக்காக வக்ஃபு செய்து விட்டேன் என்றோ, என்றென்றும் அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவதற்காக நான் தடுத்து வைத்துள்ளேன் என்றோ சொல்வதற்கு ஒப்பாகும்.

وشرعا :

تحبيس الأصل، وتسبيل المنفعة على بر أو قربة بحيث يصرف ريعه إلى جهة بر تقرباً إلى الله تعالى والمراد بالأصل ما يمكن الانتفاع به مع بقاء عينه.

எதை வக்ஃபு செய்கின்றோமோ அதை அப்படியே இறுதி வரை வைத்துக் கொண்டு அதன் மூலம் பெறப்படுகின்ற இலாபங்களை நன்மையான வழிகளில், அல்லது அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற்றுத் தரும் நன்மையான காரியங்களுக்காக பயன்படுத்துவதாகும். 

இஸ்லாமிய மார்க்கத்தின் முதல் வக்ஃபு...

نشأتـه :

أول وقف في الإسلام هو وقف عمر بن الخطاب – رضي الله عنه – وذكر ابن خزيمة في صحيحه: (باب ذكر أول صدقة محبسه تصدق بها في الإسلام)، ثم ذكر اثر ابن عمر معلقا

அல்லாமா இப்னு ஃகுஸைமா (ரஹ்) அவர்கள் தங்களது கிரந்தத்திலே இஸ்லாமிய மார்க்கத்தின் முதல் வக்ஃபு என்று தலைப்பிட்டு அதில் உமர் (ரலி) அவர்கள் தான் முதல் வக்ஃபு செய்தார்கள் என்று பின்வரும் நபிமொழியைப் பதிவு செய்துள்ளார்கள்.

روى عن عبد الله بن عمر ـ رضي الله عنهما ـ أن عمر بن الخطاب رضي الله عنه أصاب أرضاً بخيبر، فأتى النبي صلى الله عليه وسلم يستأمره فيها، فقال: يارسول الله إني أصبت أرضاً بخيبر لم أصب مالاً قط هو أنفس عندي منه، فما تأمرني به؟ قال: ((إن شئت حبست أصلها وتصدقت بها))، قال: فتصدق بها عمر، أنه لا يباع ولا يبتاع، ولا يورث أو لا يوهب، قال: فتصدق عمر في الفقراء، وفي القربى، وفي الرقاب، وفي سبيل الله، وابن السبيل والضعيف، لا جناح على من وليها أن يأكل منها بالمعروف، أو يطعم صديقاً غير متمول فيه 

உமர் (ரலி) அவர்கள் கைபரில் ஒரு நிலத்தைப் பெற்றுக் கொண்டார்கள். நபியவர்களிடம் வந்து இப்பொழுது நான் ஒரு நிலத்தைப் பெற்றிருக்கிறேன். இதைவிட விலையுயர்ந்த ஒரு நிலத்தை நான் பெற்றதில்லை. எனவே தங்களது உத்தரவின் படி செயல்படுகிறேன், என்று கூறினார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீங்கள் விரும்பினால் அதன் அடிமனையை தடுத்து வைத்துக்கொண்டு (அதிலிருந்து வரும் லாபத்தை) தர்மம் செய்து விடுங்கள், என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்களும் அவ்வாறே தர்மம் செய்து விட்டார்கள். 

இந்நிலம் விற்கப்படக் கூடாது; அன்பளிப்பாக வழங்கடக்கூடாது; வாரிசுரிமை கோரப்படக்கூடாது, என்று கூறி ஏழைகள், உறவினர்கள், அடிமைகள், விருந்தாளிகள், வழிப்போக்கர்கள் ஆகியோருக்கும் அல்லாஹ்வின் பாதையிலும் செலவிடப்பட வேண்டுமென்று தர்மம் செய்து விட்டர்கள். 

அந்நிலத்தின் பொறுப்பாளர் நடைமுறையில் அறியப்பட்ட விதத்தில் சாப்பிட்டுக்கொள்ளலாம். நண்பருக்கு உணவளிக்கலாம். ஆனால் அதைக் கொண்டு சொத்து சேகரிப்பவராக இருக்கக் கூடாது, என்று கூறினார்கள். ( நூல்: இப்னு ஃகுஸைமா ) 

உமர் (ரலி) அவர்களின் இந்த வக்ஃபு விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள் கூறிய வழிகாட்டுதலே வக்ஃபிற்குரிய சட்டங்களாக அறியவும் முடிகிறது.

 

வக்ஃபு செய்வதற்கு தூண்டுகோலாக இருந்த அருள்மறை வசனங்களும் நபி மொழிகளும்... 

