Wednesday, 19 March 2025

வழிகாட்டும் வான்மறை - தராவீஹ் சிந்தனை - 20. இஃதிகாஃப்… வேண்டாம் அலட்சியம்!!!

 

வழிகாட்டும் வான்மறை - தராவீஹ் சிந்தனை - 20.

இஃதிகாஃப்… வேண்டாம் அலட்சியம்!!!


19 –ஆவது நோன்பை நிறைவு செய்து, 20 –ஆவது நாள் தராவீஹ் தொழுகையை மிகச் சிறப்பாக முடித்து விட்டு அடுத்த நோன்பு நோற்பதற்காக எதிர் பார்த்து காத்திருக்கின்றோம்.

அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது நோன்பையும், தராவீஹ் தொழுகையையும் கபூல் செய்வானாக! எஞ்சியிருக்கிற நாட்களின் நோன்புகளையும், வணக்க, வழிபாடுகளையும் எவ்வித தடங்கலும் இன்றி பரிபூரணமாக நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் நல்குவானாக! ஆமீன்!!

இன்றைய நாளின் தராவீஹ் தொழுகையில் ஹாமீம் அஸ் ஸஜ்தா அத்தியாயம், அஷ் ஷூரா, அஸ் ஸுஃக்ருஃப், அத்துஃகான், அல் ஜாஸியா அத்தியாயங்கள்  என 292  வசனங்கள் ஓதப்பட்டிருக்கின்றது.

 இன்றைய தராவீஹ் தொழுகையில் ஓதப்பட்ட சூரா அஷ் ஷூராவின் 23 -வது ஆயத்தில் எவர் ஒரு நன்மையான செயலைச் செய்கின்றாரோ நாம் அவருக்கு அதை விட அதிக நன்மையை வழங்குகின்றோம் என்று கூறுகின்றான்.

இந்த ஆயத்திற்கு விளக்கம் தரும் திருமறை விரிவுரையாளர்கள் "ஒருவர் ஒரு நற்காரியத்தைச் செய்தால் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவருக்கு இன்னும் அதிகமான நற்காரியத்தைச் செய்யும் பாக்கியத்தை வழங்குகிறான்" என்று விளக்கம் தருகின்றனர்.

وَمَنْ يَّقْتَرِفْ حَسَنَةً نَّزِدْ لَهٗ فِيْهَا حُسْنًا‌ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ شَكُوْرٌ

எவர் ஒரு நன்மை செய்கிறாரோ, அவருக்கு நாம் அதில் பின்னும் (மேலும்) நன்மையை அதிகமாக்குவோம்; நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நன்றியை ஏற்றுக் கொள்பவனாகவும் இருக்கின்றான். ( அல்குர்ஆன்: 42: 23 )

இப்போது தான் ரமலான் பிறையைக் கண்டது போல் இருந்தது. ஆனால்,  வெகு விரைவாக ரமலானின் 2 வது பத்தின் கடைசி இரவுக்குள் நாம் இருக்கிறோம். காலங்களும் நேரங்களும் எவ்வளவு விரைவாக நம்மை விட்டும் கடந்து செல்கின்றன. 

கடந்த 19 நாட்களின் நோன்புக‌ளையும், இரவு வணக்கங்களையும், இதர நன்மையான காரியங்களையும்  சிறப்பாகவும், சந்தோஷமானதாகவும், உற்சாகம் மிக்கதாகவும் ஆக்கித்தந்த வல்ல நாயன் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்! 

வழக்கம்போல் ரமலானிலேயே அதிமுக்கியத்துவம் வாய்ந்த (மீதியுள்ள 10 நாட்களான) கடைசிப் பத்து நாட்களையும் அதன் மகத்துவமிக்க இரவுகளையும் மேலும் அதிகமதிகமான நல்ல அமல்களோடு சிறப்பித்து, நன்மைகளை வாரிக் கொள்வதற்கு அல்லாஹுதஆலா நம் அனைவருக்கும் உதவி செய்தருள்வானாக!

இது ரமழான் மாதம் இந்த மாதம் அமல்கள் செய்வதற்கான மாதம். அமல்கள் செய்வதற்கான வாய்ப்புகள் நமக்கு வரும் போது நாம் அதை விட்டு விடக்கூடாது.

