Friday, 21 March 2025

வழிகாட்டும் வான்மறை - தராவீஹ் சிந்தனை - 22. மானுட வசந்தத்தின் மாண்புகளைப் போதிக்கும் சூரா அல் - ஹுஜுராத்!!

 

வழிகாட்டும் வான்மறை  - தராவீஹ் சிந்தனை - 22.

மானுட வசந்தத்தின் மாண்புகளைப் போதிக்கும் சூரா அல் - ஹுஜுராத்!!


21 –ஆவது நோன்பை நிறைவு செய்து, 22 –ஆவது நாள் தராவீஹ் தொழுகையை மிகச் சிறப்பாக முடித்து விட்டு அடுத்த நோன்பு நோற்பதற்காக எதிர் பார்த்து காத்திருக்கின்றோம்.

அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமது நோன்பையும், தராவீஹ் தொழுகையையும் கபூல் செய்வானாக! எஞ்சியிருக்கிற நாட்களின் நோன்புகளையும், வணக்க, வழிபாடுகளையும் எவ்வித தடங்கலும் இன்றி பரிபூரணமாக நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் நல்குவானாக! ஆமீன்!!

புனிதம் மிக்க ரமலான் மாதத்தின் நிறைவுப் பகுதியை நாம் நெருங்கிக் கொண்டிருக்கின்றோம்.

நரக விடுதலையைப் பெற்றுத் தருகிற இறுதிப்பத்தில் இருக்கின்றோம். அல்லாஹ் நம்மையும், நம் குடும்பத்தினரையும், நம் சார்ந்தவர்களையும், உலக முஸ்லிம்கள் அனைவரையும் ரமலானின் தூய பரக்கத் கொண்டு நரகத்தின் வாடையைக் கூட நுகர விடாமல் பாதுகாத்தருள்வானாக! ஆமீன்!

நேற்றைய தராவீஹ் தொழுகையிலும் இன்றைய தராவீஹ் தொழுகையிலும் சூரா அல் - ஹுஜுராத் ஓதப்பட்டுள்ளது.

அல் ஹுஜுராத் என்றால் அறைகள் என்று பொருள். இந்த சூரா முழுவதும் முஸ்லிம்களுக்கு உண்மையான விசுவாசிகளுக்குரிய ஒழுக்கங்கள் குறித்து கற்பிக்கப்படுகின்றன.

முதல் ஐந்து வசனங்களில் அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் கற்பிக்கப்பட்டுள்ளன.

பின்னர், சமூகமாக வாழும் நாம்  நம்மிடையே ஒரு நபர் குறித்தோ, ஒரு குழுவினர் குறித்தோ, அல்லது ஒரு சமூகத்தைப் பற்றியோ பகிரப்படும்  செய்தியைப் பற்றிய, அல்லது அந்த நிகழ்வைப் பற்றிய நம்பகத்தன்மையை ஊர்ஜிதப் படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்துவதோடு, ஒவ்வொரு செய்தியையும், நிகழ்வையும் குருட்டுத்தனமாக நம்பி அதன்படி செயல்படுவது சரியல்ல என்று மனித சமூகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

பின்னர், முஸ்லிம்களில் இரு பிரிவினர் ஒருவருக்கொருவர் சண்டையிட்டால் மற்ற முஸ்லிம்கள் என்ன அணுகுமுறையை எடுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. 

பின்னர் கூட்டு வாழ்க்கையில் ஒவ்வொரு முஸ்லிமும் சகோதரத்துவ வாஞ்சையை மேற்கொள்ள வேண்டும் என்று உணர்த்தப்படுகின்றது.

