Thursday, 6 March 2025

இருள் அகற்றும் இறைமறை – தராவீஹ் சிந்தனை – 7. தீமைகளை கண்டிப்போம்! தீமைகளை மாற்ற முயற்சி செய்வோம்!!

 

இருள் அகற்றும் இறைமறை – தராவீஹ் சிந்தனை – 7.

தீமைகளை கண்டிப்போம்! தீமைகளை மாற்ற முயற்சி செய்வோம்!!


அல்ஹம்துலில்லாஹ்! ஆறாவது நோன்பை நிறைவு செய்துள்ளோம். ஏழாவது நாள் தராவீஹ் தொழுகையை தொழுது விட்டு அமர்ந்துள்ளோம்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் நோன்பையும் தராவீஹ் தொழுகையையும் இதர வணக்க வழிபாடுகளையும் ஏற்றுக் கொள்வானாக!

இன்று சமூகத்திலே தீமைகள் பெருகி விட்டது. இன்னின்ன தீமைகள் தான் என்று சொல்ல முடியாதவாறு பல்வேறு தீமைகள் சர்வ சாதாரணமாக சமூகத்தின் அனைத்து மட்டத்திலும் பரவி இருக்கிறது.

இந்த காலகட்டத்தில் இன்று தராவீஹ் தொழுகையில் கூறப்பட்ட ஒரு சமூகத்தில் இரு தரப்பாரின் அழிவும், ஒரு தரப்பினர் பாதுகாக்கப்பட்டதும் தீமைகளை கண்டிப்பதன் அவசியத்தையும், தீமைகள் செய்வதால் ஏற்படும் விளைவுகளையும் நம் கண் முன்னே கொண்டு வருகிறது என்றால் அது மிகையல்ல.

எவரும் எதையும் செய்யட்டும் என்று நல்லவர்கள் அலட்சியமாக இருப்பது முறையல்ல. சமூகத்தில் ஹராமான காரியங்கள் பெருகிவிட்டால் அவற்றைச் செய்பவர்களுக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் பாதிப்பு வரும் என்பதை நாம் உணர வேண்டும்.

இன்றைய சமூகத்தில் பெருகி நிற்கும் தீமைகள் எல்லாம் முன்பு யாரோ சிலர் மட்டுமே செய்து கொண்டிருந்தது தான்.

நமக்கேன் வம்பு என்று நாம் ஒதுங்கிச் சென்றதன் விளைவாக பல்வேறு தீமைகள் இன்று வேர் விட்டு வளர்ந்து விருட்சமாய் படர்ந்து சமூகத்தின் பல பாகங்களிலும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது.

எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு வெள்ளிக்கிழமையைப் புனித நாளாக ஆக்கியது போன்று யூதர்களுக்கு சனிக்கிழமையைப் புனித நாளாக ஆக்கினான். அந்த நாளின் வணக்கத்தை அவர்கள் பேணாமல் வரம்பு மீறி கடலுக்குச் சென்றதால் அவர்கள் குரங்குகளாக மாற்றப்பட்டனர். இந்த வரலாற்றை அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்.

وَسْـــَٔلْهُمْ عَنِ الْـقَرْيَةِ الَّتِىْ كَانَتْ حَاضِرَةَ الْبَحْرِ‌ۘ اِذْ يَعْدُوْنَ فِى السَّبْتِ اِذْ تَاْتِيْهِمْ حِيْتَانُهُمْ يَوْمَ سَبْتِهِمْ شُرَّعًا وَّيَوْمَ لَا يَسْبِتُوْنَ‌ ۙ لَا تَاْتِيْهِمْ‌‌ ۛۚ كَذٰلِكَ ‌ۛۚ نَبْلُوْهُمْ بِمَا كَانُوْا يَفْسُقُوْنَ‏

கடல் ஓரத்தில் இருந்த ஊரைப் பற்றி அவர்களிடம் கேட்பீராக! அவர்கள் சனிக்கிழமையில் வரம்பு மீறியதை நினைவூட்டுவீராக! சனிக்கிழமையன்று மீன்கள் நீரின் மேல் மட்டத்தில் அவர்கள் முன்னே வந்தன. சனிக்கிழமை அல்லாத நாட்களில் அவர்களிடம் வருவதில்லை. அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் இவ்வாறு அவர்களைச் சோதித்தோம்.