 

இதோ ரமழானின் கடைசிப் பத்தை தொட இருக்கின்றோம். இந்த பத்து நாட்களில் இஃதிகாஃப் என்னும் சிறப்பு வாய்ந்த ஒரு அமல் இருக்கிறது.

அந்த அமலைச் செய்ய நாம் ஆவல் கொள்வோம். அதற்காக நாம் தயாராகுவோம்.

மொழியியல் ரீதியில் இஃதிகாஃப் என்பது ஒன்றைப் பற்றிப் பிடித்து, அதிலேயே மனதைக் கட்டுப்படுத்தி வைத்தல்.

ஷரீஆ ரீதியாக இஃதிகாஃப் என்பது அல்லாஹ்வை வணங்குவதற்காகவே பள்ளியில் தங்கி இருத்தல்.

இஃதிகாஃப் சட்டமயமாகுதல்....

இஃதிகாஃப் சிறந்த, மகத்தான வணக்கங்களில் ஒன்று. . ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : «நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமழானின் இறுதிப்பத்தில் இஃதிகாஃப் இருப்பார்கள்.» ( நூல் புஹாரி ).

இஃதிகாஃப் நமக்கும் முன் சென்ற சமூகத்திற்க்கும் மார்க்கமாக்கப்பட்டது. 

وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَنْ طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ

அல்லாஹ் கூறுகின்றான்: {இன்னும் என் வீட்டைச் சுற்றிவருபவர்கள், தங்கியிருப் பவர்கள் ருகூஃ செய்பவர்கள், ஸுஜுது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டுமென இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதி மொழி வாங்கினோம்}  ( அல்குர்ஆன் 2: 125 )

وَلَا تُبَاشِرُوهُنَّ وَأَنْتُمْ عَاكِفُونَ فِي الْمَسَاجِدِ تِلْكَ حُدُودُ اللَّهِ فَلَا تَقْرَبُوهَا كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ 

آيَاتِهِ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَّقُونَ

நீங்கள் பள்ளிவாசலில் தங்கி (இஃதிகாஃப்) இருக்கும்போது மனைவியருடன் உறவு கொள்ளாதீர்கள். இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும். அவற்றை நெருங்காதீர்கள். இவ்வாறே தன் வசனங்களை அல்லாஹ் மக்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். (இதன் மூலம்) அவர்கள் (தீமையிலிருந்து தங்களைக்) காத்துக்கொள்ளலாம். ( அல்குர்ஆன்: 2: 187 )

இஃதிகாபின் சட்டம்... 

இஃதிகாப் அனைத்துக் காலங்களிலும் செய்யப்படும் ஸுன்னத்தான வணக்கம். ரமழானின் இறுதிப்பத்தில் இருப்பது மிகச் சிறந்தது. மற்றும் அது ஸுன்னத் முஅக்கதா ஆகும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் அக்காலங்களில் தொடராக இஃதிகாப் இருந்து வந்துள்ளார்கள். ( நூல்: ஸாதுல் மஆத் ).

வாஜிபான இஃதிகாஃப்...

ஒருவர் இஃதிகாஃப் இருப்பதாக நேர்ச்சை செய்தால் அவர் மீது இஃதிகாஃப் இருப்பது வாஜிபாகும்.

 

عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ عُمَرَ رضي الله عنه سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كُنْتُ نَذَرْتُ فِي الْجَاهِلِيَّةِ أَنْ أَعْتَكِفَ لَيْلَةً فِي الْمَسْجِدِ الْحَرَامِ قَالَ فَأَوْفِ بِنَذْرِكَ (بخاري)

உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் நான் அறியாமைக் காலத்தில் மஸ்ஜிதுல் ஹராமில் ஓரிரவு இஃதிகாப் இருப்பதாக நேர்ச்சை வைத்திருந்தேன்இப்போது நிறைவேற்றலாமா? என்று கேட்டார்கள். நபியவர்கள் «நீர் உம்முடைய நேர்ச்சையை நிறைவேற்றும்என்றார்கள்». ( நூல்: புகாரி )

சுன்னத்தான இஃதிகாஃப்...