மேலும், கூட்டு வாழ்க்கையின் முக்கியத்துவமான சகோதரத்துவ வாஞ்சையை கெடுக்கும் மற்றும் பரஸ்பர உறவுகளை நாசமாக்கும் தீய செயல்களிலிருந்து பாரதூரமாக விலகி இருக்க முஸ்லிம்களுக்கு முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

ஒருவர் மற்றொருவரை கேவலமாகப் பார்ப்பதும், தாழ்வாகக் கருதுவதும், கேலி செய்வதும்,  புனைப்பெயர்களால் பட்டம் சூட்டி அழைப்பதும், சந்தேகங்களை உருவாக்குவதும், மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடுவதும், ஆய்ந்து ஆராய்ச்சி செய்வதும், புறம் பேசுவதும் தீமைகள் ஆகும் என்று பட்டவர்த்தனமாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும், இவைகள் பாவங்கள் மட்டுமல்ல, இந்த காரியங்கள் சமூகத்தையும், சமூகத்தின் நிம்மதியையும் கெடுக்கின்றன. ஆகவே, அல்லாஹ் இந்தத் தீமைகள் அனைத்தையும் தனித்தனியாகக் குறிப்பிட்டு அவற்றை சட்டவிரோதமானவை மனித குலத்திற்கே எதிரானவை என்று கூறி தடையும் செய்துள்ளான்.

பின்னர், உலகில் உலகளாவிய அளவில் மிகப் பெரிய அளவிலான ஆபத்தை ஏற்படுத்தும் இன, மொழி, நிற  மற்றும் தேசிய வேறுபாடுகள் கண்டிக்கப்பட்டுள்ளன. 

நாடுகளால் மற்றும் வசிப்பிடங்களால் மற்றும் குடும்பங்களின் பூர்வீகப் பெருமையால், பாரம்பரியத்தால்  மற்றவர்களை தங்களை விட தாழ்ந்தவர்களாகக் கருதுவது மற்றும் தங்கள் சொந்த மேன்மையை நிலைநாட்டுவதற்காக மட்டுமே மற்றவர்களை இழிவுபடுத்துவது ஆகியவை உலகத்தை அநீதிகளாலும் கொடுங்கோன்மையாலும் நிரப்பிய ஒரு முக்கிய காரணியாகும். 

ஆதலால் அனைத்து மனிதர்களும் ஒரே ஜோடியின் சந்ததியினர் என்றும், அவர்கள் கோத்திரங்களாகவும் சமூகங்களாகவும் பிரித்து நாம் காணும் வகையில் அல்லாஹ் படைத்திருப்பது ஒரு அடையாயத்திற்காகவும், அறிமுகத்திற்காகவும், அங்கீகாரத்திற்காகவும் மட்டுமே, 

ஒரு மனிதன் மற்றவனை விட மேன்மையாக இருப்பதற்கு சட்டபூர்வமான எந்த அடிப்படையும் இல்லை என்றும் மாறாக, படைத்த அல்லாஹ்வை பயந்து வாழ்வதில் தான் ஒரு மனிதனின் மேன்மை உள்ளது என்று கூறி இந்த தீமையின் வேரை வெட்டி எறிந்துள்ளான்.

முடிவாக, உண்மையான ஈமான் -  இறைநம்பிக்கை என்பது வாய்மொழிச் சொல் மட்டும் அல்ல, மாறாக அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் உண்மையாக நம்புவதும், நடைமுறை வாழ்க்கையில் அவர்களுக்குக் கீழ்ப்படிவதும், அல்லாஹ்வின் பாதையில் தன் உயிரையும், உணர்வையும் செல்வத்தையும் கொண்டு உண்மையாக உழைப்பதும், அர்ப்பணிப்பதும் தான் என்று உறுதியிட்டு சொல்லப்பட்டுள்ளது. 

இந்த மனப்பான்மையோடு இயைந்து வாழ்பவர்கள் மட்டுமே உண்மையான முஃமின்கள் - இறைநம்பிக்கையாளர்கள்.

வெறும் வாய்மொழியாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு, இதயத்தால் உறுதிப்படுத்தாமல் தாம் ஒரு முஸ்லிம் என்ற மனப்பான்மையைக் கொண்டவர்கள், உலக முஸ்லிம்களில் ஒருவராகக் கருதப்படலாம், சமூகத்தில் முஸ்லிம்களாகக் கூட நடத்தப்படலாம், ஆனால் அல்லாஹ்வின் பார்வையில் அவர்களை விசுவாசிகளாகக் கருத முடியாது என்ற பாடத்தோடு இந்த சூராவை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் முடிக்கின்றான்.