   وَاِذْ قَالَتْ اُمَّةٌ مِّنْهُمْ لِمَ تَعِظُوْنَ قَوْمَاْ ‌ ۙ اۨللّٰهُ مُهْلِكُهُمْ اَوْ مُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيْدًا‌ ؕ قَالُوْا مَعْذِرَةً اِلٰى رَبِّكُمْ وَلَعَلَّهُمْ يَتَّقُوْنَ

அல்லாஹ் அழிக்கப் போகிற அல்லது கடுமையாகத் தண்டிக்கப் போகிற கூட்டத்திற்கு ஏன் அறிவுரை கூறுகிறீர்கள்?” என்று அவர்களில் ஒரு சாரார் கூறினர். அதற்கவர்கள் உங்கள் இறைவனிடமிருந்து (விசாரணையின் போது) தப்பிப்பதற்காகவும், அவர்கள் (இறைவனை) அஞ்சுவோராக ஆவதற்காகவும் (அவர்களுக்கு அறிவுரை கூறுகிறோம்)எனக் கூறினர்.

فَلَمَّا نَسُوْا مَا ذُكِّرُوْا بِهٖۤ اَنْجَيْنَا الَّذِيْنَ يَنْهَوْنَ عَنِ السُّوْۤءِ وَاَخَذْنَا الَّذِيْنَ ظَلَمُوْا بِعَذَابٍۭ بَــِٕيْسٍۭ بِمَا كَانُوْا يَفْسُقُوْنَ‏

கூறப்பட்ட அறிவுரையை அவர்கள் மறந்த போது தீமையைத் தடுத்தோரை (மட்டும்) காப்பாற்றினோம். அநீதி இழைத்தோரை அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் கடுமையாகத் தண்டித்தோம்.

فَلَمَّا عَتَوْا عَنْ مَّا نُهُوْا عَنْهُ قُلْنَا لَهُمْ كُوْنُوْا قِرَدَةً خٰسِـٮِٕیْنَ‏

தடுக்கப்பட்டதை அவர்கள் மீறிய போது இழிந்த குரங்குகளாக ஆகி விடுங்கள்!என்று அவர்களுக்குக் கூறினோம்.” ( அல்குர்ஆன்: 7:163-166 )

தீமையைச் செய்தவர்கள், தீமையைத் தடுத்தவர்கள், தீமையைத் தடுக்காதிருந்தோர் ஆகிய மூன்று வகையினரில் தீமையைத் தடுத்தவர்களை மட்டும் காப்பாற்றியதாக இவ்வசனம் கூறுகிறது.

தீமையைச் செய்யாமலும், மற்றவர்களின் தீமையைத் தடுக்காமலும் இருந்தவர்கள் தீமை செய்தோருடன் சேர்த்து அழிக்கப்பட்டனர் என்றும் இவ்வசனம் கூறுகிறது.

தீமையைத் தடுக்காமல் தம்மளவில் நல்லவர்களாக வாழ்வோர் இறைவனின் திருப்தியைப் பெற முடியாது என்பதை இவ்வசனத்திலிருந்து அறியலாம்.

தீமைகளை கண்டிப்பது அவசியமானது என்பதால் தான் நன்மைகளை ஏவ வேண்டும் என்று இறைவன் கூறும் போது, தீமைகளைத் தடுக்க வேண்டும் என்றும் இணைத்தே கூறுகிறான். நன்மையை ஏவுவதுடன் தீமையைத் தடுப்பவர்கள் தான் வெற்றி பெறுவார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

وَلْتَكُنْ مِّنْكُمْ اُمَّةٌ يَّدْعُوْنَ اِلَى الْخَيْرِ وَيَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ‌ؕ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ‏

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன்: 3:104)