திருக்குர்ஆனில் “(தர்மம் செய்தால்) நீங்கள் விரும்புகின்றவற்றிலிருந்து நீங்கள் செலவு செய்யாத வரையில் நீங்கள் நன்மையை அடையவே மாட்டீர்கள். நீங்கள் எதைச் செலவு செய்த போதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவன்

( அல்குர்ஆன்: 3::92 )

இவ் வசனம் இறக்கியருளப்பட்ட போது நபித் தோழர் அபூ தல்ஹா (றழி) அவர்கள் நபியவர்களிடத்தில் ஓடோடி வந்து அல்லாஹ்வின் திருத்தூதரே! எனது சொத்துக்களில் எனக்கு விருப்பமான சொத்து பைரஹாஎன்னும் தோட்டமாகும்.

அத் தோட்டமானது நபியவர்கள் அதில் இளைப்பாறுவார்கள். அதன் நிழலில் உட்காருவார்கள். அதன் நீரைப் பருகுவார்கள். இதை அல்லாஹ்வுக்காக தர்மம் செய்து விட்டேன். இதன் நன்மையும் சேமிப்பும் அல்லாஹ்விடத்தில் எனக்குக் கிடைக்கும். அதை அல்லாஹ் விரும்பும் விதமாக பயன்படுத்துங்கள்என்றார்கள்.

அதற்கு நபியவர்கள் நீங்கள் ஒரு சிறந்த விடயத்தைச் செய்துவிட்டீர்கள். அது வளரும் பொருள். அதை ஏற்று உறவினர்களின் பயன்பாட்டுக்கு விடுகின்றோம்.

அவ்வாறு பிரிதோர் வசனத்தில் நல்லதிலிருந்து எதனைச் செலவு செய்த போதிலும் உங்களுக்குப் பூரணமாக (திருப்பித்) தரப்படும். மேலும் நீங்கள் அநியாயம் செய்யப்படமாட்டீர்கள்” (அல் பகரா: 272)

மேலும் நபியவர்கள் நவின்றதாக அபூ ஹுரைரா (றழி) அவர்கள் கூறுகின்றார்கள். ஒரு மனிதன் மரணித்தால் மூன்று விஷயங்கள் தவிர அனைத்து அமல்களின் கூலிகளும் தடைப்பட்டுவிடும்.

01. நிரந்தர தர்மம்

02. பிரயோசனம் தரும் கல்வி

03. பெற்றோருக்காக இறைஞ்சும் நல்ல பிள்ளைகள் (நூல்:- முஸ்லிம்)

இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. நிரந்தர தர்மம் என்பது வக்பை குறிக்கும் என இஸ்லாமிய பேரறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்

நபித்தோழர்களின் வக்ஃபு...

وقف الدور، وهي أشهر الأوقاف عند الصحابة رضوان الله عليهم.

(ب) وقف الأراضي الزراعية، ومن أشهر الموقفين لها عمر بن الخطاب وعثمان وعلي والزبير بن العوام رضي الله عنه.

(ج) حبس المال والدواب والسلاح للجهاد في سبيل الله كما في الحديث السابق ((أما خالد فقد احتبس أدراعه وأعتده في سبيل الله)) . وقد كان عمر رضي الله عنه يجهز الكثير من الغزاة في سبيل الله، بأمتعة خاصة للجهاد في سبيل الله .

(د‌) حفر الآبار وتسبيل المياه، ومن أشهرها بئر رومة، ومن ذلك أن عمر رضي الله عنه، أمر سعد بن أبي وقاص أن يحفر نهراً لأهل الكوفة . وقد أمر أبا موسى الأشعري كذلك بحفر نهر لأهل البصرة أثناء ولايته لها .

நபித்தோழர்கள் பலர் வீடுகளை வக்ஃபு செய்தார்கள். உமர், உஸ்மான்,அலீ, ஜுபைர் இப்னுல் அவ்வாம் (ரலி அன்ஹும்) போன்றோர் விவசாய விளை நிலங்களாக வக்ஃபு செய்தார்கள்.

உமர் ரலி, காலித் இப்னு வலீத் ரலிஅல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்ய வாகனங்கள், ஆயுதங்கள் வாங்க பெருமளவு பொருளாதாரத்தை வக்ஃபுக்காக செலவிட்டார்கள். 

மேலும், நீர் நிலைகள், நீர் வழித்தடங்களை வாங்கி, உருவாக்கி வக்ஃபு செய்தார்கள்.

ஆதலால் உமர் ரலி அவர்களுடைய ஆட்சி காலத்தில் ஸஅத் இப்னு அபூ வக்காஸ் ரலி அவர்கள் கூஃபாவில் ஆறு ஒன்றையும், அபூ மூஸா அல் அஷ்அரீ ரலி அவர்கள் பஸராவில் ஒரு ஆறு ஒன்றையும் உருவாக்கி உமர் ரலி அவர்களுடைய உத்தரவின் பேரில் மக்களின் பயன்பாட்டிற்காக வக்ஃபு செய்தார்கள் என்று வரலாறு நெடுகிலும் சான்றுகள் குவிந்து கிடக்கின்றன.