 

18 வசனங்களைக் கொண்ட ஒரு சூராவில் ஒட்டுமொத்த மனித குலத்துக்குமான சமத்துவத்துக்கும், ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்துக்கான பண்பாட்டு வாழ்க்கைக்கும் அழகிய வடிவில் வழிகாட்டப்பட்டுள்ளது.

இந்த சூராவின் ஆயத்துகள் மதீனா வாழ்க்கையின் பல்வேறு சந்தர்ப்பங்களில் இறக்கியருளப்பட்டிருந்தாலும் ஹிஜ்ரி ஒன்பதாம் ஆண்டு வாக்கில் நடைபெற்ற இரண்டு சம்பவங்களோடு இதன் கருத்துக்கள் இணைந்து போவதாலும் இந்த சூராவின் கருப்பொருளோடு பொருந்திப் போவதாலும் ஒரே சூராவாக  இணைக்கப்பட்டுள்ளன.

4 -வது ஆயத், பனூ தமீம் கோத்திரத்தார்களின்  பிரதிநிதிகள் மதீனாவிற்கு வந்து, நபி ஸல் அவர்களின் மனைவியர்களின் குடியிருப்புகளுக்கு (ஹுஜுராத்) வெளியே இருந்து புனித நபியை அழைக்கத் தொடங்கினர் என்றும்,  இந்த பிரதிநிதிகள் ஹிஜ்ரி 9 இல் மதீனாவிற்கு வருகை தந்தனர் என்றும் ஹதீஸ் கலை அறிஞர்கள் கூறுகின்றனர். 

அதேபோன்று, 6 -வதுஆயத் பனுல் -முஸ்தலிக் கோத்திரத்தாரிடமிருந்து ஜகாத்தை வசூலிக்க  நபி ஸல் அனுப்பிய வலீத் பின் உக்பாவைப் பற்றியது என்பதை ஹதீஸ் கலை அறிஞர்கள் உறுதிப்படுத்துகின்றன, மேலும் வலீத் பின் உக்பா மக்காவைக் கைப்பற்றியபோது ஹிஜ்ரி 8 -ல் முஸ்லிமாக மாறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சூரா அல் ஹுஜுராத்தின் அடித்தளமாக அமைந்துள்ள, சூரா அல் ஹுஜுராத் போதிக்கின்ற ஒழுக்க மாண்புகளில், பண்பாட்டு விழுமியங்களில் ஒன்று தான் பிறரைப் பற்றி தவறாக நினைக்க கூடாது. பிறரை,  பிறரின் செயலை, பிறரின் குறைகளை ஆராயக் கூடாது, வேவு பார்க்க கூடாது, துருவித் துருவி பார்க்கக் கூடாது என்பது. 12 வது ஆயத்தில் இது பற்றி அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

இன்றைய தராவீஹ் அமர்வில் இது குறித்து பேசவும் கேட்கவும் நாம் இருக்கிறோம்.

ஏனெனில், இன்று சமூகத்தில் பெருகி வரும் ஒரு செயல். குற்றச் செயல், அதுவும் அல்லாஹ் செய்யாதீர்கள் என்று தடுத்திருக்கும் ஒரு செயல் தான் பிறரின் குறைகளை துருவித் துருவி ஆராய்வது. அவர் என்ன செய்கிறார்? இவர் ஏன் இந்த நேரத்தில் அங்கு சென்றார்? அவர் இவரிடம் என்ன பேசியிருப்பார்? அந்த வீட்டில் என்ன நடக்கிறது? என்று இப்படியாக ஒருவரைக் குறித்து பல்வேறு வகைகளில் ஆராய்வது இப்போது ஒரு கலாச்சாரமாக மாறி விட்டது.

தற்போது சமூக ஊடகங்களில் அசாதாரண புழக்கத்தில் தாறுமாறாக இந்த செயல் எல்லா வயதினரிடத்திலும்  தொற்றி பரவி வருகிறது.

பிறரை, பிறரின் செயலை, பிறரின் குறைகளை என அனைத்து வடிவங்களில் துருவித் துருவி ஆராய்வதை இஸ்லாம் முற்றிலுமாக தடுக்கிறது.

 

وقال الأوزاعي : التجسس : البحث عن الشيء . والتحسس : الاستماع إلى حديث القوم وهم له كارهون ، أو يتسمع على أبوابهم .