தீமைகளைக் கண்டிப்பது நல்லவர்களின் பண்பாகும். இக்காரியத்தைச் செய்பவர்கள் தான் சிறந்தவர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

كُنْتُمْ خَيْرَ اُمَّةٍ اُخْرِجَتْ لِلنَّاسِ تَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَتُؤْمِنُوْنَ بِاللّٰه

நீங்கள், மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்! (அல்குர்ஆன்: 3:110)

اَ لَّذِيْنَ اِنْ مَّكَّنّٰهُمْ فِى الْاَرْضِ اَقَامُوا الصَّلٰوةَ وَاٰتَوُا الزَّكٰوةَ وَاَمَرُوْا بِالْمَعْرُوْفِ وَنَهَوْا عَنِ الْمُنْكَرِ‌ ؕ وَلِلّٰهِ عَاقِبَةُ الْاُمُوْرِ‏

அவர்களுக்கு பூமியில் நாம் வாய்ப்பளித்தால் தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தும் கொடுப்பார்கள். நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். காரியங்களின் முடிவு அல்லாஹ்வுக்கே உரியது. (அல்குர்ஆன்: 22:41)

 وَالْمُؤْمِنُوْنَ وَالْمُؤْمِنٰتُ بَعْضُهُمْ اَوْلِيَآءُ بَعْضٍ‌ۘ يَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ

நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். (அல்குர்ஆன்: 9:71)

اَلتَّاۤٮِٕبُوْنَ الْعٰبِدُوْنَ الْحٰمِدُوْنَ السّاۤٮِٕحُوْنَ الرّٰكِعُوْنَ السّٰجِدُوْنَ الْاٰمِرُوْنَ بِالْمَعْرُوْفِ وَالنَّاهُوْنَ عَنِ الْمُنْكَرِ

(அவர்கள்) மன்னிப்புத் தேடுபவர்கள்; வணங்குபவர்கள்; (இறைவனைப்) புகழ்பவர்கள்; நோன்பு நோற்பவர்கள்; ருகூவு செய்பவர்கள்; ஸஜ்தாச் செய்பவர்கள்; நன்மையை ஏவுபவர்கள்; தீமையைத் தடுப்பவர்கள். (அல்குர்ஆன்: 9:112)

தீமையைத் தடுக்காமல் இருப்பது தீயவர்களின் பண்பாகும். அல்லாஹ்வின் அழிவைத் தேடித்தரும் குற்றமாகும்.

عن زينب بنت جحش قالت: خرج رسول الله صلى الله عليه وسلم يوما فزعا محمرا وجهه يقول: "لا إله إلا الله، ويل للعرب من شر قد اقترب، فتح اليوم من رَدْم يأجوج ومأجوج مثل هذه وحلق بإصبَعِه الإبهام والتي تليها، قالت فقلت: يا رسول الله أنهلك وفينا الصالحون؟ قال: "نعم إذا كثر الخبث".

நபி (ஸல்) அவர்கள் (ஒருமுறை) என்னிடம் நடுக்கத்துடன் முகம் சிவந்தவர்களாக வீட்டை விட்டு வெளியே வந்து, ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணத்தால் அரபுகளுக்குக் கேடு நேரவிருக்கிறது. இன்று யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரின் தடைச் சுவர் இதைப் போல் திறக்கப்பட்டுவிட்டதுஎன்று தம் கட்டை விரலையும் அதற்கு அடுத்துள்ள விரலையும் இணைத்து வளையமிட்டுக் காட்டியபடி கூறினார்கள். உடனே, நான் இறைத்தூதர் அவர்களே! நம்மிடையே நல்லவர்கள் இருக்க, நாம் அழிந்துவிடுவோமா?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ஆம்; தீமை பெருகிவிட்டால்..என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி), ( நூல்: புகாரி )

عن النعمان بن بشير رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال:"مثل القائم في حدود الله والواقع فيها كمثل قوم استهموا على سفينة، فصار بعضهم أعلاها وبعضهم أسفلها، فكان الذين في أسفلها إذا استقوا من الماء مروا على من فوقهم، فقالوا: لو أنا خرقنا في نصيبنا خرقًا ولم نؤذ من فوقنا، فإن تركوهم وما أرادوا هلكوا جميعًا، وإن أخذوا على أيديهم نجوا ونجوا جميعًا"؛ رواه البخاري والترمذي،