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَعْتَكِفُ الْعَشْرَ الْأَوَاخِرَ مِنْ رَمَضَانَ حَتَّى تَوَفَّاهُ اللَّهُ ثُمَّ اعْتَكَفَ أَزْوَاجُهُ مِنْ بَعْدِهِ (بُخاري

நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமளான் மாதத்தின் கடைசிப் பத்தில் இஃதிகாஃப் இருக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். அவர்கள் மரணித்த பிறகு அவர்களின் மனைவிமார்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். (நூல்: புகாரி )

நஃபிலான இஃதிகாஃப்....

يَجُوزُ بِغَيْرِ صَوْمٍ هُوَ أَنْ يَدْخُلَ الْمَسْجِدَ بِنِيَّةِ الِاعْتِكَاف مِنْ غَيْرِ أَنْ يُوجِبَهُ عَلَى نَفْسِهِ فَيَكُونُ مُعْتَكِفًا بِقَدْرِ مَا أَقَامَ فَإِذَا خَرَجَ انْتَهَى اعْتِكَافُهُ 

ஒருவர் நோன்பு இல்லாத நிலையில் ஒரு மஸ்ஜிதுக்குள் இஃதிகாஃப் உடைய நிய்யத்தில் நுழைந்து அவர் தான் நாடிய நேரம் வரை அங்கு இஃதிகாஃப் இருந்து விட்டு வெளியேறுவதாகும்.

இஃதிகாஃபின் நோக்கம் என்ன? 

உலகத்தையும், அதில் இன்புற்று இருப்பதையும் விட்டு சிறிது காலம் இறைவணக்கத்திற்காக மாத்திரம் ஒதுங்குவதாகும், எனவே அதற்காக உள்ளத்தை உலக மோகங்களிலிருந்து விடுவித்துக் கொள்வது இஃதிகாஃப் இருப்பவருக்கு மிகவும் அவசியமாகும்.

1) ரமலான் கடைசி 10 நாட்கள் இஃதிகாப் இருப்பதால் லைலதுல் கத்ர் இரவை அடைந்து கொள்ள முடியும்!

2) உலக விஷயங்களை விட்டு ஒதுங்கி தனித்திருந்து அல்லாஹ்வை நெருக்க முயற்சி செய்தல்! 

3) உள்ளத்தை சீர் செய்தல்!

4) முழுவதும் அல்லாஹ்வை சார்ந்து அமல்களில் மட்டும் ஈடுப்படுதல்!

5)  மன இச்சைகளின் தூண்டுதல்களை விட்டு தூரமாகி இருத்தல்!

இஃதிகாப் மூலம் கிடைக்கும் நன்மைகள் : 

عَنِ ابْنِ عَبَّاسٍ ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ قَالَ فِي الْمُعْتَكِفِ : هُوَ يَعْكِفُ الذُّنُوبَ ، وَيُجْرَى لَهُ مِنَ الْحَسَنَاتِ كَعَامِلِ الْحَسَنَاتِ كُلِّهَا. (سنن أبن ماجه-1781)

 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:- இஃதிகாப் இருப்பவர் பாவங்களை விட்டும் பாதுகாக்கப்படுகிறார்; நற்செயல்கள் அனைத்தையும் செய்பவரைப் போன்ற நன்மைகள் அவருக்கு எழுதப்படுகின்றன ( நூல்: இப்னுமாஜா : 1781 )

عن عائشة أن النبي صلى الله عليه وسلم قال : من اعتكف إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. (رواه الديلمى- 21356)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:- மன உறுதியோடும், நன்மையை எதிர்பர்த்தும் இஃதிகாஃப் இருப்பவருக்கு அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும்! ( நூல் : தைலமீ : 21356 )

عن ابن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم : من اعتكف يوما ابتغاء وجه الله جعل الله بينه وبين النار ثلاث خنادق أبعد مما بين الخافقين. (رواه الطبرانى, والحاكم.

இப்னு அப்பாஸ் (ரழி) அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடி ஒருவர் ஒரு நாள் இஃதிகாஃப் இருந்தால், அவருக்கம் நரகத்திற்கும் இடையில், கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே உள்ள இடைவெளியை விட மிக தூரமான மூன்று அகழிகளை ஏற்படுத்துகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: தப்ரானீ, ஹாகிம், )

இஃதிகாஃபின் ஆரம்ப நேரம்...

ரமளானின் இருபதாம் நோன்பின் அஸருக்குப் பின்- சூரியன் மறையும் முன்- பள்ளியில் நுழைய வேண்டும். இன்னும் சிலர் இருபதாம் நோன்பின் ஃபஜ்ர் தொழுகையில் பள்ளியில் நுழைய வேண்டும் என்கின்றனர்.