இமாம் அவ்ஜாஈ (ரஹ்) அவர்கள் குறிப்பிடுவார்கள்:- "தஜஸ்ஸூஸ் என்பது ஒன்றைத் தேடி ஆராய்வதை குறிக்கும். மக்கள் பேசுவதை அவர்கள் விரும்பாத நிலையில் ஒட்டுக் கேட்பதை அல்லது அவர்களின் வாசல்களில் நின்று ஒட்டுக் கேட்பதை குறிக்கும்.

قال الطبري: ولا يتتبع بعضكم عورة بعض، ولا يبحث عن سرائره، يبتغي بذلك الظهور على عيوبه، ولكن اقنعوا بما ظهر لكم من أمره، وبه فحمدوا أو ذموا، لا على ما لا تعلمونه من سرائره

இமாம் தபரி (ரஹ்) அவர்கள் இந்த வசனத்துக்கு விரிவுரை வளங்கும் போது ‘ ‘பிறருடைய குறைகள்எனப்படுவது அவர்களின் அந்தரங்க இரகசியங்களும் அவர்களின் கண்ணியமுமாகும்எனக் குறிப்பிடுகின்றார்கள்.

( ولا تجسسوا ) أي : على بعضكم بعضا . والتجسس غالبا يطلق في الشر ،

இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் இந்த வசனத்திர்கு விரிவுறை வளங்கும் போது துருவித் துருவி ஆராய்வது என்பது அதிகமாக கெட்ட விடயங்களில் தான் காணப்படும்என விளக்கமளிக்கின்றார்கள்.

ومعنى الآية : خذوا ما ظهر ولا تتبعوا عورات المسلمين ، أي : لا يبحث أحدكم عن عيب أخيه حتى يطلع عليه بعد أن ستره الله .

இமாம் குர்துபி (ரஹ்) அவர்கள் இந்த வசனத்துக்கு விளக்கமளிக்கும் போது வெளிப்படையாக தெரிகின்ற வெற்றை எடுத்துக் கொள்ளுங்கள் ஆனால் உங்களுடைய சகோதரனின் குறைகளை வெளியில் தெறியாமால் இறைவன் மறைத்த பிறகு அதனை வெளிக் கொண்டுவரும் நோக்கில் ஆராய வேண்டாம்எனக் குறிப்பிடுகின்றார்கள்.

கூட்டாக, குழுவாக, ஜமாஅத்தாக வாழும் சூழல் கொண்ட நாம் இது விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க கடமைப் பட்டுள்ளோம்.

عن ابن عباس رضي الله عنهما قال: لما أتى ماعزُ بن مالك النبيَّ صلى الله عليه وسلم قال له: «لعلك قَبَّلْتَ، أو غَمَزْتَ، أو نَظَرْتَ» قال: لا يا رسول الله، قال: «أَنِكْتَهَا». لا يَكْنِي، قال: فعند ذلك أَمَرَ بِرَجْمِهِ.  

[صحيح] - [رواه البخاري]

நபி (ஸல்) அவர்களிடம் மாயிஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் வந்து அல்லாஹ்வின் தூதரே! நான் விபசாரம் செய்துவிட்டேன் எனக் கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், நீ அவளை முத்தமிட்;டிருக்கலாம் அல்லது கை விரலால் தொட்டிருக்கலாம் அல்லது அவளை பார்திருக்கலாம் எனக் கூறினார்கள். அதற்கு மாயிஸ் (ரலி) அவர்கள் இல்லை நான் விபச்சாரம் செய்தேன் எனக் கூறினார்கள். அதன் பிறகு அவருக்கு கல்லெறிந்து தண்டனை நிறைவேற்றப்பட்டதுஎன இப்னு அப்பாஸ்; (ரலி) அறிவித்தார்கள். நூல் : புகாரி (6824)

இவ்வரலாற்று சம்பவத்தில் நபி (ஸல்) அவர்களோ அல்லது நபித்தோழர்களோ மாயிஸ் (ரலி) அவர்கடம் நீ எப்பொண்ணுடன் விபசாரம் செய்தாய்? என கேட்கவுமில்லை அதனை துருவித் துருவி ஆராயவும் இல்லை. 