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ்வின் (சட்ட) வரம்புகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவனுக்கும் அவற்றை மீறி நடப்பவனுக்குமுரிய உவமை ஒரு சமுதாயத்தைப் போன்றதாகும். அவர்கள் கப்பலில் (தங்களுக்கு இடம் பிடிப்பதற்காகச்) சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். (அதன்படி) அவர்களில் சிலருக்குக் கப்பலின் மேல் தளத்திலும், சிலருக்குக் கீழ்த் தளத்திலும் இடம் கிடைத்தது. கீழ்த் தளத்தில் இருந்தவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்டபோது (அதைக் கொண்டுவர) அவர்கள் மேல்தளத்தில் இருப்பவர்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. (அதனால் மேலே இருப்பவர்களுக்குச் சிரமம் ஏற்பட்டது). அப்போது, கீழ்த் தளத்தில் இருந்தவர்கள் (தனக்குள்) நாம் (தண்ணீருக்காக) நம்முடைய பங்கில் (கீழ்த் தளத்தில்) ஓட்டையிட்டுக் கொள்வோம். நமக்கு மேலே இருப்பவர்களைத் தொந்தரவு செய்யாமலிருப்போம் என்று பேசிக் கொண்டார்கள். அவர்கள் விரும்பியபடி செய்து கொள்ள அவர்களை மேல் தளத்தில் இருப்பவர்கள் விட்டுவிட்டால் (கப்பலில் இருப்பவர்கள்) அனைவரும் அழிந்து போவார்கள். (ஓட்டையிட விடாமல்) அவர்களின் கரத்தைப் பிடித்துக் கொள்வார்களாயின் அவர்களும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். (அவர்களுடன் மற்ற) அனைவரும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள்.” (ஆதாரம்: புஹாரி-2493)

இஸ்ராயீலின் சந்ததிகள் தீமையை கண்டிக்காமலும், மாற்றுவதற்கு முயற்சி செய்யாமலும் அலட்சியம் செய்து வீணாக்கியபோது அவர்களின் மீது  அல்லாஹ்வின் சாபம் உண்டானது. 

அல்லாஹ் திருக்குர் ஆனில் இப்பாவிகளைப் பற்றி குறிப்பிடும்போது, 

لُعِنَ الَّذِينَ كَفَرُوا مِن بَنِي إِسْرَائِيلَ عَلَىٰ لِسَانِ دَاوُودَ وَعِيسَى ابْنِ مَرْيَمَ ذَٰلِكَ بِمَا عَصَوا 

وَّكَانُوا يَعْتَدُونَ

இஸ்ராயீலின் சந்ததிகளிலிருந்து, காஃபிராகி விட்டவர்கள், தாவூது, மர்யமின் குமாரர் ஈஸா ஆகிய இவர்களின் நாவால் சபிக்கப்பட்டுள்ளனர் ஏனென்றால் அவர்கள் (இறைவன் கட்டளைக்கு) மாறு செய்து கொண்டும், வரம்பு மீறி நடந்து கொண்டும் இருந்தார்கள்.  ( அல்குர்ஆன்: 5:78 )

 كَانُوا لَا يَتَنَاهَوْنَ عَن مُّنكَرٍ فَعَلُوهُ لَبِئْسَ مَا كَانُوا يَفْعَلُونَ

இன்னும் தாம் செய்து கொண்டிருந்த தீய காரியங்களைவிட்டு ஒருவரையொருவர் தடுப்போராகவும் அவர்கள் இருக்கவில்லை; அவர்கள் செய்து கொண்டிருந்தவையெல்லாம் நிச்சயமாக மிகவும் தீயவையாகும். (அல்குர்ஆன்: 5: 79 )

 