இஃதிகாஃப் முடிவு...

ரமலான் கடைசி 10 நாட்களில் இஃதிகாஃப் இருக்க கூடியவர்கள்! 29 ம் அல்லது 30 - ம் நோன்பின் மஃக்ரிப் முடிந்து பிறை பார்த்த பின்பு வீட்டுக்கு செல்லலாம்! தொடர்ந்து இஃதிகாப் இருக்க கூடியவர்கள் தொடர்ச்சியாக அப்படியே இஃதிகாஃப் இருக்கலாம்!  ( நூல்: முஸ்லிம் : 2183 ) 

இஃதிகாஃபின் நிய்யத்...

இறை பொருத்தத்தை நாடி இப்பள்ளியில் இஃதிகாஃப் இருக்கிறேன் என நிய்யத் செய்தல்.

இஃதிகாஃபை தூய நோக்கத்துடன் தொடங்க வேண்டும், ஏனெனில்:

عَلَى المِنْبَرِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ

 إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ، 

"செயல்கள் அவை செய்யப்படும் நோக்கங்களைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகின்றன" ( நூல்: புகாரி )

பள்ளிவாசலுக்குச் செல்லும் நபி அவர்கள் எவ்வாறு பிரார்த்தனை செய்தார்கள் என்பது இங்கே:

 

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِحَقِّ السَّائِلِينَ عَلَيْكَ، وَأَسْأَلُكَ بِحَقِّ مَمْشَايَ هَذَا، فَإِنِّي لَمْ أَخْرُجْ أَشَرًا، وَلاَ بَطَرًا، وَلاَ رِيَاءً، وَلاَ سُمْعَةً، وَخَرَجْتُ اتِّقَاءَ سَخَطِكَ، وَابْتِغَاءَ مَرْضَاتِكَ، فَأَسْأَلُكَ أَنْ تُعِيذَنِي مِنَ النَّارِ، وَأَنْ تَغْفِرَ لِي ذُنُوبِي، إِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ

"யா அல்லாஹ்! உன்னிடம் பிரார்த்தனை செய்பவர்களின் உரிமையாலும், தொழுகைக்காக நடந்து வருவதற்கான எனது சொந்த உரிமையாலும் நான் உன்னிடம் கேட்கிறேன். எந்த விதமான பெருமையாலும், பெருமை கொள்ள வேண்டும் என்ற ஆசையாலும், அல்லது காணப்பட வேண்டும் என்ற ஆசையாலும், அல்லது சிறந்த நற்பெயரைப் பெற வேண்டும் என்ற ஆசையாலும் நான் என் வீட்டை விட்டு வெளியேறவில்லை. மாறாக, என் பாவங்களிலிருந்தும் குறைபாடுகளிலிருந்தும் தப்பி ஓடி, உன் கோபத்திற்கு பயந்து, உன் திருப்தியைத் தேடி நான் உன்னை அணுகுகிறேன். எனவே, என்னை நரகத்திலிருந்து பாதுகாத்து, என் பாவங்களை மன்னிப்பாயாக என்று நான் உன்னிடம் பிரார்த்திக்கிறேன். நிச்சயமாக, உன்னைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் வேறு யாரும் இல்லை." ( நூல்: இப்னுமாஜா )

அலட்சியம் வேண்டாமே....

ரமழான் மாதத்தில் தொழுகை; நோன்பு, ஸதக்கா, ஜகாத் என- நல் அமல்களில் அதிகம் திளைத்து அளப்பெரும் அருளை நாம் பெருகிறோம். ஆனால் ஒரே ஒரு காரியத்தில் மட்டும் மிக அலட்சியமாக விட்டு விடுகிறோம். அது தான் 

இஃதிகாஃப். ஆனால், இன்று ஒரு மஹல்லாவிற்கு ஒருவர், ஒரு ஊருக்கே ஒரு நபர் மட்டும் என்று இஃதிகாஃப் இருக்கும் சூழ்நிலையை நாம் காண்கிறோம்.