  وَعَنْ أبي نُجَيْد-بِضَم النُّونِ وَفَتْح الْجيِمِ- عِمْرانَ بْنِ الحُصيْنِ الخُزاعيِّ رَضِي اللَّهُ عَنْهُمَا أَنَّ امْرأَةً مِنْ جُهينةَ أَتَت رَسُولَ الله ﷺ وَهِيَ حُبْلَى مِنَ الزِّنَا، فقَالَتْ: يَا رسول الله أَصَبْتُ حَدّاً فأَقِمْهُ عَلَيَّ، فَدَعَا نَبِيُّ الله ﷺ وَليَّهَا فَقَالَ: أَحْسِنْ إِليْهَا، فَإِذَا وَضَعَتْ فَأْتِنِي فَفَعَلَ فَأَمَرَ بِهَا نَبِيُّ اللَّهِ ﷺ، فَشُدَّتْ عَلَيْهَا ثِيَابُها، ثُمَّ أَمَرَ بِهَا فرُجِمتْ  

இதே போன்று நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண் வந்து, அல்லாஹ்வுடைய தூதரே! நான் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டிய பெண்ணாகிவிட்டேன், என்னை தூய்மைப் படுத்துங்கள் என்றார். நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடிக் கொள் என்றார்கள், உடனே அப்பெண், அல்லாஹ்வுடைய தூதரே! எனது வயிற்றில் விபசாரத்தின் மூலம் சிசு உண்டாகியுள்ளது எனக் கூறினார். நபி (ஸல்) அவர்கள் குழந்தை பெற்றவுடன் வா! என்று சொல்லி அனுப்பினார்கள். மீண்டும் அப்பெண் குழந்தையுடன் வந்தபோது,  குழந்தைக்கு பால்குடி மறந்த பின் வா எனத் திருப்பி அனுப்பினார்கள், குழந்தை பால் குடி மறந்த பின் மீண்டும் அப் பொண் வந்தார். அதன் பின்னர் தண்டனை நிறைவேற்றப் பட்டது.” ( நூல்:: முஸ்லிம் (1695).

இப்பெண்னிடம் எத்தவொரு நபித்தோழியர்களோ அல்லது நபித்தோழர்களோ, நீ யாருடன் விபச்சாரம் செய்தாய்? எனக் கேட்கவுமில்லை, அதனை துருவித் துருவி ஆராயவுமில்லை. 

ஆனால் இப்படியான ஒரு சம்பவம் நம் சமூகத்தில் நடைபெற்றால். அப்பெண்ணை மத்திரமல்ல அப்பெண்ணின் குடும்பத்தாரையும் நம் சமூகம் விட்டு வைக்க மறவாது என்பதை நாம் அறிவோம்.

وقال عبد الرحمن بن عوف : حرست ليلة مع عمر بن الخطاب - رضي الله عنه - بالمدينة إذ تبين لنا سراج في بيت بابه مجاف على قوم لهم أصوات مرتفعة ولغط ، فقال عمر : هذا بيت ربيعة بن أمية بن خلف ، وهم الآن شرب فما ترى! ؟ قلت : أرى أنا قد أتينا ما نهى الله عنه ، قال الله تعالى : ولا تجسسوا وقد تجسسنا ، فانصرف عمر وتركهم

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் அவர்கள் ஒரு நாள் கலீஃபா உமர் ரலி அவர்களுடன் மதீனாவின் தெருக்களில் இரவு ரோந்துக்குச் சென்றார்கள்.

 

அப்போது ஒரு வீட்டில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. வீட்டில் இருந்து கும்பலாக சிலர் அரட்டை அடித்துக் கொண்டிருந்தது அந்த வீட்டில் இருந்து வரும் சப்தத்தால் விளங்கிக் கொள்ள முடிந்தது. அப்போது உமர் ரலி அவர்கள் "இது ரபீஆ இப்னு உமைய்யா இப்னு கலஃப் உடைய வீடாகும். உள்ளே அவர்கள் மது அருந்திக் கொண்டு இருக்கின்றார்கள். அப்துர் ரஹ்மானே அந்த காட்சியை இப்போது நீர் பார்க்க விரும்புகின்றீரா? என்று கேட்டார்கள். அதற்கு, அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் அவர்கள் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பிறரின் குறைகளை துருவித் துருவி ஆராயக்கூடாது என்று தடுத்திருக்கின்றான் என்றார்கள். நாம் இப்போது அவன் தடுத்த அந்த காரியத்தை தான் செய்து கொண்டிருக்கின்றோம் என்றதும் அங்கிருந்து அப்படியே திரும்பி விட்டார்கள்.