وقال الإمامُ أحمد -رحمه الله-: حدثنا يزيد: حدثنا شريك بن عبدالله، عن علي بن بذيمة، عن أبي عبيدة، عن عبدالله قال: قال رسولُ الله ﷺ: لما وقعت بنو إسرائيل في المعاصي نهتهم عُلماؤهم، فلم ينتهوا، فجالسوهم في مجالسهم، قال يزيد: وأحسبه قال: وأسواقهم، وواكلوهم، وشاربوهم، فضرب اللهُ قلوبَ بعضهم ببعضٍ، ولعنهم على لسان داود وعيسى ابن مريم: ذَلِكَ بِمَا عَصَوْا وَكَانُوا يَعْتَدُونَ،

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்:- இஸ்ரவேலர்கள் பாவங்களில் மூழ்கியபோது அவர்களை அவர்களுடைய அறிஞர்கள் தடுத்தனர்.  எனினும் அவர்கள் பாவங்களிலிருந்து விலகி கொள்ளவில்லை.  பின், அம்மக்களை பாவங்களிலிருந்து தடுக்காமலும், அம்மக்களை வெறுத்துப் புறக்கணிக்காமலும் மௌனம் சாதித்தவர்களாக அவர்களுடன் சேர்ந்திருப்பவர்களாகவும், உண்பவர்களாகவும், குடிப்பவர்களாகவும் இருந்தார்கள்.  இவ்வாறு அவர்கள் செய்வதை அல்லாஹ் கண்ட போது அவர்கள் அனைவரது உள்ளங்களையும் ஒன்று போலாக்கி விட்டான் அவர்கள் அனைவரும் வழிகேட்டில் ஒன்று சேர்ந்துவிட்டனர். (ஆதாரம்: அஹ்மத், அபூதாவூத், திர்மிதி)

இதற்கு பின் நபி(ஸல்)அவர்கள் பின்வரும் வசனத்தை ஓதினார்கள்.

 لُعِنَ الَّذِينَ كَفَرُوا مِن بَنِي إِسْرَائِيلَ عَلَىٰ لِسَانِ دَاوُودَ وَعِيسَى ابْنِ مَرْيَمَ ۚ ذَٰلِكَ بِمَا عَصَوا وَّكَانُوا يَعْتَدُونَ

இஸ்ராயீலின் சந்ததிகளிலிருந்து, காஃபிராகி விட்டவர்கள், தாவூது, மர்யமின் குமாரர் ஈஸா ஆகிய இவர்களின் நாவால் சபிக்கப்பட்டுள்ளனர் ஏனென்றால் அவர்கள் (இறைவன் கட்டளைக்கு) மாறு செய்து கொண்டும், வரம்பு மீறி நடந்து கொண்டும் இருந்தார்கள். ( அல்குர்ஆன்: 5:78 )

وقال أبو داود: حدثنا عبدالله بن محمد النّفيلي: حدثنا يونس بن راشد، عن علي بن بذيمة، عن أبي عبيدة، عن عبدالله بن مسعودٍ قال: قال رسولُ الله ﷺ: إنَّ أول ما دخل النَّقصُ على بني إسرائيل كان الرجلُ يلقى الرجلَ فيقول: يا هذا، اتَّقِ الله ودع ما تصنع، فإنَّه لا يحلّ لك. ثم يلقاه من الغد فلا يمنعه ذلك أن يكون أكيله وشريبه وقعيده، فلمَّا فعلوا ذلك ضرب اللهُ قلوبَ بعضهم ببعضٍ، ثم قال: لُعِنَ الَّذِينَ كَفَرُوا مِنْ بَنِي إِسْرَائِيلَ عَلَى لِسَانِ دَاوُودَ وَعِيسَى ابْنِ مَرْيَمَ إلى قوله: فَاسِقُونَ،