وقال الزهري رحمه الله : ( عجباً للمسلمين ! تركوا الاعتكاف ، مع أن النبي صلى الله عليه وسلم ، ما تركه منذ قدم المدينة حتى قبضه الله عز وجل

இமாம் ஜுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : நபி (ஸல்) அவர்கள் மதினா வந்ததிலிருந்து உயிர் கைப்பற்றப்படும் காலம் வரைவிடாமல் செய்த ஒரு அமல் இஃதிகாஃப் ஆகும். அப்படியிருக்க அதில் கவனம் செலுத்தாமல் விட்டு விடுகிற முஸ்லிம்களைப் பார்த்து நான் ஆச்சரியப்படுகிறேன்.

தனிமையின் அவசியமும்... அதன் வலிமையும்...

இஃதிகாஃப் இருப்பவர்கள் தனிமையைத் தேர்ந்தெடுத்து அதில் ரப்போடு ஒரு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஏனெனில், இஃதிகாஃப் என்ற வார்த்தையின் வரையறையே தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்வது தான்.

எப்போதும் இணைக்கப்பட்ட உலகில் தாம் நாம் இருக்கின்றோம்.
நாம் ஒருபோதும் உண்மையிலேயே தனியாக இருப்பதில்லை.

நமது தொலைபேசிகள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம், சிந்திக்க, பிரதிபலிக்க  நேரம் ஒதுக்குகின்றோம்.

படைத்த ரப்போடு  வழிபாட்டில் ஈடுபடுவதற்கு நாம் ஒருபோதும் போதுமான நேரத்தை ஒதுக்குவதில்லை. தனியாக இருக்க நேரம் ஒதுக்குவதும், அந்த நேரத்தை அல்லாஹ்வுக்குப் பிரியமான முறையில் செலவிடுவதும் ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவதில் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும்.

எனவே, நமது வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் வெற்றிக்கு தனிமை மிகவும் முக்கியமானது.

நபி (ஸல்) அவர்கள் ஹிரா குகையில் முதல் வெளிப்பாட்டைப் பெற்றார்கள்.

ஆனால், நபி ஸல் அவர்கள் ஏற்கனவே சில நாட்கள் அங்கு இருந்தார்கள், மேலும் தனது சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குச் சிந்தித்து தீர்வுகளைக் கண்டறிய சில நாட்கள் சமூகத்திலிருந்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்வது நபியவர்களின் பழக்கமாக இருந்தது. ஆழமாகச் சிந்திக்கவோ அல்லது அல்லாஹ்வை வணங்கவோ தனியாக நேரத்தைச் செலவிடுவது நமது காலத்தில் நாம் மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டிய ஒரு அன்பான சுன்னாவாகும்.

இது ஒரு வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது, மேலும் முஸ்லிம் வரலாறு முழுவதும் இதற்கு பல சிறந்த எடுத்துக்காட்டுகள் உள்ளன.

தனிமையில் இருக்கும் போது ரப்போடு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளும் வழிகள்...

وسأل فَيْضُ بْنُ إِسْحَاقَ الْفُضَيْلَ عَنْ قَوْلِ اللَّهِ عَزَّ وَجَلَّ:
 ﴿ مِنْ خَشِيَ الرَّحْمَنَ بِالْغَيْبِ وَجَاءَ بِقَلْبٍ مُنِيبٍ 
 قَالَ: "الْمُنِيبُ الَّذِي يَذْكُرُ ذَنْبَهُ فِي الْخَلْوَةِ فَيَسْتَغْفِرُ مِنْهُ.

ஃபைள் இப்னு இஸ்ஹாக் அல் ஃபுளைல் (ரஹ்) அவர்களிடம் "எவர்கள், மறைவிலும் அர்ரஹ்மானை அஞ்சி நடந்து கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கும் (அவனையே) முற்றிலும் நோக்கிய இதயத்துடன் வருவோருக்கும் (இது வாக்களிக்கப்பட்டிருக்கிறது)." என்ற காஃப் அத்தியாயத்தின் வசனம் குறித்து விளக்கம் கேட்கப்பட்ட போது "முனீப் - இறைவனை நோக்கிய இதயம் கொண்டவர் என்றால் தனிமையில் இருக்கும் போது தான் செய்த பாவங்களை நினைத்து சதாவும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்பவர் என்று பொருள்"  என்று கூறினார்கள்.