 . وقال أبو قلابة : حدث عمر بن الخطاب أن أبا محجن الثقفي يشرب الخمر مع أصحاب له في بيته ، فانطلق عمر حتى دخل عليه ، فإذا ليس عنده إلا رجل ، فقال أبو محجن : إن هذا لا يحل لك! قد نهاك الله عن التجسس ، فخرج عمر وتركه.

அபூ மிஹ்ஜன் என்பவர் அவரது வீட்டில் தனது நண்பர் ஒருவரோடு மது அருந்திக் கொண்டிருப்பதாக தகவல் வந்ததையடுத்து அவரின் வீடு இருக்கும் தெருவுக்கு சென்று, அவரின் வீட்டிற்குள் நுழைந்தார்கள். அங்கே அவரும் அவரது நண்பர் மட்டுமே இருந்தார்கள். அப்போது, அபூ மிஹ்ஜன் "உமரே! என்ன இது? அல்லாஹ் தடுத்து இருக்கும் பிறரை துருவி ஆராயும் வேலையை நீர் பார்க்கின்றீரா? என்று கேட்க, உமர் ரலி அவர்கள் அவர்களை எதுவும் செய்யாமல் அங்கிருந்து அப்படியே வந்து விட்டார்கள். ( நூல்: தஃப்ஸீர் குர்துபி )

துருவித் துருவி ஆராய்ந்தால்....

பிறரின் வீட்டிற்குச் சென்றால் ஸலாம் சொல்ல வேண்டும். அனுமதி பெற்று உள்ளே சென்று நாம் எதற்காக வந்தோமோ அந்த காரியத்தை செய்ய வேண்டும்.

மாறாக, எட்டிப் பார்ப்பதும், ஒட்டுக் கேட்பதும் தகாத செயலாகும். இதுவும் பிறரின் செயலை துருவித் துருவி ஆராய்வதிலே இடம் பெற்றுள்ளன.

عن معاوية - رضي الله عنه - قال: سمعت رسول الله - صلى الله عليه وسلم - يقول: «إنك إن اتبعت عورات المسلمين أفسدتهم، أو كدت أن تفسدهم». حديث صحيح، رواه أبو داود

 

மக்களின் குறைகளை நீ ஆராய்ந்தால் நீ அவர்களை பாழாக்கிவிட்டாய்! அல்லது நீ பாழாகி விடுகிறாய்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: அபூதாவூத் (4244)

عن ابنِ عبَّاسٍ رَضِيَ الله عنه قال: قال النَّبيُّ صلَّى اللهُ عليه وسلَّم: ((مَن استَمَع إلى حديثِ قومٍ وهم له كارِهون، أو يَفِرُّون منه، صُبَّ في أذُنِه الآنُكُ يومَ القيامةِ)

தாம் கேட்பதை மக்கள் விரும்பாத நிலையில்அல்லது தம்மைக் கண்டு மக்கள் வெருண்டோடும் நிலையில்யார் அவர்களது உரையாடைலைக் காது தாழ்த்தி (ஒட்டு)க் கேட்கிறாரோ அவரது காதில் மறுமை நாüல் ஈயம் உருக்கி ஊற்றப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), ( நூல்கள் : புகாரி (7042), திர்மிதீ (1673)

عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال: من اطلع في بيت قوم بغير إذنهم، فقد حل لهم أن يفقؤوا عينه.