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்:- இஸ்ரவேல் மக்கள் மத்தியில் ஒரேமுறையில் தீமை நுழையவில்லை. ஆரம்பத்தில் ஏற்பட்ட குறை அவர்களில் ஒருவர் மற்றோருவரைச் சந்திக்கின்ற பொழுது, நண்பரே! அல்லாஹ்வைப் பயந்துகொண்டு பாவம் செய்வதை விட்டு விடு இதைச் செய்வது உனக்கு அனுமதிக்கப்பட்டதல்ல என்று கூறுவார்.  பின்னர் மறு நாள் சந்திக்கின்ற போதும் அதே நிலையில் கண்டும் அதைத்தடுக்க முற்படமாட்டார்.  அவருடன் இவர் சேர்ந்து ஒன்றாக உண்பவராகவும், குடிப்பவராகவும், நண்பராகவும் இருப்பார்.  அவரை விட்டும் இவர் விலகியிருக்கமாட்டார்.  இவ்வாறு அவர்கள் செய்வதற்கு முனைந்த போது அவர்கள் எல்லோருடைய உள்ளங்களையும் அல்லாஹ் ஒன்றாக்கி விட்டான்.  இதனால் அல்லாஹ்வின் அருள் அவர்களுக்கு இல்லாமலாகி அவனுடைய சாபத்துக்குள்ளாகி விட்டார்கள். ( நூல்: அஹ்மத், அபூதாவூத், திர்மிதி)

பிரார்த்தனை மறுக்கப்படுவதும் உதவியில்லாமல் போவதும் 

அல்லாஹ் கூறியதாக நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்:-நீங்கள் நன்மையை ஏவி, தீமையைத் தடுத்துக்கொண்டேயிருங்கள் நீங்கள் என்னை அழைப்பதற்கு முன் நான் உங்களுக்கு விடையளிக்கமாட்டேன், இன்னும், நீங்கள் என்னிடம் கேட்பதற்கு முன் நான் உங்களுக்குக் கொடுக்க மாட்டேன்.  மேலும் நீங்கள் என்னிடம் உதவி தேடுவதற்கு முன் நான் உங்களுக்கு உதவி செய்யமாட்டேன்.  (ஆதாரம்: அஹ்மத்)

فقال الإمام أحمد: حدثنا سليمان الهاشمي: أنبأنا إسماعيل بن جعفر: أخبرني عمرو ابن أبي عمرو، عن عبدالله بن عبدالرحمن الأشهلي، عن حُذيفة بن اليمان: أنَّ النبي ﷺ قال: والذي نفسي بيده، لتأمرنَّ بالمعروف، ولتنهونَّ عن المنكر، أو ليُوشكنَّ الله أن يبعث عليكم عقابًا من عنده، ثم لتدعنَّه فلا يستجيب لكم.

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்:-எனது உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மீது ஆணையாக! நிச்சயமாக நீங்கள் நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கவும் அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்வின் தண்டனை உங்களை வந்தடையக் கூடும்,  பின்னர், நீங்கள் அவனை அழைத்தாலும் அவன் உங்களுக்கு விடையளிக்கமாட்டன்.  (ஆதாரம்: அஹ்மத்)

தீமைகளை மாற்ற முயற்சி செய்ய வேண்டும்...

عن أبي سعيد الخدري رضي الله عنه قال : سمعت رسول الله صلى الله عليه وسلم يقول : مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ , فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ , وَذَلِكَ أَضْعَفُ الْإيمَانِ)). رواه مسلِمٌ.

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: உங்களில் எவரேனும் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அதனை தன் கையால் மாற்றட்டும், அப்படி முடியவில்லை என்றால் அதனை தன் நாவால் மாற்றட்டும், அப்படியும் முடிவில்லை என்றால் அதனை தன் உள்ளத்தால் மாற்றட்டும்…. ”இந்த நிலையானது இறைநம்பிக்கையின் பலகீனமா(ன நிலையா)கும்”. ( நூல்: முஸ்லிம் )

இந்த ஹதீஸில் வரும் யுகைய்யர்” (يُغَيِّر) என்ற வாசகம் மாற்றுதல்என்ற பொருளைத் தரும்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் தீமைகளில் இருந்து தவிர்ந்து வாழுவதோடு, தீமைகளை கண்டிக்கும் ஆற்றலையும், தீமைகளை மாற்ற முயற்சிக்கும் நல்ல நஸீபையும் தந்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

No comments:

Post a Comment