 

ولقد وقف الرحالة الأشهر ابن بطوطة منبهرًا بما رآه في أوقاف دمشق في القرن الثامن الهجري في ظل حكم المماليك البحرية قائلاً: "والأوقاف بدمشق لا تُحصر أنواعها ومصارفها لكثرتها؛ فمنها أوقاف على العاجزين عن الحجِّ، يُعطى لمن يحجّ عن الرجل منهم كفايته، ومنها أوقاف على تجهيز البنات إلى أزواجهنَّ، وهنَّ اللواتي لا قدرة لأهلهنَّ على تجهيزهنَّ، ومنها أوقاف لفكاك الأسارى، ومنها أوقاف لأبناء السبيل؛ يُعطون منها ما يأكلون ويلبسون ويتزوَّدُون لبلادهم، ومنها أوقاف على تعديل الطرق ورصفها؛ لأن أزقَّة دمشق لكل واحد منها رصيفان في جنبيه يمرُّ عليهما المترجِّلُون، ويمرُّ الركبان بين ذلك، ومنها أوقاف لسوى ذلك من أفعال الخير"

 

எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உலகின் நெடுந்தூர பயணி இப்னு பதூதா தான் மேற்கொண்ட பயணத்தின் அனுபவங்களில் ஒன்றாக திமிஷ்க்கின் பயணத்தைக் குறிப்பிடுகின்றார்.

அதில் “நான் பார்த்து வியந்த திமிஷ்க்கின் அதிசயங்களில் ஒன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக செய்யப்பட்ட வக்ஃபுகள் தான்.

திமிஷ்க் முழுவதும் வக்ஃபுகள் பரவி, விரவி நிரம்பிக் கிடக்கின்றன. அவைகளில் ஹஜ் செல்ல இயலாதவர்களுக்கும், பெண்களை மணம் முடித்துக் கொடுக்க இயலாதவர்களுக்கும், கைதிகளை விடுவிப்பதற்கும், பயணத்தில் இழப்பை சந்தித்தவர்களுக்கும், இன்னும் பல நல்ல காரியங்களுக்காகவும் ஏராளமான வக்ஃபுகள் நிரம்பி இருந்ததைக் கண்டேன். என்று பதிவு செய்யும் இப்னு பதூதா “எவ்வளவு மஸ்ஜிதுகள், மதரஸாக்கள், மருத்துவமனைகள் வியப்பான பல வக்ஃபுகளைக் கண்டு நான் வியப்புற்றேன்.

இன்றும் இந்த உம்மத்தில் வக்ஃபு செய்கின்றவர்கள் இருக்கவும் செய்கின்றனர்.

ஆனால், கொண்டு வரப்பட்ட இந்த வக்ஃபு சட்ட திருத்த மசோதா நடைமுறைக்கு வருமேயானால் வக்ஃபு சொத்துக்கள் பலதும் இந்த உம்மத்தின் கையை விட்டும் சென்று விடும். ஆகவே, விழிப்புணர்வுடன் செயல்பட்டு இந்த சட்ட திருத்த ம்சோதாவிற்காக நாம் ஷாஹின்பாக் அமைத்து எப்படி சிஏஏக்கு எதிராக போராடினோமோ அது போன்று ஒன்றிணைந்து போராடுவோம்! இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவுகளைக் கொண்டு ஃபாசிஸ சூழ்ச்சிகளை முறியடிப்போம்! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் துணை நிற்பானாக!! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

3 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு சங்கைமிக்க உஸ்தாத் அவர்களே..!
    வக்ஃப் சட்டதிருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த வேளையில் தங்களது இந்த ஆக்கம் வக்ஃப் சம்பந்தமாக மிக மிக துல்லியமான புள்ளி விவரங்களுடன் வெளியிட்டுள்ளீர்கள்.
    இவ்வளவு துல்லியமான விபரங்களுடன் யாருமே இவ்வளவு ஆழமாக விபரிக்க முடியாது.
    இதற்காக கடுமையான தங்களது முயற்சி தெரிகிறது.
    தங்களது முயற்சிக்கு அல்லாஹ் நிறைவான நற்கூலி வழங்குவானாக. ஆமீன்
    جزاكم الله خير الجزاء يا استاذ الكريم 💖👍🎉

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ் அருமையான பதிவு அல்லாஹுத்தஆலா தங்களுக்கு ஈருலகிலும் நற்பாக்கியங்களை தருவானாக ஆமீன்

    ReplyDelete