அபுல் காசிம் முஹம்மத் (ஸல்)அவர்கள் கூறினார்கள்: உன் அனுமதியின்றி ஒரு மனிதர் உன்னை எட்டிப் பார்த்தபோது அவர் மீது நீ சிறு கல்லைச் சுண்டி எறிய, அது அவரது கண்ணைப் பறித்துவிட்டால் உன் மீது எந்தக் குற்றமுமில்லை. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்: புகாரி (6902)

عن أنس بن مالك أن رجلا اطلع من بعض حجر النبي صلى الله عليه وسلم، فقام إليه النبي صلى الله عليه وسلم بمشقص أو بمشاقص فكأني أنظر إليه يختل الرجل ليطعنه

அனஸ்பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்கüன் அறைகளில் ஒன்றின் வழியாக எட்டிப் பார்த்தார். (இதைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள் நீளமான அம்பின் கூர்முனையுடன்அல்லது கூர்முனைக ளுடன்அவருக்குத் தெரியாமல் அவரை நோக்கிச் சென்று (அவருடைய கண்ணில்) குத்தப்போனதை இப்போதும் நான் பார்ப்பது போன்று உள்ளது. (நூல்: புகாரி (6242)

سهل بن سعد قال: اطلع رجل من جحر، في حجر النبي صلى الله عليه وسلم، ومع النبي صلى الله عليه وسلم مدرى يحك به رأسه. فقال: لو أعلم أنك تنظر لطعنت به في عينك، إنما جعل الاستئذان من أجل البصر ـ وكلها في الصحيحين وغيرهما

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் ஒரு துவாரத்தின் வழியாக நபி (ஸல்) அவர்கüன் வீட்டினுள் எட்டிப் பார்த்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஈர்வலிச் சீப்பால் தமது தலையைக் கோதிக் கொண்டிருந்தார்கள். (அவர் எட்டிப் பார்த்ததையறிந்த) நபி (ஸல்) அவர்கள், “நீ பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்று எனக்கு (முன்பே) தெரிந்திருந்தால் இந்த ஈர்வலியைக் கொண்டே உன் கண்ணைக் குத்தியிருப்பேன். (வீட்டுக்குள் நுழைய) அனுமதி கேட்க வேண்டும் என்று சட்டமாக்கப் பட்டதே பார்வைகள் (வரம்பு மீறி வீட்டிலிருப்பவர்கள் மீது விழக் கூடும் என்ற) காரணத்தினால்தான்என்று சொன்னார்கள். நூல்:புகாரி (5924)

عن أبي هريرة - رضي الله عنه -: أن رسول الله - صلى الله عليه وسلم - قال: «إياكم والظن، فإن الظن أكذب الحديث، ولا تحسسوا ولا تجسسوا ولا تنافسوا، ولا تحاسدوا، ولا تباغضوا، ولا تدابروا، وكونوا عباد الله إخوانا

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (பிறர் மீது) கெட்ட எண்ணம் கொள்வது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில், கெட்ட எண்ணம்தான் பேச்சுகளிலேயே மிகவும் பொய்யானதாகும். (மற்றவர்களின் குற்றங் குறைகளை) துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒட்டுக் கேட்காதீர்கள். ஒருவரோடொருவர் பகைத்துக்கொள்ளாதீர்கள். (அல்லாஹ்வின் அடியார்களே!) சகோதரர்களாய் இருங்கள். ( நூல்: புகாரி 5143 )

اخرج الإمام أحمد في مسنده من حديث ثوبان رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: لا تؤذوا عباد الله ولا تعيروهم ولا تطلبوا عوراتهم، فإنه من طلب عورة أخيه المسلم طلب الله عورته، حتى يفضحه في 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''அல்லாஹ்வின் அடியார்களை நோவினை செய்யாதீர்கள், இழிவுபடுத்தாதீர்கள், அவர்களது குற்றங்களை தேடிச்செல்லாதீர்கள். எவன் தனது முஸ்லிம் சகோதரனின் குற்றம் குறைகளை தேடித்திரிகிறானோ அவனது குறைகளை அல்லாஹ் துருவிப்பார்ப்பான். இறுதியில் அவனை அவனது வீட்டுக்குள்ளேயே அவமானப்படுத்தி விடுவான்.'' ( நூல்: முஸ்னத் அஹ்மத் )

عن أبي هريرة ، قال : خطبنا رسول الله صلى الله عليه وسلم حتى أسمع العواتق في بيوتها - أو قال في خدورها -

மக்களின் குறைகளை தேடித்திரியும் வீணர்களைக் கண்டிப்பதில் நபி (ஸல்) அவர்களின் நடவடிக்கை எவ்வளவு கடினமாக இருந்தது என்பது பற்றி அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஒரு பிரசங்கம் நிகழ்த்தினார்கள். வீட்டுக்குள்ளிலிருந்த பெண்கள்கூட செவியயேற்கக்கூடிய பிரசங்கமாக அது இருந்தது.