وفي الخلوات لذة المناجاة، يقول مسلم بن يسار: "مَا تَلَذَّذَ الْمُتَلَذِّذُونَ بِمِثْلِ الْخَلْوَةِ بِمُنَاجَاةِ اللهِ عَزَّ وَجَلَّ"،

முஸ்லிம் இப்னு யஸார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: தனிமையில் அல்லாஹ்வோடு முனாஜாத்தில் ஈடுபடுபவர்கள் பெறுகிற இன்பத்தைப் போன்று வேறு எவரும் பெறுவதில்லை".

ويقول محمد بن يوسف: "مَنْ أَرَادَ تَعْجِيلَ النِّعَمِ فَلْيُكْثِرْ مِنْ مُنَاجَاةِ الْخَلْوَة".

முஹம்மது இப்னு யூசுஃப் (ரஹ்) அவர்கள் "விரைவாக அல்லாஹ் ரப்புல் ஆலமீனின் அருட்கொடைகளை பெற விரும்புபவர்கள் தனிமையில் அல்லாஹ்வுடனான முனாஜாத்தை அதிகரிக்கட்டும்" என்று கூறினார்கள்.

ودمعة الخشية في الخلوة سبب للاستظلال بظل الله سبحانه يوم القيامة، يقول الرسول صلى الله عليه وسلم: "سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله"، ومنهم: "رجل ذكر الله خالياً ففاضت عيناه". رواه البخاري ومسلم.

அல்லாஹ்வின் நிழலைத்தவிர வேறு எந்த நிழலுமே இல்லாத நாளில் அல்லாஹ் ஏழு கூட்டத்தாருக்கு மட்டும் அர்ஷின் நிழலில் நிழல் கொடுப்பான் என நபி ஸல் அவர்கள் கூறிய அந்த ஏழு கூட்டத்தாரில்
"
தனிமையில்  இருந்து அல்லாஹ்வை நினைத்து (அழுது) கண்களால் கண்ணீர் வடித்தவர் " இவர்களும் ஒரு கூட்டத்தார் ஆவார்கள்.

وتلاوة القرآن في الخلوة من أعظم ما يصلح القلب ويوفق لحسن الختام، لَمَّا حَضَرَتْ أَبَا بَكْرٍ بْنَ عَيَّاشٍ الْوَفَاةُ بَكَتْ أُخْتُهُ، فَقَالَ: لَا تَبْكِ؛ انْظُرِي إِلَى تِلْكَ الْخَزَانَةِ أَوِ الزَّاوِيَةِ الَّتِي فِي الْبَيْتِ قَدْ خَتَمَ أَخُوكِ فِي هَذِهِ الزَّاوِيَةِ ثَمَانِيَةَ عَشَرَ أَلْفٍ خَتْمَةٍ.

அபூபக்ர் இப்னு அய்யாஷ் (ரஹ்) அவர்களின் இறுதி நேரத்தில் சக்ராத்தின் போது அவரது சகோதரி அழுது கொண்டு இருந்தார். அப்போது அபூபக்ர் இப்னு அய்யாஷ் (ரஹ்) அவர்கள் "சகோதரியே! அழாதே! அதோ வீட்டில் இருந்த ஒரு குர்ஆனைக் காட்டி உம் சகோதரர் பதினெட்டாயிரம் முறை இந்த குர்ஆனை முழுமையாக முடித்து வைத்திருக்கிறார்". என்றார். தன் சகோதரிக்கு கூட தெரியாமல் எத்தனை குர்ஆனை ஓதியிருக்கின்றார்கள் பாருங்கள்!.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நன் அனைவருக்கும் நன்மையான காரியங்களை, நல்அமல்களை ஆர்வத்தோடு செய்யும் நற்பேற்றினை வழங்கியருள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!!

3 comments:

  1. மிக சிறந்த கட்டுரை
    அல்லாஹ் உங்கள் முயற்சியை ஏற்றுக் கொள்வானாக நிரப்பமான ஈமான் ஈருலக வெற்றி உடல் ஆரோக்கியம் நீண்ட ஆயுள் நிறைந்த செல்வம் மற்றும் அனைத்திலும் வெற்றி பெற்று வாழ்வாங்கு வாழ அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்

    ReplyDelete
    Replies
    1. ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் ஜஸாக்கல்லாஹு ஃகைரன் பாரக்கல்லாஹு ஃபீக்கும் ஹழ்ரத் பெருந்தகை

      Delete