حدثنا السيد أبو الحسن محمد بن الحسين العلوي ، أخبرنا أبو بكر محمد بن حبان بن حمدويه المذكر ، حدثنا أبو جعفر محمد بن يونس القزويني ، حدثنا إسماعيل بن توبة ، حدثنا مصعب بن سلام ، عن حمزة الزيات ، عن أبي إسحاق السبيعي ، عن البراء بن عازب قال : خطبنا رسول الله صلى الله عليه وسلم حتى أسمع العواتق في بيوتها - أو قال في خدورها - ثم قال : " يا معشر من آمن بلسانه ولم يؤمن بقلبه ، لا تغتابوا المسلمين ، ولا تتبعوا عوراتهم ، فإنه من يتبع عورة أخيه المسلم يتبع الله عورته ، ومن يتبع الله عورته يفضحه ولو في جوف بيته " .

நபி (ஸல்) அவர்கள் ''நாவால் ஈமான் கொண்டு இதயத்தில் ஈமான் நுழையாதவர்களே! இறைவிசுவாசிகளை நோவினை செய்யாதீர்கள், அவர்களது குறைகளைத் துருவித் துருவி ஆராயாதீர்கள். எவன் தனது சகோதர முஸ்லிமின் குறைகளை துருவித் துருவி ஆராய்கிறானோ அவனது கௌரவத்தை அல்லாஹ் அழித்துவிடுவான். எவன் தனது சகோதரனின் குற்றம் குறைகளை ஆராய்கிறானோ அவன் தனது வீட்டுக்கு மத்தியில் இருந்தபோதும் அல்லாஹ் அவனை கேவலப்படுத்தி விடுவான்.'' என்று கூறினார்கள். ( நூல்: முஃஜமுத் தப்ரானி )

 

أن النبي صلى الله عليه وآله وسلم قال: «أيما رجل أشاع على رجل مسلم بكلمةٍ هو منها بريء يشينه بها في الدنيا؛ كان حقًّا على الله أن يذيبه يوم القيامة في النار حتى يأتي بنفاذ ما قال»

எந்த மனிதர் தன் சகோதர முஸ்லிம் ஒருவரைப் பற்றி ஒரு வார்த்தை பேசுகிறார். அது சமூகத்தில் பரவுகிறது. ஆனால், அவர் பேசிய அந்த வார்த்தையை விட்டும் சம்பந்தப்பட்ட அந்த மனிதர் நிரபராதியாக இருந்தால் எவர் சமூகத்தில் அவரைப் பற்றி தவறாக பரப்பினாரோ அவரை அல்லாஹ் அந்த இழிசெயலை உலகத்திலே செய்ய வைத்து, அதன் காரணமாகவே அவரை நரகில் நுழைய வைப்பதை தன் மீது கடமையாக்கிக் கொண்டான்" என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

எனவே, அல் ஹுஜுராத் சூரா மூலம் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கற்றுத் தருகிற ஒழுக்க விழுமியங்களை பேணி நம் வாழ்க்கையை அமைத்து சிறந்த பண்பாட்டுச் சமூகமாக மாறுவோம்!

اللهم اهْدِنِيْ لأَحْسَنِ الأَخْلاَقِ لاَ يَهْدِيْ لأَحْسَنِهَا إِلاَّ أَنْتَ وَاصْرِفْ عَنّيْ سَيّئَهَا لاَ يَصْرِفُ عَنِّيْ سَيّئَهَا إِلاَّ أَنْتَ

யாஅல்லாஹ்! நற்குணங்களின் பால் வழிகாட்டுவாயாக!. உன்னைத் தவிர அழகிய குணங்களின் பால் வழிகாட்ட முடியாது. கெட்ட குணங்களை என்னை விட்டும் அகற்றிடுவாயாக! உன்னைத் தவிர யாரும் அதனை அகற்ற முடியாது!

No comments:

Post a Comment